கிரேக்க ஒலிம்பிக் பந்தயங்கள்/மதங்கள் விளையாட்டுக்களை எப்படி உண்டாக்கின்?

விக்கிமூலம் இலிருந்து

1.மதங்கள் விளையாட்டுகளை எப்படி உண்டாக்கின?

மதம் - ஒரு விளக்கம்

மதம் என்றால் கொள்கை என்று விளக்கம் கூறுவார்கள். மதம் என்றால் வெறிகொண்ட மனநிலை என்றும் கூறுவார்கள். யானையின் மதம் என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம்.

ஒருவரது உயர்ந்த வாழ்வுக்கும், உன்னத மகிழ்ச்சிக்கும், ஒப்பற்ற சிறப்புக்கும் மதமே உதவுகிறது. வழிகாட்டுகிறது. வாழ்வாங்கு வாழவைக்கிறது. வளப்படுத்துகிறது. வசப்படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. எல்லோரையும் இணக்கமாக உறவாடவைக்கிறது. உயிராக உலவ வைக்கிறது.

மதமில்லாத மனிதக் கூட்டம் இந்த மண்ணிலே எங்குமில்லை. அவரவர்கள் விரும்புகிற அளவில், ஆண்டவர்களைப் படைத்துக் கொண்டு - அன்பால் சேர்ந்து, பண்பால் நெருங்கி, பயத்தால் ஒன்றுபட்டு, பக்தியால் திளைத்து வாழ்கின்றார்கள்.

மதம் வந்த கதை

ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்களிடையிலிருந்தே இந்த எண்ணம் ஏற்றமுற ஆரம்பித்து இருந்தது என்று நாம் அறியலாம்.

ஆதிகாலத்தில், அறிவுத் தெளிவு ஏற்பட்ட காலத்திலிருந்த மக்களுக்கு, அதாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழிபாடு செய்வதிலே விருப்பம் ஏற்பட்டது. யாரை?

தங்களைவிட எல்லாவற்றிலும் சிறந்தவராக உள்ளவருக்கு, அல்லது யார்வது தாங்கள் விரும்பும் ஒருவருக்கு மரியாதை செலுத்துகின்ற மனோபாவத்தின் தொடக்கமே, இப்படி வழிபாட்டு மரபாக மலர்ந்து வந்தது. அக்காலத்து மக்கள், தாங்கள் வணங்கி வழிபட வேண்டும் என்ற ஓர் உள்உணர்வின் வெளிப்பாடாகவே இந்த வழிபாட்டு முறை வளர்ந்து மிகுதியாகவும் தொடங்கியது.

அறிவுவளர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் மக்களிடையே முகிழ்த்தெழுந்த ஒவ்வொரு காலக் கட்டத்திலும், மக்கள் தாங்கள் வணங்க விரும்பியவற்றை, விளக்குவதற்கு முயற்சித்தனர். அதற்காக, படங்கள் மூலமாக எழுதித் தெரியப்படுத்தினர். அந்த உருவத்தையே கடவுள் என்றனர். கடவுள்கள் என்று கற்பித்தனர்.

இக்காலத்து மக்கள் இப்படிப்பட்ட கடவுளர்களை ஏற்க மறுத்து ஏதோதோ காரணங்களைக் கூறி மறுப்பார்கள். வெறுப்பார்கள். அக்கால கடவுளர்கள் மக்களைக் கவர்ந்த ஒரு தலைவர், அல்லது தனிப்பட்ட ஒரு மனிதர் என்பதாகவும் விளக்கம் கூறுவார்கள். எப்படியிருந்தாலும், அக்கால மக்களிடையே கடவுள் என்றும், வழிபாடு என்றும், மரபு என்றும் பல்வேறு நிலையில் வளர்ச்சியுற்ற வழக்கங்கள் நிறைந்து தொடர்ந்து வந்து விட்டன. மனிதரிடையே நிறைந்து விட்டன.

மதமும் வாழ்க்கையும்

எல்லா நாட்டு மக்களுக்கும், வேறுபட்ட இனத்தவர்க்கும் மதமானது.அதாவது வழிபாட்டு வழக்கமானது, வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டிருந்தது. அவர்களது ஒவ்வொரு உணர்விலும் கடவுள் நம்பிக்கை இழையோடியிருந்தது. ஒவ்வொரு செயலிலும் உற்சாகம் ஊட்டும் உயிரோட்டம் காரணமாக வெளிப்பட்டுக்கிடந்தது.

ஆகவே, ஒவ்வொரு நாடும், அதன் இனவழி மக்களும், தங்களை ஆள்கின்ற சக்திகள் (Powers) இந்த பிரபஞ்சத்தில் நிறைய இருக்கின்றன என்று நம்பினார்கள். இந்த உலகையே ஆள்கின்ற சக்திகளாகவும் அவை விளங்குகின்றன என்பதையும் நேர் முகமாகக் கண்டு, தெளிந்து கொண்டார்கள்.

