தமிழகத்தில் குறிஞ்சி வளம்/குற்றாலம்

விக்கிமூலம் இலிருந்து


 

தமிழகத்தில்

குறிஞ்சி வளம்



உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

தமிழகத்தில்
குறிஞ்சி வளம்





ஆசிரியர் :

முருகுசுந்தரம், எம்.ஏ.








பழனியப்பா பிரதர்ஸ்
சேப்பாக்கம் :: தெப்பக்குளம்
சென்னை - 5 திருச்சி - 2

முதற் பதிப்பு :
பிப்ரவரி 1962

 


விலை :

ரூ. 4-50


 



ஏஷியன் பிரிண்டர்ஸ்,
சென்னை-5.


 
முன்னுரை

“ஒரு சொற்றாெடர் எழுதுவதற்கு நூறு நூல்கள் படித்தேன். ஒரு வருணனை எழுதுவதற்கு நூறு கல் சுற்றுப் பயணம் செய்தேன்” என்று குறிப்பிட்டான் ஆங்கிலச் சொல்லேருழவன் மெகாலே. இதைப் படித்தவுடன் என்னையறியாமல் ஒருவகை உள்ளக்கிளர்ச்சி பெற்றேன். ‘நாமும் ஏன் தமிழகத்தைச் சுற்றிவரக்கூடாது?’ என்ற எண்ணம் என் உள்ளத்தில் ஏற்பட்டது. முதன் முதலாக இயற்கை எழில்மிக்க தமிழகத்து மலைகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். இந்த முடிவு என் உள்ளத்தில் கருக்கொண்ட பொழுது, இப்பயணத்தை ஓர் இன்பப் பயணமாகவே மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் புறப்படும் நேரத்தில் என் உள்ளம் மாறிவிட்டது. இப்பயணத்தைப் பயனுள்ள வழியில் செலவிட்டால் என்ன என்று எண்ணினேன். அதன் விளைவே இந்நூல். ஆனால் முதலில் என் உள்ளத்தில் கருக்கொண்ட குறிக்கோள் முற்றுப் பெறாமல் போய்விட்டது. வரலாற்றுச் செய்திகளையும், புள்ளி விவரங்களையும் தேடித்திரிந்த காரணத்தால் இயற்கை எழிலில் என் உள்ளத்தை முழுக்க முழுக்கத் தோயவிட்டு, இன்பம் நுகர முடியாமல் போய்விட்டது. அக்குறையை நிறைவு செய்ய, நான் மீண்டுமொருமுறை தமிழகத்து மலைகளைச் சுற்றித்தான் ஆகவேண்டும்.

இந்நூல் வெளிவரப் பல நண்பர்கள் எனக்குப் பேருதவி புரிந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சேலம் மாவட்ட விளம்பர அதிகாரியும், என் கெழுதகை நண்பருமான திரு. T. M. காளியப்பா, M. A. அவர்கள். சிறந்த மேற்கோள் நூல்களை அவர் எனக்கு அரிதின் முயன்று தேடித்தந்தார். நீலகிரிக் காடுகளின் உட்பகுதியில் நுழைந்து பல செய்திகளை அறிவதற்கும், தோடர்கள் வாழும் தொட்டபெட்டா முதலிய இடங்களுக்குச் சென்று அவர்கள் பண்பாட்டை அறிவதற்கும் எனக்குப் பெருந்துணை புரிந்த படகா இளைஞனான ‘லிங்கமூர்த்தி’யை என்னால் இங்குக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அவ்விளைஞன் என்னைக் குதிரை மீது அமர்த்தி, எளிதில் சென்றடைய முடியாத இடங்கட்கெல்லாம் இட்டுச் சென்று, பல அரிய செய்திகளை அறிவதற்குப் பெருந்துணை புரிந்தான்.

இந்நூல் சிறந்த முறையில் அச்சிடப்பட்டு உங்கள் கையில் வண்ணமலராய், விரிந்திருப்பதற்குக் காரணமானவர், மதிப்பிற்குரிய திரு. பழனியப்பா அவர்களே அன்னார்க்கு என் நன்றி.

முருகுசுந்தரம்
சேலம்
1-12-61


1. குறிஞ்சி

மங்கையரின் சிரிப்பொலியோடு போட்டியிட்டு மலையிலிருந்து இழிந்துவரும் குற்றால நீர்வீழ்ச்சியில் மூழ்கியபோதும், உதகமண்டலத்தைச் சுற்றிப் பரவியுள்ள கண்கவரும் இள மரக்காட்டில் கவலையின்றிச் சுற்றித் திரிந்தபோதும், அணியிழை மகளிர் ஆடவர் புடைசூழக் கோடைக்கானல் ஏரியில் தோணியூர்ந்த காட்சியை நேரில் கண்டபோதும், புரட்சிக் கவிஞன் தமிழகத்தை வாழ்த்திப் பாடிய தெள்ளு தமிழ்ப்பண், தென்றல் இவர்ந்து என் செவிப்பறையில் மோதியது.

புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவி
பொன்னார் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழி பேசி இல்லறம் நாடும்
காதல் மாதர் மகிழுறும் நாடு!”

இப்பாடல், எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாமல் தித்திக்கும் கொல்லித்தேன். “மங்கை ஒருத்தி தரும் சுகமும் எங்கள் மாத்தமிழுக்கு ஈடாமோ?” என்ற மறத்தமிழன் கூற்றுக்குப் பொருத்தமான எடுத்துக்காட்டு! இன்றமிழ் நாட்டின் இயற்கை வளத்தை எழில் நலத்தோடு கூட்டி, நம் கண்ணெதிரே கொண்டு வந்து நிறுத்தும் படப்பிடிப்பு அன்பொடு இயைந்த காதல் வாழ்வை அணிபெறப் பொதிந்து வைத்த அலங்காரப் பெட்டகம் ! பண்டைத் தமிழ் வாழ்வைத் தெரியக் காட்டும் பண்ணமைப்பு !

இக்கொஞ்சு தமிழ்ப் பாட்டில் என் உள்ளத்தைக் குழையவிட்டு, தமிழகத்து மலைகளில் இரண்டு திங்கள் பித்தனைப்போல் சுற்றியலைந்தேன். சிலம்பில் சிரித்து, மேகலையில் மின்னி, சங்கப்பொழிலில் தவழ்ந்து விளையாடும் செந்தமிழ்க் குமரியோடு உறவுகொண்ட என் கவிதை உள்ளம், கபிலரும் பரணரும், அவ்வையும் ஆதிமந்தியும் வாழ்ந்த சங்க காலத்தை நோக்கிச் சிறகடித்துப் பறந்து சென்றது. இன்றைய விஞ்ஞான நாகரிகம் என் உள்ளத்தைவிட்டு நீங்கியது. ஈராயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட என்னரும் தமிழ் நாகரிகம் என் இதயத்தில் குடிப்புகுந்தது. நாற்புறச் சுவர்களுக்குள் இருந்து வரிவரியாகப் படித்த குறிஞ்சிக் கலியின் உண்மைப் பொருளை நேரில் கண்டு உணர்ந்தேன். குறிஞ்சிப்பாட்டின் விரிவுரையை இங்கு கூர்ந்து கற்றேன். அகநானூற்றுப்பாடல்களை இங்கு ஆழ்ந்து பயின்றேன். பண்டைத் தமிழ்க்குடியின் குறிஞ்சி வாழ்வு என் உள்ளத்தில் நிழலாடியது. அச்சங்க காலக் கனவிலேயே மூழ்கி என்றென்றும் இருந்துவிட்டால் என்ன என்று என் உள்ளம் ஏங்கியது.

வெள்ளையர் வாணிபத்திற்காக வந்து இறங்கிய போதுதான் நாகரிகம் என்னும் சரக்கையும் தங்கள் கப்பலிலிருந்து தமிழகத்தில் கொட்டினார்கள் என்று எண்ணும் வழக்கம் சில மேதாவிகளிடையே இன்றும் இருந்து வருகிறது. குளிர் நாட்டில் வாழ்ந்த வெள்ளைத்துரைமார்கள் தமிழகத்துக் கொதிக்கும் வெயிலுக்கு ஆற்றாமல் உதகைக்கும், கோடைக்கானலுக்கும் ஓடினர். ஆங்கில நாகரிகத்தைச் செம்மறியாட்டைப் போல் பின்பற்றிய நம் நாட்டுச் செல்வர்களும், வெள்ளையரின் வாலைப்பிடித்துக்கொண்டு குறிஞ்சி நகரங் (Hill Stations) களுக்கு ஓடினர். கோடையில் குறிஞ்சி நகரங்களில் வாழ்வதை நாகரிகம் என்றும் கருதினர். மலை வாழ்க்கையைக்கூட வெளி நாட்டார் தாம் நமக்குக் கற்றுக் கொடுத்ததாகக் கருதினர். பாவம்! நம் இலக்கியத்தில் பரந்து கிடக்கும் குறிஞ்சித் திணை அவர்கள் கண்ணில் படுவதில்லை.

உலகில் வழங்கும் வளர்ச்சியுற்ற மொழிகளிலெல்லாம் எழுத்து, சொல், யாப்பு, அணி என்ற நான்கிற்கும் இலக்கணம் உண்டு. ஆனால் வாழ்க்கைக்கும் இலக்கணம் அமைத்து அதன்படி வாழ்ந்த பெருமை, பரவைசூழ இப்பரந்த உலகில் தமிழருக்கேயன்றி வேறு யாருக்கும் கிடையாது. அவ்வாழ்க்கை இலக்கணத்தை அகம், புறம் எனத் தமிழர் இரு கூறாக்கினர். அவ்விலக்கணத்தின் அடிப்படையிலேயே தமிழ் இலக்கியங்களெல்லாம் தழைத்து வளர்ந்தன.

அக வாழ்க்கை காதல் வாழ்க்கையாகும். ஒத்த காதல் வயப்பட்ட ஓரிளைஞனும் குமரியும், துய்த்த இன்பத்தை இன்னதென வெளியில் கூற இயலுமோ? கற்றறிந்த காதல் மொழியையும், காதலன்பால் உற்றறிந்த இன்ப உணர்வையும் அகத்தில் பொதிந்து வைத்து, எண்ணி எண்ணி இன்பவெறி கொள்வாளே தவிர எந்தப் பெண்ணும் வெளியில் கூறமாட்டாள். கொஞ்சுமொழிக் கோதையிடம் பயின்ற காதல் விளையாட்டை, நெஞ்சில் நிறுத்தி நினைவைத் தேனாக்கி வாழ்வானே தவிர, எந்த ஆடவனும் வெளிக்கூறான். இவ்வாறு அகத்தோடமைந்த அன்புடை வாழ்க்கை ‘அகம்’ எனப்பட்டது. அவ்வாறன்றி, தம் வாழ்வில் துய்த்த இன்ப துன்பங்களைப் பலரும் அறிய வெளிப்படக் கூறும் தகுதியுடையது புறம் எனப்பட்டது. அகம் என்றால் இன்பத்தை மட்டும் குறிப்பதன்று. துன்பமும் காமத்தைச் சார்ந்து நிகழுமாயின் அது அகத்திலும், பிற சார்பு பற்றித் தோன்றுமாயின் அது புறத்திலும் கொள்ளப்படும். மற்றும் ஈகை, வீரம், யாவும் புறம் எனப்படும்.

தமிழ் மக்கள் நிலத்தை ஐவகையாகப் பிரித்தனர். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பனவே அவை. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனவும், வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம் எனவும், கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் எனவும், காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனவும் குறிக்கப் பெறும். ஆகையினால்தான் நிலவுலகை ‘நானிலம்’ என்ற பெயரால் தமிழ்ப் பெரியோர் குறித்துப் போந்தனர். பாலைக்குத் தனி நிலப்பகுப்புக் கிடையாது. குறிஞ்சியும் முல்லையும் கால வேற்றுமையால் மாறிச் சுரமாதலே பாலையெனக் கூறப்படுகின்றது. இந்நிலங்களில் நிலைபெற்ற பொருள்களை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என மூவகைப் படுத்தினர்.

முதற்பொருள் நிலம் காலம் என இருவகைப்படும். குறிஞ்சி நிலத்திற்குரிய பெரும்பொழுது கூதிர் காலமும் முன்பனிக் காலமும் ஆகும். சிறுபொழுது யாமம். கருப்பொருள் என்பது அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் முதலியன. குறிஞ்சிக்குரிய தெய்வம் முருகன். உயர்ந்தோர் பொருப்பன், வெற்பன், சிலம்பன், கொடிச்சி. தாழ்ந்தோர் குறவர், கானவர், குறத்தியர். பறவைகள், கிளி, மயில். விலங்கு, பன்றி, புலி, கரடி, யானை, சிங்கம். ஊர் சிறுகுடி, குறிச்சி. நீர், அருவிநீர், சுனைநீர். பூ, வேங்கைப்பூ, குறிஞ்சிப்பூ, குவளைப்பூ, காந்தட்பூ. மரம் சந்தனம், தேக்கு, அகில், வேங்கை, திமிசு, அசோகம், நாகம், மூங்கில். உணவு மலைநெல், மூங்கிலரிசி, தினை, தேன், பழம். பறை, முருகியம், தொண்டகப்பறை. யாழ் குறிஞ்சி யாழ். பண் குறிஞ்சிப்பண். தொழில் வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைகாத்தல், கிளிகடிதல், தேனழித் தெடுத்தல், கிழங்கு கிண்டியெடுத்தல், அருவி நீராடல் முதலியன.

குறிஞ்சிக்குரிய உரிப்பொருள்கள், புணர்தலும், புணர்தல் நிமித்தமும் ஆகும். இயற்கைப் புணர்ச்சி யும் இடந்தலைப்பாடும், பாங்கற் கூட்டமும், பாங்கியிற் கூட்டமும், இரவுக் குறிக்கண் எதிர்ப்பாடும், பகற் குறிக்கண் எதிர்ப்பாடும் புணர்தல் என்று கூறப்படும், தலைவன் தோழியைக் குறையுறும் பகுதியும், அப்போது தோழி கூறுவனவும், குறை நேர்தலும், மறுத்தலும் புணர்தல் நிமித்தமாகும்.

குறிஞ்சி என்ற இப்பெயர் அந்நிலத்தில் பூக்கும் மலர்பற்றி வந்ததாகும். குறிஞ்சிப்பூ நம் நாட்டில் மிகவும் அருகிக் காணப்படுகிறது. இது பல்லாண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் தன்மையது. அழகும் மணமும் மிக்கது. இது மலரும் காலத்தை முன்கூட்டியே அறிந்து மேலை நாட்டினரும், நம் நாட்டில் ஆர்வமுள்ள பலரும் அது பூக்கும் இடத்தில் சென்று கூடுகின்றனர். இறுதியாக 1959-ஆம் ஆண்டு, குறிஞ்சி மலர் கோடைக்கானலில் பூத்தது. இச்செய்தியைப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தின.

நானிலங்களில் குறிஞ்சியே சிறந்தது; வற்றாத வளப்பமுடையது. அதனால்தான் வைப்பு முறையில் குறிஞ்சியை முதலில் வைத்துக் கூறினர் இலக்கண நூலார். மற்ற நிலங்களில் வாழும் மக்களைப்போல் குறிஞ்சி நில மக்கள் உழைக்க வேண்டியதில்லை. இவர்களது வாழ்க்கைக்குப் போதுமான வளம் இயற்கையாகவே மண்டிக் கிடக்கிறது. எப்பொழுதும் இடையறாத மழை பெய்து கொண்டிருப்பதால், நீர் வளத்திற்கு இங்கு குறைவில்லை. எங்கு பார்த்தாலும் அருவிகளும், சிற்றாறுகளும் சுழித்து ஓடிய வண்ணமிருக்கும். தினையை விதைத்துவிட்டால் தானாக விளையும். அருவி நீரின் வளத்தால் மலைநெல் விளைகிறது. மூங்கிலரிசியும் குறிஞ்சிவாழ் மக்களுக்கு உணவாக அமைகிறது. தேனும் இவர்களுக்குச் சிறந்த உணவாகும். தினை மாவைத் தேனில் பிசைந்து கானவர் விருப்போடு உண்பர். காடுகளில் உள்ள தேன்கூட்டை அழித்துத் தேனெடுப்பது இவர்களுக்குச் சிறந்த பொழுது போக்கு. கானவர் தேனெடுப்பதில் பெரு விருப்புடையவர் என்பதைக் குறிஞ்சிக் கலி இலக்கிய நயத்தோடு கூறிச் செல்லுகிறது.

மலைநாட்டுத் தலைவன் ஒருவன், காதலியைக் காணவராமல் காலந்தாழ்த்துகிறான். அவன் பிரிவைப் பொறுத்தல் ஆற்றாத காதலி, மிகவும் உள்ளம் நைந்து வாடுகிறாள். அவள் துன்பத்தைக் கண்ட தோழி, “அன்புடைத் தோழி! உன் காதலன் உயர்குடியில் பிறந்தவன். அவன் மலைநாடு வளப்பம் மிக்கது. அவன் நாட்டில், தினைக் கொல்லையில் அமைத்த பரண்மீது அமர்ந்து காவல் புரியும் கனி மொழிப்பாவையர், தம் கூந்தலின் ஈரத்தை உலர்த்திக் கொள்வதற்காகப் புகைக்கும் அகிற்புகை, வானில் சென்று பரவுகிறது. அப்புகையுள் புதையுண்ட விண்மதி ஒளி மறைத்து மலையுச்சியை அடைகிறது. அம்மலையின் அடுக்கத்தில் தேன் கூடுகள் மலிந்து காணப்படுகின்றன. தேன் கூடுகளையே கண்டு பழகிய கானவர் கண்கள், புகையுண்ட முழுமதியை மலையுச்சியில் கண்டதும், அதையும் ஒரு தேன் கூடு என்று கருதுகின்றனர். அக்கூட்டை அடைவதற்காக மலையுச்சியில் ஏணியைச் சார்த்தி ஏறுகின்றனர். அத்தகைய செழிப்புமிக்க மலைநாட்டுத் தலைவன் உன்னைக் காணக் கட்டாயம் வருவான்” என்று கூறித்தேற்றுகிறாள். 

அப்பாடல் பின் வருமாறு :

“அவனுந்தான், ஏனல் இதனத்து அகிற்புகை உண்டு இயங்கும்
வான் ஊர் மதியம் வரைசேரின், அவ்வரைத்
தேனின் இறால்என ஏணிஇழைத் திருக்கும்
கான்அகல் நாடன் மகன்.”

அருவி நீரின் வளத்தால் விளைந்த மலைநெல்லை அவர்கள் குற்றும் செய்தி இலக்கியத்தில் சுவைபடக் கூறப்பட்டுள்ளது. முற்றி மணம் வீசும் சந்தனமரத்தால் உரல் செய்வார்கள். முத்து உதிருமளவு முதிர்ச்சி பெற்று, நீண்டு வளர்ந்த யானையின் கொம்பை உலக்கையாகப் பயன்படுத்துவார்கள். முறம் போல் அகன்றிருக்கும் சேம்பின் இலையில் மலைநெல்லை வாரிக் கொண்டு வருவார்கள். அதை உரலில் கொட்டி மகளிர் இருவர் உலக்கையால் மாறி மாறிக் குற்றுவர். குற்றும் உழைப்பை மறப்பதற்காக இருவரும் இனிமையாகப் பாடுவர். அப்பாடல் கேட்பதற்கு இனிமையானது. அது வள்ளைப்பாட்டு எனப்படும். உலக கைப்பாட்டு, அகவினம் என்றும் அது கூறப்படும். அப்பாட்டைக் கேளுங்கள் :

“அகவினம் பாடுவாம் தோழி ! அமர்க்கண்
நகைமொழி நல்லவர் நாணும் நிலைபோல்
தகைகொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ
முகைவளர் சாந்துரல் முத்தார் மருப்பின்
வகைசால் உலக்கை வயின்வயின் ஒச்சிப்
பகையில் நோய்செய்தான் பயமலை ஏத்தி
அகவினம் பாடுவாம் நாம்.”

இவ்வாறு குற்றிய அரிசியை உலையிட்டுச் சமைத்து விருந்தோடு உண்பர்.

மா, பலா, வாழை ஆகிய முக்கனியும் தமிழகத்து மலைகளில் செழித்து வளரும். அவ்வளம் கலித்தொகையில் மிக இனிமையாகக் கூறப்படுகிறது. தினைக்கொல்லையை இரவில் காவல் புரியும் கானவன் ஒருவன், யானையின் அடியோசை கேட்டுக் கவண்கல் வீசுகிறான். இரவு நேரமாகையால் யானையை நோக்கி எறியப்பட்ட கல் குறிதவறி வேறு பக்கம் செல்கிறது. அக்கல் வேங்கை நறுமலரைச் சிதறி, ஆசினிப்பலவின் பழுத்த கனியைப் பிளந்து, தேன்கூட்டை உடைத்து, மாவின் பூ, காய் ஆகிய குலைகளைச் சிதறி, மாவிற்கு அருகில் வளர்ந்திருக்கும் வாழையின் மடலைக் கிழித்து, இறுதியாக அதற்கு அருகே இருக்கும் செவ்வேர்ப் பலவின் தீங்கனியைத் துளைத்து உட்சென்று தங்குகிறதாம். என்னே மலைநாட்டின் வளம் !

“இடிஉமிழ்பு இரங்கிய இரவுபெயல் நாடுநாள்
கொடிவிடுபு இருளிய மின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயும் செய்புன் யானை
அடிஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
கடுவிசைக் கவணையில் கல்கை விடுதலின்
இறுவரை வேங்கையின் ஒள்வீ சிதறி
ஆசினி மென்பழம் அளிந்தவை உதிராத்
தேன்செய் இறாஅல் துளைபடப் போகி
நறுவடி மாவின் பைந்துணர் உழக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்துள் தங்கும் மலை”

இவ்வாறு இயற்கை வளம் செழித்துக் குலுங்கும் மலைநாட்டில் வாழும் மக்களுக்குக் கவலை ஏது? இன்னிசை பாடி வானில் திரியும் வானம்பாடிபோல் இன்ப வாழ்வு வாழ்ந்தனர் மலைவாழ் மக்கள். சுனை நீரில் படிந்து விளையாடி, சோலையில் ஆடிப்பாடிப் பொழுதைக் கழித்தனர். குறிஞ்சித் திணைக்குரிய ஒழுக்கம் புணர்ச்சி. அந்நில மக்களின் காதல் வாழ்வு குறிப்பிடத்தக்கது. புனல் விளையாட்டில் இன்பங் கண்ட ஒரு மலைநாட்டுத் தலைவியின் காதல் அனுபவத்தை அவள் தோழி கூறுகிறாள். 

காட்டாற்றில் புதுவெள்ளம் வருகிறது. அதில் ஆடி மகிழத் தோழியரோடு செல்லுகிறாள் தலைவி. புதுப்புனலில் பாய்ந்து நீந்தி விளையாடுகிறாள். நெடுநேரம் புனலில் விளையாடியதால் அவள் கால்கள் சோர்ந்துவிடுகின்றன. தாமரை மலர்போலும் ஒளி வீசும் அவளுடைய கண்களும் சோர்ந்துவிடுகின்றன. ஆற்று வெள்ளம் அவளைத் தன்னோடு அடித்துக் கொண்டு செல்லுகிறது. அப்போது அவ்வழியே வந்த கட்டிளங் காளையொருவன், தலைவியின் துன்ப நிலையைக் கண்டு ஆற்றில் பாய்கிறான். தன் மார்பில் அணிந்துள்ள புன்னைமலர்மாலை நீரில் அலையுமாறு நீந்திச் சென்று அவளைப்பற்றித் தன் மார்பு அவளுடைய மார்போடு பொருந்துமாறு அணைத்துக் கொண்டு வந்து கரைசேர்த்துக் காப்பாற்றுகிறான். அப்பாடல் பின்வருமாறு:

“காமர் கடும்புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்
தாமரைக் கண்புதைத்து அஞ்சித்தளர்ந்து அதனோடு ஒழுகலால்
நீள்நாக நறும் தண்தார் தயங்கப்பாய்ந்து அருளினால்
பூண் ஆகம் உறத்தழீஇப் போதந்தான் அகன்அகலம்
வருமுலை புணர்ந்தன என்பதனால் என்தோழி
அருமழை தரல்வேண்டில் தருகிற்கும் பெருமையளே!”

இன்ப அனுபவம் ! இத்தகைய அனுபவம், வாய்க்குமானால், நாள்தோறும் பெண்கள் காட்டாற்றில் விழத்தயங்குவாரோ! மற்றாெரு குறிஞ்சி நிலத்தலைவி ஊசலாடி மகிழ்ந்த சிறப்பை அவள் வாயிலாகவே கேட்போம். தலைவி தோழியிடம் கூறுகிறாள் தன் காதல் இன்பத்தை.

“ தோழி! நம் தினைக்கொல்லைக்கு அருகிலிருக்கும் ஊசலில் அமர்ந்து ஒருநாள் ஆடிக்கொண்டிருந்தேன். அப்போது ஓராணழகன் அவ்வழியே வந்தான். அவன் கட்டழகு என் கண்களை ஈர்த்தது. அவன், காணாமல் என்னைக் கடைக்கண்ணால் கண்டான். “அன்பரே ! சிறிது நேரம் இந்த ஊசலை ஆட்டுவீரோ?” என்று அன்புடன் கேட்டேன். அவனும் அதை எதிர் நோக்கித்தான் காத்திருந்தான். “அன்பே ! உன் விருப்பம் போல் நான் ஊசலை ஆட்டுகிறேன்!” என்று தேனைச் சொல்லாக்கித் தித்திக்கக் கூறினான். தன் வலிய கைகளால் என் ஊசலைப்பற்றி ஆட்டினான். அவன் ஆட்ட நான் ஆடினேன். இடையில் கைநழுவி வீழ்பவளைப்போல் அவன் அன்புக் கரத்தில் வீழ்ந்தேன். உண்மையில் கைநழுவவில்லை. பொய்யாக நடித்தேன். ஆனால் அக்காளையோ, உண்மை என்று நம்பினான். என்னை விரைந்தெடுத்து மார்பில் அணைத்துக் கொண்டான். அவன் அகன்ற மார்பில் சிறிது நேரம் எல்லையற்ற இன்பங் கண்டேன். ஆனால் கண் விழிக்க விரும்பவில்லை. அக்காளையோ நல்லன். நற்பண்புகள் வாய்க்கப்பெற்றவன். கண்விழித்தால், நான் தன்னுணர்வு பெற்றுவிட்டதாக எண்ணி என்னை விடுத்து “இல்லத்துக்கு ஏகு என் கண்ணே!” என்று கனி மொழியால் கூறிவிடுவான். பின் அவன் மார்பில் துயிலும் இன்பம் எளிதில் கிட்டுமா? எனவே கண் திறக்காமல் அவன் கடிமார்பில் மாலையாய்க் கிடந்தேன்.” அப்பாடல் வருமாறு:

“.................................... ஏனல்
இனக்கிளி யாம்கடிந்து ஓம்பும் புனத்தயல்
ஊசல் ஊர்ந்தாட ஒருஞான்று வந்தானை
‘ஐய சிறிதென்னை ஊக்கி’ எனக்கூறத்
‘தையால் ! நன்று’ என்று அவன்ஊக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன் அவன்மார்பில் : வாயாச் செத்து
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்மேல் :
மெய்யறியா தேன்போல் கிடந்தேன்மன் ; ஆயிடை
மெய்யறிந்து ஏற்றெழுவே னாயின் ஒய்யென
‘ஒண்குழாய் ! செல்க’ எனக்கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.”



குறிஞ்சிநிலக் கோதை கூறும் காதல் அனுபவம் உள்ளத்தைக் கொள்ளை இன்பத்தில் சாய்க்கிறது. பொய்யும் வழுவும், போட்டியும் பொறாமையும் மலிந்த இந்நாகரிகம் அழிந்து, இயற்கைநலம் திகழும் அவ்வெழில் வாழ்வு பூக்காதா? என்று உள்ளம் ஏக்கம் கொள்கிறது.

மேற்கூறியவாறு, பண்டைத் தமிழ் மக்கள் மலைவளத்தை அணு அணுவாகச் சுவைத்து இன்பமார்ந்தனர். இவ்வுண்மையை அறியாச் சிலர், வெள்ளையரைப் பார்த்துத்தான், நாம் மலைவாழ்வைக் கற்றுக் கொண்டோம் என்பது எவ்வளவு அறிவீனம்.

இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் பெறும் யானைக் கூட்டங்கள் தமிழகத்து மலைகளில் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. மெல்லியலாரின் விழியழகை வென்று, புள்ளிமான் கூட்டம் துள்ளி விளையாடுகின்றது. கன்னியரின் சாயலைக் கவர்ந்த வண்ணமயில்கள், தம் பன்னிறக் கலாபத்தை விரித்துக் காண்போரின் எண்ணத்தைக் கொள்ளை கொள்கின்றன. அருந்திக் களைதீர அருவிநீர்! குடைந்து விளையாடக் குளிர்ந்த சுனைநீர்! கொன்றை நிகர் கூந்தலில் சூடி மகிழக் கோட்டுப்பூ, கொடிப்பூ! ஆடி மகிழ அசைந்தாடும் ஊசல்! பாடிக்களி கொள்ளப் பாட்டமைந்த குறிஞ்சிப்பண்! உண்டு மகிழ உயர்ந்த கனி வகைகள்! நிலத்தில் கிழங்கு! இறைச்சி உணவுக்கு, வனத்தில் விலங்கு! காட்சிக்கு இயற்கை எழில்மிக்க நெடுவரை! காதல் மாட்சிக்குக் கனிமொழியார் ! குடித்து மகிழ, மலைச்சாரலில் வழியும் கொம்புத் தேன்! சுவைத்து மகிழப் பாவையரின் பலாச்சுளை உதடுகளில் வழியும் முத்தத்தேன்! இன்பமாக வாழ மனிதனுக்கு இன்னும் என்ன வேண்டும்? எனவேதான் பண்டைத் தமிழ் மக்கள் மலைவாழ்க்கையை விரும்பி ஏற்றனர். 

மக்கள் வாழ்க்கையே மலையில்தான் தோன்றியது என்பது சில அறிஞர்களின் கொள்கை. மக்கள் நாகரிகம் மலையில்தான் தோன்றியதென்றும், அளவைக் கருவிகளும், இசைக்கருவிகளும், வில் முதலிய போர்க் கருவிகளும், மருத்துவம், கடவுளுண்மை, இசை, அரசு முதலிய கலைகளும் மலையிலேயே முதன்முதலில் கண்டறியப்பட்டன என்றும் தமிழ்த் தென்றல் திரு. வி. க. கூறுகிறார். மலைவாழ்வு, மக்களோடு தொடர்பு பெற்றிருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே தமிழ் மக்கள் கோவில்களை மலைகளின் மீது எழுப்பினர் என்றும் குறிப்பிடுகிறார்.

இத்தகைய பெருஞ் சிறப்புக்கள் வாய்ந்த மலைகள் பரந்தும், உயர்ந்தும், நீண்டும் தமிழகமெங்கணும் நிறைந்துள்ளன. அவற்றின் வளம், அவற்றில் இழிதரும் ஆறுகள், அவற்றில் புதைந்து கிடக்கும் கனிப்பொருள்கள், வாழும் மக்கள், அவர்கள் வாழ்க்கை, தொழில் வளம், அழகு, மரங்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய எல்லாச் செய்திகளையும் இந்நூல் ஆராய்ந்து கூறுகிறது.
2. சேர்வராயன் மலை
பெயர்க்காரணம்

‘சைலம்’ என்ற வட சொல்லுக்கு மலை என்பது பொருள். விட்டுவிட்டுச் சிதறிக் கிடக்கும் மலைத் தொடரின் பகுதிகள் சேலம் மாவட்டத்தில் நிறைந்திருக்கின்றன. கொல்லி மலைகள், கல்ராயன் மலைகள், சேர்வராயன் மலைகள், பச்சை மலைகள், கஞ்சமலை, போதமலை என்பன அவைகளில் குறிப்பிடத் தக்கவை. இவ்வாறு மலைநாடாக விளங்குவதாலேயே, சைலம் என்ற சொல் மருவி சேலம் என்றாயிற்று என்பர் சிலர். இச்சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாகும். கொங்கு நாடு சேரநாட்டிற்கும், சோழநாட்டிற்கும் நடு எல்லை. சேர சோழ மன்னர்களில் யார் வலிமை ஓங்குகிறதோ, அவர் கைக்கு மாறி மாறி ஊசலாடிக்கொண்டிருந்தது இக்கொங்குநாடு. இருந்தாலும் சோழரைவிடச் சேர மன்னர்களும், அவர் வழி வந்த அதியர் குடியினருமே நெடுங்காலம் இங்கு அரசோச்சி வந்தனர். ‘பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் தன்னகத்தடக்கிச் சாதல் நீங்க’ ஔவைக் களித்துப் பெரும்புகழ் கொண்டவனும், கடையேழு வள்ளல்களில் ஒருவனுமாகிய அதிகமான் வாழ்ந்த தகடூர் நாடு, சேலம் மாவட்டத்துத் தருமபுரிக் கோட்டமாகும். அங்கு இன்றுள்ள ‘அதமங் கோட்டை’யே பண்டைய கடையேழு வள்ளல்களில் ஒருவனான அதிகமான் வாழ்ந்த ‘அதிகன் கோட்டை’ யாகும் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். தமிழகத்தில் வாழ்ந்த பெண்பாற் புலவர்களில் தலை சிறந்தவரும், அதிகமானால் பெரிதும் பாராட்டிப் போற்றப்பட்டவருமான அவ்வையின் பெயரைத் தாங்கிக்கொண்டு, கல்ராயன் மலைத்தொடரில் ‘அவ்வை மலை’ என்ற ஒன்று இன்றுமுளது. இவ்வாறு சேரர் குடியினர்க்கு உரிமை பெற்று விளங்கிய இம்மாவட்டம் பண்டை நாளில் ‘சேரலம்’ என்று வழங்கி, இன்று சேலமாக மாறிவிட்டது என்றும், சேரராசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த மலை ‘சேரராசன் மலை’ என்ற பெயர்கொண்டு விளங்கி, இன்று சேர்வராயன் மலையாகிவிட்டது என்றும் கொள்வது ஏற்புடைத்தாம். சேலம் மாவட்டத்தில் உள்ள மலைகளில் உயர்விலும், வளத்திலும் சிறந்தவை சேர்வராயன் மலைகள்.

அமைப்பு

மல்லாபுரம் மலைத்தொடருக்கும் மஞ்சவாடிக் கணவாய்க்கும் இடையில் இம்மலைகள் பரந்து கிடக்கின்றன. இம்மலைத் தொடர் பதினேழு கல் நீளமும் பன்னிரண்டு கல் அகலமும் உடையது. இதன் பரப்பு 100 சதுர மைல் ஆகும். இத்தொடரின் தென் சரிவு செங்குத்தானது. கடல் மட்டத்திலிருந்து 4000 அடியிலிருந்து 4800 அடிவரை உயரமுடையது. இச்சரிவில் குண்டூர், தப்பக்காடு என்ற சிற்றூர்கள் இருக்கும் இடமும், பழமலை உயர்ந்து செல்லும் இடமுமே சமவெளிகளாம். ஆனால் வடசரிவு செங்குத்தானதல்ல. அது பரந்து சிறிது சிறிதாகத் தாழ்ந்து செல்லுகிறது.

இம்மலைத் தொடரானது நடுவில் ஓடும் வாணியாற்றின் பள்ளத்தாக்கால் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. இவ்விரண்டு பிரிவுகளும் அமைப்பில் வேறுபடுகின்றன. கிழக்குப்பகுதி மழை நீரால் அரிக்கப்பட்ட் ஆற்றுப்படுகைகளைக் கொண்டது. மேற்குப்பகுதி பருத்து உயர்ந்த மலைகளைக் கொண்டது. கிழக்குப் பகுதியில் தலைச்சோலை, மாறமங்கலம் என்ற இரண்டு பீடபூமிகள் உள்ளன. அப்பீடபூமிகளை இணைக்கும் இடைநிலத்தில் கோட்டன்சேது என்ற சிற்றூர் அமைந்துள்ளது. மேற்குப் பகுதியை மேலும் இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒன்று வாணியாற்றிற்கும் காடையாம்பட்டி ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதி. மற்றாெரு பகுதி ஒழுங்கற்ற பீடபூமி. இப்பகுதியில்தான் ஏர்க்காடு அமைந்துள்ளது. இப்பீடபூமி வடக்கிலுள்ள சந்நியாசிமலை என்று கூறப்படும் டஃப் மலை (Duffs Hill-5231') யோடு முடிவுறுகின்றது. இதற்கு மேற்குப் பக்கத்தில் தாழ்வான மற்றாெரு மலை தலை நீட்டிக்கொண்டிருக்கிறது. அம்மலையின் மேலுள்ள பீடபூமி, கடல் மட்டத்திலிருந்து 2800-லிருந்து 2900 அடி உயரமுடையது. அதன்மீது தான் மலையாளிகள் வாழும் கொண்டையனூர், சோனப்பாடி என்ற ஊர்கள் உள்ளன.

மற்றாெரு பகுதி பல மலைச்சிகரங்களை இணைக்கும் தொடர் ஒன்றைக் கொண்டு விளங்குகிறது. அத்தொடரின் மேற்கில் நாகலூர் பீடபூமியும், கிழக்கில் பச்சை மலைப் (Green Hill) பீடபூமியும் உள்ளன. இத் தொடருக்கு அருகில் குறிப்பிடத்தக்க வேறுபல சிகரங்களும் உள்ளன. அவை சேர்வராயன் சிகரம் (5,342') பிளேன் ஃபில் சிகரம் (5,410'), பாலமடி சிகரம் (5,370') காவேரி சிகரம் (5,086') என்பன. புலிவாரை சிகரத்தை (4,576') நோக்கி இடதுபுறம் செல்லும் தொடரும், வாணியாற்றின் பள்ளத்தாக்கை நோக்கி வலதுபுறம் செல்லும் தொடரும் காவேரி சிகரத்தில் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன.

நாகலூர் பீடபூமியின் எல்லாப் பகுதிகளும் அநேகமாகக் கடல் மட்டத்திலிருந்து 4000 அடிக்குக் குறைந்தே இருகின்றன. இப்பீடபூமியிலிருந்து நோக்கினால் வேப்பாடிப் பள்ளத்தாக்கு நன்றாகத் தென்படும். வேப்பாடிப் பள்ளத்தாக்கிற்கு மேற்கில் ஏரிமலைத் தொடர் உள்ளது. பச்சைமலைப் பீடபூமியிலிருந்து பார்ப்போருக்கு வாணியாற்றின் பள்ளத்தாக்கும், ஹாதார்ன் சிகரம் (Hawthorne cliff—4,899') தேன் சிகரம் (Honey Rocks 4,533) முதலிய அழகிய உச்சிகளும் தென்படும். தேன் சிகரத்திற்கு எதிரில் ஒருகல் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து 2,490' உயரத்தில் வாணியாறு இழிந்து செல்கிறது.

ஆறுகள்

சேர்வராயன் மலைகளின் தென் சரிவு மிகவும் செங்குத்தாக உயர்ந்திருப்பதால் இங்கு ஆறுகள் ஏற்படுவற்கு வாய்ப்பில்லை. ஆகையால் வடசரிவிலேயே பல சிற்றாறுகள் தோன்றி ஓடுகின்றன. இச் சிற்றாறுகளில் எப்பொழுதும் நீர் இருப்பதில்லை. மழைக்காலங்களில்தான் நீர்ப் பெருக்கைக் காண முடியும் (1) தொப்பூர் ஆறு (2) சரபங்க நதி (3) வாணியாறு என்பவையே இம்மலைகளில் தோன்றுகின்றன.

தொப்பூர் ஆறு : தொப்பூர் ஆற்றிற்கு வேப்பாடி ஆறு என்ற வேறு பெயரும் உண்டு. இது சேர்வராயன் மலைகளில் முலுவி என்ற இடத்தில் தோன்றி வடகிழக்கு நோக்கி மல்லாபுரம் மலைப்பாதை செல்லும் வழியாக ஓடுகின்றது. இதன் பள்ளத்தாக்கில் வேப்பாடி என்ற சிற்றூர் உள்ளது. அவ்வூரின் பெயரை இவ்வாறு ஏற்றுக் கொண்டது. மல்லாபுரத்திற்கு அருகில் இவ்வாறு மேற்கு நோக்கித் திரும்பி ஓடி, சோழப்பாடி என்ற இடத்தில் காவிரியோடு கலக்கிறது.

சரபங்க நதி : சரபங்கர் என்ற ஒரு முனிவர் தாம் செய்த தீவினைக்குப் பரிகாரம் தேடுவதற்காக, இதன் கரையிலிருந்து தவமியற்றிய காரணத்தால் இந்த ஆறு இப்பெயர் பெற்றது என்பர். ஓமலூரில் இரண்டு ஓடைகள் ஒன்று சேர்ந்து இந்நதி உருவாகிறது. அவ்வோடைகள் இரண்டும் கீழ் ஆறு, மேல் ஆறு என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றன. கீழ் ஆற்றைப் பெரியாறு என்றும் அழைப்பர். இது சேர்வராயன் மலையிலுள்ள ஏர்க்காட்டில் தோன்றுகிறது. இவ்வாறு ஏர்க்காட்டில் அமைந்துள்ள ஏரியில் தோன்றி, கிளியூர் நீர்வீழ்ச்சியில் தாவிக்குதித்து, மேற்கே திரும்பி ஓமலூரை நோக்கி ஓடுகிறது.

மற்றாேர் ஆறாகிய மேல் ஆறு சேர்வராயன் மலையின் தென்சரிவில் தோன்றிக் காடையாம்பட்டி மலைப் படுகையின் வழியாக ஓடிவருகிறது. பட்டிப்பாடி ஆறு, பறியன் குழி ஆறு, கூட்டாறு, காட்டாறு எனப் பல பெயர்கள் இதற்கு வழங்குகின்றன. இருப்புப் பாதையைக் கடந்தவுடன் இவ்வாறு தெற்கு நோக்கித் திரும்பியோடிப் பெரியாற்றில் கலக்கிறது. இவ்விதமாக இவ்விரண்டு ஆறுகளால் உண்டாக்கப்பட்ட சரபங்க நதி இடைப்பாடி, திருச்செங்கோடு ஆகிய ஊர்களுக்கு அண்மையிலுள்ள பல ஏரிகளை நிரப்பிக் கொண்டு காவேரிப்பட்டிக்கு அருகில் காவிரியுடன் கலக்கிறது.

வாணியாறு :

இது சேர்வராயன் மலையில் ஏர்க்காட்டுக்கு அருகில் தோன்றி அழகாக ஓடுகிறது. வெங்கட்ட சமுத்திரச் சமவெளியை அடைந்து, பாதையைக் கடக்கிறது. அரூரைக் கடந்ததும், பாம்பாற்றாேடு கலந்து சிறிது தூரத்தில் பெண்ணையாற்றாேடு சேர்கிறது.

காடுகள்

எங்குபார்த்தாலும் மலைத்தொடர்கள் மண்டிக் கிடப்பதால், சேலம் மாவட்டத்தில் காடுகளுக்குப் பஞ்சமில்லை. சேர்வராயன் மலைகள் மீதும் அடர்ந்த காடுகள் உள்ளன. நாட்டில் காடுகள் நிறைய இருந்தால்தான் மழைவற்றாது பெய்யும் என்று அறிவியற்கலைஞர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இவ்வுண்மையை உணர்ந்து தான், நம் நாட்டின் உணவு மந்திரியாக இருந்த திருவாளர் முன்சி மரம் நடுவிழாவை (வனமகோத்சவம்) நாடெங்கும் துவக்கிவைத்தார்.

சேலம் மாவட்டத்திலுள்ள காடுகள் பலவிதங்களில் அழிக்கப்பட்டன. அதற்குக் காரணம் சென்ற நூற்றாண்டில் இங்கு இருப்புப்பாதைகள் அமைக்கப்பட்டதுதான். தண்டவாளங்களைப் பொருத்துவதற்கு வேண்டிய கிடை மரங்கள் (Sleepers) நிறையத் தேவைப்பட்டன. அம்மரங்களைப் பெறக் குத்தகைக்காரர்களை நாடினர் அரசாங்கத்தார். காடுகளிலுள்ள மரங்களை அவர்கள் விருப்பம்போல் வெட்டிக் கொள்ள ஒப்பமளித்தனர். இதைத் தகுந்த நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட குத்தகைக்காரர்கள், காடுகளைத் தங்கள் பேராசைக்குப் பலியிட்டுக் கொள்ளை வருவாய் தேடிக்கொண்டனர். இருப்புப்பாதைக்குப் பயன் படுத்தப்படும் கிடைமரங்கள் ஒரே அளவினதாகவும், ஒழுங்கானதாகவும் இருக்கவேண்டும். வளைவோ, வலிவற்றதன்மையோ இருக்கக் கூடாது. அவ்வாறு கிடைமரங்கள், செய்வதற்கு அடிமரம்தான் பயன்படும். ஒரு கிடைமரத்திற்காக ஒரு முழுமரமே வீணாக்கப்பட்டது. 1859-60ஆம் ஆண்டில் மட்டும் இருப்புப்பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்ட கிடை மரங்களின் எண்ணிக்கை 2,45,743. அவைகளைக் காடுகளில் வெட்டிக் கொடுக்கக் குத்தகைக்காரர்களுக்கு உரிமை வழங்கியதற்காக விதிக்கப்பட்ட வரித் தொகை மட்டும் அவ்வாண்டில் ரூ. 23,500 சேர்ந்தது. இருப்புப்பாதை அமைக்கும் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகக் கணக்கற்ற மரங்கள் பொறுப்பின்றி மிக விரைவில் அழிக்கப்பட்டன. மலைமீதுள்ள காடுகளில் வாழ்ந்த மலையாளிகளும் பயிர்த்தொழில் செய்வதற்காகக் காடுகளை அழிக்கத் தொடங்கினர். அதனால் நிறைய மரங்கள் அழிக்கப்பட்டன. அரசியலார் தலையிட்டு இவ்வழிவைத் தடுக்கச் சட்டங்களியற்றினர்.

சேர்வராயன் மலையைச் சுற்றியுள்ள ஊர்களிலும் நகரங்களிலும் வாழும் மக்களின் எரிபொருள் (fuel) தேவையை இம்மலையே நிறைவேற்ற வேண்டிவந்தது. இருப்புப்பாதை அமைக்கப்பட்டுப் புகைவண்டி ஓடத் தொடங்கியதும், அதற்கும் தேவையான எரிபொருளை வழங்கும் பணியைச் சேர்வராயன் மலையும் அதைச் சூழ்ந்த காடுகளுமே மேற்கொண்டன. சேலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர் பலர், காஃபி, இரப்பர் முதலியவற்றைப் பயிரிடுவதற்கான சோதனைகளைச் செய்ய அரசியலாரின் ஒப்பம் பெற்றுக் காடுகளை அழித்தனர். போதாக் குறைக்கு, மாபெரும் விட்டங்களுக்கான மரங்களை வெட்டிக் கள்ளக் கடத்தல் செய்வோரும் உண்டு. மரம்கடத்துவோரை ஒறுப்பதற்கான சட்டங்கள் அப்போது அமுலில் இல்லாத காரணத்தால் அவ்வழிவைத் தடுக்கவோ, நிறுத்தவோ வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மூங்கில் ஒன்றாேடொன்று உரசித்தீப் பற்றிக்கொண்டு, அதனால் காட்டிற்கு அழிவு நேர்வதும் உண்டு.

கி. பி. 1886-ஆம் ஆண்டு திடீரென்று அரசியலாருக்குக் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள காடுகளையெல்லாம் அளந்தனர். சேர்வராயன் மலைகள் மீதும், அவற்றைச் சூழ்ந்துள்ள அடிவாரங்களிலும் உள்ள காடுகளும் அளக்கப்பட்டுக் காவலுக்கு (Reserved forests) உட்படுத்தப்பட்டன. அவ்வாறு அளக்கப்பட்ட சேர்வராயன் மலைக்காடுகள் 113 சதுரமைல் பரப்புள்ளவை. காட்டதிகாரி (Forest Officers) களும், காவலர் (Rangers) களும் அமர்த்தப் பட்டனர். காடு திட்டமான முறையில் பயன்படுத்த முடிவு செய்தனர். 

(1) கட்டிடங்களுக்கான தூலங்களை வெட்டுதல் (2) எரிபொருளுக்கான மரங்களை வெட்டுதல் (2) கரி தயாரித்தல் (4) மூங்கில் வெட்டுதல் (5) சந்தன மரங்களை வளர்த்தல், வெட்டுதல் (6) மேய்ச்சல் நிலமாகப் பயன்படுத்தல் (7) தழை உரம் சேகரித்தல் (8) சிறுபொருள் தயாரித்தல் எனப் பலவகைகளில் சில சட்டங்களுக்கும் அமைப்புக்களுக்கும் காடுகளை உட்படுத்தி அவற்றின் பயனைக் கொண்டனர் அரசியலார்.

காடுகளில் தீப்பற்றி அழிவு நேராமலிருக்கப் பல வழிமுறைகளை மேற்கொண்டனர். தீப்பற்றுவதற்கான ஏதுக்களைக் களைந்தனர். காட்டுத் தீயணைப்புக்காக சேர்வராயன் மலைகளின் ஒரு பகுதியான சந்நியாசி மலையில் மட்டும் ரூ. 9000 செலவிட்டனர். தழை உரம் நல்ல வருவாய் அளிப்பதைக் கண்டு அதை வளர்க்க முற்பட்டனர். கால்நடைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகப் பெற்றுக்கொண்டு மேய்ச்சல் நிலங்களில் அவற்றை மேயவிட்டனர். மலைகளின் மீது நீர்ப்பாசன வசதிகளைச் செய்தனர். புதிதாகச் சந்தனக் காடுகளைத் தோற்றுவித்தனர்.

ஆனால் மறுபடியும் காட்டழிவு வேலைகள் தொடங்கின. தென்னிந்திய இரயில்வேயின் எரிபொருள் தேவைக்காகச் சேலம் மாவட்டத்தில் பல கிடங்குகள் (Coupe depots) ஏற்படுத்தப்பட்டன. இத்திருப்பணியைத் துவக்கி வைத்தவர், அப்போது சேலம் மாவட்டத் தண்டல (Collector) ராக இருந்த திருவாளர் பிரேசியர் (Mr. Brasier) என்ற துரைமகனார். இதோடு விடவில்லை அவர். “அனுமதிக்கப்பட்ட மரம் வெட்டல்” (Located fellings) என்ற புதுமுறைக்கும் ஆக்கமளித்தார். இம்முறைப்படி, அரசியலாருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கப்பமாகக் கட்டிவிட்டு அனுமதி பெற்றவர்கள், காட்டின் எப்பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று, விருப்பப்பட்ட மரங்களை வெட்டிக்கொள்ளலாம். தென்னிந்திய இரயில்வேயின் எரிபொருள் தேவை, கி. பி. 1892-ஆம் ஆண்டிலிருந்து துவங்கியது. திங்கள்தோறும் அதற்கென 200 டன் நிறையுள்ள மரங்கள் வெட்டி அனுப்பப்பட்டன. கி. பி. 1894-ஆம் ஆண்டு அந்த அளவானது, திங்களுக்கு 500 டன்களாக உயர்ந்தது. 1896-ல் 1200 டன்களும், 1899-இல் 2200 டன்களும் திங்கள்தோறும் வெட்டி அனுப்பப்பட்டன. 1906-இல் நிலக்கரி நிறையக் கிடைக்கத் தொடங்கியதும் மரக்கட்டையின் தேவை குறைந்தது. மேற்கூறிய செய்கைகளால், காடுகளின் வளர்ச்சி குறைந்தும் அழிவுகள் பெருகியுமே காணப்பட்டன. இவ்வாறு அழிந்தவை, அழிக்கப்பட்டவை போக எஞ்சியுள்ளவையே இன்று சேர்வராயன் மலைகளின் மீதுள்ள காடுகள்.

மூங்கில் :

சேலம் மாவட்டக் காடுகளில் கிடைக்கும் மூங்கில் மிகவும் பெயர் பெற்றது; பயன்மிக்கது. மூங்கிலானது, கடல் மட்டத்திற்குமேல் 1000 அடியிலிருந்து 4000 அடிவரையில் எவ்விடத்திலும் நிறையப் பயிராகும். சேர்வராயன் மலைகளின் மீதும் அளவற்ற மூங்கில்கள் விளைகின்றன. ஓடைக்கரைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் இது பருத்து அடர்த்தியாக வளரும்.

சந்தனம் :

சந்தனம் தமிழர் வாழ்வோடு நெருங்கிய தொடர்புடையது ; சங்கப் புலவர்களின் பாடல் பெற்றது. வெப்ப நாடான தமிழகத்தில் வாழும் மக்கள் அதனை உடலில் பூசி, அதன் குளிர்ச்சியில் திளைத்தனர். சேர்வராயன் மலையில் சந்தன மரங்களுக்குக் குறைவில்லை. ஆனால் தேன்கனிக்கோட்டை (Denganikottah) யில் விளையும் சந்தன மரங்களைப்போல் இவை தரத்தில் உயர்ந்தவையல்ல. இவற்றைப்பற்றி ஒரு சுவையான வரலாறுண்டு. கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சி சேலம் மாவட்டத்தில் ஏற்பட்டதும், சந்தன மரத்தின் சிறப்பையும், உயர்வையும் ஆங்கிலேயர் உணர்ந்தனர். அவைகளைக்கூட விட்டு வைக்க அவர்களுக்கு மனமில்லை. கேப்டன் கிரகாம் (Captain Graham) என்பவன், காட்டில் வளர்ந்திருந்த எல்லாச் சந்தன மரங்களையும் வெட்டிக்கொள்ளும்படி ஒரு குத்தகைக்காரனுக்கு அனுமதியளித்து, அதற்கீடாக 300 பகோடா (Pagodas) க்களைப் பெற்றுக் கொண்டான். பகோடா என்பது பண்டைக்காலத்தில் நம் நாட்டில் வழங்கிய ஒரு தங்க நாணயம். அப்பேராசை பிடித்த குத்தகைக்காரன், சேலம் மாவட்டக் காடுகளிலிருந்த ஒரு சந்தனக் குச்சியைக்கூட விடல்லை. பத்தாண்டுகளுக்குச் சேலம் மாவட்டக் காடுகளில் சந்தன வாடையே இல்லாமல் செய்து விட்டான்.

இப்பொழுதெல்லாம் சந்தன மரங்கள் காட்டிலாகாவினராலேயே வெட்டப்படுகின்றன. காட்டுக் காவலன் ஒரு முதிர்ந்த சந்தன மரத்தைக் கண்டால், அது வெட்டுவதற்குத் தகுதியானதா? என்பதை முடிவு செய்வான். தகுதியானது என்று தெரிந்தால், அதன் உயரம், பருமன் முதலியவற்றை அளந்து காட்டிலாகா அதிகாரிக்குத் தெரியப்படுத்துவான். காட்டிலாகா அதிகாரி, அவ்வளவுகளைக் குறித்துக்கொண்டு, அம்மரத்தை வெட்டுவதற்கு ஆணையிடுவார். அதன் பிறகு அம்மரம் அடியோடு தோண்டப்பட்டு, பல துண்டுகளாக்கப்பட்டு, பட்டை செதுக்கப்பட்டுக் காட்டிலாகா அதிகாரின் மேற்பார்வைக்கு அனுப்பப்படும். அளவுகளெல்லாம் குறித்தபடி சரியாக இருக்கின்றனவா ? என்று தலைமை அதிகாரி சரி பார்ப்பார். இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு சந்தன மரங்கள் இப்போது வெட்டப்படுகின்றன.

வெள்ளோக்கு :

வெள்ளோக்கு (Silver Oak) என்பது சேர்வராயன் மலைகளில் நிறைய வளரும்படியான மரம். இதனுடைய பட்டை வெள்ளியைப்போல் பளபளப்பாக இருப்பதால் இம்மரம் இப்பெயர் பெற்றது. இது பருத்து நீண்டு 100 அடிக்கு மேல் வளரும். சேர்வராயன் மலையில் வாழும் மக்கள் வீடு கட்டுவதற்கும், வீட்டுச் சாமான்கள் செய்வதற்கும் இதையே பயன்படுத்துகின்றனர். இது மாம்பலகையைப்போன்ற தன்மையுடையது. இது வளையும் ; ஆனால் உறுதியானது. சேர்வராயன் மலைகளின்மீது எங்கு பார்த்தாலும் வானளாவி வளர்ந்து மஞ்சுரிஞ்சும் இம்மரங்கள் செம்மாந்து நிற்பதைக் காணலாம். சேர்வராயன் மலைகளில் வாழும் தோட்ட முதலாளிகள் இதை விரும்பி வளர்க்கின்றனர். ஏனென்றால் இதன் சிறப்புக்காக அல்ல; காஃபிப் பயிருக்கு எப்பேர்தும் நிழல் வேண்டும் என்ற காரணத்தால், காஃபித் தோட்டங்களிலேயே இதனையும் சேர்த்து வளர்க்கின்றனர்.

தீவனம் :

மலைமீது எப்பொழுதும் புல் நிறைய வளரும். மலைமீது வாழும் மக்கள், அது நன்றாக வளர்ந்திருக்கும் சமயத்தில் அறுத்துச் சேகரம் செய்து வைப்பர். கால்நடைகளுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் போது, அச்சேமிப்புப் பயனுடையதாக இருக்கும். இதில் மற்றுமொரு பயன் இருக்கிறது. காய்ந்துபோன புற்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளுமல்லவா ? அதனால் அடிக்கடி காட்டுத் தீப்பரவும். ஆகையினால் இவற்றை அறுத்துவிடுவது காட்டுத் தீயைத் தடுக்கச் சிறந்த வழியாகும்.

தழை உரங்கள் :

காடுகளில் இருக்கும் பயனற்ற இலை தழைகள் வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன. சேலம், ஆத்தூர்க் கோட்டங்களில் உள்ள விளை நிலங்களுக்குச் சேர்வராயன் மலைகளில் உள்ள தழைகள் உரமாகப் பயன்படுகின்றன. ஒரு ஏகர் நஞ்சை நிலத்திற்கு இரண்டு அல்லது மூன்று டன் தழைகள் உரமாகப் பயன்படுகின்றன. அரசியலார் முதலில் குத்தகைக்காரர்களுக்குக் குறிப்பிட்ட இடத்தில் தழை உரம் சேகரிக்க அனுமதியளித்தனர். ஆனால் பிறகு அரசியலாரே, தனிப்பட்ட அமைப்புகளை ஏற்படுத்தித் தழை உரங்களைச் சேகரம் செய்தனர்.

கனிப் பொருள்கள்

மாக்னசைட் :

சேர்வராயன் மலையடிவாரத்திலும், அதற்கு ஐந்து கல் தொலைவிலுள்ள சுண்ணாம்புக் கரட் (Chalk Hills) டிலும் கிடைக்கும் வெள்ளைக்கல் (சுண்ணாம்புக்கல்) (Magnesite) மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது. இவற்றைத் தோண்டி எடுத்துத் தூய்மை செய்யப்பெரும் பெரும் சூளைகள் நிறுவப்பட்டுள்ளன. அவைகள் சுண்ணாம்புக் கரட்டிலும், சேர்வராயன் மலையடிவாரத்திலும் உள்ளன. இத் தொழிலகங்களில் ஒன்று. ஆங்கிலேயருக்கும் மற்றாென்று டால்மியாவுக்கும் உரிமை பெற்றவை. ஆனால் ஆங்கிலேயர் ஓர் இந்திய முதலாளிக்கே தங்களுடையதை விற்றுவிட்டனர். இவைகளேயன்றி வேறு இரண்டு தொழிலகங்களும் உள்ளன. மாக்னசைட் பெருத்த அளவில், தோண்டத் தோண்டக் குறையாத கனிப்பொருள். உலகில் வேறு இடங்களில் கிடைக்கும் சுண்ணாம்புக் கற்களைவிடச் சேலத்தில் கிடைக்கும் கற்களே மிகவும் சிறந்தவை என்றும், தூய்மையானவை என்றும் கூறுகின்றனர்.

மிதமான சுண்ணாம்புக் கலப்புள்ள கற்கள், பலவித இன்றியமையாத பணிகளுக்குப் பயன்படுகின்றன. கட்டிடத் தொழிலுக்கு மிகவும் தேவையான காரை (Plaster), ஓடுகள் (Tiles), செயற்கைக் கற்கள் (Artificial stones), பெரிய உலைகளின் தளங்கள் (boiler coverings) முதலியன செய்வதற்குச் சுண்ணாம்புக்கற்கள் பயன்படுகின்றன. உலோகங்களை உருக்க உயர்ந்த வெப்பநிலை தேவை. அந்த வெப்ப நிலையிலும் எரிந்து போகாதபடி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் முறையில் உலைகள் (Furnaces) அமைக்கப்படவேண்டும். அத்தகைய வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் சக்தி இந்த வெள்ளைக் கற்களினால் செய்த வெப்பச் செங்கற்க (Fire bricks) ளுக்கே உண்டு. ஆகையினால் தான் இவ் வெப்பச் செங்கற்களை மாபெரும் எஃகு உலைகளின் உட்தளங்களில் பதிக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் (1) கஞ்சமலை (2) கோதுமலை (3) சிங்காபுரம் (4) கொல்லி மலை (5) தீர்த்த மலை (6) கெத்தமலை (7) மல்லிக் கரை (8) பைத்தூர் மலை ஆகிய இடங்களில் இரும்புத்தாது நிறையப் புதைந்து கிடைக்கிறது. உருக்குவதற்கு நிலக்கரி இல்லாத காரணத்தாலேயே, இத்தாது பூமிக்கடியில் தூங்கிக் கொண்டிருக்கிறது. நெய்வேலி நிலக்கரி உபயோகத்துக்கு வந்தவுடன், இவ்விரும்புத்தாது தோண்டி எடுக்கப்படும். அவைகளை உருக்குவதற்கு அமைக்கப்படும் பேருலைகளுக்கு இவ் வெள்ளைக்கல் சிறந்த துணைப் பொருளாகப் பயன்படும்.

பாக்சைட் :

பாக்சைட் என்னும் கனிப் பொருள் சேர்வராயன் மலையில் அளவில்லாமல் கிடைக்கிறது. ஆனால் இதைத் தோண்டி எடுத்து விரிவான முறையில் ஆலைகள் நிறுவித் தொழிலைப் பெருக்க இன்னும் முயற்சி எடுக்கப்படவில்லை. பாக்சைட்டிலிருந்து அலுமினியம் செய்யலாம். ஆனால் பாக்சைட்டை உருக்குவதற்கு உயர்ந்த மின்னாற்றல் தேவை. சேலம் மாவட்டத்திலுள்ள நீர்வீழ்ச்சிகளை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டால் இது ஒன்றும் நமக்குக் கடினமான செயல் அல்ல. சேலம் மாவட்டத்தின் இன்பப்பொழுது போக்குக்குரிய நிலைக்களங்களில் ஒன்றாக விளங்கும் ‘ஒகைனகல் நீர்வீழ்ச்சி’ யைச் செயல்படுத்தினால், சேலத்தில் அலுமினியத் தொழிற்சாலை செயலாற்றுவதற்கு வேண்டிய மின்னாற்றலை நிச்சயம் பெற முடியும். இந்திய அரசியலாரும் டேனிஷ்பேட்டை என்ற இடத்தில் ஒரு பாக்சைட் தொழிற்சாலை நிறுவத் திட்டமிட்டிருக்கின்றனர். ஏர்க்காட்டிலிருந்து நான்கு கல் தொலைவில் சேர்வராயன் சாமி கோயில் உள்ளது. அக்கோயிலுக்கு அண்மையில் இப்போது பாக்சைட் தோண்டி எடுக்கப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் திரு. டிக்கென்ஸ் (E. K. Dickense) என்ற ஒரு வெள்ளையர் ஏர்க்காட்டில் வாழ்ந்தார். அவர் ஒரு தோட்ட முதலாளி (Plantainer) முதன் முதலாக அவ்விடத்தில் பாக்சைட் கிடைப்பதை அவர் தாம் கண்டறிந்தார். அரசியலாரிடமிருந்து அவ்விடத்தைச் சுரங்கக் குத்தகைக்கு (mining leace) எடுத்துக் கொண்டு, அங்குக் கிடைக்கும் பாக்சைட்டைத் தோண்டி எடுக்கத் தொடங்கினார். இப்பொழுது அவ்விடம் வட இந்திய ஆலை முதலாளிகளில் ஒருவரான வி. எச். டால்மியாவிற்கு உரிமை பெற்று விளங்குகிறது. வெட்டி எடுக்கப்படும் பாக்சைட் தாது ஏர்க்காட்டிலுள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்படுகிறது. பெரிய உலையிலிட்டு வறுக்கப்பட்டு, மாபெரும் இரும்பு உலக்கைகளினால் பொடி செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும் பொடியை எம்ரி பொடி (Emry Powder) என்று அழைக்கின்றனர். அப்பொடி இந்தியா பூராவும் அனுப்பப்படுகிறது. இந்திய நாட்டில் எம்ரிபொடி செய்யும் தொழிற்சாலை இது ஒன்று தான். ஆண்டு ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் பெறுமான எம்ரி பொடி இங்கிருந்து அனுப்பப்படுகிறது. இத்தொழிற்சாலை கி. பி. 1942 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் தற்போது 100 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். எம்ரி பொடியிலிருந்து, சாணைக்கல், உப்புக் காகிதம், மின்சாரக் கருவிகளுக்கு வேண்டிய துணைப் பொருள்கள் ஆகியவை செய்யப்படுகின்றன.

மணப் பொருள்கள்

சேர்வராயன் மலைகளில் ஜெரேனியம் பச்சோலி, பெப்பெர் மெண்ட், யூக்கலிப்டஸ், சிற்றடோரா என்ற மணச் செடிகள் விளைகின்றன. இந்தியாவிலேயே இச்செடிகள் வளர்வதற்குரிய தட்ப வெப்பநிலை இங்கு தான் ஏற்றதாக உள்ளது என்று கூறுகின்றனர். ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் செல்லும் வழியில் ‘எசென்ஸியல் ஆயில்ஸ் அண்ட் கெமிகோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்’ (Essential Oils And Chemico Industries Ltd) என்ற தொழிற்சாலை உள்ளது. அதன் உரிமையாளர், திரு. பவானிசிங் என்பவர். இவர் கி. பி. 1942 இல் நடந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றவர். இவர் தமக்கு உரிமையான துர்க்கா தோட்ட (Durga Estate) த்தில் மேற்கூறிய செடிகளைப் பயிர்செய்து அவற்றிலிருந்து ஜெரேனியம் எண்ணெய், பச்சோலி எண்ணெய், பெப்பெர் மெண்ட் எண்ணெய், யூகிலிப்டஸ் எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்கிறார். இந்த எண்ணெய்கள், சோப்பு, கூந்தலெண்ணெய், செண்ட் முதலிய மணப் பொருள்கள் செய்வதற்கு மிகப் பயன் படுகின்றன.

ஜெரேனியம் செடியானது தென் ஆப்பிரிக்க நாட்டுத் தாவரம். அங்குள்ள பாறைகளடர்ந்த மலைச்சரிவுகளில் இது நிறைய விளைகிறது. அல்ஜீரியா, தென் ஃபிரான்சு, இத்தாலி, போர்பன், உருசியா, கருங்கடற் கரை, ஆகிய இடங்களிலும் இச் செடி பயிரிடப்படுகிறது. இதிலிருந்து எடுக்கப்படும் ஜெரேனியம் எண்ணெய் வாணிப முக்கியத்துவம் வாய்ந்தது. சேர்வராயன் மலைமீது 4500 அடிகளுக்கு மேல் இது நன்றாக வளருகிறது. இம்மலையில் சுமார் 150 ஏக்கர் நிலத்தில் ஜெரேனியம் பயிர் செய்யப்படுகிறது.

