உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 4/059

விக்கிமூலம் இலிருந்து


56

வாழ்வியல் முப்பது!


புகழ்ச்சியின் மயக்கறு!
புன்மையை உதறு!
இகழ்ச்சியைத் தாங்கு;
எள்ளலை எடுத்தெறி,
நிகழ்ச்சியை வரிசைசெய்
நினைவை உறுதிசெய்!
மகிழ்ச்சியும் துயரமும்
மனத்தின் செயல்களே! 1

ஊக்கமும் முயற்சியும்
உண்மையும் நேர்மையும்
ஆக்க வினைகளும்
அடிப்படைக் கொள்கைகள்!
ஏக்கம் அகற்று!
ஏறுபோல் வினைசெய்
தாக்கும் இழிவுகள்
தாமே விலகிடும்! 2

இன்றைய நாள் நினை;
இனிவரும் நாள் நினை;
என்றும் புதியன், நீ!
யாவும் புதியன!
அன்றன்றும் புதுநாள்!
அனைத்தும் இனியன!
ஒன்று, கை போகின்
ஒன்றுன் கைவரும்! 3

உள்ளம் விழைவதை
அறிவினால் ஓர்ந்துபார்!
தள்ளத் தகுவன
உடனே தள்ளுவாய்!
தள்ளத் தகாதென்
றறிவு தேர்வதைக்
கொள்ள முயற்சிசெய்!
கொடு நினை வகற்று!

உணர்வாய் நினைப்பன
உன்னை உயர்த்தும்!
மயர்வாம் நினைவுகள்
அறிவையும் மயக்கும்!
துயர்வுறும் வினைக்குத்
துணிவுகொள் ளாதே!
அயர்வின்றி இயங்கு!
ஆக்கம் துணைவரும்! 5

ஒழுக்கமே உன்றனை
உயர்த்திடும் படிநிலை
இழுக்கம் இழுக்கு!
இழிவுறும் அதனால்!
பழக்கம் கொடியது!
பண்புபொன் மகுடம்!
இழக்கும் பொழுதுகட்(கு)
ஈட்டம் நினைந்துபார்! 6

ஒவ்வொரு நொடியும்
உனக்கென வாய்த்தது!
எவ்வொரு நொடியும்
இழத்தல்செய் யாதே!
ஒவ்வொரு நொடிக்கே
ஏங்கி யிருந்ததாய்
அவ்வொரு நொடியும்
அளாவிப் பயன்பெறு! 7

நேற்றெனல் வேறு!
இன்றெனல் வேறு!
நேற்றிருந் ததுபோல்
இன்றிருந் திடாதே!
நேற்றினும் இன்றுநீ
நெடிது வளர்ந்துளாய்!
நேற்றைய வளர்ச்சியுள்
நினைவொடுக் காதே! 8

நேற்றைய நினைவுகள்
இன்றைய செயல்கள்!
நேற்றைய அறிவோ!
இன்றறி யாமை!
நேற்றைய அடிக்குமேல்
நெட்டடி இன்றுவை!
நேற்றுநீ காற்றெனில்
நீள்விசும் பின்றுநீ 9

உன்றன் விழிகளை
உயர்த்துக வானில்!
உன்றன் செவிகளை
உலகெலாம் பரப்புக!
குன்றுபார்! கதிர்பார்!
கோடிவிண் மீன்பார்!
நின்றுபார்! நடந்துபார்!
நீ, சிறு உலகம்! 10

சிற்றுயிர் எறும்பும்
சுற்றுதல் காண், நீ!
மற்றுயிர் எல்லாம்
இயங்குதல் மதித்துணர்!
அற்றெனில் நீ, ஏன்
அமர்ந்திங் கிருப்பது?
கற்றுவா; எண்ணிவா;
காற்றில் நனைந்துவா! 11

மலைமுக டேறு!
மடுவினில் இறங்கு!
கலைகுவி சோலையுள்
காற்றாய் நுழைந்து போ!
அலைவீட் டுள்புகு!
ஆற்றினில் நீந்து!
புலைநினை வழிந்திட
இயற்கையுள் புதை,நீ! 12

உயிரை மலர்த்து;
உணர்வை அகல்செய்!
பயிர், நீ! கதிர், நீ!
பழம்பெரு வான், நீ!
துயர்கொளும் சிறிய
துகளிலை; நீ, ஓர்
உயிரொளிப் பிழம்பு;
உலக உடம்பு! 13

சிற்றிறை வன்,நீ!
சிந்தனை வெள்ளம்!
அற்றிடாப் பிறவி;
அறிவுக் கொழுந்து!
வற்றிடா ஊற்று;
வளர்பெரும் புடவி!
இற்றிடா நெற்று;
கோடிக் குமுகம்! 14

சிறுமையை எண்ணிச்
சிறுத்துப்போ காதே!
வெறுமையை நினைந்து
வெயர்த்தழி யாதே!
குறுமை நினைவுகள்
குறுமையாம் வாழ்க்கை!
நறுமை நினைவுகள்
நல்லொளிப் பிறவி! 15