சூரியன், சந்திரன், புயல், பூமி, கடல், இடி, மின்னல், மழை போன்றவைகள் தங்களைக் காக்கின்ற சக்திகள், ஆள்கின்ற அதிசயங்கள் என்று தெரிந்ததுடன் அவைகள் எல்லாம் அதிகமான சக்தியுடைய, மனித சக்திக்கும் அப்பாற்பட்ட வல்லமை வாய்ந்த கடவுள்களின் வேலைகள் என்றும் பரிபூரணமாக உணர்ந்து நம்பினார்கள்.

இஸ்ரேல் போன்ற நாடானது, ஒரே ஒரு கடவுள், அதற்கு அளப்பரிய ஆற்றல் உண்டு என்று நம்பியது. ஆனால் இந்தியா போன்ற நாடுகள் பல்வேறு கடவுளர்களைப் போற்றி வணங்கும் நாடுகளாகப் பெருகிக் கொண்டிருந்தன.

மனிதர்களும் கடவுள்களும்

மனிதர்கள் கடவுள்களைப் படைத்தார்கள் என்று நம்புவது ஒரு புறம். கடவுள்கள் தாம் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்புவது மறுபுறம். இருபுறமும் திரிபுரமாக நம்மைச் சுற்ற வைத்து, திகைத்துத் திண்டாட வைக்கின்றன.

முதலில், கடவுள்கள் மனிதர்களைப் படைத்தார்கள் என்று நம்பிக்கையூட்டுகின்ற பல்வேறு நாடுகளில் உலவும் கதைகளில், ஒரு சில கதைகளை நாம் இங்கே காண்போம்.

இது ஒரு பாபிலோனியக் கதை

தியாமட் என்ற சமுத்திரம் ஒன்று இருந்தது. அதற்கு, அவளுடைய குழந்தைகள் மேல் மகா கோபம் ஏனென்றால், அந்தக் குழந்தைகள் சதா சத்தமிட்டுக் கொண்டிருந்தன. தொந்தரவு தந்து கொண்டிருந்தன. அதனால், சமுத்திரத்தாய், தன் குழந்தைகளை அழித்து விடவேண்டுமென்று ஆத்திரத்துடன் முடிவு செய்தாள்.

தங்களுடைய தாயின் சதித்திட்டத்தைத் தெரிந்து கொண்ட குழந்தைகள், தாயை எதிர்த்தன. தாக்கின. ஆனாலும், தாயின் கோபம் முன்னே அவர்களால் தாக்குப் பிடிக்க இயலவில்லை. அவர்கள் தோற்றுப் பின்னோடினார்கள்.

குழந்தைகளின் கடைசியானவன் மார்டக் (Marduk) என்பவன் அவன் எப்படியும் தன் தாயை வென்றாக வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். கடவுளர்களை வேண்டிக் கொண்டு, தன்னுடைய இலட்சியம் வெற்றி பெறத் துணை கோரினான்.

கடவுளர்களும் கருணையுடன் செவிமடுத்து, உதவினர் புதிய சக்திகள் அவனுக்கு மாயமாக வந்துசேர்ந்தன. இறுதியாக, எல்லை இல்லா ஆற்றல் உடைய சமுத்திரத்தாயை வென்று வீழ்த்தினான் மகனாகிய மார்டக்.

தன் தாயின் உடலை, மீனை இரண்டாகக் கிழிப்பது போல, கிழித்தான். மேலும் கீழுமாக எறிந்தான். மேலே எறிந்த பகுதி வானமாயிற்று. கீழே விழுந்த பகுதி பூமியாயிற்று.

பூமியிலே இரண்டு ஆறுகள் - அவள் கண்களிலிருந்து ஆறாகப் பெருகி ஓடின. அவற்றிற்கு டைக்ரிஸ், எபரேடஸ் என்று பெயர்.

பிறகு, தியாமட் தனது தாயின் தளபதியாக விளங்கிய கிங்கு (Kingu) என்பவனையும் கொன்று, அவனிடமிருந்த மந்திர மாத்திரையைப் பெற்றான். அதன் மகத்துவம் என்ன வென்றால், எல்லா உயிரினங்களையும் கட்டுப் படுத்தக் கூடிய ஆற்றல் அதற்கு இருப்பதுதான்.

மார்டக்கின் தந்தையின் பெயர் என்கி (Enki) என்கிற இயா அவர் அந்த கிங்குவின் இரத்தத்தால் மனிதனைப் படைக்குமாறு ஆலோசனை அளித்தார்.