இந்திய நாட்டு மக்கள் மணப் பொருள்களைப் பண்டைக் காலத்தில் மிகவும் அதிகமாகப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. குறிப்பாகத் தமிழ் மக்கள் மணப் பொருள்களை மிகவும் விரும்பினர். அகில் கட்டையைப் புகைத்து அதில் கிளம்பும் மணமிக்க புகையைத் தங்கள் கூந்தலில் ஏற்றித் தமிழ் மகளிர் தம் கூந்தலை ஒப்பனை செய்தனர் என்றும், மல்லிகை, குறிஞ்சி, முல்லை முதலிய மணமிக்க மலர்களைச் சூடி இன்புற்றனரென்றும் சங்க இலக்கியங்கள் பரக்கப் பாடுகின்றன. ஆடவரும் பெண்டிரும் மார்புக்குச் சந்தனம் பூசிக்கொள்ளும் வழக்கம் பண்டைக் காலத்தில் பெரு வழக்காக இருந்தது. அகிலும் சந்தனமும், வேறு சில மணப் பொருள்களும் கிரீஸ், உரோமாபுரி, எகிப்து, அரேபியா முதலிய நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டனவென்று வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றாே, நம் நாடு இத்துறையில் பின்னடைந்துள்ளது. மணப்பொருள் உற்பத்தி செய்யும் தொழில், ஃப்ரான்சு, இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, உருசியா முதலிய நாடுகளில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. மணப் பொருள்களுக்கான தாவரங்கள் விளைவதற்குரிய தட்ப வெப்பநிலை நம் நாட்டில் இயற்கையாகவே அமைந்துள்ளது. குளிர்ந்த மலைச் சரிவுகளும், பள்ளத்தாக்குகளும் இங்கு நிறைய உள்ளன. ஆனால் அவைகளை நாம் இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்திய நாட்டில் சோப்பு முதலிய மணப் பொருள்கள் செய்வதற்கு ஆண்டுதோறும் 28,000 இராத்தல் ஜெரேனியம் எண்ணெய் தேவைப்படுகிறது. இவ்வளவும் வெளி நாடுகளுலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. ஜெரேனியம் விளைவதற்கு ஏற்ற இடங்களைக் கண்டறிந்து இத்துறையில் அரசியலார் சிறிது ஊக்கம் காட்டினால், நம் நாட்டுக்கு வேண்டிய முழு அளவு ஜெரேனியம் எண்ணெயையும் நாமே தயார் செய்து கொள்ளலாம். சேர்வராயன் மலைமீது 200 ஏகர் நிலத்தை, இந்த ஆராய்ச்சிக்காகத் திரு. பவானி சிங்கிற்கு அரசியலார் வழங்கியுள்ளனர். இவருடைய தொழிற்சாலையில் ‘சேர்வராய் பிரமி கூந்தலெண்ணெய்’ என்ற ஒரு வாசனைத் தைலமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இது இந்திய நாட்டின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உயிரினங்கள் :

சேர்வராயன் மலைகளின் அடிவாரங்களிலுள்ள காடுகளில் ஒருவகை மானினம் (Sambur) காணப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இல்லை. மஞ்சவாடிக் கணவாய்க்குச் செல்லும் வழியில் கொம்பு தூக்கி, மாறன் மங்களம் முதலிய ஊர்களுக்கு அப்பால் கரடியும், அறுபதடி பாலத்திற்கருகில் உள்ள குடுமப்பட்டிக் காட்டில் சிறுத்தையும் இருப்பதாகக் கூறுகின்றனர். சேலம் மாவட்டக் காடுகளில் வழக்கமாகக் காணப்படும் நாகப் பாம்பு (Lachesis macrolecpis), கட்டுவிரியன் (Russells viper), பச்சைப் பாம்பு, (Green viper), குறுமலைப் பாம்பு (Young Python or Rock Snake) முதலியவை சேர்வராயன் மலைகளிலும் காணப்படுகின்றன.

தட்ப வெப்ப நிலை :

சேர்வராயன் மலையின் தட்ப வெப்பம் மிதமானது. 1906-ஆம் ஆண்டு, தட்ப வெப்ப நிலைக் கணக்கு எடுக்கப்பட்டது. ஏர்க்காட்டின் ‘கிரேஞ் ஹவுசின்’ கீழ் அறையில் வெப்பமானி பொருத்தப்பட்டிருந்தது. காலை 6 மணிக்கும், நடுப்பகல் 12 மணிக்கும் மாலை 4 மணிக்கும், இரவு 11 மணிக்கும் வெப்ப அளவு தவறாமல் குறிக்கப்பட்டது. அக் கணக்கு 24 ஆண்டுகள் தொடர்ந்து எடுக்கப்பட்டது. அவ்வாறு கணக்கிட்டதில் வெப்ப நிலையின் மேல் வரம்பு 82° க்கு மேல் சென்றதில்லை. கீழ் வரம்பு 60 1/2° க்குக் குறைந்ததில்லை. வெப்ப நிலையின் மேல் வரம்பிற்கும் கீழ் வரம்பிற்கும் உள்ள வேறுபாடு 21 1/2° க்கு மேல் எந்த ஆண்டிலும் இருந்ததில்லை. அநேகமாகக் கோடைக் காலங்களில் 80° க்கு மேல் வெப்பநிலை மிகுவது மிக மிகக் குறைவு. அநேகமாகக் கோடை நாட்களில் (ஏப்ரல், மே) 77° தான் இருப்பது வழக்கம். குளிர் காலங்களில் (டிசம்பர்) வெப்ப நிலை 67° தான் இருப்பது வழக்கம். எப்பொழுதாவது ஓரிரு நாட்களில் வெப்பநிலை 64° க்கு வருவதுண்டு.

மழை :

சேர்வராயன் மலைகளின் மீது பெய்யும் மழை அங்கு வீசும் காற்றின் வேகத்தைப் பொருத்தது. காற்றின் வேகம் குறைவாக இருக்கும் மாதங்களில் மழை மிகுதியாகப் பெய்யும். காற்றின் வேகம் மிகுந்திருக்கும் மாதங்களில் மழையின் அளவு குறைந்து விடும். காற்றுதன் வேகத்தையிழந்து மீண்டும் புத்துயிர் பெறும் மாதங்களில் மழை அநேகமாக இருப்பதில்லை. அக்டோபரிலிருந்து மார்ச் வரை வடகிழக்குக் காற்று வீசும். ஏப்ரலில் காற்று தெற்கு நோக்கி வீசும். மேயிலிருந்து செப்டம்பர் வரை தென் கிழக்குப் பக்கமாகவோ அல்லது தென்மேற்குப் பக்கமாகவோ வீசும். ஃபெப்ருவரி, மார்ச் மாதங்களில் காற்றின் வேகம் மிகுந்திருக்கும். ஏப்ரலில் காற்றின் வேகம் சிறிது குறையும். மே மாதத்தில் காற்றின் வேகம் திடீரென்று குறைந்து ஜூனில் மறுபடியும் உயர்ந்துவிடும். ஜூலையிலிருந்து காற்றின் வேகம் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்து, அக்டோபரில் அமைதியாக இருக்கும். தொடர்ந்து வரும் மாதங்களில் காற்று மறுபடியும் புத்துயிர் பெறத் தொடங்கும். சேர்வராயன் மலைகளின் மீது ஆண்டுக்குச் சராசரி 41 அங்குல மழை பெய்கிறது.

குடியேற்றம் :

நீலகிரி மலை ஒரு கோடை வாழ் இடமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாகவே கி. பி. 1819-இல் சேலம் நகரில் வாழ்ந்த அதிகாரிகள், சேர்வராயன் மலையைத் தேர்ந்தெடுத்தனர். சேலம் மாவட்டத்தின் தண்டலராக இருந்த திருவாளர் காக்பர்ன் (Mr. Cockburn 1820-1829) என்பவர், சேர்வராயன் மலையில் முதன் முதலாகக் குடியேறினார். காஃபி, ஆப்பிள், பியர்ஸ், லாக்குவட்ஸ் முதலியவற்றைப் பயிரிட்டுச் சோதனை நடத்தினார். இப்போது ஏர்க்காட்டுக்கு அண்மையிலுள்ள கிரேஞ் தோட்டம் (Grange Estate) தான் அவருடைய சோதனைக் களமாக இருந்தது. கிரேஞ் ஹவுசில் இப்போது சரக்கறை (Store house) இருக்கும் இடத்தில்தான் சேர்வராயன் மலைமீது அமைக்கப்பட்ட முதல் கட்டடம் தோன்றியது. கி. பி. 1823-இல் சேலத்தில் அரசாங்க மருத்துவ (Civil Surgeon) ராக இருந்த ஒரு வெள்ளையரை சேர்வராயன் மலையின் இயற்கை அழகு வெகுவாகக் கவர்ந்தது. கோடையில் வாழ்வதற்கு ஏற்ற இடமாகச் சேர்வராயன் மலையைக் கருதினார். அதன் மீது ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பின் சேலம் மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும் என்று எண்ணினார். அவ்வாண்டு சர் தாமஸ் மன்றோ (Sir Thomas Manro) என்பவர் சென்னை மாநில ஆளுந (Governor) ராக விளங்கினார். அவருடைய ஆணைப்படி அவ்வாண்டிலேயே திருவாளர் இங்கிலண்ட் என்பவர் சேர்வராயன் மலைகளை அளந்து ஆய்ந்தறிய வந்தார். சேலம் மாவட்டத் தலைமை மருத்துவர், சேர்வராயன் மலையின் மீது மல்லாபுரத்திலிருந்து ஒரு மலைப் பாதை (Ghat road) அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி மேலதிகாரிகளுக்கு ஓரறிக்கை விடுத்தார். ஆனால் சேர்வராயன் மலைகளின் மீது பரவிய ஒரு கொடிய காய்ச்சலால் தாக்கப்பட்டு அவ்வாண்டிலேயே அவர் இறந்தார். ஆகையினால் சேர்வராயன் மலையின் முன்னேற்றம் சிறிது காலம் தடைப்பட்டது. வாழ்க்கையில் ஒரு மாற்றத்தையும் கேளிக்கையையும் விரும்பியவர்கள், அடிக்கடி மலை மேல் சென்று சில நாட்கள் தங்கி இன்பமார்ந்தனர்.

கி. பி. 1824-இல், இந்திய இராணுவத்தில் தளபதியாகப் பணியாற்றி வந்த வெல்ஷ் துரை மகனார் (Colonel Welsh) சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அப்போது சேர்வராயன் மலைகளைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. திருவாளர் காக்பர்ன் தம் குடும்பத்தோடு மலைமீது தங்கியிருந்தார். அவர்களைக் கண்டு மகிழ்ந்த வெல்ஷ் பின்வருமாறு சேர்வராயன் மலைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

“சேலம், திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் வாழும் பணம் படைத்த செல்வர்களுக்கு இம்மலை சிறந்த வாழ்விடமாகவும், சிறந்த பொழுது போக்கிற்கு ஏற்ற இடமாகவும், உடல் நலத்தைப் பெருக்கி இன்பம் நல்கும் நிலைக்கலனாகவும் விளங்கியது. ஆனால் சில ஆண்டுகள் கழிந்ததும், இம்மலைகளில் ஒருவித நோய் பரவி அங்கு வாழ்ந்தவரை மிகுந்த கொடுமைக்குள்ளாக்கியது. அதனால் அவ்விடத்தைவிட்டு எல்லோரும் வெளியேறிவிட்டனர். அவர்களிடம் பணியாற்றிய வேலைக்காரர்கள் அக்கொடுமையை ஏற்று அங்கேயே தங்க வேண்டியவரானார்கள். அவர்களெல்லாம் அம்மலை வாழ் மக்களான ‘மலையாளிகள்’. அம்மலையின் தட்ப வெப்பம் அவர்களுக்குப் பழக்கமான தென்றாலும், அப்பொழுது அவர்கள் அனுபவித்த குளிரைப் போல் அவர்களுடைய வாழ்நாளில் என்றும் அனுபவித்திருக்கமாட்டார்கள்.”

திருவாளர் பெட் (Mr. Bett) என்பார், சேலம் மாவட்டத் தண்டலராகப் பொறுப்பேற்றிருந்தகாலை, காஃபி பயிரிடும் தொழில் வெற்றிகரமாக முன்னேறியது. ஆகையினால் வருவாயை விரும்பி, மக்கள் பெரும் அளவில் அங்குக் குடியேறத் தொடங்கினர். நோய்க்காலத்தில் தங்களுடைய தோட்டங்களை விட்டு வெளியேறியவர்கள் மறுபடியும் குடியேறினர். இயற்கையழகு மிக்க சரிவுகளில் தங்கள் மனைகளை எழுப்பினர். ஆனால் அவ் வீடுகளெல்லாம் ஏர்க்காட்டை விடத் தாழ்வான இடங்களிலேயே அமைக்கப்பட்டன. அவ்விடங்களெல்லாம், எளிதிலே மலேரியாக் காய்ச்சலுக்கு உள்ளாகும் இடங்கள், மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்றவை. ஆனால் ஏர்க்காடு அமைந்திருக்கும் இடம் ஈரமற்றது ; உடல் நலத்தை வளர்ப்பதற்கேற்ற தட்ப வெப்ப நிலையினைக் கொண்டது. ஏர்க்காடு அமைந்திருக்கும் பீட பூமியைச் சுற்றியிருக்கும் மலைச் சரிவுகள் எல்லாம் மலைக் காய்ச்சலுக்கு நிலைக்கலன்கள்.

ஏர்க்காடு :

இவ்வூரின் பெயர்க் காரணங்களாகப் பல கூறுகின்றனர். ஏரிக்கரையில் அமைந்திருப்பதால், முதலில் ‘ஏரிக்காடு’ என்று வழங்கிப் பிறகு ஏர்க்காடு ஆயிற்று என்பர். ‘ஏர்+காடு’ எனப் பிரித்து, அழகிய காடு என்று பொருள் கொள்வாரும் உண்டு. ஏறுகாடு என்ற சொல்லே, ஏர்க்காடு ஆயிற்று என்பர் வேறு சிலர். ‘ஏற்காடு’ என்றும் பலர் எழுதுகின்றனர்.

இந் நகரமானது சேர்வராயன் மலை மீதுள்ள பீட பூமியின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலைமீது எத்தனையோ கண்ணைக் கவரும் இடங்களும், இயற்கை அழகு பொங்கித் ததும்பும் வண்ணப் பீட பூமிகளும் உள்ளன. ஆனால் அவ்விடங்களிலெல்லாம் இவ்வூர் அமைக்கப்படாமல், இவ்விடத்தில் அமைக்கப்பட்டதற்குக் காரணம், சேலத்திலிருந்து இவ்விடம் எளிதில் வந்தடைவதற்கு ஏற்றதாக உள்ளது. மற்றுமோர் காரணம், சேர்வராயன் மலைகளின் மற்றப் பகுதிகள் கண்டு ஆராயப்படுவதற்கு முன்பாகவே, இவ்விடம் கண்டறியப்பட்டு, எதிர்கால ஏர்க்காடு நகரம் உருவாவதற்கு வேண்டிய ஒருசில கட்டடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. கி. பி. 1841-ஆம் ஆண்டு ஜெ. எம். லெச்லர் (Rev J. M. Lechier) என்ற பாதிரியார், அப்பொழுது சேலம் மாவட்டத்தில் துணைத் தண்டல (Sub Collector) ராக இருந்த பிரெட் (Brett) என்பவரோடு மலைவளங் காண வந்தபோது, ஏர்க்காட்டின் முதல்வீடு உருப் பெற்றது. திருவாளர் பிரெட் கலை உள்ளம் படைத்தவர். வீடுகளை அமைப்பதற்கு எழில் மிக்க இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெருவிருப்பம் கொண்டவர். கி. பி. 1845-இல் ஓரழகிய மனையை அமைத்தார். அவ்வில்லம் இப்போது, ஃபேர் லான்ஸ் ஓட்டல் (Fair-Lawns Hotel) என்ற பெயரோடு விளங்குகிறது. உடனே ‘கிரேஞ்’ என்ற கட்டடமும் உருவாகியது. இது கற்களினால் உறுதியாகக் கட்டப்பட்ட ஈரடுக்கு மாளிகை.

கி. பி. 1857-ஆம் ஆண்டு வட இந்தியாவில் முதல் உரிமைப் போர் நடந்ததைப் பற்றி அறிவோம். நானா சாகப், ஜான்சிராணி, பகதூர்ஷா ஆகியோர் அப்போரை முன்னின்று நடத்தினர். ஆங்கில வரலாற்றாசிரியர்களால் அந் நிகழ்ச்சி ‘சிப்பாய்க் கலகம்’ (Soldiers’ Mutiny) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதைப் போன்ற கிளர்ச்சி சென்னை மாநிலத்தில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அதே ஆண்டில் மலையாள நாட்டில் கேனோலி (Canolly) என்ற ஒரு பெரிய ஆங்கில அதிகாரி படுகொலை செய்யப்பட்டார். ஆனால் வடக்கில் நடந்த கிளர்ச்சிக்கும் கேனோலியின் படுகொலைக்கும் யாதொரு தொடர்புமில்லை. அவர்பால் ஒரு சிலர் கொண்டிருந்த தனிப்பட்ட பகைமையும், பழியுணர்ச்சியும் காரணமேயன்றி, அவர் கொலைக்கு அரசியல் காரணம் எதுவுமில்லை.

அதே ஆண்டில் சேலத்தில் ஒரு கலகம் தோன்றியது. இதுவும் தனிப்பட்டோர் பகையுணர்ச்சியின் காரணமாகவே எழுந்தது. ‘மருண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது பழமொழி யன்றாே ? சேலத்தில் வாழ்ந்த வெள்ளையரையும் அச்சம் என்ற கொள்ளை நோய் பீடித்தது. எல்லாரும் ஏர்க்காட்டைப் புகலிடமாகக் கொண்டனர். கலகக்காரரை எதிர்ப்பதற்கு வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபட்டனர். கிரேஞ்சின் அடியில் ஒரு நிலவறை அமைக்கப்பட்டு, ஆறு திங்கள்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்கள் அதில் சேர்த்து வைக்கப்பட்டன. கையில் துப்பாக்கி தாங்கிய காவல் வீரர்கள் கூரையின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டனர். மூன்று பெரிய கனல் கக்கும் பீரங்கிகள் அக்கட்டடத்தின் உச்சியில் பொருத்தப் பட்டுப் போருக்குத் தயாராக இருந்தன. அதன் மீது அமைக்கப்பட்டிருந்த கோபுரத்தில் ஆங்கிலக் கொடி பறந்து கொண்டிருந்தது.

ஏதேனும் அபாயம் நேருமென்று தோன்றினால், உடனே ஓர் அபாயச் சங்கு ஊதப்படும். உடனே ஏர்க்காட்டில் வாழும் எல்லா ஐரோப்பிய மகளிரும் குழந்தைகளும், ஆண்கள் பின் தொடர கிரேஞ்சில் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லோரும் அறிவிக்கப் பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி எந்தவிதத் தாக்குதலும் நேரவில்லை. அப்படி ஏதேனும் நேர்ந்திருந்தால், கேவலம் அத்தோட்ட வீடு ஒரு நாள் தாக்குதலுக்குக் கூட ஈடு கொடுத்திருக்க முடியாது.

ஏரி:

ஏர்க்காட்டின் வட பகுதி பச்சைக் கம்பளம் பரப்பப்பட்டாற் போன்ற புல் வெளிகளில் அமைந்துள்ளது. அப் புல்வெளிகளில் நடுவில் பரந்து கிடக்கும் நன்னீர் ஏரி, கண்ணைக் கவரும் வனப்புடையது. இன்பமாகப் பொழுதைக் கழிக்க விரும்புவோர் இதில் தோணியூர்ந்து மகிழ்வார். ஒரு சிறு தொகையைக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, அவ்வூர் வாழ் வெள்ளையர் மீன் பிடித்துப் பொழுதைக் கழிப்பதும் உண்டு. திரைப்படங்களுக்குரிய காட்சிகள் இங்கு அடிக்கடி எடுக்கப்பெறும். இவ்வேரியிலிருந்து தோன்றும் வாணியாறு, கிளியூர் நீர் வீழ்ச்சியில் தாவிக் குதித்து ஓடும் காட்சியைக் காண்போர் உள்ளம் களி கொள்ளும்.

ஏரிக்கு மேற்கே ஒரு குறுகிய பாதை இந்த நீர் வீழ்ச்சிக்குச் செல்லுகிறது. இவ்வழி மூன்று கல் தொலைவுடையது. மழைக் காலங்களில் ஏரியில் வழிந்து செல்லும் தண்ணிர் மூன்று கல் மேற்காக ஓடி, சுமார் 100 அடி உயரத்திலிருந்து கீழே விழுகிறது. இவ்விடத்திற்குச் செல்ல அரைக்கல் தொலைவு செப்பனிட்ட நல்ல பாதை உள்ளது. அது வரையில் உந்து வண்டிகளும், மிதி வண்டிகளும் செல்லலாம். அதற்கு மேல் பாதை சரிந்தும் குறுகியும் உள்ளது.

இவ்வேரியின் நீர் வளத்துக்குக் காரணமாக இருப்பது ஓர் அருவி. இது பழ மலையின் உச்சியிலிருந்து மரங்கள் சூழ்ந்த படுகையின் வழியாக ஓடி வந்து இதில் விழுகிறது. ஏரியின் வட புறத்தில் அமைந்திருக்கும் புனித இளமரக் காட்டில் (Sacred grove) மலையாளிகள் தொழுது வணங்கும் இரண்டு அழகிய கோயில்கள் உள்ளன. இக் கோயில்களுக்குச் சற்று மேற்கே, வாரச் சந்தை கூடும் இடமுள்ளது.


சீமாட்டி இருக்கை :

ஏர்க்காடு உந்து வண்டி நிலையத்திலிருந்து சீமாட்டி இருக்கையை அடைய ஒரு கல் தொலைவு செல்ல வேண்டும். கடல் மட்டத்திலிருந்து இவ்விடம் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஏர்க்காட்டில் வாழ்ந்த ஓர் ஐரோப்பிய மாது, இவ்வழகிய இடத்திற்கு நாள்தோறும் சென்று அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாராம். ஆகையினாலேயே இவ்விடம் ‘சீமாட்டி இருக்கை’ (Lady Seat) என்று அழைக்கப்படுகிறது என்று அவ்வூர் வாழ் மக்கள் கூறுகின்றனர். இவ்விடத்தில் அமர்ந்து நோக்குவார்க்குச் செங்குத்தான மலைச் சரிவும், சமவெளிகளும் தோன்றா நிற்கும். மேட்டூர் அணை தன் பரந்த நீர்ப் பரப்போடு நம் கண்களில் படும். நெளிந்து செல்லும் மலைப் பாம்பு போல் மலை வழிப் பாதை தோன்றும். அப் பாதையில் மேலும் கீழுமாக ஊர்ந்து வரும் உந்து வண்டிகள் நம்மை இன்பத்தில் ஆழ்த்தும். சுண்ணாம்புக் கரட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பேருலைகளிலிருந்து எழும்புகை வான மண்டலத்தை இருட்டாக்கும் காட்சியைக் காணலாம். இரவு நேரங்களில் சேலத்தைக் காண்போமானால், இலட்சக் கணக்கான வண்ண விளக்குகளின் நடுவில் அந்நகரம் அமைந்து ஒளியுடன் விளங்கும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்; வானத்து விண்மீன்களையெல்லாம் பிடித்து மண்ணில் பதித்து வைத்தாற் போன்று தோன்றும்.


பகோடா உச்சி :

ஏர்க்காடு அமைந்துள்ள இடம் இயற்கை அழகுமிக்கது என்று கூறிவிட முடியாது. அதைவிட்டு ஓரிரண்டு மைல் நடந்து சென்றாேமானால் சேர்வராயன் மலையின் இயற்கை நலம் கொழிக்கும் பல காட்சிகளைக் கண்டு மகிழலாம். தமிழகத்தின் பல பகுதிகள் நம் கண்ணில் படும். ஏர்க்காட்டின் வட கிழக்கில் பகோடா உச்சி (Pagoda Point) என்ற இடம் உள்ளது. இது 4507 அடி உயரமுள்ளது. இங்குள்ள மலைக் கோயில்கள் பர்மியர்களின் பகோடா (கோயில்)க்களைப் போல் விளங்குகின்றன. பகோடாக்கள் அடியில் அகன்றும் மேலே செல்லச் செல்லக் குறுகியும் இருக்கும். எனவே இவ்விடம் பகோடா உச்சி என்று அழைக்கப்படுகிறது. இங்கிருந்து காண்போருக்கு, கிழக்கில் இருக்கும் தேனாந்தி மலைகளும், கல்ராயன் மலைகளும், சேலம் ஆத்தூர் சமவெளிகளும், பரந்து கிடக்கும் கொல்லிமலை, பச்சைமலை, போதமலை, ஜெருகுமலைத் தொடர்களும் தோன்றும். பகோடா உச்சிக்கு எதிரில் மிகவும் அழகான பெரும்பாறை ஒன்று உள்ளது. அப் பாறையிலிருந்து சில நூறு அடிகளின் கீழ் தேன்கூடு போன்று அழகுடன் காட்சியளிக்கும் காகம்பாடி என்னும் சிற்றூர் உள்ளது.


கரடிமலையும் பிராஸ்பெக்ட் உச்சியும் :

கரடிமலை என்னும் சிகரம் 4828 அடி உயரமுள்ளது. பிராஸ்பெக்ட் உச்சி 4759 அடி உயரமுள்ளது. இவ்விரண்டிடங்களினின்றும் காண்போருக்குத் திருச்செங்கோட்டுச் சமவெளியும், ஓமலூர்க் கோட்டமும், அவைகட்குப் பின்னால் கோவை மாவட்டத்தில் பரவியிருக்கும் பில்லி மலைகள், பருகூர் மலைகள், கம்பட்டராயன் மலைகள், பாலமலை, லாம்ப்டன் சிகரம் முதலியனவும், மைசூர் நாட்டிலுள்ள குட்டிராயன் மலையும் நன்கு தெரியும். வானத்தில் மூட்டமில்லாமல் தெளிவாக இருக்கும் நாட்களில் ஆனை மலைகளும், நீலகிரி மலைகளும், (Nilgiries) பழனிமலைகளும் நன்கு தெரியும்.

டஃப் சிகரம் :

சேர்வராயன் மலைகளில் காண்பதற்குரிய மற்றாென்று டஃப் சிகரம் (Duff’s Hill) ஆகும். இதிலிருந்து காண்போர் சேர்வராயன் மலைகளின் மேற்குச் சரிவுகளையும், அழகுடன் விளங்கும் குறுகிய பள்ளத்தாக்கையும காணலாம்.


காவேரி சிகரம் :

ஏர்க்காட்டிலிருந்து நாகலூர் சென்றால் இவ்வுச்சியை அடையலாம். சேர்வராயன் மலையின் வடபகுதியை இவ்விடத்திலிருந்து நன்கு காணலாம். சேர்வராயன் மலையிலேயே மிகவும் அழகான காட்சிகளை இப்பகுதியில்தான் காணலாம். இவ்விடத்திற்கு அண்மையில்தான் சிறந்த பழத் தோட்டங்களும் காஃபித் தோட்டங்களும் அமைந்துள்ளன. காஃபிக் கொட்டையைத் தூய்மைப்படுத்தும் ஆலையும் இங்குதான் உள்ளது. வாணியாற்றுப் பள்ளத்தாக்கும், அதன் துணையாறுகளின் படுகைகளும், அங்கிருந்து காண்போருக்குக் காட்சிதரும். வெள்ளாளக் கடைப்பாதையில் அவைகள் வளைந்து, மஞ்சக் குட்டையை நோக்கிச் செல்லும் காட்சியையும் கண்டு மகிழலாம்.

மக்களும் வாழ்க்கையும் :

ஐரோப்பியர்கள் குளிர் நாட்டில் வாழ்ந்தவர்கள். நம் நாட்டின் வெப்பநிலை அவர்கள் உடல் நலனுக்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால், ஏர்க்காடு போன்ற குறிஞ்சி நகரங்களில் வாழத் தொடங்கினர். எனவே ஏர்க்காட்டில் குடி புகுந்த மக்களில் பெரும்பாலோர் ஐரோப்பியரே. ஐரோப்பியர்களின் சமயமான கிருத்துவ சமயமே இங்கு வாழ்வோரின் சமயமாக விளங்குகிறது. ஐரோப்பியரல்லாத மக்கள் இந்து சமயத்தவரே. கிருத்தவ சமயத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினரும் இங்கு வாழ்கின்றனர். கத்தோலிக்க நெறி, ஆங்கிலிகன் நெறி, இலண்டன் நெறி, லீப்சிக் லூதர் நெறி, டேனியர் நெறி, ஆகிய பல்வேறு நெறியாளருக்கும் இங்கு தனித் தனிக் கோயில்களும் கட்டடங்களும் உள்ளன. ஆங்கிலிகன் நெறியாளர் கோயிலும், புனித டிரினிடி நெறியாளர் கோயிலும் ஏர்க்காட்டில் வாழ்ந்த அவ்வச்சமயத்தாரின் பொருளுதவியால் கட்டப்பட்டவை. தத்தம் கோயில்கட்குரிய தலைவர்களைத் (Chaplain) தாமே தேர்ந்தெடுத்து, சமயத் தலைவரின் இசைவோடு, அவராணையின் கீழ் அக்கோயில்களை நடத்துகின்றனர். இக் கோயில்களைச் சார்ந்துள்ள இடுகாட்டில் (Cemetary) பல குறிப்பிடத்தக்க சமாதிகள் உள்ளன. திருவாளர் சார்லஸ் பிரடெரிக் சாமியர் என்பவர் சேலத்தில் நடுவராகப் (Session’s judge) பணியாற்றி 20-4-1869-இல் உயிர் நீத்தார். அவருடைய சமாதி இங்குள்ளது. கேப்டன் எட்வர்டு ஆல்வெல் ஷார்ட் (இறப்பு: 7-12-1883) என்பாரும், சென்னை மாநிலப் படையில் உயர் மருத்துவராகப் (Surgeon general) பணியாற்றிய திரு. ஜான்ஷார்ட் என்ற புகழ்பெற்ற ஆங்கிலோ இந்தியரும் (இறப்பு: 24-4-1889) இங்கு தான் புதைக்கப்பட்டுள்ளனர்.

சேர்வராயன் மலைமீது கத்தோலிக்க நெறியாளர்க்குரிய கேந்திரங்களாக ஏர்க்காடும், பாலமடியும் விளங்குகின்றன. ‘கிளனி புனித சூசையப்பர் திருச்சபை’ யைச் (St Joseph’s of Cluny) சார்ந்த கன்னியர் 1894-ஆம் ஆண்டு ஏர்க்காட்டிற்கு வந்தனர். 1897-இல் தங்களுக்குரிய கோயில் ஒன்றை எழுப்பினர். அவர்களால் சிறந்த மகளிர் பள்ளியொன்றும் இங்கு நடத்தப்படுகிறது.

கல்விக் கூடங்கள் :

ஏர்க்காட்டிலுள்ள பள்ளிக் கூடங்களெல்லாம் கிருத்தவர்களாலேயே நடத்தப்படுகின்றன. இவை முதன் முதலில் ஏர்க்காட்டிலும் சேலத்திலும் வாழ்ந்த வெள்ளையரின் குழந்தைகள் பயில்வதற்காக ஏற்படுத்தப்பட்டவை. இப்போது எல்லாரும் கல்வி பயில்கின்றனர்.


மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி:

ஏர்க்காடு உந்துவண்டி நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்றால் மான்ஃபோர்ட் உயர்நிலைப் பள்ளி பெருமிதமான தோற்றத்தோடு நம் கண்களில் தென்படும். சிறிய ஏரியின் பக்கமாக நேர் கிழக்கில் அமைந்துள்ளது. ஏர்க்காட்டில் தோட்ட முதலாளிகளாக விளங்கிய ஆங்கிலோ இந்தியர்களின் குழந்தைகளுக்கு மேலைநாட்டு முறையில் ஒரு கல்விக்கூடம் தேவைப்பட்டது. திருவாளர் ஏஜீன் (Br. Eugene) என்ற கத்தோலிக்கப் பாதிரியார் கி. பி. 1917-இல் இப் பள்ளியைத் துவக்கினார். துவக்கும்போது ஏழுமாணவர்களே சேர்ந்தனர். ஆனால் தற்போது 320 மாணவர்கள் இதில் கல்வி பயில்கின்றனர். இவர்களில் 280 பேர் தங்கிப் பயிலும் மாணவர்கள் (Boarders) 40 மாணவர்கள் வெளியிலிருந்துவந்து பயில்வோர் (Daystudents) இப்பள்ளி இப்பொழுது புனித கிப்ரியல் திருச்சபையாரால் நடத்தப்படுகிறது. சிறந்த ஆங்கிலப் பயிற்சியும், கலைப் பயிற்சியும், இங்கு அளிக்கப்படுகின்றன. இராக், சையாம், கேரளம், இலங்கை, மலேயா, முதலிய நாடுகளிலிருந்தும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்குவந்து கல்வி கற்கின்றனர்.

புனித இதய மகளிர் உயர்நிலைப் பள்ளி:

புனித இதய மகளிர் உயர்நிலைப்பள்ளி (Sacred Heart Girls High School) யானது கிளனி புனித சூசையப்பர் கன்னியரால் நடத்தப்படுகிறது. இப்பள்ளியானது கி. பி. 1894-ஆம் ஆண்டு திருவாட்டி வால்டர் அன்னை (Mother Valderbert)யின் தலைமையில் துவக்கப்பட்டது. இதிலும் ஏறக்குறைய 300 மாணவியர் கல்வி பயிலுகின்றனர். இதில் குழந்தைகளுக்கான கிண்டர் கார்டன் பள்ளியும் உள்ளது. இதில் மேலைநாட்டு இசை நடனக் கலைகளும் தொழிற்கல்வியும் கூடக் கற்றுக் கொடுக்கின்றனர்.


பிறகலைக் கூடங்கள் :

புனித மேரி திருச் சபையாரால் கிருத்தவக் கன்னியருக்காக நடத்தப்படும் இரண்டு பள்ளிகளும் உள்ளன. கோடைக் காலங்களில் கன்னியர் வந்து தங்கும் குறிஞ்சிமனையாக இவைகள் பெரிதும் விளங்குகின்றன. கிருத்தவ ஆடவர்க்குச் சமயக்கல்வி பயிற்றும் ஒரு பள்ளியும் இங்கு உள்ளது.


நாய் பங்களா :

ஏர்க் காட்டில் சிறப்பாகப் பேசப் படுவனவற்லுள் நாய் பங்களாவும் ஒன்று. பெரிய ஏரிக்கு இடதுபுறமாக நாகலூர் செல்லும் வழியில் இது உள்ளது. பாதையில் செல்லும் போதே நாய்கள் குரைக்கும் ஒலி நம்மை அச்சுறுத்தும். அப்பங்களாவின் உரிமையாளர் திருமதி. கோல்டுஸ்மித் அம்மையார். இவர் ஃபிரெஞ்சு நாட்டிலிருந்து இங்குக் குடியேறி நீண்ட காலமாக வாழ்கிறார். இவருடைய உற்றார் உறவினர் எல்லாம் நாய்களே என்று சொன்னால் கூடப் பொருந்தும். பூனையின் பருமனுள்ள நாயிலிருந்து சிறுத்தை அளவுள்ள நாய்கள் வரையில் இங்கிருக்கின்றன. நான் இவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது இவருடைய படுக்கை அறை மஞ்சத்தில் உரிமையோடு ஓர் ஆப்கானியச் சடைநாய் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. இவருடைய சாய்வு நாற்காலியில் ஒரு சீன நாய் அரசனைப் போல் வீற்றிருந்தது. அல்சேஷன், புல்டெர்ரியர், முதலிய முரட்டு நாய்களும், சைனீஸ், ஆப்கன் முதலிய அழகு நாய்களும் இவரிடத்தில் உள்ளன. அல்சேஷன் என்பது ஜெர்மானிய நாட்டு இனம். இது அச்சுறுத்தும் தோற்றமுடையது. புல்டெர்ரியர் என்பது ஆங்கில நாட்டு இனம். இது மிகவும் வீறுடையது. நம் நாட்டில் கோழிச்சண்டை நடத்துவதுபோல இங்கிலாந்தில் புல் டெர்ரியர் நாய்களைக் கொண்டு நாய்ச் சண்டை நடத்துவார்களாம். ஆனால் இவ்விளையாட்டு இப்போது அந்நாட்டில் சட்ட பூர்வமாகத் தடுக்கப்பட்டுவிட்டதாம். உயர்ந்த இன நாய்களைக் கலப்பின்றி உற்பத்தி செய்து இவர் விற்பனை செய்கிறார்.

இங்கு ‘இந்திய நாய் வளர்ச்சிக் கழகம்’ (Kennel Club of India) என்ற ஓர் அமைப்பு உள்ளது. இதன் பொறுப்பாளர், நம் நாட்டின் தலைவரான இராசேந்திர பிரசாத் அவர்களே. இதன் செயலாளராக நீண்டநாள் பணியாற்றிவருபவர் திருமதி கோல்டுஸ்மித் அம்மையார். இந்திய நாட்டின் தலைமைக் கழகமே நாய்பங்களா தான். மாநிலங்களில் தனித்தனிக் கழகங்கள் உண்டு. நாய் இனத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது, நாய்க் கண் காட்சி (Dog Shows) களை நடத்துவது, நாய்களைப் பற்றிய சிறந்த செய்தித்தாள் ஒன்று நடத்துவது, உயர்ந்த இன நாய்களுக்கு அவற்றின் தகுதியறிந்து சான்றிதழ் வழங்குவது எனப் பல நோக்கங்கள் இக்கழகத்திற்குரியவை. நாய்களைப் பற்றித் திருமதி கோட்டுஸ்மித் அம்மையாரிடம் நான் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் பின் வருமாறு குறிப்பிட்டார்.

“மேலை நாட்டு நாய்களைப்போல், இந்திய நாட்டு நாய்களிலும் வலிமையும் அறிவும் உள்ள இனங்கள் உண்டு. இராசபாளையம், கோம்பை என்ற இரண்டு இனங்களும், இந்திய இனங்களில் சிறந்தவை. மேலை நாட்டு நாய்களுக்கு ஒப்பானவை. ஆனால் இந்தியர்கள் இவற்றின் சிறப்பை உணர்வதில்லை. ‘அல்சேஷன் ! அல்சேஷன் !’ என்றே அலைகின்றனர். இந்திய இனங்களை நல்ல முறையில் எங்கும் விளம்பரப்படுத்துவதே என் நோக்கம்” என்றார் அவர்.


ஊராட்சி :

16-5-1923 இல் இங்கு ஊராட்சி மன்றம் நிறுவப்பட்டது. கி. பி. 1911 ஆம் ஆண்டுக் கணக்குப்படி ஏர்க்காட்டின் மக்கட் தொகை 1322 ஆகும். ஆனால் இன்று ஏர்க்காட்டிலும், அதன் ஊராட்சிக்கு அடங்கிய சிற்றூர்களிலும் 19,861 பேர் வாழ்கின்றனர். இவ்வூராட்சியின் ஆண்டு வருவாய் ரூ 70,000. இவ்வூராட்சிக்கு அடங்கிய நிலப்பரப்பு, 147 சதுர மைல்.


வாரச் சந்தை :

ஏர்க்காட்டிலுள்ள பெரிய ஏரிக்கு அண்மையில் சந்தை வெளி உள்ளது. உணவுப் பண்டங்களும், வேறு பல இன்றியமையாத பொருள்களும் இச் சந்தையில் விற்கப்படுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்குச் சந்தை கூடுகிறது. அன்று ஏர்க்காடு பரபரப்பாகத் தோன்றும். தோட்டத் தொழிலாளர்களும், சேர்வராயன் மலையின் ஆதிக்குடிகளான மலையாளிகளும் அங்கு நிறையக் கூடுகின்றனர். மலைபடுபொருள்களான காய்கள், பழங்கள், கிழங்குகள், தேன் முதலியவற்றைச் சந்தையில் கொண்டுவந்து விற்று விட்டுத் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு செல்லுகின்றனர்.


தோட்டப் பயிர்கள்

காஃபி :

சேர்வராயன் மலைகளில் விளையும் தோட்டப் பயிர்களில் தலைசிறந்தது காஃபி ஆகும். காஃபிக் கொட்டைகளில் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சார்ந்த அரேபிகா (Arabica) இங்கு விளைகிறது. இப்பயிர் நம் நாட்டிற்கு வந்தது பற்றி ஒரு சுவையான வரலாறு கூறப்படுகிறது. கி. பி. 1600 இல் பாபாபூதான் சாகிப் என்ற ஓர் இஸ்லாமிய மன்னர், மைசூர் நாட்டிலுள்ள சந்திரகிரி மலைமீது வாழ்ந்த ஒரு குறுநில மன்னனைத் தோற்கடித்து விட்டுத் தன் வீரர்களைப் பார்த்து, “நண்பர்களே ! நான் மெக்காவிற்கு ஒரு புனித யாத்திரை செல்லப் போகிறேன். நான் வரும் வரையில் காத்திருங்கள்” என்று கூறிவிட்டு ஒரு குகையில் நுழைந்து மறைந்தார். அவ் வீரர்களும் பல திங்கள்கள் அவர் வருகைக்காகக் குகையின் வாயிலில் காத்திருந்தனர். சாகிபும் பல திங்கள்களுக்குப்பின் திரும்பி வந்தார். வந்தவுடன் தன் வீரர்களை நோக்கி, “நான் மெக்காவாகிய புண்ணிய பூமியிலிருந்து உங்களுக்குப் பரிசாக ஏழு விதைகள் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றிலிருந்து ஓர் அதிசயமான பயிர் விளையப் போகிறது. அது நமக்கு உணவாகவும், சுவை நீராகவும் பயன்படும்” என்று கூறி அரேபியாவிலிருந்து கொண்டு வந்த அக்கொட்டைகளைக் கொடுத்தார். அக் கொட்டைகளை அம் மலைமீது பயிரிட்டனர். அரேபியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட காஃபிக் கொட்டை அரேபிகா என்று பெயர் பெற்றது என்பர். பிறகு அம் மன்னரும் ஒரு குடிசை அமைத்து அம் மலையின்மீதே வாழ்ந்தாராம். அதிலிருந்து அம் மலை பாபாபூதான் மலை என்று அழைக்கப்படுகிறது. இக் கதை நம்பத் தகுந்ததாக இல்லை. இருந்தாலும் காஃபி விதைகளை இந்தியாவிற்குக் கொணர்ந்தவர் பாபாபூதான் சாகிபுதான் என்று கூறுகின்றனர்.

உலகத்திலேயே காஃபிப் பயிர் விளைவுக்கென்று ஒரு சில மலைகளே உள்ளன. அப் பயிர் விளைவதற்கு ஏற்ற நிலம் சூரிய ஒளி பரவும் உயர்ந்த மலைச் சரிவே ; ஆனால் நிழலுள்ள இடமாகவும் இருக்க வேண்டும் ; நிறைய மழையும் பெய்ய வேண்டும். மழைநீர் தேங்கக் கூடாது. தழை உரம் நிறைந்த வளமான காட்டு நிலமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய குறிஞ்சி நிலங்கள் தென்னிந்தியாவில் நிறைய இருக்கின்றன. மைசூரிலுள்ள பாபாபூதான் மலைகளும், சென்னை மாநிலத்திலுள்ள நீலகிரி, வயநாடு (Wynaad), சேர்வராயன் மலைகளும், ஆனைமலை, பழனி மலை முதலியனவும், குடகு மலைகளும், மைசூர், சென்னை மாநிலங்களில் பரவிக் கிடக்கும் பில்லிகிரி மலைகளும், கேரளத்திலுள்ள நெல்லியம்பதி, கண்ணன் தேவன் மலைகளும் குறிப்பிடத்தக்கவை. அஸ்ஸாம், ஒரிசா, மத்தியப் பிரதேசம் முதலிய வட இந்திய மாநிலங்களிலும், அந்தமான் தீவுகளிலும் இப் பயிர் குறைந்த அளவில் விளைகிறது.

சேர்வராயன் மலைகளில் முதன் முதலாகக் காஃபிப் பயிர்த் தொழிலைத் தொடங்கியவர் ஜி. பிஷர் (Mr. G. Fischer) என்ற வெள்ளையரே. சேலம் மாவட்டத் தண்டலராக விளங்கிய எம். டி காக்பர்ன் என்பாரின் ஒப்புதல் பெற்று, இப்பயிர்த்தொழிலைத் துவக்கினார். இப்புதுத் தொழிலுக்கு ஆக்கமளிக்க விரும்பிய அரசியலார், இவருக்கு நிறைய நிலங்களை அளித்தனர். அதன் பிறகு பலர் இப்பயிர்த் தொழிலை வளர்க்க இங்குக் குடியேறினர். ஓரளவு சிறந்த முறையில் இத்தொழில் வளர்ச்சியுற்றது. ஆனால் திடீரென்று காஃபி விலையில் ஏற்பட்ட சரிவும், இப்பயிர்த் தொழில் செய்வதற்கு ஏற்பட்ட முட்டு வழிச் செலவின் உயர்வும், விளைவால் வீறு குன்றிய நிலங்களுக்கு நிறைந்த உரமிட வேண்டிய இன்றியமையாமையினால் ஏற்பட்ட செலவும், தோட்டக்காரர்களை வறுமையில் ஆழ்த்தி விட்டன. போதாக் குறைக்குப் புதிய புதிய நோய்கள் தோன்றிப் பயிர்களைப் பாழடித்தன. செய்வதறியாது கலங்கிய தோட்டக்காரர்கள் சிறிது நாள் இத்தொழிலைக் கைவிட்டனர். பிறகு பல வழிகளில் ஆராய்ந்து சிந்தித்து, சாகுபாடியில் புதிய முறைகளைப் புகுத்தினர். காஃபித் தோட்டங்களில் நிழல் தருவதற்கும், தழை உரம் அளிப்பதற்கும் வெள்ளோக்கு மரங்களை உடன் வளர்க்கத் தொடங்கினர். இது விரைவில் பருத்து நீண்டு வளரக் கூடியது. நட்டு நான்கைந்து ஆண்டுகளில் பெரு மரங்களாக வளர்ந்து விடும்.

உலகில் அதிகமாகப் பயிரிடக் கூடிய சிறந்த காஃபிப்பயிர் வகைகள் அரேபிகா (Arabica) ரோபஸ்டா (Robusta), லிபெரிகா (Liberica) என்பவையே. இவற்றில் மிகவும் சிறந்ததான அரேபிகாவே சேர்வராயன் மலைகளில் விளைகிறது. காஃபித் தோட்டங்களெல்லாம் பெரும்பாலும் லூப் பாதை (Loup Road) யிலேயே அமைந்துள்ளன. ஏர்க்காட்டிலிருந்து புறப்பட்டு, நாகலூர் வழியாகச் சென்று வெள்ளக் கடை வழியாக இப்பாதை மீண்டும் ஏர்க்காட்டை அடைகிறது. இதன் நீளம் 20 கல். ஐம்பதுக்கு மேற்பட்ட காஃபித் தோட்டங்கள் இப்பாதை செல்லும் வழியில் அமைந்திருக்கின்றன. இத் தோட்டங்களின் பரப்பு 10,000 ஏகர். ஓராண்டுக்கு 2000 டன் காஃபிக் கொட்டை சேர்வராயன் மலைமீது விளைகிறது. இக்கொட்டை இங்கிலாந்து, ஐரோப்பா, உருசியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


தேயிலையும் இரப்பரும் :

தேயிலைப் பயிரானது, கி. பி. 1850-ஆம் ஆண்டில் பிஷர் அவர்களால் பயிரிடப்பட்டுச் சோதனை செய்யப்பட்டது. போதிய அளவு நல்ல பலனளிக்காததால் கைவிடப்பட்டது. 1881-ஆம் ஆண்டில் இரப்பரானது சேர்வராயன் மலையில் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது. ஆனால் 1898-இல் ஏ. ஜி. நிக்கல்சன் என்பவர் 3500 அடி உயரத்திலுள்ள ஆதார்ன் தோட்டத் (Hawthorm Estate) தில் பெருத்த அளவில் பயிரிடத் தொடங்கிய போதுதான் இரப்பர் பயிர்த் தொழில் எல்லோருடைய கவனத்தையும் கவரத் தொடங்கியது. 1903-இல் மெக்சிகோவிலிருந்து நேரே இரப்பர் விதைகளை வரவழைத்துப் பரவலான முறையில் அவர் பயிர் செய்யத் தொடங்கியதும், எல்லாத் தோட்ட முதலாளிகளும் தங்கள் காஃபித் தோட்டங்களில் ஒரு பகுதியை அழித்து விட்டு இரப்பரைப் பயிரிடத் தொடங்கினர். இப்பயிர்த் தொழிலும் ஓரளவு வெற்றிகரமாகவே இருந்தது. திருவாளர் நிக்கல்சன் விளைவித்த இரப்பர் இந்தியாவிலேயே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தது என்று அரசியலார் ஒரு தங்கப் பதக்கமும், சான்றிதழும் அளித்தனர். உடனே சேர்வராயன் மலையிலுள்ள தோட்டக்காரர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படலாயிற்று. 1911-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 3816 ஏகர் நிலங்களில் 10,54,000 இரப்பர் மரங்கள் பயிரிடப்பட்டன. ஆனால், நாளாக நாளாக இப் பயிர்த் தொழில் குறைந்து கொண்டு வந்தது. இப்பொழுது அநேகமாகச் சேர்வராயன் மலைகளில் இரப்பர் தோட்டங்கள் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் காஃபிப் பயிரைப் போல் இது அதிக வருவாய் தரக் கூடியதாக இல்லை.


பழ வகைகள் :

சேர்வராயன் மலைகளில் அதிகமாக எல்லோராலும் பயிரிடப்படுவது, கெட்டியான தோலையுடைய செயிண்ட் மைகேல் (St. Michael) என்னும் ஆரஞ்சுப் பழமாகும். இந்த ஆரஞ்சு மரம் முழு வளர்ச்சியடைந்து நல்ல பலனைத் தர எட்டு ஆண்டுகள் பிடிக்கும். உயர்ந்த ரக ஆரஞ்சு மரங்களோடு ஒட்டிப் பயிரிட்டு இந்த இனத்தைச் சுவையுடையதாக்குகின்றனர். குடகு ஆரஞ்சு முதலில் குறைந்த அளவே பயிரிட்டனர். இப்போது இது நிறையப் பயிரிடப்படுகிறது. எலுமிச்சை எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்பட்டது. அது ரிவர் டேல் (River Dale) என்ற ஒரே தோட்டத்தில் மட்டும் விளைந்தது. மற்றத் தோட்டங்களில் விளைவதில்லை. ரிவர் டேலின் மண் வளமும் சூழ்நிலையும் ஆப்பிள் விளைவதற்கு ஏற்றனவாக இருந்தன போலும், இப்போது இது எங்கும் பயிரிடப்படுவதில்லை. பேரிக்காய்கள் (Strawberries) இங்கு நிறைய விளைகின்றன. லாடம் பழம், சாம்பிராணி வாழை, கரு வாழை, செவ்வாழை, சந்தன வாழை எனப் பலவகை வாழைகள் இங்கு பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் லாடம் பழம், சிறு மலை வாழையைப் போன்று சுவையுடையதாக இருக்கும். பெரு நாவல், சிறு நாவல் என இரு வகை நாவற் பழங்களும் இங்கு விளைகின்றன. பலா மரங்கள் சேர்வராயன் மலைகளில் எல்லாப் பகுதிகளிலும் நன்கு வளர்கின்றன. மாதுளை, கொய்யா முதலிய பழங்களும் இங்கு நிறைய விளைகின்றன. இங்கு விளையும் அன்னாசிப் பழம் (Pine-apple) உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மிக்க சுவையுடையது.

லாக்குவட் (Loquat) என்ற ஒரு வகைப் பழம் இங்கு எல்லாத் தோட்டங்களிலும் பயிரிடப்படுகிறது. இது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும். இதிலிருந்து இங்கு வாழும் வெள்ளையர்கள் ஒரு வகைச் சாராயம் (Champagne) இறக்கி வந்தார்கள்.

ஏலக்காய், மிளகு, கடுக்காய் முதலியவை இங்கு குறைந்த அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு வாழும் மலையாளிகளால் பனிச் சாமை, அவரை, சர்க்கரை வள்ளி, குச்சி வள்ளி முதலியன பயிரிடப்படுகின்றன. உருளைக்கிழங்கும் இங்கு பயிரிடப்படுகிறது. ஆனால் அதிக அளவில் இல்லை.


மக்கள் :

சேர்வராயன் மலைகளில் வாழும் பழங்குடி மக்கள் மலையாளிகள் எனப்படுவர். இவர்கள் மொழி கொச்சைத் தமிழ். ‘கவுண்டர்’ என்ற சாதிப் பெயரைத் தங்கள் பெயருடன் சேர்த்து வழங்குகின்றனர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் பயிர்த் தொழில் செய்தும், காஃபித் தோட்டங்களில் கூலிகளாகப் பணி செய்தும் வாழ்கின்றனர். சேர்வராயன் மலை உச்சியில் இவர்களுடைய குல தெய்வம் உள்ளது. அங்குக் கோயில் கொண்டிருக்கும் இறைவனின் பெயர் சேர்வராயன் என்பதாகும். ஆண்டுக்கொருமுறை மலையாளிகளெல்லாம் அவ்விடத்தில்கூடி விழாவெடுப்பர். இம் மலையாளிகளின் பண்பாடும் பழக்க வழக்கங்களும் நூதனமானவை. கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலை முதலிய இடங்களில் இவ்வினத்தார் நிறைந்து வாழ்கின்றனர். இவர்களுடைய முழு வரலாறும் அடுத்த பகுதியில் விரிவாகக் கூறப்படும். 
3. கொல்லி மலை


பெயர்க் காரணம் :

‘கொல்லி மலை’ என்ற பெயர் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே வழங்கி வருகின்றது. புறநானுறு, நற்றிணை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி முதலிய நூல்களில் இம் மலை பற்றிய குறிப்புகள் காணக் கிடக்கின்றன. இப் பெயரின் காரணமாகக் கொள்ளக்கூடிய செய்தி ஒன்று உளது. அதுதான் கொல்லிப் பாவை பற்றியதாகும். கொல்லிப் பாவையைத் தன்னிடத்தே கொண்டிருந்த மலை கொல்லி மலை எனக் கொள்ளின் ஏற்புடைத்தாம்.


கொல்லிப் பாவை :

இது கொல்லி மலையில் செய்து வைக்கப்பட்டிருந்த தெய்வப் படிமம். ‘அவுணர் கொடிய போர் செய்யச் சமைத்த போர்க் கோலத்துடன் மோகித்து விழும்படி, கொல்லிப் பாவை வடிவாய்ச் செய்யவளாகிய திருமகளால் ஆடப்பட்ட பாவை என்னுங் கூத்து’ (சிலப். 6 : 60-1) என வருவது கொல்லிப் பாவையின் இயல்பை விளக்கும். சீவக சிந்தாமணியில் விசயைக்குப் பாவையை உவமையாகத் திருத்தக்க தேவர் கூறியதன் நயத்தை விளக்க வந்த நச்சினார்க்கினியர், ‘வேறு கருத்துச் செல்லாமல் தன்னையே கருதுவித்தலின் கொல்லிப் பாவை என்றார்’ எனக் கூறும் விளக்கமும் இதற்கு ஆதரவாகின்றது.

இது கொல்லி மலையில் ஒரு பூதத்தால் அமைக்கப்பட்ட அழகிய பாவை என்பதனைப் ‘பயன் நிறைந்த பலா மரங்களையுடைய கொல்லி மலையின் மேற்பகுதியில் முன்பு பூதம் அமைத்த புதுமையான இயக்கமுடைய பாவை இள வெயிலின்கண் தோன்றினாலொத்த நின் அழகிய நலம்’ (நற். 192) என வருந் தொடர் விளக்கும். மற்றும் இது அழியாத இயல்பினதென்பதை, ‘செவ்விய வேர்ப் பலவின் பயன் நிறைந்த கொல்லி மலையிலே, தெய்வத்தாற் காக்கப்பெறும் குற்றம் நீங்கிய நீண்ட கொடுமுடியையும் அழகிய வெள்ளிய அருவியையும் உடைய மேல் வரையிலே, காற்று மோதி அடித்தாலும், மிக்க மழை கடுமையாகப் பெய்தாலும், பேரிடி தாக்கினாலும், வேறு பல கெடுதிகள் உண்டானாலும், பெருநிலங் கிளர்ந்தாலும் தன் அழகிய நல்ல உருவம் கெடாத பாவை’ (நற். 201) என்னுங் கருத்து விளக்குகிறது.

இக் கொல்லிப் பாவை பற்றி வழங்கும் கதையொன்றுண்டு. கொல்லி மலையின் வளமிகுந்த நிலையைக் கண்டு முனிவரும் அமரரும் இதனை இருப்பிடமாகக் கொண்டனர். அப்போது அவர்களுக்கு அசுரர்களாலும், இராக்கதராலும் இடையூறு நேர்ந்தது. அதனைத் தடுக்கத் தெய்வதச்சனைக் கொண்டு இப்பாவையை அமைத்தனர். இயங்கும் தன்மையுள்ள இப் பாவை அரக்கர் முதலியோரின் வாடை பட்டவுடன் நகைக்கும். கண்டவருடைய உள்ளத்தையும் விழியையும் கவர்ந்து, அவர்கட்குப் பெருங் காம நோயை உறுவித்து, மயக்கிக் கொல்லும் தன்மையுடைய இதனைக் கண்ட அரக்கர் முதலியோர் மயங்கி மடியலாயினர்.


அமைப்பு:

கொல்லி மலை தமிழ் நாட்டில் சேலம் மாவட்டத்தில், நாமக்கல் ஆத்தூர் வட்டங்களில் உள்ள குன்றுத் தொடர். இம் மலையானது, தம்மம்பட்டி வரையில் நீண்டு செல்லும் துறையூர்ப் பள்ளத்தாக்கால் பச்சை மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. அயில்பட்டிக் கணவாயினால் போத மலைகளினின்றும் பிரிக்கப்படுகிறது. இவ்வழகிய தொடர், தென்வடலாகப் பதினெட்டுக் கல்லும், கிழ மேற்காகப் பன்னிரண்டு கல்லும் நீளமுடையது. இம் மலையின் தென் சரிவும், மேற்குச் சரிவும், கிழக்குச் சரிவும் சமவெளியினின்றும் 4000 அடி செங்குத்தாக உயர்ந்து செல்லுகின்றன. வடக்குச் சரிவு காட்டாறுகளால் அறுத்துச் செல்லப் பட்ட வரிசை வரிசையான படுகைகள் நிறைந்து பிளவுபட்டுக் காணப்படுகிறது. இப் படுகைகள் வடகிழக்குப் பக்கமாக ஓடுகின்றன. இவைகளில் குறிப்பிடத்தக்கவை, வரகூர் கோம்பை, மூலைக்குரிச்சி, பெரிய கோம்பை, வாலக் கோம்பை என்பன. நாமக்கல் கோட்டத்திலிருக்கும் இம் மலைப் பகுதி உயர்ந்த ஒரு பீடபூமியைத் தன்னகத்தில் கொண்டு விளங்குகிறது. அப் பீடபூமியானது ஒரு கவிகலன் (basin) போல் நடுவில் தாழ்ந்தும், பக்கங்களில் உயர்ந்தும் உள்ளது. உயர்ந்து செல்லும் இதன் பக்கங்களில் அடுக்கடுக்காக நிலங்களைப் பண்படுத்திப் பயிர்த் தொழில் செய்கிறார்கள். பயிர்கள் வளர்ந்து, பச்சைப் பசேலென்று எழில் நலம் கொழித்து விளங்கும் அக் காட்சியைப்போல் வேறு எங்கும் காண்டல் அரிது.

ஆத்தூர் வட்டத்திலிருக்கும் கொல்லி மலைப் பகுதி நாமக்கல் பகுதியினின்றும் மாறுபட்டதாகும். இம் மலையின் தென்மேற்குப் பகுதியானது பயில் நாட் (Pail Nad)டின் பருவுயர் சிகரங்களைக் கொண்டது. இச் சிகரங்களினின்றும் வட சரிவிலுள்ள பள்ளத்தாக்கின் இனிய காட்சிகளைக் காணலாம். அருவிகள் அச்சரிவில் இனிய ஒலியோடு இழிந்து செல்லும். அச்சிற்றாற்றுப் படுகைகளின் உச்சியைக் கடந்து செல்லும் மலை வழிப் பாதையிலிருந்து நோக்கினால் சமவெளிகளையும், அவற்றை வடக்கில் தடுத்து நிறுத்தும் சேர்வராயன், கல்ராயன், தேனாந்தி (Tenande) மலைகளின் இயற்கை யழகையும் கண்டு மகிழலாம். மேற்கிலுள்ள பீடபூமியின் உச்சி கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரமுள்ளது. வடமேற்குப் பீடபூமியின் உச்சி 400 அடி தாழ்ந்தது. வடக்கிலுள்ள பள்ளத்தாக்குகளைப் பிரிக்கும் மலைத்தொடர் 3000 அடி உயரமுள்ளது. ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி.


ஆறுகள் :

சேர்வராயன் மலைத்தொடரில் தோன்றும் ஆறுகள் பல. ஆனால் கொல்லி மலையில் ஆறுகள் அதிகமில்லை. சுவேத நதி, வசிட்ட நதி என்ற சிற்றாறுகள் கொல்லி மலை, பச்சை மலை, கல்ராயன் மலைகளில் பெய்யும் மழை நீரினின்றும் தோன்றுகின்றன. சுவேத நதி என்ற பெயர் வட சொற்களாலானது. அதைத் தமிழாக்கும் போது ‘வெள்ளாறு’ என்று அமையும். ஆனால் சுவேத நதி, வசிட்ட நதி ஆகிய இரண்டையும் வெள்ளாறு என்றே எல்லோரும் அழைக்கின்றனர். ஆனால் புது வெள்ளக் காலங்களில், இம் மாவட்டத்திலுள்ள மற்ற ஆறுகளைவிட மிகவும் செந்நிறமான நீரை, இவைகள் கொண்டு விளங்குகின்றன. வெள்ளாறு என்ற பெயர் இவைகட்குப் பொருந்தாத ஒன்று என்று தான் கூற வேண்டும். சுவேத நதி என்ற பெயருக்குக் காரணமாக ஒரு கதை வழங்குகிறது. பஞ்ச பாண்டவரில் ஒருவனான அருச்சுனன் தென்னாட்டிற்கு யாத்திரை வந்திருந்தபோது கொல்லி மலையை அடைந்தானாம். சுவேத நதி தோன்றுமிடத்தில் ஒரு பூசை நடத்த விரும்பினான். ஆனால் பூசைக்கு வேண்டிய நீரில்லை. தன் காண்டீபத்தில் கணை தொடுத்துப் பாறைமீது எய்தான். உடனே அவ்விடத்தில் ஒரு பிளவு ஏற்பட்டு அதனின்றும் நீர் பெருகி ஆறாக ஓடத் தொடங்கியது. அருச்சுனனுக்குச் ‘சுவேத வாகனன்’ என்ற ஒரு பெயரும் உண்டு. சுவேதவாகனனால் கொணரப் பட்ட நதி சுவேத நதியாயிற்று.

வசிட்ட நதி, வசிட்ட முனிவரின் பெயரால் ஏற்பட்டது. அவர் இந் நதிக் கரையில் பேளூருக்கருகில் ஒரு வேள்வி செய்தார் எனக் கூறப்படுகிறது. அவ்வூருக்கு வடக்கில் வெண்மையான பாறையொன்று உள்ளது. வசிட்டர் செய்த வேள்வியால் விளைந்த சாம்பலே அவ் வெண்மையான பாறையாக மாறிவிட்டதென்று கூறுகின்றனர். வசிட்ட நதிக்கும் பேராறு என்ற வேறு பெயரும் உண்டு.


காடுகள் :

கொல்லி மலையின் மீதுள்ள காடுகள் வளமானவை. இம் மலையிலிருந்து இழிந்து வரும் சிற்றாறுகளின் கரைகளில் மிகவும் அடர்த்தியான, பசுமை மாறாத இள மரக் காடுகள் நிறைந்துள்ளன. சேலம் மாவட்டக் காடுகளில் கிடைக்கக் கூடிய முக்கியமான மலைபடு பொருள் மூங்கில். இம் மூங்கில்கள் வெட்டப் பட்டு ஈரோடு, கரூர், சென்னை முதலிய நகரங்களுக்கு நிறைந்த அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மூங்கிலைக் கொண்டு உறுதியான தட்டி (படல்) கள் செய்கின்றனர். மூங்கிலின் வெளிப்புறத்தில் பசுமையாகவும் உறுதியாகவும் உள்ள பாகம் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு இத் தட்டிகள் செய்யப்படுகின்றன. வீட்டு மறைப்புகளுக்கு இது பெரிதும் பயன்படுகிறது. மேலும் மூங்கிலால் பெரிய பாய்கள் செய்யப்படுகின்றன. இவைகள் விரிப்புகளாகவும், பந்தல்களாகவும் பயன்படும். காஃபி நாற்று (Seedling)களுக்காக 3 அங்குலக் குறுக்களவும், 9 அங்குல உயரமுமுள்ள சிறு கூடைகள் நிறையச் செய்யப்படுகின்றன. இவை ஆயிரம், 50 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. மாம்பழம், ஆரஞ்சுப் பழம், மீன், ரொட்டி முதலியவற்றைச் சேதமில்லாமல் அனுப்ப மூங்கிற் கூடைகள் பெரிய அளவில் நிறையத் தேவைப்படுகின்றன. வயலுக்கு நீர் இறைக்கும் இறை கூடைகள், கோழிக் கூடைகள், பறவைக் கூடுகள், விசிறிகள் முதலியனவும் மூங்கிலிலிருந்து செய்யப்படுகின்றன. ஆயிரக்கணக்கான மக்கள் இத் தொழிலால் வாழ்கின்றனர்.

சந்தன மரங்கள் இங்கு நிறைய உண்டு. இம்மலையில் கிடைக்கும் தழைகளைச் சேகரித்து, திருச்சி மாவட்டத்திலுள்ள நஞ்சை நிலங்களுக்கு உரமாகப் பயன்படுத்துகின்றனர். கொல்லி மலைத் தேன், இலக்கியப் புகழ் பெற்றது. கொல்லித் தலைவன் ஒருவனைப் பாராட்டப் புகுந்த ஒரு புலவர், அம் மலைபடு தேனின் சிறப்புக்கு முதலிட்ம் கொடுத்து, “கொல்லி மலைத் தேன் சொரியும் கொற்றவா!” என்று விளக்கினார்.


விலங்குகள் :

தமிழ் நாட்டு மலைகளில் பொதுவாகக் காணப்படும் கரடி (Sloth bear) கொல்லி மலையிலும் நிறையக் காணப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மலையாளிகள் அவற்றைக் கொல்வதில்லை. காரணம், இராமபிரானின் இலங்கைப் படையெடுப்பின்போது உற்ற நண்பனாக உடனிருந்து உதவிய ஜாம்பவானின் வழி வந்தவைகள் என்று கருதிக் கரடிகளை வணங்குகின்றனர். கொல்லி மலையின் அடிவாரங்களில் கருத்த வரையாடுகள் கூட்டங்கூட்டமாகத் திரியும். அவை அச்சம் மிக்கவை. யாராவது அச்சுறுத்திவிட்டால், நான்கைந்து கல் தொலைவு ஓடிய பிறகுதான் அவை நிற்கும். காட்டுப் பன்றிகளும் இங்கு நிறைய உண்டு. அவற்றின் இறைச்சியை மலையாளிகள் விரும்பி உண்பர். இதுவும் திருமாலின் அவதாரம்தான் ! எல்லாவற்றையும் இறைவனின் அவதாரம் என்று ஒதுக்கி விட்டால் காட்டில் வாழும் மலையாளிகள் பாவம், எதைத்தான் உண்பர்...... !

பயிர்த் தொழில்:

சேர்வராயன் மலை, நீலகிரி மலை, பழனி மலைகளோடு ஒப்பிடும்போது, கொல்லி மலை முன்னேற்றத்தில் மிகவும் பின்தங்கியது என்றுதான் சொல்ல வேண்டும். மற்ற மலைகளில் உதகமண்டலம், ஏர்க்காடு, கூனூர், கோடைக்கானல் முதலிய குறிஞ்சி நகரங்கள் தோன்றி, மிகுந்த நாகரிகம் பெற்றுவிட்டன. அழகிய மலைப் பாதைகள் சமவெளிகளையும் இம் மலைகளையும் இணைக்கின்றன. இன்றைய நாகரிக வாழ்க்கைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் இந் நகரங்கள் பெற்று, பிற நாட்டு உல்லாசிகளையும், தமிழகத்துச் செல்வர்களையும் தம்பால் ஈர்க்கின்றன. காஃபி, தேயிலை, இரப்பர், பழவகைகள் முதலியவற்றைத் தம்பால் விளைவித்து நாட்டின் வருவாயைப் பெருக்குகின்றன. பல தொழிற்சாலைகளைத் தம்மகக்தே கொண்டு தொழில்வளம் சிறக்கத் துணைபுரிகின்றன. ஆனால் இத்தகைய முன்னேற்றம் கொல்லி மலையில் இல்லை. கொல்லிமலை இன்னும் பூரணமாக ஆராயப்படவில்லை என்றே சொல்லலாம். போதிய பாதை வசதி கிடையாது. இப்பொழுதுதான் பாதை அமைத்து முடித்திருக்கின்றனர்.

