குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3/மக்களாட்சியே மாண்புறு ஆட்சி

விக்கிமூலம் இலிருந்து

18. மக்களாட்சியே மாண்புறு ஆட்சி

இனிய செல்வ,

தமிழ் நாட்டின் அரசு கலைக்கப்பட்டு விட்டது. கலைக்கப்பட்டதோடு மட்டுமல்ல. தமிழ் மக்களுக்கு தலை குணிவும் வந்து சேர்ந்துள்ளது. என்ன விழிக்கிறாய்! ஆம்! மிக உயர்ந்த சட்டமன்றத்தில் குப்பத்து நிகழ்ச்சிபோல அடிதடிச்சண்டை! இது வெட்ககரமான செய்தியல்லவா! ஜனநாயகம் - மக்களாட்சி என்றால் என்ன? தெளிவான கருத்துப் பரிமாற்றங்கள், விவாதங்கள், தெளிந்த உணர்வுடன் முடிவெடுத்தல், எடுத்த முடிவினை அனைவரும் ஏற்று ஒழுகுதல் இவையே ஜனநாயகப் பண்பு சார்ந்த வாழ்க்கை முறை. நாட்டில் மக்களாட்சிமுறை ஏற்பட்டு 38 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களாட்சிமுறையைச் சார்ந்த ஒழுகலாறுகள் நம்முடைய வாழ்க்கையில் கால் கொள்ளவில்லையே! பழைய அநாகரிக முறையே கோலோச்சுகிறதே! என்ன செய்வது! அரசியல், + ஆட்சியியல் ஆகியவை தற்சார்புகளில் சிக்கித்தவிக்கும் வரையில் இந்தநிலை நீடிக்கத் தான் செய்யும். அரசியல், + ஆட்சியியல் ஆகியவற்றில் ஆணவத்தின் பாற்பட்ட தன்முனைப்பு இருக்கும்வரை இந்தநிலை நீடிக்கத்தான் செய்யும்! ஆம்! செல்வ, ‘நான்' பெரிதல்ல! நாடு பெரியது! என்ற விரிந்த - பரந்தமனம் வேண்டாமா?

இனிய செல்வ, ஒரு சிறு சுவையான நிகழ்ச்சி! நேற்று முன்தினம், சீரகச் சுடுநீர் குடிக்க வேண்டிய நேரத்தில் கொண்டு வந்து தந்தனர். அது, குறுகலான வடிவமைப்புடைய குவளையில் இருந்தது. உடன் அவசர நிலையில் சூட்டோடு குடிக்க இயலவில்லை. அந்தச் சுடுநீரை ஒரு சிறிய தாம்பாளத்தில் ஊற்றினோம். ஆறிவிட்டது! இதிலிருந்து என்ன புரிகிறது? குறுகிய மனப்போக்குடையவர்கள் எளிதில் சினம் தணியார்கள்; மாற மாட்டார்கள். இதுதானே உண்மை. ஒருவர் கருத்தைப் பிறிதொருவர் ஏற்கும் வண்ணம் எடுத்துக்கூறி ஏற்கவைத்தலே மக்களாட்சிப் பண்பு. அது போலவே மற்றவர் கருத்தைத் தன் கருத்துப்போலவே எடுத்தாய்வு செய்து ஏற்கக் கூடியதானால் ஏற்பதும் கடமை. மக்களாட்சி முறைக்கு "ஏற்புமுறை” தலையாயது; இன்றியமையாதது. இசைவான ஏற்பு பெறும்வரை அறிவார்ந்த நிலையில் கலந்து பேசுதலே வாழ்வியல்.

இனிய செல்வ, நமது திருக்குறள் முடியாட்சிக் காலத்தில் தோன்றியது. ஆயினும் மக்களாட்சிமுறைத் தாக்கம் மிகுதியும் திருக்குறளில் உண்டு. அடியிற் கண்டுள்ள திருக்குறள்களைப் படித்துப்பார்:

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

(118)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

(448)

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

(517)
என்ற திருக்குறள்கள், மக்களாட்சியில் ஈடுபடும் வாக்காளர்கள், வேட்பாளர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியாளர்கள் கற்றுத் தெளிய வேண்டியவை, இனிய செல்வ,

சமன்செய்து சீர்ததூக்கும் கோல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

இந்தத் திருக்குறள் ஒவ்வொருவர் வாழ்க்கைக்குமே பாடமாக அமையவேண்டிய திருக்குறள். கடைகளில் பொருளை வாங்கும் முன்பு, எவரும் தராசைத் துக்கிச் சமநிலை காட்டிய பின்பே எடைக்கல்லையும் பொருளையும் இட்டு நிறுப்பர். அதுபோல் சிறந்த பண்புள்ள மனிதர்கள் மற்றவர் கருத்தைத் தன்முனைப்பும் தற்சார்புமின்றி ஏற்று ஆய்வு செய்வர். இதுவே சமன் செய்யும் பண்பு. இத்தகு பண்புகள் கொள்ளும் குடும்பத்தார் அன்போடு இணைந்து வாழ்வர். எங்கும் ஒருமை நிலவும். காழ்ப்பு இல்லை! கலகமும்-இல்லை! காந்தாரிக்குக் குழந்தைகள் பிறந்தது போல இன்று கட்சிகள் பிறக்கின்றன; இயக்கங்கள் தோன்றுகின்றன! இவற்றால் என்ன பயன்? வெறும் வெளிச்சமே! இனிய செல்வ, மீண்டும் எழுதுவோம்!
இன்ப அன்பு
அடிகளார்