சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/006-010

விக்கிமூலம் இலிருந்து

61. நினைவுக்கல்

வாணி என்னும் பெயர் கொண்ட செல்வச் சீமாட்டி ஒருத்தியிருந்தாள். அவளுக்கு ஓர் ஆசை. தான் மரித்ததும், தன் கல்லறையில் பொய்யாய்ச் சில புகழுறைகள் பொறிக்கப்பட வேண்டும் என்று விரும்பினாள். அப்படிப்பட்ட புனைந்துரையைப் புனைந்துவர புலமையில் சிறந்த வித்தகன் ஒருவனிடம் வேண்டினாள். அவனும் எத்தனையோ தொடர்களை எழுதியெழுதிப் பார்த்து எவையும் பொருந்தாததால்

இறுதியில் இவ்வாறு எழுதினான். “அரசுக் கல்லூரியில் புகழ்மிக்க முன்னாள் பேராசிரியரின் பக்கத்து வீட்டவளும், முன்னாள் நகர மேயரின் அடுத்த வீட்டவளுமாகிய திருமதி வாணி இங்கே ஓய்வு கொள்கிறார்”
62. எலிக்கும் ஈக்கும் இணக்கம் தெரிவித்தல்

எலியும், தேனீயும் இணைபிரியா உடன்பிறப்புகள் ஆயினர். அந்த இணைப்பில் இணைந்து கொள்ளும்படி பல்கலைக் கழகப் பட்டதாரி ஒருவர் அழைக்கப்பட்டார். அழைப்பிற்கு இணங்கி அக் கூட்டில் அவரும் ஓர் அங்கமானார்.



கூட்டில் முதலிடம் எலிக்கும், இரண்டாவது இடம் தேனீக்கும் மூன்றாவது இடம் பல்கலைக் கழகப் பட்டதாரிக்கும் வழங்கப்பட்டன. பட்டதாரி, எலிக்கும் தேனிக்கும் கீழாக மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டதைக் குறித்து கேட்ட போது, அந்த பட்டதாரி இளைஞன் சொன்னான் “அவ் இருவரில் ஒருவராகிய எலி சிறிய துளை (பொந்து) வழியாக நழுவிச் செல்லும் திறன் கொண்டது. தேனீயோ தன் கொடுக்கினால் (தும்பியினால்) பிறர் அரத்தத்தை உறிஞ்சி வாழ்வதில் சிறந்தது. எனவே தான் அவ் இருவருக்கும் பின்னால் மூன்றாவது இடம் வகிக்க இணங்கினேன்” என்று.

63. ஊமையன் பேசுகிறான்

ஊமையன் போல் நடித்து ஊரெல்லாம் பிச்சையெடுத்து வாழ்ந்து வந்தான் ஒருவன். ஒருநாள் மது அருந்து-

வதற்காக இரண்டு நாணயங்களோடு மதுக்கடைக்குள் புகுந்தான். மதுக்கடைக்காரன் அந்த இரண்டு காசுகளுக்குப் பிச்சைக்காரனின் திருவோட்டில் மது ஊற்றி நிரப்பினான். பிச்சைக்காரன் “இன்னும் கொஞ்சம் ஊற்றுங்கள்” என்று கேட்டான். ‘இதற்கு முன் நீ பேசியதில்லையே; இப்போது மட்டும் எப்படி பேசுகிறாய்?” என்று வியந்து கேட்டான் மதுக்கடைக்காரன். பிச்சைக்காரனோ, இதற்குமுன் என்னிடம் பணம் கிடையாது. என்னால் எப்படிப் பேசமுடியும்? இப்போதோ என்னிடம் இரண்டு காசுகள் உள்ளன. எனவே எல்லாம் மாறிப்போயின” என்றான்.
64. இங்குப் பலமாக நாறுகிறது

முதிர்வயதான செல்வன் ஒருவன் விருந்தொன்று நடத்திக் கொண்டிருந்தான். திடீரென்று விருந்தினர்கள் இடையில் காற்றை வெளியே விட்டுவிட்டான் “ஆ!” விருந்தினர்களில் ஒருவன் வியந்து கூவினான். “காற்று, போல் ஒலி எழுப்பினாலும் கடுநாற்றம் அடிக்கவில்லை” என்றான் அவன்.