ஆனால் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளை விடக் கொல்லி மலையாளிகள் உழைப்பாளிகள். சேர்வராயன் மலையில் காஃபித் தோட்டங்கள் நிறைய இருப்பதால், மலையாளிகளெல்லாம் தங்கள் பயிர்த் தொழிலைவிட்டு விட்டுக் காஃபித்தோட்டக் கூலிகளாய்ப் பணிபுரிகின்றனர். காரணம் தாமாகப் பயிர்செய்து சம்பாதிப்பதைவிடக் கூலிகளாக வேலைசெய்வதில் அதிக வருவாய் அவர்களுக்குக் கிட்டுகிறது. கொல்லி மலையாளிகளுக்கு இத்தகைய வாய்ப்புக் கிடையாது. குறிஞ்சி நிலத்தைப் பண்படுத்தித் தம் பேருழைப்பால் பயிர்த் தொழிலைச் சிறந்த முறையில் செய்து வாழ்கின்றனர். சமவெளியில் வாழ்பவர்களைவிடச் சிறந்த முறையில் உழவு புரிகின்றனர் இம்மலையாளிகள்.

கொல்லிமலையின் மீதுள்ள புஞ்சை நிலங்களை இரண்டு விதங்களாகப் பிரிக்கலாம். ஏரினால் உழுது பண்படுத்தும் நிலத்தை ‘உழவுக்காடு’ என்றும், களைக் கொட்டால் கொத்திப் பண்டுத்தும் நிலத்தைக் ‘கொத்துக் காடு’ என்றும் கூறுகின்றனர். நஞ்சைநிலப் பயிர்த் தொழிலும் கொல்லி மலையில் உண்டு. 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை நிலங்கள் இங்குள்ளன. மிக உயர்ந்த பீடபூமிகளிலே இந்நிலங்கள் அமைந்துள்ளன. மலைமீதுள்ள ஈரத்தால் ஊறிவரும் ஒசும்பல்நீர், இந்நிலங்களில் பாய்கிறது. சில நஞ்சை நிலங்கள் பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ளன. அப் பள்ளத்தாக்குகளில் எப்பொழுதும் நீர் கசிந்து மண் ஈரமாகவே இருக்கும். அவ்விடங்களைப் பண்படுத்தி, வயல்களாக்கி விடுகின்றனர். அவ்விடத்தில் கசியும் நீர் வயல்களில் எப்பொழுதும் தேங்கிநிற்கும். தாழ்ந்த பீடபூமிகளின் மீதும் நஞ்சை நிலங்கள் உண்டு. மலையுச்சியிலிருந்து ஓடிவரும் அருவிகளைத் தடுத்து நிறுத்திச் சிறுசிறு கால்வாய்கள் மூலமாக அந் நஞ்சை நிலங்களிலுள்ள நெல் வயல்களுக்குப் பாய்ச்சுகிறார்கள்.


நெல் :

எப்பொழுதும் ஈரம் கசிந்து கொண்டிருக்கும் பள்ளத்தாக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் நஞ்சை நிலங்கள் ஆழமான சேற்றுக் குழிகளைக் கொண்டிருக்கும். அக் குழிகளில் சில சமயங்களில் உழவர்கள் கழுத்தளவுகூட மூழ்கிவிடுவதுண்டு. அவ்வாறு ஆழ்வதைத் தடுக்கவே நாற்று நடும்போது பலகைகளின் மேல் இருந்துகொண்டு நடுவார்கள். உயர்ந்த பீடபூமிகளில் இருக்கும் நஞ்சை நிலங்கள் எளிதில் உழக் கூடியவை யாகையால் ஆண்டுக்கு இருபோகம் விளையும். ஆனால் தாழ்ந்த பீடபூமிகளிலுள்ள சதுப்புநில நஞ்சைகள், உழவுத் தொல்லையின் காரணமாக ஆண்டுக்கு ஒரு போகமே விளையும். ஒரு போகமே விளைந்தாலும் முன்கூறிய நஞ்சை நிலங்களைவிட இது இருமடங்கு அதிகமாக விளைச்சலைக் கொடுக்கும்.


வாழை :

கொல்லி மலையில் பயில் நாட்டிற்கு மேற்கில் உள்ள சரிவுகள் அருவியின் நீர்வளத்தால் செழிப்புடன் விளங்குகின்றன. அவ்வளத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு நிறைய வாழை மரங்களைப் பயிர்செய்கின்றனர். அங்கு அதிகமாக விளையக் கூடியது ‘இரஸ்தாலி’ வாழை. கொல்லி மலையில் மிகவும் உயர்ந்த ரகப் பழமான ‘கருவாழை’யும் நிறைய விளைகின்றது. இது மிகச் சுவையானது. ஆனால் விலை அதிகம். ‘பட்டு வாழை’ என்று சொல்லக் கூடிய மற்றாெரு வகை வாழையும் இங்குப் பயிர் செய்யப்படுகிறது. இது நீளமாகவும் செந்நிறமாகவும் இருக்கும்.


இராகி :

கொல்லிமலையில் விளையும் முக்கியப் பயிர்களில் இராகியும் ஒன்று. மே அல்லது ஜூன் திங்கள்களில் நிலங்கள் உழப்பட்டு, இராகி விதைக்கப்படுகிறது. நான்கு ஐந்து திங்கள்கள் கழித்து, இது அறுவடை செய்யப்படுகிறது. அறுக்கும்போது ஒரு கோழிச் சேவலையோ, ஆட்டையோ பலியிட்டு அதன் குருதியில் வெண்சோற்றைக் கலந்து வயல்களில் இறைப்பர். பிறகு கதிர்களை அறுத்துச் சில நாட்கள் வெயிலில் உலர்த்தி மாடுகளால் மிதிக்கச் செய்து, மணிகளைத் தனியே பிரித்தெடுப்பர். கதிர் அறுத்துப் பத்து நாட்கள் கழிந்ததும் அதன் தாளை அறுக்காமல் தீயிட்டு எரித்து விடுவர். 

மொச்சை :

கொல்லிமலையில் இராகி வயல்களில் வரிசை வரிசையாக மொச்சை பயிரிடப்படுகிறது. ஆமணக்கோடும், கடுகோடும்கூட இது சில சமயங்களில் பயிரிடப்படும். இதனுடைய இலைகள் நிலத்திற்கு நல்ல உரமாகும். ஜூலை ஆகஸ்டுத் திங்கள்களில் மொச்சை விதைகள் ஊன்றப்படுகின்றன. ஒரு திங்கள் கழிந்ததும், மண்ணைக் கொத்தி விடுவர். மற்றுமோர் திங்கள் கழிந்ததும் களையெடுப்பர். மொச்சை ஆறுமாதப் பயிர். இராகி அறுவடையானதும் இப்பயிர் வயலில் பரவிப்படரும். மிகுபனிக் காலங்களான டிசம்பர் சனவரித் திங்கள்களில் மலரத் தொடங்கும்; பிறகு காய்க்கும். காய்கள் எல்லாம் பசுமையாக இருக்கும்போது அறுவடை செய்ய மாட்டார்கள். அவைகள் நன்றாக உலர்ந்த பிறகு சனவரி இறுதியிலோ அல்லது ஃபெப்ருவரி முதலிலோ அறுப்பர். சில நாட்கள் மறுபடியும் நன்றாகக் காய விடுவர். அதன் பிறகு காய்களைத் தனியே பிரித்தெடுத்து மாடுகளின் காலில் மிதிக்க விட்டோ, அல்லது தடியால் அடித்தோ மொச்சையைத் தனியாகப் பிரித்தெடுப்பர்.


கனிப்பொருள்கள்

சேலம் மாவட்டத்தில் பூமியில் புதைந்து கிடக்கும் கனிப் பொருள்களில் இரும்புத்தாது குறிப்பிடத்தக்க ஒன்று என்பதை முதலிலேயே கூறினோம். கொல்லி மலையில் அளவற்ற இரும்புத்தாது மண்டிக்கிடக்கிறது. இரும்பு உருக்கும் தொழில் சேலம் மாவட்ட மக்களுக்குக் கைவந்த ஒரு கலை; தொன்மையான கலை. சேலம், ஆத்தூர், ஓமலூர், திருச்செங்கோடு ஆகிய கோட்டங்களிலுள்ள சிற்றூர்களிலும், ஓசூர், கிருட்டினகிரி எல்லையிலும் இத்தொழில் மிகவும் வளர்ச்சி பெற்றிருந்தது. ஆனால் இரும்பை உருக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் (கரி) விலை அளவுக்கு மீறி உயர்ந்ததாலும், வெளிநாடுகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட இரும்பு மிகவும் மலிவாகக் கிடைத்ததாலும், இத் தொழிலானது சேலம் மாவட்டத்தில் சிறுகச் சிறுக அழிந்து விட்டது.

சேலம் மாவட்டத்தில் இரும்பைத் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படுத்தப்பட்ட உலை களிமண்ணால் செய்யப்பட்டது. ஒரு கண்ணாடிப் புட்டியைப்போல் தோற்றமளிக்கும் அவ்வுலை, 4 அடி உயரமும், அடித்தளத்தில் 2 அடி குறுக்களவும், உச்சியில் 9 அங்குலக் குறுக்களவும் கொண்டதாகும். அவ்வுலையின் அடித்தளம் பூமியின் மட்டத்திலிருந்து 1/2 அடி தாழ்ந்திருக்கும். அத்தளத்தில் 10 அங்குல சதுரமான ஒருவழி இருக்கும். அவ்வுலையில் பாதிப்பகுதியைக் கரியால் நிரப்பி, அதற்கு மேல் இரும்புத் தாதைக் கொட்டுவர். ஆட்டுத் தோலால் செய்த துருத்தியொன்றை அவ்வுலையில் பொருத்தியிருப்பர். அத்துருத்தியை அமுக்கிக் காற்றை உலையினுள் செலுத்துவர். உலையின் மற்ற வழிகளெல்லாம் பச்சைக் களிமண்ணால் மூடப்படும். இவ்வாறு 3 1/2 மணி நேரம் உலைக்காற்றை ஊதிக் கொண்டிருந்தால் 12 ராத்தல் எடையுள்ள இரும்பு வெளிப்படும். இது தான் பண்டைய முறை.

ஜெ. எம். ஹீத் (J. M. Heath) என்ற ஓர் ஆங்கிலேயர், கிழக்கிந்தியக் கம்பெனியின் வணிகத்துறைப் பொறுப்பாளராகச் சேலத்தில் இருந்தார். சேலம் மாவட்டத்தில் புதைந்து கிடக்கும் இரும்புத்தாதுவின் வளத்தை அறிந்த அவர் கி. பி. 1825 ஆம் ஆண்டு கம்பெனியின் அலுவலிலிருந்து விலகி, இரும்புத் தாதை எடுத்து ஆக்க வேலைக்குப் பயன்படுத்தும் துறையில் கல்விபயில இங்கிலாந்து சென்றார். 1830 இல் இந்தியாவிற்குத் திரும்பி, தென் ஆற்காடு மாவட்டத்தில் ‘போர்ட்டோ நோவா இரும்புத் தொழிற்சாலை’ (Porto Novo Iron Company) என்ற ஒன்றைத் துவக்கினார்.

கி.பி. 1858 இல் ‘கிழக்கிந்திய இரும்புத் தொழிற்சாலையும் ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள இரும்புத்தாது தோண்டி எடுக்கப்பட்டது. காவிரிக் கரையிலுள்ள பூலாம் பட்டியில் இரும்புருக்கும் உலைகள் ஏற்படுத்தப் பட்டன. கஞ்ச மலையினின்றும் வெட்டி எடுக்கப்பட்ட இரும்புத்தாது 23 கல் தொலைவிலுள்ள பூலாம்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவ்வுலைகளில் பிரித்தெடுக்கப்பட்ட இரும்பு மிகவும் உயர்ந்த ரகமானது. துளைப் பாலங் (Tubular bridge) களும், வளைந்து கொடுக்கும் பாலங்களும் (Suspension bridge) அமைக்க அவ்விரும்பு மிகவும் ஏற்றதாக இருந்தது. பூலாம்பட்டி உலைக்கு வேண்டிய கரி (Charcoal) காவிரிக்கப்பால் 18 கல் தொலைவிலுள்ள சோழப்பாடியிலிருந்து பெறப்பட்டது. அவ்விடத்தில் கரியானது நிறைந்த அளவில் அவிக்கப்பட்டுக் காவிரியாற்றின் மூலம் படகுகளில் பூலாம் பட்டிக்கு அனுப்பப்பட்டது. ஒருடன்கரி ரூ 6 க்குப் பெறப்பட்டது. ஆனால் ஒழுங்கான முறையில் கிடைக்கவில்லை. சோழப்பாடியில் கரி அவிக்கும் தொழிலாளர்களுக்குக் காட்டின் தட்ப வெப்ப நிலை ஒத்து வராத காரணத்தால், அடிக்கடி அவர்கள் நோய்வாய்ப்பட்டனர். அதனால் உலைவேலையும் தடைப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சேலம் மாவட்டத்திலுள்ள இரும்புத்தாதுப் படிவங்கள் விரிவான முறையில் வாணிப நோக்கோடு ஆராயப்பட்டன. புதுவிதமான பேருலை (blast furnaces) களை நிறுவி இத்தொழிலை வருவாயுடையதாக ஆக்குவதற்குரிய வழிவகைகளையும் புள்ளிவிவரங்களையும் ஆய்ந்தனர். ஒருடன் இரும்பு உருவாவதற்கு 3 1/2 டன் கரி தேவைப்படும் என்று கணக்கிட்டனர். இவர்களுடைய கணக்குப்படி 1 டன் தூய்மையற்ற இரும்பை உற்பத்தி செய்ய 8 1/2 ஏகர் காடு அழிக்கப்படவேண்டும். 1 டன் தூய்மையாக்கப்பட்ட இரும்பு (wrought iron or steel) உற்பத்தி செய்ய 35 ஏகர் காடு அழிக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் தட்டுப்பாட்டால் இரும்புருக்கும் தொழில் சேலம் மாவட்டத்தில் கைவிடப் பட்டது.

கொல்லிமலையிலும் சேலம் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளிலும் படிந்திருக்கும் இரும்புத்தாது மிகவும் தூய்மையானது. கந்தகக் கலப்பும், பாஸ்பரஸ் கலப்பும் (Sulphur and phospherous) அற்றது. எனவே இதிலிருந்து மிகவும் உயர்ந்தரகமான எஃகு உற்பத்தி செய்ய இயலும். அலெக்சாந்தர் காலத்திலிருந்து மார்க்கோபோலோ காலம் வரையில் நம் நாடு எஃகு உற்பத்தியில் பெயர் பெற்றிருந்தது. சேலம் மாவட்டத்தில் கூட எஃகுத் தொழில் மிகவும் சிறப்புற்றிருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சேலத்தில் வாழ்ந்த [1] அருணாசல ஆசாரியினால் தூய எஃகு கொண்டு செய்யப்பட்ட வேட்டைக் கத்தி (hunting knives) களுக்கும், குத்துக் கோல்களுக்கும் (pig-sticking lances) இந்திய நாடு முழுவதும் நல்ல வரவேற்பிருந்தது. வெள்ளி அல்லது தங்க முலாம் பூசப்பட்ட ‘சிறுத்தைப்பல்’ (Cheetah tooth) என்ற மடக்குக் கத்தி (Pen knives) கள் செய்யும் தொழில் சென்ற சில ஆண்டுகள் வரை சேலத்தில் சிறப்பாக இருந்தது.

இத்தகைய நுண் கலையாற்றல் நிறைந்த சேலம் மாவட்டக் கலைஞர்களின் கைகள் சோர்ந்து கிடக்கின்றன. இரும்புத்தாது பூமிக்கடியில் உறங்குகிறது. ஆனால் இவ்வுறக்கம் இனி அதிக நாள் நீடிக்காது. நெய்வேலி நிலக்கரி, கஞ்சமலை இரும்புக்குத் தஞ்சமளிக்கும். கொல்லி மலை தன் கனிவளத்தைத் தமிழரின் தொழில் வளத்திற்குக் காணிக்கையாக்கும். சேரன் ஆண்ட சே(ர)லத்தில் ஜெம் ஷெட்பூர் உருவாகும்.


வரலாறு:

கொல்லி மலையைப் பற்றிய தொன்மையான வரலாறு கி. பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்ததாகும். அந் நூற்றாண்டில் தமிழகத்தில் வெற்றிக் கொடி கட்டியாண்ட மாவீரன், சேரன் செங்குட்டுவன் என்பதைச் சங்க மருவிய நூல்கள் பறை சாற்றும். கங்கைப் பேரியாறும் இமயப் பெருமலையும் அவன் வெற்றிச் சிறப்பை இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. பேரியாறு மேலைக் கடலில் விழும் இடத்தில் சேரநாட்டின் தலைநகரம் அமைந்திருந்தது. அவ்வஞ்சி நகரில் வீற்றிருந்து எஞ்சியிருந்த நாவலந் தீவை ஆட்சி புரிந்தனர் சேரர். கொங்குநாடும் அதன் வளமிக்க குறிஞ்சியான கொல்லியும் அவர்கள் ஆணைக்குட்பட்டிருந்தன. சேர மன்னர்கள் இளமையிலேயே தங்கள் இளங்கோக்களை அரசியலில் பயிற்றும் வழக்க முடையவர்கள். இளவரசன் மாந்தரஞ் சேரலிரும்பொறை, கொங்கு நாட்டின் கோமானாக அனுப்பப்பட்டான். இவன் செங்கோலையுடையவன், யானையினது பார்வை போலும் நோக்குடையவன். ‘விளங்கில்’ என்னும் ஊரார்க்குப் பகைவரான் வந்த துன்பத்தைத் தீர்த்தோன்; கபிலருடைய நண்பன்; ஒரு காலத்துப் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் கட்டப்பட்டுப் பின்பு அதனை நீக்கிக் கொண்டு புகழ் பெற்றாேன்; சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு போர் செய்தோன்; இவன் பெயர் ‘யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ எனவும், சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை’ எனவும் வழங்கும். எட்டுத்தொகையுள் ஒன்றாகிய ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்தோன் இவனே. குறுங்கோழியூர் கிழார், பொருந்தில் இளங்கீரனார், கூடலூர் கிழார் ஆகிய முப்பெரும் புலவரும் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

சேரநாடு குறிஞ்சிநாடு. குறிஞ்சி நாட்டில் வாழ்ந்த இளங்கோ ஆதலின், கொங்கு நாட்டை ஆளத் தனக்கு ஏற்ற இடமாகக் கொல்லி மலையைத் தேர்ந்தெடுத்து அங்குத் தன் ஆட்சிப் பீடத்தை அமைத்தான். ஆனது பற்றிக் கொல்லித் தலைவன் என்று சங்க நூல்களில் இவன் அழைக்கப்படுகிறான். பின்னாட்களில் சேர அரசிற்கு உரிமை பூண்டு ஒழுகியபோது, கடற்கரை நகரான தொண்டியைத் தன் தலைநகராகக் கொண்டான். ‘கொல்லிப் பொருந’ (பதிற். 73), ‘சேரலற்கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகநா. 209), ‘கொல்லியாண்ட குடவர் கோவே’ (சிலப். 24) என்ற அடிகள் கொல்லிமலை சேரர்களுக்கு உரிமையுடையதாக இருந்தது என்பதை விளக்கும்.


ஓரி :

கொல்லிமலைக்குப் பெருங்கிழமை கொண்டவன் ஓரி. இவன் கடைஏழு வள்ளல்களில் ஒருவன். வில்லாற்றலில் சிறந்தவனான இவனை, அச்சிறப்பு நோக்கி ‘வல்வில் ஓரி’ என்று சங்க இலக்கியம் கூறும். இவன் வில்லாற்றலைச் சிறப்பிக்கப் புகுந்த வன்பரணர், ‘யானையைக் கொன்று வீழ்த்தி, பெரிய வாயையுடைய புலியின் உயிர்குடித்து, துளைபொருந்திய கோட்டினைத் தலையிலே உடைய புள்ளிமான் கலையினை உருட்டி, உரல் போலும் தலையுடைய கேழலாகிய பன்றியை வீழச் செய்து, அதற்கருகிலிருந்த ஆழ்தலையுடைய புற்றின் கட்கிடக்கின்ற உடும்பின்கட் சென்று செறியும் வல்வில்’ என்று கூறுகிறார்.

மேலும் கொல்லியின் வளத்தையும் ஓரியின் ஈகையையும் பற்றி அவர் கூறும்போது, 

“… … … வெறுக்கைநன் குடையன்
ஆரங் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
சார லருவிப் பயமலைக் கிழவன்”
(புறநா. 152)

என்றும்,

“ … … … வேட்டத்தில்
தானுயிர் செகுத்த மானினப் புழுக்கொடு
ஆனுருக் கன்ன வேரியை நல்கித்
தன்மலைப் பிறந்த தாவி னன்பொன்
பன்மணிக் குவையொடும் விரைஇக் கொண்மெனச்
சுரத்திடை நல்கியோனே விடர்ச்சிமை
ஓங்கிருங் கொல்லிப் பெருநன்”
(புறநா. 152)

என்றும்,

“மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
இழையணி யானை இரப்போர்க் கீயும்
… … … …
அடுபோர் ஆனா ஆதன் ஓரி ”
(புறநா. 153)

என்றும்,

“பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
வானார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
யானை இனத்தொடு பெற்றனர்.
(புறநா. 153)

என்றும் பாடி மகிழ்கிறார்.


மற்றாெரு செந்நாப் புலவரான கழைதின் யானை யார்,

“கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ....”

(புறநா. 204)

என்று புகழ்ந்து பாடுகிறார்.


“அடுபோர்ஆனா ஆதன் ஓரி” என்ற புறநானூற்றடியிலிருந்து, இவன் இயற்பெயர் ‘ஆதன்’ என்பதூஉம், குடிப் பெயர் ‘ஓரி’ என்பதூஉம் புலனாம். கொல்லி மலை ஓரிக்குரியதென்பது, “கொல்லியாண்ட வல்வில் ஓரி” (புறநா. 158), “ஓரி, பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 208) என்ற தொடர்களால் விளங்கும். கொல்லிவாழ் மக்கள், ஓரி வாழ்ந்த இடமாக ஒரு மண்மேட்டைச் சுட்டிக் காட்டி இன்றும் பெருமைப்படுகின்றனர்.

மலையமான் திருமுடிக்காரியும், ஓரியும் சமகாலத்தவர். திருமுடிக்காரி பெண்ணையாற்றங்கரையின் கண் உள்ள ‘மலாடு’ என்று வழங்கும் மலையமானாட்டின் அரசன். கோவலூர் இவனது தலைநகர். கடையேழு வள்ளல்களில் இவனும் ஒருவன். முள்ளூர் மலையையுடையான். இவன் குதிரைக்குக் காரி என்று பெயர். காரிக் குதிரையூர்ந்து திரிந்ததால் இவனும் காரி எனப்பட்டான் போலும். இவன் குறுநில மன்னனாக இருந்தாலும் ஆற்றலும், பயிற்சியும் மிக்க சிறந்த படைக்கு உரிமையுடையவனாக இருந்தான். போர் ஏற்படும் போது பேரரசர்களெல்லாம் இவன் துணையை நாடினர். காரியும் ஓரியும் பகைவர்களாக இருந்து போரிட்டனர் என்ற செய்தி, “காரிக்குதிரைக் காரியொடு மலைந்த, வோரிக் குதிரை ஓரியும்” (சிறுபாண் 110-111) என்ற அடிகளால் புலப்படும். மேலும் சேரனும் ஓரியும் மாறுகொண்ட பொழுது, காரி சேரர் பக்கம் நின்று போரிட்டு ஓரியைக் கொன்று கொல்லி மலையைச் சேரனுக்கு அகப்படுத்தினான் என்பதை, “முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி, செல்லா நல்லிசை நிறுத்த வல்வில், ஓரிக் கொன்று சேரலற் கீத்த, செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 209) என்ற அடிகளால் அறியலாம்.


மலையாளிகள் :

மலையாளிகள் என்று சொல்லக் கூடிய இவ்வினத்தார், சேர்வராயன் மலை, கொல்லி மலை, கல்ராயன் மலை, பச்சை மலை, சித்தேரி மலை ஆகியவற்றில் வாழும் பழங்குடி மக்கள். சமவெளியில் வாழும் மக்களோடு அதிகத் தொடர்பு கொண்டிராத காரணத்தால் இவர்களுடைய பழக்கவழக்கங்களும் பண்பாடுகளும் சிறிது வேறுபட்டே இருக்கின்றன. பேசும் மொழி தமிழே என்றாலும் சிதைத்துப் பேசுகின்றனர். அவர்கள் எண்ணிக்கை பின் வருமாறு.

ஆத்தூர் வட்டம் 14,000
சேலம் வட்டம் 10,000
ஊத்தங்கரை வட்டம் 10,000
நாமக்கல் வட்டம் 12,000

இம்மலை வாழ் மக்களில் ஒரு சிலர் மலைகளினின்றும் நீங்கி ஓமலூர், ஊத்தங்கரை முதலிய சமவெளி ஊர்களிலும் வாழ்கின்றனர். இம்மலையாளிகளும், மலைக்காய்ச்சலுக்குப் பேர்போன இவர்கள் வாழ்விடங்களும், பழமையில் ஊறிப்போன இவர்கள் பழக்கவழக்கங்களும் நம்மை வியப்பிலாழ்த்துவதோடு மக்களின நூல் ஆராய்ச்சி (Ethnology)க்குரிய பாடங்களாக விளங்குகின்றன. இம்மலையாளிகள், காஞ்சிபுரமே தங்கள் ஆதி ஊர் என்று கூறுகின்றனர். இவர்கள் இம் மலைகளில் குடியேறியது பற்றிக் கர்ண பரம்பரைக் கதையொன்று கூறப்படுகிறது.

பெரியண்ணன், நடுவண்ணன், சின்னண்ணன் என்று பெயரிய மூன்று உடன் பிறந்தார்கள் ஒரு நாள் மூன்று வேட்டை நாய்களோடு வேட்டைக்குச் சென்றனராம். மூவரும் காட்டின் மூன்று பகுதிகளுக்குப் பிரிந்து சென்று வேட்டையாடினர். அப்பொழுது பெருமழை பிடித்து இரண்டு நாள் ஓயவில்லை. அவர்களாலும் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. ஆனால் அவர்களுடைய நாய்கள் மட்டும் எப்படியோ வீடு சேர்ந்தன. கணவன்மார் இன்றித் தனியே வீடு திரும்பிய நாய்களைக் கண்ட மனைவியர், தங்கள் கணவன்மார் காட்டில் கொடு விலங்குகளால் இறந்துபட்டதாகக் கருதி, அக்காலக்கைம் பெண்களைப் போல் வீடுகளுக்குத் தீயிட்டு அந்நெருப்பில் தாங்களும் வீழ்ந்து மடிந்தனர். மூன்றாம் நாள் மழை விட்டு வீடு திரும்பிய மூன்று சோதரரும், இல்லமும் இல்லக் கிழத்தியரும் வெந்து நீறானதைக் கண்டனர்; வருந்தினர்; ஏங்கி அழுதனர். அவ்வாற்றாமை தணிந்ததும் மூவரும் வேறு மகளிரை மணமுடித்துக் கொண்டனர். பெரியண்ணன் ஒரு கைக்கோள மாதைக் கடிமணம் புரிந்து கொண்டு, கல்ராயன் மலையில் குடி புகுந்தான். நடுவண்ணன் ஒரு வேடர்குல மகளை மணந்து கொண்டு பச்சை மலையில் வாழச் சென்றான். சின்னண்ணன் தேவேந்திரப் பள்ளர் குலத்தில் பெண்ணெடுத்துக் கொண்டதோடு, கொல்லிமலையை வாழ்விடமாகக் கொண்டான். இம்மூவரின் வழிவந்தோரே பெரிய மலையாளிகள் என்றும், பச்சை மலையாளிகள் என்றும், கொல்லி மலையாளிகள் என்றும் மூன்று பிரிவினராக வாழ்கின்றனர்.


பிரிவுகள் :

மணமுறையின் அடிப்படையில் பல பிரிவு (exogamous clans) களாகப் பிரிந்து இவர்கள் வாழ்கிறார்கள். அப்பிரிவுகளுக்கு ‘வகுப்புகள்’ என்று பெயர். இவ்வகுப்புகளில் சிலவற்றை ஒன்று சேர்த்துத் ‘தாயாதி வகுப்பு’ என்று வழங்குகின்றனர். இத்தாயாதி வகுப்பினர் தங்களை, ‘அண்ணன் தம்பியர்’ என்று அழைத்துக் கொள்கின்றனர். ஒரு தாயாதி வகுப்பினர் தங்களுக்குள் பெண்ணெடுத்துக் கொள்ளும் வழக்கமில்லை. வேறு தாயாதி வகுப்பிலேயே பெண் கொள்வர். எடுத்துக்காட்டாகச் சித்தூர் நாட்டிலுள்ள மலையாளிகள் ஏழு வகுப்புகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். அவர்களில் ஐந்து வகுப்பினர் (பீலன், மூக்காண்டி, பூசன், மாணிக்கன், திருவிச்சி) ஒரு தாயாதி வகுப்பினராகவும், எஞ்சியுள்ள இரண்டு வகுப்பினர் (கண்ணன், தில்லான்) வேற்றுத் தாயாதி வகுப்பினராகவும் கருதப்படுகின்றனர். இவ்விரண்டு தாயாதி வகுப்பினரில் முன்னவர் பின்னவரிடத்தும், பின்னவர் முன்னவரிடத்துமே பெண் கொள்ளலாம். புலி நாட்டைச் சேர்ந்த மாட்டாயன், இமையாண்டி, கண்ணாதன், அலாத்தி, புன்னன் என்ற ஐந்து கூட்டத்தாரும் ஒரு தாயாதி வகுப்பைச் சேர்ந்தவர்கள். மூனூர் மலையாளிகளில் கோனான் வகுப்பார், மேற்கூறிய திருப்புலி நாட்டு முதல் மூன்று வகுப்பாரிடமும் பெண் கொள்ளமாட்டார்கள். பின்னிரு வகுப்பாரிடம் பெண் கொள்ளுவார்கள். பச்சைமலையாளிடையே ஐம்பது வகுப்புக்கள் உண்டு. அவ்வைம்பது வகுப்பாரும் எட்டுத் தாயாதிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவ்வகுப்புக்களெல்லாம் பழமையானதும் வேடிக்கையானதுமான பெயர்களைத் தாங்கி , மொழியாராய்ச்சியாளரின் எண்ணத்தை ஈர்க்கின்றன.


வாழ்க்கை முறை :

சின்னண்ணன் வழிவந்த கொல்லி மலையாளிகள் பழமை விரும்பிகள்; ஒழுங்கு படுத்தப்பட்ட அமைப்புக்குட்பட்டவர்கள். இவர்கள் நாமக்கல், ஆத்தூர் வட்டங்களிலுள்ள கொல்லி மலையிலும், போத மலையிலும், போத மலைக்கும் ஜெருகுமலைக்கும் இடைப்பட்ட பள்ளத்தாக்கிலும், பால மலையிலும், பருகூர் மலையிலும், காளி மலையிலும் வாழ்கின்றனர். கொல்லி மலையில் இவர்கள் நான்கு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களில் முதல் இரண்டு பிரிவினரான முந்நாட்டு மலையாளிகளும், நானாட்டு மலையாளிகளும் முறையே நாமக்கல் வட்டத்தில் உள்ள சேலூர், வேலப்பூர் என்ற இடங்களில் பெரும்பாலும் வாழ்கின்றனர். மற்ற இரண்டு பிரிவினரான அஞ்சூர் (ஐந்து ஊர்) மலையாளிகளும், மூனூர் (மூன்று ஊர்) மலையாளிகளும் ஆத்தூர் வட்டத்திலே வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில், திருப்புலி, எடப்புலி, பிறகரை, சித்தூர் நாடுகளில் 7000 பேர் வாழ்கின்றனர். மூனூர் மலையாளிகள் குண்டுனி, அலத்தூர், பலாப்பாடி நாடுகளில் 1500 பேர் வாழ்கின்றனர். அஞ்சூர் மலையாளிகள் பயில் நாட்டைச் சேர்ந்த ‘பெரிய பட்டக்காரனின்’ ஆணைக்கு அடங்கியவர்கள். இப் பட்டக்காரன் பதவி ஒரே குடியில் தலைமுறையாக (Heriditory) வருவது. ஆனால் அரசன் என்று அவன் அழைக்கப்படுவதில்லை. அரசனுக்குரிய அங்கங்களும் அவனுக்குக் கிடையாது.

பல சிற்றூர்கள் சேர்ந்து ஒரு நாடு ஆகும். ஒவ்வொரு ஐந்து ஊர்களும் சேர்ந்து ‘ஊர்க் கவுண்டன்’ என்ற ஒருவனைத் தேர்ந்தெடுக்கும். ஒவ்வொரு ஊரிலும் வாழும்படியான ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு காரியக்காரன் உண்டு. இவனும் தேர்ந்தெடுக்கப்படுபவனே. ஏதாவது ஒரு ஊரில் சாதிச் சண்டை ஏற்பட்டால், ஊர்க் கவுண்டன் சண்டை ஏற்பட்ட ஊரிலுள்ள எல்லாக் காரியக்காரரையும் அழைத்துப் பேசித் தீர்த்து வைப்பது வழக்கம். அவ்வழக்கில் சம்பந்தப்பட்டோர் மேல் வழக் (Appeal) காட விரும்பினுல், பயில் நாட்டுப் பட்டக்காரனிடம் செல்ல வேண்டும். அப்பட்டக்காரன் அவ் வழக்குச் சம்பந்தப்பட்ட ஊரைச் சேர்ந்த ஊர்க் கவுண்டனையும், பயில் நாட்டு ஊர்க் கவுண்டனையும் கூட்டிவைத்துப் பேசித் தீர்ப்பது வழக்கம். எல்லாக் காரியக்காரர்களும், இவ்வழக்கு மன்றத்துக்கு வர வேண்டுமென்பதில்லை. ஆனால் குறைந்தது மூன்று பேராவது இருந்தால்தான் வழக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மூனூர் மலையாளிகளிடையே வழக்கு ஏற்பட்டால், அவ்விடத்தைச் சேர்ந்த ஊர்க் கவுண்டன் வழக்கின் தன்மையை வேலப்பூரிலிருக்கும் நானாட்டு அரசருக்குத் தெரிவிப்பது வழக்கம். அவ்வரசர் வழங்கும் தீர்ப்பே முடிவானதாகும். போதமலையிலும் அதற்கடுத்தாற்போலுள்ள பள்ளத்தாக்கிலும் வாழும்படியான கொல்லி மலையாளிகள் கீழூரிலிருக்கும் ‘நாட்டான்’ என்ற தலைவனின் ஆணைக்குட்பட்டவர்கள். பவானி வட்டத்திலிருக்கும் கொல்லி மலையாளிகளும் இவன் ஆணைக்குட்பட்டவர்களே. ஆனால் இவனுடைய தீர்ப்பில் திருப்தியடையாதவர்கள் பயில் நாட்டுப் பெரிய பட்டக்காரனிடம் நீதி கேட்டுச் செல்வதுண்டு. வேலப்பூர் அரசன் இளைஞனாக இருந்தால், அவன் தாயாகிய இராணி மந்திரியின் துணைகொண்டு ஆட்சி செலுத்துவதுண்டு.

பச்சை மலையாளிகள் மூன்று நாட்டினராகப் பிரிந்து வாழ்கின்றனர். முதல் இரு நாடுகளான வெண்ணாடும், தென்புற நாடும் திருச்சி மாவட்ட எல்லையில் உள்ளன. மூன்றாவது நாடான அத்தி நாடு, ஆத்தூர் வட்டத்திலுள்ள பச்சை மலையில் உள்ளது. பச்சை மலையாளிகள் இன்னும் ஆத்தூர் வட்டத்திற்கப்பால், தும்பல் பள்ளத்தாக்கிலும், வசிட்ட நதிப் பள்ளத்தாக்கின் உச்சியிலும், அரனூத்து மலையிலும், மஞ்சவாடிக் கணவாயிலும், சேர்வராயன் மலையின் மேற்கு அடிவாரத்திலுள்ள கஞ்சேரி, பாலமேடு என்னும் சிற்றூர்களிலும், தொப்பூர் ஆற்றுக்கரையிலுள்ள வேப்பாடியிலும் வாழ்கின்றனர்.

சாதி நிர்வாகத்திற்காக இவர்கள் பலதுணை நாடுகளாகவும் கரை அல்லது தமுக்குகளாகவும் பிரிந்து வாழ்கின்றனர். எடுத்துக்காட்டாகப் பச்சை மலையிலுள்ள நல்லியக் கவுண்டன் நாடு, காளத்திக் கவுண்டன் நாடு, பச்சை மலைக்கு மேற்கிலுள்ள மண்மலை நாடு, பைத்தூர் நாடு என்பன குறிப்பிடத்தக்கவை. தும்பல் பள்ளத்தாக்கில் உள்ள மாமஞ்சியிலும், அரனூத்து மலையிலுள்ள ஆலடிப்பட்டியிலும், பேளூருக்கு வடக்கில் வசிட்ட நதிப் பள்ளத்தாக்கில் உள்ள கீரிப்பட்டியிலும், கரமண்டையிலும், சேர்வராயன் மலைச் சரிவுகளிலுள்ள ஊர்களிலும், மஞ்சவாடிக் கணவாய்க்கு வடக்கிலுள்ள தொம்பக்கள்ளனூர், பட்டுக்குணம் பட்டி என்ற ஊர்களிலும் நாட்டான் என்பவனைத் தங்கள் தலைவனாய்ப் பச்சை மலையாளிகள் தேர்ந்தெடுக்கின்றனர். ஒவ்வொரு துணை நாடும் பல பட்டிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பட்டியும், அவ்வூர்க் கவுண்டனின் ஆணைக்குட்பட்டிருக்கும். அவ்வூர்க் கவுண்டனுக்கு மூப்பன் என்று பெயர். அவனுக்குத் துணையாகக் கங்காணி என்ற தலைவனும் உண்டு. ஒவ்வொரு துணை நாட்டிற்கும் ஒரு தலைவனுண்டு. அவனை நாட்டான் என்று அழைப்பர். அவனுக்கு நாட்டுக் கவுண்டன், குட்டிக் கவுண்டன் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஒவ்வொரு நாட்டானுக்கும் துணையாகப் பல காரியக் காரர்களுண்டு. அவர்களைப் பணியில் அமர்த்தும் அதிகாரம் நாட்டானுடையது. இந் நாட்டான் ஏழு சின்னதுரைகளடங்கிய அவையின் அதிகாரத்துக்கு உட்பட்டவன். இந்த அவையின் தலைவனுக வீற்றிருப் பவன் பெரியதுரை. இவனை ராஜா என்றும் சில சமயங்களில் குறிப்பிடுவதுண்டு. இவன் வாழ்விடம் பச்சை மலையிலுள்ள சேதகம். இத் துரைமார்களுக்குப் பல பேரமைச்சர்களுண்டு. ஆனல் அவ்வமைச்சர்களின் அதிகாரம் மிகவும் குறைவுதான். இவ்வமைச்சர்கள் பச்சை மலையிலுள்ள பக்கலத்திலும், பைத்தூரிலும், கீரிப்பட்டியிலும் வாழ்கிறார்கள். பைத்தூர் அமைச்சன் பன்னிரண்டு கரை மக்களாலும், கீரிப்பட்டி அமைச்சன் ஆறு கரை மக்களாலும் ஏற்றுப் போற்றப்படுவான். பைத்தூர் அமைச்சன் பக்கலம் அமைச்சனைத் தன் ஆணைக்கடங்கியவகைக் கருதுவதுண்டு.

பெரிய மலையாளிகள் கல்வராயன் மலையிலும், சேர்வராயன் மலையிலும், சித்தேரியிலும் வாழ்கின்றனர். இவர்களைக் கல்ராயர் என்றும் கூறுவர். இவர்கள். தங்களைக் காராளர் என்ற வேறு பெயராலும் குறிப்பிடுகின்றனர். 'காராளர்' என்ற பெயர் மலையாளத்தின் மற்றொரு பெயரான 'கேரளம்' என்பதனோடு தொடர்புடையது என்று சிலர் கருதுகின்றனர். மலையாளிகளின் ஒருசில பழக்க வழக்கங்கள் கேரள மக்களின் பழக்க வழக்கங்களை ஒத்திருப்பதால் அவ்வாறு கருதுகின்றனர் போலும். காராளர் என்ற சொல்லின் ஆட்சி 'உழவர்' என்ற பொருளில் பண்டைத் தமிழ் நூல்களில் மலிந்து காணப்படுகின்றது. கம்பர் கூட, "கார் நடக்கும்படி நடக்கும் காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனின் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும்'- என்று கூறுகிறார். இப் பெரிய மலையாளிகள் கள்ளக்குரிச்சி வட்டத்தில் 22,000 பேரும், ஆத்தூர் வட்டத்தில் 12,000 பேரும் வாழ்கின்றனர். இம்மலையாளிகள் ஐந்து தலைவர்களால் பண்டை நாளில் இங்குக் குடியேற்றப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இப் பகுதிகள் ஐந்து ஜாகீர்களாகப் பிரிக்கப்பட்டு, இன்றும் அவர்கள் வழி வந்தோரால் ஆளப்படுகின்றன. இத் தலைவர்களின் உரிமை பரம்பரையானது. இந்த ஜாகீர் ஒவ்வொன்றும் பல சிறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இக் கல்ராயர்கள் சேர்வராயன் மலையிலுள்ள மலையாளிகளோடு மணத்தொடர்பு கொள்வதில்லை. தொலைவும், வகுப்புப் பிரிவும் காரணங்களாக இருக்கலாம். சேர்வராயன் மலையிலுள்ள பெரிய மலையாளிகள் மூன்று பிரிவினர்களாக வாழ்கின்றனர். சேல நாடு, மொக நாடு, முத்து நாடு என்பவையே அப் பிரிவுகள். ஒவ்வொரு பிரிவும் ஒரு பட்டக்காரனின் ஆணைக்கு உட்பட்டது. ஒவ்வொரு பிரிவும் ஒன்பது பட்டிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பட்டியும் மூப்பன் என்ற தலைவனின் ஆணைக்கு அடங்கியது. ஒவ்வொரு மூப்பனும் அப்பட்டியிலுள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறான், ஒவ்வொரு பட்டக்காரனுக்கும் துணையாக மணியக்காரர்களும், மூப்பர்களுக்குத் துணையாகக் கங்காணிகளும் உள்ளனர். சித்தேரியிலுள்ள 'குரு' சேர்வராயன் மலையிலுள்ள மூன்று நாட்டுப் பெரிய மலையாளிகளாலும் போற்றி மதிக்கப்படுகிறார்.

பார்ப்பனப் புரோகிதர்கள் மலையாளிகளுக்குக் கிடையாது. மேற்கூறிய சாதித் தலைவர்களே மற்ற பொறுப்புக்களோடு, திருமணம் முதலிய சடங்குகளையும் முன்னின்று நடத்துகின்றனர். ஆனால் பவானி வட்டத்திலுள்ள கொல்லி மலையாளிகள் மட்டும் ஓர் அய்யங்காரைக் குருவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். பட்டக்காரர்களும், துரைகளும் மலையாளிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். இவர்களைக் காண்போர் எதிரே குப்புற விழுந்து வணங்குவர்.

மலையாளிகளும் கேரளத்தாரும் :

இம் மலையாளிகளைப் பற்றிய கதை காஞ்சீபுரத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலும், இவர்களுடைய பழக்க வழக்கங்கள் மலையாள நாட்டு மக்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆகையினால் இவர்கள் மலையாளத்திலிருந்து இம் மலைகளில் வந்து குடியேறியவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் இவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள 'கல்ராயன் கல்வெட்டு'களில் இக் குடியேற்றத்தைப் பற்றி எச் செய்தியும் காணப்படவில்லை. இவர்களுடைய பழக்க வழக்கங்களில் ஒருசில, கேரளத்தாரின் பழக்க வழக்கங்களோடு ஒத்திருப்பதால் இவர்கள் கேரளத்தாரே என்று நாம் கூறிவிட முடியாது. அப்பழக்கங்கள் பின் வருமாறு:

(1) கொல்லி மலையிலுள்ள சிறுவர்களும் சிறுமிகளும் முன் குடுமி வைத்திருப்பர். தலையின் மற்ற பாகங்களை மொட்டையடித்து விடுவர். மலையாளக் கடற்கரையில் வாழும் இந்துக்கள் இப் பழக்கத்தைப் பெரும் அளவு கடைப்பிடித்து வருகின்றனர். கொல்லி மலைச் சிறுவர்கள் பன்னிரண்டாம் வயது முடிந்த பின், முன் குடுமியை எடுத்துவிட்டுத் தமிழகத்தின் கீழ்க்கரையில் வாழும் மக்களைப்போல் குடுமி வைத்துக் கொள்கின்றனர். பருவம் எய்தியதும் கொல்லிச் சிறுமியரும் முன் குடுமியை நீக்கிவிட்டுத் தலை முழுதும் நீண்ட கூந்தல் வளர்க்கின்றனர். பச்சை மலையாளிகளிடமும் இப் பழக்கம் உண்டு . ஆனால் சிறுமியர் பருவம் எய்தும் வரையிலும் முன் குடுமியை நீக்க அவர்கள் காத்திருப்பதில்லை.

(2) கொல்லி மலையிலுள்ள பெண்கள் வெண்மையான பருத்தி ஆடையை, மார்பை மூடி அக்குளில் படியுமாறு சுற்றிக் கட்டுகின்றனர். அவ்வாடை முழு உடலையும் மறைத்துக்கொண்டிரா விட்டாலும் முழந்தாளுக்கும் சற்றுக் கீழே தொங்கிக் கொண்டிருக்கும். இப் பழக்கத்தைக் கேரளத்தில் காணலாம். பச்சை மலையாளப் பெண்களும், பெரிய மலையாளப் பெண்களும் சமவெளியில் வாழ்பவர்களைப் போலவே வண்ணப் புடவை யணிகின்றனர்.

(3) கொல்லி மலைப் பெண்கள் தங்கள் ஆடையினுள்ளே 3 முழ நீளமும் 1 அடி அகலமுமுள்ள வெண்மையான துணி (Loin - cloth) ஒன்றையும் அணிகின்றனர். அதை எந்தப் பயன் கருதியும் அணிவதில்லை. அழகுக்காகவே அணிகின்றனர். கேரள நாட்டில் வாழும் பெண்களுக்கு இத்துணி மிகவும் எடுப்பான தோற்றத்தை அளிக்கிறது. கொல்லிமலைப் பெண்களைப்போலவே இத்துணியை மற்ற இருசாதி மலையாளப் பெண்களும் தங்கள் புடவைகளுக்குள் அணிகின்றனர், திருவாளர் கிருஷ்ணசாமி ஐயங்கார், கேரளத்திலுள்ள. இப்பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இரண்டு துண்டுத் துணிகள் எல்லாப் பெண்களாலும் பண்டை நாளில் பயன்படுத்தப்பட்டு வந்தன, ஆனால் இப் பழக்கம் எப்பொழுது மாறியது என்று தெளிவாகத் தெரியவில்லை. சமஸ்கிருத இலக்கியங்களில் இப் பழக்கத்தைப் பற்றி நான் பல தடவை படித்திருப்பதால் இது ஆரியப் பண்பாடு என்று கருதுகிறேன். ஆனால் இப் பழக்கம் பரவலாகக் கேரளக் கடற்கரையில் காணப் படுகிறது“ என்று கூறுகிறார்.

(4) பெரிய மலையாளிகளும் பச்சை மலையாளிகளும் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்தை அனுமதிக் கின்றனர். ஆனால் கொல்லி மலையாளிகள் இதை அறவே வெறுக்கின்றனர். பச்சை குத்திக் கொண்ட யாரையும் தங்கள் வீட்டிற்குள் இவர்கள் நுழைய விடுவதில்லை. இதனுடைய உண்மையான காரணம் என்னவென்று புரியவில்லை. கொல்லி மலையாளிகளைப் போலவே கேரளக் கடற்கரையில் வாழ்வோரும் பச்சை குத்திக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்வதில்லை. பச்சை மலையாளிகளின் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கம், நடுவணணன் திருமணம் செய்து கொண்ட வேடச்சியினிடமிருந்து வழி வழியாக வந்ததாகக் கூறுகின்றனர்.

(5) பூப்பெய்திய மலையாளப் பெண், ஒரு திங்கள் அளவும் தனியிடத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிருள். கேரள நாட்டிலும் இவ்வாறே. சமவெளியில் வாழும் மக்கள் இவ்வாறு நீண்ட நாள் ஒதுக்கி வைப்பதில்லை. இப்பொழுது இந் நாட்களின் அளவு மலையாளிகளிடையே குறைந்து வருகிறது.

(6) கொல்லிமலைப் பெண்கள் தங்கத்தால் செய்த வட்ட வடிவமான ஒரு நகையைக் காதில் அணிகின்ற னர். வேறு உலோகத்தால் செய்து, தங்க முலாம் பூசியும் அணிந்து கொள்கின்றனர். இதன் விட்டம் 1 அங்குலமோ அல்லது 1; அங்குலமோ இருக்கும். இதை அணிந்து கொள்வதற்காகக் காதில் பெரிய துளை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந் நகை கேரளத்தில் வாழும் நாயர் மகளிர் அணியும் தோடாக்களை உருவத்தில் ஒத்திருக்கிறது.

சமவெளியிலுள்ள மக்களிலிருந்து மலையாளிகளைத் தனியாகப் பிரிக்கும் இப் பழக்க வழக்கங்கள், அவர்களுடைய முன்னோர்களான கேரளத்தாரிடமிருந்து பெறப்பட்டவையே என்று எல்லாரும் கருதுகின்றனர். மற்ற மலையாளிகளைவிடக் கொல்லி மலையாளிகள் தங்களுடைய பரம்பரைப் பண்பாடுகளினின்றும் மாறு படாதவர்களாகவே காணப்படுகின்றனர். மேற்கூறிய பழக்க வழக்கங்களைவிட, இவர்கள் கடைப்பிடித்து வரும் மண முறைகளும், பல ஆடவர்களை ஒரு பெண் கணவராக ஏற்றுக்கொள்ளும் முறை (Polyandry) யும், கேரள மக்களோடு இவர்களை நெருங்கிய தொடர்புடையவர்களாக ஆக்குகின்றன. ஏனென்றால் பல கணவர் கொள்ளும் இம்முறை நாயர்களிடமும், அவர்களைச் சார்ந்த இனத்தாரிடமும் இன்றும் அருகிக் காணப்படுகின்றது.

மேனரீகம் :

மேனரீகம் என்பது தமிழ் நாட்டிலும், ஆந்திர நாட்டிலும் பரவலாகக் காணப்படும் ஒரு வகை மண முறை. ஓர் இளைஞனுக்கு, அவனுடைய தாய் மாமன் மகளே ஏற்ற மணப் பெண்ணாகக் கருதப்படுகிறாள். தாய் மாமன் வீட்டில் பெண்ணில்லையென்றால் அத்தை மகள் மணத்திற்கு உரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். சில சாதியாரிடையே உடன்பிறந்த தமக்கையின் மகளை மணக்கும் உரிமை போற்றப்படுகிறது. இம் முறைகளின்படி மணக்கும் பெண்ணை 'உரிமைப் பெண்' என்பர். அதுவும் நிறைந்த செல்வத்தோடும் நிலபுலன்களோடும்வந்து கணவன் பொருளாதாரத்தை உயர்த்துபவளாக இருந்தால் அவளைப் 'பெருமைப் பெண்' என்றும் கூறுவர். இம் முறைகளை மீறிப், பெண் கொடுக்கவோ அல்லது பெண் எடுக்கவோ யார் மறுத்தாலும் அச் செயல் பெருங் குற்றமாகக் கருதப்படும். இக் குற்றத்திற்காகச் சாதியை விட்டுக்கூட விலக்கி விடுவதுண்டு.

மலையாளிகள் இம் மேனரீக முறையை மிகவும் தீவிரமாகக் கடைப் பிடிக்கின்றனர். சில சமயங்களில் இம் முறை விபரீதமாகக்கூடத் தோன்றும். உரிமைப் பெண்ணானவள் குல வழக்கப்படி அவளுக்கென்று குறிப்பிடப்பட்ட மணமகனைவிட மிகவும் வயதில் முதிர்ந்தவளாக இருப்பதும் உண்டு. நான்கைந்து வயதுடைய இளைஞர்களுக்குப் பருவ மெய்திய மங்கையரைத் திருமணம் செய்து வைப்பார்கள். அப்போது மணமகனுடைய தந்தை, தானே பொறுப்பேற்றுக் கொண்டு வம்சவிருத்தி செய்வதுண்டு. தன் மகன் வயதுக்கு வந்ததும் அப் பொறுப்பை அவனிடம் விட்டு விடுவது தந்தையின் கடமை. பொறுப்பேற்றுக் கொண்ட மகன், தன் தந்தையின் வழியைத் தானும் கடைப் பிடிப்பான். ஓர் இளம் மணமகனுக்குத் தந்தை இல்லை என்றாலோ, அல்லது தந்தை இருந்தும் அவன் மருமகளின்பால் அக்கறை கொள்ளாதவனாக இருந்தாலோ, தந்தையின் உடன்பிறந்தவனோ அல்லது நெருங்கிய உறவினன் ஒருவனோ இப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள அழைக்கப்படுவது வழக்கம். இவ் வழக்கத்தைப்பற்றி மலையாளிகள் இப்பொழுது குறைவு பட எண்ணுகின்றனர். இதை ஓரளவு எதிர்த்தும் வருகின்றனர். முன் நாட்களில் இது பெரு வழக்காக இவர்களிடம் பரவியிருந்தது.

திருமணம் :

மலையாளிகளின் திருமணம் சமவெளியிலுள்ளோரின் திருமணத்தினின்றும் சிறிதே மாறுபடுகிறது. திருமணத்திற்குமுன் 'வெற்றிலை பாக்குப் பிடித்தல்' என்ற ஒரு பழக்கமுண்டு. இதை வடமொழியில் 'நிச்சயதார்த்தம்' என்பர். திருமண ஒப்பந்தமே இச் சடங்கு. ஊர்க் கவுண்டன் முன்னிலையில் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும்கூடி இவ் வொப்பந்தத்தை முடிப்பர். இரு வீட்டாரும் வெவ்வேறு ஊர்களைச் சார்ந்தவராக இருப்பின் அவ்விரண்டு ஊர்களின் ஊர்க் கவுண்டர்களும் அவ்விடத்தில்கூடி இதை நடத்தி வைப்பர். பட்டக்காரனின் அனுமதி பெற்றே இதைச் செய்ய வேண்டும்.

மணப் பெண்ணுக்கு விலையாகப் பரிசம் வாங்கும் வழக்கம் இவர்களிடம் உண்டு. அது அவரவர்களின் தகுதிக்கேற்பக் குறைத்தோ கூட்டியோ பெறப்படும், பிள்ளை வீட்டார் பணமாகவும், பொருள்களாகவும் இதை அளிப்பர். ஊத்தங்கரை வட்டத்திலுள்ள பச்சை மலையாளிகளின் பெண்ணுக்குப் பரிசமாக நான்கு கண்டகம் தானியமும், நான்கு பகோடா ( ரூ. 14)க்களும், கன்றோடு ஒரு பசுவும் கொடுக்க வேண்டும். மற்ற இடங்களிலுள்ள மலையாளிகள் ரூ. 10-லிருந்து ரூ. 50 வரை பரிசம் கொடுக்கின்றனர். மணச் சடங்குகளை நடத்தி வைக்கும் ஊர்க்கவுண்டர் முதலியவர்களுக்குக் கட்டணமாக ரூ. 10-8-0 அளிக்க வேண்டும். ஆனால் சில ஏழைகளால் இப் பூராத் தொகையையும் கொடுக்க முடியாது. அப்போது இத் தொகையின் ஒரு பகுதியை மட்டும் கொடுப்பர். மீதியைப் பட்டக்காரன் கொடுத்து விடுவான். ஆனால் பல தவணைகளில் பட்டக்காரனுக்கு அப் பணத்தைக் கொடுத்துவிட வேண்டும். இக்கடன் ஆண்டுக் கணக்காக நீண்டு செல்வதுமுண்டு. பெற்றோர் தம் திருமணத்தின்போது பட்ட இக் கடனை, மக்கள் தோன்றிப் பட்டக்காரனுக்குத் தீர்ப்பதுண்டாம். ஒரு கிழவன் குமரியைத் திருமணம் செய்து கொள்ள நேரிட்டால், நிறையப் பரிசம் கொடுக்க வேண்டும்.

பச்சை மலையில் வாழ்வோர் மணமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை யன்று நலுங்கு வைப்பர். புதன் கிழமையன்று இரு வீட்டின் முன்னும் பந்தல்கள் போடப்படும். வியாழக்கிழமை பெண் வீட்டில் திரு மணம் நடைபெறும். பொதுவாக மலையாளிகளின் திருமணம் மாப்பிள்ளை வீட்டிலேயே நடைபெறும். பெண் வீட்டிலும், மாப்பிள்ளை வீட்டிலும் மூன்று புதுப் பாத்திரங்களை ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கலசம்போல் வைத்து, புதன்கிழமை இரவு விநாயகர் கோயிலுக்கு எடுத்துச் சென்று வணங்குவர். அப்போது தாம்பூலம் எல்லாருக்கும் வழங்கப்பட வேண்டும். இம் மரியாதை மிகவும் கண்டிப்போடு எதிர்பார்க்கப்படுகிறது. இத் தாம்பூலத்தில் பெரிய துரை ஐந்து பங்கும், மற்ற துரைகள் ஒவ்வொருவரும் நான்கு பங்கும், மந்திரிகள் ஒவ்வொருவரும் மூன்று பங்கும், குட்ட கவுண்டன் இரண்டு பங்கும், மூப்பன் ஒரு பங்கும் பெறுவது வழக்கம். இச் சடங்கு முடிந்ததும் மணமகன் மணமகளுக்குக் கூறை பரிசளிப்பது வழக்கம். இது கருப்புக் கரையிட்ட வெள்ளைச் சேலையாகவோ அல்லது சிவப்புச் சேலையாகவோ இருக்கும். இதனுடைய நீளம் 12 முழத்திலிருந்து 17 முழம் உடையதாகவும், அகலம் இரண்டு அல்லது மூன்று முழம் உடையதாகவும் இருக்கும், ஆனால் பெரிய மலையாளிகள் மட்டும் 3 அல்லது 4 முழமுள்ள கூறை அளிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. கொல்லி மலையில் மணப் பெண் விடியற் காலத்தில் ஏழு மணிக்கு முன்பாக மணமகன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். திருமணச் சடங்குகள் அங்கு நடைபெறும்.

மணமகன் தாலியை மணமகளின் கழுத்தில் வைத்ததும், பின்னால் நின்று கொண்டிருக்கும் ஊர்க் கவுண்டன் அதைக் கட்டுவது வழக்கம். பிறகு மணமகனின் கையைப் பெண்ணின் கையில் வைத்து, ஊர்க் கவுண்டன் தாரை வார்த்துக் கொடுப்பான். ஆனால் பெரிய மலையாளிகளின் வழக்கம் இதனின்றும் மாறுபட்டது. 'கணியான்' என்பவன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவான். மணமகளின் கலவிக்குக் கணியான் முதல் உரிமை பெற்றவனாகக் கருதப்படுகிறான். (கேரளத்தில் தடக்கும் தாலி கட்டுக் கலியாணங்களில் 'மணவாளன்' என்பவன் 'கணியான்' செய்யும் வேலைகளைச் செய்கிறான்). இப் பழக்கம் மற்ற மலையாளிகளால் முறை கெட்டதாகக் கருதப்படுகிறது.


மணவிலக்கும் மறுமணமும் :

பெரிய மலையாளிகள் மணவிலக்கு {divorce) முறையை அனுமதிப்பதில்லை. ஆனால் கொல்லி மலையாளிகளிடம் மணவிலக்குச் செய்து. கொள்ளும் பழக்கம் உண்டு. ஆனால் மணவிலக்கின் போது எல்லாக் குழந்தைகளையும் (வேறு கணவனுக்குப் பிறந்தவைகளாய் இருந்தாலும் சரி) கணவனிடம் ஒப்படைத்து விடவேண்டும்.

பச்சை மலையாளிகள் ரூ 25 ஒறுப்புத் தொகை (Fine) யாகப் பெற்றுக் கொண்டு மணவிலக்கு அளிப்பர். இது சமவெளியிலிருந்து கற்றுக் கொண்ட பழக்கம். ஒரு பச்சை மலையாளி மணவிலக்குப் பெறவிரும்பினால் அதைக் குருவின் முன்னிலையில் கூற வேண்டும். மண விலக்கிற்கு அறிகுறியாக ஒரு வைக்கோல் துண்டையோ அல்லது மரத்துண்டையோ, கணவன் மனைவியிடம் கொடுப்பான். மணவிலக்குப் பெற்ற பெண் முன்னாள் கணவன் இறந்த பிறகே மறுமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறாள். கைம்பெண் மணம் {Widow remarriage) எல்லா மலையாளிகளிடையிலேயும் காணப்படுகிறது. கொல்லி மலையாளிகள், கணவனின் உடன் பிறந்தானை மணக்க எந்தக் கைம்பெண்ணையும் அனுமதிப்பதில்லை. பச்சை மலையாளிகளிடம் இக் கட்டுப்பாடு கிடையாது.

கொல்லி மலையாளிகளிடையே கைம்பெண் மணம் நடந்தால் மணப் பெண்ணும் மணமகனும் எதிரெதிரில் முழந்தாளிட்டு உட்கார்ந்து கொள்ள வேண்டும். நடுவில் ஒரு திரையிடப்படும். மணமகன் தாலியைத் திரையினடியில் கொண்டுவந்து பெண்ணின் கழுத்தில் வைப்பான். ஊர்க்கவுண்டன் தாலியைக் கட்டிய பிறகுதான் மணமகன் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியும். மறுமணத்தின் போது, கைம் பெண்ணானவள் தன் முதல் கணவனுக்குப் பிறந்த குழந்தைகளை, அவன் உடன் பிறந்தாரிடமோ அல்லது நெருங்கிய உறவினரிடமோ ஒப்படைத்துவிட வேண்டும். தந்தையின் சொத்துக்களெல்லாம் அக் குழந்தைகளுக்குப் பட்டா செய்யப்படும். அல்லது முன் கூட்டியே பட்டா செய்யப்பட்டிருக்கும். அச் சொத்துக்களை இரண்டாம் கணவன் அனுபவிப்பதைத் தடுக்கவே இம் முறையைக் கையாளுகின்றனர்.

பூப்பெய்தல் :

ஒரு பெண் பூப்பெய்தியதும், அவளை வீட்டிலிருந்து விலக்கித் தனியிடத்தில் வைப்பது மலையாளிகளின் வழக்கம். 30 நாட்கள் விலக்கு நாட்களாகக் (Pollutionperiod) கருதப்படும். ஆனால் சமவெளியிலுள்ள மக்களைப் பார்த்து இவர்களும் இப்போது அந்நாட்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர். பச்சை மலையாளிகள் ஒரு பெண் பூப்பெய்தியதை அறிந்ததும் ஊருக்கு வெளியிலுள்ள ஒரு குடிசையில் ஐந்து நாட்கள் வைத்திருப்பர். ஆறாம் நாள் அப் பெண்ணை நன்னீராட்டி வீட்டிற்கு அழைத்து வருவர். அடுத்த முப்பது நாட்கள் விலக்கு நாட்களாகக் கருதப்படும். அந்நாட்கள் கழியும் வரையிலும் ஊர் மக்கள் யாரும் அவ் வீட்டிற்குள் செல்ல மாட்டார்கள். அந்த முப்பது நாட்களில் பெண்ணானவள் நாள் தோறும் தலையில் நீர்பெய்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை வீட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும். ஊத்தங்கரையிலுள்ள பச்சை மலையாளிகள் 12 நாள் விலக்கிவைக்கின்றனர். கொல்லி மலையாளிகளில் சிலர் 30 நாட்களும், வேறு சிலர் 15 நாட்களும் விலக்கு நாட்களாகக் கொள்கின்றனர். பெரிய மலையாளிகள் இடத்திற்குத் தகுந்தாற்போல் 7 நாட்களிலிருந்து 11 நாட்கள் வரை விலக்கு நாட்களாகக் கொள்கின்றனர். விலக்கு நாட்கள் முடிந்ததும், ஒரு பார்ப்பனப் புரோகிதரை அழைத்து வந்து வீட்டைத் தூய்மைப்படுத்துவர்.

மகப் பேறு :

குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாளிலோ அல்லது பதினைந்தாம் நாளிலோ அல்லது பதினாறாம் நாளிலோ வீட்டைத் தூய்மைப் படுத்தித் தாயை வீட்டுக் கழைப்பர். ஆனால் பச்சை மலையாளிகள் முப்பதாம் நாள் வரையில் விலக்கு நாட்களாகக் கருதுவர். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதற்கென்று, குறிப்பிட்ட எந்தச் சடங்கும் கிடையாது. எப்பொழுது பெயர் சூட்டுவது என்ற வரையறையும் இல்லை. கொல்லி மலையாளிகள் குழந்தை பிறந்த பத்தாம் நாளிலோ அல்லது மூன்றாம் திங்களிலோ பெயரிடுவர். பச்சை மலையிலுள்ளவர்கள் முதல் ஆண்டின் இறுதியிலும், சேர்வராயன் மலையிலுள்ளவர்கள் மூன்றாம் நாளிலும் பெயரிடுவர். பெயரிடுவதற்கு முன்பாக, எந்தப் பெயர்வைப்பது யென்பது பற்றி அவ்வூரிலுள்ள பூசாரியைக் கலந்து கேட்பர். சில சடங்குகட்குப் பிறகு பூசாரி மருள் கொண்டு ஆடி, அக்குழந்தைக்கு இடவேண்டிய பெயரைக் கூறுவான். எப்பொழுதும் கடவுளின் பெயர்களையே குழந்தைகட்குப் பெரும்பாலும் இடுவர். ஆணாக இருந்தால் கொங்கன், வடமன், சீரங்கன், பிடவன், காளி, அறப்பளி என்றும், பெண்ணாக இருந்தால் கொங்காயி, வடமி, சீரங்கி, பிடாரி என்றும் பெயரிடுவர். கரியன், வெள்ளையன், குட்டையன், சடையன், பெரிய பையன், சின்னப் பையன் எனக் காரணப் பெயர்களும் இடுவதுண்டு.

ஆடை அணிகள் :

மலையாளிப் பெண்கள் இரவிக்கை அணிவதில்லை. வீட்டிலிருக்கும்போதும், வயல்களில் வேலை செய்யும் போதும் உடலின் மேற்பகுதி திறந்தே இருக்கும். வேற்றார் முன்னிலையில் வரும்போதும், சந்தைக்குச் செல்லும்போதும் ஆடையின் முன் தானையைத் தளர்த்தி மார்பைப் போர்த்து, இடது தோளின் மேல் கொணர்ந்து முதுகுப்புறம் தொங்க விடுவார்கள். பச்சை மலையாளிகள் எப்பொழுதும் வண்ண ஆடைகளையே விரும்புவர். பச்சை மலையாளிப் பெண்கள் திருமணத்தின்போது மட்டும் வெள்ளை நிறமான கூறை (புத்தாடை) அணிவர். மற்ற நேரங்களில் சிகப்பு அல்லது கருப்பு ஆடைகளையே அணிவர். ஆனால் பளிச் சென்றிருக்கும் மஞ்சள், ஆரஞ்சு, பச்சை நிறப் புடவைகளின்மீது அவர்கட்கு விருப்பமதிகம். ஆண்கள் அணியும் ஆடை கோவணம் ஒன்றுதான். ஆனால் அதில் கூட வண்ணத்தை விரும்புவர். கொல்லி மலையாளிப் பெண்கள் இடது பக்கமும். பச்சை மலையாளிப் பெண்கள் வலது பக்கமும் மூக்குக் குத்திக் கொள்வர். பெரிய மலையாளிப் பெண்கள் மூக்கே குத்திக் கொள்வதில்லை. பச்சை நிறமானதும், இரத்தச் சிவப்பு நிறமானதுமான கண்ணாடிகள் பதித்த காது வளையங்களை அணிவர்.

