உள்ளடக்கத்துக்குச் செல்

கனிச்சாறு 7/211

விக்கிமூலம் இலிருந்து

204

‘நீ தமிழ்மகனா’ - நூலுக்கு வாழ்த்து!


முப்பொழுதும் சிரித்தமுகம்,
முழங்குகின்ற செந்தமிழ்வாய்,
முனிவே இன்றி
எப்பொழுதும் இனநலத்தை
எந்தமிழ்நாட் டுரிமையினை
எடுத்தெ டுத்தே
செப்புகின்ற வீரவுரை,
செய்கின்ற நறுந்தொண்(டு), என்(று)
அனைத்தும் சேர்த்தால்
ஒப்புகின்றேன், எழில்வாணன்
உருவந்தான் முன்னிற்கும்
உணர்ந்து கொள்வீர்!

தப்பெழுதா மல்எழுதும்
தழைத்ததமிழ்ப் பெரும்பற்று,
தகைசால் பண்பு,
கொப்புளித்துப் பிறமொழிச்சொல்
துப்பிவிட்டுத் தூயதமிழ்
கூறும் வேட்கை,
அப்பழுக்கில் லாதஉளம்
அணையாத நல்லுணர்விங்(கு)
ஆருக் கென்றால்,
மெப்புதலுக் கில்லாமல்
உரைக்கின்றேன் எழில்வாணன்!
விழிமுன் நிற்பார்!

அன்னவர்தாம், ‘தமிழ்மகனா
நீ’
யென்றே கன்னத்தில்
அறைந்த தைப்போல்
மின்னலெனத் துடிக்கின்ற
மேலாம்ஓர் நூல்செய்தார்!
மிகம கிழ்ந்தேன்!
கன்னலென இனிக்குஞ்சொல்,
கருத்தூற்று; தூயதமிழ்
கமழும் பூங்கா!
மன்னுதமிழ் மலர்த்துகின்ற
மாபெருந்தொண் டென்றதனை
மதிக்கின் றேனே!

எம்புகின்ற பாட்டாற்றல்,
இறுமாந்த களிற்றுநடை,
இழுக்கா யாப்பு,
அம்பெழுந்து பாய்வதுபோல்
ஆர்க்கின்ற சொல்சீற்றம்,
அனைத்தும் சேர்ந்தே
செம்புலவர் எழில்வாணன்
செய்துள, ‘நீ தமிழ்மகனா’
எனும்நூல் சீர்த்தித்
தம்புலமைக் கோரெடுத்துக்
காட்டாகத் தான்நிற்கும்
தமிழ்போல் வாழ்ந்தே!

-1987

"https://ta.wikisource.org/w/index.php?title=கனிச்சாறு_7/211&oldid=1858424" இலிருந்து மீள்விக்கப்பட்டது