கனிச்சாறு 7/031
தோற்றம்
28
உறுதியும் நன்றியும்!
எவரெனைத் தடுக்கினும் எவரெனைக் கெடுக்கினும்
என்கை வீசி நடையிடுவேன்! - ஒரு
சுவர்எனைத் தாங்கினும், துரும்பு கை கொடுக்கினும்
செந்தமிழ் மாலைகள் அவைக்கிடுவேன்!
மலையே குலுங்கினும், வானே இடியினும்
மனங்குலை யாமல்மேல் நடப்பேன்! - துயர்
அலைகளுக் கிடையோர் கட்டையே உதவினும்
அதன்திறம் நினைந்து புகழ் கொடுப்பேன்!
கடுஞ்சொல் வீசினும், கணைகளைத் தொடுக்கினும்
கடமையில் துவளேன்; வினைமுடிப்பேன்! - நான்
படுந்துயர்க் கிரங்கிக் கைகொடுப் போர்க்குப்
பைந்தமிழ் மாளிகை கட்டிடுவேன்!
எனைவெறுத் தாலும், எனைச்சிதைத் தாலும்
ஏற்றுள கொள்கைக் குயிர்தருவேன்! - ஒரு
தினையள வேனும் துணைவரு வோரைத்
தீந்தமி ழால்நிலை நிறுத்திடுவேன்!
-1975