உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/030

விக்கிமூலம் இலிருந்து

27

குளிர்தமிழ் உலவிடும் நெஞ்சமன்றோ?

எனைவேண் டாதவர் சிலரிங் கிருக்கலாம்
எனக்கு வேண் டாதவர் எவருமிலர்! - ஒரு
தினைவேண் டாதஓர் எறும்புளதோ?- பூந்
தேன்வேண் டாத,தே னீஉளதோ?

தமிழ்வேண் டாதவர் சிலரிங் கிருக்கலாம்;
தமிழ்க்குவேண் டாதவர் எவருமிலர்! - மணங்
கமழ்நறு மலரினை விரும்பிலரேல் - அவர்
கண்ணிலும் உணர்விலும் கசடுமுண்டே!

மலைவிரும் பாதவர் சிலரிங் கிருக்கலாம்;
மலைக்குவேண் டாதவர் எவருமிலர்! - இசைக்
கலைதரும் இன்பினை வெறுப்பவரேல் - அவர்
காதிலும் கருத்திலும் குறைகளுண்டே!

தென்றலை நிலவினைப் பகைப்பவ ரே - நறுந்
தீந்தமிழ் உளத்தினைப் பகைப்பவராம் - உயர்
குன்றினைத் தழுவிடும் அருவியைப்போல் - என்
குளிர்தமிழ் உலவிடும் நெஞ்சமன்றோ?

அன்புரை பலகால் வெளிப்பட லாம்; கடும்
அனலுரை சிலகால் புலப்படலாம்! - அதால்
துன்பிருந் தாலும்நற் பயனிருக்கும் - பின்
துயர்ப்படுங் கால், உளந் துணைவருமே!

ஒன்றினை எண்ணியும் உதவியெண் ணியும்பல
உளவுகள் நினைந்தெனை நெருங்கிடலாம் - அவை
நன்றென முடிந்திடல் புகழ்வதுவோ? - நிலை
நலிந்திடில் முனிந்தெனை இகழ்வதுவோ?

பொதுநலம் நினைந்துநான் இயங்கையி லே - தனிப்
போக்கினுக் கொருகால் தடைவரலாம்! - உடன்
எதுவிளை வெதுசரி எனநினைந்தே - உயர்
வேற்றத்தைக் கருதிடில் முரண்வருமோ!

கதிரினை வானினை மழையினைக் கடலினைக்
காற்றினை யாவையும் நினைக்கையிலே - அவை
சிதர்தரும் ஒளி, வெளி, துளி, உலர்ப்பை - கடுஞ்
சீற்றத்தைக் கண்டுளம் வெறுப்பதுண்டோ?

-1974

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/030&oldid=1857305" இலிருந்து மீள்விக்கப்பட்டது