இறுதிச் சடங்கு :

மலையாளிகள் பொதுவாக, பிணங்களைப் புதைக்கும் பழக்க முடையவர்கள். ஆனால் காலரா, தொழுநோய் முதலியவற்றால் பீடிக்கப்பட்டு இறந்தவர்களுடைய பிணங்களுக்குப் 'பால் தெளிக்கும் சடங்கு' கிடையாது. மற்றச் சடங்குகளெல்லாம் சமவெளியிலுள்ளவற்றைப் போலவே இருக்கின்றன. பிணத்தைத் தூக்கிச் செல்லும் பாடையை அவர்களும் 'தேர்' என்றே கூறுகின்றனர். தீட்டு நாட்கள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன. பச்சை மலையில் இத்தீட்டு நாட்கள் ஒரு திங்கள் வரை நீடிக்கும். ஊத்தங்கரை வட்டத்திலுள்ள பச்சை மலையாளிகள் 10 நாட்களும், பெரிய மலையாளிகள் 12 அல்லது 15 நாட்களும், கொல்லி மலையாளிகள் 3 நாட்களும் தீட்டாகக் கருதுவர். இறந்தவர்களுடைய ஆவி சில நாட்கள் வீட்டைச் சுற்றி அலையும் என்று கருதுகிறார்கள். அதைத் திருப்திப் படுத்துவதற்காகப் பூசாரி கூறும் முறைப்படி கோழி, ஆடு, பன்றி முதலியவற்றைப் பலியிடுவர். ஓர் இருப்பாணியையோ அல்லது முளையையோ புதைகுழியில் பிணத்தின் தலைக்கு நேராக அடித்து, அவ்வாவியை வீட்டின் பக்கம் வராமல் தடுப்பர். இறந்துபோன முன்னோரை வழிபடுவதற்காக அவர்கள் 'சிரார்த்தம்' செய்வதில்லை. ஆனால் திருமணம், மகப்பேறு, பூப்பெய்தல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போதும், விழாக் காலங்களிலும், வெள்ளிக் கிழமைகளிலும் இறந்தோருக்கு வழிபாடு செய்யும் வழக்கம் இவர்களிடம் உண்டு. இவ்வாறு வணங்கும் முன்னோர்களை 'வீட்டுத் தெய்வங்கள்' என்றும், 'பட்டவன்' என்றும் இவர்கள் கூறுகின்றனர். மலையாளிகள் தங்கள் இல்லங்களை மிகவும் புனிதமான இடங்களாகக் கருதுகின்றனர். பார்ப்பனப் புரோகிதரைக்கூட, செருப்புக் காலோடு இவர்கள் வீட்டிற்குள் அனுமதிப்பதில்லை. சமய வாழ்வு : மலையாளிகள் சிவபெருமானையும் திருமாலையும் வேறுபாடின்றி வணங்குகின்றனர். நாள்தோறும் திருநீறு அணியும் வழக்கத்தைக் கடைப் பிடிக்கின்றனர். ஆனால் சில குறிப்பிட்ட சமய வழிபாட்டின் போது மட்டும் திருமண் (நாமம்) சார்த்திக் கொள்கின்றனர். தங்களுடைய கோயில்களில் தங்கள் இனத்தாரையே அர்ச்சகர்களாக அமர்த்தியிருக்கின்றனர். மலையாளிகளின் வழிபாட்டிற்கு உரிமை பெற்ற பெருந் தெய்வம் திருமாலின் அவதாரமான கரிராமன். அவன் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இடங்களில் தலைமையானது பெரிய கல்ராயன் மலையிலிருக்கும் 'மேல் நாட்டை'ச் சார்ந்த 'கோயில் புதூர்' ஆகும். தம்மம்பட்டியிலும் கரிராமனுக்குக் கோயில் உண்டு. சேர்வராயன் மலைமீதுள்ள கரடியூரிலும் இக்கடவுளுக்குக் கோயில் எடுக்கப்பட்டுள்ளது. இது உருவத்தில் கோயில் புதூரிலிருக்கும் கோயிலைப் போன்றே உள்ளது சேர்வராயன் மலையிலுள்ளோர் அங்கு எழுந்தருளியிருக்கும் கடவுளைக் 'கரிய பெருமாள்' என்றே அழைக்கின்றனர். சேலத்திற்கு அண்மையில் ஒரு குன்றின்மேல் கரியபெருமாள் கோயில் உள்ளது, அக்குன்று 'கரியபெருமாள் மலை' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது.

கோயில் புதூரிலிருக்கும் கரிராமன் கோயிலில் பரமசிவன், பார்வதி, திருமால், இலக்குமி, விநாயகன் ஆகியோரின் படிமங்கள் உள்ளன, அவற்றோடு பன்னிரண்டு நடுகற்களும் வெண் புள்ளி சார்த்தப்பட்டு, இரண்டு வரிசைகளாக நிற்கின்றன. கோயிலின் வாயிலைச் சங்கு சக்கரங்களும், நாமமும், திருமால், இராமன் உருவங்களும், நான்கு கருடனும், நான்கு நந்தியும் அழகு செய்கின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும், அக் கோயிலில் வழிபாடு நிகழ்கின்றது. ஆண்டு தோறும் மாசி மாதத்தில் ஒரு தேர்த் திருவிழாவும் அங்கு நடைபெறுகின்றது. அக் கோயிற் பூசாரி புலால் உண்ணக் கூடாது. உயிர்ப் பலி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளக் கூடாது. புலால் உண்போரின் உடனமர்ந்து உண்ணக் கூடாது. கரி ராமன் கோயிலில் உயிர்களைப் பலியிடும் வழக்கம் எப்பொழுதும் கிடையாது. அத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டவர்கள், மூன்று நாட்கள் கடந்த பிறகுதான் கோயிலுக்குள் நுழைய வேண்டும். மலையாளி ஆண்களும், பெண்களும் அக் கோயிலுக்குச் சென்று முடி எடுக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.

கொல்லி மலைச் சரிவில் வேலப்பூர் நாட்டில் ஒரு சிவன் கோயில் உள்ளது. அங்கு எழுந்தருளியிருக் கும் இறைவன் 'அறப்பளீசுவரன்' என்று அழைக்கப் படுகிறான். மற்ற மலையாளிகள் கோயிலைப் போலல்லாமல், இங்குப் பார்ப்பனக் குருக்கள் அர்ச்சகராக அமர்த்தப்பட்டிருக்கிறார். இவ் விறைவன்மீது அம்பல வாணக் கவிராயர் என்பவர் ஒரு சதகம் பாடியுள்ளார், (சதம் என்றால் நூறு. சதகம் என்றால் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்று பொருள்படும்). அறப்பளீசுவர சதகத்திலுள்ள நூறு பாடல்களும் "அனுதினமும் மனதில் நினை தருசதுரகிரிவளர் அறப்பளீஸ்வர தேவனே“ என்ற அடிகொண்டு முடிகின்றமையால் கொல்லி மலைக்குச் 'சதுர கிரி' என்ற பெயரும் வழங்கியது போலும். 'தெண்ணீர்ப் பொன்னி திரைக் கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானை'யும் இவர்கள் பக்தியோடு வணங்கு கின்றனர்.

மலையாளிகள் வாழும் சிற்றூர்களில் உள்ள பெருமாள் கோயில்களில் திருமால் வழிபாடு பல மாறுபாடுகளோடு சிதைந்து காணப்படுகிறது. அக் கோயில்களில் நடைபெறுவது உண்மையில் திருமால் வழிபாடுதானா என ஐயுற வேண்டியிருக்கிறது. திருமால் வழிபாட்டிற்கு இன்றியமையாத பலிபீடம் (shrine) சில கோயில்களில் காணப்படுவதில்லை, பொதுவாக இக் கோயில்களில் உயிர்ப் பலி நடைபெறுவதில்லை. இங்குப் பணிபுரியும் பூசாரி (மலையாளி)யும் புலால் உண்ணாதவனாகவே இருக்கிறான்.

நாமக்கல் கொல்லி மலையிலுள்ள குகை நாட்டில் இத்தகைய கோயில் ஒன்று உள்ளது. அக் கோயிலில் வீற்றிருக்கும் இறைவனைப் 'பேய்ப் பெருமாள்' என்று அழைக்கின்றனர். இங்கு சனிக்கிழமைகளிலேயே பூசை நடைபெறுகிறது.

கொல்லி மலையாளிகள் 'அரங்கட்டப்பன்' என்ற ஒரு கடவுளையும் வழிபடுகிறார்கள். 'அரங்க சிவன்' என்ற வேறு பெயரும் அக் கடவுளுக்கு உண்டு. மலையாளிகளின் குல முதல்வரான மூன்று சகோதரர்களும் வணங்கிய குல தெய்வமே அரங்கட்டப்பன் என்று எண்ணுகின்றனர். மேலும் கரிராமனின் வேற்றவ தாரமாகவும் இக் கடவுளைக் கருதுகின்றனர். குண்டூர் நாட்டிலும் அரங்கட்டப்பன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் பார்ப்பனக் குருக்களே பணிபுரிகின்றனர். இங்கு நடைபெறும் வழிபாடு மற்ற சிவன் கோயில் வழிபாட்டினின்றும் சிறிது மாறிக் காணப்படுகிறது. முதலில் தண்ணீரிலும் பிறகு பாலிலும், மூன்றாவதாக நல்லெண்ணெயிலும் இறைவனுக்கு அபிடேகம் நடைபெறுகிறது. பிறகு புத்தாடை அணிவித்து, இறைவனின் திருமேனியில் சந்தனத்தையும், குங்குமத்தையும் பூசுகின்றனர். பிறகு தூபம் காட்டப்படுகிறது. தீபங்களையும் கொளுத்தி வைக்கின்றனர், ஒரு வாழையிலையை இறைவன் திருமுன்னால் விரித்து, அதில் பொங்கலைப் படைக்கின்றனர். வழக்கமான மந்திரங்களைக் கூறி, சூடத்தைக் கொளுத்தி வணங்குகின்றனர். உயிர்ப் பலி இங்குக் கிடையாது. பொங்கல், பால், சர்க்கரை, பழம் முதலியனவும் சிவ வழிபாட்டிற்குரிய வேறு பொருள்களுமே இங்குப் படைக்கப்படுகின்றன, அரங்க சிவனுக்கு அடிமைப் பணிபுரியும் ஒரு சிறு தெய்வமும் மலையாளிகளால் வணங்கப்படுகிறது. அக்கடவுளுக்கு 'அரங்க சேவகன்' என்று பெயர். அரங்க சேவகன் கோயிலில் பணிபுரியும் பூசாரி பார்ப்பனரல்ல; மலையாளியே. அரங்க சேவகனுக்கு ஆடு, கோழிகள் முதலில் பலியிடப்பட்டனவாக அறியப்படுகிறது. இப்பொழுது அப் பழக்கம் இல்லை.

விநாயகர் வழிபாடு சமவெளியில் நடப்பதைப் போன்றே மலையாளிகளிடையிலும் நடைபெறுகிறது. செங்குத்தான ஒரு கல்லை நட்டு, மேலே கூரையில்லாமல் இக் கோயில்கள் அமைக்கப் பெறும். சில கோயில்கள் சுற்றுச் சுவர் இல்லாமலும் அமைக்கப் பெறும். இத்தகைய கோயில்கள் சேர்வராயன் மலையிலுள்ள மேலூரிலும், காகம்பாடியிலும் உள்ளன. விநாயகர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள் திங்கட்கிழமையே. முருகன் வழிபாடும் மலையாளிகளிடையே உண்டு. பிறகரை நாட்டிலுள்ள கந்தசாமி கோயில் புகழ் பெற்றதாகும். பங்குனி உத்தரத்தின்போது, இக் கடவுளுக்கு விழா எடுக்கின்றனர். உமையின் வடிவமான காமாட்சியைப் பல இடங்களில் கோயில் கட்டி வழிபடுகின்றனர். பல இடங்களில் தருமராசர் கோயில் இருப்பதால் பாண்டவர் வழிபாடும் மலையாளிகளிடையில் இருந்திருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது.

மலையாளிகள் வணங்கும் சிறு தெய்வங்கள் (Demi Gods) கணக்கிலடங்காதவை. சக்தியின் அவதாரங்ளான காளி, பிடாரி, மாரி முதலிய தெய்வங்கட்கு எங்கு பார்த்தாலும் கோயில்கள் உள்ளன. அய்யனாருக்கும் கோயில் உண்டு. சித்திரை அல்லது வைகாசித் திங்களில் எடப்புலி நாட்டில் காளி தேவிக்குத் தேர் விழா நடத்துகின்றனர். சனிக்கிழமை, காளி தேவியின் வழிபாட்டிற்குகந்த நாளாகக் கருதப்படுகிறது. பிடாரி என்ற தெய்வம், பெரிய பிடாரி, சின்னப் பிடாரி, சொக்கப் பிடாரி, புதுப் பிடாரி, கரும் பிடாரி, காரக் காட்டுப் பிடாரி, மலுங்குப் பிடாரி எனப் பல அடை மொழிகளோடு மலையாளிகளால் அழைக்கப்படுகிறது பிடாரிக்குரிய வழிபாட்டு நாளும், ஆண்டு விழாவும் நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன. சிறு தெய்வங்களுக்கான விழாக்களில் சிறப்பானது மாரியம்மன் திருவிழாவாகும். இவ்விழா வசந்த காலத்தில் (தை, மாசி, பங்குனி) முழு நிலா நாட்களில் கொண்டாடப் படுகிறது. செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் வழிபாட்டிற்குகந்த நாட்கள். நாச்சியம்மன், பொங்கலாயி, கொங்கலாயி, பொன்னாயி என்பவை வேறு பல குறிப்பிடத்தக்க பெண் தெய்வங்கள். மேல நாச்சி, கொடைகரை நாச்சி, அரிய நாச்சி, இளைய நாச்சி, எழுகரை நாச்சி எனப் பல பெயர்களோடு நாச்சி காட்சியளிக்கிறாள். அவள் வழிபாட்டுக்குகந்த நாள் வியாழக்கிழமையாகும். வழிபடும்போது நாச்சியார் கோயிலில் நிறைந்த அமைதி நிலவல் வேண்டும். வழிபாட்டின் இறுதியில் படையல் (பிரசாதம்) எல்லாருக்கும் வழங்கப்படும். வேடர்களைக் காக்கும் குல தெய்வமாக நாச்சி கருதப்படுகிறாள். கொல்லி மலையில் இவளுக்கு நிறையக் கோயில்களுண்டு, நடுவண்ணனை மணந்த வேடச்சியிடமிருந்து, நாச்சியம்மன் வழிபாடு மலையாளிகளிடையே பரவிற்று என்பர். பொங்கலாயி, குசக்குழிப் பொங்கலாயி, மயிலாத்திப் பொங்கலாயி, தண்ணிப் பாழிப் பொங்கலாயி, வேலராயன் பொங்கலாயி, மூலைக்காட்டுப் பொங்கலாயி, பணிக்கன் காட்டுப் பொங்கலாயி, பேய்க் காட்டுப் பொங்கலாயி எனப் பல அடை மொழிகளோடு, பொங்கலாயி என்னும் சிறு தெய்வம் மலையாளிகளிடையே கோயில் கொண்டு விளங்குகிறாள்.

அய்யனார், பெரிய ஆண்டவன், ஆண்டியப்பன், நம்பியாண்டான், சடையன், வெட்டுக்காரன், மாசி மலையன், உருளையன் என வேறுபல சிறு தெய்வங்களும் உண்டு. ஆனால் கருப்பனார் வழிபாடு மலையாளிகளிடையே மிகுந்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஊரிலும் கருப்பனாருக்குக் கோயிலுண்டு. பன்றிப்பலி கருப்பனாருக்கு விருப்பமான ஒன்று. கன்னியம்மாள் என்ற பெண் தெய்வம் கருப்பனாரோடு தொடர்புபடுத்திக் கூறப்படுகிறது.

பொதுவாகச் சிறு தெய்வங்களுக்கு, முறையாகக் கட்டப்பட்ட கோயில்கள் கிடையா, திறந்த வெளியிலோ அல்லது கூரையில்லாத சுவர்களுக்கு நடுவிலோ சிறு தெய்வங்களின் உருவங்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன. குறிப்பாகக் கருப்பனார் கோயில் எல்லா இடங்களிலும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது. மலையாளிகளே இக்கோயில்களின் பூசாரிகளாக உள்ளனர். அவர்களைத் 'தாசன்' என்றும் 'ஆண்டி' என்றும் அழைக்கின்றனர். இக்கோயிற் பணி அவர்களுக்குப் பரம்பரை உரிமையுடையது. ஒரே பூசாரி பல கோயில்களிலும் பணிபுரிவதுண்டு. தலைப்பாகையும், நீண்ட முடியும் இவர்களை மற்ற மலையாளிகளினின்றும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. வாழ்நாள் முழுதுமோ அல்லது குறிப்பிட்ட சில நாட்களோ இவர்கள் புலால் உணவை ஒதுக்கி விடுகின்றனர். மலையாளிகளின் முக்கியமான பெருவிழாக்கள் பொங்கல், தீபாவளி, ஆடிப்பதினெட்டு ஆகிய மூன்றுமே. அவற்றில் பொங்கல் திருநாள் மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று மலையாளிகள் கூட்டமாகச் சேர்ந்து கொண்டு வேட்டைக்குச் (Hunting Excursion) செல்வதுண்டு . அன்று நடைபெறும் எருதாட்டம் (Bull Dance) கண்டு மகிழத்தக்கது.

வேறு சில பழக்கங்கள் :

மலையாளிகள் பொதுவாக வரகு, தினை, அரிசி ஆகியவற்றைச் சமைத்து உண்கின்றனர். பன்றி இறைச்சியும் அவர்களுடைய உணவில் முக்கிய இடம்பெறுகிறது. சக்கிமுக்கிக் கல்லை இரும்புத்துண்டால் அடித்து நெருப்புண்டாக்கும் பழக்கம் இன்னும் பச்சை மலையாளிகளிடம் நிலவி வருகிறது. ஒவ்வொரு பட்டியிலும் இருவர் அல்லது மூவரே இக்கருவியை வைத்திருக்கின்றனர். நெருப்பு உண்டாக்குவதற்குப் பயன்படும் துணைப் பொருளான பஞ்சை ஒரு தோற் பையில் பொதிந்து வைத்துள்ளனர். வண்ணான், நாவிதன், மருத்துவச்சி ஆகியோரின் பணியை அவர்களிலேயே ஒரு சிலர் மேற்கொண்டு செய்கின்றனர். முக்கியமான செய்திகளைத் துடும்பு கொட்டி எல்லாப் பட்டிகளிலும் அறிவிக்கும் வேலையை அங்குள்ள அரிசனங்கள் (பறையர்) செய்கின்றனர். வயல்களில் வேலைசெய்வதற்கும், வேட்டையில் துணை புரிவதற்கும் அரிசனங்களையே அமர்த்தியிருக்கின்றனர். கால்நடைகளில் ஏதாவதொன்று இறந்துவிட்டால், மலையாளிகள்யாரும் அதன் அருகில் கூடச் செல்லமாட்டார்கள் ; அதைத் தொடவுமாட்டார்கள். அருகிலிருக்கும் அரிசனங்களுக்குத் தெரிவித்து எடுத்துக்கொண்டு செல்லுமாறு கூறுவார்கள். ஆனால் ஏதேனும் விபத்துக்குள்ளாகி அடிபட்டுச் சாகும் நிலையிலிருக்கும் கால் நடைகளைத் தங்களிடம் கூலிவேலை செய்பவர்களுக்கு விற்றுவிடுவார்கள். அதற்கு ஈடாகச் சிறுதொகை பெற்றுக்கொள்வர். மலையாளிகளில் சிலர் சிறந்த மாட்டு வைத்தியர்களாக விளங்குகின்றனர். இவர்கள் மாட்டின் ஒடிந்த எலும்பை மிக விரைவில் கூடுமாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள், பசுமாட்டின் தோலை அவர்கள் தொடுவது கூடக் கிடையாது. உழவுத் தொழிலுக்குப் பயன்படும் பொருள்களையும் அத்தோலினால் செய்வதில்லை. இறந்துபோன பசுவின் தோலைக்கூடத் தாங்கள் உரிமையாக்கிக் கொள்ள விரும்புவதில்லை. அப்பிணத்தை எடுத்துச் செல்லும் அரிசனங்களுக்கே கொடுத்து விடுவர். மலையாளிகளும் பெண்களும் மிகுதியாகப் புகைப் பிடிக்கும் பழக்கமுடையவர்கள்.

குறிஞ்சி நிலங்களில் வாழும் இம் மலையாளிகள் பல்வேறு காரணங்களால் சமவெளியிலுள்ள மக்களோடு தொடர்பின்றி வாழ்ந்து வந்தனர். மலைபடு பொருள்களைக் கொண்டே தங்கள் இன்றியமையாத தேவைகளைத் தீர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர், முன்னேற்றத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் நம் நாட்டு அரசியலார், இவர்களுடைய முன்னேற்றத்திலும் இப்பொழுது கருத்துச் செலுத்துகின்றனர். நல்ல மலைப்பாதைகள் கொல்லி மலைமீது இப்போது அமைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புக்கான வீடுகளும், கல்விவசதிக்கான பள்ளிகளும் இப்பொழுது நிறையக் கட்டப்பட்டுள்ளன. மருந்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில திங்கள்களில் உந்து வண்டிகளும் இம்மலையின் மேல் விடப்படும். பழமையான வழக்கங்களின் பிடியிலிருந்து இவர்கள் இப்போது நீங்கி வருகின்றனர்.

4. நீலகிரி மலைகள்

பெயர்க் காரணம் :

நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி என்ற பெயர் 800 ஆண்டுகளாக வழங்குகிறது. நீலகிரிக்கு அண்மையிலுள்ள சமவெளியில் நின்று மேற்குத் தொடர்ச்சி மலைகளினூடே நிமிர்ந்து நிற்கும் இதைக் காணும்போது, நீல நிறமான படலம் இம்மலையைப் போர்த்திருப்பது போல் தோன்றும். ஆகையினாலேயே இதை நீலகிரி என்று அழைக்கின்றனர். நீலகிரி மலையில் நீல நிறமான (Violet) ஒரு பூ எங்கும் நிறைந்து மலர்ந்திருக்கிறது. அம்மலரினாலேயே நீல நிறமான படலம் தோன்றுவதாகக் கூறுகின்றனர். அந்நீலப்பூ நீலகிரி மலையின் வெளிப்புறத்தில் பூப்பதில்லை. மலையின் நடுவிலுள்ள பீட பூமிகளிலேயே பூக்கிறது. ஆகையினால் மலையைச் சுற்றி ஏற்படும் நீல நிறப்படலம் அம்மலர்களால் ஏற்பட்டதல்ல என்பது தெளிவாகிறது.

அமைப்பு :

நீலகிரி மலை, மேலே மட்டமான ஒரு மேசையைப் போல் அமைந்திருக்கிறது. இதன் உயரம் எல்லாப் பகுதிகளிலும் ஏறக்குறைய ஒரே அளவுடையதாக உள்ளது. நீலகிரி மலை 35 கல் நீளமும் 20 கல் அகலமும் சராசரி 6500 அடி உயரமுமுடையது. மேற்குத் தொடர்ச்சி மலைகளும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் சேரும் இடத்தில் இது அமைந்துள்ளது. இம்மலையில் ஒரு சதுரமைல் கூடச் சமநிலத்தைக் காண முடியாது. எங்கு பார்த்தாலும் மேடும் பள்ளங்களுமே தென்படும், இது சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்துள்ளது. இம்மலையின் மேற்குச் சரிவிலும், அவுட்டர்லானி பள்ளத்தாக்கிற்கு (Ouchterlony valley) மேலும், தென்சரிவிலும், சுவர்களைப் போன்ற, நூற்றுக் - கணக்கான அடிகள் உயரமுள்ள பாறைகள் நிறைந்துள்ளன. மரங்கள்கூட வேர் ஊன்ற முடியாத அளவு அவைகள் செங்குத்தாக உள்ளன. மற்ற இடங்களில் உள்ள சரிவுகளிலெல்லாம், அடர்ந்தகாடுகள் நிறைந்துள்ளன.

நீலகிரி மலையானது நடுவில் தென்வடலாகச் செல்லும் உயர்ந்த ஒரு தொடரால் கிழக்குப் பகுதியாகவும் மேற்குப் பகுதியாகவும் பிரிக்கப்படுகிறது. அத்தொடரில் உள்ள உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா ஆகும். தொட்டபெட்டா என்றால் 'பெருமலை' என்று பொருள். இச்சிகரம் உதகமண்டலத்திற்குக் கிழக்கே அமைந்துள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 8,640 அடி. நம் நாட்டில் இமயமலைக்குத் தெற்கிலுள்ள மலைகளில், திருவாங்கூரிலுள்ள ஆனை முடி சிகரத்திற்கு (8837 அடி) அடுத்தாற்போல் உயரமானது தொட்டபெட்டா சிகரம்தான். இச் சிகரத்தின் மேல், முன்பு வானாய்வுக்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. உதகமண்டலத்திலிருந்து தொட்டபெட்டாவின் அழகைப் பூரணமாக அனுபவிக்க முடியாது. கிழக்குப் பகுதியிலோ அல்லது மேற்குப் பகுதியிலோ இருக்கும் தொலைவிலுள்ள இடங்களிலிருந்து இச் சிகரத்தைக் காணின் மிகவும் அழகாகத் தோன்றும்.

தொட்டபெட்டா மலையின் கிழக்குப் பகுதியிலும் தெற்குப் பகுதியிலும் உள்ள பீடபூமிகள் பெரும்பாலும் கூனூர் கோட்டத்திலேயே அமைந்துள்ளன. அங்கு வாழும் படகர்கள் அப்பீட பூமிகளில் பயிர்த் தொழில் செய்து வாழ்கின்றனர். இவர்கள் அங்கிருந்த காடுகளில் பெரும்பகுதியை அழித்து விட்டனர். எங்கு பார்த்தாலும் செந்நிற ஓடுகவித்த படகர்களின் குடிசைகளடங்கிய சிற்றூர்களே தோன்றும். இப்படகர்கள் முன் காலத்தில் ஓராண்டு பயிரிட்ட இடத்தில், அடுத்த ஆண்டு பயிரிடுவதில்லை. எனவே தங்கள் பயிர்த் தொழிலுக்கு வேண்டிய புதிய புதிய நிலத்திற்காகக் காடுகளின் பெரும்பகுதியை அழித்து விட்டனர். தொட்டபெட்டா சிகரத்தின் செங்குத்தான சரிவுகள், பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத காரணத்தால் படகர்களின் அழிவு வேலையினின்றும் தப்பி, நிறைந்த காடுகளைப் பெற்றுப் பேரழகோடு விளங்குகின்றன.

தொட்டபெட்டாவிற்கு மேற்கில் உள்ள பகுதிகளில் படகர் வாழ்வதில்லை. படகர்கள் வாழாத இடத்தில் பயிர்த்தொழில் இல்லை என்று சொல்லலாம். அவ்விடங்களில் தோடர்கள் வாழும் சிறு குடிசைகள் தென்படும். எங்கு பார்த்தாலும் சிறிதும் பெரிதுமான பசுமையான குன்றுகள் தென்படும். அக் குன்றுகளில் பல வண்ணங்களையுடைய மலர்கள் பூத்துக் குலுங்கும். இக்குன்றுகளுக்கு நடுவில் நீரோடைகளும் சிற்றாறுகளும் ஓடி, இவைகளைத் தனித்தனியே பிரிக்கின்றன. அவ்வோடைகளை அடுத்தாற்போல் புற்றரைகள், பரந்த இளமரக்காடுகள் நிறைந்திருக்கும். இக்காடுகளை 'ஷோலா' (Shola) என்று அழைப்பர். இடையிடையே மேலை நாட்டினருக்குச் சொந்தமான பூங்காக்கள் தென்படுகின்றன. அப்பூங்காக்களில் பசுமையான இலைகளுக்கு நடுவில் பெரிதாக மலர்ந்திருக்கும் செந்நிற ரோஜா மலர்கள் தம் தலையை அசைத்துச் சிரிக்கும்.

தொட்டபெட்டாவன்றி நீலகிரி மலையில் வேறு பல சிகரங்களும் உள்ளன. பனிவீழ் சிகரம் (Snowdown 8,299'), கிளப் சிகரம் {Club Hill 8,030'), எல்க் சிகரம் {Elk Hill 80,90'), தேவஷோலா சிகரம் (The devine wood Hill 7,417') குலக்கம்பை சிகரம் (5,601') கூனூர்பெட்டா சிகரம் (6,894'), ரல்லியா சிகரம் (Rallia Hill 7,325') திம்மட்டி சிகரம் (6,903'), எகுபா சிகரம் (Hecuba Hill 7793'), கட்டக்காடு சிகரம் (7933'), குல்குடி சிகரம் (8,002'), நீலகிரி சிகரம் (8,118'), மூகறுத்தி சிகரம் (8,380'), தேர்பெட்டா சிகரம் (8,304'), கொலிபெட்டா சிகரம் (8,182') என்பவை குறிப்பிடத்தக்கவை.

அருவிகளும் நீர்வீழ்ச்சிகளும் :

நீலகிரியின் மீதுள்ள பீடபூமி உயர்வும் தாழ்வுமான குன்றுகளையுடையது என்று படித்தோம். இரண்டு குன்றுகளுக்கு நடுவிலுள்ள ஒவ்வோர் இடை வெளியிலும் ஓர் அருவி ஓடிக்கொண்டிருக்கும். இவ்வாறு ஓடும் அருவிகள் பல ஒன்று சேர்ந்து பேரருவியாக மாறும். அப்பேரருவி வடக்கிலுள்ள மோயாற்றிலாவது, தெற்கிலுள்ள பவானியாற்றிலாவது விழும். நீலகிரியின் வடபகுதியில் தோன்றும் சீகூர் ஆறானது சீகூர் மலைகளின் பக்கமாக ஓடி மோயாற்றில் விழுகிறது. இவ்வாறு உதகமண்டல ஏரிக்கு மேற்புறத்திலுள்ள சரிவில் தோன்றி, ஏரியில் குளித்துக் கிளம்பி, 'சண்டி நுல்லா' அருவியோடு சேர்கிறது. அவ்வாறு சேர்ந்த தும் 170 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து 'காலகட்டி' நீர் வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இந் நீர்வீழ்ச்சி சீகூர் மலைமேல் அமைந்துள்ள காலகட்டி தங்கல்மனை (Travellers' bangalow) யின் எதிரே உள்ளது.

நீலகிரியின் வடகிழக்கிலிருந்து தோன்றி ஓடிவரும் முதுகாடு அருவி, ஆரஞ்சுப் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்விடம் இயற்கை வனப்பில் ஈடும் எடுப்பும் அற்றது. இவ்விடத்தில் ஆரஞ்சுப் பழங்கள் நிறைய விளைவதால் இப் பெயர் பெற்றது போலும். இப் பள்ளத்தாக்கிற்குள் முதல் முதல் நுழைந்த ஓர் ஆங்கிலக் காட்டிலாகா அதிகாரி, அதன் அழகில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். "ஆரஞ்சுப் பள்ளத்தாக்கு! அழகான பெயர்! இப் பெயரிலேயே ஒருவிதச் சுவை தோன்றுகின்றது. வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர் நிழல் சூழ்ந்த இவ்விடத்தில் நுழைந்ததும், என் முதுமையுள்ளத்தில் கூடப் புத்துணர்ச்சி பிறக்கிறது. என் உள்ளத்தை இதன் அழகில் பறிகொடுத்து விட்டுத் தேடுகிறேன். அமைதி, புதுமை ஆகிய இரண்டையும் நான் இங்கு காண்கிறேன். இன்பத்தை நாடும் இளங் காதலர் கையொடு கையிணைத்துக் கொண்டு, கனிந்து குலுங்கும் பழங்களைச் சுவைத்துக்கொண்டு, மணங் கமழும் மலர்களைப் பறித்து நுகர்ந்துகொண்டு மென்னடை போட்டு மெதுவாக உலவுவதற்கு இவ்விடம் மிகவும் ஏற்றது“ என்று கூறி மகிழ்கிறார்.

கோதகிரி (Kotagiri)யிலிருந்து கதாதகல்லா (Gathada Halla) என்ற ஓராறு தெற்கு நோக்கி ஓடி வருகிறது. அது 250 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து செயிண்ட் காதரைன் நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. செயிண்ட் காதரைன் என்ற அம்மையார் திருவாளர் எம். டி. காக்பர்ன் என்ற வெள்ளையரின் மனைவி. இவ்வம்மையாரும், இவர் கணவரும் முதன் முதலாகக் கோதகிரியில் குடி புகுந்த வெள்ளையரில் குறிப்பிடத் தக்கவர்கள். இவ்விருவரின் சமாதிகள் கோதகிரியிலேயே உள்ளன. இவ்வம்மையாரின் பெயர் இந்நீர் வீழ்ச்சிக்கு இடப்பட்டது. கூனூருக்கு அருகிலுள்ள டாஃபின் மூக்கி (Dolphin's nose)லிருந்து காண்போர்க்குக் காதரைன் நீர்வீழ்ச்சி கண்கொள்ளாப் பேரழகோடு காட்சி தரும்.

கூனூர் மலைக்கருகிலுள்ள படுகையில் தோன்றி, கூனூர், வெல்லிங்டன் ஆகிய இடங்களின் வழியாக ஓடி வருகிறது. கூனூர் ஆறு. இவ்வாறு 'காட்டேரி நீர்வீழ்ச்சி'யை ஏற்படுத்துகிறது. இந் நீர் வீழ்ச்சியிலிருந்து எடுக்கப்படும் மின்னாற்றல் அரவங் காட்டிலுள்ள படைக்கலத் தொழிற்சாலை (Cordite factory)யை இயக்குகிறது. இந் நீர்வீழ்ச்சியின் உயரம் 180 அடி. கூனூர், உதகமண்டல வாசிகள் இவ்விடத்திற்கு அடிக்கடி இன்பச் செலவை மேற்கொள்ளுகின்றனர்.

குலக்கம்பை மலைக்கு அருகிலுள்ள இடத்தில் பாய்ந்து வரும் குலக்கம்பை ஆறு ஒரு நீர்விழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்வாறு மிகவும் சிறியது. ஆனால் இதனால் உண்டாக்கப்படும் நீர் வீழ்ச்சியோ, நீலகிரி மலையிலேயே உயரமானது. சுமார் 400 அடி உயரத்திலிருந்து இது வீழ்கிறது. குலக்கம்பை ஆற்றுக்கு மேற்கில் குந்தா ஆறு குறுகிய படுக்கை வழியாக ஓடி வருகிறது. இவ்வாறு குந்தா மலையை, நீலகிரிப் பீடபூமியிலிருந்து தனியாகப் பிரிக்கிறது. உதகமண்டலத்திற்குத் தென்மேற்கிலுள்ள நஞ்ச நாடு பள்ளத்தாக்கு, எமரால்டு பள்ளத்தாக்கு ஆகியவற்றில் ஓடி வரும் சிற்றருவிகளையும் ஒன்று சேர்த்துக்கொண்டு குந்தா மலையிலிருந்து ஓடி வருகிறது. இவ்வாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் நீர் மின்சாரத் திட்டம் மிகவும் பெரியது. இதில் உண்டாகும் மின்னாற்றல் பல தொழிற்சாலைகளை ஓட்டுவதற்கும் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது.

நீலகிரியின் தென்மேற்கு மூலையிலிருந்து 'பில்லி தாதா கல்லா' என்ற அழகிய சிற்றாறு ஓடி வருகிறது. இது அவலஞ்சி மலையின் மேற்குச் சரிவில் பாய்கிறது. பவானி யாற்றின் முக்கியத் துணையாறுகளில் இதுவும் ஒன்று.

நீலகிரியின் மேற்குக் கோடியிலிருந்து எல்லாவற்றினும் பெரிய ஆறாகிய பைக்காரா தோன்றுகிறது. மூக்கறுத்தி மலையின் சரிவில் இவ்வாறு தோன்றி, கிழக்கிலுள்ள கிரூர் மண்டு, பார்சன் ஆகிய பள்ளத்தாக்குகளிலிருந்து ஓடி வரும் அருவிகளின் நீரை பெற்றுக் கொண்டு, பைக்காரா தங்கல் மனைக்கு எதிரே ஓடி வருகிறது. பிறகு குறுகிய ஒரு பள்ளத்தாக்கில் புகுந்து இரண்டு பெரிய நீர்வீழ்ச்சிகளாக முறையே 180 அடி உயரத்திலிருந்தும், 200 அடி உயரத்திலிருந்தும் விழுகிறது. கூடலூர் - மைசூர் பாதையில் நான்கு கல்லுக்கு அப்பால் வரும்போதே நீர் விழும் ஒலி நம் காதில் விழும். அங்கிருந்து காண்போருக்கு, பீடபூமியாகிய பெருஞ் சுவரில், பனிக் கட்டியால் செய்து சார்த்தப்பட்ட உயர்ந்த ஏணிகள் போல் இவ் வீழ்ச்சிகள் தோன்றும்.

பிறகு பைக்காரா ஆறு மெதுவாக இறங்கி வயநாட்டுக் காடுகளில் நுழைந்து, மறுபடியும் கிழக்கில் திரும்பிச் சென்று கூடலூர் - மைசூர் பாதைக்கருகிலுள்ள திப்பக்காடு என்ற இடத்தில் மறுபடியும் ஒரு நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது.

பைக்காரா ஆற்றைத் தோடர்கள் புண்ணிய ஆறாகக் கருதுகின்றனர். கருவுற்ற தோடர் குலப் பெண்கள் இவ் வாற்றைக் கடக்கத் துணியமாட்டார்கள். ஆண்கள்கூட இவ்வாற்று நீரை எதற்கும் பயன்படுத்துவதில்லை. மிகவும் இன்றியமையாத நேரங்களில் இவ்வாற்றைக் கடந்து செல்ல நேரிட்டால்தான் நீரைத் தொடுவார்கள். ஆற்றைக் கடந்ததும், ஆற்றை நோக்கித் திரும்பி வணங்கிவிட்டுத்தான் செல்வர். பைக்காரா தங்கல் மனைக்கு அருகிலுள்ள பாலத்தின் மேல் ஏறி ஆற்றைக் கடந்தால் கூட, அதற்கு மரியாதை செலுத்தாமல் தோடர்கள் செல்லமாட்டார்கள். பைக்காரா நீர் வீழ்ச்சி மின்சாரத் திட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

காடுகள்

இந்திய நாட்டிலுள்ள காடுகள், நாட்டின் விவசாயப் பொருளாதார முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. நம் நாட்டில் 2.81 லட்சம் சதுர மைல் பரப்புள்ள காடுகள் உள்ளன. நம் நாட்டின் மொத்தப்பரப்பில் 100க்கு 222 விழுக்காடு இவை உள்ளன. மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், திரிபுரம், கேரளம், மைசூர் ஆகிய மாநிலங்களிலுள்ள காடுகள் மலைபடு செல்வத்திற்குப் பெயர் பெற்றவை. திரிபுரத்தின் மொத்தப் பரப்பில் 100க்கு 60 பங்கும், அஸ்ஸாமில் 100க்கு 44 பங்கும், காடுகள் உள்ளன. இக் காடுகளினால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கிறது. இந்திய நாட்டுக் காடுகள் போதிய அளவு செல்வ வளத்தைப் பெற்றிருக்கின்றன. உயர்ந்த ரகமான மரங்கள், இவற்றில் நிறையக் கிடைக்கின்றன. நம் நாட்டு இரயில்வே இலாகா, பெரும்பாலும் காட்டு மரங்களையே நம்பி வளர்ந்திருக்கிறது. காகிதம், நூல் சுற்றும் கட்டை (bobin), ஒட்டுப் பலகை {plywood), நெருப்புப் பெட்டி முதலியன தயாரிக்கும் தொழில்களுக்குக் காட்டு மரங்களையே நாட வேண்டியிருக்கிறது. நாட்டு மக்களின் எரி பொருள் (fuel) காடுகளிலிருந்தே பெறப்படுகிறது. தேக்கு, கருங்காலி, சால் தீதர், சிர், சீசம் முதலிய விலையுயர்ந்த பயன்மரங்கள் காடுகளிலிருந்தே பெறப்படுகின்றன. மருந்துகள் செய்யப் பயன்படும் மூலிகைகளுக்கு நாம் காடுகளையே தேடிச் செல்ல வேண்டும்.

நம் நாட்டிலுள்ள காடுகள் அவ்வவ் விடங்களின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்பப் பல திறப்பட்டவைகளாக விளங்குகின்றன. மிக்க மழை பெய்யும் இடங்களில் என்றும் பசுமை மாறாத காடுகள் வளரும். நடுத்தரமான மழையுள்ள இடங்களில் உயர்ந்த ரகமான மரங்கள் வளரும். தென்னாட்டுத் தேக்கும், வடநாட்டுச் சால் மரமும் இத்தகைய காடுகளிலேயே விளைகின்றன. மிதமான மழையுள்ள இடங்களில் முள் மரங்களும், செடிகளும் நிறைந்த வறண்ட காடுகள் வளரும்.

நீலகிரி மலைமீதுள்ள காடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவையாவன : (1) பசுமை மாறாக்காடுகள் (Sholas), (2) எரி பொருளுக்காகவே ஆஸ்திரேலிய மரங்களை வளர்க்கும் செயற்கைக் காடுகள், (3) வட சரிவிலும் மோயாற்றுப் பள்ளத்தாக்கிலும் உள்ள அழிக்கப்படும் காடுகள் (decidous forests), (4) வய நாட்டிலுள்ள அடர்ந்த காடுகள்.

முதல் வகையைச் சார்ந்த பசுமை மாறாக் காடுகள் நீலகிரியின் உச்சியிலுள்ள பீடபூமிகளில் உள்ளன, பொருளாதாரக் கண்கொண்டு பார்க்கும்போது இக் காடுகளெல்லாம் பயனற்றவை. இக் காடுகளில் வளரும் மரங்களெல்லாம் மெதுவாக வளரக் கூடியவை. இம் மரங்கள் முழு வளர்ச்சியடைய ஒரு நூற்றாண்டு செல்லும். மேலும் இவைகளினின்றும் வெட்டி எடுக்கப்படும் விட்டங்கள் (timber) மிகச் சிறியவை; விலைமதிப்பற்றவை. இயற்கை அழகுக்கும், மலையில் நீர் வற்றாமலிருப்பதற்கும் இக் காடுகள் பயன்படுகின்றன.

கரு மரம் (black wood), தீதர், பைன் முதலிய மரங்கள் ஆஸ்திரேலிய இனத்தைச் சார்ந்தவை. இம் மரங்கள் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளிலேயே விரைவாக வளர்ந்து முழு வளர்ச்சியடையக் கூடியவை. இம் மரங்கள் அளிக்கும் விட்டங்கள் உறுதியானவை ; பயன் மிக்கவை; விலை மதிப்புடையவை. இவை நம் நாட்டின் நிறைந்த எரிபொருள் தேவையையும் நிறைவு செய்கின்றன.

பின்னிரு வகைக் காடுகளில் சுமார் முப்பத்தைந்து வகையான பயனுள்ள மரங்கள் அடர்ந்து வளர்கின்றன. அவற்றில் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிடத்தக்கவை வெள்ளை சிதார், சாடின்வுட், பூவா, வேங்கை, ஆச்சா, இருள், கருங்காலி, மட்டி, வெண் தேக்கு, தேக்கு, நெல்லி, சந்தனம் என்பவை.

விலங்குகள்

யானை :

யானைகள் நீலகிரி மலையில் இப்பொழுது அதிகமில்லை. கோடையின் வெப்பத்தைத் தாளாமல், அடி வாரத்திலிருந்து இவை குந்தா பீடபூமிக்குக் கூட்டம் கூட்டமாக வந்து விடும். இப்போது சத்திய மங்கல மலைகளிலும், மேட்டுப்பாளையத்தைச் சுற்றியுள்ள காடுகளிலும் காணப்படுகின்றன. யானைகளின் தொல்லையை ஒழிப்பதற்காக கி. பி. 1840-ஆம் ஆண்டு கோவை மாவட்டத் தண்டலராக இருந்தவர் சிட்டகாங்கிலிருந்து வேட்டைக்காரர்களை வரவழைத்து, அவைகளைப் பிடிக்குமாறு செய்தார். அவுட்டர்லானிப் பள்ளத்தாக்கில்கூட யானைகள் முன்பு நிறையத் திரிந்தன, அங்கு காஃபி பயிரிடத் தொடங்கியதும் யானைகளின் வருகை ஒழிந்தது. நீலகிரிப் பீடபூமியின் வடபகுதியிலும் வய நாட்டிலும் இப்பொழுது அதிகமாக உள்ளன. பவானிப் பள்ளத்தாக்கிலும் யானைக் கூட்டங்கள் அடிக்கடி தென்படுவதுண்டு.

புலி :

நீலகிரியின் உச்சியிலும், தாழ்ந்த பீடபூமிகளிலும் புலிகள் சுற்றித் திரிகின்றன. மார்ச்சிலிருந்து ஜூன் வரை இவை அடிக்கடி தென்படும். கோடை வெப்பத்துக்கும், காட்டுத் தீக்கும் அஞ்சி இவை இம் மாதங்களில் உச்சியிலுள்ள பீடபூமிகளுக்கு வந்துவிடும். வய நாட்டுச் செட்டிகளும், பழங்குடி மக்களான பனியர்களும் புலிகளை வலை போட்டுப் பிடிப்பதில் வல்லவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு வலிவான வலைகள் எப்பொழுதும் தொங்கிக் கொண்டிருக்கும். தங்கள் ஊருக்கு அண்மையிலுள்ள காட்டில் புலி வந்திருந்தால், எப்படியும் இவர்களுக்கு அச்செய்தி தெரிந்துவிடும். உடனே வலைகளை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள், புலி வேட்டைக்குப் புறப்படுவதற்கு முன்பாகத் தங்களுடைய குல தெய்வங்களுக்கு வழிபாடு நிகழ்த்துவர். அங்குள்ள பூசாரிகள் மருள் கொண்டு ஆடி வேட்டையின் முடிவைப்பற்றி முன்கூட்டிச் சொல்லுவதும் உண்டு. புலி படுத்திருக்கும் இடத்தைச் சுற்றிப் 'ப' வடிவாக வலையை அமைப்பர், ஒரு பனியன் மரத்தின்மேல் ஏறிக் கொண்டு மற்றவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிப்பான். கையில் 12 அடி நீளமுள்ள குத்தீட்டிகளோடு புலியை நாற்புறமும் வளைத்துக் கொள்வர், அவ்வலைக்குள்ளேயே அப் புலியைப் பல நாள் பட்டினிபோட்டு, ஈட்டியால் குத்தித் துன்புறுத்துவர்; இரைச்சலிட்டுக் கொண்டும், ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் புலியைக் கொல்லுவார்கள்.

சிறுத்தையும் கரடியும் :

சிறுத்தைகள் இம் மலையில் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. கருஞ் சிறுத்தைகள் பீடபூமிகளைவிடச் சமவெளிகளில் அதிகமாகத் தென்படுகின்றன. கரடிகளும் இங்கு நிறைய உண்டு. ஆனால் அவை சரிவுகளிலும் தாழ்வான பீடபூமிகளிலுமே அடிக்கடி காணப்படுகின்றன. ஆரஞ்சுப் பள்ளத்தாக்கில் முதலில் நிறைய இருந்தனவென்று காட்டதிகாரிகள் கூறுகின்றனர்.

மான் :

மானினம் இங்கு நிறைய வாழ்கிறது. காடு உள்ள இடங்களிலெல்லாம் மான்களைக் காணலாம். குறிப்பாகக் குந்தாப் பீடபூமியிலுள்ள பள்ளத்தாக்கில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. வேட்டைக் கழகத்தாரால் (Game Association) இக் காடு பாதுகாக்கப்படுவதால், அயலார் யாரும் அனுமதி பெற்றலன்றி இக் காட்டிற்குள் வேட்டையாடச் செல்ல முடியாது. எனவே மானினம் இங்கு பெருகி வளர்ந்துள்ளது. இங்குக் கலைமான்கள் நிறைய உண்டு. இம் மான்களின் கொம்புகள் வட இந்தியாவிலுள்ள மான்களின் கொம்புகளைப்போல் அதிக நீளம் வளர்வதில்லை. இருந்தாலும் 42 அங்குல நீளம் இருக்கின்றன. ஐரோப்பாவிலும் இவை போன்ற தோற்றமுடைய மானினம் உண்டு. அவைகட்கு எல்க் (Elk) என்று பெயர், உதகமண்டலத்தில் வந்து தங்கிய ஐரோப்பியர் இதையும் எல்க் என்றே அழைக்கத் தொடங்கினர். இவ்வினம் மிகுந்து காணப்படும் இடத்தை எல்க் மலை (Elk Hill) என்ற பெயராலேயே அழைத்தனர். புள்ளி மான்கள் உயர்ந்த பீடபூமி களுக்கு வருவதில்லை. அவை மசினிக்குடிக்கருகில் காணப்படுகின்றன.

குரைக்கும் மான் (Barking deer) என்ற ஓரினம் இங்கு இருக்கிறது. ஆனால் நீலகிரி மலைவாசிகள் இதைக் 'காட்டாடு' என்ற தவறன பெயரால் அழைக்கின்றனர். முதன் முதலில் நீலகிரி மலைக்கு வந்த பழங்குடி மக்கள் இதைக் காட்டாடு என்று கூறியதால் அப்பெயரே நிலைத்து விட்டது. இவைகளும் கலை மான்களைப் போலவே, உதகமண்டலத்து வேட்டை நாய்களுக்கு அஞ்சாத முரட்டுத்தனம் வாய்ந்தவை. நான்கு கொம்புகளையுடைய மான்களும் இங்கு இருக்கின்றன. ஆனால் அவை மிகவும் அருகிக் காணப்படுகின்றன. சிறிய எலி மான்கள் (Mouse deer) சரிவுகளிலுள்ள அடர்ந்த காடுகளில் உள்ளன. ஆனால் குறைந்தே காணப்படுகின்றன. கருமான் (antelope) களும் சீகூருக் கருகில் குறைந்த அளவில் காணப்படு கின்றன.

காட்டெருமை:

சில சமயங்களில் காட்டெருமைகள் சத்தியமங்கலம் மலைகளிலிருந்து மேட்டுப்பாளையத்திற் கருகிலுள்ள காடுகளுக்கு வருகின்றன. ஆனால் மசினிக்குடிக் காடுகளிலும், வய நாட்டிற்கு வடக்கிலுள்ள முதுமலைக் காடுகளிலும் நிறைய உள்ளன. காட்டில் ஏற்பட்ட ஒரு கொடிய நோயினால் இவை தாக்கப்பட்டுப் பெரும் பகுதி அழிவுற்றன. இப்போது நீலகிரிப் பீடபூமியில் இவைகள் இல்லை என்றே சொல்லலாம்.

காட்டுப் பன்றி :

நீலகிரி மலையில் வாழும் பன்றிகள் கொழுத்துப் பருத்து முரட்டுத்தனத்தோடு திரியும். இவை பயிர்களை அடிக்கடி அழிப்பதால், இவைகளை எவ்விடத்திலும் கொல்லுவதற்கனுமதி யுண்டு. வேட்டை நாய்கள் கூட இவைகளைப் பின் தொடர அஞ்சும், ஒரு சமயத்தில் ஒரு பன்றி 13 நாய்களைத் தன் கோட்டால் குத்திக் காயப்படுத்தி விட்டதாம்.

வரையாடு :

வரையாடு அல்லது காட்டாடு (Ibex) இந்திய நாட்டுக் காடுகளில் மட்டும் காணப்படும் ஓர் இனமாகும். இமயமலையில் காணப்படும் தார் (Tarh) என்னும் ஆடு இவ்வினத்திலேயே மற்றொரு பிரிவைச் சேர்ந்ததாகும். சென்னை மாநிலத்திலுள்ள காடுகளுக்கே உரித்தான இவ் வரையாடு, அபிசீனியாவிலுள்ள உயர்ந்த மலைகளைத் தவிர உலகில் வேறு எங்கும் கிடையாது. முதன் முதலாக நீலகிரி மலைக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு இவ்வாடு ஒரு புதுமையாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் நாட்டில் இது போன்ற ஆடு கிடையாது. இவ்வாடு நீலகிரி மலையிலல்லாமல், மேற்குத் தொடர்ச்சி மலையின் வேறு பகுதி களான பழனி மலைக் காடுகளிலும், ஆனை மலைக் காடுகளிலும் நிறைய உள்ளன. ஏன்? குமரிமுனை வரையிலும் இவ்வினம் மலிந்து காணப்படுகிறது. நீலகிரிப் பீடபூமிகளில் இது சாதாரணமாகக் காணப்பட்டாலும், குந்தா மலைத்தொடரின் தெற்கிலும் மேற்கிலும் உள்ள மிகவும் செங்குத்தான சரிவுகளிலேயே கூட்டங் கூட்டமாக வாழ்கின்றன. இவ் வாடுகளின் கொடிய பகை சிறுத்தையே. இவைகளின் கொம்புகள் 171 அங்குலம் வரை வளரும். பார்ப்பதற்கு அழகற்றவை என்றாலும், விலைமதிப்புள்ளவை. ஏனென்றால் இவைகள் எளிதில் கிடைப்பதில்லை. இவ்வாடுகள் திரியும் செங்குத்துப் பாறைகளில் யாரும் காலை ஊன்றக்கூட முடியாது. 1875-ஆம் ஆண்டில் ஒரு வரையாட்டைத் துரத்திச் சென்று சரிவில் விழுந்து இறந்த புச்செர் என்ற வெள்ளையரின் உடல் செயிண்ட். ஸ்டீஃபன் சர்ச்சில் புதைக்கப்பட்டுள்ளது.

காட்டு நாய் :

மற்றக் காடுகளில் இருப்பதைப் போன்றே காட்டு நாய் (wild dog) நீலகிரி மலையிலுள்ள மானினத்திற்குப் பெரும் எதிரியாக உள்ளது. இந் நாய்கள் ஒன்று விட்ட ஆண்டுகளில் நீலகிரிக் காடுகளுக்கு வந்து விட்டுச் செல்லுகின்றன. இவ்வாறு இவைகள் வந்து செல்வதன் காரணம் புரியவில்லை . கி. பி. 1906-ஆம் ஆண்டில் குந்தாக் காடுகளில் இவை நிறைந்திருந்த காரணத்தால் மானினம் அவ்வாண்டில் அருகியே காணப்பட்டது. காட்டில் பரவும் நோய்கள் ஒரு விதத்தில் நன்மையே புரிகின்றன. இந் நாய்கள் எளிதில் நோய்க்குள்ளாகி இறக்கும் தன்மையுடையவை. கி. பி. 1893-ஆம் ஆண்டு சீகூருக்கு அண்மையிலுள்ள காடுகளில் 9 நாய்கள் நோய்க்கு இலக்காகி மெலிந்து இறந்து கிடந்தன. வயநாட்டிலுள்ள நல்ல கோட்டையில் 3 நாய்கள் இறந்து கிடந்தன.

குரங்குகள் :

நீலகிரி மலையில் வாழும் குரங்குகள் பலதிறப்பட்டவை. 'நீலகிரிலங்கர்' என்று பொதுவாகக் கூறப்படும் குரங்கினம், பீடபூமிகளிலும், பசுமரக் காடுகளிலும் நிறையக் காணப்படுகின்றது. இதனுடைய உடம்பில் பட்டுப்போலக் கருமையான மயிர் நிறைந்திருக்கும். முகமும் கழுத்தும் செந்நிறமாக இருக்கும். பழத் தோட்டங்களுக்கு இதனால் பெருங்கேடு விளைவதுண்டு. ஆகையினால் அநுமாரின் அவதாரம் என்பதைக் கூடப் பொருட்படுத்தாமல், இவற்றைச் சுட்டுக் கொன்று விடுகின்றனர்.

'சிங்கவால் குரங்கு' என்ற ஓர் இனம் இங்கு உண்டு. இது மேற்குப் பக்கத்துப் பீடபூமிகளில் காணப்படுகிறது. இதன் உடலில் கருமயிர் நிறைந்திருக்கும்: இதனுடைய முகத்தைச் சுற்றி வெண்மை கலந்த செம்மயிர் வட்டமாக முளைத்திருக்கும், சிங்கத்திற்கு இருப்பதைப்போல் இதன் வால் நுனியில் மயிர் குஞ்சமாக முளைத்திருக்கும்.

வேறு சில விலங்கினங்கள் :

கிழக்கிலுள்ள தாழ்ந்த சரிவுகளில் மூன்று வகையான வௌவால்கள் காணப்படுகின்றன. சிறுத்தைப் பூனை, காட்டுப் பூனை, மரப் பூனை (palm civet) எனப் பல வகையான பூனைகள் இங்கு நிறைய இருக்கின்றன. வரிக்கழுத்துக்கீரி, செங்கீரி, பழுப்புக் கீரி என மூன்று விதமான கீரிகள் இங்குக் காணப்படுகின்றன. மேற்குச் சரிவில் தாழ்வாக உள்ள காடுகளில் 'பறக்கும் அணில்' என்ற ஒருவகை அணில் இனம் உண்டு. இதோடு ஏழு விதமான அணில்கள் நீலகிரிக் காடுகளில் காணப்படுகின்றன. இவை ஈழம், ஜாவா முதலிய நாடுகளில் காணப்படும் இனங்களைச் சாந்தவை.

இங்குப் பலவகை எலிகள் காணப்படுகின்றன. புள்ளிகளையுடைய எலி இனம் ஒன்று இங்கு உள்ளது. இவ்வெலிகள் வயல்களுக்கு அடியில் நிலத்தைக் குடைந்து பயிர்களின் வேரைக் கடித்து நாசம் செய்து விடுகின்றன. காஃபிச் செடியின் கிளைகளில் ஏறிப் பூக்களைத் தின்று விடுகின்றன.

உணவுப் பயிர்கள் :

நீலகிரி மலைகளின் மீதுள்ள பயிர்த் தொழிலை இரு வகையாகப் பிரிக்கலாம், நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களால் நடத்தப்பெறும் உணவுத் தானியப் பயிர்த், தொழில் ஒருவகை, ஐரோப்பிய, இந்தியத் தோட்ட முதலாளிகளால் நடத்தப்பெறும் பயிர்த்தொழில் மற்றொரு வகை, இங்கு நடைபெறும் பயிர்தொழில் முழுக்க முழுக்க மழை நீரையும், அருவி நீரையுமே நம்பி நடைபெறுகிறது. கிணறு முதலிய செயற்கைப் பாசன முறைகள் இங்குக் கிடையா.

சமவெளியில் விளைவதைப் போன்று இங்குள்ள பீடபூமிகளிலும் சாமையும், ராகியும் விளைகின்றன. கொரலி (Tiny millet) என்றொரு தானியமும் இங்கு விளைகிறது. இது கோதுமையில் இருபதில் ஒரு பங்கு பருமனே இருக்கும். இதை எல்லாவிதமான நிலங்களிலும் விளைவிக்கலாம். மோசமான வளமற்ற நிலமாக இருந்தால் கூட அவ்விடத்திலும் இது செழித்து வளரும்.

இங்கு அதிகமாக விளையும் கோதுமையானது, சமவெளியில் விளையும் கோதுமையினின்றும் உருவத்தில் மாறுபட்டது. இதன்மேல் நீண்ட வித்துறை போர்த்துக்கொண்டிருக்கும். இடிக்கும் போதுதான் இவ்வுறை தானியத்திலிருந்து பிரியும். இத்தானியத்தைப் பயிர் செய்யும் படகர்கள், இவ்வாறு வித்துறை கோதுமையைப் போர்த்துக்கொண்டிருப்பது சிறப்பு என்று கருதுகிறார்கள். ஏனென்றால் நீலகிரி மலையில் பயிர்களுக்கு மிகவும் சேதம் விளைவிக்கும் பூச்சிகளிடமிருந்து, அது தானியத்தைக் காப்பதாகச் சொல்லுகிறார்கள், மொட்டைக் கோதுமை என்ற வேறொரு தானியமும் இங்கு விளைகிறது. இது ஐரோப்பிய வகையைச் சார்ந்தது. சல்லிவன் என்ற ஐரோப்பியர் இதை முதன் முதலாக நீலகிரியில் பயிரிட்டுப் பரப்பினார். இது வித்துறையுடன் கூடியிராத காரணத்தால் மொட்டைக் கோதுமை (Naked wheat) என்று கூறுகிறார்கள்.

இங்கு விளையும் பார்லியில் பலவகை உண்டு. அவைகளில் மிகவும் சிறந்தது 'அக்கி காஞ்சி' என்பதாகும். 'படகர் காஞ்சி' என்பது, படகர்களால் நீண்ட நாட்களாகப் பயிரிடப்பட்டு வந்த நாட்டுப் பார்லி. துரைக்கஞ்சி (Gentlemen's barlie) என்ற ஒன்று உண்டு. இது சல்லிவன் துரையால் இங்குக் கொண்டு வரப்பட்டதால் இப்பெயர் பெற்றது. ஆனால் நாட்டுக் காஞ்சியைவிட இது தரத்தில் குறைந்தது. ஹனீவெல் என்ற ஐரோப்பியர் இங்கிலாந்திலிருந்தும், ஸ்காட்லாந்திலிருந்தும் உயர்ந்த ரகமான பார்லியை வரவழைத்து, அரவங்காட்டிற்கு அருகிலிருந்த படகர்களிடம் கொடுத்துப் பயிரிடுமாறு கூறினார். அவர்கள் சிறிது தயங்கவே, விளையும் தானியத்தை அதிகவிலை கொடுத்து வாங்கிக்கொள்வதாக வாக்குறுதியளித்தார். அவர்களும் கொஞ்ச நாள் பயிரிட்டனர். மற்ற பார்லிகளைவிட இதற்கு அதிகத் தழை உரம் தேவைப்பட்டது. மற்றவர்களைப்போல் நாட்டுப் பார்லியைப் பயிரிடுவதை விட்டுவிட்டுத் தாங்கள் மட்டும் புது மாதிரியான தானியத்தைப் பயிரிடுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆகையினால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

உருளைக் கிழங்கு :

இங்கு விளையும் உருளைக் கிழங்கு பெரும் அளவில், பர்மா, இலங்கை முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது, ஆனால் மேலை நாட்டு உருளைக் கிழங்குகளைப் போல் அவ்வளவு உயர்ந்ததல்ல. ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் சீமைக் கிழங்குகளின் விதைகளைக் கொண்டுவந்து பயிர்த்தொழில் செய்யும் படகர்களுக்கு வழங்கினர்கள். சீமைக் கிழங்கைப் பயிரிடும்போது நல்ல கண்காணிப்பு வேண்டும்; பாத்திகட்ட வேண்டும் ; களை பிடுங்க வேண்டும். பூச்சி புழுக்கள் விழாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். படகர்கள் போதிய கவனம் செலுத்தாததால் அப்பயிர் முதலில் சரியாக விளையவில்லை. ஆனல் இப்பொழுது நல்ல முறையில் பயிரிடுகிறார்கள்.

ஓட்ஸ் :

உருளைக் கிழங்கிற்கு அடுத்தாற்போல் ஓட்ஸ் ஒரு சிறந்த பயிர், ஆனால் இங்குக் குறைந்த அளவே விளைகிறது. ஜார்ஜ் ஒக்ஸ் என்ற ஐரோப்பியர், பாட்னா ஆஸ்திரேலியா, நியூசீலந்து முதலிய இடங்களில் இருந்து சிறந்த விதைகளைத் தருவித்து இங்குப் பரப்பினர்.

அமர்நாத்

இங்கு அமர்நாத் என்றாெரு தானியமும் விளைகிறது. இது சிற்றூர்களை அடுத்துள்ள வளமான நிலங்களிலேயே பயிராகிறது. இதைச் சொந்த உபயோகத்திற்கே பயிரிட்டுக் கொள்கின்றனர். விற்பனைக்குப் பயிரிடுவதில்லை. இது கோதுமையில் நாற்பதில் ஒரு பங்கு பருமனுள்ள, சிறிய வெண்மையான தானியம். இதை மாவாக அறைத்து அதிலிருந்து உணவுப் பண்டம் செய்கின்றனர். இதனுடைய இலைகளைக் கூடச் சமைத்து உண்கின்றனர்.

காய் கறிகள்

சீமைக் காய்கறிகள் இங்கு நிறையப் பயிர் செய்யப்படுகின்றன. கேரட், டர்னிப், தக்காளி, பார்சினிப், முட்டைக் கோசு, குவாலிஃ பிளவர், பீட்ரூட், ரேடிசஸ், லெட்டுசெஸ், ருபர்ப், ஃப்ரெஞ்சு அவரை, அகன்ற அவரை, வெள்ளரி, சிலெரி என்பவை படகர்களால் நிறையப் பயிரிடப்பட்டு நகரங்களுக்கு அனுப்பப் படுகின்றன. ஆனால் சமவெளியான பெங்களூரிலிருக்கும் தோட்ட முதலாளிகளோடு, வாணிபத் துறையில் இவர்களால் போட்டியிட முடியவில்லை. மலை மீது இவைகள் விளைவதால் சமவெளியிலுள்ள நகரங்களுக்குக் கொண்டு செல்ல நிறையப் பொருட் செலவு ஏற்படுகிறது.

நெல் நீலகிரி மலையின் ஒரு பகுதியான வயனாட்டில் கொல்லி மலையைப் போன்று நெல் பயிரிடப்படுகிறது. அதோடு சாமையும் இராகியும் உயர்ந்த மேட்டு நிலங்களில் பயிரிடப்படுகின்றன. நெல் தாழ்வான பீட பூமிகளில் பயிரிடப்படுகிறது. மலையிலிருந்து ஓடி வரும் அருவிகள் நெல் வயல்களில் பாய்கின்றன.

வணிகப் பயிர்கள் (Commercial Crops)

நீலகிரி மலையில் பயிர்த்தொழில் செய்யப்படும் மொத்த நிலப்பரப்பில் 36% காஃபித் தோட்டங்கள். தேயிலைத் தோட்டம் 10-6%. சின்கோனா 4-6%. உணவுத் தானியங்களும், பழத்தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் மீதி நிலத்தில் உள்ளன.

காஃபி

உலகில் விளையும் மொத்தக் காஃபியில் ¾ பங்கு பிரேசில் நாட்டில் விளைகிறது. மீதிக் கால் பங்கு ஜாவாவிலும், தென்னிந்தியாவிலும் வேறு சில நாடுகளிலும் விளைகிறது. தென்னிந்தியாவில் விளையும் காஃபி, உலகில் விளையும் மொத்தக் காஃபியில் 1 பங்குதான். தென்னிந்தியாவின் மொத்த விளைச்சலில் பாதிப்பங்கு மைசூர் மலைகளிலும், மறுபாதி சென்னை , குடகு, திருவாங்கூர் மாநிலங்களிலும் பயிராகின்றன.

1795- ஆம் ஆண்டு கொலோனல் ரீட் என்ற பெயர் கொண்ட சேலம் மாவட்டத் தண்டலர், திருப்பத்தூரில் காஃபி பயிரிட்டுச் சோதனை நிகழ்த்தினார். ஆனால் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை. டாக்டர் புச்சானன் என்பவர் கி. பி. 1801-ஆம் ஆண்டு தெல்லிச்சேரியில் காஃபிப் பயிர் நன்றாக விளைவதைக் கண்டார். கி. பி. 1828-இல் பிரௌன் என்பவர் அஞ்சரிகண்டியிலிருந்து காஃபிப் பயிர்களைக் கொண்டுவந்து மலையாள நாட்டைச் சேர்ந்த வய நாட்டில் பயிரிட்டார். ஆனால் 1839-ஆம் ஆண்டு வரையில் அங்கு அப்பயிர்த்தொழில் சிறப்படையவில்லை. கூனூரில் வாழ்ந்த டாசன் என்ற ஐரோப்பியர் 1838-ஆம் ஆண்டு நீலகிரிப் பீடபூமியிலுள்ள காலகட்டி என்ற இடத்தில் காஃபிப் பயிர்களை நட்டுச் சோதனை நிகழ்த்தினார். அச்சோதனை ஓரளவு வெற்றிகரமாக முடிந்தது. உடனே அவுட்டர் லானிப் பள்ளத்தாக்கில் காஃபித் தோட்டங்கள் உருப்பெறத் தொடங்கின, கி. பி. 1866-67-ஆம் ஆண்டுகளில் அப்பள்ளத்தில் 13,500 ஏகர் நிலம் காஃபித் தோட்டமாக மாறியது. 35,000 ராத்தல் காஃபிக் கொட்டை அங்கிருந்து ஏற்றுமதியாயிற்று. நீலகிரி மலையின் கிழக்கு, தெற்கு, வடகிழக்குச் சரிவுகள் காஃபி விளைவதற்கு ஏற்ற இடங்களாக விளங்குகின்றன. இப்பொழுது நீலகிரி மலையிலுள்ள காஃபித் தோட்டங்களின் பரப்பு 50,000 ஏகருக்கு மேல் இருக்கும். உயர்ந்த ரகக் காஃபியான அரேபிகா தான் இங்கு விளைகிறது.

