கனிச்சாறு 4/025
22
மக்கள் என்று திருந்துவாரோ ?
பொன்னன் எனும்சிறு பையன் - நகர்ப்
பொத்தகக் கடைநோக்கிப் போயினன் ஓர்நாள்!
மின்னும் எழில்வண்ணத் தோடு - அட்டை
மேனி பளபளக் கும்கதை நூல்கள்,
கண்ணைப் பறித்திடு மாறு - பல
காட்சி தருகின்ற கன்னியர் தோற்றம்
விண்ணைப் பழித்திடும் போக்கில் - தம்
வெற்றுடல் காட்டிடுந் தாளிகைக் கூட்டம்.
கொட்டை எழுத்தினில் சூடாய் - செய்தி
கொடுத்திடும் இழிநடை நாட்கம்பித் தாள்கள்
அட்டை பெருத்திடும் நூல்கள் - துப்
பறிகின்ற புதினங்கள், பாலியல் நூல்கள்.
சட்டையின் பையளவுள்ள - பல
சாய்க்கடைக் குப்பைகள், பேய்க்கதை நூல்கள்,
அட்டைகள் போலக் கயிற்றில் - சுவர்
ஆணியில்,எங்கும் தொங்கின; மீதி,
கொட்டிக் கிடந்தன அங்கே! - அந்தக்
குவியலைப் பொன்னன் பலமுறை நன்றாய்த்
தட்டிக்கொட் டிப்பதம் பார்த்தான் - பின்
தலையசைத்தான்; எழுந்தான்; நடை யிட்டான்!
சென்றவ னைக்கடைக் காரன் “தம்பி
செல்வதேன்? உனக்கென்ன வேண்டுவ” தென்றான்;
“ஒன்றுமில்லை; எங்கள் வீட்டில் - உள்ள
ஓர்எரு மை,கன்று போட்டுள்ள தந்தக்
கன்றுக் கொருபெயர் வேண்டும் - இந்தக்
கடையினில் அதற்கொரு பொத்தகம் உண்டா?
என்றுநான் பார்த்திட வந்தேன் - இங்
கில்லாமை யால்போகின் றேன்” என்று போனான்.
மெய்யாக வே,கடைக் காரன் - அந்த
மேலான(!) நூலில்லாத் தன்மைக்கு நாணிப்
பொய்யாய் ஓர் அஞ்சல் வரைந்தே - அன்றே
போட்டனன் சென்னைக்குக் கீழ்வரு மாறு;
“பொத்தகம் அச்சிடுவோரே! இங்குப்
புதுமுறை யாய்ஒரு பொத்தகம் தன்னை
எத்தனையோ மக்கள் கேட்டார் – நூல்
இல்லைஎன் றுரைப்பது நம்குறை யன்றோ?
ஆகவே நாலைந்து நாளில் – ஓர்
அணிற்பிள்ளை முதலாகப் புலிக்குட்டி வரைக்கும்
நாகரி கப்பெயர் சூட்ட – ஒரு
நானூறு பக்கத்தில் பொத்தகம் வேண்டும்!”
என்று பறந்ததே அஞ்சல்!,சென்ற
இரண்டொரு நாளில்பல் லாயிரம் நூற்கள்
குன்றாய்க் குவிந்தன! மக்கள்,பெருங்
கூட்டமாய்ச் சென்றதை வாங்கிச் சுவைத்தார்!
நன்று; நன்று; நாக ரிகம்! - மக்கள்
நாட்டங்கள் வாட்டங்கள் மிகமிக நன்று!
என்றைக்கு மக்கள் எல்லாரும் உயர்
வெண்ணித் திருந்துவ ரோ? உயர் வாரோ?
-1970