உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/037

விக்கிமூலம் இலிருந்து


34

நெஞ்சை அகலப்படுத்து; அறிவை ஆழப்படுத்து
தோளை உயரப்படுத்து!


நீலப் பெரு வானம்!, அதில்
நீந்தி உலாவரும் கதிரவன் பார்! - முகிற்
கோலச் சிதறல்களாம்,பல
கோடி விண் மீன்களின் கூட்டங்களாம்! - தம்பி
காலப் பெருவெளி பார்!, வீசுங்
காற்றினைப் பார்! ஒளி ஊற்றினைப் பார்! - மிகு
சாலப் பரப்புக் கண்டாய்! - உயிர்ச்
சாற்றிலும் அத்தகு ஆற்றல் உண்டாம்! - பார்
நீலப் பெருவானம்!

நெஞ்சு சிலிர்த்தது பார்!,கதிர்
நெற்றினைப் போல் உயிர் முற்றிடல் பார்!தூய
பஞ்சு பறந்தது போல்,உளம்
பறந்ததடா! உயிர் நிறைந்ததடா!,தம்பி
கொஞ்சமோ மிஞ்சும் இன்பம்!,உயிர்க்
கொப்பரை நிரம்பி வழியுதடா! - காற்றை
விஞ்சிடும் ஆற்றல் கண்டாய்!வான
வெளியினைப் போல் நெஞ்சம் விரிந்ததடா!அட
நெஞ்சு சிலிர்த்தது பார்!

நீலக் கடல்வெளி பார்!,அதில்
நீண்டு சுருண்டு விழும் அலைபார்!,அதன்
ஓலம் சலிப்பதுண்டோ?,உயிர்
ஊற்றுச் சுரந்தது போல் மகிழ்வாய்!,தம்பி
காலப் புழுதியெல்லாம்,உன்றன்
கால்களில் பட்டுப் பறக்குதடா,சிறு
தோலைப் பொதிந்த உடல்,சுடர்
தோற்றும் உயிர்க்கொரு மாற்றஞ்செய்மோ,அட
நீலக் கடல்வெளி பார்!

நெஞ்சை அகல உழு! - அதன்
நினைவினை வாரியெங் கெங்கும் இறை,சிறு
குஞ்செனினும் உயிர்த்தூள்! - ஒளி
கூட்டிடும் பேரிறை நாட்டிய ஊர்,அது
துஞ்சுவ தோ இருளில்?,ஒரு
தூசுமென்றோ வானில் உலாவிவரும்,தம்பி
எஞ்சிடும் வாழ்க்கையிலே,உயிர்
ஏற்றமும் காண்! புது மாற்றமும் செய்!,அட
நெஞ்சை அகல உழு!

அறிவை ஆழப்படுத்து!,அஃது
ஆக்கிய சோறென நாக்கில் படை! - உயிர்ச்
செறிவில் வேறென்ன பயன்? - நாற்றச்
சேற்றிலும் தாமரை விளைவதுண்டே! பல
நெறிகளை முன் படைத்தாய்,அவை
நீள அகலத்தைப் பின் உடைத்தாய்! - தீய
வெறிகளில் மூழ்கினை காண்! - அந்த
வெற்று வெளிகளில் உற்றுனைப் பார்! - உன்றன்
அறிவை ஆழப் படுத்து!

தோளைக்குன் றாய் உயர்த்து!,பெருந்
தோல்விகண் டாலும், நீ கால் வளையேல்,ஒரு
வாளைச் சுழற்றும் விசை - தனில்
வையகம் தன்னையுன் கையகம்காண்!வெறும்
ஊளைத் தசையுடலம்,நல்
உப்பிட்டு வைக்கினும் தப்பிடுங் காண்!,எனில்
வேளைக்குக் காப்பதுவோ?,வெட்ட
வெளியினில் காலைவை! வானில் பற!, அட
தோளைக் குன்றாய் உயர்த்து!

-1971

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/037&oldid=1839186" இலிருந்து மீள்விக்கப்பட்டது