உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 5/145

விக்கிமூலம் இலிருந்து

142

அண்டை அயலை அறிதல்!


அண்டை அயலில் உள்ள - நாம்
அறிய வேண்டும் செய்தி,
கண்டு தெளிய வேண்டும்! - அதை
கருத்தில் வைக்க வேண்டும்!

வாழும் ஊரைப் பற்றி - அதன்
வளங்கள், மக்கள் பற்றி,
ஆழம் அகலம் அறிதல் - நல்
அறிவென் றெண்ணல் வேண்டும்!

உடலைப் பேணும் முறையை நாம்
உண்ணும் பொருளின் வகையைக்,
கடலைக் காற்றை வானை பருவ
காலம் அறிதல் வேண்டும்!

கதிரை நிலவை மீனை - நிலக்
கனிமப் பொருளை எல்லாம்
புதிரை நீக்கி அறிதல் - நல்ல
பொழுது போக்கும் முயற்சி!

பிறப்பை இறப்பை அறிதல் - வாழ்வில்
பிழையைத் தவிர்க்க உதவும்!
சிறப்பை இழிவைக் கூட - ஒரு
சேரத் தெரிதல் நன்றாம்!

-1988

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_5/145&oldid=1851553" இலிருந்து மீள்விக்கப்பட்டது