உண்மை வலியது!
உள்ளமும் வலியது!
திண்மை தருவதும்
தேர்வதும் அதுதான்!
மண்மேல் அனைத்தும்
மடிந்துமட் குவன!
என்மேல் எண்ணிய
ஒருவனாய் இரு, நீ! 16

புன்மை சிறியது;
பொய்மையும் சிறியது!
புன்மேல் பனித்துளி
போலும் உடம்பதன்
மின்போல் வாழ்க்கையில்
மீந்துவ துயர்வே!
புன்மையும் புரையும்
பொக்கன; புதைவன! 17

தருக்குகொள் ளாதே!
தன்முனைப் பகற்று!
செருக்குச் சேற்றினில்
சிதைந்தவர் பலபேர்!
உருக்குலைத் திடும், அது;
உன்னையும் உம்மையும்!
திருக்குலைத் திடும், அது;
தீமையும் விளைக்கும்! 18

உலகுக் குரியனாய்
உன்னை உயர்த்திடு!
உலகுக் குரியராய்
உயர்த்து மாந்தரை!
கலகக் கொள்கையில்
கால்கோ ளாதே!
விலகப் பயில், நீ;
வீணுரை வீணரை! 19

மாந்த ஒளி, நீ!
மந்த விலங்கிலை!
ஏந்தல் எனநட!
இளைத்தும் தலைநிமிர்!
காந்தப் பார்வையால்
மக்களைக் கவர்ந்திடு!
சேந்து, அவர் நினைவை!
செம்மை நினைவு வார்! 20

அறிவொளி விளக்கால்
அவர் விளக் கேற்று!
செறிவுரை பகர்ந்திடு!
செழிக்க அன்புசெய்!
முறிவுரை பகரேல்!
முகவுரை கீழ்மை!
வெறியுணர் வடக்கு!
வீம்பறி யாமை! 21

உரையால் உரைபெறு!
உவகையால் ஒளிசேர்!
புரைசொல் இழுக்கு!
போலிமை வினைதவிர்!
திரையிட் டிராதே!
தீமையைத் துணிந்துகொல்!
வரையறு போக்கை;
வாழ்வைக் காதல் செய்! 22

கலைபயில்; எண் பயில்;
கவினிலக் கியம்பயில்!
சிலைபயில்; வண்ணச்
சித்திரம் எழுது!
அலைபயில் கலம்பயில்!
அளாவும் விண்பயில்!
உலை பயில்; உடல் பயில்;
உன்னை நீ, பயில்! 23

விளங்கிய செல்வம்
வினைபடு கருவி!
வளங்களைப் பகிர்ந்து கொள்!
வயல்விளை வறிவு!
உளங்கொள ஈத்துண்!
உவகையே ஈகை!
களங் கல் விக்கமை!
கனவிலும் கேள்விகொள்! 24

சிறக்கச் செய்திடு
சிறப்பூண் சிறிதுண்!
உறக்கம் மிகுதவிர்!
ஓய்வுளக் கிளர்ச்சி!
மறக்க மறப்பன!
மதிப்பன மதி; மகிழ்!
துறக்க, துறப்பன!
துய்ப்புயிர் வாழ்க்கை! 25

ஓம்புக நல்லுடல்;
உயிர்க்கது ஊர்தி!
சோம்பல் இறப்பு!
சுறுசுறுப் பியக்கம்!
தீம்பர் இணைதவிர்!
தேனினும் அளவுகொள்;
தேம்பல் கோழைமை;
திறலொடு துணிந்திடு! 26

நகைநட் பன்று;
நன்னட் பறிந்துதேர்!
பகைமுன் விலகு!
பார்வையிற் கூர்மைகொள்!
மிகைதவிர் எதிலும்!
மெப்புரை தப்பு!
புகைநெருப் பாகும்!
பொய்வளை விழையேல்! 27

பொழுதெழு முன்னெழு!
பொழுதொடு துயில்சேர்;
பழுதுறங் கின்மை!
பனிநீர் நிதங்குளி!
பொழுது பெறாதே!
தூய்மை உடையணி!
விழுதெனத் துணையிரு!
வீறுவிந் தடக்கம்! 28

பொருந்துணா விருந்து;
புறவுரை முதுபிணி!
அருந்தலும் அளவுசெய்!
ஆசை அடக்கியாள்!
திருந்துதல் வாழ்க்கை!
தெறுநோய் முன்தவிர்!
மருந்துணல் தீது!
மணிநீர் மருந்து! 29

பொதுமை உலகிது;
பொதுமை வாழ்விது;
பொதுமை உயிர்நலம்!
பொதுமையே இயக்கம்!
பொதுமைஉன் எண்ணம்;
பொதுமைஉன் வினைகள்!
பொதுமையாய் ஆக்கு, உனை!
புதுநலங் காண்பாய். 30

-1977

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_4/059&oldid=1839295" இலிருந்து மீள்விக்கப்பட்டது