அப்படி மனிதனைப் படைத்தான் மார்டக். அந்த மனிதனுக்கு உரிய வேலையானது, தேவர்களுக்கு உண்ண உணவும் குடிக்க பானமும் பூமியில் விளைவிக்கிற வேலையாகும். இதனால், கடவுள்கள் ஓய்வு எடுத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்று நம்பினர்.

இப்படியாக, மார்டக், கடவுள்களின் தலைவனாக உயர்ந்தான். பாபிலோனில் பிரசித்திப் பெற்றான்.

பாபிலோனில் மனிதன் படைக்கப்பட்ட கதை இப்படிப்பாட்டாகப் பாடப்பட்டது (கி.மு.1000) என்றால், கி.மு.1635-ல் இன்னொரு படைப்புக் கதை அங்கே ஆரவாரத்துடன் எழுந்தது.

இதுவும் பாபிலோனிய நாட்டில் தான், அங்கு எழுந்த அட்ராசிஸ் இதிகாசத்தில் எழுதப்பட்டுள்ள கதை.

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பாகவே, கடவுள்கள் இருந்ததாக, இந்தக்கதை தொடங்குகிறது.

கடவுளர்களுக்குக் கால்வாய்கள் தோண்டுவதும், மண்ணைக் கிளறுவதும் போன்ற வேலைகளை மிகுதியாக இருந்தன. அந்த வேலைகள் அவர்களுக்குக் கடுமையாகவும், மிகக் கொடுமையாகவும் இருந்ததால், வேலை செய்ய விருப்பமில்லாமலும், வெறுப்போடும் ஒன்று கூடினர். வேலை நிறுத்தம் செய்தனர் (Strike).

அத்துடன் நின்று விடாமல், என்லில் (Enlil) எனும் மண்ணாளும் கடவுளின் வீட்டை எரித்துத் தள்ளினர்.

இந்த என்லில் என்பது யார் என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம் பாபிலோனியர்களின் மதத்தில், உள்ள தலைமைக் கடவுளின் பெயர் அனு (Anu) இந்தக் கடவுளின் ஒரே மகன் என்லில்.

தந்தை அனுவோ விண்ணுலகத்திற்கு அதிபதி என்லிலோ மண்ணுலகிற்கு அதிபதி.

மண்ணுலகில் இருந்து வேலை செய்து வந்த கடவுள்கள் வெறுப்புற்று, வீட்டை எரிக்க வந்தனர், அந்தக் கூட்டத்தைக் கண்ட என்லில், விண்ணுலகிலிருந்த தன் தந்தையிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டான். அதன்படி, வேலை நிறுத்தம் செய்து, கூட்டத்தை வழிநடத்தி வருகிற தலைவனைக் கொன்று விடவேண்டும் என்பது தான் அந்தக்கட்டளை.

அப்படியே, வேலை நிறுத்தத் தலைவனைக் கொன்று விட்டு, அவனுக்குப் பதிலாக, ஒரு மனிதனை (Man) வேலை செய்கிற மாற்றாளாகப் படைக்க வேண்டும் என்ற கட்டளையும் வந்து சேர்ந்தது.

வேலை நிறுத்தம் செய்த தலைவனைக் கொன்று அவனுடைய தசைகள் இரத்தத்துடன், களிமண்ணையும் சேர்த்துப் பிசைந்து, மனிதன் உருவாக்கப்பட்டான். பின்னர் அந்த மனிதனோ, வேலைசெய்யும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டான். வேலைகளை மனிதன் தொடர, கடவுள்கள் ஓய்வு பெற்றுக் கொண்டார்கள் என்ற கதை இதோடு நின்றுவிடவில்லை.

மனிதன் தன் இனத்தை விருத்தி செய்தான், மக்கள் உற்பத்தி பெருகுகிறது. மக்களின் சத்தம். அவர்கள் போட்ட கூக்குரல் எல்லாம், கடவுள்களைத் தொந்தரவு செய்தன. அவர்களின் சத்தத்தைக் குறைக்க, கடவுள்கள் எத்தனையோ வழிகளில் முயற்சித்தாலும், அவர்களால் முடியவில்லை.

அதனால், மக்களை அழித்திட, பஞ்சங்கள், பிளேக் நோய்கள் போன்ற பலவற்றை அனுப்பி வைத்தனர் அதில் அகப்பட்டு, மனிதர்கள் அழிந்தாலும், ஆத்திரமடைந்த கடவுள்களுக்கு அந்தக் காட்சியும், அவல நிகழ்ச்சியும் போதவில்லை. இன்னும் மோசமான சூழ்நிலைகளை உண்டாக்கினர். ஆனாலும், அவற்றிலிருந்துதப்பிப்பிழைக்க, தூய நீரின் கடவுளாக விளங்கிய அன்கி எனும் கடவுளின் மூலம் செய்தி அனுப்பினர்.