தேயிலை

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தேயிலையில் தென்னிந்தியாவின் பங்கு மிக மிகக் குறைவு. அதுவும் நீலகிரியில் விளையும் தேயிலையின் அளவு மொத்த இந்தியத் தேயிலையில் 1% தான். நீலகிரியிலுள்ள தோட்ட முதலாளிகள் முதன் முதலில் தேயிலையை விரும்பிப் பயிரிட்டதற்குச் சில காரணங்கள் உண்டு. காஃபியைப் போல் தேயிலை சீக்கிரத்தில் நோயினால் தாக்கப்படுவதில்லை. பூச்சி புழுக்களும் காஃபிச் செடிக்கு அழிவு விளைவிப்பதைப் போல் தேயிலைக்கு விளைவிப்பதில்லை. ஏதேனும் ஓராண்டில் காஃபியின் விளைச்சல் பிற நாடுகளில் மிகுதியாக இருந்தால், உடனே நம் நாட்டில் விலை அதிகமாகக் குறைந்து விடும். அதனால் நம் நாட்டுத் தோட்ட முதலாளிகளுக்குப் பெரும் அளவு பொருள் இழப்பு ஏற்படும். இவை போன்ற தொல்லைகள் தேயிலைத் தோட்டக்காரர்களுக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலும் காஃபிப் பயிர்த் தொழிலில் தோல்வி கண்டவர்கள், தங்கள் காஃபித் தோட்டங்களை அழித்துவிட்டுத் தேயிலை பயிரிட்டனர்.

நீலகிரி மலையின் தேயிலைப் பயிர்த்தொழில் வரலாறு கி. பி. 1833-ஆம் ஆண்டிலிருந்து துவங்குகிறது. அங்கு வாழ்ந்த கிருஸ்டீ (Christie) என்பவர், கூனூருக்கருகில் தேயிலையைப் போல் சுவையுடைய ஒருவகைச் செடி நிறைய முளைத்திருப்பதைக் கண்டார். இம்மலையிலும் தேயிலையைப் பயிரிட்டால் என்ன என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. உடனே உயர்ந்த ரகமான தேயிலைச் செடிகளைச் சீன நாட்டிலிருந்து தருவிக்க ஏற்பாடு செய்தார். ஆனால் அவைகள் நீலகிரி வந்து சேர்வதற்கு முன்பே கிருஸ்டீ இறந்து விட்டார். சைனாவிலிருந்து தருவிக்கப்பட்ட செடிகள் நீலகிரி மலையின் பல பகுதியிலிருந்த மக்களுக்கும் பயிரிடுவதற்காகக் கொடுக்கப்பட்டன.

கி. பி. 1835-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரல், ஒரு குழுவை ஏற்படுத்தி நீலகிரி, குடகு, மைசூர் முதலிய மலைகளில் தேயிலை பயிரிட முடியுமா என்பதை அறிவதற்காகக் கல்கத்தாவிலிருந்து அனுப்பி வைத்தார். சீனாவிலிருந்து நல்ல விதைகளை வரவழைத்துச் சோதனைத் தோட்டங்களில் பயிரிட்டனர். நீலகிரிக்கு அனுப்பப்பட்ட செடிகளைக் 'கேதி' சோதனைத் தோட்டத்தில் பயிரிட்டனர். ஆனால் அடுத்த ஆண்டிலேயே இச் சோதனைகள் கைவிடப்பட்டுக் 'கேதி' தோட்டமும் அதிலிருந்த கட்டிடமும் பாண்டிச்சேரி கவர்னருக்கு விற்கப்பட்டன. திருவாளர் எம். பெர்ராடெட் (M. Perrottet) என்ற ஃபிரெஞ்சுத் தாவர ஆராய்ச்சியாளர் அத் தோட்டத்திற்கு வந்திருந்த பொழுது, சோதனைக் குழிகளில் நடப்பட்டிருந்த தேயிலைச் செடிகளைப் பார்த்தார். அச் செடிகள் பாதியளவு பூமிக்குள் புதைத்து நடப்பட்டிருந்தன. இவ்வாறு நடப்பட்டதற்குக் காரணம், தோட்ட வேலைக்காரனின் அறியாமையே என்பதை உணர்ந்து, அவைகளையெல்லாம் பிடுங்கி மறுபடியும் ஏற்ற முறையில் நட்டு வளர்த்தார். 1838-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் அச் செடிகள் நான்கடி உயரத்திற்கு வளர்ந்து, செழிப்பான இலைகளைத் தளிர்த்தன. பூக்களும், காய்களும், பழங்களும் தோன்றின. உடனே இச் செய்தியைப்பற்றி ஒரு கட்டுரை வரைந்து, பத்திரிகையில் வெளியிட்டார். இக் கட்டுரை சென்னை மாநிலத்திலுள்ள எல்லாத் தோட்டக்காரர்களின் கவனத்தையும் கவர்ந்த கி. பி: 1840-ஆம் ஆண்டு திருவாளர் சல்லிவன் கேதி தோட்டத்திலும் பில்லிகல் தோட்டத்திலும் விளைந்த தேயிலையின் மாதிரிகளை, சென்னையிலுள்ள 'பயிர்த் தொழில் வளர்ச்சிக் கழகத்'திற்கு அனுப்பி வைத்தார். அவற்றிலிருந்து இறக்கிய தேநீரைக் குடித்து மகிழ்ந்த அவர்களெல்லாம் அவற்றின் சுவையைப் பாராட்டினர்.

பிறகு கூனூரில் வாழ்ந்த திருவாளர் மான் (Mr. Man) என்ற வெள்ளையர் கி. பி. 1854-இல் சீனாவிலிருந்து உயர்ந்த ரகமான செடிகளை வரவழைத்து, பல இன்னல்களுக்கிடையே அவ்வூருக்கருகிலுள்ள ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்துப் பயிரிட்டார். இப்போது அவ்விடம். 'கூனூர் தேயிலைத் தோட்டம்' (Coonoor Tea Estate) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கி. பி. 1856 இல் மான் அவர்களால் பயிரிடப்பட்ட தேயிலை மிகவும் சிறந்ததென்று இலண்டன் தேயிலை வியாபாரிகளால் பாராட்டப்பட்டது. ஆனால் தம் விளைச்சலை அதிகப்படுத்த அவர் விரும்பவில்லை. காரணம் பயிரிடும் நிலத்திற்காகக் காடுகளை அழிப்பது அவருக்கு மிகவும் தொல்லையான வேலையாகப்பட்டது.

டாக்டர் க்ளெக் ஹார்ன் (Dr, Cleghorn) என்பவர், தேயிலை பயிரிடுவதில் நல்ல அனுபவமுள்ள சில சீன உழவர்களை வட இந்தியாவிலிருந்து நீலகிரிக்குத் தருவித்து உதவுமாறு சென்னை கவர்னருக்கு வேண்டு கோள் விடுத்தார். ஆனால் அவருடைய வேண்டுகோள் அரசியலாரால் மறுக்கப்பட்டது. பிறகு திரு. ரே (Mr. Rae) என்பார் சோலூருக் கருகில் அரசியலாரிடமிருந்து நிலத்தைப் பெற்றுத் தேயிலைத் தோட்டத்தை நிறுவினார். அது இப்பொழுது 'டன்சேண்டல் தோட்டம்' (Dunsandle Estate) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. கோதகிரியில் ஒரு தோட்டமும், உதக மண்டலத்தில் 'பெல்மாண்ட்' (Belmont) என்ற தோட்டமும் ஏற்படுத்தப்பட்டன.

கி. பி. 1863--64 ஆம் ஆண்டுகளில் சென்னை கவர்னராக இருந்த வில்லியம் டென்னிசன் என்பவர் வடமேற்கு மாநிலங்களிலிருந்து தேயிலை பயிரிடுவதில் நல்ல பயிற்சிபெற்ற தோட்ட வேலைக்காரர்களை வரவழைத்து நீலகிரிக்கு அனுப்பித் தேயிலைப் பயிர்த் தொழில் வளர்ச்சியில் சிறிது அக்கறை காட்டினார். அதோடு உயர்ந்த விதைகளைத் தருவித்தும் வழங்கினார் . கி. பி. 1869 ஆம் ஆண்டு ஏறக்குறைய 300 ஏகர் நிலம் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டிருந்தது. அவ்வாண்டு நடந்த பயிர்த் தொழில் கண்காட்சியில் 18 தோட்ட முதலாளிகள் தங்கள் தோட்டத்தில் விளைந் திருந்த தேயிலைகளைப் பார்வைக்கு வைத்திருந்தனர்.

பிறகு படிப்படியாகத் தேயிலைப் பயிர்த்தொழில் வளர்ந்து நல்ல நிலையடைந்தது. பயிரான தேயிலையை விற்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் செய்யப்பட்டன. தற்போது, நீலகிரித் தேயிலை இங்கிலாந்து நாட்டிற்குப் பெரும் அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நீலகிரியில் விளையும் தேயிலை மூன்று வகைப்படும். அவையாவன (1) தூய்மையான சீனத் தேயிலை. இத் தேயிலை மிகவும் உறுதியானதாக இருக்கும் (2) அஸ்ஸாமில் பெரும் அளவு விளையும் நாட்டுத் தேயிலை. இது 25 அல்லது 30 அடி உயரம் வளரும் தன்மையுடையது. (3) சீன இனத்தையும், நாட்டு இனத்தையும் கலந்து உண்டாக்கப்பட்ட தேயிலை (Hybrid). இது சீனத் தேயிலையைப்போல் இருமடங்கு இலைகளைக் கொண்டிருப்பதோடு, அதன் உறுதியையும் பெற்றிருக்கிறது.

சின்கோனா

நீலகிரி மலையில் பயிரிடப்படும் சின்கோனா மரங்கள் முக்கியமாகக் கொய்னா மருந்து செய்வதற்கும் வேறுசில மருந்துகள் செய்வதற்கும் பயன்படுகின்றன. சின்கோனாவின் பட்டையிலிருந்து எடுக்கப்படும் கொய்னா, மலேரியா நோய்க்கு அருமருந்தாக விளங்குகிறது. இப்போது உதகமண்டல வட்டத்தில் 4000 ஏகர் நிலத்தில் சின்கோனா பயிரிடப்படுகிறது. இத் தோட்டங்களில் பெரும்பகுதி அரசியலாருக்குச் சொந்தமானது. இதற்கென்று ஒரு தனி இலாகா (Chincona Department)வே அரசியலாரால் நடத்தப்படுகிறது. மிகவும் மலிவான விலையில் கொய்னாவைத் தயாரித்து நாட்டு மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதே இவ்விலாகா வின் நோக்கம்.

சின்கோனா மரம் தென்னமெரிக்கக் காடுகளுக்கே உரித்தான பயிர், அங்கிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு இப்பயிர் பரவியது. இது உலகில் பரவுவதற்கு முன்பு தென்னமெரிக்கச் செவ்விந்தியர்களுக்கு இதன் பயன் தெரியுமா என்பது ஐயப்பாடே. கொய்னா (Quinine) என்ற சொல்லானது செவ்விந்திய மொழிச் சொல்லான க்வினா-க்வினா (Quina-Quina) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். க்வினா என்றால் பட்டை என்று பொருள்.

கி. பி. 1640 இல் 'பெரூ' நாட்டின் அரசப்பிரதிநிதியாக இருந்த ஐரோப்பியரின் மனைவியான சின்கோன் சீமாட்டி (Countess of Chinchon)யும், அவருடைய யூத நண்பர்களுமே சின்கோனா மரம் உலகில் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள். கி. பி. 1846-க்கு மேல் தான் இம்மரம் ஐரோப்பாவில் பயிரிடப்பட்டது. இதை நம் நாட்டுக்குக் கொண்டுவரப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவர் திருவாளர் டல்ஹௌசி பிரபு. சின்கோனாச் செடிகளை இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக அவர் கி. பி. 1852 இல் ஒரு குழுவைத் தென்னமெரிக்காவிற்கு அனுப்பினார். ஆனால் அவர்கள் கொண்டுவந்த சின்கோனாக் கன்றுகள் வரும் வழியிலேயே கருகிவிட்டன. இவ்வாறு பல தடவை எடுத்துக்கொண்ட முயற்சிகள் வீணாயின.

சின்கோனா பயிரிடுவதில் பயிற்சி பெற்ற திருவாளர் மார்க்கம் (Mr. Markham) என்பவர் கி. பி. 1860 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் நீலகிரிக்கு வந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்பாக, உதக மண்டலத்திலுள்ள அரசாங்கத் தோட்டத்தின் பாதுகாவலராக இருந்த டப்ள் யூ. ஜி. மெக்கல்வர் (W. G. Mclvor) என்பார் தொட்ட பொட்டாவிற்கருகிலுள்ள பள்ளத்தாக்குகளில் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சின் கோனா பயிரிட ஆரம்பித்தார். திரு. மார்க்கம் அவ்விடத்தைப் பார்வையிட்டார். அவ்விடம் ஓரளவு தகுதியானதே என்றாலும், போதிய ஈரமும் வெப்பமும் இல்லை என்று கருதி பீடபூமியின் மேற்கு எல்லையிலுள்ள நடுவட்டம் என்னும் இடத்திற்கருகில் சின்கோனா பயிரிடத் தொடங்கினார். பிறகு பல இடங்களில் இத் தோட்டங்கள் தோன்றத் தொடங்கி வளர்ச்சியுற்றன. இப்பொழுது இப்பயிர்த்தொழில் காஃபிக்கு அடுத்தாற்போல் வருவாய் தருவதாக உள்ளது.

இரப்பர் :

காஃபி, தேயிலை போன்று இரப்பர் மிகுந்த வருவாய் அளிப்பதாக நீலகிரியில் இல்லை . கி. பி. 1882-ஆம் ஆண்டு இரப்பர் வயநாட்டிலும் கோதகிரியிலும் முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. குரங்குகளாலும், பன்றிகளாலும் தோட்டக்காரர்களின் கவனக் குறைவாலும் இரப்பர் பயிர்த்தொழில் அப்பொழுது வெற்றிகரமாக நடைபெறவில்லை. சேர்வராயன் மலையில் இரப்பர் பயிரிடுதலை வெற்றிகரமாகச் செய்து காண்பித்துத் தங்கப்பதக்கம் பெற்ற நிக்கல்சனைப்பற்றி முன்பே கூறினோம். அவர் சேர்வராயன் மலையிலிருந்து இரப்பர் செடிகளைக் கொண்டு வந்து கோதகிரியில் தமக்குச் சொந்தமாயிருந்த கிளென்பர்ன் தோட்டத்தில் பயிரிட்டார், அதன் பிறகு பல தோட்டக்காரர்கள் நீலகிரியில் குறைந்த அளவு இரப்பர் பயிரிடத் தொடங்கினர். கி. பி. 1902-ஆம் ஆண்டு ஏறக்குறைய 1200 ஏகர் நிலங்கள் இரப்பர் தோட்டங்களாக மாறின. தென்னிந்தியாவில் கொச்சி, ஆனைமலை, சேர்வராயன் மலை, பழனிமலை, மலையாளம் முதலிய இடங்களில் இரப்பர் தோட்டங்கள் உள்ளன. நீலகிரிப் பீடபூமியில் குறிப்பிடத்தக்கது கிளன்ராக் இரப்பர் கம்பனி (glem Rock Rubber Company). இது பண்டலூருக் கருகில் உள்ளது.

பழவகைகள் :

ஐரோப்பியர்கள் நீலகிரியில் குடியேறத் தொடங்கியதும், மேல் நாட்டுப் பழவகைகளை அங்கு நிறையப் பயிரிடத் தொடங்கினர். அரசியலார் சோதனைத் தோட்டங்களை நிறுவி, உயர்ந்தரகப் பழங்களைப் பயிரிடுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்தனர். இத்தொழில் இப்பொழுது மிக்கவருவாய் அளிக்கும் ஒன்றாக விளங்குகிறது. ஆப்பிள், பேரி, சீமைமாதுளை (Quince), சீமைக் கொவ்வை (peach), திராட்சை , பெருந்திராட்சை (Apricot), ப்ளம் திராட்சை , {plum), செர்ரி, கூஸ்பெர்ரி, முள்ளி (Rasp-berry), ஸ்ட்ரா பெர்ரி, மல்பெர்ரி, அத்தி (fig), கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை , நெக்டரின், பெர்சிம்மன், செரிமாயர் முதலிய பழங்கள் நிறைய விளைகின்றன.

மொழிகள் :

கோவைத்தமிழும், கேரளத்து மலையாளமும், மைசூர்க் கன்னடமும் ஒன்று சேரும் இடத்தில் நீலகிரி மலையானது உள்ளது. ஆகையால் இம் மூன்று மொழிகளின் சிதைவுகளே {dialects) இம்மலை வாழ் மக்களால் பேசப்படுகின்றன. தமிழ், படகா, மலையாளம், தெலுங்கு, குறும்பா, இந்துஸ்தானி, ஆங்கிலம் ஆகியவை இங்கு வழங்கும் முக்கிய மொழிகள். படகா சிதைந்த கன்னடம். இங்குவாழும் பழங்குடி மக்களால் பேசப்படும் துதம் (Toda language) முதலிய மொழிகள் யாவும் கால்டு வெல்லின் கூற்றுப்படி, திராவிட மொழியினத்தைச் சார்ந்தவை.

சமயம் :

இந்து, பார்சி, இசுலாம், கிறித்தவம் ஆகிய நான்கு சமயங்களே இம்மலையில் வாழும் மக்களால் கடைப்பிடித்து ஒழுகப் படுகின்றன. ரோமன் கேதலிக், சர்ச் ஆஃப் இங்கிலாந்து, அமெகரின் மிசன், சினானா மிசன், பாசில் லுதரன் மிசன் ஆகியகிறித்தவ நெறியினர் இங்குத் தத்தமக்குரிய கோயில்களை அமைத்துக் கொண்டு, சமய வளர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறனர்.

மகக்ள்

தமிழ் வேளாளர், தமிழ்ப் பறையர், தெலுங்கர், படகர், கோதர், தோடர், இருளர், குறும்பர் வய நாட்டுச் செட்டிமார், பனியர், சிறுபான்மை வெள்ளையர் ஆகியோரே நீலகிரி மலைமீது வாழ்கின்றனர்.

பழங்குடி மக்கள் :

நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்கள் குறிப்பிடத்தக்கவர்கள். மேலை நாட்டிலிருந்தும், இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பழங்குடி ஆராய்ச்சி (Anthropology) க்காகப் பலர் இங்கு வந்து கூடிய வண்ணமிருக்கின்றனர். இந்திய நாட்டுப் பழங்குடி மக்களைப்பற்றிக் கூறும் எந்த நூலும், தோடர்களைப் பற்றிக் குறிப்பிடாமலிருப்பதில்லை. தோடர்களைத் தவிர, நீலகிரியில் வாழும் மற்ற இனத்தவரெல்லாம் ஓரளவு நாகரிகம் பெற்று வருகின்றனர். ஆனால் தோடர்கள் மட்டும் இயற்கையோடு படிந்த வாழ்க்கையிலேயே இன்பம் காண்கின்றனர்.

பழங்குடி மக்களைப்பற்றி, எல்லா நாடுகளிலும் பேசப் படுகிறது. விஞ்ஞான நாகரித்தின் அடிப்படையில் இயங்கும் நகர வாழ்வைவிட, காடுகளிலும் மலைகளிலும் கவலையற்று வாழும் இயற்கை வாழ்வே உயர்ந்த தென்றும் பேசப்படுகிறது. பழங்குடி மக்களுக்கு அணுக்குண்டைப் பற்றியோ, நீர்வளிக் குண்டைப் பற்றியோ, பறக்கும் குண்டைப் பற்றியோ தெரியாது , கவலை கிடையாது. அரசியல், பொருளியல், சமூகவியல், தொழில் வளர்ச்சி, கல்வி ஆகியவற்றைப் பற்றியும் அவர்கள் கவலைப் படுவதில்லை, நாளை உணவுக்கு என்ன செய்வது? என்று கவலையோடு கண்துயிலச் செல்லும் இழிநிலை அவர்களிடம் இல்லை. இயற்கை அளிக்கும் வளத்தைப் பகுத்துண்டு பொது உடமை வாழ்வு வாழ்கின்றனர். பண்டித நேரு, பழங்குடி மக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:-

"சமவெளியில் வாழும் நாகரிக மக்களிடத்தில் காண முடியாத பல அரும் பண்புகளை நான் அவர்களிடம் காண்கிறேன். அப் பண்புகள் என்னுள்ளத்தைப் பெரிதும் கவர்கின்றன. 'பழங்குடி மக்கள் வெறியுணர்ச்சி மிக்கவர்கள் ; கொலைக்கஞ்சாக் கொடியவர்கள் ; சினங்கொண்ட பொழுது பிறர் சிரத்தைக் கொய்யச் சிறிதும் தயங்காதவர்கள்' என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் இச் செயல்கள் எல்லாம், சமவெளியில் வாழும் நாகரிக மனிதன் செய்யும் அக்கிரமங்களை விடக் கொடுமையில் குறைந்தவையே! பிறருடைய உள்ளத்தை ஏறி மிதித்து நசுக்குவதைவிடத் தலையை வெட்டுவது எவ்வளவோ மேல் என்று நான் கருதுகிறேன்.

"அவர்கள் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும் உட்பட்டவர்கள். பாராளு மன்றமும் சட்ட சபையும் அவர்களுக்கு இல்லை. ஆனால் ஜனநாயகத்தை நம்மைவிட நல்ல முறையில் உணர்ந்தவர்கள். ஆடியும் பாடியும் வாழ்க்கையை இன்பத்தோடு வாழக் கற்றவர்கள். ஆனால் நாமோ, நாகரிகத்தின் உச்சியில் வீற்றிருப்பதாகப் பெருமை பேசிக்கொண்டு, பிறரை இழித்துரைப்பவர்கள் ; பிறர் ஆக்கங்கண்டு பொறாமைப்படுபவர்கள், இத்தகைய நாகரிகத்தையா நாம் பழங்குடி மக்களுக்கு அளிக்க வேண்டும்? ஒருவனை ஒருவன் இழித்துப் பேசுவதைக் கலையாகக் கொண்டு வாழும் நாகரிக சமுதாயத்தைவிட்டு விலகி, ஒரு பழங்குடி மகனாகக் காடுகளில் திரிவதைப் பெரிதும் விரும்புகிறேன்," என்று கூறியிருக்கிறார்.

பழங்குடி மக்களைப்பற்றி இரண்டு விதக் கொள்கைகள் உலகில் உலவுகின்றன. அவர்களைக் கண்களுக்கும், கருத்துக்கும் விருந்தளிக்கும் காட்சிப் பொருளாகவும், ஆராய்ச்சிக்குரிய கருப்பொருளாகவும் அப்படியே காடுகளில் விட்டுவைத்திருக்க வேண்டும் என்பது ஒரு கொள்கை. சமவெளியில் பரவியிருக்கும் விஞ்ஞான நாகரிகத்தை வலியப் புகுத்தி, அவர்களையும் நம் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பது மற்றொரு கொள்கை. கி. பி. 1936-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாட்டுச் சட்டசபை ஒன்றில், "பழங்குடி மக்களை ஆராய்ச்சியாளருக்குப் பயன்படும் வகையில், பொருட்காட்சி சாலைகளில் ஏன் அடைத்து வைக்க லாகாது?” என்று ஓர் உறுப்பினர் கேட்டார். அச் செயல் மனிதத் தன்மைக்குப் புறம்பானது என்று வேறு பல உறுப்பினர்களால் கண்டிக்கப்பட்டுக் கைவிடப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த பெரும் புலவனான ஜான்சனும், அவன் நண்பன் பாஸ்வெல்லும், 'பழங்குடி மக்கள், பண்பட்ட மக்கள் ஆகிய இருவர் வாழ்க்கையில் எது உயர்ந்தது?' என்பது பற்றிக் காரசாரமான உரையாடல் நிகழ்த்தி யிருக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற நாடகப் புலவரான சேக்ஸ்பியர்கூட, தாம் எழுதியுள்ள புயல் (Tempest) என்ற நாடகத்தில் காலிபன், பிராஸ்ப் பெரோ, ஸ்டீஃபெனோ. டிரிங்குலோ, அந்தோணியோ, ஆலன்சோ என்ற பாத்திரங்களின் மூலம் பழங்குடி வாழ்க்கையையும் நாகரிக வாழ்க்கையையும் விளக்கிக் கொண்டு செல்லுகிறார். காலிபனைப் பற்றித் திறனாய்வாளர் (critics) குறிப்பிடும்போது, “அவன் ஒரு மடையன் ; வெறி கொண்டவன். தீங்கிழைக்கும் பண்பு அவன் உள்ளத்தில் ஊறியது. அவனைப் பண்பட்டவனாக ஆக்கப் பிராஸ்ப்பெரோ எவ்வளவோ முயன்றான், அம் முயற்சி காலிபன் உள்ளத்தில் பொறாமை, தன் தாழ்ந்த நிலை கண்டு அதிருப்தி, மிராந்தாவின் மேல் சபலம், எதிர்ப்புணர்ச்சி, குடிவெறி ஆகிய தீப்பண்புகளையே கிளப்பிவிட்டது' என்று கூறுகின்றனர்.

ஆனால் சேக்ஸ்பியர் அக் காட்டு மனிதனிடமிருந்த அரிய பண்புகளையும் புலப்படுத்துகிறார். காலிபன் இசைப்பிரியன்; காட்டு மொழியில் கவிதை பாடும் புலவன். சில சமயங்களில் அழகுணர்ச்சியோடும் பேசுகிறான். ஆனால் நாகரிகத்தின் பிரதிநிதிகளாக அத் தீவில் புகுந்தவர்கள் - அவனைவிட உள்ளத்தால் இழிந்தவர்கள், ஸ்டீஃபனோவும், டிரிங்குலோவும் குடிகாரக் கோமாளிகள், அந்தோணியோ வஞ்சகன். ஆலன்சோவின் வாழ்க்கை கறைபடிந்தது. இந் நாகரிகர்கள், பழங்குடி மகனான வாலிபனைக் கள் வெறியனாக்கிப் பிறகு நன்றி கெட்டவனாக மாற்றினர்.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூசோ, "பழமை வாழ்வே பண்புடை வாழ்வு; அவ்வியற்கை வாழ்வை நோக்கிச் சென்றால் தான் எதிர்கால உலகம் அமைதியோடும் இன்பத்தோடும் வாழ முடியும்“ என்ற கொள்கையைப் பரப்ப ஓர் இயக்கமே (Back to Nature Movement) நடத்தினார். இவ்வாறு பழங்குடி மக்களைப் பற்றிச் சுவையான பேச்சுக்கள் பன்னிப் பன்னிப் பேசப்படுகின்றன.

படகர் :

நீலகிரியில் வாழும் வெள்ளையர் இவர்களைப் பர்கர் (Burgher) என்று அழைக்கின்றனர். வடக்கிலுள்ள மைசூரிலிருந்து வந்ததால் இவர்கள் வடகர் என்று பெயர் பெற்றனர் என்றும், அப்பெயரே படகர் எனத் திரிந்தது என்றும் சிலர் கூறுகின்றனர். மைசூர் நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாகவும், அரசியலில் கொண்ட கருத்து வேறுபாட்டின் காரணமாகவும், சமுதாயக் கொடுமை காரணமாகவும், மைசூரில் வாழும் லிங்காயத்தாரிடம் கொண்ட சமயப்பூசல் காரணமாகவும் இவர்கள் இங்குக் குடியேறினராகக் கூறப்படுகிறது, தோடர்களிடையே வழங்கும் பரம்பரைக் கதைகளில் படகரைப் பற்றிய செய்திகள் எதுவும் இல்லாத காரணத்தால், இவர்கள் தோடர்களுக்குப்பின் இங்குக் குடியேறியவர்கள் என்பது தெளிவாகிறது.

படகர்கள் உழவுத் தொழிலில் வல்லவர்கள். நீலகிரியில் உள்ள பயிர்த்தொழில் முழுக்க முழுக்கப் படகர்களின் உழைப்பையே நம்பி நடைபெறுகிறது. நீலகிரியின் கிழக்குப்பாதியில் இவர்கள் நிறைய வாழ்கின்றனர். குந்தா பீட பூமியில், தோட்டக் கூலிகளாக நிறைய பேர் பணிபுரிகின்றனர். சிலர் தங்களுக்குரிமையான நிலங்களில் பயிர்த் தொழில் புரிந்து வாழ்கின்றனர். தோட்டங்களில் உழுவதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் பெண்களே செய்து கொள்கின்றனர். நகரங்களில் கூலிவேலை செய்வதற்காக ஆண்கள் நிறையபேர் வருகின்றனர். படகர்கள் சிலர் கொட்டுக்காரராகவும் (Artisans), தச்சராகவும், நாவிதராகவும், வண்ணாராகவும் தங்கள் இனத்தார்க்குப் பணிபுரிகின்றனர். கொரலியும், சாமையும் இவர்களுடைய முக்கிய உணவுப் பொருள். உணவுப் பொருள் பயிரிட்டது போக எஞ்சிய நிலங்களில் உருளைக்கிழங்கு, குச்சி வள்ளிக்கிழங்கு முதலியவற்றைப் பயிரிட்டு விலைக்கு விற்கின்றனர். இவர்கள் பரம்பரையாகப் பரம ஏழைகள். ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு, இவர்களுடைய வாழ்க்கைத்தரம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இவர்கள் இயற்கையிலேயே அஞ்சும் இயல்புடைவர்கள். பேசும் பொழுது மிகவும் பணிவோடும் அடக்கத்தோடும் பேசுகின்றனர். இங்குக் குடியேறிய காலத்திலிருந்து தோடர்களுக்கு அஞ்சி, அவர்களுக்கு அடங்கியவர்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர். இப்பொழுது கூடத் தங்கள் விளைச்சலின் ஒருபகுதியை ஆண்டுதோறும் அவர்கட்கு வழங்கி வருகின்றனர்.

உருவம்

நீலகிரி மலைமேல் சென்றவுடன் எளிதில் படகர்களை அறிந்து கொள்ளலாம். திரும்பிய பக்கமெல்லாம் அவர்களுடைய கொச்சைக் கன்னடம் நம் காதைத் துளைக்கும். சிறிய உருவமும், ஒல்லியான உடற்கட்டும், மா நிறமான மேனியும் உடையவர்கள். ஆண்கள் வண்ணக் கரையிட்ட வெள்ளாடையை இடுப்பில் உடுத்துக் கொள்கின்றனர். மேலே சொக்காயணிந்து, அதற்கு மேல் தடித்த கோட்டு (waist coat) அணி கின்றனர். பெண்கள் மார்பை மூடும்படி அக்குளைச் சுற்றிக் குறுகலான மேலாடை யணிகின்றனர். கீழே சேலை உடுத்துக் கொள்கின்றனர். தலையில் எப்பொழுதும் ஒரு துணியைச் சுற்றிக் கொள்கின்றனர். ஆண்களும் பெண்களும் எப்போதும் மலர்ந்த முகத்துடன் காட்சியளிக்கின்றனர்.

பிரிவுகள்

படகர்கள் ஆறு பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். உடையார், ஆருவா, அதிகாரி, கனகர், படகர், தொரியர் என்பவையே அப்பிரிவுகள். உடையார் பிரிவினர் மற்ற ஐவரையும்விட உயர்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். இன்று கூட மைசூர் நாட்டில் வாழும் செல்வர்கள் உடையார் என்ற பெயரால் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். மைசூர் மன்னர் கூட உடையார் குலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொரியர் மற்ற எல்லாப் பிரிவினரையும்விடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். மற்றப் பிரிவினர்க்கு இவர்கள் அடிமை வேலை செய்து வாழ்கின்றனர். ஆருவா என்னும் பிரிவினர் மற்றையோர்க்குப் பார்ப்பனத் தொழில் புரிந்து வாழ்கின்றனர். படகர்கள் மைசூரிலிருந்து இங்குக் குடி புகுந்த பொழுது, உடன்வந்த பார்ப்பனர்களே இப்பிரிவினர் என்று. கருதப்படுகின்றனர்.

பூப்பெய்தல்

ஒரு பெண் பூப்பெய்தியதும், வீட்டிலிருந்து விலக்கி, அவளை ஒரு தனிக்குடிசையில் படகர்கள் வைத்துவிடுவார்கள். அடுத்த உவாநாள் (பெளர்ணமி) வரை அப் பெண் அக்குடிசையிலேயே இருக்கவேண்டும். மற்ற வீட்டுப் பெண்களெல்லாம் நாள்தோறும் அக்குடிசைக்கு மாவு கொண்டு சென்று, உணவு சமைத்து ஒருங்கிருந்து உண்பர். உவா நாளன்று வீட்டுக்கழைக்கும் சடங்கு நடைபெறும். அன்று அப்பெண்ணை நீரில் குளிப்பாட்டுவர். புத்தாடை அணிவித்து வீட்டிற்கு வெளியில் உட்கார வைப்பர். வானத்தில் முழு நிலா தோன்றியதும், ஐந்து பெண்கள் கூடி அப்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் செல்வர். தாய் மகளை வரவேற்று, "நல்ல வீட்டையும், அன்புள்ள கணவனையும் ஆற்றல்மிக்க மகனையும் பெறுவாயாக“ என்று வாழ்த்துவாள். உள்ளே சமைத்து வைக்கப்பட்ட உணவை அப்பெண்ணுக்குப் படைப்பர். அவ்வுணவில் சிறிதளவு உண்டு, மீதியை அண்டை வீடுகளிலுள்ள முதிய பெண்களிடம் எடுத்துச்சென்று வணங்குவாள். அக்கிழவியரும், தாய் முன்பு வாழ்த்தியது போலவே வாழ்த்துவர்.

திருமணம்

படகர்கள் வீட்டில் ஒரு பெண் பிறந்தவுடன், 10 ரூபாய் பரிசமாக வாங்கிக்கொண்டு, யாராவது ஓர் உறவினருக்கு அக்குழந்தையை மருமகளாக விற்று விடுவது வழக்கம். பருவம் எய்தும் வரையிலும் அப் பெண் தாய் வீட்டிலேயே இருப்பாள். பிறகு கணவன் வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். சிறிது காலத்துக்கு முன் வரையில் படகர்களிடையே காதல் மணம்தான் பெரு வழக்காக இருந்தது. உடையார் பிரிவினர் மட்டும் காதல் மணத்தை ஆதரிப்பதில்லை. ஓர் இளைஞன் ஒரு பெண்ணை விரும்புகிறானென்றால், உடனே தன் பெற்றாேரின் ஒப்புதலோடு சில பரிசுப் பொருள்களை எடுத்துக் கொண்டு அப்பெண்ணின் வீட்டுக்குச் செல்லுவான். அப்பெண்ணின் பெற்றாேருக்கு அப் பரிசுப் பொருள்களை வழங்குவான். பிறகு சில நாள் அவர்கள் வீட்டிலேயே தங்கி, அப்பெண்ணோடு உளங்கலந்து பழகுவான். எந்தவிதக் கட்டுப்பாடும் அவர்களுக்குக் கிடையாது. கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் விரும்பி மனமொத்த காதல் கொண்டால் திருமணம் நடைபெறும். ஆனால் இம் முறை சில விபரீதமான முடிவுகளையும் கொண்டுவந்து விடுகிறது. சில இளைஞர்கள் இம்முறையைத் தங்கள் பொழுதுபோக்கிற்குரிய கருவியாகக் கருதத் தொடங்கினர். "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப“ என்ற தொல்காப்பியச் சட்டம் இங்கும் அமுலாக்கப்படுகிறது. இவ்வழக்கம் சிறிது சிறிதாகத் தேய்ந்து வருகிறது. சட்ட வரம்பிற் குட்பட்ட திருமணம் மலர்கிறது.

திருமணம் எப்பொழுதும், மணமகன் இல்லத்திலேயே நடைபெறுகிறது. சடங்குகள் அதிகமாக ஒன்றும் இல்லை. மணப்பெண்ணைக் குடத்தில் நீர் கொண்டுவரச் சொல்லுவார்கள், அவ்வாறு செய்வதன் மூலம், அப்பெண் கணவன் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகப் பொருளாம். அச்சடங்கு முடிந்ததும் மணப்பெண், மாப்பிள்ளை வீட்டிலுள்ள எல்லாரையும் வணங்கவேண்டும். கோதர்களின் இசை முழங்க எல்லாருடைய முன்னிலையிலும் பெண்ணின் கழுத்தில் மணமகன் தாலிகட்டுவான். பரிசப்பணம் மாப்பிள்ளை வீட்டாரின் சக்திக்குத் தகுந்தபடி கொடுக்கப்படும். 200 ரூபாய் வரையில் பரிசப்பணம் கொடுப்பதுண்டு. ‘கூறைப்பணம்' என்று ஒரு குறிப்பிட்ட தொகையை மாப்பிள்ளை வீட்டார் பெண்ணுக்களிப்பது வழக்கம்.

மணவிலக்கு : படகர்களிடையே மணவிலக்கு அதிகமாகக் காணப்படுகிறது. கணவன் வீட்டார் திருமணத்தின்போது கொடுத்த பரிசத்தொகையையும், கூறைப்பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டால், எப்பொழுதும் மணவிலக்குப் பெற்றுக்கொள்ளல் எளிது. ஒரு பெண் கருவுற்றவளாக இருந்தால், பஞ்சாயத்தார் முன்னிலையில் ஏழாம் மாதச் சடங்கை (சீமந்தம்) நிகழ்த்திய பிறகே, மணவிலக்கு அளிக்கப்படும். பிறக்கும் குழந்தை கணவனுக்கே உரியது. ஒரு படகர் குலப்பெண் வாழ்க்கையில் திருப்தியும், அமைதியும் கொள்ளும் வரையிலும் எத்தனை முறை வேண்டுமானாலும் மணவிலக்குப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பெண்களின் ஒழுக்கம் சீர்கெடுகிறது என்பது உண்மையே. படகர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் ஒரு பெண் வேறு சாதியினரிடம் தொடர்பு கொண்டால், அச்செயல் மிகவும் இழிந்ததாகவும், பெருங் குற்றத்தின்பாற் பட்டதாகவும் கருதப்படுகிறது. மிகவும் கடுமையாக அப்பெண் தண்டிக்கப்படுகிறாள். சில சமயங்களில் கொலை கூடச் செய்து விடுகின்றனர்.

இறுதிச் சடங்கு :

படகர்களின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் மிகவும் சுவையானவை. இறக்கும் தருவாயில் இருப்பவன் வாயில் ‘வீரராயப்பணம்' என்ற சிறிய தங்க நாணயத்தைப் போட்டு நீரூற்றி விழுங்குமாறு செய்வர். இப் பணத்தின் மதிப்பு நான்கணாதான். யாரேனும் ஒரு படகன் இறந்தவுடன் அச்செய்தியை ஒரு தொரியன் மூலமாக அண்டையிலுள்ள சிற்றூர்களுக்குத் தெரியப்படுத்துவர். தொரியன் இச் செய்தியைப் பிறரிடத்தில் கூறும்போது, தலைப்பாகையைக் கழற்றிவிட்டுப் பணிவோடு கூறுவது வழக்கம். பிணத்தைத் திறந்த வெளியில் ஒரு கட்டிலில் கிடத்துவர். எருமை ஒன்றைப் பிணத்தைச்சுற்றி மூன்று முறை வலமாக இழுத்துவருவர். பிறகு பிணத்தின் கையைத் தூக்கி எருமையின் கொம்பின்மேல் வைப்பர். பாடை தேர் போல் அலங்கரிக்கப்படுகிறது. செல்வர்களாக இருந்தால் பல மாடிகளோடு அலங்காரமாகத் தேர் செய்வர். தேரைப் பொதுவாகத் துணிகளாலேயே அலங்கரிப்பர். பிணத்திற்குப் புத்தாடை அணிவித்துத் தேரில் கிடத்துவர். பிணத்தின் நெற்றியில் இரண்டு வெள்ளிப் பணங்களைப் பதித்து வைப்பர். இறந்தவனுடைய சுற்றத்தார்கள் பிணத்தைச் சுற்றி நின்று கூச்சலிட்டு அழுவார்கள். பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவார்கள். ஆண்களெல்லாம் அரைக்கை மேலுடையும், புதுமாதிரியான தலைப்பாகையும் அணிந்துகொண்டு கோதர்களின் இன்னிசைக் கேற்ப ஆடுவார்கள். எருமைக் கொம்பினால் அமைக்கப்பட்ட பிடியோடு கூடிய அரிவாள், சிறு கோடரி, புல்லாங்குழல், ஊன்று கோல் ஆகிய பொருள்களை ஆசாரி செய்து கொண்டு வந்து, பிணத்தினருகில் தேர் மீது வைப்பான். அடுத்த உலகில் அவனுக்குப் பயன்படுவதற்காக அக்கருவிகள் வைக்கப்படுகின்றனபோலும். சுடுகாட்டுக்குச் சென்றதும் தேரை அழித்துவிடுவர். இறந்தவன் மனைவி தன் நகைகளைக் கழற்றிப் பிணத்திற்கருகில் வைத்துவிட்டுத் திரும்புவாள். ஒரு முதியோன். இறந்தவன் தலையருகில் நின்று அவன் செய்த பாவங்களைப்பற்றி நீண்ட ஒரு பாட்டுப் பாடுவான். அப்பாட்டுப் பின்வருமாறு :

ஆண்டியின் சாவை அறையக் கேட்பீர்!
மாண்ட கன்றின் மாத்தலை யோடு
பூண்ட இவன்பவம் பூண்டோடு ஒழிக;
மண்திணி ஞால வாழ்வதை விட்டு
விண் தனில் வாழ விரைகிறான் தேரில்,
வையகத் தினிலவன் செய்தவை எல்லாம்
பாவம் பாவம் தீராப் பாவம்!
பெற்றோர் செய்த பெரும்பா வத்தையே
மற்றவர் தமக்கு முற்றவே செய்தான் ;
முன்னோர் செய்த முடிவில்பா வத்தையே
பின்னோன் இவனும் பேணியே செய்தான் ; இனத்தவர் செய்த இழிசெயல் எல்லாம்
மனத்தினில் கொண்டு மட்டின்றிச் செய்தான்; பொய்யும் வழுவும் கையக வைப்பு :

செய்யின் எல்லை திருடினான்
இவனே. எளியோர் தம்மையும் ஏழையர் தம்மையும் நலிவே புரிந்து நடுங்கச் செய்தான் ;
அண்டையர் நிலத்தில் மண்டிய பயிரைக்
கண்டதும் உளத்தில் கொண்டனன் பொறாமை ; இறுதிச் சடங்கில் இயற்றிய கன்றைக்
கருதிச் சென்றே கையகம் கொண்டான் ;
மேலோ ரிடத்தில் கோளனாய்ச் சென்றே
பிறர்பழி தூற்றும் பேதையாய் வாழ்ந்தான் ; பாம்பைக் கொன்றான் : பசுவைக் கொன்றான் ;
..................
இப்படி யாக இவன்பவம் நீளும்;
முன்னூறு பாலம் முற்றவே செய்தான் ;
பலியிடப் படுமிக் கன்றின் உயிரோடு
வளியினில் புழுதியாய் இவன்பவம் தொலைக ; கன்றின் காலைக் கையினில் பற்றி
மன்றில் ஆடும் மங்கை பாகன்
நின்றிவ் வுலகம் காக்கும்
நன்றுடை பதியே சென்றிவன் சேர்க!

பாடல் முடிந்ததும் ஓர் எருமைக் கன்றைப் பிணத்தினருகில் நிறுத்திக் கோடரியின் பின்புறத்தால் தாக்கிக் கொல்லுவர். இறந்தவன் செய்த பாவங்களையெல்லாம், பலியிடப்பட்ட அக்கன்று ஏற்றுக் கொள்கிறதாம். இவன் தன் பாவங்களினின்றும் நீங்கிச் சிவனுலகை அடைகின்றானாம், யூதர்களிடம் பண்டைக் காலத்தில் இத்தகைய நம்பிக்கை இருந்ததாக விவிலிய நூல் கூறுகின்றது. யூதர்கள் இறந்தவன் பாவத்தை ஆட்டின் (Scape goat) தலையில் ஏற்றிக் கொன்றனர். நீலகிரி மலையில் வெள்ளையர்கள் குடியேறியதும், இப் பழக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட்டனர். இப்பழக்கம் இப்பொழுது அநேகமாக இல்லை என்று கூறலாம்.

படகர்கள் பிணத்தை எரிப்பதும் உண்டு ; புதைப்பதும் உண்டு. புதைக்கப்பட்ட பிணத்திற்கே 'பால் தெளித்தல்' என்னும் சடங்கு நடைபெறும், எரிக்கப் பட்ட பிணத்தின் எலும்புகளைப் பொறுக்கி, அவைகளைப் போடுவதற்கென்று ஒவ்வோர் ஊரிலும் தோண்டப்பட்டுள்ள குழியில் போட்டுவிட்டுத் திரும்புவார்கள். உடையார் பிரிவினர் மட்டும், சமவெளியில் வாழும் லிங்காயத்தார்களைப்போல் உட்கார வைத்துப் புதைப்பர்.

சமய வாழ்வு :

படகர்கள் மிகவும் பழமை விரும்பிகள், இந்து சமயக் கொள்கைகளில் அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். சிவபெருமான்தான் அவர்களுக்குத் தலையாய கடவுள். மகாலிங்கசாமி, மாதேசுவரன், திருமால் முதலிய வேறு கடவுளர்களையும் அவர்கள் வணங்குவதுண்டு. மேட்டுப்பாளையத்திற்கருகில் அரங்கசாமி மலையிலுள்ள அரங்கசாமித் தெய்வத்தையும் அடிக்கடி சென்று வணங்குவார்கள். இவைகளன்றி வேறுபல சிறு தெய்வங்களையும் வணங்குகிறார்கள். இவர்களில் கரைராயனும், ஹேதி (ஹேதம்மா)யும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹேதம்மாளுக்குப் பல இடங்களில்கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. தன் கணவன் இறந்த பொழுது உடன்கட்டை ஏறி மாண்ட காரணத்தால், படகர்கள் இவளைப் பெருமதிப்போடு போற்றி வணங்குகின்றனர். ஹேதம்மா கோயிலுக்கு எதிரில் திருவிழாக்காலங்களில் 'தீமிதித்தல்' நடைபெறும். ஹேதம்மா வழிபாடும், ஒருவகைப் பத்தினி வழிபாடுதான். ஓங்காளியம்மன், துரோபதையம்மன், மாரியம்மன் ஆகிய பத்தினித் தெய்வங்களின் திருவிழாக்களில் 'தீமிதித்தல்' நடைபெறுவதைப் போன்றதே இதுவும். (ஆனால் தமிழகத்தின் வீர பத்தினித் தெய்வமான கண்ணகிக்கு விழா எடுப்பதை மட்டும் நாம் மறந்து விட்டோம்)

வேறு செய்திகள் :

நீலகிரி மலைமீது வாழும் மக்களில் மிகவும் முக்கியமானவர்கள் படகர்களே. இப்போது ஏறக்குறைய 50,000 பேர் நீலகிரியில் வாழ்கின்றனர். இவர்களுடைய திருவிழாக்களில் கண்டு மகிழ்தற்குரிய சிறப்புவாய்ந்தது, அறுவடைக் காலங்களில் நடைபெறும் 'இரா விருந்து' (Fire feast) என்னும் விழாவாகும். நல்ல விளைச்சல் ஏற்பட வேண்டி, இறைவனைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்விழா கொண்டாடப்படுகிறது. படகர்கள் இசைப்பிரியர்கள். அவர்கள் இசை தனித் தன்மை வாய்ந்தது. பலவித இன்னேசை பயப்பது. அவர்கள் இசை பண்பட்டதல்ல என்றாலும், தொலைவிலிருந்து கேட்போருக்கு, அவர்களுடைய செவ்வோடு போட்ட குடிசைகளும், அவற்றைச் சூழ்ந்துள்ள எழில்மிக்க காடுகளும், அக்காடுகளில் மலர்ந்துள்ள கண்ணைக் கவரும் வண்ண மலர்களும் நினைவில் தோன்றாமலிருக்க முடியாது.

படகர்கள் இப்போது பழங்குடி மக்களாகக் கருதப்படும் நிலையில் இல்லை. நாகரிக மக்களாக மாறிவருகின்றனர். மேலை நாட்டினரைப் போல் காலுறையும், மூடுசெருப்பும், கோட்டும், தொப்பியும் அணிந்து காட்சியளிக்கின்றனர். கல்வி வளர்ச்சியும் அவர்களிடம் காணப்படுகிறது. பெரிய தோட்ட முதலாளிகளாகவும், வணிகர்களாகவும் பலர் உள்ளனர். ஒவ்வொரு படகர் குடும்பத்துக்கும் குறைந்தது ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. உழவுக்காலம் தவிர மற்ற நாட்களில் கூலிகளாகப் பணிபுரிகின்றனர். பெரிய இலட்சாதிபதிகள் கூட ஒரு சிலர் இவர்களிடையே உள்ளனர். படகர்களிடமிருந்து நிலங்களை மற்றையோர் வாங்குவதை அரசாங்கம் சட்ட பூர்வமாகத் தடுத்திருக்கிறது. பழமையின் பிடிப்பிலிருந்தும், மூடப்பழக்க வழக்கங்களிலிருந்தும் இவர்கள் மீண்டு வருகின்றனர்.

தோடர் : நீலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்களில் மிகவும் தொன்மையானவர்கள் தோடர்களே. இவர்கள் இயற்கை எழில் மிக்க நாட்டுப்புற வாழ்வில் (Arcadian life) ஊறிப் போனவர்கள். மற்றைய மக்கள் கடைப்பிடித்தொழுகும். நாகரிகத்தை விரும்பாதவர்கள். எருமைக் கூட்டத்தைத் தவிர வேறு எதையும் செல்வமாகக் கருதாத மேய்ச்சல்காரர்கள். உலகப் பெருங் கவி சேக்ஸ்பியர் எழுதியுள்ள இன்பியல் நாடகங்களான 'விரும்பிய வண்ணமே ' (As YouLikeIt) 'நடு வேனிற்கனவு' (Mid Summer Nights' Dream) என்ற இரண்டிலும் சித்தரித்துக் காட்டப்படும் இயற்கை வாழ்வின் எழில் நலத்தைக் காண விரும்புவோர் தோடர் வாழும் தொட்டபெட்டாவிற்குச் சென்றால் காணலாம். புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவி, கவலையென்றால் என்னவென்று அறியாமல் இயற்கையோடு இயற்கையாக ஒன்றிவாழும் அவர் கள் வாழ் வைக்காண்போர், தாங்களும் இயற்கைவாழ் மக்களாக (Pastoral Nomads) ஏன் மாறிவிடக்கூடாது? என்று எண்ணாமல் இருக்கமாட்டார்கள். இலக்கிய உணர்வுடையோர் அங்குச் சென்றார்களானால், சங்க காலக் குறிஞ்சித்திணை அவர்கள் கண்முன் நிழலாடும்.

தோடர்கள் பெருமிதமும், அஞ்சாமையும், கவர்ச்சியூட்டும் உடற்கட்டும் வாய்க்கப்பெற்றவர்கள். வெள்ளையர்களிடம் அஞ்சாமையோடு உரையாடுவார்கள். ஆனால் சோம்பேறிகள், எருமை மேய்ப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் செய்ய விரும்பாதவர்கள். நீலகிரி மலை தங்களுக்குப் பரம்பரை உரிமையுடையதென்று கருதுபவர்கள். முதலில் குடியேறியபோது, படகர்கள் இவர்களுக்கு அஞ்சியவர்களாகவே வாழ்ந்தனர். நிலங்களைப் பயிரிட்டு விளைந்த தானியத்தின் ஒரு பகுதியைக் கப்பம் வழங்குவதுபோல் தோடர்களுக்குப் படகர்கள் வழங்கிவந்தனர். இன்றும் அப்பழக்கம் இருந்து கொண்டு வருகிறது.

தோடர்களின் தொகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இதற்குப் பலகாரணங்கள் உண்டு. நோயினால் துன்புற்று நிறையப்பேர் மடிகின்றனர். இவ்வினப் பெண்களில் மலடிகள் அதிகம். பெண் குழந்தை பிறந்ததும் கொன்றுவிடும் பழக்கம் (Female Infanticide) இவர்களிடம் உண்டு . ஒருபெண் பல ஆண்களைத் திருமணம் செய்து, கொள்ளும் பழக்க (Polyandry)மும், பல காதலர்களை ஏற்றுக்கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் உண்டு . இவ்வளவு தடைகளை வைத்துக்கொண்டு, அவர்களுடைய இனம் எவ்வாறு பெருக முடியும்? நீலகிரி மலையில் மொத்தம் 1000 பேர்களே வாழ்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தாலும் பழங்குடி ஆராய்ச்சியாளரின் கவனத்தை இவர்கள் ஈர்க்கும் அளவுக்கு, இந்திய நாட்டில் உள்ள எந்தப் பழங்குடியினரும் ஈர்ப்பதில்லை. நீலகிரி மலைமீது இவர்கள் கொண்டிருந்த தனியுரிமை பிறரால் கொஞ்சங் கொஞ்சமாகப் பறிக்கப்பட்டுவிட்டது. பொருளாதாரத்திலும், உள்ளமகிழ்ச்சியிலும் முன்னைவிடச் சற்றுக் குறைந்தவர் களாகவே காணப்படுகின்றனர். இந்திய ஊழியர்கழக (Servents of India Society)மும், சென்னை அரசாங்கமும் இவர்கள் முன்னேற்றத்திற்குத் துணைபுரிகின்றன. இவர்களுடைய குழந்தைகளுக்குக் கல்வி வசதி அளிக்கப்படுகிறது. மருத்துவ உதவியும், பொருளுதவியும் செய்யப்படுகின்றன. இப்பொழுது சோம்பலை நீக்கி ஒருசிலர் தோட்டக் கூலிகளாகப் பணி யாற்றுகின்றனர்.

தோற்றம் :

இவர்களுடைய தோற்றத்தையும், உடலமைப்புகளையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலதிறப்பட்ட செய்திகளைக் கூறுகின்றனர். இவர்களுடைய மூக்கு ரோமானிய இனத்தாருடையதைப் போன்றது; முகச் சாயல் கிரேக்க இனத்தைச் சார்ந்தது. எனவே ஆராய்ச்சியாளர்கள் இவ் வினத்தாரை ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். நீண்ட மேலாடை போர்த்துக்கொண்டிருப்பதால் இவர்கள் ஈப்ரு (Hebrews) இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். சமவெளி மக்களால் துரத்தப்பட்டு, இம் மலைகளில் தஞ்சம் புகுந்த சிதியர் இனத்தாரே இவர்கள் என்று கூறுவோரும் உண்டு. தோடர்களின் சமயச் சடங்குகளில் பாடப்படும் பாடல்களை ஆராய்ந்த கிரேக்க நாட்டு ஆராய்ச்சியாளரான எச். எச், பிரின்ஸ் பீட்டர் (H. H. Prince Peter) என்பார், சுமேரியர்கள் வழிபட்ட கடவுளரின் பெயர்களும், அக் கடவுளர்களைப் பற்றிய செய்திகளும், இவர்களுடைய கடவுளர்களையும், செய்திகளையும் ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார். எனவே தோடர்கள் சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அவர் எண்ணுகிறார்.

தோடர்குல ஆண்மகனின் சராசரி உயரம் 5 அடி 7 அங்குலம். பெண்களின் உயரம் 5 அடி 1 அங்குலம். சமவெளியிலுள்ள மக்களைவிட அழகிய நிறத்தைப் பெற்றிருக்கிறார்கள். வடித்தெடுத்த சிலை போன்ற உடற்கட்டுடையவர்கள். ஆண்கள் தலையில் அடர்த்தியான மயிரைப் பெற்றிருக்கின்றனர். பெண்கள் தங்களுடைய கூந்தலை வெண்ணெயிட்டு நீவி, உருண்டையான குச்சியில் சுருள்களாகச் சுற்றிப் பக்கங்களில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் மொத்தமான போர்வையொன்று மட்டும் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். அப் போர்வை வெண்மை நிறமானது. ஓரங்களில் சிவப்பும் நீலமும் கலந்த வண்ணக் கரைகளையுடையது. இப் போர்வையைப் 'புட்குலி' என்று கூறுகின்றனர். இப் போர்வையைக் கழுத்திலிருந்து பாதங்கள் வரையில் போர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் கோவணம் அணிகின்றனர்.

ஆடவர்கள் உடலுரமும், பெருமிதமான தோற்றமும், நுண்ணறிவும், உற்சாகமும், சலிப்பற்ற தன்மையும், கூரிய பார்வையும், பிறரை அடக்கியாளும் நம்பிக்கையும் இயற்கையாகவே பெற்றிருக்கின்றனர். இவர்கள் தங்கள் மயிரை வெட்டுவதுமில்லை; சிரைப்பதுமில்லை. எப்போதும் சடாமுடியோடு காட்சியளிப்பார்கள். பெண்கள் அழகிய தோற்றமுடையவர்கள். ஆனால் அறிவில் குறைந்தவர்கள். ஒழுக்கத்தைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், பச்சை குத்திக்கொள்ளும் பழக்கம் இவர்களிடம் உண்டு.

வீடுகள் :

தோடர்கள் வாழும் சிற்றூருக்கு 'மண்டு' என்று பெயர். ஒவ்வொரு மண்டுவிலும் நான்கு அல்லது ஐந்து வீடுகளே உள்ளன. இவ் வீடுகள் அரை வட்ட வடி வமானவை; பீப்பாயை நீள வாக்கில் குறுக்காக அறுத்துக் கவித்து வைத்தாற்போல் தோன்றுகின்றன. மரப் பலகைகளாலும், சட்டங்களாலும் இவ் வீட்டை அமைத்து, மேலே புற்களையும், தழைகளையும் போட்டுக் கூரை வேய்கிறார்கள். வீட்டிற்கு முன்னால் மட்டும் ஒரே ஒரு வழியுண்டு. அது குறுகலானது ; இரண்டடி சதுர அளவுள்ளது. வீட்டிற்குள் செல்வோர் குழந் தைகளைப் போல் நான்கு காலில் தவழ்ந்துகொண்டே செல்ல வேண்டும். வீட்டிற்குள் படுத்துறங்குவதற்கென்று மேடைகள் அமைக்கப்பட்டிருக்கும். காற்றும் கதிரவன் ஒளியும் உள்ளே மருந்துக்குக்கூடக் கிடையா. வீட்டைச் சுற்றி நாற்புறச் சுவர் அமைந்திருக்கும். எருமைகள் உள்ளே நுழைவதற்கென்று தனி வழியொன்று அச்சுவரில் இருக்கும்.

மொழி :

தோடர்கள் பேசும் மொழி, அங்குள்ள மற்ற பழங்குடி மக்களின் மொழிகளினின்றும் மாறுபட்டிருக்கிறது. அவர்களுடைய மொழி 'துதம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. திராவிட மொழியாராய்ச்சி வல்லுநரான கால்டுவெல் துரைமகனார், திருந்தாத திராவிட மொழிகளில் இதையும் சேர்த்திருக்கிறார். மற்ற திராவிட மொழிகளைவிடத் துதம் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக மொழியாராய்ச்சி வல்லுநர்கள் கூறுகிறார்கள். இம் முடிவிலிருந்து ஓருண்மை மட்டும் புலனாகிறது. அதாவது தோடர்கள் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதே. தோடர்களில் தார்த்தர் (Tarthar), தீவலி (Teivali) என்ற இரு பிரிவினர் உண்டு . இவர்கள் வெவ்வேறு காலங்களில் இங்குக் குடியேறியவர்கள்.

அன்றாட வேலை :

தோடர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை. காலையில் எழுந்ததும், கட்டை விரல்களை மூக்கிற்கெதிரில் வைத்து, மற்ற விரல்களை அகல விரித்துப் பரிதி வணக்கம் செய்வார்கள். பிறகு எருமைத் தொழுவத்திற்குச் சென்று பால் கறப்பார்கள். முதல் நாள் பிரையிட்டு உறைந்த தயிரைக் கடைவார்கள். உணவு உண்டபின் எருமைகளை ஓட்டிக்கொண்டு செல்வார்கள். நாள் முழுவதும் எருமை மேய்த்துக்கொண்டு சோம்பலாகப் பொழுது போக்குவர். மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி அதை வணங்குவர். எருமைகளைத் தொழுவத்தில் அடைத்த பின் உண்டு உறங்குவர். பால் கறத்தல், எருமைகளைக் கண்காணித்தல் முதலிய பணிகளை ஆண்கள் மேற்கொள்வர். வீட்டு வேலைகளைப் பெண்கள் செய்வர்.

சமய வாழ்வு :

கதிரோன் வணக்கத்திலிருந்து, இவர்கள் இயற்கையைக் கடவுளாகக் கொள்ளும் வழக்கமுடையவர்கள் என்பது புலனாகிறது. அதோடு அவர்களுக்கே உரித்தான வேறுபல கடவுள்களையும் வணங்குகின்றனர். தோடர்களின் வழிபாட்டிற்குரிய முக்கியமான கடவுள் ஆன் (On) ஆகும். ஆனின் தந்தை பிதி (Pithi). ஆனுக்கு ஒரு சோதரியும் உண்டு. அவள் பெயர் தீகிர்சி (Teikirzi). பிதி மிகவும் பழமையான கடவுள். பிதிதான் தோடர்களையும், அவர்களுடைய செல்வமான எருமைகளையும் படைத்தார் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் பிதி இப்போது இவ்வுலகில் இல்லையாம், இறந்தோர் வாழும் உலகின் தலைவராக இருக்கிறாராம். தோடர் இனத்தின் முதல் தோற்றத்தைப்பற்றி அவர்களிடையே ஒரு கதை வழங்குகிறது.

பிதியும் அவர் மனைவியும், ஒரு நாள் குந்தா மலையின் உச்சிக்குச் சென்றார்களாம். ஒரு நீண்ட இரும்புச் சட்டத்தை அவ்வுச்சியின் மேல் குறுக்காக வைத்து, அச்சட்டத்தின் ஒரு நுனியில் பிதியும், மற்றொரு நுனியில் அவர் மனைவியும் நின்று கொண்டார்களாம். பிதி அந்நுனியிலிருந்தவண்ணம் பூமியிலிருந்து 1800 எருமைகளை மேலே கொணர்ந்தாராம். பிதியின் மனைவி, மற்றொரு நுனியிலிருந்துகொண்டு 1600 எருமைகளைக் கொணர்ந்தாராம். பிதி கொண்டுவந்த எருமைகளே, இப்பொழுது தோடர்களிடையே உள்ள புனித எருமைகளின் (Sacredbuffaloes) முன்னோர்கள். பூமியிலிருந்து பிதியினால் கொண்டுவரப்பட்ட கடைசிப் புனித எருமையின் வாலைப் பிடித்துக்கொண்டு தோடர்களின் முன்னோன் வந்தான். அவன் தன் மார்பு எலும்புகளில் ஒன்றை எடுத்து, முதல் தோடர்குலப் பெண்ணை உருவாக்கினான். ஒருநாள் பிதியின் மகனான ஆன் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டானாம். மகனின் பிரிவைத் தாளமுடியாத பிதி, தாமும் இறந்தோர் வாழும் உலகிற்குச் சென்று, அவ்வுலகின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அங்கேயே இருக்கிறாராம். பிதிக்குப் பிறகு அவர் மகளான தீகிர்சி தோடரைக் காக்கும் பணியை மேற்கொண்டு, அவர்களின் மதிப்பிற்குரிய கடவுளாக வீற்றிருக்கிறாள். உண்மையிலேயே இக்கதையும், இக் கதையில் வரும் கடவுளர் பெயர்களும் கிரேக்க, சுமேரிய பாணியிலேயே அமைந்துள்ளன. இக் கதையிலிருந்தும், இவர்களுடைய பழக்க வழக்கங்களிலிருந்தும், இவர்கள் தங்களுக்கென ஒரு தனிச் சமயத்தையும், கடவுளர்களையும் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

சில சமயங்களில் தோடர்கள் இந்து சமயக் கடவுளர்களையும் வழிபடுகின்றனர். இவர்கள் வணங்கும் இந்து சமயக் கடவுள்களில் குறிப்பிடத்தக்கது 'நஞ்சன்' என்பதாகும். பிள்ளைப்பேற்றுக்காக மட்டும், இக்கடவுளை வணங்குகின்றனர். புனித மந்தையின் குரு, மந்திரவாதி, மருத்துவன் ஆகிய ஒவ்வொருவருக்கும் தனித்தனிக் கடவுளுண்டு. குருமார்களின் சடங்குகளில் கூறப்படும் மந்திரம் மலையாள மொழியிலேயே அமைந்துள்ளது.

கோயிலும் புனித மந்தையும் :

தோடர்களின் கோயில்கள் அவர்களுடைய குடிசைகளைப் போலவே காட்சியளிக்கின்றன. அவர்களுடைய குடிசைக் கூட்டத்திலிருந்து, சிறிது தூரத்தில் இக் கோயில்கள் அமைந்திருக்கின்றன. பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. தங்களைப் போலவே கடவுளும் எருமைகளை மேய்த்துக்கொண்டு மலையுச்சியில் வாழ்வதாகத் தோடர்கள் எண்ணுகிறார்கள். ஆனால் மனிதர்கள் கண்ணில் தென்படுவதில்லையாம். தங்கள் மந்தையிலிருந்து, கோயிலுக்குச் சில எருமைகளை விட்டுவிடுகிறார்கள். அவ்வாறு விடும் எருமைகளைப் 'புனித எருமைகள்' என்று அவர்கள் கூறுகிறார்கள், அவைகள் கடவுளுக்குச் சொந்த மானவை என்று கருதுகிறார்கள். இப்புனித எருமைகளைக் கண்காணிக்க ஒரு குரு அமர்த்தப்படுகிறான். அவனை எல்லாரும் பாலோல் (Palol) என்று அழைக் கின்றனர். பாலோல் தான் புனித எருமைகளுக்கும் தோடர் களுக்கும் இடையிலிருந்து பணிபுரிபவனாக. {Intermediary) விளங்குகிறான். அவனுக்குத் துணையாக ஒரு பணியாளன் உண்டு. அவனைக் 'கல்டமொக்' (Kaltmokh) என்று அழைக்கின்றனர்.

தோடரின் கோயில் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முற்பகுதி பாலோலின் இருப்பிடமாகப் பயன்படுகிறது. உட்பகுதி கடவுளின் இருப்பிடம். கோயிலிலுள்ள எருமைப்பண்ணைக்கு 'டி' (Ti) என்று பெயர். இத்தகைய பண்ணை சீகூர் (Sigur) சிகரத்திற்கருகில் உள்ளது. உதகமண்டலத்திலுள்ள ஐரோப்பியர்கள் இதைத் தோடர் கோயில் (Toda Cathedral) என்றே அழைக்கின்றனர். புனித எருமைகளிலிருந்து கிடைக்கும் வருவாய் கோயில் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. கோயிலின் முற்பகுதியில் பாலோல் உறங்குவது வழக்கம். இந்துக் கோயில்களில் கருவறை (மூலத்தானம்) எவ்வளவு புனிதமாகக் கருதப்படுகிறதோ, அது போல இதன் உட்பகுதி தோடர்களால் கருதப்படுகிறது. அதனுள் பாலோலைத் தவிர வேறு யாரும் நுழையக் கூடாது. புனிதப் பண்ணையில் பணிபுரிபவர்கள் கூட உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. புனித எருமைகளின் பாலைக் கறத்தல் முதலிய பணிகளைக்கூடப் பாலோல் தான். நேரடியாகச் செய்வது வழக்கம், கோயிலுக்குள் இருக்கும் போது பாலோல் ஒரே ஒரு லங்கோடுதான் அணிவது வழக்கம். பாலோல்அணியும் போர்வை பழுப்பு அல்லது கருப்பு நிறம் உடையதாக இருக்கும். கோயில் வழிபாட்டிற்கும், புனித எருமைகளின் உபயோகத்திற்கும் ஒரு நீரோடை பயன்படுத்தப்படும். அதன் நீரை வேறு யாரும் பயன் படுத்தக்கூடாது. பாலோல் எதிர்பாராவிதமாக, வேறு ஏதேனும் குடிசையில் உறங்க நேரிட்டால், தரையையும், உறங்கும் மேடையையும் தவிர, அக் குடிசையிலுள்ள வேறு எப்பொருளையும் தொடுவது கிடையாது. பெரிய கோயிலில் உள்ள பாலோல் மிகவும் புனிதமானவனாகக் கருதப்படுகிறான். சந்தைக்குச் செல்லுவதும், பெண்ணோடு உடல்தொடர்பு கொள்வதும், பிறரோடு பழகுவதும் அவனால் விலக்கப்படுகின்றன. திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் பிறர் அவனை நெருங்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இக்கட்டுப்பாடுகளெல்லாம் இப்பொழுது தளர்ந்து வருகின்றன. ஒரு குரு புனித மந்தைகளின் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாகச் சில சடங்குகள் நடத்தப்படுகின்றன. கோயிலுக்கென்று ஒதுக்கப்பட்ட புனித அருவியில் குளித்து, அதன் நீரை உட்கொள்வது அச்சடங்குகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உணவு :

தோடர்கள் பொதுவாக மரக்கறி உணவே உண்கின்றனர். பாலும் தயிரும் அவர்களுடைய இன்றியமையாத உணவுப் பொருள்கள். சடங்குகளில் எருமைக் கன்றுகளைப் பலியிடும்போது மட்டும் அவற்றின் ஊனை உண்கின்றனர். வேட்டையில் மான் கிடைத்தால், அதையும் விருப்பத்தோடு உண்கின்றனர். மது அருந்துவதில், இவர்கள் பெரு விருப்பம் உடையவர்கள்.