“கடுநாற்றம் வீசாதது மட்டுமல்ல; அது நறுமணத்தைலம் போல் மணம் கமழ்கிறது” என்றான் வேறொருவன். புருவத்தை உயர்த்திய வண்ணம் “என்ன?” என்று வாடிய முகத்துடன் கேட்டான் செல்வன். மணமற்ற காற்றை ஒருவன் வெளிவிட்டால், அவன் உயிர் விரைவில் போய்விடும் என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மைதானா? நான் நீண்ட நாள் உலகில் உயிர் வாழ்வேனா?” என்றெல்லாம் மேலும் கேட்டான் அந்தச் செல்வன்.

உடனே அந்த முதல் விருந்தினன் தன் கைகளால் முகத்திற்கெதிரே பலமாக வீசிக் கொண்டே ‘இப்போது தான் கடுநாற்றம் காற்றில் பரவி இந்த வழியாக வருகிறது” என்றான்.

இரண்டாம் ஆள் தன் மூக்கை விரல்களால் பலமாக (பொத்திக் கொண்டு) அழுத்தி மூடிக்கொண்டு, முகத்தைச் சுளித்த வண்ணம் “இப்போது தான் இங்குப் பலமாக நாற்றமெடுக்கிறது!” என்றான்.

65. சொல்லும் குறி தப்பிவிடும்

பத்தன் ஒருவன் ஆலயம் சென்று குருக்களிடம் தன் எதிர்காலம் பற்றி உரைக்கக் கேட்டான். குருக்களோ குறி கேட்க வந்தவனிடம் “முதலில் நறுமணப் பொருளுக்குரிய காணிக்கையை வை. இல்லையெனில் சொல்லும் குறி, குறி தப்பிவிடும்" என்றார். “அப்படிப்பட்ட நன்கொடை இல்லாமல் சொல்லும் குறி அனைத்தும் நடக்காது” என்றார் மேலும்.

66. அழுகிய தட்டு

அரசு அதிகாரி ஒருவர் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட போது கடவுள் முன்னிலையில் பதவி உறுதிமோழி எடுத்துக் கொண்டார். “எனது இடது கையால் நான் கையூட்டு (இலஞ்சம்) பெற்றால் என் கண்களுக்கு முன்னாலேயே

அந்தக் கை அழுகட்டும். அவ்வாறே வலது கையால் பெற்றால் அதுவும், அழுகி அழிந்து போகட்டும்” என்று உறுதி செய்தார்.

சில நாள்களுக்குள்ளாகவே ஏராளமான தங்கக்கட்டிகளைக் கையூட்டாக ஒருவர் அவருக்கு வழங்கினார். வாக்குறுதி மொழிக்கு அஞ்சி அந்த அதிகாரி “நான் இந்தத் தட்டை உங்கள் முன் நீட்டுகிறேன். அதில் தங்கக் கட்டிகளை வைத்துவிடுங்கள். அதுமட்டுமில்லை பதவி ஏற்றபோது பணத்தை இலஞ்சமாகப் பெறுவதைக் குறித்துத் தான் வாக்களித்தேனேயன்றி தங்கக் கட்டிகளைப் பெறுவதைப் பற்றியன்று. அப்படியே ஏதேனும் ஒன்று அழுக வேண்டுமானால் தட்டு அழுகிப்போகட்டுமே. ஏனெனில் தட்டுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பு கிடையாதே” என்றார்.

67. நான் உங்கள் வீட்டுப் பிள்ளை

பணக்கார முதியவர் ஒருவர் வலுவற்ற மெலிந்த உடலோடும் முதுமைத் தோற்றத்துடனும் காணப்பட்டார். யாரேனும் அவர் உடலின் வலுவின்மை பற்றியும் முதுமைத் தோற்றம் பற்றியும் குறிப்பிட்டால் அவர் மீது வெறுப்புக் கொள்வார். மாறாக அவர் காளை போன்ற கட்டுடல்

கொண்டவர் என்றும், கட்டழகு மிக்கவர் என்றும் யாரேனும் அவர் உடல் நலம் குறித்தும் தோற்றம் குறித்தும் மிகைப்படுத்திப் புகழ்ந்துரைத்தால் புளகாங்கிதம் அடைவார் அந்தப் பணக்கார முதியவர்.

இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஒருவர் அவரிடம் சில நன்மைகள் பெறும் நோக்கத்துடன் “உங்கள் முடி நரைத்திருந்தாலும், உங்கள் மேனியழகோ கொள்ளையழகு குழந்தையழகு; அத்தனை மென்மை அத்தனைக் கவர்ச்சி இப்போதுதான் பிறந்த குழந்தையின் மேனி உங்கள் திருமேனி” என்று புகழ்ந்தார். “என் மேனி உண்மையில் குழந்தைபோல் மென்மையாக இருக்குமாயின் உங்கள் குழந்தையாகவே நான் இருக்க விரும்புகிறேன்” என்று கிறுக்கில் உளறினார் அந்த முதியவர்.

68. பிறந்தநாள் வாழ்த்துகள்

முதியவர் ஒருவர் தமது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினார். வாழ்த்துகளும், பாராட்டுரைகளும் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. பலர் பலவாறு வாழ்த்தினர். வந்திருந்தோரில் ஒருவர் “நீங்கள் 120 ஆண்டுகள் நீடுழி வாழ வேண்டும்” என்று வாழ்த்தினார். இந்த வாழ்த்துரைக் கேட்டதும், வாழ்த்தியவர் மீது சீறிப் பாய்ந்தார் முதியவர். “என்ன இது? உங்கள் வீட்டுப் பணத்திலா நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்? பின் ஏன் என் வாழ்வை 120 ஆண்டுகள் என்று குறைத்து வாழ்த்தினீர். 150 அதற்கு மேலும் அதிகமான ஆண்டுகள் வாழவேண்டும் என்று ஏன் நீங்கள் வாழ்த்தவில்லை?” என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளை அடக்க முடியாமல் அடுக்கித் தள்ளினார் அந்த முதியவர். 

69. மிகைப்படுத்துதல்

இரண்டு மனிதர்கள் சந்தித்தபோது வெறுப்போடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். “ஏன் உன் முகம் கடுகடுத்துக் காணப்படுகிறது” என்றான் ஒருவன். மற்றவன் சொன்னான், “நான் நாட்டின் இடையில் வாழ்கிறேன் எந்த ஒலியும் என் காதில் விழாதிருப்பதில்லை. நாட்டின் எந்தச் செய்தியும் எனக்கு எட்டாமல் போவதில்லை. பின்னிரவில் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் வேளை, மேலை வானகத்தில் எழுப்பிய பெளத்த துறவியின் வேத ஒலிகள் என் உயிர் அமைதியை அழித்து விடுகின்றன. எத்தனைதான் வேண்டினாலும், என் வேண்டுதலை அவர் புறக்கணித்து விடுகிறார். சினத்தில் மாமேரு மலையை எடுத்துச் சிறிய கல்லென நினைத்து எறிந்தேன். முற்றிலும் எதிர்பாராத வகையில், கல் தன்னை நோக்கி வருவதைக் கண்ட துறவி தன் கண்களைத் துடைத்தவாறு சொன்னார், “என் பார்வையைக் கெடுக்க எங்கிருந்து வருகிறது இந்த தூசி?” என்று கேட்டார். பின் மந்திரம் ஒலிப்பதைத் தொடர்ந்தார், எந்த விதச் சலனமுமின்றி, எனது முயற்சி சிறிது கூட அவரைத் தாக்கவில்லை.”

