கண்ணன் பாட்டு/14. கண்ணன் - என் காதலன் - 5

விக்கிமூலம் இலிருந்து

(பிரிவாற்றாமை)

ராகம் - பிலஹரி


ஆசை முகமறந்து போச்சே - இதை

ஆரிடம் செல்வேனடி தோழி?

நேச மறக்கவில்லை நெஞ்சம் - எனில்

நினைவு முகமறக்க லாமோ? ... 1


கண்ணில் தெரியுதொரு தோற்றம் - அதில்

கண்ண னழகுமுழு தில்லை

நண்ணு முகவடிவு காணில் - அந்த

நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம். ... 2


ஓய்வு மொழிதலுமில் லாமல் - அவன்

உறவை நினைத்திருக்கும் உள்ளம்;

வாயு முரைப்ப துண்டு கண்டாய் - அந்த

மாயன் புகழினையெப் போதும். ... 3


கண்கள் புரிந்துவிட்ட பாவம் - உயிர்க்

கண்ண னுருமறக்க லாச்சு;

பெண்க ளினிடத்திலிது போலே - ஒரு

பேதையை முன்புகண்ட துண்டோ ? ... 4


தேனை மறந்திருக்கும் வண்டும் - ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் - இந்த

வைய முழுதுமில்லை தோழி! . ... 5


கண்ணன் முகம்மறந்து போனால் - இந்தக்

கண்க ளிருந்து பயனுண்டோ ?

வண்ணப் படமுமில்லை கண்டாய் - இனி

வாழும் வழியென்னடி தோழி? ... 6