பலியிடுதல் :

எருமைக் கன்றுகளைப் பலியிடுதல் இவர்களிடம் பெரு வழக்காகப் பரவியிருந்தது. கடவுளைத் திருப்திப் படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஒவ்வொரு மண்டுவிலும் ஓர் எருமைக் கன்றும், ஒவ்வொரு 'டி'யிலும் இரண்டு கன்றுகளும் பலியிடப்படுகின்றன. பலவித நுணுக்கமான சடங்குகள் அப்போது நடைபெறும். சடங்குகளெல்லாம் முடிந்தபிறகு பலியிடப்பட்ட கன்றின் ஊனை எல்லாரும் உண்பர். பாவங்களைப் போக்கிக்கொள்வதற்கும், துயரங்களைத் தீர்த்துக்கொள்வதற்கும்கூட, இவர்கள் பலியிடும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர். தேனும், பழங்களும் மலைச் சரிவில் பெருகவேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் திங்களில் பாலோலும் அவன் துணைவனும் நெருப்பு மூட்டி வேள்வி செய்வது வழக்கம். அரசியலாரின் தலையீட்டால், பலியிடும் பழக்கம் குறைந்து வருகின்றது.

பில்லி சூனியம் :

பில்லி சூனியம் எல்லாத் தோடர்களுக்கும் ஓரளவு தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு நன்றாகத் தெரியும். மேன்மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. இக்கலை பரம்பரையாகப் பயிலப்பட்டு வருகிறது. பிற இனத்தார் இதனால் தான் தோடர்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். இவ்வச்சத்தினாலேயே ஆண்டுதோறும் நன்கொடையாக இவர்களுக்குத் தானியம் வழங்குகின்றனர். மனித மயிரில் ஐந்து கல்லைக்கட்டி, மந்திர உச்சாடனம் செய்து, அவற்றைத் துணியில் கட்டி, எதிரியின் வீட்டுக் கூரையில் செருகி விடுவது வழக்கம். அல்லது அவன் வாழும் மண்டுவிற்கருகிலுள்ள ஷோலாவில் புதைத்து விடுவது வழக்கம்.

குழந்தைக் கொலை :

தோடர்களின் தொகை நாளுக்கு நாள் அருகிக் கொண்டு வருவதற்குப் பெண் குழந்தைக்கொலை முக்கியக்காரணம் ஆகும் என்று முன்பே குறிப்பிட்டேன். பெண் குழந்தைகளின் மீது அவர்கள் கொண்ட வெறுப்பிற்குரிய உண்மையான காரணம் விளங்கவில்லை. பெண்குழந்தை பிறந்ததும், எருமைத் தொழுவத்தின் வாயிலில் அதைக் கிடத்திவிடுவார்கள். மலர்ந்து மணம் வீசவேண்டிய அவ்விளமொக்கு, எருமைகளின் காலில் மிதிபட்டு மடிகிறது. கி. பி. 1820- இல் உதகமண்டலத்தில் வாழ்ந்த சல்லிவன் என்ற ஐரோப்பியர் இப்பழக்கத்தை கைவிடுமாறு தோடர்களுக்கு அறிவுறுத்தினார். கி. பி. 1856-ஆம் ஆண்டில் கோவை மாவட்டத்தின் தண்டலராக இருந்தவர் ஒரு புதிய சட்டம் இயற்றினார். அதன்படி தோடர் வீட்டில் பிறந்த பெண் குழந்தையைப் பெற்றோர் கொண்டுவந்து ஆண்டுதோறும் நேரில் காட்டினால், அதன் வளர்ச்சிக்காகக் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுப்பதாகக் கூறினார். இப்பொழுதுகூட இச் சட்டம் அமுலில் உள்ளது. இதனால் பெண் குழந்தைக் கொலைச் செயல் ஓரளவு குறைந்ததெனலாம். ஆனால் முழுதும் நீங்கவில்லை. தோடர்களின் இச்செயலால் பெண்கள் தொகை ஆண்களின் தொகையைவிட எப் பொழுதும் குறைந்தே காணப்படுகிறது.

உதகமண்டலத்திற் கருகில் வாழும் தோடர்குல மகளிர் காதற் செயல்களில் கைதேர்ந்தவர்கள். நகரில் வாழும் மற்ற இன ஆண்களோடு கொண்ட தொடர்பால், ஓரளவு அவர்கள் மக்கள் தொகை அதிகரித்தது எனலாம். ஆனால் அப்படிப் பிறக்கும் குழந்தைகள் தோடர்களின் உடற்பண்புகளையே பெற்றிருக்கின்றன. வேற்று இனப் பண்புகளைப் பெற்றுப் பிறக்கும் குழந்தைகள் மிகவும் குறைவு.

பல கணவர் முறையும் பொது மனைவி முறையும் :

தோடர்களின் காதல் வாழ்க்கையும், இல்லறமும் சுவையானவை, கற்பைப்பற்றி அவர்கள் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. கலாசார வரலாற்றின்படி, கற்பு முறையானது, காலத்திற்குக் காலம் நாட்டுக்கு நாடு மாறுபட்டுக்கொண்டு வந்திருக்கிறது. ஒரு நாட்டுக் கற்புமுறை, மற்றொரு நாட்டினருக்கு புதுமையாகத் தோன்றும். பண்படாத மக்களினத்திலும் கற்பைக் காண முடியாது; எல்லோரும் கல்வி கற்று அறிவு ஆராய்ச்சியில் மிகுந்திருக்கும் இனத்தாரிடத்திலும் கற்பைக் காண முடியாது. முன்னவர் அறியாமையினாலும், பின்னவர் அலட்சியத்தாலும் கற்பைக் கைகழுவி விடுகின்றனர். கீழை நாட்டினரிடையே கற்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குட்பட்டிருக்கிறது. நாகரிகத்தில் (வள்ளுவர் கூறும் நாகரிகமல்ல) மேம்பட்டவர்களாக விளங்கும் மேனாட்டினரிடையே, கற்பு அதிக மதிப்புப் பெறுவதில்லை. பிரெஞ்சு நாட்டில் கற்பு மிகவும் இழிந்த நிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் 10 நிமிடத்திற்கொரு உந்துவண்டித் திருட்டும், 40 நிமிடத்திற்கொரு கற்பழிப்பும் நடை, பெறுவதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இங்கிலாந்து நாட்டில் விபசாரம் அதிகமில்லை, ருசிய நாட்டில், விபசாரத்தைச் சட்டபூர்வமாகத் தடுத்துக் கடுந்தண்டனையளிப்பதால், கற்பு அங்குக் காக்கப்படுகிறது. படியாத மக்கள் பாவத்திற்கஞ்சி, இழி செயல் புரிவதில்லை. வறுமை தாக்கும்போது மட்டும், வேறு வழியின்றிக் குற்றம் செய்கின்றனர். ஆனால் மிகவும் படித்த மக்களுக்குப் பாவத்தில் நம்பிக்கை கிடையாது. கற்பை இழப்பதைக் குற்றமாகவும் அவர்கள் கருதுவதில்லை, எதிர்காலத்தில் தனி மனைவியுரிமை என்ற நிலைமாறி, அதிலும் பொதுவுடைமைக் கொள்கை ஏற்படலாம் என்பது உலகப் பேரறிஞரான இரஸ்ஸலின் கருத்தாகும்.

தோடர்கள் கற்பைப் பற்றிக் கவலைப்படாமலிருப்பதற்கு இரண்டு காரணங்களுண்டு. முதலாவது காரணம் அறியாமை. ஒவ்வொரு தோடர்குல ஆணுக்கும், ஒவ்வொரு பெண் கிடைக்காமலிருப்பது இரண்டாவது காரணம். பெண்களின் பற்றாக் குறையினால், ஒவ்வொரு பெண்ணும் பல ஆடவரைக் கணவராக ஏற்றுக்கொள்ளும் வழக்கத்தை -(Polyandry}க் கொண்டிருக்கின்றனர். அவர்களோடு அமையாமல், வேறுசில ஆடவரைக் காதலர்களாகவும் ஒரு பெண் ஏற்றுக் கொள்வதுண்டு. கணவர்களும் இப் பழக்கத்தை அனுமதிக்கின்றனர். ஆகையினால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட காதலர்கள் (recognised lovers) என்று அழைக்கப்படுகிறார்கள்.

பல ஆடவர்கள் சேர்ந்து பல மனைவியரைப் பொதுவாகக் கொள்ளும் பழக்கமும் இவர்களிடம் உண்டு. ஒரு குடும்பத்தில் பல சகோதரர்களிருந்தால், அவர்களுடைய மனைவியர், எல்லாருக்கும் உரிமையுடையவர்கள். இப்பழக்கம் பல மனைவி முறையோடு (Polygamy) ஓரளவு தொடர்புடையதாகக் காணப்படுகிறது. ஆனால் இப்பொழுது ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு சகோதரனும் தனக்கென ஒருத்தியை மனைவியாக உரிமையாக்கிக் கொள்கிறான். ஆனால் கட்டுப்பாடின்றித் தன் உடன்பிறந்தாரின் மனைவியரிடம் தொடர்புகொள்ள அவனுக்கு உரிமையுண்டு. இச் செயலினால் வரம்பிற்குட்பட்ட மனைவி முறை (Monogamy) ஓரளவு தலைகாட்டுகிறது.

ஒரு பெண்ணுக்குரிய கணவர்களிலோ அல்லது காதலர்களிலோ, யாரேனும் ஒருவன், அப்பெண் இருக்கும் குடிசைக்குள் நுழையும்போது, ஒரு பூவை வாயிலில் செருகிவிட்டுச் செல்வது வழக்கம். அப்பூவைக் காணும் மற்ற கணவன்மாரோ, அல்லது காதலர்களோ அப்போது குடிசைக்குள் நுழையக் கூடாது. மேற் கூறிய பழக்கவழக்கங்களெல்லாம், சமவெளியிலுள்ள மக்கள் தொடர்பால் இப்போது குறைந்துவருகின்றன. ஆனால் முற்றிலும் மறையவில்லை,

திருமணம் :

தார்த்தார், தீவலி என்ற இருபிரிவினர் தோடர்களிடையே உண்டு எனக் கண்டோம். அவர்களிடையே மணத் தொடர்பு கிடையாது. ஆனால் ஓரினப் பெண் மற்றோரினத்தானைக் காதலனாக ஏற்றுக்கொள்ளலாம். ஒரு பெண் குழந்தை பிறந்ததும், மூன்று அல்லது நான்காவது வயதில், அதைத் தாய்மாமன் மகனுக்கோ, அத்தை மகனுக்கோ , திருமணம் செய்து கொடுப்பது வழக்கம். மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருக்கு அடிக்கடி பரிசுகள் வழங்குவதன் மூலம் திருமணத்தை உறுதி செய்து கொள்கின்றனர், பெண் 15 அல்லது 16 வயது வரையில் பெற்றோர் வீட்டிலேயே இருப்பது வழக்கம். ஒரு பெண் பருவம் அடையும் நிலையில் இருக்கும்போது, வேற்றுக்குலத்தான் ஒருவனை அழைத்து அப்பெண்ணோடு ஓர் இரவு முழுவதும் தனி அறையில் இருக்குமாறு செய்வர். இது 'பருவப் பெண்ணின் கற்பழிப்புச் சடங்கு' {ceremonial defloration of nubile girls) எனப்படும். இச்சடங்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இச்சடங்கு நடைபெறாமல் ஒருபெண் பருவமெய்துவது, அவமானமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்பழக்கம் இப்பொழுது கைவிடப்பட்டது.

மண விலக்கு :

தோடர்கள் கடைப்பிடித் தொழுகும் மனைவி முறைகளால் மணமுறிவும், மறுமணமும் அடிக்கடி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. மணவிலக்குப் பெற விரும்புவோர் சில எருமைகளை ஒறுப்புக்கட்டணமாகச் (Fine) செலுத்திவிட்டு எளிதில் பெறலாம். ஆகையினால் வேண்டுமென்றே சில ஆடவர்கள், ஆடை மாற்றுவது போல் மனைவியரை மாற்றிக் கொண்டிருக்கின்றனர், ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஐந்து முறைகூட மண விலக்குப் பெறுவதுண்டு.

பிள்ளைப்பேறு :

தோடர் குலப்பெண் கருவுற்ற ஐந்தாவது திங்களில், பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்கள் வாழும் ‘மண்டு'விலிருந்து சிறிது தொலைவில் ஒரு குடிசை அமைத்து, அதில் அப்பெண்ணைக் குடியேற்றுகின்றனர். ஒரு கயிற்றின் நுனியில் தீயைப் பற்றவைத்து, அத்தீயினால் தன் இடுப்பின் இருபுறங்களையும் அப்பெண்ணையே சுட்டுக் கொள்ளச் சொல்கின்றனர். ஒரு திங்கள் அக்குடிசையில் இருந்தபிறகு, பல சடங்குகளோடு அப்பெண் வீட்டிற்கழைக்கப்படுகிறாள்.

ஏழாவது திங்களில் மறுபடியும் ஒரு சடங்கு நடைபெறுகிறது. இச்சடங்கு மிகவும் முக்கியமானது. இதற்கு 'வில்லம்புச் சடங்கு' என்று பெயர். கருவுற்ற பெண்ணும், வயிற்றில் உள்ள குழந்தைகளுக்குரிய தந்தை என்று அவளால் குறிப்பிடப்பட்ட கணவனும், மண்டுவிற்கருகிலுள்ள ஷோலாவிற்குச் செல்லுவார்கள். கணவன் மரத்திலிருந்து குச்சியை ஒடித்து முக்கோணமாக வைப்பான். அதன் நடுவில் ஒரு விளக்கு ஏற்றப்படும். பிறகு கணவனும் மனைவியும் வேறொரு குச்சியை ஒடித்து வில் செய்வார்கள். ஒரு புல்லினால் அம்பு செய்வார்கள். பிறகு தம் உறவினரை வணங்குவார்கள், வில்லைக் கையிலேந்திய வண்ணம் அப்பெண் எரியும் விளக்கை ஒருமணி நேரமோ, அணையும் வரையிலோ பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

பிறகு அம்மண்டுவிலுள்ள எல்லாரும், அவ்விடத்திலேயே உணவு சமைத்து உண்டுவிட்டு, அவ்விரவை அவர்களோடு கழிப்பர். ஒரு பெண் முதல் தடவையாகக் கருவுறும் போதோ, புதிய ஒரு கணவனை அக் குழந்தையின் தந்தையாகத் தேர்ந்தெடுக்கும் போதோ இச்சடங்கு நடைபெறும். திருமணமில்லாமலோ, குழந்தையில்லாமலோ ஒருபெண் இறந்தால், சுடுகாட்டில் திருமணச் சடங்கும், வில்லம்புச் சடங்கும் நடை பெறும். குழந்தை பிறந்தவுடன் அப்பெண் மறுபடியும் மண்டுவிற்கு வெளியிலுள்ள அக்குடிசைக்கு அனுப்பப்படுகிறாள். அக்குடிசையில் மூன்று வாரங்களோ ஒரு திங்களோ அவள் இருக்க வேண்டும். குழந்தையின் முகத்தை மூன்று திங்கள்கள் முடியும் வரை யாரும் பார்க்கக் கூடாது. ஆகையினால் ஒரு துணி கொண்டு அதன் முகத்தை மூடியே வைப்பார்கள். குழந்தைக்கு முடி யெடுக்கும்போது பெயரிடுவார்கள்.

சொத்து முறை :

ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தை ஏழாவது மாதச் சடங்கின்போது குறிப்பிடப்பட்ட கணவனுக்கே உரிமையானது. அவனுடைய சொத்தெல்லாம் அக் குழந்தையையே சாரும். வேறொருவர் குழந்தையைத் தத்தெடுக்கும் வழக்கம் இவர்களிடம் இல்லை. பெண்களுக்குச் சொத்துரிமை கிடையாது. இச்சொத்துரிமை நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு அமர்த்தப்பட்டவரை மோணிகர் (Monigar) என்று அழைக்கின்றனர். ஆனால் தோடரிடையே இருக்கும் பஞ்சாயத்துச் சபை, மோணிகரைவிடச் செல்வாக்கு மிகுந்ததாக உள்ளது. அப்பஞ்சாயத்தின் தீர்ப்பையே எல்லாரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இறுதிச் சடங்கு :

தோடர்களின் இறுதிச் சடங்கு மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பச்சை இறுதிச் சடங்கு (Green Funeral), காய்ந்த இறுதிச் சடங்கு (Dry Funeral) கடைசி இறுதிச்சடங்கு (Last Funeral) என்பவையே அப்பிரிவுகள். முதன் முதலாக இறந்துபோனவனை ஆடை அணிகளால் அலங்கரித்து, ஒரு குடிசையில் கொண்டுபோய் வைப்பார்கள். பெண்கள் இணை இணையாக ஒருவர் நெற்றியோடு மற்றொருவர் முட்டிக் கொண்டு கூச்சலிட்டு அழுவார்கள். அப்பொழுது புனித எருமைகளில் இரண்டைப் பலியிட வேண்டும். அதற்காகப் புனித எருமைகளை ஷோலாவில் ஓட்டி அச்சுறுத்துவார்கள். அவை மருண்டு சினங்கொண்டு ஓடும். அப்பொழுது பலபேர் சேர்ந்து அவற்றைத் துரத்திப் பிடிப்பார்கள். அம்முயற்சியில் பல பேருக்குக் கடுமையான காயம் ஏற்படுவதுண்டு. கடைசியாக இரண்டு எருமைகளைப் பிடித்துப் பிணத்திற்கருகில் கொண்டுவருவார்கள். அவற்றின் கொம்புகளில் நெய்யைப் பூசுவார்கள். பிறகு கோடரியின் பின்புறத்தால் தலையில் தாக்கி, எருமைகளைக் கொல்லுவார்கள். இறந்தவர் ஆணாக இருந்தால், பலியிடப்பட்ட எருமைகளைப் பிணத்தின் தலையருகில், வலதுகைப் புறமாகக் கிடத்துவர். பெண்ணாக இருந்தால், பிணத்தின் கால்களை எருமைகளின் தலைமீது தூக்கி வைப்பர். அங்கிருக்கும் ஆடவர்களெல்லாரும் இறந்துகிடக்கும் எருமைகளின் கொம்புகளைத் தொட்டு, அவைகட்கு வணக்கம் செலுத்துவர். பிறகு பிணம் பாடையிலேற்றப்பட்டு இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும். பிணத்தோடு உணவு, ஆடை, அணி, பணம், புகையிலை முதலியனவும் அடுத்த உலகில் பயன்படுத்துவதற்காக வைத்தனுப்பப்படுகின்றன. அதன் பிறகு பிணத்தைச் சிதையில் வைத்துத் தீயிடுவார்கள். விலையுயர்ந்த பொருள்களையும், பிணத்தின் தலையிலிருந்து சிறிது மயிரையும் எடுத்துக்கொள்வார்கள், பிணம் எரிக்கப்பட்ட பிறகு, சிதறிய அதன் மண்டையோட்டின் ஒரு பகுதியையும் எடுத்துக்கொள்வார்கள். இத்துடன் பச்சை இறுதிச் சடங்கு முடிவுறுகிறது.

மேற்கூறிய மூட்டையை ஒரு குடிசையில் கொண்டுபோய் வைப்பார்கள். முதலில் எவ்வாறு பெண்கள் அழுதார்களோ, அதே போல் இன்றும் அழுவார்கள். எருமைக் கன்றுகள் பலியிடப்படும். பலகறைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடியை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, அக் குடிசையைச் சுற்றி ஒருவன் ஆடி வருவான். கடைசியாக எல்லாரும் உணவு உண்டு, தத்தம் வீடுகளுக்குப் பிரிந்து செல்வர். இதற்குக் காய்ந்த இறுதிச் சடங்கு என்று பெயர்.

மறுநாள் காலையில் கடைசி இறுதிச் சடங்கு தொடங்கும், குடிசையிலிருந்து அம் மூட்டையை எடுத்துக்கொண்டு சென்று வட்டமாக அமைக்கப்பட்ட கற்களுக்கு நடுவில் ஒரு குழி தோண்டி, அதில் வைப்பார்கள். அவ்விடத்திற்கு ' 'ஆசாரம்' (Azaram) என்று பெயர். அம் மூட்டையையும், உணவுப் பொருளோடு கூடிய மரத் தட்டையும் வைத்து ஒன்றாக எரிப்பார்கள். பிறகு அச் சாம்பலைக் குழிக்குள்ளேயே வைத்து மூடிவிடுவார்கள். பிறகு மூன்று முறை மணியடிக்கப்படும். புதிய மட்பாண்டமொன்று உடைக்கப்படும். இத்துடன் சாச்சடங்குகள் முடிவுறுகின்றன. சிலர் இச் சடங்குகளைச் சில திங்கள்கள் கழித்துக்கூடச் செய்வதுண்டு.

தோடர்கள் யார்?

இந்திய நாட்டிலேயே மிகவும் கவர்ச்சியூட்டும் பழங்குடியினராகிய இத் தோடர்களின் பழக்க வழக்கங்களைக்கொண்டு, இவர்கள் யாராயிருக்கலாம்? எங்கிருந்து வந்திருக்கலாம் ? என்ற வினாக்களுக்கு விடை காண முயலுகின்றனர். திருவாளர் ரிவெர்ஸ் (Mr. Rivers) என்பார், கேரளத்து மலையாள மக்களின் பண்பாட்டோடு, இவர்கள் பண்பாடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை விளக்கப் பல சான்றுகள் காட்டுகின்றார். ஒரு பெண் பல கணவரை ஏற்றுக்கொள்ளும் முறை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை மலையாளத்தில் நிலவி வந்தது. அம் மண முறை, 'சம்பந்த மண முறை' என்று மலையாள மக்களால் கூறப்பட்டு வந்தது. திருமணத்தின்போது நடக்கும். கூறைச் சடங்கு, இரு இனத்தாரிடையிலும் முக்கிய மானதாகக் கருதப்படுகிறது. திருமணமாகாமல் ஒரு பெண் இறந்துவிட்டால், புதுப்புடவை வைத்து எரித்தலும், மணத்திற்குரிய சடங்குகளைப் பிணத்திற்குச் செய்தலும். இரு இனத்தாரிடையிலேயும் நிலவிவரும் பழக்கங்களாகும். பலகறைகளால் ஒரு கழியை அலங்கரித்து, பிணம் வைக்கப்பட்ட குடிசையைச் சுற்றி ஆடும் பழக்கம் மலையாள மக்களுக்கே உரியது. தோடர்களும் அப் பழக்கத்தை மேற்கொண்டு ஒழுகுகின்றனர். இறந்துபோனவனுடைய உயிர் மேற்கு நோக்கிச் (மலையாளம் இருக்கும் திசை நோக்கி) செல்லுவதாகத் தோடர்கள் கருதுகின்றனர். தோடர்குலக் குருமார்கள், சமயச் சடங்குகளின்போது, மலையாள மந்திரங்களையே கூறுகின்றனர். தோடர்களின் உருவ அமைப்புகள் மலையாளத்திலுள்ள நம்பூதிரிகளையும், நாயர்களையுமே பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. தோடர்கள் நீண்ட காலத்திற்கு முன் (சுமார் 800 ஆண்டுகட்குமுன்) மலையாளத்திலிருந்து இங்கு வந்திருக்க வேண்டும். ஆகையினால் தான் தோடர் மொழி தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ஏனென்றால், பண்டைய மலையாளம் தமிழேயன்றோ?

பிற செய்திகள் :

கொன்னமரா என்ற இடத்தில் தோடர்களுக்குரிய கோயில் ஒன்றுளது. உயரமான வடிவத்தை உடையது. ' பிங்கர் போஸ்ட்'டிற்குத் திரும்பும் வழியில் இதைக் காணலாம். காட்டெருமைகளைக் கண்டால், எல்லோரும் அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் அவைகளின் அருகில் அச்சமில்லாமல் சென்று, பால் கறக்கும். கலையைத் தோடர்கள் நன்கு அறிவார்கள்.

கோதர் :

கோதர் நீலகிரி மலைமீது 1500 பேர் வாழ்கின்றனர். கோதகிரியிலுள்ள 6 சிற்றூர்களும், கூடலூருக்கருகிலுள்ள ஒரு சிற்றூரும், இவர்களுடைய வாழ்விடங்களாம். இவர்களுடைய வீடுகள் அழகற்றவை ; உருவத்தால் பெரியவை. ஒவ்வொரு வீட்டின் முன் பகுதியிலும் தாழ்வாரம் அமைந்திருக்கும். கற்றூண்கள் வீட்டில் நாட்டப்பட்டிருக்கும். ஆனால் சித்திர வேலைப்பாடு. அவற்றில் அதிகமிருக்காது. வீடுகள் பெரும்பாலும் கூரையினால் வேயப்பட்டவை.

கோதர்கள் தூய்மையற்ற உடலினர். அவர்கள் அணியும் ஆடைகள் மிகவும் அழுக்கடைந்து காணப்படுகின்றன. தமிழரைப்போல் வேட்டியே அரையில் உடுக்கின்றனர். கோதர்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். படகர்களைவிடக் கறுத்த நிறமுடைவர்கள் ; நடுவில் வகிடு எடுத்துப் பின்னால் குடுமி முடிந்திருக்கின்றனர். நாகரிகம் வளர்ந்திருக்கும் இக் காலத்திலும் கூட, இறந்த விலங்குகளின் ஊனை முக்கிய உணவாகக் கொள்கின்றனர். இவர்களுடைய கடவுளாகிய காமட்டராயன் (Kamattarayan) தன் உடலிலிருந்து வழிந்த மூன்று துளி வியர்வையிலிருந்து தோடர்களையும், குறும்பர்களையும், கோதர்களையும் படைத்தானாம். அதோடு, தோடர்கள் பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றையும், குறும்பர்கள் இறைச்சியையும், கோதர்கள் அழுகிய இறைச்சியையும் உண்ண வேண்டுமென்று ஆணையிட்டானாம். அவ்வாணையின் படியே தாங்கள் அழுகிய இறைச்சியை உண்பதாகக் கூறுகின்றனர். இவ் விழிந்த உணவு, அவர்கள் உடல் நிலைக்கு ஏற்றதாக அமைந்துவிட்டது. கோதர்கள் பருத்த, உறுதியான உடற்கட்டுடையவர்கள்.

கோதர்கள் மைசூர் நாட்டுக் குன்றுகளிலிருந்து இங்குக் குடியேறியதாகக் கூறுகின்றனர். அவர்கள் பேசும் மொழி திருந்தாக் கன்னடம். தச்சராகவும், கம்மியராகவும், சக்கிலியராகவும், கொல்லராகவும் பிற இனத்தாருக்குக் கோதர்கள் பணிபுரிகின்றனர். இவ்வினப் பெண்கள் மட்பாண்டம் செய்து பிற இனத்தாருக்கு வழங்குகின்றனர். இச் சேவைக்கு ஈடாக மற்ற வர்களிடமிருந்து தானியம், எருமைகள், இறந்த மிருகங்கள் ஆகியவற்றைப் பெறுகின்றனர். அறுவடைக் காலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு தானியம் படகர்களால் ஆண்டுதோறும் இவர்கட்கு வழங்கப்படும். படகர்களைப் போன்று இவர்களும் ஆண்டுதோறும் தோடர்களுக்கு நன்கொடைத் தானியம் வழங்குவது வழக்கம். அதற்குக் 'குடு' (Gudu) என்று பெயர். படகர்களிடையே மூன்று பிரிவுகளுண்டு. இப் பிரிவினர் தங்களுக்குள் மணத் தொடர்பு கொள்வதில்லை. கோதர்கள் இசைஞர்கள். இவர்கள் நீலகிரி மலையிலுள்ள எல்லா இனத்தார்க்கும், திருமணக் காலங்களிலும், விழாக் காலங்களிலும், இசைப் பணி புரிகின்றனர்.

திருமணம் :

திருமணம் பெற்றோர்களின் இசைவுடனேயே நடைபெறுகின்றது. மணமகன் மாமனாரின் வீட்டிற்குச் சென்று, வணக்கம் செலுத்திப் பரிசுப் பொருள்களை அளித்துவிட்டுத் திரும்புவதன் மூலம் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்குரிய சடங்குகள் அதிகமாக ஒன்றுமில்லை. பரிசப்பணத்தைக் கொடுத்த பிறகு, மணமகன் மணமகளைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருவான். அதன் பிறகு விருந்து ஒன்று நடைபெறும். இத்துடன் திருமணம் முடிவடைகிறது. முதல் மனைவிக்குப் பிள்ளைப்பேறு இல்லை யென்றால்தான், ஆண்கள் இரண்டாவது மணம் செய்து கொள்ளுகின்றனர்.

மணவிலக்கு :

மணவிலக்கு கோதர்களிடையே அதிகமாக நடைபெறுவதில்லை. பொறுப்பற்ற தன்மையும், குடிவெறியும், சோம்பலும், ஒழுக்கக் குறைவும் உடைய பெண்ணே மணவிலக்கிற்குரியவளாகக் கருதப்படுகிறாள். மணவிலக்கு ஊரிலுள்ள பெரியவர்கள் முன்னிலையில் நடைபெறும். மிகவும் சிக்கலான வழக்காக இருந்தால், கோதர்கள் வாழும் ஏழு ஊர்களிலுமுள்ள பெரியோர்களடங்கிய பஞ்சாயத்தால் ஆராயப்பட்டு மணவிலக்கு அளிக்கப்படும்.

பிள்ளைப்பேறு :

பிள்ளைப் பேற்றுக்காகப் பயன்படுத்தப்படும் குடிசை, இரு அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும். ஓர் அறை மருத்துவத்திற்குரிய மனையாகவும், மற்றொன்று பிள்ளைப்பேற்றுக் காலத்தில் தங்குவதற்குரிய இடமாகவும் பயன்படுத்தப்படும். குழந்தை பிறந்ததும், தாய் அடுத்த உவா நாள் வரை அக் குடிசையிலேயே தங்கவேண்டும். உவா நாளன்று அப் பெண்ணை வீட்டுக்கழைப்பர். அன்று எல்லாருக்கும் ஒரு விருந்து நடைபெறும். ஊர்த்தலைவன் குழந்தைக்குப் பெயரிடுவான். முதற் குழந்தை ஆணாக இருந் தால், அதற்குக் 'காமட்டன்' என்று தங்கள் கடவுள் பெயரை இடுவர். பெண்களுக்கு ‘மாடி' என்ற பெயரே அதிகமாக வழங்குகிறது. மாடி என்பது அவர்கள் வழிபடும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர்.

சமய வாழ்வு :

கோதர்கள் வழிபடும் கடவுளரில் தலைமை பெற்றவன் காமட்டராயன். கோதர்களின் சமயகுரு 'தேவாதி' என்று அழைக்கப்படுகிறான். சமய குருவின் பதவி பரம்பரை உரிமையுடையது. கோயில் பணி புரியும் பூசாரிகளைக் கோதர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தோடர்குலப் பூசாரிகளுக்கிருப்பது போன்று, தனியுடையோ, வேறு கட்டுப்பாடுகளோ இவர்களுக்குக் கிடையா. மற்ற மக்களைப் போலத் திருமணம் செய்து கொண்டு, குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். காமட்டராயன் மனைவியின் பெயர் 'காசிகை.' கோதர்கள் வாழும் ஒவ்வோர் ஊரிலும் இவர்களுக்குக் கோயில் உண்டு. காமட்டராயனுக்கு ஆண்டுதோறும் பெரு விழா ஒன்று நடைபெறும். தங்கள் வாழ்வில் நன்மை பெருக வேண்டும் என்று இறைவனை வேண்டி அவ்விழாவைக் கொண்டாடுவர். ஜனவரித் திங்களில் உவா நாள் கழிந்து, முதல் திங்கட்கிழமையன்று இவ் விழா துவங்கும். பிறகு பதினைந்து நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இப் பதினைந்து நாட்களையும், ஒவ்வோர் ஆண்டிலும் ஓய்வு நாட்களாக இவர்கள் கருதுகின்றனர். இத் திருவிழாவின் போது, ஆண்களும் பெண்களும் ஒன்றாகக் கூடி ஆடும் ஆட்டம் மிகவும் ஆபாசமானது.

அருகில் வாழும் படகர்களில் முக்கியமானவர்களைக் கோதர்கள் இவ்விழாவிற்கு அழைப்பது வழக்கம். இவர்களுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு வராவிட்டால், அச்செயல் பெரும் அவமானத்திற்குரியதாகக் கோதர்களால் கருதப்படும். அவ்வாறு வந்து விழாவில் கலந்து கொள்ளாத படகர்களின் நிலங்களில் யாரும் பணி புரிவதில்லை. வேறு எந்தச் சடங்குகளிலும் கலந்து கொள்வதில்லை. காமட்டராயன் விழா நடைபெறும் அப்பதினைந்து நாட்களும், கோயிலின் முன்னால் மூட்டிய தீ அணையாமல் எரிந்துகொண்டே இருக்கும். கோயிலின் பழைய கூரையை நீக்கிவிட்டு, மூங்கிலினால் புதிய கூரை வேய்வார்கள். இறைவனுக்குச் சிறப்பான ஆடைகளும், தலைப்பாகையும் அணிவித்து அலங்காரம் செய்வர். திருவிழாக் காலங்களில் எல்லாரும் சேர்ந்து வேட்டைக்குச் செல்வார்கள். தேவாதி ஓர் இரும்புத் துண்டை நெருப்பில் போட்டுப் பழுக்கக் காய்ச்சுவான். பூசாரி அவ்விரும்புத் துண்டைச் சுத்தியால் அடிப்பான். இவ்வாறாகப் பலவிதச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இறுதிச்சடங்கு :

இறக்கும் நிலையில் இருப்பவரின் வாயில் படகர்களைப் போன்று வீரராயப் பணத்தைப் போட்டு நீர் ஊற்றும் பழக்கம் இவர்களிடமும் உண்டு, பிணத்தின் கைகளை மார்பின் மேல் கிடத்திப் பெரு விரல்களை நூலினால் கட்டிவிடுவார்கள். இறந்தவரின் உறவினர்கள், பிணத்திற்கு இறுதி வணக்கம் செலுத்துவர். மரத்தினால் பாடைசெய்து, அதைத் துணியால் அலங்கரிப்பர். அலங்கரித்த அப்பாடையை வீட்டின் முன்னால் வைப்பர். உறவினர் எல்லாரும் அழுவர். மற்றையோர் இசைக்கேற்ப ஆடுவர். ஓர் எருமையைப் பலியிட்டு, அதன் ஊனை எல்லாரும் பங்கிட்டுக் கொள்வார்கள். பிணத்தை அலங்கரித்து அதன் நெற்றியில் காசைப் பதிப்பார்கள், பிறகு இரும்பினால் செய்த சிறு கருவிகளையும், அரிசி, புகையிலை, அன்றாட உணவுப் பொருள் முதலியவற்றையும் பிணத்தோடு பாடையில் வைப்பார்கள். அழுகையும், ஆடலும், மதுவருந்தலும் பலமணி நேரம் நடைபெறும். கடைசியாகப் பாடையை இடுகாடு நோக்கி எடுத்துச் செல்லுவர், இறந்தவன் மனைவி, தன் நகைகளை இடுகாட்டில் களைந்து, இறுதி வணக்கம் செலுத்துவாள், பிணத்தைச் சிதையில் எடுத்துவைத்த பிறகு, பாடையை அழித்து விடுவர். பிணம் எரிந்த பிறகு, நீரூற்றிச் சிதையை நனைத்து, எலும்புகளையெல்லாம் பொறுக்கி ஒரு குழியில் புதைத்து மூடி, அதன்மேல் நடுகல் நாட்டுவர்.

தோடர்கள் எவ்வாறு காய்ந்த இறுதிச் சடங்கு செய்கிறர்களோ, அதே போல் திசம்பர் திங்களில் கோதர்களும் செய்கிறார்கள். இறந்து போனவரின் வீடுகளின் முன்னால், சடங்குகள் நடைபெறுவதற்கு எட்டு நாள் முன்பிருந்தே தினமும் ஆடல்பாடல் நடை பெறும். குறிப்பிட்ட நாளில் உறவினர்கள் எல்லாரும் சேர்ந்து, எருமையின் மண்டையோட்டைத் துணியில் ஒரு மூட்டையாகக் கட்டிப் பாடையின் மேல் வைத்து வணங்குவார்கள். அன்று பிணத்தோடு வைத்தவைகளைப் போன்றே, இன்றும் புகையிலை, அரிசி, உணவுப் பொருள் முதலியவற்றையும் பலகறைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தடியையும் அம் மூட்டையோடு இடுகாட்டில் வைத்து எரிப்பார்கள். அப்பொருள்களெல்லாம் எரிந்த பிறகு, சிதையை முன் போலவே நீர் ஊற்றி நனைப்பார்கள். எல்லாரும் அவ்விரவை இடு காட்டிலேயே கழிப்பர். இத்துடன் கோதர்களின் இறுதிச்சடங்கு முடிவுறுகிறது.

பிற செய்திகள் :

தோடர்களிடையே இருப்பது போன்று ஒரு பெண் பல கணவரை ஏற்றுக்கொள்ளும் முறை கோதர்களிடையே இல்லையென்றாலும், அதனின்றும் சிறிது மாறுபட்ட ஒருமுறை இவர்களிடையே நிலவி வருகின்றது. ஒரு குடும்பத்தில் பல சகோதரர்கள் இருந்தால், ஒருவன் மற்றவனுடைய மனைவியோடு எந்தவித வேறுபாடுமின்றித் தொடர்பு வைத்துக் கொள்வது வழக்கம். இதை அவர்கள் குற்றமாகக் கருதுவதில்லை. இதன் காரணமாகப் பொறாமையோ, பூசலோ ஏற்படுவதில்லை. கோதர்களிடையே உடன் பிறந்த ஒற்றுமை மிகவும் அதிகம். அவர்களுடைய சமூக, பொருளியல் முறைகளெல்லாம், சோதர ஒற்றுமையின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. 'உடன் பிறந்தார் இல்லாதவன் கையிளைத்தவன்' என்ற ஒரு பழமொழி அவர்களிடையே நிலவுகிறது. மது அருந்துவதிலும், அபினி தின்பதிலும் இவர்களுக்குப் பெருவிருப்பம் உண்டு.

குறும்பர் :

இவர்களைக் குறுமர் என்றும், குறுபர் என்றும் வேறு பெயர்களால் அழைக்கின்றனர். இவர்கள் நீலகிரிப் பீடபூமியிலுள்ள சிற்றூர்களிலும், வய நாட்டிலும் வாழ்கிறார்கள். இம்மக்கள் குறும்பர், ஊர்க்குறும்பர், ஜேன் குறும்பர் என மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். நீலகிரிப் பீடபூமியில் குறும்பர்களும், நெல்லியாளத்தை (Nellialam)ச் சுற்றி ஊர்க்குறும்பர்களும் வாழ்கின்றனர். ஜேன் குறும்பர்கள், 'ஷோலா நாயக்கர்'கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வய நாட்டிலும், குறிப்பாக மதுமலைப் பகுதியிலும் வாழ்கின்றனர்.

ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில், காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, பல்லவர் என்ற இனத்தார் தமிழகத்தைச் சிறப்பாக ஆண்டு வந்தனர். அவர்களுக்கும் குறும்பர்கள் என்ற வேறு பெயருண்டு. மாமல்லபுரம். சிற்றன்னவாசல், குடுமியான் மலை, நாமக்கல், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள குடைகோயில்களும், காஞ்சி நகரிலுள்ள பெருங்கோயில்களும் அவர்களுடைய, கலையையும் நாகரிகத்தையும் பறைசாற்றிய வண்ணம் இன்றும் காட்சியளிக்கின்றன. 10ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெருஞ்சோழ (Imperial Cholas)ரின் ஆட்சி தமிழகத்தில் ஓங்கியபோது, பல்லவர்களின் பேரரசு சிதைந்து, சோழப் பேரரசோடு ஒன்றிவிட்டது. சோழரிடம் தோல்வியுற்ற பல்லவர்கள், நீலகிரி மலையில் ஓடி ஒளிந்தனரென்றும், அவர் வழி வந்தோரே இன்றுள்ள குறும்பர் என்றும் சிலர் கருதுகின்றனர். இம்முடிவு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ஏனென்றால் பல்லவர்கள் நாகரிகமும், கலையுணர்வும் மிகுதியாகக் கொண்டவர்கள்; வட மொழியையோ, அதன் சார்பு மொழியையோ தாய்மொழியாகக் கொண்டவர்கள்; வடமொழிக் கலைகளை வளர்த்தவர்கள். ஆனால் நீலகிரிக் குறும்பர்கள் நாகரிகமும் கலையுணர்வும் அற்றவர்கள். திராவிட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். பல்லவர்கள் பொன்னிற மேனியும், அழகிய தோற்றமும் வாய்க்கப் பெற்றவர்கள். ஆனால் குறும்பர்களோ, கறுத்த உடலும், அழகற்ற தோற்றமும் கொண்டவர்கள். பல்லவர்கள் சோழ நாட்டை விட்டு வெளியேறிய காலம் பத்தாம் நூற்றாண்டு. தோடர்களின் வருகைக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்தே குறும்பர்கள் நீலகிரி மலையில் குடியேறினர். எனவே, நீலகிரிக் குறும்பர்கள் பல்லவர்களாக இருக்க முடியாது.

ஊர்க்குறும்பரைத் தவிர மற்ற இரு இனத்தாரும் கூச்சம் கொள்ளும் இயல்பினர். ஆனால் கோழைகளல்ல. வெள்ளையரைக் கண்டால் முன்பெல்லாம் ஓடி ஒளிந்து கொள்வார்கள். குறும்பர் வாழும் சிற்றூர் 'மோட்டா' என்றும், 'கம்பை' என்றும் அழைக்கப்படுகிறது. இப்பொழுது 'குலக்கம்பை, மஞ்சக் கம்பை' என்று வழங்கும் இடங்களில் குறும்பர் வாழ்வதில்லை. ஆனால் முதலில் அவ்விடங்களிலும் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை அப்பெயர்களால் அறியலாம். ஒவ்வொரு கம்பையிலும், சுமார் பன்னிரண்டு குடிசைகள் இருக்கும். இக்குடிசைகள் மண்ணினால் கட்டப்பட்டுப் புற்களால் கூரை வேயப்பட்டவை.

தோற்றம் :

குறும்பர்கள் கருநிறமும், குள்ளமான உருவமும், ஒற்றை நாடி உடலும் பெற்று, தோற்றத்தில் இருளர்களைப்போல் விளங்குகிறார்கள். இவர்கள் தலையிலுள்ள மயிர் தடிப்பாகவும் சுருண்டும் இருக்கும்; தலையைச் சுற்றிப் புதர் போலப் பரவி முளைத்திருக்கும், பெண்கள் ஒரே ஒரு துணியை ஆடையாக அணிகின்றனர். மார்பை மூடும்படியாக அக்குளைச் சுற்றி அத்துணியை முடிந்து கொள்கின்றனர். முழந்தாள் வரையில் அத்துணி கீழே மறைத்துக்கொண்டிருக்கிறது.

மொழி ;

குறும்பர்கள் பேசும் மொழி கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடையதென்றும், சிதைந்த கன்னடமே அம்மொழி என்றும் கூறுகின்றனர். ஆனால் திராவிட மொழியாராய்ச்சி வல்லுநரான கால்டுவெல் அம்மொழியைச் சிதைந்த தமிழ் என்று கூறுகிறார்.

தொழில் :

குறும்பர்கள் தோடர்களைப்போல் மேய்ச்சல்காரர்களுமல்ல; படர்களைப் போல் நிலக்கிழார்களுமல்ல, இவர்கள் கோதர்களைப் போல் ஏழைகள். பிற இனத்தார்க்குப் பணிபுரிந்தே வாழ்பவர்கள், தோடர்களுக்கு இவர்கள் அஞ்சுவதுமில்லை; மற்றவர்களைப் போல் 'குடு' கொடுப்பதுமில்லை. கோதர்களோடு சேர்ந்து மற்றையோர்க்கு இசைப்பணி புரிந்து வாழ்கின்றனர். மந்திர வித்தையில் இவர்கள் மிகவும் வல்லவர்கள். இதனாலேயே இவர்களைக் கண்டு மற்ற இனத்தார் மிகவும் அஞ்சுகின்றனர். 'படகர்' வாழும் ஒவ்வொரு சிற்றூரிலும், அவர்களுக்குத் துணைபுரிவதற்காகக் குறும்பர்களை அமர்த்திக் கொள்ளுவதுண்டு. நிலத்தை முதன் முதலாக உழும் சடங்கையும், முதல் விதையை விதைக்கும் சடங்கையும், முற்றிய பயிரை முதன் முதலாக அறுக்கும் சடங்கையும் நிகழ்த்திவைக்கப் படகர்களால் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். படகர்களின் நிலத்தில் பண்ணையாட்களாகவும் குறும்பர்கள் பணிபுரிகின்றனர், கால் நடைகளுக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் நோயைத் தீர்ப்பதற்குப் படகர்கள் இவர்களையே நாடவேண்டியிருக்கிறது. இப்போது குறும்பர்களிடம் படகர்கள் கொண்டிருக்கும் அச்சம் சிறிது குறைந்துவிட்டது எனலாம். பண்டைக்காலத்தில் படகர்கள் கொண்டிருந்த அச்சத்தைப் பற்றி திரு. மெட்ஸ் (Mr. metz) என்ற ஐரோப்பியர் குறிப்பிடும் போது, “ஒரு படகன் தனியாக ஒரு குறும்பனைக் காட்டிற்குள் எதிர்பாராதவிதமாகக் காண நேரிட்டால், அஞ்சி நடுங்கி அப்பொழுதே உயிர்விட்டுவிடுவான்" என்று கூறுகிறார்.

ஜேன் குறும்பர்கள் மலை இடுக்குகளில் உள்ள மலைத் தேனீயின் கூட்டை அழித்துத் தேன் எடுப்பதில் வல்லவர்கள், இதை இவர்கள் தொழிலாகவும் கொண்டிருக்கிறார்கள். ஜேனு என்றால் கன்னடத்தில் தேன் என்று பொருள். ஆகையினால் இக்குறும்பர்கள் தங்களைத் “தேனெடுக்கும் காட்டுத் தலைவர்கள்" (ஜேனு கொய்யோ ஷோலா நாயகா) என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அக வாழ்க்கை :

குறும்பர் குலத்தில் ஒரு பெண் பருவமடைந்ததும், அப்பெண்ணின் மூத்த சகோதரன் புதிதாக ஒரு குடிசையை அமைப்பது வழக்கம். அதில் அப்பெண்ணைக் கொண்டுபோய் வைப்பார்கள். உறவினர்கள் நாள் தோறும் குடிசைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்ப்பார்கள். பருவமடைந்த பத்தாம் நாள் அப்பெண்ணைக் குளிப்பாட்டி வீட்டிற் கழைப்பார்கள். அத்தை மகளே பெரும்பாலும் மணத்திற்குரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். திருமணம் பெற்றோரின் இசைவுடனேயே நடைபெறும். மணமகளின் தாயார் பெண்ணுக்குத் தாலியும், மணமகனுக்குப் புத்தாடையும் அளிப்பாள். மணமகனின் பெற்றோர் பெண்ணுக்குக் கூறைப்புடவையும், பித்தளையினால் செய்த மோதிரங்களும் வளையல்களும் அளிப்பர். மணப் பெண்ணின் தாய் தாலியைக் கையிலெடுத்து மகளின் கழுத்தில் கட்டுவாள். பிறகு எல்லாரும் மகிழ்ச்சியுடன் விருந்துண்பர். விருந்தின்போது மணமக்களுக்கு ஒரே உண்கலத்தில் உணவு பரிமாறப்படும். உணவின் ஒரு பகுதியை மணமகன் மணப் பெண்ணுக்கும் மணப்பெண் மணமகனுக்கும் ஊட்ட வேண்டும். விருந்து முடிந்ததும் மணமக்களைத் தனியறையில் விட்டுவிட்டு எல்லாரும் பிரிந்து செல்வர்.

மணவிலக்கு குறும்பர்களிடையே அனுமதிக்கப்படுகிறது. ஆணுக்கே மணவிலக்குக் கோர உரிமையுண்டு; பெண்ணுக்குக் கிடையாது. மறுமணமும், கைம்பெண் மணமும் இவர்களிடையே நடைபெறுகின்றன. இம் மணங்களில் பெண்வீட்டாரே மாப்பிள்ளை தேடவேண்டும். மறுமணத்திற்கு எந்த விதச் சடங்கும் கிடையாது. பெற்றோர் இசைவு கிடைத்தவுடன், தனிக் குடித்தனம் செய்ய வேண்டியது தான்.

இறுதிச் சடங்கு :

குறும்பர்களின் இறுதிச் சடங்குகளும் படகர்களின் சடங்குகளையே ஒத்திருக்கின்றன. இவர்களும் வீரராயப் பணத்தை இறப்பவன் வாயில் போட்டு நீர் ஊற்றுகின்றனர். தேரமைத்து அதில் பிணத்தைக் கிடத்தி இடுகாட்டிற்கு எடுத்துச்செல்லுகின்றனர். மிகவும் வயது முதிர்ந்தவர்களை எரித்துவிடுகின்றனர். மற்றவர்களை உட்கார்ந்த நிலையில் புதைத்து நடுகல் நாட்டுகின்றனர். ஏழாம் நாள் இறந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த எல்லாரும் இடுகாட்டிற்குச் செல்வர். ஒரு முதியவர் குழிபறித்து அதில் ஒரு புல்லை நடுவார். மூங்கிலினால் செய்த ஒரு கலத்தில் நீரை நிரப்பி, அதில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடுவார்கள். இவ்விரண்டு சொட்டு விளக்கெண்ணெயும் தொலைவில் விலகியிருந்தால், தீச்சகுனம் என்று கருதி, வேறு எந்தச் சடங்கும் செய்யமாட்டார்கள். ஒன்று சேர்ந்தால் நற்சகுனமாகக் கருதி, அந்நீரைக் கீழே கொட்டி விடுவார்கள். பிறகு புதுப்பானை ஒன்று வாங்கிப் 'பில்லாலா' கோயிலில் வைப்பார்கள், உறவினர்கள் யாரேனும் சமாதியைக் கடந்து செல்ல நேரிட்டால் வெற்றிலை, பாக்கு, புகையிலை முதலியவற்றை வைத்து வணங்கிவிட்டுச் செல்வர். இரண்டாண்டுகள் முடியும் வரை, மழை காலத்தில் சமாதியின் மேல் பந்தல் போடுவார்கள்!

பிற செய்திகள் :

குறும்பர்கள் கல்லாத்தா (பெண் தெய்வம்), ஐரு பில்லி, காடுபில்லாலா என்ற மூன்று தெய்வங்களை வணங்குகின்றனர். ஐருபில்லியும், காடுபில்லாலாவும் மலையாளத்திலிருந்து வயநாட்டில் குடிபுகுந்த தெய்வங்களாகக் கருதப்படுகின்றன. நீலகிரியிலுள்ள மற்ற பழங்குடி மக்களைவிட, ஜேன் குறும்பர்களும் மந்திரத்தில் வல்லவர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் நினைத்தபோது காட்டானைகளை அழைக்கும் ஆற்றல் மிக்கவர்களென்றும், சில மர்மமான மூலிகைகளை வீசிப் பாறைகளைக்கூடப் பொடி செய்து விடுகிறார்கள் என்றும் கதை கூறப்படுகின்றன. சமூகச் சட்டங்களை அமுல் நடத்த ஒவ்வொரு ஊரிலும் ஒரு பஞ்சாயத்து உள்ளது. அப் பஞ்சாயத்தின் தலைவர் 'எசமான்' என்று அழைக்கப்படுகிறார். தோடர்களும் படகர்களும் ஒன்று சேர்ந்து குறும்பர்களுக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதுண்டு. குறும்பர்கள் வாழும் ஊர்களில் புகுந்து, கூட்டங் கூட்டமாக அவர்களைக் கொன்றுவிடுவார்கள். இத் தகைய படுகொலைகள், கி. பி. 1824, 1835, 1875, 1882, 1900 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றிருக்கின்றன. குறும்பர்கள் சிறந்த வில்லாளிகள். கோட்டையம் மன்னருக்கும் ஆங்கிலேயருக்கும் போர் ஏற்பட்ட போது, கோட்டைய மன்னரின் சார்பிலிருந்து குறும்பர்கள் வீரப்போர் புரிந்தனர்.

வயநாட்டுச் செட்டிகள் :

நீலகிரி மலையிலுள்ள வய நாட்டு வட்டத்தில் வாழ்பவர்கள் ஆலையால், இவர்கள் வய நாட்டுச் செட்டிகள் என்று அழைக்கப்படுகிறார்கள், இவர்கள் தொழிலால் உழவர்கள். இவர்கள் மலையாள மொழி பேசுவதோடு, மலையாளத்திலுள்ள மருமக்கள் தாய முறையையும் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் முன்னோர்கள் கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரத்திலிருந்து நீலகிரி மலைமீது குடிபுகுந்த வெள்ளாளச் செட்டியரே ஆவர். எனவே இவர்கள் இனத்தால் தமிழர், வய நாட்டுச் செட்டிகளிடையே இரண்டுவிதத் திருமணங்கள் உண்டு. முதல்வகைத் திருமணத்தின்படி, பெண்ணானவள் கணவனிடம் தொடர்பு (marital relations} கொள்ளுவாள் ; ஆனால் கணவன் வீட்டுக்குச் சென்று வாழமாட்டாள். மற்றொரு வகைத் திருமணம் ‘மாலைக் கல்யாணம்' என்று சொல்லப்படுகிறது. அதன்படி மனைவி கணவனோடு வாழ அனுமதிக்கப்படுகிறாள். மருமக்கள் தாய முறையே இத் திருமண வேறுபாடுகளுக்குக் காரணம் என்று சொல்லலாம். இவர்கள் வய நாட்டுப் பீடபூமியில், இழிந்துவரும் நீரருவிகளின் நீரைப்பாய்ச்சி நெல் விளைவிக்கின்றனர். அதோடு புன்செய்த் தானியங்களையும் விளைவிக்கின்றனர். வய நாட்டுச் செட்டிகளின் சமுதாயத்தில் ஐந்து குடும்பங்கள் தலைமைபெற்ற குடும்பங்களாகக் கருதப்படுகின்றன. அக்குடும்பத்தாரின் ஆணைவழி எல்லாரும் ஒழுகுகின்றனர். இவர்கள் சிறந்த உழைப்பாளிகள் ; கட்டுப்பாட்டிற் கடங்கியவர்கள் ; அமைதியான வாழ்க்கையை உடையவர்கள் ; வேட்டையில் விருப்பமுடையவர்கள்; புலிகளை வலை போட்டுப் பிடித்து, ஈட்டியால் குத்திக் கொல்லும் வேட்டை முறையில் கைதேர்ந்தவர்கள். வயநாட்டுச் செட்டியரில் பலர் நிலக்கிழார்களாக இருந்தாலும், பெரும்பாலோர் ஏழைகள். சுல்தான் பேட்டரியிலிருக்கும் மாப்பிள்ளைகளிடம் எல்லாரும் கடன்பட்டு வாழ்கின்றனர். (மாப்பிள்ளைகளென்போர் மலையாளத்து முஸ்லீம்கள், அரேபியாவிலிருந்து மலையாளக்கடற்கரையில் குடியேறி அங்கேயே நிலைத்துவிட்டவர்கள். இவர்கள் சேர நாட்டுத் தமிழ்ப் பெண்களை மணந்து, நமக்கு மாப்பிள்ளைகளாகி விட்டனர் போலும். வய நாட்டில் பெரிய வட்டிக்கடைக்காரர்களாக இவர்கள் விளங்குகிறார்கள்). வய நாட்டுச் செட்டிகள் பெருங் குடியர்கள்.

பிற செய்திகள் :

நீலகிரியில் பனியர், இருளர் என்று வேறுசில பழங்குடியினரும் வாழ்கின்றனர். இவர்கள் எல்லாரும் மற்ற இனத்தார்க்குப் பணிபுரிந்து வருகின்றனர். குறும்பர்கள் இருளர்களைக் கண்டு மிகவும் அஞ்சுவார்கள். காரணம் இவர்களும் பெரிய மந்திரவாதிகள் என்பதே. இருளர் குலத்தைச் சேர்ந்த பெண், வெளியில் வேலைக்காகச் செல்லும்போது, பெண் புலிகளைத் தன் குழந்தைகளுக்குக் காவலாக வைத்துவிட்டுச் செல்லுவாள் என்று கூறப்படுகிறது.

மலைகளில் வாழும் இப் பழங்குடி மக்களின் நலனுக்காக, மத்திய அரசாங்கமும், சென்னை அரசாங்கமும் நிறையப் பொருட் செலவு செய்கின்றன. இவர்களின் கல்விக்காக ரூ. 10.67 இலட்சம் ஒதுக்கியுள்ளனர். முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின்படி மாணவர்கள் தங்கிப் படிக்கக் கூடிய 9 பள்ளிகளும், 11 சாதாரணப் பள்ளிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில், 16 பள்ளிகளும் துவக்கப்பட்டுள்ளன. இவைகளன்றி 4 தங்கும் விடுதிகளும் நடத்தப்படுகின்றன.

மலைவாழ் மக்களில் பெரும்பாலோர் உழவுத தொழில் செய்ய நிலம் இல்லாதவர்களாக இருக்கின்றனர். ஒருசிலர் தாம் உழவுத் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றனர். உழவுத் தொழில் செய்வதற்கும், உழவுக் கருவிகள் வாங்குவதற்கும் அவர்களிடம் பணவசதி கிடையாது. ஆகவே உழவு மாடுகள், உழவுக் கருவிகள், விதைகள் முதலியனவாங்குவதற்காக இவர்களுக்கு மானியங்கள் வழங்குவதற்கென்று ரூ 5.8 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

சில மலைவாழ் மக்கள் கூடைமுடைதல், தச்சுவேலை முதலிய சிறு கைத்தொழில்களைச் செய்தல் ஆகியவற்றில் வல்லவர்களாக இருக்கின்றனர். இத் துறையில் அவர்களுக்கு உதவியளிப்பதற்காக ரூ 2.75 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. நீலகிரிப் பீடபூமியிலுள்ள கோதகிரியில் ஒருபயிற்சி உற்பத்தி நிலையம் துவக்கவும், சில குடிசைத் தொழில்களைத் துவக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

மலைவாழ் மக்கள் நல்ல காற்றுள்ள இடங்களில் வாழ்ந்துவந்த போதிலும், நல்வாழ்வு நடத்தவில்லை. மலேரியாக் காய்ச்சலினால் இவர்கள் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். இதனால் பலர் ஆண்டுதோறும் இறந்துவிடுகின்றனர். நீலகிரி மலையிலுள்ள தோடர்கள் தோல்நோயினால் பீடிக்கப்பட்டு ஆண்டுதோறும் மக்கள் தொகையில் குறைந்துவந்தனர். நீலகிரி மாவட்டப் பழங்குடி மக்களுக்காக ஒரு நடமாடும் மருத்துவமனை {mobile dispensary) இயங்கிவருகின்றது. மலைவாழ் மக்கள் இருக்கும் எல்லாப் பகுதிகளுக்கும் இம்மருத்துவமனை சென்று பணிபுரிவதன் மூலம் தோடர்களிடையே பரவிவந்த தோல்நோய் அறவே நீங்கிவிட்டது. கொயினா மருந்து எல்லாருக்கும் வழங்குவதன் மூலம் மலேரியாவும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் தண்ணீர் நிறையக் கிடைக்கக் கூடிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த போதிலும், தூய்மையான குடி தண்ணீர் கிடைக்காமல் வருந்துகின்றனர். எனவே எல்லா மாவட்டங்களிலுமுள்ள மலைவாழ் மக்களுக்குக் குடி தண்ணீர் வசதிகள் செய்வதற்காக இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் ரூ 80,000 ஒதுக்கப் பட்டிருக்கின்றன.

மலைவாழ் மக்கள் சிறுகுடிசைகளில் குடியிருக்கின்றனர். அக்குடிசைகள் விலங்குகளும் தங்கமுடியாதபடி மிகவும் கேவலமான நிலையில் உள்ளன. நல்ல குடியிருப்புகள் இல்லாமல் அவர்கள் நலத்துடன் வாழ்வது எப்படி? ஆகவே வீடுகள் கட்ட ரூ 5.53 இலட்சம் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டிற்கும் ரூ 900 செலவிட முடிவு செய்துள்ளனர்.

இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் நீலகிரி, சேலம் மாவட்டங்களிலுள்ள மலைகளின்மீது சாலை வசதிகளைப் பெருக்குவதற்காக ரூ. 37,000 செலவிடப்படும். ஆடைகள் முதலிய இதர செலவினங்களுக்காக ரூ 77,000 ஒதுக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களெல்லாம் நல்ல முறையில் அமுலாக்கப்பட்டால், பழங்குடி மக்களின் வாழ்வு சிறப்படையும் என்பதில் ஐயமில்லை.

குடியேற்றம் :

முதன் முதலாகக் கி. பி. 1602 ஆம் ஆண்டில் ஒரு போர்த்துகீசியப் பாதிரியார், நீலகிரி மலையைக் காண்பதற்காக வந்தார். அவர் பெயர் ஃபெர்ரீரி (Ferreiri). நீலகிரியில் வாழும் தோடர்களோடு உரையாடியதோடு அமையாமல், அவர்கள் குடும்பங்களுக்குப் பல பரிசில்களும் வழங்கினார். மிகவும் தொன்மையான பழங்குடி மக்களான தோடர்கள் வாழும் செய்தி, அப்பொழுதுதான் சமவெளியில் வாழும் மக்களுக்குத் தெரிந்தது.

ஃபெர்ரீரிக்குப் பிறகு நீலகிரி மலையை ஆராய்வதற்கு, 200ஆண்டுகள் வரையில் யாரும் முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. டாக்டர் புச்சானன் (Dr. Buchanan) என்பவர், இந்திய அரசியலாரின் ஆணையை மேற்கொண்டு, மைசூர் நாட்டிலும் அதற்கு அண்மையிலும் உள்ள மலைகளை, வாணிப நோக்கோடும், பயிர்த் தொழில் நோக்கோடும் ஆராய்வதற்காக வந்தார். நீலகிரி மலையையும் சுற்றிப் பார்த்தார். ஒரு நாளில் எவ்வாறு அதை ஆராயமுடியும்? நீலகிரி மலையைப் பற்றி அவர் கொடுத்த குறிப்புகள் பயனற்றவை ; மேற்போக்கானவை. டாக்டர் புச்சானன் சென்று திரும்பியபின், 12 ஆண்டுகள் கழித்து நீலகிரி மலையை விஞ்ஞான நோக்கோடு ஆராய்வதற்காக திரு. கீஸ் (Keys) என்ற ஓர் ஆராய்ச்சியாளரையும், அவருக்குத் துணையாக மக்மகான் (Macmahon) என்ற ஒருவரையும் கோவை மாவட்டத் தண்டலர் அனுப்பிவைத்தார். ஆனால் அவர்கள் அளித்த குறிப்புகள் சொந்த ஆராய்ச்சியினால் எழுந்தவைகளல்ல. பிறர் வாயிலாகக் கேட்டறிந்தவையே. எனவே அவர்களுடைய ஆராய்ச்சியும் பயனற்றதாக ஒழிந்தது.

ஆறு ஆண்டுகள் கழிந்தபின்னர், கோவை மாவட்டத்தின் தண்டலராகப் பணியாற்றியவரும், நீலகிரிமலையின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவருமான திருவாளர் ஜான் சல்லிவன் என்பார், ஆராய்ச்சி விருப்பும், விடா முயற்சியும் கொண்ட இருவரை நீலகிரி மலைக்கு அனுப்பினார். அவர்கள் ஆராய்ந்து வெளியிட்ட கருத்துக்கள் தண்டலரின் கருத்தை ஈர்த்தன. அவரும் நீலகிரிக்குச் சென்றார். சென்றதோடு அமையாமல், ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, கோடையில் தங்குவதற்குரிய குளிர்மனை யொன்றை எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். நீலகிரிமலையின் மீது குடியேறிய முதல் ஐரோப்பியர் இவரே.

திருவாளர் ஜான் சல்லிவன் நீலகிரி மலைக்குச் சென்ற ஆண்டு கி. பி. 1819 ஆகும். நீலகிரி மலையை உண்மையில் ஆராய்ந்து பிறருக்கு வெளியிட்டவர் இவரே எனில், அது மிகையாகாது. இப்போது உதக மண்டலம் அமைந்திருக்குமிடத்தை திரு. சல்லிவன் முதலில் கண்டதும், அவ்விடத்தின் இயற்கையழகும். தட்ப வெப்ப நிலையும் அவர் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தன. உடனே, அவ்விடம் ஒரு குறிஞ்சி நகரம் அமைப்பதற்குரிய சிறந்த தகுதிகளையெல்லாம் பெற்றிருக்கிறது என்ற செய்தியை அரசியலாருக்கு அறிவித்தார். கி. பி. 1823-ஆம் ஆண்டு தாம் தங்கியிருப்பதற்காக ஓரழகிய மனையை எழுப்பினார். அது இப்பொழுது 'கல்மனை' (Stone House) என்ற பெயரால் அழைக் ப்படுகிறது. உதக மண்டலத்திலுள்ள சந்தை வெளியினருகில், உயரமான இடத்தில் சில மாறுதல்களைப் பெற்று இன்றும் கல்மனை கண்ணைக்கவரும் தோற்றத்தோடு விளங்குகிறது.

கி. பி. 1824 ஆம் ஆண்டிலிருந்து ஐரோப்பியர்கள் பெரும் அளவில் நீலகிரி மலை மீது குடியேறத் தொடங்கினர். கோடைக்காலங்களில், சென்னை மாநில ஆளுநரும் (governor) இங்கு வந்து தங்கத் தொடங்கினார். ஆளுநர் ஆண்டுதோறும் வந்து தங்குவதற்கென்று அரசியலார் ஓரழகிய மாளிகை எழுப்பினர். அம்மாளிகை முதலில் ' 'அரசியல் மனை' (Government House) என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இப்பொழுது அதை 'நார்வுட் மனை' (Norwood House) என்று எல்லாரும் அழைக்கின்றனர். பக்கிங்காம் பிரபு (Duke of Buckingham) சென்னை மாநில ஆளுநராகப் பணியாற்றிய போது, அரசியல் மனையின் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அம்மாளிகையைச் சுற்றி அழகான தோட்டத்தையும் அமைத்தார். மாளிகையிலும் தோட்டத்திலும் பனிபுரிவோரின் அலுவல்களை அடிக்கடி கண்காணித்தார். இவருடைய இடையறாத தலையீட்டை அப்பணியாளர்கள் பெரிய தொல்லையாகக் கூடக் கருதினர். ஓய்வு நாட்களில் எளிய உடையணிந்து சுற்றி வருவார் பிரபு. ஒருநாள் காலையில், முகச் சவரம் கூடச் செய்து கொள்ளாமல், அலங்கோலமான தோற்றத்தோடு தோட்டத்தைச் சுற்றி வந்தார். ஓர் ஐரோப்பிய வேலைக்காரன் பாத்தி அமைத்துக்கொண்டிருந்தான். பிரபு அவனருகில் சென்று, "ஏனப்பா, இப்பாத்தியை இப்படி அமைத்தால் நன்றாயிருக்கு மல்லவா? இச் செடிகளை ஏன் இப்படி நடக் கூடாது?" என்று வினவினார். அவ் வேலைக்காரன் பிரபுவை அத்தகைய தோற்றத்தில் இதற்கு முன் பார்த்தது கிடையாது. வேறு, யாரோ வழிப்போக்கர் என்று எண்ணினான். அவன் அவரை நிமிர்ந்து கூடப் பார்க்கவுமில்லை ; அவருடைய வினாக்களைச் செவியில் வாங்கிக் கொள்ளவுமில்லை. பிரபு மேலும் மேலும் வினவவே, அவன் பொறுமை யிழந்தான். உடனே தலை நிமிர்ந்து, "ஏனய்யா! உனக்கு வேறு வேலையில்லையா? உம் வழியைப் பார்த்துக்கொண்டு போம். பக்கிங்காம் பிரபு என்ற எண்ணம் போலிருக்கிறது!" என்று சினந்துரைத்தான். உடனே பிரபு தன்னை மறந்து சிரித்தார். வேலைக்காரன் அவரை உடனே யாரென்று உணர்ந்து கொண்டான். தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.