பின்னர் இந்த மனிதன், அந்த மனிதனிடம் “ஆமாம் உங்கள் முகமும் கடுத்திருக்கிறதே காரணம் என்னவோ?” நேற்று என் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு உண்ணக் கொடுக்க அந்த நேரத்தில் வீட்டில் ஒன்றுமில்லை. எனவே கொசு ஒன்றினை நேரம் பார்த்துப் பிடித்து அதன் நெஞ்சத்தையும் ஈரலையும் பதமாய் வெட்டியெடுத்து தூய்மை செய்து வறுத்து உண்ணக் கொடுத்தேன். யார் எதிர்பார்க்க முடியும்? ஈரல் துண்டுகளில் ஒன்று அவர் தொண்டையில் சிக்கிக் கொள்ளும் என்று. துண்டுகள் பெரிதாயிருந்ததால் சிக்கிக் கொண்டன என்றான் விருந்தினர். ஓயாது என்னைக் காணும்போதெல்லாம் அதையே குறையாக முறையிடுகிறார்.” என்று.

“எப்படி அந்த மனிதனுக்கு அத்துணைச் சிறிய தொண்டையிருந்தது?” என்றான் முன்னவன். பின்னவன்

சொன்னான் “பல நூறு கற்களுப்பால் துறவி எழுப்பிய மந்திர ஒலி உங்கள் காதில் எப்படி விழுந்ததோ, அத்தனை பெரிய மாமேருமலை இத்தனைச் சிறிய தூசியா துறவியின் கண்ணில் எப்படிப் பட்டதோ அப்படியே தான். இந்த விருந்தினருக்கும் இத்தனைச் சிறிய தொண்டை அமைந்தது” என்றான். அதிர்ந்தான் முன்னவன். அகன்றான் அவ் இடத்தை விட்டு.

70. சீருடைகள் வழங்கப்பட்டன

விருந்தினர் ஒருவர் வரவேற்பறையில் அமர்ந்திருந்தார். வீட்டு வேலைக்காரன் முன்னும் பின்னுமாக இரண்டு ஓடுகளை தன் இரண்டு மறைவிடங்களில் கட்டிக் கொண்டு, தேநீர் எடுத்து வந்தான். “விருந்தினர் முன்னிலையில் இப்படி கடினமான ஆடையை உடுத்தி வரலாமா?

சென்று மெல்லிய ஆடை அணிந்து வா,” என்று சீற்றம் கொண்டார் முதலாளி. உள்ளே சென்ற வேலைக்காரன் ஓடுகளுக்கு மாற்றாகத் தாமரை இலைகள் இரண்டினை அவ் இடங்களில் உடுத்திச் சற்று நேரத்தில் மீண்டும் வரவேற்பறைக்கு வந்தால்... கவனித்துக் கொண்டிருந்த விருந்தினர், “வாழ்க்கை உங்கள் இல்லத்தில் மிகவும் கண்ணியக் குறைவாக உள்ளது” என்றார். செலவைக் குறைக்க இந்த நடவடிக்கையோ என்று மேலும் வினவினான். முதலாளி, “இல்லை இல்லை இது கண்ணியக் குறைவானது அல்ல” என்று மறுப்புத் தெரிவித்தார். “சான்றுக்கு உங்கள் வேலைக்காரனை எடுத்துக் கொள்ளலாமே” என்று சுட்டிக்காட்டினார் விருந்தினர். அவர் மேலும் சொன்னார், “அவனிடம் ஒரு தடித்த ஆடையும், மெல்லிய ஆடை ஒன்றுமே உள்ளன. இதைத் தவிர வேறு எந்த ஏற்பாடுகளும் நீங்கள் செய்யவில்லை என்றே தோன்றுகிறது. இவையெல்லாம் செலவை நினைத்தா? என்று. “முதல் முறையாக அவனை நான் தேர்வு செய்யும்போது, உணவுக்கு (சாப்பாட்டிற்கு) தன் வீட்டிற்குச் சென்றுவிடுவதாகவும், சீருடை மட்டும் நான் கொடுத்தால் போதும் என்றும் ஒப்பந்தம் செய்துள்ளான். குறைந்தது இரண்டு வகை சீருடை வழங்கவில்லையெனில், ஒப்பந்தத்தின் கட்டளை நிறைவேற்றுவது கடினமாக இருக்குமல்லவா?” என்றான் வீட்டின் முதலாளி பெருமிதத்துடன்.