அரசியல் மனைக்குச் சற்று மேலே, காட்டிலாகா அதிகாரி ஒருவரால் பயன்படுத்தப்பட்ட குடிசை யொன்றுள்ளது. அரசியல் மனையில் தங்கியிருந்த ஆளுநரின் குழந்தைகள் அங்குச் சென்று விளையாடுவது வழக்கம். இப்பொழுது அது இன்ப விருந்து (Picnic) உண்ண மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது.

உதகமண்டலம்

பெயர்க் காரணம் :

உதக மண்டலம் என்று இந்நகருக்குப் பெயர் ஏற்பட்டது பற்றி ஒரு செவி வழிச் செய்தி உலவு கின்றது. 'மண்டு' என்ற சொல் தோடர் வாழும் சிற்றூரைக் குறிக்கும் என்று முன்பே குறிப்பிட்டேன். திருவாளர் சல்லிவன் கட்டிய கல்மனை அமைந்திருக்கும் இடம், முன்பு ஒரு மண்டுவாக இருந்ததாம். ஒவ்வொரு மண்டுவிலும் வழக்கமாக நான்கைந்து குடிசைகள் இருக்கும். ஆனால் இந்த மண்டுவில் ஒரே ஒரு குடிசைதான் இருந்ததாம். பார்த்கை (Parth-Kai) என்ற ஒரு வயது முதிர்ந்த தோடர் குலச் செல்வன் அக் குடிசையில் தன் குடும்பத்தாரோடு வாழ்ந்து வந்தான், செல்வர்களாக இருக்கும் தோடர் வீட்டின் எதிரே சிறிது தொலைவில் ஒரு கல் நடப்பட்டிருக்கும். அதன்மேல் தங்கள் கடவுளுக்கு உணவு படைப்பது அவர்கள் வழக்கம்.

திருவாளர் சல்லிவன் முதன் முதலாக நீலகிரி மலைக்கு வந்தபொழுது, பார்த்கையைக் கண்டு பேசினார். பார்த்கை கல் நாட்டப்பட்டிருந்த அவ்விடத்தைக் காட்டி, “ஜெல்லோகோ எ மண்டு" என்று கூறினானாம். “கல் நாட்டப்படிருக்கும் இச் சிற்றூரை நீ வைத்துக் கொள்” என்பது அத்தொடரின் பொருள். 'ஜெல் லோகோ' என்ற தொடர் மொழிச் சொல், தனியாக நிற்கும் ஒரு கல்லையோ, அல்லது கல் நாட்டப்பட்ட சிற்றூரையோ குறிப்பிடும். அச் சொல்லின் தமிழ் மொழி பெயர்ப்பு, ஒற்றைக்கல் மண்டு என்பதாகும். ஒற்றைக்கல் மண்டு என்ற பெயர் ஒத்தைக்கல் மண்டு என மாறி, இப்பொழுது 'உடகமண்ட்' (Ootacamund) என்று வழங்குவதாகக் கூறுகின்றனர்.

வேறு சிலர் இப்பெயரைப் படகர்களோடு தொடர்பு படுத்துகின்றனர், படகர், வடக்கிலுள்ள மைசூர் நாட்டிலிருந்து வந்ததால் வடகர் என்றும் அழைக்கப்பட்டனர் என்பதை முன்பே குறிப்பிட்டேன், வடகர் வந்து குடியேறிய அவ்விடம் • வடகமண்டு' என்று தோடர்களால் அழைக்கப்பட்டதாம், பிறகு அப்பெயர் ‘வட்டயாக மண்டு,' ' 'வட்டச மண்டு' எனப் பலவிதமாக மாறி, இப்பொழுது உடகமண்ட் என்று வழங்குவதாகவும் கூறுகின்றனர். வேறு சிலர் மற்றொரு காரணமும் கூறுகின்றனர். இக்காரணம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது. 'உதகமண்டலம்' என்பதே ஆதியிலிருந்து இவ்வூருக்கு வழங்கும் பெயர் என்பது அக் கொள்கை, உதகமண்டலம் என்றால் படகர் மொழியில் 'எப்போதும் மழை பெய்து கொண்டிருக்குமிடம்' என்பது பொருள்.

வழி :

உதகமண்டலத்தை இரு வழிகளில் வந்தடையலாம். மைசூரிலிருந்து மலைவழிப் பாதையில் 100 கல் உந்து வண்டியின் மூலம் சென்று உதக மண்டலத்தை அடையலாம். கோவையிலிருந்து மேட்டுப் பாளையம் வழியாகவும் சென்றடையலாம். மைசூரிலிருந்து வரும் வழி கன்னடக் காட்டில் (Kanara forest) புகுந்து வருகிறது. இவ்வழி அழகிய காட்சிகளைக் கொண்டது; உள்ளத்திற்கு இன்பத்தைப் பயப்பது. கோவையிலிருந்து உதக மண்டலம் செல்ல உந்து வண்டிகளும் நிறைய உள்ளன. ஆனால் புகைவண்டியில் ஏறி, மேட்டுப் பாளையம் வழியாகச் சென்றால் நீலகிரியின் மலைவளத்தை நல்ல முறையில் கண்டு இன்புறலாம். புகைவண்டிச் செலவு நம் பொறுமையை அளவுக்கு மீறிச் சோதித்துவிடும். புகை வண்டி மிகவும் மெதுவாகச் செல்லும். மேலும் இடையிலுள்ள புகை வண்டி நிலையங்களில் அடிக்கடி நின்று விடும். மற்ற புகை வண்டிகளுக்கும் நீலகிரி மலைமேல் செல்லும் புகை வண்டிகளுக்கும் ஒரு வேறுபாடு உண்டு. இவ்வண்டிகளில் இயங்கி (engine) முன்னால் பொருத்தப்படுவதில்லை, பின்னிருந்து வண்டியைத் தள்ளுகிறது. இவ்வண்டியிலுள்ள முதல் பெட்டி திறந்த பக்கங்களையுடைய தாக இருக்கும். ஆகையினால் இப்பெட்டியில் இடம் பிடிக்க எல்லாப் பிரயாணிகளும் போட்டியிடுவர். ஏனென்றால் அப்பெட்டியில் உட்கார்ந்திருப்போர் மலைச்சரிவுகளில் உள்ள இயற்கைக் காட்சிகளை நன்கு. பார்த்து மகிழ முடியும்.

வளர்ச்சி :

அரசியல் மனை (Government House) கட்டப்பட்டதும், சுதேச மன்னர்களும் செல்வந்தர்களும் உதகமண்டலத்தில் பெரிய பெரிய மாளிகைகளை எழுப்பத் தொடங்கினர். இப்போது ஊட்டியில் ஏறக்குறைய 5000 வீடுகள் உள்ளன. இவ் வீடுகளெல்லாம் வண்ணம் பூசப்பட்டுப் பேரழகுடன் விளங்குகின்றன.

இந்நகரின் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருப்பதாலும், புதிய புதிய இல்லங்கள் தோன்றிக் கொண்டே இருப்பதாலும் நகரின் வசதிகளையும் பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கி. பி. 1826-ஆம் ஆண்டு , முதல் அஞ்சல் மனை {Post-office) தோற்று விக்கப்பட்டது. கி. பி. 1829-ஆம் ஆண்டு முதல் மருத்துவமனை கட்டப்பட்டது. கி. பி. 1863-ஆம் ஆண்டு நகராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட்டது. தண்டலர் அலுவலகம் கி. பி. 1866-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1878-ஆம் ஆண்டு 40,000 நூல்களடங்கிய ஒரு நூலகம் ஏற்படுத்தப்பட்டது. தென்னிந்தியாவிலுள்ள மிகவும் சிறந்த நூலகங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் அங்குச் சந்தை கூடுகிறது. உதகமண்டலத்தில் வாழும் ஆண்களும் பெண்களும் அங்குக் கூடி, ஒரு வாரத்திற்கு வேண்டிய பொருள்களை வாங்கிச் செல்லும் காட்சி உண்மையிலேயே உள்ளக் கிளர்ச்சியூட்டும் தன்மையது. 'சார்மிங் கிராஸ்' (Charming Cross) என்பது உதகமண்டலத்தின் நடுவிடம். அம்முனையில் நான்கு புறமும் பரவிச் சொரியும் செயற்கை நீர் ஊற்று (Flora Fountain) ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கார்காலத்தில் அவ்வூற்று களிநடம் புரியும். அவ்விடத்தைச் சுற்றி அழகிய கடைகள் வரிசையாக உள்ளன.

மக்கள் தொகை பெருகியதும் பல கழகங்கள் தோன்றத் தொடங்கின. கி. பி. 1841-ஆம் ஆண்டு ஊட்டிக் கழகம் (Ooty Club) தோன்றியது. அதன் உறுப்பினர்களெல்லாம் வெள்ளையரே. தோட்ட முதலாளிகளுக்காகவே இக் கழகம் அமைக்கப்பட்டது. கி. பி. 1869-ஆம் ஆண்டு ஜிம்கானா கழகம் (Gymkhana Club) தோன்றியது. அது இப்பொழுது ஊட்டி குழிப்பந்தாண்டக் கழகம் (Golf Club) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. ஊட்டியிலுள்ள வேட்டையர் கழகம் (Hunt Club) இப்பொழுது சிறந்த முறையில் உள்ளது. இவைகளேயன்றி வேறு சில கழகங்களும் உள்ளன. அவற்றில் குறிப்பிடத் தக்கது லாலி நிறுவனம் (Lawly Institute) என்பதாகும், கோடைக் காலத்தில் மட்டைப் பந்தாட்டப் (Tennis Championship) போட்டியை இது சிறந்த முறையில் நடத்தி வைக்கிறது.

கோடையில் இந்திய நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாக இங்கு வந்து கூடுகின்றனர். எனவே அவர்களுடைய வசதிக்காகப் பல சிறந்த உணவு விடுதிகளும், தங்கல் மனைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோடையில் தங்குவதற்கென்று வீடுகள் குடிக் கூலிக்கு விடப்படுகின்றன.

சிறப்பு :

நீலகிரி மலையின் பரப்பு 900 சதுர மைல் ஆகும். இதன்மீது அமைந்துள்ள குறிஞ்சி நகரமான உதகமண்டலம் இயற்கையழகில் ஈடு இணையற்றது. சர் சி. பி. இராமசாமி ஐயர் ஒரு சமயம், “உலகிலேயே மிகவும் அழகிய குறிஞ்சி நகரம் உதகமண்டலம்" என்று பாராட்டிப் பேசினார். 'குறிஞ்சி நகரங்களின் அரசி' (Queen of Hill stations) என்ற சிறப்புப் பெயருக்கு உதகமண்டலம் தகுதியுடையது. எக்காலத்தும் இது தன் சிறப்புக் குன்றாமல் விளங்குகிறது. ஏப்ரல் தொடங்கி ஜூன் திங்கள் முடியும் வரை இதைப்போல் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தாண்டவமாடும் இடம் எதையும் இந்திய நாட்டில் காண முடியாது. இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், இன்பத்தை நாடுவோர் இங்கு வந்து குவிகின்றனர். விருந்துண்டும், வேட்டையாடியும், ஆடல் நிகழ்த்தியும், குதிரைப் பந்தயத்தில் பங்கு கொண்டும், குழிப்பந்து மட்டைப் பந்தாட்டப் போட்டிகளைக் கண்டு கழித்தும், மீன் பிடித்தும், மலைகளில் சுற்றித் திரிந்தும், ஏரியில் தோணியூர்ந்தும், பசும்புற்றரையில் படுத்துப் புரண்டும், பழங்குடி மக்களைக் கண்டு களித்தும், குறிஞ்சியழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தும் பொழுதை இன்பமாகக் கழிக்கின்றனர். உதகமண்டலத்தின் தட்ப வெப்பநிலை இளைஞர், முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகிய எல்லாருக்கும் ஏற்றதாக அமைந்துள்ளது. இந்நகரில் கார் காலம் என்று தனியாக ஒரு காலம் கிடையாது. ஆண்டு முழுவதும் சிறு தூறல்களாக மழை தூறிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு 30 முதல் 40 அங்குலம் வரை மழை பெய்கிறது. இந்நகரின் வெப்பம் 60°-க்கு மேல் உயர்வதுமில்லை. 50°-க்குக் கீழ்க் குறைவதும் இல்லை .

சிகரங்கள் :

முதலிலேயே சிகரங்களைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டேன். அவைகளில் முக்கியமானவற்றையும் அழகியவற்றையும் பற்றிச் சிறிது குறிப்பிடுவோம். உதகமண்டலத்தைச் சுற்றித் தொட்டபெட்டா, எல்க், பனிவீழ்சிகரம், ஃபெர்ன், கெய்ரன் என்ற அழகிய சிகரங்கள் வானளாவி நிற்கின்றன. தொட்டபெட்டா : தொட்டபெட்டா என்றால் பெருமலை என்பது பொருள். இதனுடைய உயரம் 8,640 அடி, நீலகிரிப் பீடபூமியில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் இது தான், இச்சிகரத்தை எளிதில் அடையலாம். மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை உந்துவண்டியில் கடந்துவிடலாம். மீதிப்பகுதியை நடந்தே ஏறிச் செல்ல வேண்டும். உதகமண்டலத்தின் நடுவிலுள்ள சார்மிங் கிராஸிலிருந்து, தார் போடப்பட்ட பாதை கோதகிரிக்குச் செல்லுகிறது. அப்பாதையில் நான்கு கல் தொலைவு சென்று பிறகு 13-க்கல் மலைமீது ஏற வேண்டும். முதல் நான்கு கல் தூரமுள்ள பாதை வளைந்து வளைந்து செல்லுகிறது. வண்டியை ஓட்டிச் செல்லுவோர் மிகவும் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும்.

தொட்டபெட்டா உச்சியில் வானாய்வுக்கூடமொன்று கி. பி. 1846-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆனால் கி. பி. 1859-இல் உதகமண்டலத்திற்கு ஒன்பது கல் தொலைவில் உள்ள இராணுவத்தாரின் தங்கல் இடமான வெல்லிங்டனுக்கு இது மாற்றப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் தொட்டபெட்டாவிற்கே மாற்றப்பட்டது. ஆனால் இது இப்பொழுது பயன்படும் நிலையில் இல்லை. தொட்டபெட்டாவின் உச்சியிலிருந்து காண்போர் கண்களுக்கு உதகமண்டலத்தின் முழுக் காட்சியும் பேரழகோடு தென்படும். அதோடு கோவை மாவட்டத்திலுள்ள எல்லா மலைகளும் தென்படும்.

பனிவீழ் சிகரம் :

தொட்டபெட்டாவிற்கு அடுத்தாற்போல் மிகவும் உயரிய சிகரம் பனிவீழ்சிகரம் (Snow down} என்பதாகும். இதன் உயரம் 8,299 அடி. தொட்டபெட்டாவைப்போல் எளிதாக இதன்மீது ஏற முடியாது. ஏறுவதற்குத் தொல்லையாக இருந்தாலும், உயர்ந்த மரங்களடர்ந்த வழிகளூடே ஏறிச் செல்லும்போது உள்ளத்திற்கு இன்பமாக இருக்கும். ஸ்பென்சர் மலை மீது அமைந்துள்ள செயிண்ட் ஸ்டீஃபன் சர்ச்சிற்குப் பின்னால் இருக்கும் மெர்லிமண்ட் பாதையில் இரண்டு கல் தொலைவு சென்றால், இவ்வுச்சியை அடையலாம். இவ்வழியும் மரங்களடர்ந்தது.

எல்க் சிகரம் :

எல்க் சிகரம் 8000 அடிகளுக்கு மேல் உயரமுள்ளது. இதன்மீது பல கோயில்கள் உள்ளன. இவ்வுச்சியின் பக்கத்தில் ஓர் அழகிய கோயில் குடையப்பட்டுள்ளது. அங்குள்ள பூசாரி மாலைதோறும் ஒரு விளக்கேற்றி வைக்கிறார். ஊட்டியின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும் அவ்விளக்கு நன்றாகத் தெரியும்.

கெய்ரன் சிகரம் :

எல்லாவற்றையும்விட மிகவும் அழகியது கெய்ரன் சிகரம் (Cairn Hill). மற்ற எல்லாச் சிகரங்களையும் விட இது மரங்களடர்ந்தது. நல்ல வேளையாக, மற்ற சிகரங்களில் மரங்கள் அழிக்கப்பட்டாற்போல் இதில் அழிக்கப்படவில்லை . இதன் உயரம் 6,583 அடி. பச்சைக் கம்பளம் பரப்பினாற் போன்ற புல்வெளிகள் இச்சிகரத்தில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. இங்குள்ள மரங்களின் அடியில் மேடையிட்டாற்போல் பாசி படர்ந்துள்ளது. அதன்மீது இலக்கிய உணர்வுள்ள யாரேனும் தனிமையில் அமர்ந்திருந்தார்களானால், ஜோகன் ஸ்ட்ராஸ் (Johan Strause) என்ற மேலை நாட்டுக் கவிஞனின் உள்ளத்தில், அமரத்வம் பெற்ற இசைப் பாடல் உருவாகுமாறு தூண்டிய, வியன்னாவின் இளமரக்காடுகள் நினைவில் தோன்றும், கெய்ரன் சிகரம் உதகையிலிருந்து சற்றுத்தொலைவில் உள்ளது. நகரத்திலிருந்து புறப்பட்டு, ஏரியைச் சுற்றிச் செல்லும் புகைவண்டிப் பாதையோரமாகச் சென்றோமானால், தூண்கள் போல் உயர்ந்து நிற்கும் பாறைகளைக் காணலாம். அவ்விடத்திலிருந்து ஒரு கல் தொலைவு மிகவும் மோசமான பாதை அமைந்துள்ளது, அதைக் கடந்துவிட்டால், கெய்ரன் மலையின் இளமரக் காட்டிற்குள் நுழையலாம்.

மூக்கறுத்தி சிகரம் :

மூக்கறுத்தி சிகரம் (Mukerti Peak) தோடர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இச்சிகரத்திற்கு அப்பால் சுவர்க்கத்தின் வாயில் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். இச் சிகரத்தோடு தொடர்புடைய இரண்டு கதைகள் தோடர்களிடையே வழங்குகின்றன. தோடர்களிடையே பெண் குழந்தைகளைக் கொலை செய்யும் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிட்டோம். கொலை செய்ய வேண்டிய குழந்தைகளை இங்குக் கொணர்ந்து எறிந்து கொன்று விடுவதுண்டாம், ஆகையினால் எந்தப் பெண்ணையும் தோடர்கள் இச்சிகரத்தின் பக்கமாகச் செல்ல விடுவதில்லை. இக் கட்டுப்பாட்டை மீறி ஒரு பெண் இங்கு வந்துவிட்டாளாம். இதையறிந்த தோடர்கள், அப் பெண்ணின் மூக்கை அறுத்துத் தண்டித்தார்களாம். தண்டனை பெற்ற அப் பெண் எப்படியோ இம்மலைச் சிகரத்தை அடைந்து மறைந்துவிட்டடாளாம். இன்றுகூட அப் பெண்ணை ஒரு சிறு தெய்வமாகத் தோடர்கள் வணங்கு கின்றனர்.

இச் சிகரத்தோடு தொடர்புடைய மற்றொரு கதை இராவணனைப் பற்றியதாகும். தோடர்கள் இராவணனுக்கு மரியாதை காட்டாமல், இராமனிடத்தில் அதிக அன்பு செலுத்தினார்களாம். அதனால் சினங்கொண்ட இலங்கை மன்னன் ஒரு கை மண்ணை எடுத்துக் காற்றில் வீசினானாம். அம்மண் கொடிய கிருமிகளாக மாறித் தோடர்களுடைய கால்நடைகளையும், வீடுகளையும் பீடித்துத் துன்புறுத்தியதோடு, அவர்களையும் நோய் கொள்ளுமாறு செய்து கொடுமை புரிந்ததாம். இன்றுகூட அக்கிருமிகளால் துன்புறுவதாகத் தோடர்கள் நம்புகிறார்கள். இதை உணர்ந்த இராமன் இச்செயலுக்குப் பழிவாங்க எண்ணி இராவணன் தங்கையான சூர்ப்பநகையின் மூக்கை அறுத்து, எல்லாருக்கும் தெரியும்படி இச் சிகரத்தில் பதித்து வைத்தானாம். இக் காரணங்களாலேயே இச்சிகரம் இப் பெயர் பெற்றதாகத் தோடர்கள் கூறுகின்றனர்.

குன்று வெளிகள் :

உதகமண்டலத்தைச் சுற்றிப் பரந்த குன்று வெளிகள் (downs) அமைந்துள்ளன. வேறு எந்தக் குறிஞ்சி நகரத்திலும் இங்கிருப்பன போன்று பரந்த வெளிகளைக் காண முடியாது. உந்துவண்டிகளில் ஏறி உல்லாசமாகச் சுற்றித் திரிய விரும்புவோர், இணையற்ற இன்பம் காண இவ்வெளிகள் பெருந்துணை புரிகின்றன. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள பாதைகள் அமைப்பிலும், அழகிலும் ஈடற்றவை, வேறெங்கும் இத்தகைய மலைவழிப் பாதைகளைக் காண முடியாது. மகாபலேசுவரம் (Mahabaleshwar), மாதெரன் (Matheran) ஆகிய நகரங்களில் இருப்பதுபோல், உதகையைச் சுற்றி உயர்ந்த மலைகளும், குறுகிய பள்ளத்தாக்குகளும் கிடையா. மைசூரிலிருந்து கூடலூர் வழியாக உதகை செல்லும் பாதை. அழகிய வெளிகளிடையே புகுந்து செல்லுகிறது. இவ்வழிச் செல்வோர் எய்தும் இன்பம் எடுத்தியம்பற்பாலதோ?

இவ்வழி தாழ்ந்த குன்றுகளில் ஏறி இறங்கிச் செல்லுகிறது. அங்குப் பரவிக் காணப்படும் பசும் புல்வெளிகள், இங்கிலாந்து நாட்டில் மிக்க அழகோடு விளங்கும், யார்க்ஷைர் புல்வெளிகளை (Yorkshire Moors) நினைவூட்டுகின்றன. இவ்விடம் குழிப் பந்தாட்டத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்குள்ள குழிப்பந்தாட்ட மைதானம் (Golf Course) இந்திய நாட்டிலேயே மிகவும் அழகியது. இவ்வெளிகளில் அமைந்துள்ள இளமரக்காடுகளில் செம்புலி (leopards) களும், சிறுத்தை (Panthers) களும், வரையாடுகளும் நிறைய உள்ளன. இவைகளை வேட்டையாடுவது, உதகை வாழ் மக்களுக்குச் சிறந்த பொழுது போக்காக உள்ளது. ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களின்போது இவ்விடங்களில் எங்குப் பார்த்தாலும் போட்டிப் பந்தயங்கள் நடைபெறும். அடுத்தடுத்து வரும் குன்றுகளிடையே, வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கவலையின்றி நடந்து திரிவதும் ஈடற்ற இன்பமே.

திரு. வென்லாக் பிரபு (Lord Wenlock) சென்னை மாநில ஆளுநராகப் பணியாற்றிய போது, இவ்வெளிகளின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் பாடுபட்டார். ஆகையினாலேயே இவ்வெளிகள் அவருடைய பெயரை முன்னே கொண்டு 'வென்லாக் வெளிகள்' (Wenlock Downs) என்று வழங்குகின்றன. உதகமண்டலத்திலுள்ள எல்லா முக்கிய உணவு விடுதிகளிலிருந்தும் இவ் வெளிகளை எளிதில் சென்றடையலாம். உணவு விடுதிகளிலிருந்து புறப்பட்டு 1 அல்லது 1½க்கல், வெஸ்ட்பரி பாதையில் செல்ல வேண்டும். உதகையிலிருந்து கிளம்புவோர் பாதையை அடைந்து ஃபிங்கர் போஸ்ட் (Finger Post) டை நோக்கிச் சென்றால் இவ்வெளிகளைச் சீக்கிரம் அடையலாம், கை விரல்களை விரித்து வைத்தாற்போல் ஐந்து பாதைகள் பிரிந்து செல்வதால் இவ்விடம் ஃபிங்கர் போஸ்ட் என்று பெயர் பெற்றது.

ஏரி :

உதக மண்டலத்தில் அமைந்துள்ள ஏரி சிறியது. இது செயற்கை ஏரி என்பதை எல்லாரும் அறிவர். ஆனால் இதைக் காண்போர் இயற்கையாக அமைந்துள்ள எழில் மிக்க ஏரி என்றே எண்ணுவர். இதன் சுற்றளவு இரண்டு கல் இருக்கும். முதன் முதலாக இவ்வேரியின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டியவர் திருவாளர் சல்லிவன் துரை. இவ்வேரியின் நீரைப் பயிர்த் தொழிலுக்குப் பயன்படுத்த முதலில் எல்லாரும் எண்ணினர். சிறிது சீர்திருத்தப்பட்டதும் இது கண் கவரும் வனப்போடு காட்சியளித்ததால், அழகுக்காகவே இதைப் பயன் படுத்தப் பின்னர் முடிவு செய்தனர். கி. பி. 1823-ஆம் ஆண்டிலிருந்து, இது பல மாறுதல்களுக்குட்பட்டுப் பல வழிகளிலும் முன்னேறியது. கி. பி. 1896-லிருந்து 1899 வரையில் ரூ.20,000 இதற்குச் செலவிடப்பட்டது. இப்போது இவ்வேரியைச் சுற்றி மரங்களடர்ந்த காடு ஒன்றுள்ளது. அமைதியான அழகு அவ்விடத்தில் குடி கொண்டிருக்கிறது. உதகை மக்கள் இவ்வேரியில் தோணியூர்ந்தும், மீன் பிடித்தும் இன்பமாகப் பொழுதைக் கழிக்கின்றனர். ஏரியின் எதிர்க் கரையில் பெர்ன் மலை தொடங்குகிறது. ஏரியைச் சுற்றி நடந்து சென்றால், நம் உள்ளத்திற்கும் உடலுக்கும் ஒரு விதப் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. ஏரியின் கரையோரமாகக் கடைவீதியை நோக்கி நடந்து சென்றால் ஹோபர்ட் பூங்கா (Hobert Park) வின் எல்லையை அடையலாம். அவ்விடத்தில் குதிரைப் பந்தய மைதானமும் பார்வையாளர் இருப்பிடமும் (Pevilian) அமைந்துள்ளன. குதிரைப் பந்தய வீரர்களையும், பொழுது போக்கிற்காகக் குதிரை மீதும், கோவேறு கழுதை மீதும் சவாரி செய்வோரையும் அங்குக் காணலாம். அக்காட்சி மிகவும் வேடிக்கையானதாக இருக்கும்.

இன்பச் செலவிற்குரிய இடங்கள் (Excursions)

அவலஞ்சி :

உதகமண்டலத்தைச் சுற்றி இன்பமாகப் பொழுது போக்கற்குரிய பல இடங்களும், கண்டு மகிழ்தற்குரிய பல இடங்களும் உள்ளன. கெய்ரன் மலையில் உள்ள காடுகளின் ஒருபகுதி பனிப்படலத்தில் மறைந்து தோன்றும், உதக மண்டலத்திலிருந்து 15-ஆவது கல்லில் இக்காட்சி அமைந்துள்ளது. இவ்விடத்திற்கு 'அவலஞ்சி' என்று பெயர். அவலஞ்சி (Avalanche) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, 'இழிந்து வரும் பனிக்கட்டி' என்று பெயர். கி. பி. 1823-ஆம் ஆண்டு, பனிவெள்ளம் இவ்விடத்தில் ஓடிவந்த காரணத் தால் இது இப்பெயர் கொண்டு விளங்குகிறது.

உதகமண்டலத்திலிருந்து இவ்விடத்திற்குப் செல்லும் வழி மிகவும் மோசமானது. ஆனால் இப்பாதையின் வளைவுகளில் செறிந்து தோன்றும் இயற்கை வளம், காண்போர் உள்ளத்தை வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தும். இவ்வழியில் பல சிற்றூர்கள் அமைந்துள்ளன. அச்சிற்றூர்களைக் கடந்ததும் வழி இரண்டாகப் பிரிந்து செல்கிறது. ஒருவழி எமரால்டு பள்ளத்தாக்கி (Emerald Valley)ற்குச் செல்லுகிறது. அப்பள்ளத்தாக்கில் இராணுவத்தினர் தங்கி, மாதிரிப் போர் (Mock battle) பயிலுகின்றனர். மற்றோர் வழியில் ஐந்து கல் சென்றால் அவலஞ்சியை அடையலாம். உதகமண்டலத்திலிருந்து 14 ஆவது கல்லில் அவலஞ்சி ஆறு ஓடுகிறது. இயற்கைவளம் செறிந்த அச்சரிவில், பளிங்கு போல் சுழித்து ஓடும் அவ்வாற்றின் அழகைச் சொற்களால் கூறமுடியாது. அவ்விடத்தில் அமைந்திருக்கும் பிரயாணிகளின் தங்கல் மனை (Travellers' Bangalow)யிலிருந்து ஒரு சிறிய வழி மேலே செல்லுகிறது. அவ்வழியாக மேலேறி நோக்கினால் ஒரே அளவான உயரத்தோடு 8300 அடி நிமிர்ந்து நிற்கும் சிகரங்களைக் காணலாம்.

மீன் பண்ணை :

பிரயாணிகள் தங்கல் மனையிலிருந்து ஒருகல் தொலைவில் ஒரு பெரிய மீன் பண்ணை (Trout Hatchery) அமைந்துள்ளது. இத்தகைய பண்ணை நீலகிரியின் மீது எங்கும் கிடையாது. 'இங்கு வளர்க்கப்படும்படியான மீனின் பெயர் 'டிரவுட்' எனப்படும். இது 'சால் மன்' (Salmon) என்ற மீனினத்தைச் சார்ந்தது. ஆனால், அதைவிட உருவத்தில் சிறியது. இப்பண்ணையில் ஐந்து பெரிய குளங்களில் ஓராண்டிலிருந்து மூன்றாண்டுவரை வயதுடைய மீன்கள் வளர்க்கப்படுகின்றன. நவம்பர் முதல் ஃபெப்ருவரி வரையிலும் உள்ள காலமே இம்மீனின் வளர்ச்சிக்கு ஏற்ற பருவமாகும். 10,000 மீன்கள் இப்பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. இம்மீனின் முட்டைகள் 29 நாட்களில் கண் விழிக்கின்றன,

பிற இடங்கள் :

இப்பண்ணைக் கருகிலுள்ள காடு உள் நுழைந்து காண்பதற்கு ஏற்றது. அழகிய ஒரு சிறுபாதை காட்டின் உட்பகுதியில் செல்லுகிறது. அப்பாதையில் 9 கல் தொலைவு சென்றால் காட்டிலாகாத் தலைவரின் மாளிகை உள்ளது. அவ்விடத்திற்குப் பண்டகபல் (Bantakapal) என்று பெயர்.

உதகமண்டலத்திலிருந்து அவலஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ள மூக்கறுத்தி, பைக்காரா சிகரங்கள் குறிப்பிடத்தக்கவை. உதகை சென்றுவிட்டு இவ்விரண்டையும் காணாமல் யாரும் வரமாட்டார்கள். இச்சிகரங்கள் அமைந்துள்ள இடங்களில் பல ஆறுகளும், அணைகளும், ஏரிகளும் பேரழகுடன் காட்சி அளிக்கின்றன.

உதகமண்டலத்திலிருந்து பதினோராவது கல்லில் அமைந்துள்ள பைக்காரா ஆற்றின் பாலத்தைக் கடந்து சென்றோமானால், ஓர் அணை கட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். இவ்வணை பைக்காரா அணைக்கட்டின் தொடர்ச்சி. இதன் உயரம் 150 அடி.

இவ்வழியிலேயே மேலும் ஐந்து கல்சென்று இடது புறமாகத் திரும்பினால் ஓர் அழகிய பாதை செல்லுகிறது. அவ்வழியின் ஒவ்வொரு திருப்பத்திலும் சலசலத்து ஓடும் நீரருவியையோ, பசுங் குன்றையே. அல்லது சிறு சிறு குடிசைகளையோ காணலாம். க்கப் காடுகளில் நுழைந்தால் தோடரின் வாழ்விடங்களைக் காணலாம்.

மூக்கறுத்தியில் அமைந்திருக்கும் தங்கல் மாளிகை (Dak Bangalow) அழகியதாகவும், வசதியான தாகவும் அமைந்துள்ளது. இது அணைக் கட்டிலிருந்து ஒருகல் தொலைவில் அமைந்துள்ளது. இவ்வணை கி. பி. 1835இல் இருந்து கி. பி. 1938 வரை கட்டப்பட்டது. இது உருவத்தால் சிறியது. ஆனால், இதில் இரண்டு எதிரொலிகள் தோன்றுகின்றன. முதல் எதிரொலி தொடங்கி அரை நிமிடம் கழித்து இரண்டாவது எதிரொலி தோன்றுகிறது. இங்குள்ள ஏரி பார்ப்பதற்குச் சிறிதாகத் தோன்றும். ஆனால் இது மூக்கறுத்தி மலையைச் சுற்றிப் பரவியுள்ளது. இவ்வேரியின் நான்கு பக்கங்களிலும் நிறையப்பேர் மீன்பிடித்துப் பொழுதைக் கழிக்கின்றனர். இவ்வேரியில் தோணியூர்ந்து சென்றே மூக்கறுத்தியின் அடிவாரத்தை அடைய முடியும். அடி வாரத்திலிருந்து அச்சிகரம் மிகவும் செங்குத்தாக உயர்ந்து செல்லுகிறது. உதகமண்டலத்திலிருந்து பார்ப்போருக்கு அவ்வுச்சி தெளிவாகத் தெரியும். இவ் வேரியைச் சுற்றியிருக்கும் கரடுமுரடான பாதை 12 கல் நீளமுடையது. இப்பாதையில் நடந்து ஏரியை வலம் வருதல் பெருவெற்றிக்குரிய செயலாகும்.

கவர்னர்ஸ் ஷோலா {Governor's Shola) என்ற இளமரக்காடு குறிப்பிடத்தக்க அழகுவாய்ந்தது. அக்காட்டின் இடையே நிழலடர்ந்த மரங்களினடியில் புகுந்து செல்லும் 5 கல் நீளமுள்ள பாதை, இங்கு வாழ்ந்த மாநில ஆளுநர்களுக்கு மிகவும் பிடித்தமானது. கன்னமரா பாதை என்ற மற்றொரு வழி 10 கல் நீளமுள்ளது. குடை மரங்க (Umbrella trees) ளிடையே இப்பாதை புகுந்து செல்லும் காட்சி பேரழகு ஆப்பது. இப்பாதையிலிருந்து ஒருகல் தொலைவு சென்றால் இன்ப விருந்து (Picnic) உண்பதற்கான அழகிய இடம் ஒன்றுள்ளது. அவ்விடத்திலிருந்து மேகமூட்டமற்ற நாளில் நோக்கினால், மைசூர் நகரம் நன்றாகத் தெரியும். கன்னமராப் பாதையின் முடிவில் செங்குத்தான சீகூர் மலை (Sigur ghat) தொடங்குகிறது. அத்தொடர் 3000 அடிக்குக் கீழ் அடர்ந்த காடுகளிடையே அமைந்திருக்கும் கால்கட்டி நீர் வீழ்ச்சி (Kalhatty falls) வரை செல்லுகிறது.

அரசியலார் பயிர்த் தோட்டம் :

உதகமண்டலத்தில் அமைந்துள்ள அரசாங்கப் பயிர்த் தோட்டம் (The Botanical Gardens), இந் நகர வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கி. பி. 1850 ஆம் ஆண்டு திருவாளர் மக்கல்வர் (Mr. Mclver} என்பவரால் இப்பயிர்த் தோட்டம் நிறுவப்பட்டது. முதலில் இது 'கியூ தோட்டம்' (Kew Gardens) என்ற பெயர் கொண்டு விளங்கியது. கி.பி. 1950-ஆம் ஆண்டு இத் தோட்டத்தின் நூற்றாண்டு விழா மிகவும் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டது. முதன் முதலாக இது காய்கறி பயிரிடுவதற்காக நிறுவப்பட்டது. ஆனால் இது இப்பொழுது தாவரப்பயிர் ஆராய்ச்சிக்குரிய இடமாக விளங்குகிறது. இங்குத் தாவர ஆராய்ச்சிக் கழகம் (Harticultural Society) கி. பி. 1847-ஆம் ஆண்டு பொது மக்களின் நன்கொடையைக் கொண்டு துவக்கப்பட்டது. கி. பி. 1855-ஆம் ஆண்டு இத்தோட்டம் அரசியலார் கைக்கு மாறியது. பிறகு இது பலவித மாறுதல்களையும், வியக்கத்தக்க முன்னேற்றங்களையும் மேற்கொண்டது. தற்போது இது பல அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளது. பயனுள்ள செடிகளும், பலவித மலர்ச் செடிகளும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கொணரப்பட்டு இங்குப் பயிரிடப்படுகின்றன. இப்போது ஏறக்குறைய 650 வகையான செடி கொடிகளும், மரங்களும் இங்கு உள்ளன. அழகுக்காகவே வளர்க்கப்படும் மரங்கள், முட்செடிகள், ஆண்டு முழுதும் பயன் தரத்தக்க மரங்கள், கிழங்குச் செடிகள், வேலி அமைப்பதற்குப் பயன்படும் படியான செடிகள், மூலிகைச் செடிகள், நீர்ச் செடிகள், மணப்பொருள் செய்யப்பயன்படும் செடிகள், அழகு வளைவுகளில் படரவிடும் கொடிகள், ரோஜாச் செடிகள் என அளவற்ற தாவர வகைகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

பூக் கண்காட்சி :

ஆண்டு தோறும் மேத் திங்களில் இங்கு நடை பெறும் பூக் கண்காட்சி (Flower Show) மிகவும் குறிப்பிடத்தக்கது. அக் கண்காட்சியில் பூவோடு காய்கறி, பழம் முதலியனவும் வைக்கப்படுகின்றன, நீலகிரி மலையின் எல்லாப் பகுதிகளிலிருந்தும், சமவெளியிலிருந்தும் மக்கள் அக்கண்காட்சியில் வந்து கூடுகின்றனர். நாகரிக மக்களும், பழங்குடி மக்களும் ஒன்றுசேர இவ்விழா பெரிதும் துணைபுரிகின்றது. நாகரிகர் பழங்குடி மக்களையும், பழங்குடி மக்கள் நாகரிகரையும் அங்காந்த வாயோடு பார்த்து வியப்படைவர். பூக் கண்காட்சி நடைபெறும் அந் நாளிலேயே பறவைகளின் கண்காட்சி (Poultry Show) ஒன்றும் நடைபெறும். நாய்க் கண்காட்சிக்காக ஒரு நாள் அப்போது ஒதுக்கப்படுகிறது. உதகமண்டலத்தில் பல நாய் வளர்ப்பு நிலையங்கள் உள்ளன: அவ்விடங்களிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் காட்சிக்காக நிறைய நாய்கள் அங்கு வந்து கூடும். உயர்ந்த இன நாய்களில் சிறப்பானவற்றையெல்லாம் அங்குக் காணலாம். பூனைக்குட்டி அளவிலிருந்து கன்றுக் குட்டியின் அளவு வரையுள்ள நாய்கள் அங்கு அணி அணியாக இருக்கும்.

வன விலங்குகளைக் காண விரும்புவோர், கூடலூருக்கு அப்பால் உள்ள காடுகளுக்குச் செல்லுகின்றனர். ஊட்டியிலிருந்து நாற்பது கல்லுக்கு அப்பால் தான் வனவிலங்குகளைக் காண இயலும். மாலையில் புறப்பட்டு, சூரியன் மலைவாயில் விழுந்ததும் யானை மேல் ஏறிக் காட்டிற்குள் நுழைந்தால், காட்டு விலங்குகளின் கூட்டத்தைக் காணலாம். புலி, காட்டெருமை, மானினம் ஆகியவை எதிர்ப்படும்.

பள்ளிகள் :

உதகமண்டலத்தில் மாணவர்கள் தங்கிப் பயிலுவதற்கேற்ற நான்கு பள்ளிகள் (boarding schools) உள்ளன. பிரீக்ஸ் நினைவுப்பள்ளி (Breek's Memorial School), திருச்சபை மகளிர் உயர் நிலைப்பள்ளி (High School for Sisters of the Church), நாசரேத்து மகளிர் பள்ளி (The Nazareth Convent), லாரன்ஸ் பள்ளி (The Lawrence School) என்பன அவை. மேற்கூறிய நான்கு பள்ளிகளில் மிகவும் சிறப்பானது வாரன்ஸ் பள்ளி. இது உதகமண்டலத்திலிருந்து நான்கு கல் தொலைவில் லவ்டேல் (Lovedale) என்ற இடத்தில் அமைந்துள்ளது. 'லவ்டேல்' என்றால் அன்புப் பள்ளத்தாக்கு' என்று பெயர். அன்பால் பிணிக்கப்பட்டுப் பல்கலை பயிலும் பிஞ்சுள்ளங்களின் கலைக் கூடம் அமைந்திருக்குமிடத்திற்கு இப்பெயர் மிகவும் பொருத்தமே. இவ்விடத்தின் தட்ப வெப்ப நிலை உடல் நலத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்துள்ளது.

இப்பள்ளி கி. பி. 1858-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 6-ஆம் நாள் துவக்கப்பட்டது. அப்போது இந்திய நாட்டுப் படையின் தளபதி (Major General) யாக விளங்கிய சர் ஹென்றி லாரன்ஸ் என்பாரின் பெயர் கொண்டு இப்பள்ளி விளங்குகிறது. இந்தியப் படையில் பணியாற்றிய படைவீரர்கள், ஓய்வுபெற்ற படைவீரர்கள், ஆகியோரின் குழந்தைகள் சிறந்த முறையில் கல்வி பயிலுவதற்காக, நீலகிரி மலையில் உயரிய ஒரு பள்ளியை நிறுவ வேண்டும் என்ற கருத்தை முதன் முதலாக வெளியிட்டவர் அவரே. கி. பி. 1949-ஆம் ஆண்டு வரையில், படையினர் குழந்தைகள் பயிலும் பள்ளியாகவே இது இருந்துவந்தது. அவ்வாண்டு இந்திய அரசியலார் இப்பள்ளியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், எல்லாருடைய குழந்தைகளும் பயிலும் பொதுப்பள்ளியாக இது மாற்றப்பட்டுவிட்டது.

கி. பி. 1949-க்கு முன் ஆங்கிலேயருக்கே ஏகபோக உரிமை பெற்றிருந்த இப்பள்ளி, இப்போது இந்திய நாட்டுச் செல்வர்களுக்கே உரிமையுடையதாக இருக்கிறது. இங்கிலாந்து நாட்டில் ஈடன் {Eton) என்ற இடத்தில் உள்ள பள்ளி, அரசிளங்குமரர்களும், பிரபுக்களின் குழந்தைகளும், மாபெரும் ஆலை முதலாளிகளின் மக்களும் பயிலும் பள்ளியாக விளங்குகிறது. அப்பள்ளி, வரலாற்றுப் புகழ்பெற்றது ; பல நூற்றாண்டு வளர்ச்சியுடையது; பல அறிஞர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கியது; பல இலக்கிய ஆசிரியர்களால் எடுத்துக் கையாளப்பட்டது. அத்தகைய ஒரு பள்ளி இந்திய நாட்டில் இருக்கிற தென்றால், அது லாரென்ஸ் பள்ளியாகத்தான் இருக்க முடியும். 'இந்திய நாட்டின் ஈடன்' என்று இதை அழைத்தாலும் தகும். ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ. 4000 இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனுக்கும் செலவாகின்றன. இப்பள்ளியில் இடம் பிடிப்பதென்பது, அவ்வளவு எளிதான காரியமல்ல. மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் இப்பள்ளியின் செயற்குழு (The Board of Administration) விற்கே உரியது. இந்திய நாட்டுக் கல்வித் துறைச் செயலாளரே (The Secretary to the Government of India, Ministry of Education) இச் செயற்குழுவின் தலைவர். இப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தின் மொத்தப் பரப்பு 700 ஏகர். இது அமைந்திருக்கும் இடத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 7200 அடி. இப்பள்ளியின் நடுவில் அழகிய ஏரி ஒன்றும் அமைந்துள்ளது.

இது தங்கிப் பயிலும் பள்ளி. இதில் 550 மாணவர்களே தங்கிப் பயில இடமுண்டு. 5 வயது முதல் 9 வயது வரை உள்ள இளமாணவர் பிரிவு (Preparatory School), ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இப்பள்ளி முப்பிரிவுகளைக் கொண்டது. இம் முப்பிரிவினர்க்கும் தங்குமிடங்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளனவேயன்றி, ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயில்கின்றனர். குடும்பக்கலை (Demestic Science) முதலிய பெண்களுக் குரித்தான கலைகளும், பொழுது போக்குக் கலைகளும் தனியாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விடுதியும் ஒரு குடும்பம் போன்ற முறை (House ---System)யிலேயே நடத்தப்படுகிறது. இங்கு மிகவும் சிறந்த ஆங்கிலக் கல்வி பயிற்றப்படுகிறது. ஆங்கிலத்திற் கடுத்தாற்போல், இந்தி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இங்கு மேலை நாட்டு இசைக்கலையும், இந்திய இசைக்கலையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இசைக் கலையைப் பாடமாக எடுத்துக்கொண்ட எல்லா மாணவர்களும் பியானோ, வயலின் ஆகிய இசைக் கருவிகளை இசைக்கக் கற்றுக்கொடுக்கப்படுகின்றனர். மேலை நாட்டு இசையில் நல்ல தேர்ச்சியும், ஆர்வமுமுள்ள மாணவர்கள் இலண்டன் டிரினிடி கல்லூரி இசைத்தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். மட்டைப் பந்து (Tennis), துடுப்புப் பந்து, (Cricket), கூடைப் பந்து (Basket ball), கால்பந்து (Foot ball), கைப் பந்து (Volley ball), வலைப்பந்து(Net ball), தடிப்பந்து (Hockey) முதலிய விளையாட்டுக்கள் இங்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த ஓராசிரியர் குதிரை ஏற்றமும் மாணவர்கட்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆனால், அதற்குத் திங்கள் தோறும் ரூ. 20 தனிக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். சமயக் கல்வியும் இங்குப் பயிற்றப்படுகிறது.

மாணவர்களுடைய உடல் நலத்தை நல்ல முறையில் கண்காணிக்க ஒரு மருத்துவ மனையும் உள்ளது. அம்மனையில் பயிற்சி பெற்ற ஒரு மருத்துவர் இருந்து பணிபுரிகிறார். 55 படுக்கைகள் அம்மருத்துவ மனையில் உள்ளன. ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் கருத்தோடு கவனிக்கப்படுகிறது. மாணவர்களின் எடை, உயரம் முதலியன யாவும் திங்கள்தோறும் கணக்கிடப்பட்டுப் பதிவு செய்யப்படுகின்றன. நாள் தோறும் சோதனையிடப்பட்ட சீரிய உணவே எல்லாருக்கும் அளிக்கப்படுகிறது. மருத்துவமனையில் ஒரு மாணவன் 24 மணி நேரத்திற்குமேல் தங்கியிருக்க நேரிட்டால், அச் செய்தியைப் பள்ளி நிர்வாகிகள் பெற்றோருக்கு அறிவித்து விடுகின்றனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் மாணவனின் உடல் நல முன்னேற்றம், வாரந்தோறும் பெற்றோர்களுக்கு அறிவிக்கப்படும். மாணவனின் உடல் நலத்தைப் பற்றி வினவும் பெற்றோருக்கு உடனுக்குடனே முடங்கல் மூலம் அக்கறையோடு நிலைமை அறிவிக்கப்படும். மிகவும் நோய்வாய்ப்பட்ட மாணவர்கள் உதகமண்டலத்திலுள்ள புனித பார்த்தலோமி மருத்துவமனை {St. Bartholomews Hospital) யில் சேர்க்கப்படுவர். அப்போது ஏற்படும் செலவினத்தைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பள்ளி மருத்துவமனையில் செய்யும் சிகிச்சைக்குப் பணம் கிடையாது. எக்ஸ்-ரே படம் பிடிப்பதற்கும், அறுவை மருத்துவத்திற்கும், டானிக்குகளுக்கும், விலையுயர்ந்த மருந்துகளுக்குமான பணத்தைப் பெற்றோர்கள் அளிக்க வேண்டும். நீலகிரி மாவட்ட மருத்துவ அதிகாரி, (District Medical Officer) இப் பள்ளியின் மருத்துவ ஆலோசகராக எப்பொழுதும் இருப்பார். இப் பள்ளிக்கென்று தனிப்பட்ட பல் மருத்துவர் (Dental Surgeon) ஒருவர் இருக்கிறார். மாணவர்களுடைய பற்களின் நலம் நன்கு கவனிக்கப்படுகிறது. இதற்கென்று ஆண்டுதோறும் ரூ. 5 கட்டணமாகப் பெறப்படுகிறது.

பத்து வயதிற்குட்பட்ட மாணவர்களின் பிறந்த நாள் விருந்தும் இங்கு நடத்தப்படுகிறது. யாராவது ஒரு மாணவனின் பெற்றோர் தம் குழந்தையின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாட விரும்பினால், பிறந்த நாள் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்குமுன் ஒரு விண்ணப்பத்தோடு ரூ. 10-ம் அனுப்பி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது பெற்றோருக்கு முடங்கல் எழுத வேண்டுமென்பது பள்ளியின் சட்டம், முடங்கல் எழுத முடியாத துவக்கப்பள்ளி மாணவர்களுக்காக வகுப்பு ஆசிரியர்களே இரண்டு வாரங்களுக்கொரு முறை எழுதுகின்றனர். முடங்கல் தவறிவிட்டால், அதைப் பற்றிய செய்தியைப் பெற்றோர்கள் பள்ளி . நிர்வாகிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பள்ளியில் அணிவதற்கென்று தனிப்பட்ட உடை (Uniform) எல்லா மாணவர்களுக்கும் அளிக்கப்படுகிறது.

அழகுக் கலைகளான ஓவியம், சிற்பம், ஆடல் முதலியனவும் இங்குச் சிறந்த முறையில் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. சிறந்த படைப் பயிற்சியும், துப்பாக்கி சுடும் பயிற்சியும் இங்கு அளிக்கப்படுகின்றள.

கிருத்தவக் கோயில்கள் :

உதகமண்டலத்தில் சிறந்த மூன்று கிருத்தவக் கோயில்கள் உள்ளன. புனித ஸ்டீஃபன் திருக்கோயில் (St. Stephen's Church), புனித தாமசு கோயில் (St. Thomas Church), கண்டல் உரோமன் கத்தோலிக்கத் திருக்கோயில் (The Tiny Church of Kandal) என்பவையே அவை. புனித ஸ்டீஃபன் திருக்கோயில் கி. பி. 1830-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இக் கோயிலின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் மரத்தினால் செய்யப்பட்ட வளைவுகள் கண்ணையும் கருத்தையும் கவரும் கலைவனப்புடையவை. இவை திப்பு சுல்தான் மாளிகையிலிருந்து கொணரப்பட்டவை, உதகமண்டலத்தை நீலகிரி மலையின்மீது தோற்றுவித்த திருவாளர் சல்லிவன் அவர்களுடைய சமாதியும், அவருடைய குடும்பத்தார் சமாதிகளும் இக் கோயிலிலேயே உள்ளன. இக்கோயிலின் மணிக் கூண்டு கி. பி. 1851-ஆம் ஆண்டிலும், ஆலயமணி கி. பி. 1894-ஆம் ஆண்டிலும் அமைக்கப்பட்டன, புனித தாமசு திருக்கோயில் கி. பி. 1867-ஆம் ஆண்டு துவக்கப்பட்டு கி. பி. 1870-ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. இவ்விரு கோயில்களும் நகரத்தின் நடுவிலேயே அமைந்துள்ளன.

உதகமண்டலத்திலிருந்து இரண்டு கல் தொலைவில் உள்ள 'கண்டல்' என்ற இடத்தில் அமைந்துள்ள கத்தோலிக்கர் கோயில் மிகவும் புகழ் பெற்றது. உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டு, ஏரிக்கரை வழியாக வளைந்து செல்லும் மைசூர்ப்பாதையில் சென்றால், இடது புறத்தில் இயற்கையழகு கொழிக்கும் ஒரு மேட்டு நிலம் தென்படும். அதுவே கண்டல் திருக்கோயிலாகும். அக்கோயிலில் குறிப்பிடத்தக்க பெரிய கட்டடங்கள் எதுவுமில்லை. அம்மேட்டின் உச்சியில் ஏசு நாதரோடு கூடிய ஒரு சிலுவை நாட்டப்பட்டுள்ளது. இச்சிலுவை பாரிசிலுள்ள கத்தோலிக்கத் திருச்சபையாரின் ஆணையால் கி. பி. 1933-இல் இங்கு நாடடப்பட்டது. இது நாட்டப்பட்ட சில ஆண்டுகளில் இவ்விடத்தின் புகழ் நாடெங்கும் பரவத் தொடங்கிவிட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டு தோறும் இங்குப் புனித யாத்திரை செல்லுகின்றனர். சிலுவை நாட்டப்பட்டுள்ள மேடைக்குச் செல்லும் வழி, மிக்க அழகோடு அமைக்கப்பட்டுள்ளது. அவ் வழியில் இடையிடையே பல தங்குமிடங்கள் கண் கவரும் வனப்போடு அமைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் அமைந்துள்ள இடம் கத்தோலிக்கக் கிருத்தவர்களைப் புதைப்பதற்காக அரசியலாரிடமிருந்து பெறப்பட்டதாகும். சமாதிகளெல்லாம் நில மட்டத்திற்குக் கீழே அடுக்கடுக்காக அமைக்கப்பட்டுள்ளன, கோயிலின் வளர்ச்சிக்குதவிய நன்கொடையாளர்களின் பெயர்கள் சட்டமிட்ட தகடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. இவ்விடுகாட்டின் நடுவில் நாட்டப்பட்டிருக்கும் சிலுவை, ஏசு நாதரின் சிலையோடு அழகுடன் விளங்குகிறது. அச்சிலை வெண்கலத்தால் ஆனது; சிற்பக் கலைவளம் செறிந்தது.

இச்சிலுவை சக்தி வாய்ந்ததாகவும், கேட்டோருக்குக் கேட்ட வரம் நல்கும் பெற்றியுடையதாகவும், தெய்வத் தன்மை மிக்கதாகவும் எல்லாராலும் கருதப்படுகிறது. இச்சிலுவை பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. இச்சிலுவையில் அடிக்கப்பட்டிருந்த பித்தளை ஆணிகளை மாடு மேய்க்கும் சிறுவர்கள் ஒரு நாள் திருடிக் கொண்டு செல்ல முயன்றனராம். ஆனால் அவைகளைப் பிடுங்க முடியாமல் வீடு சென்றனர். வீடு சென்றதும் அச்சிறுவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு வருந்தினராம். உண்மையறிந்த பெற்றோர்கள் சிலுவையின் முன் மண்டியிட்டு வணங்கித் தம் சிறுவர்களின் அறியாமையை மன்னிக்குமாறு வேண்டினர். பிறகு அச் சிறுவர்கள் பிழைத்தெழுந்தனர். கி. பி. 1935-ஆம் ஆண்டு சமவெளியில் வாழ்ந்த ஏழெட்டுப் பேர்களடங்கிய ஒரு குடும்பம் இச்சிலுவையைக் கண்டு வணங்கக் கண்டலுக்கு வந்திருந்ததாம். மிகவும் குளிரான அச் சமயத்தில் போர்த்துக் கொள்ளப் போர்வைகள் கூட கொண்டுவர வில்லையாம். சிலுவைக்கெதிரிலுள்ள பந்தலில் அவர்களைக் கண்ட பாதிரியார், குளிரின் கொடுமையைப் பற்றிக் கூறி, தக்க பாதுகாப்போடு இல்லாவிட்டால் இறக்க நேரிடும் என்றுகூடச் சொன் னாராம். ஆனால் அக் குடும்பத்தார் பாதிரியாரை நோக்கி, "ஐயரே! ஏசு பெருமான் பனியில் நனைந்து குளிரால் வருந்தும்போதும், நாங்கள் மட்டும் ஏன் போர்வை தேட வேண்டும்? ஏசு நாதரின் காலடியிலேயே நாங்கள் எட்டு நாட்கள் தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறோம்,“ என்று கூறினார்களாம். எட்டு நாட்கள் இரவு பகல் எந்நேரமும் அப்பந்தலின் அடியிலேயே இறைவனை வணங்கிய வண்ணம் அக்குடும்பத்தார் காத்துக்கிடந்தனராம். எவ்விதத் துன்பமுமின்றி எட்டு நாட்களையும் கழித்துவிட்டு ஊர் திரும்பினராம். இக்குடும்பத்தார் இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்து இந்துக்கள் பழனியாண்டவனுக்கும், திருப்பதி வேங்கடப்பனுக்கும் ' வேண்டுதலை' மேற்கொள்வதுபோல், கிருத்தவர்கள் கண்டல் சிலுவைக்கு வேண்டுதலை மேற்கொள்ளு கின்றனர். பெரும் பெரும் செல்வர்களும், உயர் நிலையிலுள்ள சீமான்களும், படித்தவர்களும் இச்சிலுவையின் மகிமையைத் தம் வாழ்வில் அனுபவித்து அறிந்ததாகப் பத்திரிகையில் அடிக்கடி எழுதிக்கொண்டிருக்கின்றனர், இச்சிலுவையின் சிறப்புக்குச் சான்றாகப் புதுப்புதுக் கதைகள் தோன்றியவண்ணமிருக்கின்றன.

நாள் தோறும் இச்சிலுவையைக் கண்டு வணங்கப் பிரயாணிகள் வந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் வெள்ளிக்கிழமையன்று நோய்வாய்ப்பட்டோரும், மன்னிப்புப் பெற விரும்பும் பாவிகளும், வரம் பெற விரும்பும் பக்த கோடிகளும், கவலையால் கருத்திழந்து அமைதிகாண விரும்புவோரும் இங்குத் திரளாகக் கூடுகின்றனர். விழா நாட்களில் கண்டல் சிலுவையைத் தரிசிக்க வரும் பிரயாணிகளுக் கென்று, தனிப்பட்ட புகைவண்டிகளும், உந்துவண்டிகளும் விடப்படுகின்றன. நோய்வாய்ப்பட்டோரை, 'டோலிகளில் வைத்துத் தூக்கிக் கொண்டுவருகின்றனர். கொடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விடியற்காலை மூன்று மணிக்கே எல்லாரும் வந்து கூடுகின்றனர்.

கூனூர் :

நீலகிரி மலைக்கு வரும் பிரயாணிகளில் பெரும்பாலோர் இரவில் தங்குவதற்கு உதகையைவிடக் கூனூரையே ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுக்கின்றனர். இது மிதமான குளிரையுடைய இடமாகும். இவ்வூர் அமைந்திருக்கும் இடம் கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயர முள்ளது. உதகமண்டலத்திலிருந்து 12 கல் சென்றால் இவ்வூரை அடையலாம். இவ்வழியானது கெய்டி (Kaity) பள்ளத்தாக்கில் புகுந்து செல்கிறது. அழகு கொலுவீற்றிருக்கும் இப்பள்ளத்தாக்கில் அனாதை விடுதி யொன்றும் அமைந்துள்ளது. இவ்வழிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள அரவங்காட்டில் படைக்கலத் தொழிற்சாலை (Cordite factory) ஒன்று அமைந்துள்ளது. இது கி. பி. 1904-ஆம் ஆண்டு அரசியலாரால் இங்கு நிறுவப்பட்டது. இத்தொழிற்சாலை ஆறு பிரிவுகளைக் கொண்டது. இதைக் காண விரும்புவோர், இந்தியப் படைத் துறைச் செயலாள (The secretary, Ministry of Defence)ரிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்கவேண்டும்.

வெல்லிங்டன் :

அரவங்காட்டிலிருந்து மூன்று கல் தொலைவு வந்தால் 'வெல்லிங்டன்' என்ற படையினர் வாழ்விடத்தைக் (Military town) காணலாம். படையினர் தங்குவதற்கென்று அமைக்கப்பட்ட இல்லங்கள் வரிசை வரிசையாக அமைந்துள்ளன. கி. பி. 1852-ஆம் ஆண்டு இங்குப் பாடி வீடுகள் அமைக்கப் பெறுவுதற்கு முன் இவ்விடம் 'ஜேக்டலா' (Jacktala) என்று அழைக்கப்பட்டது. இங்கு அழகிய பொழுது போக்கு மன்றம் (Club} ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள மட்டைப் பந்தாட்ட (Tennis courts) மைதானங்களில் இராணுவ அதிகாரிகளும், அவர் தம் மனைவியருமே விளையாடுகின்றனர். வெல்லிங்டனுக்குள் எல்லாரும் அனுமதிக்கப்படுவதில்லை, உறவினர்களோ, நண்பர்களோ இருந்தால் அங்குச் சென்று இன்பமாகப் பொழுதைக் கழிக்கமுடியும். ஒவ்வொரு சனிக்கிழமை இரவிலும், இங்குள்ள மன்றங்களில் மேலை நாட்டு நடனங்கள் நடைபெறுகின்றன, ஆடவரும் பெண்டிரும் இணைந்து இன்னிசைக் கேற்ப ஆடும் அக்களியாட்டம் காண்டற்கினியது.

கானிங் சீமாட்டியின் இருக்கை :

கி. பி. 1857-ஆம் ஆண்டு வடஇந்தியாவில் நடந்த சிப்பாய்க் கலகத்தின்போது, இந்திய நாட்டு அரசப் பிரதிநிதியாக வீற்றிருந்த கானிங் பிரபுவின் மனைவியார் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அப்பொழுது சென்னை, பெங்களூர், நீலகிரி ஆகிய இடங்களில் சிறிது காலம் தங்கினார்கள். சீகூர் மலைத்தொடரின் வழியாக நீலகிரியை அடைந்தார்கள். ஊட்டியிலிருந்து புறப்பட்டு 1858-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 7-ஆம் நாள் கூனூரை அடைந்தார்கள். சீமாட்டியும் அவரோடுவந்த பிரயாணக் குழுவினரும் ஒரு மாளிகையில் தங்கினார்கள். அம்மாளிகை இன்று கிளன்வியூ ஹோட்டல் (Glenview Hotel) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. அதே மாளிகையில் தான் கானிங்கிற்கு முன் அரசப் பிரதிநிதியாக இருந்த டல்ஹௌசிபிரபு 1855-ஆம் ஆண்டு மே முதல் ஆகஸ்டு வரை தங்கியிருந்தார்.

கூனூரிலிருந்து 6 கல் தொலைவில் கானிங் சீமாட்டியின் இருக்கை {Lady Cannig's seat) அமைந் துள்ளது. இவ்விடம் இவ்வம்மையாருக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுகிறார்கள். நாள்தோறும் இவ்விடத்திற்குச் சென்று அவர் அமர்ந்திருப்பாராம். 'இரண்டு உத்தமர்' (Two Noble Lives) என்ற ஆங்கிலப் புதினத்தில் (Novel), இவ்வம்மையார் இங்கு அமர்ந்து எழுதிய முடங்கல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விடம் அழகிய ஒரு காட்டின் நடுவில் அமைந்துள்ளது. இவ்விடத்திலிருந்து காண்போருக்குக் கூனூரின் முழுத் தோற்றமும், பல தேயிலைத் தோட்டங்களும், அழகோடு காட்சியளிக்கும். அவற்றோடு மைசூரை ஆண்ட திப்புசுல்தானின் பழைய கோட்டை ஒன்றும் தென்படும். பகைவரிடமிருந்து கைப்பற்றிய கைதிகளை அவ்விடத்திலிருந்து கீழே தள்ளிக் கொன்றுவிடுவார்களாம். மேட்டுப்பாளையமும், அவ்வூரிலிருந்து மலையின்மேல் வளைந்து வளைந்து ஏறிவரும் புகைவண்டிப் பாதையும், உந்துவண்டிப் பாதையும் நன்றாகத் தெரியும். கூனூரிலிருந்து இவ் விருக்கைக்குச் செல்லும் வழியில். லேம்ப்ஸ் பாறை (Lamb's Rock) என்ற ஓர் அழகிய இடமும் உண்டு.

சிம் பூங்கா :

கூனூர் நகரின் நடுவில் அமைந்துள்ள சிம் பூங்கா (Sim's Park) மிகவும் அழகானது. உதகமண்டலத்திலுள்ள அரசியலார் பயிர்த் தோட்டத்தைவிட இது அளவில் சிறியதென்றாலும் உள்ளத்தைக் கவரும் தன்மையது. மலைச்சரிவில் இது அமைந்துள்ளது. உலகின் பல பகுதிகளிலும் உள்ள மரங்கள் இங்குப் பயிரிடப்பட்டுள்ளன. அடுக்கடுக்கான திட்டுகளில் வரிசை வரிசையாகப் பெருமரங்களும், பல வண்ண மலர்ச் செடிகளும் உள்ளன. சிறிய ஓடைகள் நாற்புறமும் ஓடிவந்து பூங்காவின் நடுவிலுள்ள குளத்தில் விழுகின்றன. அக்குளத்தின்மீது பல அழகிய சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பூங்கா திருவாளர் ஜெ. டி. சிம் சி. எஸ். ஐ. (I. D. Sim C. S. I) என்பவரால் நிறுவப்பட்டது. ஆகையினாலேயே இப்பூங்கா இவர் பெயர் கொண்டு விளங்குகிறது. இவர் சென்னை மேல் சபையின் உறுப்பினராக (Member of the Legislative Council) 1870 முதல் 1875 வரை பணியாற்றினார். இந்தியாவில் தாம் வாழ்ந்த இறுதி நாட்களைக் கூனூரிலேயே கழித்தார். அப்போது இப்பூங்காவை அமைத்து அதன் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.

பாஸ்டர் நிறுவனம் :

கூனூரில் குறிப்பிடத்தக்க ஒன்று பாஸ்டர் நிறுவனம் (Pasteur Institute) ஆகும். லூயி பாஸ்டரை அறியாதவர்கள் உலகில் யாரும் இருக்க முடியாது. விஞ்ஞான உலகில் அவருடைய ஆராய்ச்சிகள் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்தன. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், அவர் ஆய்ந்து வெளியிட்ட கிருமியாராய்ச்சி (Bacteriology)க் கொள்கைகள் மருத்துவத் துறைக்குப் பெரும் பயன் விளைத்தன. எனவே, உலகின் பல பகுதியிலும் கிருமியாராய்ச்சிக் கழகங்கள் தோன்றின. இந்தியாவிலும் பல கழகங்கள் தோன்றின. ஆக்ரா கழகம் 1892-லும், பம்பாயி லுள்ள ஆஃப்கின் கழகம் (Haffkine Institute) 1896-லும், கசௌலியிலுள்ள பாஸ்டர் கழகம் 1900-லும், சென்னை அரசர் ஆராய்ச்சிக் கழகம் (King Institute) 1903-லும், கசௌலி நடுவண் ஆராய்ச்சிக் கழகம் (Central Research Institute) 1906-லும், நிறுவப்பட்டன. 1902-ஆம் ஆண்டு வெறி நாய்க் கடியினால் தாக்குண்ட ஆங்கிலச் சிறுமியை, கசௌலிக்குக் கொண்டு செல்லக் கால தாமதம் ஏற்பட்டதால், அப் பெண் இறந்துவிட்டாள். இச் செய்தி தென்னிந்தியாவிலிருந்த ஆங்கில அதிகாரிகளின் கவனத்தைக் கவர்ந்தது. அதன் விளைவாகவே கூனூரிலுள்ள பாஸ்டர் நிறுவனம் 1907-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 25-ஆம் நாள் (வியாழக்கிழமை) ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் வாழ்ந்த திருவாளர் ஹென்றி ஃபிப்ஸ் (Mr. Henry Phipps) என்ற கோடீசுவரர், இந்திய நாட்டின் மருத்துவத்துறை முன்னேற்றத்திற்காகப் பெருந் தொகையை நன்கொடையாக வழங்கினார். அப்போது இந்திய நாட்டின் மக்கள் தலைவராக (Governor General} விளங்கிய கர்சன் பிரபு அந் நன்கொடையின் பொறுப்பாளராக இருந்தார். அத் தொகையிலிருந்து ஒரு லட்சம் ரூபாயை, தென்னாட்டில் பாஸ்டர் கழகம் நிறுவுவதற்காக வழங்கினார். அப்போது சென்னை மாநில ஆளுநராக விளங்கிய ஆம்ப்தில் பிரபு (Lord Ampthill) அப் பணியில் அதிக அக்கறை காட்டினார். சென்னையில் சிறந்த மருத்துவ நிபுணராக விளங்கிய டபிள்யு. ஆர். பிரௌன், ஐ.எம்.எஸ், (W. R. Brown, I.M.S.) என்பாரையும், ஜி. ஆரிஸ் (G. Harris) என்ற கட்டிட நிபுணரையும் கூனூருக்கு அனுப்பி, ஒரு சிறந்த இடத்தைத் தேர்ந் தெடுத்து, பாஸ்டர் நிறுவனத்தை அமைக்குமாறு பணித்தார். இப்போது, இந் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி பெற்று, பல இன்றியமையாத ஆராய்ச்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. வெறி நாய்க் கடியினால் தாக்குண்ட ஆயிரக் கணக்கான மக்கள் இங்குச் சிறந்த சிகிச்சை பெறுகின்றனர்.

பிற காட்சிகள் :

கூனூரில் காண்டற்குரிய வேறு பல இடங்களும் உள்ளன. புலிமலை (Tiger's Hill), வாக்கர்ஸ் மலை (Walker's Hill), புரூக்லேண்ட்ஸ் பாதை (Brooklands Road) ஆகியவை குளிர்ந்த நிழல் தரும் மரங்களடர்ந்த காடுகளின் நடுவில் அமைந்துள்ளன. உதகமண்டலத்திலிருந்து புறப்பட்டு, கெயிட்டி பள்ளத்தாக்கு, அரவங்காடு, கூனூர், கிளன் மோர்கன் தேயிலைத் தோட்டம், காட்டேரி அணை ஆகியவற்றின் வழியாகச் சென்று மறுபடியும் உதகமண்டலத்தை அடையும் சுற்றுச் செலவு (Round trip) உள்ளத்திற்கு மிகவும் இன்பம் பயக்கக்கூடியதாகும். கூனூருக்கு 6 கல் தொலைவிலிருந்து அழகிய குந்தா மலைத்தொடர் தொடங்குகிறது. அடர்ந்த காடுகளையுடைய அம் மலைத்தொடர், ஆராயும் இயல்பூக்கமுடையோர்க்கு நல்வாய்ப்பை நல்கும். கூனூரில் பல சிறந்த பள்ளிகள் உள்ளன. புனித சூசையப்பர் பள்ளி (St. Joseph's School) மிகவும் தொன்மையானது.

கோதகிரி :

உதகமண்டலத்திலிருந்து 18-ஆவது கல்லில் கோதகிரி என்ற ஊர் அமைந்துள்ளது. நீலகிரி மடந்தையின் காதில் ஒளிரும் ஆணிமுத்து என்று இதைக் கூறலாம். உதகையிலிருந்து தொட்டபெட்டாவிற்குச் செல்லும் வழியில் நான்கு கல் சென்று இடது புறமாகச் செல்லும் உலோகப் பாதை (Metal Road) யில் சென்றால், கோதகிரியை அடையலாம். இவ் வழியின் ஒரு புறத்தில் அழகிய பள்ளத்தாக்கையும், சிற்றூர்களையும் காணலாம். தும்மனடி, மடித்தொறை, குண்டமுக்கை முதலிய ஊர்களைக் கடந்து செல்லும் போது நாட்டுப்புற வாழ்வின் சிறப்பு நம் உள்ளத்தில் தென்படும். இவ்வூர்களைக் கடந்ததும் வழி நெடுகத் தோன்றும் நீரருவிகளும், இளமரக் காடுகளும், பசும் புல் வெளிகளும் நம்மை மீளா இன்பத்திலாழ்த்தும். குறுகி வளைந்து செல்லும் பாதைகளும், அவற்றில் அமைந்துள்ள வளைவுகளில் பெருமூச்சு விட்டுக் கொண்டு திணறி ஏறும் உந்து வண்டிகளும், கோதர்களின் நாட்டுப்புற வாழ்வும், நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் நிலைத்து, நினைக்குந்தோறும் இனிக்கும். 15 கல் கடந்ததும் கட்டபுட்டை என்ற சிற்றூர் உள்ளது. அவ்விடத்திலிருந்து மீண்டும் தார் போடப்பட்ட பாதை தொடங்குகிறது. அழகிய காட்சிகளிடையே மேலும் மூன்று கல் சென்றோமானால், கோதகிரியை அடையலாம். கோதகிரியின் கடைவீதி ஒரு சரிவில் அமைந்துள்ளது. அவ் வீதியிலேயே ஊராண்மைக் கழக அலுவலகமும், வேறு சில அழகிய கட்டிடங்களும் அமைந்துள்ளன.

5. பழனி மலைகள்

பெயர்க் காரணம் :

பழனிமலை என்று குறிப்பிடும்போது, முருகன் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் கருமலையே எல்லோருடைய உள்ளத்திலும் தோன்றும். ஆனால் இங்குக் குறிப்பிடப்படும் பழனி மலைகள், பழனி நகருக்குத் தெற்கிலுள்ள மலைக் கூட்டமே ஆகும். வட மொழியில் இவற்றை 'வராக கிரி' என்பர். தமிழில் இதைப் பன்றி மலை என்று குறிப்பிடுவர். இம் மலைக்கு இப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாக ஒரு கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது. இம் மலைமீது ஒரு முனிவர் தவம் செய்துகொண்டிருந்தாராம், அவ் வழி வந்த பன்னிரண்டு குறும்புக்கார இளைஞர்கள் அம் முனிவரை இகழ்ந்து பேசினார்களாம். இதனால் சினங்கொண்ட அம் முனிவர் அப் பன்னிருவரையும் பன்றிகளாகப் போகும்படி சபித்தாராம். அவர்களும் பன்றிகளாக மாறி அம் மலைமீது சுற்றித் திரிந்தார்கள் . அவர்கள் பால் இரக்கம் கொண்ட சிவபெருமான் அவர்களுடைய பன்றியுருவை மாற்றி, பாண்டிய மன்னன் அவைக்களத்தில் அமைச்சர்களாக அமர்த்தினாராம். இக் காரணம் பற்றியே இம் மலை பண்டை நாட்களில் பன்றி மலை என்று பெருவழக்காக அழைக்கப்பட்டு வந்தது என்பர். பன்றி மலையின் திரிபே பழனி மலை என்றும் சிலர் கூறுகின்றனர். புகழ் மிக்க பழனி நகருக்கு அருகில் இருப்பதனால், இம் மலை பழனி மலை என்று பெயர் பெற்றதாகவும் வேறு சிலர் கூறுகின்றனர்.

அமைப்பு:

இது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பிரிவாகும். இம் மலைக்குத் தென் மேற்கே ஏலக்காய் மலை (Cardamon Hills) அமைந்துள்ளது. அம் மலையின் கிழக்கே கம்பம் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. பழனி மலையின் நீளம் 40 கல், அகலம் 25 கல், இது கிழக்குப் பகுதி என்றும், மேற்குப் பகுதி என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகளை மேற்பழனி என்றும் கீழ்ப்பழனி என்றும் குறிப்பிடுவர். கீழ்ப்பழனி மலையில் 3000 அடியிலிருந்து 5000 அடிவரை உயரமுள்ள பல சிகரங்கள் சிதறிக் கிடக்கின்றன. இச் சிகரங்களிடையே குறுகிய பல பள்ளத்தாக்குகள் அமைந்துள்ளன. அழகின் இருப்பிடமாக விளங்கும் இப்பள்ளத்தாக்குகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல குக்கிராமங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கதும், பெரியதும் 'பண்ணைக்காடு' என்ற சிற்றூராம். இதில் 4000 மக்கள் வாழ்கின்றனர். இச் சிற்றூர்களைச் சுற்றி மா, பலா, புளியன், ஆரஞ்சு, எலுமிச்சை, சீதளை (இது ஒருவகைப் பேரெலுமிச்சை, கடாரங்காய் என்றும் கூறுவர். Citron) முதலிய மரங்களடர்ந்த சோலைகள் கண்கவரும் வனப்போடு விளங்கும். இங்கு வாழும் மக்களைப் 'பழங்குடி மக்கள்' (Hill tribes) என்று கூறுவதற்கில்லை. இவர்களெல்லாம் கோவை, மதுரை மாவட்டங்களிலுள்ள சமவெளிகளிலிருந்து பண்டை நாட்களில் இங்குக் குடியேறியவர்களே, இவர்கள் தோற்றத்திலும், நடை உடை பாவனைகளிலும், அங்க அமைப்பிலும் சமவெளியில் வாழும் மக்களிலிருந்து வேறுபட்டவர்களாகத் தெரியவில்லை. இங்கு வாழும் 'குன்னுவர்' (Kunnuvans) என்ற குலத்தாரே பெரும்பாலும் நிலக்கிழார்களாக உள்ளனர். இங்கு வாழும் ‘புலையர்' என்னும் இனத்தார் இவர்களுக்குப் பணிபுரிந்து வாழ்கின்றனர். இங்கு வாழும் தெலுங்குச் செட்டிமார்களும், இசுலாமியர்களும் குன்னுவர்களின் நிலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டனர். இவ்விரு இனத்தாரும் ஓரளவு பணம் படைத்தவர்கள், குன்னுவருக்கும், புலையருக்கும் வேண்டியபோது பணங்கொடுத்து அவர்களைக் கடன்காரர்களாக்கி, பிறகு அவர்கள் நிலங்களையும் பறித்துக் கொண்டனர். இக்கீழ்ப் பகுதியானது மலேரியா நோய்க்கு இருப்பிடம் என்று சொல்லலாம். மார்ச் முதல் ஜூலை வரை இங்கு வாழும் மக்கள் காய்ச்சலால் தாக்குண்டு பெரிதும் வருந்துகின்றனர், ஆனால் மற்ற திங்கள்களில் காய்ச்சல் வராது என்று சொல்ல முடியாது.

மேல் பழனிமலை 6000 அடி முதல் 8000 அடி வரையில் உயர்வுள்ளது. பழனி மலையில் மிகவும் உயர்ந்த சிகரம் வெம்பாடி ஷோலா மலை என்பதாகும். இது மதுரை மாவட்டத்திலுள்ள எல்லா மலைச்சிகரங்களையும் விட உயர்ந்தது என்றே சொல்லலாம். இதன் உயரம் 8218 அடி. குறிஞ்சி நகரமான கோடைக்கானல் இம் மேற்பழனியின் தென்பாகத்தில் அமைந்துள்ளது. கீழ்ப்பழனியில் பரவியுள்ள அடர்ந்த காடுகளை இங்குக் காணமுடியாது. நிறைந்த பள்ளத்தாக்குகளும் இங்குக் கிடையா. வெப்ப நிலையும் குளிர்ந்து தோன்றும். பயிர்த் தொழிலுக்குப் பயன்படாத நிலம் இங்கு அதிகம். இங்குள்ள பீடபூமிகளில் முரட்டுப் புல் முளைத்த பரந்த வெளிகள் (Downs) மிகுந்து தோன்றும், ஒரு சில பள்ளத் தாக்குகளில் மக்களின் குடியிருப்புகளைச் சுற்றி உதகமண்டலத்தில் இருப்பவற்றைப் போன்று இளமரக்காடுகள் (Sholas) நிறைந்திருக்கும். இப் பள்ளத்தாக்குகளைத் தவிர மற்ற இடங்களிலுள்ள நிலங்களெல்லாம், புல் செத்தை அடர்ந்த மெல்லிய மண்படலத்தால் மூடப்பட்டிருக்கும். அப்படலத்தினடியில், மஞ்சள் நிறமான களிமண் நிலம் அமைந்திருக்கும். அக் களிமண்ணிற் கடியில் பரவியுள்ள கற்பாறைகள், எங்குப் பார்த்தாலும் தலை நீட்டிக்கொண்டிருக்கும்.

பழனிமலை மீதுள்ள சரிவு வடக்கு நோக்கிப் படிப்படியாக இறங்குகிறது. ஆனால் தென்பகுதியோ மிகவும் செங்குத்தான பாறைகளையும் சரிவுகளையும் கொண்டது. கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து காண்போருக்கு அச்சரிவிலுள்ள பாறைகள் பெரிய சுவர்கள் போல் காட்சியளிக்கும். அப்பாறைகளினிடையே பெரும்பெரும் பள்ளங்கள் அமைந்துள்ளன. அடிவாரத்திலிருந்து காண்போருக்கு அக்காட்சி வியப்பூட்டும் என்பதில் ஐயமில்லை. வட பகுதியில் அமைந்துள்ள இருபெரும் பள்ளத்தாக்குகள் அப்பீடபூமியை இடையறுத்துக் கொண்டு வில்பட்டி, பூம்பாறை ஆகிய சிற்றூர்கள் வரை தெற்கு நோக்கிச் செல்லுகின்றன. சமவெளியிலிருந்து இவ்விரு பள்ளத்தாக்குகளின் வழியாக மலையுச்சியை வந்தடையும் இரு குறுகிய பாதைகளும் குறிப்பிடத்தக்கவை. இம் மலையோடு நெருங்கிய வாணிபத் தொடர்பு கொண்ட நகரம் 'பழனி' ஆகும். பழனியிலிருந்து புறப்படுவோர் கால் நடைகளின் மீது பொதிகளை ஏற்றிக்கொண்டு இப்பாதைகள் மூலமாகவே உச்சியை அடைவர். பழனியிலிருந்து வில்பட்டி செல்லும் மலைவழிப் பாதை அடிக்கடி குறுகிய பள்ளங்களால் இடையறுக்கப்படுவதால், குதிரைகள் இவ்வழியாகச் செல்ல முடிவதில்லை. ஆனால் பூம்பாறைக்குச் செல்லும் மலைவழிப்பாதை செல்லுவதற்கு எளிதானது. பெரியகுளத்திலிருந்து கோடைக்கானல் செல்லும் குதிரைப் பாதை (bridle path)' அமைக்கப்பட்டதும், மேற்கூறிய இரு பாதைகளும் கவனிப்பாரற்றுச் சீர் கெட்டுப் போயின. குதிரைப் பாதையும் லாஸ் பாதை (Law's Ghat)யும், புதிய ஆத்தூர்ப்பாதையும், கோடைக்கானல் குடியிருப்புகளை இணைக்கும் பாதைகளுமே பழனி மலைமீது புழக்கத்திலிருந்தவை. இப்போது ஓரளவு சீரான பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குச் செய்தி அறிவிக்கும் வேலையானது, கரடு முரடான மலைவழிப் பாதைகளின் மூலமும், கடப்பதற்கரிய காட்டுவழிகளின் மூலமுமே. நடைபெற்றன.

இம்மலை மீது அமைந்துள்ள பூம்பாறைப் பள்ளத்தாக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. இப் பள்ளத்தாக்கின் இருபுறச் சரிவுகளும் சம அளவுள்ளவை. இச் சரிவுகளில் பயிர்த்தொழில் சிறந்த முறையில் நடைபெறுகிறது. எங்குப் பார்த்தாலும் அழகிய இள மரக் காடுகள் உள்ளன, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிளவுபட்ட நிலப்பகுதிகள் உள்ளன. சுற்றிலுமுள்ள நிலங்களின் தாழ்ச்சியினால் ஏற்பட்ட சிறு சிறு செங்குத்தான மேடுகள் தென்படுகின்றன. இப்பள்ளத் தாக்கின் உச்சியில் அமைந்துள்ள ஒரு மேட்டு நிலத்திலேயே 'பூம்பாறை' அமைந்துள்ளது. இதில் ஏறக்குறைய 2000 மக்களே வாழ்கின்றனர். மேல் பழனி மலைமீது அமைந்துள்ள சிற்றூர்களில் இது முக்கியமானது. இம்மலைமீது நிலவரி வசூலிப்பதற்கான அலுவலகம், முன்பு இங்கு தான் அமைந்திருந்தது. இங்கு அமைந்துள்ள சுப்பிரமணியர் கோவில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். விழா நாட்களில் பழனிமலையின் பல பகுதியிலிருந்தும் மக்கள் இங்கு வந்து கூடு கின்றனர்.

மேல்பழனியில் அமைந்துள்ள வீடுகளின் சுவர்கள் குறுக்கும் நெடுக்குமாகப் பொருத்தப்பட்ட மூங்கில் கழிகளின் மேல் மண் பூசப்பட்டுக் கட்டப்படுகின்றன. கூரை புற்களால் வேயப்படுகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் கனப்பு அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் குன்னுவர், காரக்காட்டு வெள்ளாளர் (கார்காத்த வேளாளர்) என்ற இரு இனத்தாரும் வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் தொகை மிகக் குறைவு. மேல் பழனி, கீழ்ப்பழனி ஆகிய எல்லா இடங்களிலும் வாழும் மக்களின் மொத்தத் தொகை 20,000.

மதுரை மாவட்டத்திலுள்ள மலைகளினிடையே ஈடும் எடுப்புமற்றுப் பழனிமலை பெருமிதத்தோடு நிமிர்ந்து நிற்கிறது. காலைஞாயிற்றுப் பொன்னொளியில் பக்கங்களிலுள்ள தொடர்களோடு தலை நிமிர்ந்து நிற்கும் சிகரங்கள், காளையர்கள் பலர் தம் வலிமிக்க தோள்களை உயர்த்திக்கொண்டு நிற்பது போல் தோன்றும். நடுப்பகல் நேரத்தில் மற்ற மலைகளைத் தன் செம்மாந்த உயரத்தால் இருளில் ஆழ்த்திவிட்டு ஒளியுடன் திகழும், மாலை நேரத்தில் கதிரவனின் செந்நிறக் கிரணங்களைப் போர்த்துக்கொண்டு ஈடில்லாப் பெருவனப்போடு திகழும். பெருமழை பெய்து ஓய்ந்த சமயத்தில் இதன் உயரிய சிகரங்கள் மேகங்களாகிய முடியைத் தலையில் சுமந்துகொண்டு, பெருஞ் சிறப்போடு நிற்கும் பேரரசைப்போல் காட்சியளிக்கும். இதன் சரிவுகளில் இழிந்து சலசலத்து ஓடி வரும் நீர் அருவிகளின் மீதும், எக்காளமிட்டுத் தாவி வரும் நீர் வீழ்ச்சிகளின் மீதும் தங்கக் கதிரோன் தன் தணற் குழம்பைப் பூசி மகிழும்போது, பசுமையும் நீலமும் மாறி மாறிச் சுடர்விடும்.

ஆறுகள் :

மதுரை மாவட்டத்தின் வட பகுதியில் உள்ள பழனி, திண்டுக்கல் வட்டங்களிலுள்ள செம்மண் நிலத்தில் சம தூரங்களில் பாயும் நான்கு ஆறுகளும் பழனி மலையிலேயே தோன்றுகின்றன. கொடவனாறு, நங்காஞ்சி ஆறு, நல் தங்கியாறு, சண்முக நதி என்பவையே அவை. இந்நான்கும் காவிரியின் துணை நதியான அமராவதியில் கலக்கின்றன. பழனியில் பெருமழை பெய்த காலங்களில் இவ்வாறுகளிலும் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்படும். சில நாட்களில் அப் பெருக்குத் தணிந்து, சிற்றோடையாகக் காட்சி தரும். இந்நான்கு ஆறுகளில் மிகவும் பயனுடையது சண்முக நதியாகும். வில்பட்டி, பூம் பாறைப் பள்ளத்தாக்குகளில் வழியும் நீரைப் பெற்று இது ஓடி வருகிறது. இப்பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள ஆறு பிரிவான படுகைகளில் இழிந்து வரும் நீர் ஒன்றாகக்கூடி இவ்வாற்றை உருக்கொள்ளுமாறு செய்வதால் இவ்வாறு சண்முக (ஆறுமுக) நதி என்று பெயர் பெறுகிறது. இது பழனி நகரினிடையே ஓடுவதால், அப்பழனியில் கோயில் கொண்டிருக்கும் சண்முகனின் பெயரே இவ்வாற்றுக்கும் வழங்குவதாக எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

மேற்கூறிய ஆறுகள் நான்கும் மதுரை மாவட்டத்தின் வட எல்லையில் ஓடுகின்றன. மதுரை மாவட்டத்தின் நடுவில் வைகையும், அதன் துணையாறுகளும் ஓடுகின்றன. வைகையின் துணையாறுகளில் பல பழனிமடையில் தோன்றுகின்றன. வராக நதி, மேல் பழனிமலையில் தோன்றி, பெரிய குளத்திற்கருகில் பாம்பாற்றோடு கலக்கிறது, பாம்பாறும் பழனிமலையிலேயே தோன்றுகிறது. இவ்வாறு கோடைக்கானலுக்கருகில் ஓர் அழகிய நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. குதிரைப் பாதைக்கருகிலிருந்து காண்போருக்கு இந்நீர்வீழ்ச்சி பெருவனப்போடு காட்சி தரும். இவ்விரு நதிகளும் வைகையோடு கலக்கின்றன. மஞ்சளாறு என்ற வேறொரு நதியும் பழனிமலைச் சரிவில் தோன்றி ஓடி வருகின்றது. இதை வத்தலகுண்டு ஆறு என்றும் கூறுவர். இது தேவதானப்பட்டிக்கு மேல் 200 அடி உயரத்திலிருந்து வீழ்ந்து, ஓர் அழகிய நீர்வீழ்ச்சியை உண்டாக்குகிறது. பாதையிலிருந்து காண்போருக்கு அவ்வீழ்ச்சி கண்கவரும் வனப்போடு காட்சியளிக்கும், பிறகு இவ்வாறு வத்தலகுண்டுவை நோக்கி ஓடி வருகிறது. கீழ்ப்பழனியிலிருந்து தோன்றிவரும் பிறிதோர் ஆறான அய்யம்பாளையம் ஆற்றோடு சேர்ந்து, மஞ்சளாறு வைகையில் கலக்கிறது.

காடுகள் :

பழனிமலைச் சரிவுகளில் அடர்ந்த காடுகள் உள்ளன. ஆனால் அவை இப்போது வாடியும், பெரும் பகுதி அழிக்கப்பட்டும் காணப்படுகின்றன. அளவற்ற மரங்களை வெட்டியும், தீயிட்டுப் பொசுக்கியும் பாழ்படுத்தி விட்டனர். இவ்வாறு அழிக்கப்பட்டன போக மிகவும் குறைவான மரங்களே இங்குக் காணப்படுகின்றன. சரிவிலுள்ள காடுகளில் குறிப்பிடத்தக்கவை, பழனிமலையின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆயக்குடி, கன்னிவாடி எஸ்டேட்டுகளுக்கு இடையிலுள்ள காடுகளே. மற்ற இடங்களைப் போலல்லாமல் இவ்விடத்தில் நிலம் வளமுள்ளதாக உள்ளது. வட மேற்கு மூலையில், கூகல் ஷோலாவிலிருந்து அமராவதி ஆறுவரையிலும் உள்ள சரிவு எளிதில் அடைதற்கரியது. ஆகையினால் அச்சரிவுகளிலுள்ள காடுகள் அழிவுறாமல் இருக்கின்றன. பெரிய குளத்திற்கு மேற்கில் அமைந்துள்ள அக்கமலைத்தொடரில் உள்ள காட்டு மரங்கள் வெட்டப்பட்டும், தீயிடப்பட்டும், பயிர்த் தொழிலுக்காக அழிக்கப்பட்டும் கேடுற்றன. ஆனால் இப்பொழுது அரசியலார் தலையீட்டால் அக்காடுகள் புத்துயிர் பெற்றுள்ளன, அழிக்கப்பட்ட காடுகளில் உயர்ந்த ரக மரங்கள், பிறகு நல்ல முறையில் வளர்வ தில்லை. முட்பு தர்களும், பயனற்ற சிறு மரங்களுமே வளர்கின்றன. பழனிமலைச் சரிவுகளில் பொதுவாக வேங்கை, வெக்கலி, வென் தேவதாரு, செந்தேவதாரு, தேக்கு, கருங்காலி, கால்நட் முதலிய மரங்கள் மிகுந்து காணப்படுகின்றன.

கீழ்ப் பழனி, மேற் பழனிப் பீடபூமிகளிலுள்ள காடுகளில் வளரும் மரங்கள் மிகவும் விலை உயர்ந்தவை. கீழ்ப்பழனிப் பீடபூமிகளிலுள்ள காடுகள் வாழையும், காஃபியும் பயிரிடுவதற்காகப் பெரும் அளவு அழிக்கப்பட்டன. ஏலமும் அங்கு மிகுதியாகப் பயிரிடப்படுகின்றது. இவ்விடத்தில் அமைந்துள்ள பள்ளத் தாக்குகளில் படிந்திருக்கும் கருமண் வளமானது; மணலும் களியும் கலந்தது. இங்கு வளர்ந்திருக்கும் இளமரக்காடுகள் அழிவுறாமல் செழிப்புற்று விளங்கு கின்றன. செந்தேவதாரு மரங்களும், கால் நட் மரங்களும், வைடெக்ஸ், ஆல்டீசிமா முதலிய மரங்களும் இங்கு செழித்து வளர்கின்றன. செந்தேவதாரு மரங்களும், வைடெக்ஸ், ஆல்டீசிமா மரங்களும் பெட்டிகள் செய்வதற்கும் சட்டங்கள் அறுப்பதற்கும் பெரிதும் பயன்படுகின்றன,

மேற்கிலுள்ள மேற்பழனிப் பீடபூமி சிறிது சிறிதாக உயர்ந்து செல்லத் தொடங்கியதும் அங்குள்ள மண், வளம் அற்றதாக மாறுகிறது. தாண்டிக் குடிக்கும் பண்ணைக்காட்டிற்கும் இடையிலுள்ள தாழ்ந்த மலைப்பகுதியைத் தாண்டியதும், மரம் செடி கொடிகளெல்லாம் வளர்ச்சியில் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றுகின்றன. அடர்ந்த காடுகள் அங்குக் கிடையா. எங்குப் பார்த்தாலும் புல்வெளிகளும், முட்புதர்களும், குட்டையான மரங்களுமே தென்படுகின்றன. அங்குள்ள ஈரமான பள்ளத்தாக்குகளில் மட்டும் ஓரிரு இளமரக்காடுகள் தென்படுகின்றன. பத்துப் பன்னிரண்டு காடுகளே ஓரளவு பெரியவை. புலிக் காடு (Tiger Shola), பெருமாள் காடு (Perumal Shola) வஞ்சக்கானல், கோடைக்கானல், குண்டன் காடு (Kundan Shola} கூகல் காடு {Kukal Shola) என்பவை குறிப்பிடத்தக்கவை. கோடைக்கானலிலிருந்து நான்கு கல் மேற்கிலுள்ள டாக்டர்ஸ் டிலைட் (Doctor's delight) என்னும் இளமரக்காடு, வனபோசனம் உண்போருக்கு மிகவும் ஏற்ற இடமாக விளங்குகிறது. இங்கு வளரும்படியான சிறு மரங்கள் விட்டங்கள் அறுப்பதற்கோ, பலகைகள் அறுப்பதற்கோ பயன்படாதவை, இங்கு பல நீர் அருவிகள் தோன்றுவதற்குரிய ஈரத்தைப் பாதுகாப்பதற்கே இம்மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இங்குள்ள காடுகள் முன்பு பெரிதும் அழிக்கப்பட்டன. மேற்பழனி மலையின் உச்சியில் உள்ள இப்பீடபூமி கோடைக்கானல் எல்லையிலிருந்து தொடங்கி மேற்கில் திருவாங்கூர் எல்லை வரையிலும், தெற்கில் போடிநாயக்கனூர் வரையிலும் பரவியுள்ளது. காட்டுச் சட்டத்தின் (Forest Act)படி இங்குள்ள காடுகள் அரசியலாரால் பாதுகாக்கப்படுகின்றன, இப்பீடபூமிக்கு, ஆம்ப்தில் வெளி, ( Ampthill downs) என்று பெயரிட்டிருக்கின்றனர். இதன் பரப்பு 5 சதுரமைல், இப்பீடபூமியின் கால்பகுதி காடுகள். முக்கால் பகுதி பரந்த பசும்புல் வெளிகள். இங்கு 7000 அடி முதல் 8000 அடிவரை உயரமுள்ள சிறிதும் பெரிதுமான பல சிகரங்கள் தென்படுகின்றன. இம் மா நிலத்திலுள்ள மிகவும் அழகிய மலைவெளிகளில் ஆம்ப்தில் வெளியும் ஒன்று.

பழனிமலையின்மீது பல இடங்களில் செயற்கை முறையில் காடுகள் வளர்க்கப்படுகின்றன. கி. பி. 1870-ஆம் ஆண்டு கேம்பெல் வாக்கர் (Colonel Compbell Walker) என்பவர், பழனிமலையின் வடபுற அடிவாரத்தில் உள்ள வேலன் கோம்பை என்ற இடத்திலும், பெரியாற்று ஏரிக்கருகிலுள்ள அடிவாரமாகிய வண்ணாத்திப்பாறை என்ற இடத்திலும் தேக்கு மரங்களைப் பயிரிட்டார். அவ்விடத்தில் ஏறக்குறைய 4500 மரங்கள் வளர்ந்தன. ஆனால், தேக்கு பயிரிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவ்விடங்கள், தென் மேற்குப் பருவக்காற்றினால் பெய்யும் மழையின் முழுப் பயனையும் பெறுவதில்லை. வேலன் கோம்பையில் வளர்க்கப்பட்ட தேக்குக் காடுகள், அப்பக்கமாக ஓடிவரும் கால்வாயினால் நல்ல நீர் வளத்தைப் பெற்றிருந்தன. ஆனால் அடிக்கடி ஏற்படும் பெருவெள்ளத்தால் நிறைய மரங்கள் அழிவுற்றன, அதே ஆண்டில் கோடைக்கானலில் நீலப் பிசின் மரங்க (Blue gum trees}ளும், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த கருமரங்களும் பயிரிடப்பட்டன. கோடைக்கானலில் வாழும் மக்களுக்கு எரிபொருள் வழங்குவதற்கும், அங்குள்ள அழகிய இளமரக் காட்டை அழிவுறாமல் காப்பதற்குமே இவைகள் பயிரிடப்பட்டன. இவ்விடமும் இம்மரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை. கோடைக்கானலின் எரிபொருள் தேவையை அந்நகருக்கு மேற்கில் 2 கல் தொலைவிலுள்ள குண்டன் காட்டிலுள்ள மரங்களே பூர்த்தி செய்கின்றன. இக்காட்டில் 1887-88ஆம் ஆண்டுகளில் நிறைய மரங்கள் பயிரிடப்பட்டன. 1895ஆம் ஆண்டிலும், 1905 ஆம் ஆண்டிலும், குண்டன் காட்டின் பெரும்பகுதி தீயினால் அழிவுற்றது.

விலங்குகள் :

பழனி மலையின் எல்லாப் பகுதிகளிலும் யானைகள் முன்பு நிறையத் திரிந்தன, கிழக்கிலுள்ள கன்னிவாடி வரையிலும் கூட அவைகள் வந்து பயிர்களுக்கு மிகவும் சேதம் விளைவித்தன. இவற்றால் ஏற்படும் அழிவைத் தடுக்க அரசியலார் பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டனர். ஜெர்விஸ் என்ற ஒரு வெள்ளையர், தாம் எழுதியுள்ள, காவிரியின் நீர் வீழ்ச்சிகளை நோக்கிச் சென்ற பயணத்தின் வருணனை' (Narrative of a journey to the falls of Cauvery) என்ற நூலில் பழனிமலையில் திரியும் யானைகளைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். கம்பம் பள்ளத்தாக்கிற்கு அருகிலுள்ள மலைகளிடையே இயற்கையாக அமைந்துள்ள கணவாய்களின் வழியாக அவைகள் வருகின்றனவாம், பொய்க் குழிகள் அமைத்து, இக்கணவாய்களில் எளிதாக இவற்றைப் பிடிக்கின்றனராம். இக்கணவாய் ஓரிடத்தில் மிகவும் குறுகிச் செல்லுகிறதாம். அக்குறுகலான இடத்தில் ஒரு யானை தான் நுழைய முடியும். அவ்விடத்திற்கு அப்பாலுள்ள அகன்ற கணவாயில் வரிசை வரிசையான பல குழிகளை வெட்டி வைப்பார்கள். யானைக் கூட்டத்தை அக்குறுகிய வழியின் மூலமாக விரட்டினால், மிக விரைவில் அவ் யானைகள் குழிகளில் விழுந்துவிடும். ஒரு தடவை நான்குமணி நேரத்தில், 63 யானைகள் இம்முறையில் கைப்பற்றப்பட்டனவாம். மேற்பழனியிலும், சரிவுகளிலும் புலி, சிவிங்கிப் புலி, கரடி, காட்டெருமை, மான், வரையாடு, காட்டுப்பன்றி, செந்நாய் முதலியன வாழ்கின்றன. கோடைக்கானலில் காக்கைகளைக் காண முடியாது.

பயிர் வகைகள் :

கீழ்ப்பழனிப் பீடபூமிகளில் வாழும் குன்னுவர்களும் புலையர்களும் புன்செய்ப் பயிர்களைப் பயிரிடுவதோடு, வாழை மரங்களையும் நிறையப் பயிரிடுகின்றனர். இங்குப் பயிராகும் வாழைப்பழம் மிக்க சுவையும் மணமுமுள்ளது. கோடைக்கானல் வட்டத்தில் வேறெங்கும் இவ்வளவு உயர்ந்த ரக வாழை பயிராவதில்லை. இங்குப் பயிரிடப்படும் வாழை மரங்கள் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப் பலன் கொடுக்கும் தன்மையுடையவை. இங்கு, நெல், காஃபி, ஏலம், இஞ்சி, மஞ்சள் முதலியனவும் நல்ல முறையில் பயிரிடப்படுகின்றன. இங்கு அரேபிகா என்னும் உயர்ந்த ரகக் காஃபி விளைகிறது. காஃபிப் பயிரை முதன் முதலில் பயிரிட்டவர் எம். எமிலிடி ஃபாண்ட்கிளேர் என்னும் வெள்ளையர். சிறுமலையின்மீது இவருடைய தந்தையார் பயிரிட்ட காஃபி விதைகளை இங்குக் கொணர்ந்து இவரும் பயிரிட்டார். இப்போது நம் நாட்டிற்கு நல்ல வருவாய் நல்கும் பயிராக இது இங்கு விளங்குகிறது. ஏலமும், இஞ்சியும் விளைய நல்ல நிழல் வேண்டியிருப்பதால் அடர்ந்த காடுகளிலேயே இவைகள் விளைகின்றன. ஏலம் ஐந்து ஆண்டுகளிலும், மஞ்சள் 18 மாதங்களிலும் பலன் கொடுக்கும். மஞ்சள் திறந்த வெளிகளிலேயே பயிரிடப்படுகிறது. மா, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை, கொடித்திராட்சை, ப்ளம் திராட்சை, ஆப்பிள், பெர்ரி முதலிய பழங்களும் இங்கு விளைகின்றன.

மேற்பழனிமலையில் நெல், காஃபி, மட்டரகக் கோதுமை, மட்டரகப் பார்லி, வெள்ளைப்பூண்டு, பழ வகைகள் ஆகியவை நிறைய விளைகின்றன. இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு பெரும் அளவில் நாடெங்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மலைச்சரிவுகளில் அடுக்கடுக்காக நெல் வயல்கள் அமைக்கப்பட்டுள்ளன. மலையிலிருந்து இழிந்து வரும் நீரருவிகளைத் தடுத்துத் தேக்கி, சிறு வாய்க்கால்களின் மூலமாக நெல் வயலுக்குப் பாய்ச்சுகிறார்கள். இவர்கள் நெல் வயல்களில் எருவைக் கொட்டி மிதிப்பதில்லை. தேக்கிய நீரை வாய்க் கால்களின் மூலமாக எருக்குவியல்களிடையே பாய்ச்சி, அவற்றில் ஊறி வரும் நீரை நெல் வயல்களில் பாய்ச்சுகின்றனர். இங்கு விளையும் நெல் அவ்வளவு உயர்ந்த ரகத்தைச் சார்ந்ததல்ல. நெற்பயிர் முற்ற எட்டு அல்லது பத்து மாதங்கள் செல்லும்.

மக்கள்

குன்னுவர் :

நீலகிரி மலையின்மீது படகர் எவ்வாறு சிறந்த உழவர்களாக வாழ்கின்றனரோ, அதுபோல் பழனிமலையில் குன்னுவர் சிறந்த உழவர்களாக வாழ்கின்றனர். இவர்களுடைய தாய்மொழி தமிழ் மொழியே ஆகும். இவர்கள் தங்களைக் குன்னுவ வேளாளர் என்று கூறிக் கொள்கின்றனர். கோவை மாவட்டத்திலுள்ள தாராபுரம், காங்கயம் பகுதிகளே தங்கள் முன்னோர் வாழ்ந்த இடமென்றும் கூறுகின்றனர். போரும் பஞ்சமும் மிகுந்திருந்த காரணத்தால், ஐந்தாறு நூற்றாண்டுகட்கு முன் இவர்களின் முன்னோர்கள் சமவெளியிலிருந்து இங்குக் குடிபுகுந்தார்களாம். விஜயநகர மன்னர், மராட்டிய மன்னர், திப்புசுல்தான் ஆகியோரின் ஆட்சியில், வரிச்சுமை தாளாமலும் வேறு பல துன்பங் களுக்கு ஆட்பட்டும் வருந்தியவர்கள் பலர் இங்குக் குடி புகுந்தார்கள். ஒரு சமயம் கக்கற்கழிச்ச (Cholera) லினால் அவதிப்பட்ட சமவெளி மக்களும் இங்குக் குடி. புகுந்ததாகக் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்திலுள்ள குன்னூர் என்ற சிற்றூரின் பெயரே தங்கள் குடிப்பெயராக அமைந்ததென்று காரணம் கூறுகின்றனர். குன்னுவர் பழனிமலையில் குடிபுகுந்தது பற்றி வேறொரு செய்தியும் வழங்குகிறது. விரூபாட்சி, ஆயக்குடி ஆகிய இடங்களில் வாழ்ந்த போலிகர் என்னும் வகுப்பார் மலைமீதுள்ள தங்களுடைய நிலங்களில் பணிபுரிவதற்காக இவர்களை இங்குக் குடியேற்றினார்கள். அதுவரையில் அந்நிலங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் புலையர் என்னும் குலத்தார். அவர்கள் சோம்பேறிகள். குன்னுவர் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இடத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். அதோடு அவர்களை மாறாத அடிமைகளாகவும் ஆக்கிக்கொண்டனர்.

குன்னுவர் வாழும் ஒவ்வோர் ஊரிலும் அவர்களுடைய சமூகவியலை மேற்பார்க்க ஒரு தலைவனுண்டு. அவனுக்கு ‘மண்ணாடி' என்று பெயர். ஊரில் அவன் மிகவும் செல்வாக்கு மிக்கவனாகக் கருதப்படுகிறான். இவ்வினத்தார், குன்னுவர், பெரிய குன்னுவர், சின்னக் குன்னுவர் என முப்பிரிவாகப் பிரிந்து வாழ்கின்றனர். இப்பிரிவுகளுக்கு 'வகுப்பு'க்கள் என்று பெயர். ஒரு வகுப்பினர் மற்ற வகுப்பினரோடு மண உறவு கொள்ளும் வழக்கம் இல்லை. ஆனால் ஒன்றாக அமர்ந்து உண்ணுவர். குன்னுவப் பெண் அணியும் உடை ஒரு மாதிரியாக இருக்கும். அவர்கள் தங்களுடைய மேலாடையால் மார்பைப் போர்த்து முன்னால் முடியிட்டுக் கொண்டு, அவ்வாடையையே இடுப்பில் சுற்றிக்கொள்கின்றனர். உலோகத்தால் செய்த கழுத்தணிகளையும், பித்தளையால் செய்த வளையல், கொலுசுகளையும், வெள்ளியினாற் செய்த கடகம் மூக்கு வளைகளையும் அணிகின்றனர். வெள்ளை ஆடையை முன்னாட்களில் பெண்கள் அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால் இப்பொழுது பெரும்பாலோர் வெள்ளை ஆடையே உடுக்கின்றனர்.

இவர்களிடையிலும் மானரீகமுறை மிகவும் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்கப்படுகிறது. தந்தையோடு பிறந்த அத்தையின் மகளே பெரும்பாலும் மணமகளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். வயதுப் பொருத்தம் கூட இவர்களால் கவனிக்கப்படுவதில்லை. சில சமயங்களில் மணமகனைவிட மணமகள் மிகவும் வயதில் மூத்தவளாக இருப்பதுண்டு. மிகவும் இளைஞனான ஒருவனுக்கு ஒன்றுவிட்ட அத்தைமார்களின் வீட்டிலிருந்து, இரண்டு மூன்று பெண்களைத் திருமணம் செய்து வைப்பதுண்டு. பருவமடையாத அச்சிறுவனைவிட, வயதில் மூத்திருக்கும் மனைவியர், அவர்கள் குலத்திலே விருப்பமுள்ள வேறு ஆடவர்களோடு தொடர்பு கொள்ளுவார்கள். அவ்வாறு தொடர்பு கொள்ளுவதன் மூலம் பிறக்கும் குழந்தைகள் சட்டப்படி கணவனுக்கே பிறந்தவைகளாகக் கருதப்படும். அதனால் ஒன்பது அல்லது பத்து வயதுள்ள சில சிறுவர்கள் (Putative fathers) இரண்டு மூன்று குழந்தையருக்குத் தந்தையராக இருப்பதுண்டு. இவர்களுடைய திருமணம் சடங்குகளற்றது. மணமகனின் பெற்றோர் மணமகளுக்குப் பரிசம் (Bride Price) வழங்குவர். மணமகனின் தமக்கை பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவாள். பிறகு எல்லோரும் விருந்துண்பர். இத்துடன் திருமணம் முடிவடைகிறது.

‘வீட்டு வைப்பு' என்ற புதுமையான முறையொன்று இவர்களால் கடைப்பிடித்து வரப்படுகிறது. ஏதேனும் ஒரு குடும்பத்தில் ஆண் சந்ததியில்லாமல் ஒரு பெண் மட்டும் இருந்தால் அப்பெண்ணை யாருக்கும் திருமணம் செய்து கொடுப்பதில்லை. அவ்வாறு திருமணம் செய்து கொடுத்தால் அத்தோடு அவர்கள் குடி அருகிவிட்டதாக எண்ணுகிறார்கள். அத்தகைய பெண்ணை மணம் பேச முறை மாப்பிள்ளை (மாமன் மகன்) யாரும் வரக்கூடாது. அப்பெண்ணை அவளுடைய வீட்டின் வாயிலிலுள்ள ஒரு கம்பத்திற்குத் திருமணம் செய்து வைப்பார்கள். அவள் கழுத்தில் தாலி கட்டுவதற்குப் பதிலாக, அவளுடைய வலது கையில் வெள்ளியினாற் செய்த வளையல் ஒன்றை அணிவிப்பார்கள். அதன் பிறகு அப்பெண் அவள் குலத்தைச் சார்ந்த எந்த ஆடவனுடனும் தொடர்பு கொள்ளலாம். அவளுடைய வருமானம் பெற்றோரையே சேரும். அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தால், அக்குடும்பத்திற்குரிய சொத்து முழுவதும் அதையே சாரும், மேற்கு பெல்லாரியிலும், தர்வார், மைசூர் ஆகிய நாடுகளுக்கு அண்மையிலும் வாழும் பழங்குடி மக்கள் கடைப்பிடிக்கும் 'பசவிமுறை'யோடு இவ் வீட்டு வைப்பு முறை ஒத்துள்ளது.

மணவிலக்கு முறையும் இவர்களிடையே உண்டு. பரிசத் தொகையைத் திருப்பிக் கொடுத்துவிட்டால் உடனே மணவிலக்குப் பெறலாம். ஆனால் குழந்தைகள் எல்லாம் கணவனையே சாரும். கைம்பெண்களும், மணவிலக்குப் பெற்றவர்களும் மிக விரைவில் மறுமணம் செய்து கொள்ளுகின்றனர், ஆகையினால் மற்ற இனமக்கள் இப்பழக்கத்தை இழித்துப் பேசுகின்றனர்.

புலையர் :

பழனிமலையில் முதன் முதல் குடியேறியவர்கள் புலையர்களே. குன்னுவர் இம்மலையில் குடியேறுவதற்கு முன் இவர்கள் இங்கு உரிமை வாழ்வு வாழ்ந்து வந்தனர். இவர்கள் இனத்தால் தமிழர்களே. இவர்கள் கடைப்பிடித்து ஒழுகும் பழக்க வழக்கங்கள், சமவெளி யில் வாழும் மக்களின் பழக்க வழக்கங்களோடு பெரிதும் ஒத்திருக்கின்றன. இவர்கள் பேசும் மொழியும் தமிழே. இக்குலத்தாரின் தலைவன் நாட்டாண்மைக்காரன் என்று அழைக்கப்படுகிறான். அவனுக்குத் துணையாகச் சேர்வைக்காரன், தோட்டி என்ற இருவர் உள்ளனர். தோட்டி நாட்டாண்மைக்காரனின் பணியாள். தமிழ் நாட்டின் மற்ற இடங்களில் வாழும் நாட்டாண்மைக்காரரைப் போலவே, இக்குலத்தாரின் நாட்டாண்மைக்காரனும் செல்வாக்கு மிக்கவனாக இருக்கிறான். புலையர்கள் மூன்று பிரிவினராகப் பிரிந்து வாழ்கின்றனர். ஒவ்வொரு பிரிவிற்கும் ‘கூட்டம்' என்று பெயர். கோலன்குப்பன் கூட்டம், பீச்சிக் கூட்டம், மண்டியான் கூட்டம் என்பவையே அவை. மேற்கூறிய மூன்று பேர்களும் அவர்கள் குலத்தின் முன்னோர்கள்.

ஒரு பெண் பருவமடைந்த பிறகே, திருமணம் செய்கின்றனர். திருமணம் பெற்றோர்களாலேயே ஏற்பாடு செய்யப்படுகிறது. திருமணச் சடங்கு மிகவும் எளிய முறையிலேயே நடைபெறுகிறது. மணப்பெண்ணுக்கு ரூ. 25 பரிசப்பணமாக அளிக்கப்படுகின்றன. வெள்ளை மணிகளைக் கோத்துப் பெண்ணின் கழுத்தில், தாலியாக அணிவிக்கின்றனர். பரிசப்பணத்திற்கு ஈடான தொகையை ஒறுப்புக் கட்டண (fine) மாகச் செலுத்திவிட்டு ஆண், பெண் ஆகிய இருவரில் யார் வேண்டுமானலும் மணவிலக்குப் பெறலாம். மணவிலக்குப் பெற்றவர்களும், கைம்பெண்களும் தாம் விரும்பும் யாரையும் திருமணம் செய்து கொள்ளலாம். புலையர்கள் மாயாண்டி, கரு மலையான், பூவாடை (பெண் தெய்வம்) என்ற தெய்வங்களை வணங்குகின்றனர். ஒவ்வொரு சிற்றூருக்கும் அருகில் அமைந்திருக்கும் திடலின்மேல் மாயாண்டியின் கோவில் இருக்கும். இக்கடவுளர்களுக்குப் புலையர்கள் சித்திரைத் திங்களில் விழா எடுக்கின்றனர். இவ்விழாவில் பன்னிரண்டு ஆடவர்கள் சேர்ந்து ஆடும் ஆட்டம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இவ்வாட்டத்தில் பங்கு கொள்ளும் பன்னிரண்டு ஆடவரும் தங்களைத் தூய்மையோடு வைத்துக் கொள்வதற்காக, மாட்டிறைச்சியை உண்ணாமல் விலக்குகின்றனர். விழாவெடுத்த முதல் நாளில் மாயாண்டிக்கு ஓர் ஆடு பலியிடுகின்றனர். இரண்டாம் நாள் ஒரு பானையில் ராகிக் களி சமைத்து, கருமலையான் கோவிலில் வைத்து அதைச் சுற்றி ஆடுவார்கள். ஆடல் முடிந்ததும் எல்லோருக்கும் களி வழங்கப்படும். மூன்றாம் நாள் பூவாடை கோவிலில் படையல் துவங்கி எட்டு நாள் தொடர்ந்து நடைபெறும். விழா முடிவுறும்போது, ஆடல் சிறப்பாக நடைபெறும். புலையர்கள் ஆடலில் பெருவிருப்பம் கொண்டவர்கள். பங்குனித் திங்களில் ஆடவரும் பெண்டிரும் திரளாகக் கூடி, கொட்டும் பறையோசைக்கேற்பச் சுற்றியாடும் ஆட்டம் காண்டற்குரியது. புலையர்கள் மாட்டிறைச்சியையும், பன்றியிறைச்சியையும் விரும்பியுண்கின்றனர். எலியைக் கூட உண்ணும் பழக்கம் அவர்களிடம் உண்டு. 'யாரேனும் ஒருவன் பெரியம்மையால் பீடிக்கப்பட்டால், உற்றாரும் உறவினரும் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். ஆடவரும் பெண்டிரும் உடல் தொடர்பு கொள்ளமாட்டார்கள்' என்று டர்ன்புல் என்ற வெள்ளையர் தம் நூலில் குறிப்பிடுகிறார். கல்ராயன் மலைகளில் வாழும் மலையாளிகளிடமும் இப்பழக்கம் உண்டு

கிருத்தவ சமயத்தைப் பரப்பும் நோக்கத்தோடு கி, பி, 1850-ஆம் ஆண்டில் ஒரு பாதிரி அனுப்பப்பட்டார். ஆனால் அப்பணி சரிவர நடைபெறவில்லை. இடையிலே தடைப்பட்டது. மீண்டும் அமெரிக்கத் திருச்சபையைச் சார்ந்த கிருத்தவப் பாதிரிமார் இங்கு சமயத்தைப் பரப்பப் பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர். கி. பி. 1850-ஆம் ஆண்டு சமயப் பிரசாரத்திற்காகப் புலையர்களிடையே சென்ற பாதிரியார் புலையர்களைப் பற்றிய சில குறிப்புகளைத் தம் கடிதங்களில் எழுதியுள்ளார், Madras Quarterly Missionary Journal for 1850-55-என்ற நூலில் அக்கடிதங்கள் காணப்படுகின்றன. அக்கடி தங்களில் காணப்படும் செய்திகள் பின் வருமாறு :

'வேட்டையாடுவதற்காகப் புலையர்கள் சில சமயங்களில் திரளாகக் கூடுவதுண்டு. வேட்டையில் கிடைத்த முதல் விலங்கின் தோலையோ அல்லது வேறு சில உறுப்புக்களையோ அருகிலுள்ள கோவிலுக்குக் காணிக்கையாக அனுப்புவர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுடைய கடவுள் மன நிறைவு கொண்டு அவர்களுக்கு வேட்டையில் அதிகமான விலங்குகள் கிடைப்பதற்கு அருள்புரிவாராம். வேட்டையின் போது யாரேனும் இறந்துபட்டால், மிகவும் மரியாதையோடு அவன் உடலைக் காட்டில் அடக்கம் செய்வார்கள். அவ்வாறு இயந்தபட்டவன். புலையர்களின் மரியாதைக்குரியவனாகவும், வழிபாட்டிற்குரியவனாகவும் கருதப்படுகின்றான். புலையர்கள், அவர்களுடைய ஆண்டை (Masters) களான குன்னுவர்களால் மிகவும் அடிமைத்தனத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கின்றனர். குன்னுவர் புலையர்களுக்குக் கடும் வட்டிக்குப் பணம் கொடுத்து, அவர்களால் கொடுக்க இயலாதபோது, தங்கள் அடிமைகளாக ஆக்கிக் கொள்கின்றனர். குன்னுவர்கள் அவர்களை இரவில் விளக்கு வைத்துக் கொள்வதற்கும், கட்டிலில் படுத்துறங்குவதற்கும்கூட அனுமதிப்பதில்லை. நோய் நொடிகளைத் தீர்ப்பதற்குக் குன்னுவர்கள் புலையர்களையே பெரிதும் நாடவேண்டியிருக்கிறது. ஏனென்றால் காட்டிலுள்ள மூலிகைகளின் தன்மைகளை நன்குணர்ந்தவர்கள் புலையர்களே, பேய் பிடித்தவர்களைக் குணப்படுத்தும் திறமையும் அவர்களிடமே உள்ளது. ஏனென்றால் அம்மலை மீது வாழும் பேய் பிசாசுகளை வசப்படுத்தும் ஆற்றலை அவர்கள் பெற்றிருப்பதாகக் குன்னுவர்கள் கருதுகின்றனர். புலிகளை நஞ்சூட்டிக் கொல்லும் கலையைப் புலையர்கள் நன்கு அறிவார்கள். யாரேனும் ஒரு புலையன் ஒரு புலியை நஞ்சூட்டிக் கொன்ற செய்தியை, மற்ற புலையர்கள் அறிந்தவுடன் எல்லோரிடமும் பணம் வசூலித்து அவனுக்குப் புத்தாடை வாங்கி வழங்குவர். அவனை ஒரு நாற்காலியில் அமர்த்தி ஊர்வலமாகக் கொண்டு வருவர். ஊர்வலத்தின்போது அவனைச் சுற்றிப் பலர் ஆடிக்கொண்டு வருவர்.

பளியர் :

பளியர்கள், பழனிமலையில் வாழ்வோரில் மிகவும் பிற்பட்ட இனத்தார். மேல் பழனிமலையிலும், வருசநாட்டுப் பள்ளத்தாக்கிலும் உள்ள காடுகளில், சிறு சிறு கூட்டங்களாகச் சிதறி வாழ்கின்றனர். மஞ்சம்பட்டிக்கு அருகிலுள்ள காடுகளிலும் வாழ்கின்றனர். ஆனால் இவர்களுடைய உச்சரிப்பு மிகவும் வேறுபட்டும், புரிந்துகொள்ள முடியாமலும் அமைந்துள்ளது. புலையர்களைவிட நாகரிகத்தில் இவர்கள் மிகவும் கேவலமான நிலையில் உள்ளனர். ஆனால் இவர்கள் மாட்டிறைச்சியை உண்பதில்லை. பெரும்பாலும் இவர்கள் மரத்தின் மேல் அமைத்த பரண்களிலும், குகைகளிலும் பாறை இடுக்குகளிலும் வாழ்கின்றனர். சில சமயங்களில் புற்களால் அமைக்கப்பட்ட குடிசைகளில் வாழ்கின்றனர். உடலை மறைக்கப் போதிய அளவற்ற ஆடையையே அணிகின்றனர். அவ்வாடையோடு தழைகளையும், புற்களையும் சேர்த்து இடுப்பில் சுற்றிக் கொள்கின்றனர். இவர்கள் ஆடை மிகவும் அழுக்கேறித் தூய்மையற்றிருக்கும். இலைகளையும், கிழங்குகளையும் (பெரும்பாலும் மரவள்ளிக் கிழங்கு) தேனையுமே முக்கிய உணவாகக் கொள்கின்றனர். கிழங்குகளை ஒரு குழியினுள் போட்டு, அதன்மேல் சுள்ளிகளைப் பரப்பித் தீயிட்டுச் சுட்டுத் தின்கின்றனர். இவர்கள் இருப்பிடத்திற்கு முன்னால் எப்பொழுதும் தீ எரிந்துகொண்டே இருக்கும். காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவே அவ்வாறு செய்கின்றனர்.

காட்டில் எரிந்துகொண்டிருக்கும் தீயின் மூலமாகவே, பளியர்கள் அவ்விடத்தில் இருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும். ஏனென்றால் பளியர்கள் மிகவும் அஞ்சும் இயல்பினர். பிற இன மக்களைக் காண அவர்கள் விரும்புவதில்லை. அவ்வாறு கண்டாலும் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். சக்கிக்முக்கிக் கல்லின் உதவியினாலேயே இவர்கள் நெருப்பு உண்டாக்குகின்றனர். அதற்குத் துணைப் பொருளாகக் காட்டுமரங்களில் கிடைக்கும் பஞ்சு போன்ற பொருளைப் பயன்படுத்துகின்றனர். திருமணங்கள் எவ்விதச் சடங்குமின்றி நடைபெறுகின்றன. 'திருமணம் ஓர் இசைந்த ஏற்பாடு' (Marriage is an adjustment) என்று ஒரு மேலை நாட்டு அறிஞன் கூறிய கூற்று இவர்கள் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமே, இவர்கள் வாழ்க்கையில் எவ்வித இடர்ப்பாடும் கிடையாது. கணவன் உணவுப் பொருளைத் தேடிக் கொணர வேண்டும். மனைவி அதைச் சமைத்துக் கொடுக்க வேண்டும். இவர்களுடைய வாழ்க்கைப் பொறுப்புக்கள் இவற்றோடு முடிவுறுகின்றன. அவர்களில் யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அப்பிணத்தை இருந்த இடத்திலேயே விட்டுவிட்டு எல்லோரும் வேறு இடத்திற்குச் சென்று விடுவார்கள். அவ்விடத்திற்குச் சில திங்கள் வரையில் யாரும் செல்லமாட்டார்கள். திருவாளர் தர்ஸ்டன் என்ற ஒரு வெள்ளையர், திருநெல்வேலிக் காடுகளில் வாழும் பளியர்களின் வாழ்க்கையைப் பற்றி விரிவான குறிப்புகளைப் படங்களோடு ஒரு நூலாக வெளியிட்டிருக்கிறார். திருநெல்வேலிப் பளியர்கள் இறந்தவனைப் புதைத்து, அப்புதைகுழியின்மேல் ஒரு கல்லை நாட்டிவிட்டுச் சென்று விடுவர். பிறகு அவ்விடத்தை அக்குடும்பத்தார் எப்போதும் காண விரும்புவதில்லை, மஞ்சம்பட்டிக்கு அருகிலுள்ள மலைப் பகுதிகளில் இவர்கள் வாழ்கின்றனர்,

கோடைக்கானல் :

கோடைக்கானல் வட்டம் (taluk) மதுரை மாவட்டத்தைச் சார்ந்ததாகும். ஆங்கிலேயர்கள் கீழ்ப் பழனி மலை, மேற்பழனி மலை ஆகிய இரு பகுதிகளையும் சேர்த்து கி. பி. 1889 ஆம் ஆண்டு இவ்வட்டத்தை அமைத்தனர். மேற்பழனிமலையின் மேல் அமைந்திருக்கும் கோடைக்கானல் நகரத்தின் பெயரால் இவ்வட்டமும் அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம் :

கோடைக்கானல் என்ற பெயர் அரசியலாரின் குறிப்புக்களில் கி. பி. 1860-ஆம் ஆண்டிற்கு மேல் காணப்படுகின்றது. இப்பெயர் இந்நகரத்திற்கு எவ்வாறு ஏற்பட்டது என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. 'கானல்' என்ற சொல்லுக்குக் காடு அல்லது சோலை என்று பொருள். இதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. ஆனால் இப்பெயரில் அமைந்திருக்கும் நிலை மொழி (முன் சொல்) யான 'கோடை' எதைக் குறிக்சிறது என்பதே ஆராய்ச்சிக்குரியதாக இருக்கிறது. இந்நகரம் அமைந்துள்ள காடு, பழனிமலைகளின் கடைசியில் உள்ள தொடரின்மீது இருப்பதால் இது "கோடிக்கானல்' என்று முதலில் அழைக்கப்பட்டுப் பிறகு கோடைக்கானல் ஆயிற்று என்பர். வேறு சிலர் 'கொடிக்கானல்' என்ற பெயரே கோடைக்கானல் ஆயிற்று என்பர். இந்நகரைச் சூழ்ந்திருக்கும் காட்டில், பின்னிப் படர்ந்திருக்கும் எண்ணற்ற கொடிகளும், லியானா (Liana) முதலிய காட்டுமரங்களின் தொங்கும் வேர்களும், இப்பெயரை உறுதிப்படுத்துகின்றன. கோடைக் காலத்திலும் - பசுமையான இளமரக்காடுகளைப் பெற்றிருப்பதால், இது கோடைக்கானல் எனப் பெயர் பெற்றது என்று கூறுவாருமுண்டு. சங்க இலக்கியத்தில் கூடப் பசுமரக் காட்டைக் குறிப்பிடக் 'கோடைக்கானல்' என்ற தொடர் ஆளப்பட்டிருக்கிறது. 'கொடைக்கானலே' கோடைக்கானல் ஆகியிருக்கும் என்று சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இது யாருக்கு யாரால் கொடைப் பொருளாக அளிக்கப்பட்டது என்பது விளங்கவில்லை. கோடைக்கானல் பெருமழைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 91 அங்குல மழையைப் பெறுகிறது. இங்கு வாழும் மக்கள் எப்போதும் குடையும் கையுமாகத் திரிவதால் 'குடைக்கானல்' என்ற பெயரே கோடைக் கானலாக மாறியிருக்கும் என்றும் கூறலாம்.

வளர்ச்சியும் வரலாறும் :

கோடைக்கானல் நகர் பெரியகுளத்திற்கு நேர் உச்சியில் கடல் மட்டத்திலிருந்து 7000 அடி உயரத்திலமைந்துள்ளது. செங்குத்தாக உயர்ந்து செல்லும் தென்பக்க உச்சியின் ஓரத்தில் இந்நகரம் உள்ளது. மலை உச்சியில் தாழ்வான இடத்தைச் சுற்றியுள்ள சரிவுகளில் இந்நகரம் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் 2 கல்; அகலம் 1 கல். இவ்வுச்சியிலிருந்து காண்போருக்குச் சமவெளியின் தோற்றம் தெளிவாகத் தோன்றும். இந்நகரின் வடக்கில் மலையானது உயர்ந்தும், செங்குத்தாகவும் செல்லுகிறது. மேற்கில் உயர்ந்த மலைத்தொடர் தடுத்து நிற்கின்றது. கிழக்குப் பக்கத்தில் மலையானது சிறிது சிறிதாகத் தாழ்ந்து கீழ்ப்பழனி மலைகளை நோக்கிச் செல்லுகிறது. அப்பக்கத்தில் தான் மற்ற எல்லாச் சிகரங்களையும்விட உயர்ந்து அழகிய தோற்றத்தோடு பெருமாள் மலை நிற்கிறது. இதன் உயரம் 7326 அடி. கோடைக்கானல் அமைந்துள்ள சரிவுகளில் தென்பக்கத்துச் சரிவு, பசு மரங்களைத் தன்னகத்தில் நிறையக் கொண்டிருக்கிறது. தொலைவில் இருந்து காண்போருக்குத் தொங்கும் தோட்டமாக {hanging wood) அது தென்படும். இக்காடே கோடைக்கானல் என்று அழைக்கப்பட்டு, நகருக்கும் ஆகி வந்தது. நகருக்கு நடுவில் உள்ள தாழ்விடம் முதலில் சதுப்பு நிலமாக இருந்தது. ஒரு சிற்றோடை அதன் நடுவில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மதுரை மாவட்டத் தண்டலராக இருந்த திருவாளர் லிவெஞ் (Mr. Levenge) என்பார், கி. பி. 1863 ஆம் ஆண்டு திட்டமிட்டு, அரசியலாரின் நன்கொடையையும், தம் கைப்பணத்தையும் செலவிட்டு அச்சிற்றோடையைச் சுற்றிக் கரை அமைத்து, ஏரியாக மாற்றினார். அழகிய அவ்வேரியைச் சுற்றிப் பசுமரங்கள் அடர்ந்த வழிகள் பல அமைந்துள்ளன. அவ்வழிகளிலேயே எழில்பெறு மனைகள் பல எழுப்பப்பட்டுள்ளன. இவ்வேரி உருவத்தால் ஒரு நட்சத்திர மீனை (Star fish) ஒத்து இருக்கிறது. இதன் குறுக்களவு ½ கல் இருக்கும். ஆனால் இதன் சுற்றளவு 3 கல் நீளம் இருக்கும். ஏரிக்கரையைச் சுற்றி ஒட்டினாற்போல் ஒரு பாதை செல்லுகிறது. அப்பாதைக்குச் சற்று மேலே ஒரு பாதையும், அதற்கு மேல் மற்றொரு பாதையும் சரிவுகளில் அமைந்துள்ளன. அவைகள் முறையே 'நடு ஏரிப் பாதை' (Middle Lake Road) என்றும், 'மேல் ஏரிப் பாதை' (Upper Lake Road) என்றும் அழைக்கப்படுகின்றன. இம்மூன்று பெருஞ்சாலைகளும், இடையிடையே பல சிறு பாதைகளால் இணைக்கப்படுகின்றன.

நகருக்கு வெளியில் ஐந்து முக்கியப் பாதைகள் செல்லுகின்றன. தென் மேற்காகச் செல்லும் பாதை தூண் பாறை (Pillar Rocks) களை நோக்கிச் செல்லுகிறது. மேற்குப் பக்கத்தில் செல்லும் பாதை, 12 கல் தொலைவில் அமைந்திருக்கும் 'பூம்பாறை' என்னும் சிற்றூரை அடைகிறது. அவ்விடத்தில் சிறந்த வானாய்வுக் கூடம் ஒன்று உள்ளது. வடக்குப் பக்கத்தில் செல்லும் நடைபாதை திருநெல்வேலிக் குடியேற்ற (Tinnevelli settlement)த்தின் வழியாக வில்பட்டியை அடைகிறது. நீர்வீழ்ச்சிக்கு அண்மையில் செங்குத்தான சரிவுகளுக்கிடையில் இவ்வழகிய சிற்றூர் அமைந்துள்ளது. கிழக்குப் பக்கத்தில் செல்லும் 'லாஸ்காட்' என்னும் வழியானது மேற்பழனி மலையையும் கீழ்ப்பழனி மலையையும் பிரிக்கும் இயற்கை எல்லையான நியூட்ரல் சேடல் (Neutral Saddle) என்ற இடத்தையடைகிறது. இவ்விடம் பெருமாள் சிகரத்தின் அடிவாரத்திலுள்ளது. தெற்கில் செல்லும் பாதை குதிரைப் பாதையாகும். இது செங்குத்தாக அமைந்துள்ளது. 12 கல் நீளமுள்ள இப்பாதை, செண்பகனூர் அடிவாரத்திலுள்ள கிஷ்ட்னமா நாயக்கர் தோப்பு (Kistnama Nayak's Tope) வழியாகச் சமவெளியை அடைகிறது. கிஷ்ட்னமா நாயக்கர் தோப்பு, (பொதுவாகத் தோப்பு என்றே அழைக்கப் பெறும்) மதுரையில் நாயக்க மன்னரிடம் அமைச்சராகப் பணியாற்றிய ஒருவருடைய உறவினர் பெயரால் அமைக்கப்பட்டது. மதுரையில் நாயக்கர் ஆட்சி அழிவுற்றதும், அப்பரம்பரையினர் பெரிய குளத்திற்கு ஓடிவந்து தங்கினர். அவர்கள் பரம்பரையினரே தொடர்ந்து கி. பி. 1870-ஆம் ஆண்டுவரை, வடகரை என்னும் ஊருக்குக் கிராமத் தலைவர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இத் தோப்பிலிருந்து பெரியகுளம் 5 கல் தொலைவில் அமைந்துள்ளது. பெரிய குளத்திலிருந்து அம்மைய நாயக்கனூர் புகை வண்டி நிலையம் 28 கல் தொலைவிலுள்ளது. பண்டைக்காலத்தில் கோடைக் கானலை அடைய விரும்புவோர் அம்மைய நாயக்கனூரிலிருந்து தோப்பிற்குச் செல்லும் 33 கல் தொலைவை மாட்டு வண்டியிலேயே கடந்து செல்ல வேண்டி யிருந்தது. தோப்பிலிருந்து புறப்பட்டுக் குதிரையில் ஏறியோ, நடந்தோ, செண்பகனூர் வழியாக மலையுச்சியை யடைய வேண்டும். நடந்து செல்ல முடியாதவர்களை, பழனிமலைப் புலையர்கள் திறந்த பல்லக்குப் (Canvas Chair) போன்ற இருக்கையில் அமர்த்தித் தூக்கிச் செல்வர். செல்லும்போது அவர்கள் தங்கள் மொழியில் உரக்கப் பாடிக்கொண்டே. வழி நடைப் பயணத்தை மறந்து செல்வர்.

உதகமண்டலத்திலிருப்பதைப் போன்றே கோடைக் கானலிலும் தட்ப வெப்ப நிலை உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் அமைந்துள்ளது. ஆனால் உதகையில் பெய்வதைவிட இங்கு மழை அதிகம். ஆண்டுக்கு ஏறக்குறைய 100 அங்குலம் மழை பொழிகிறது. உதகை தென்மேற்குப் பருவக் காற்றினால் ஜூன், ஜூலை, ஆகஸ்டுத் திங்கள்களில் மழையைப் பெறுகிறது. ஆனால் கோடைக்கானல் வட கிழக்குப் பருவக் காற்றினால் மழையைப் பெறுகிறது. மே, ஜூன் திங்கள்களில் பார்வையாளர்கள் (Visitors) இங்கு நிறையக் கூடுகின்றனர். அப்போது மழை பெய்து அவர்களுக்குத் தொல்லை கொடுப்பதில்லை. ஆனால் அதே சமயத்தில் உதகை சென்றால் நாள் தோறும் மழையினால் அவதிப்பட நேரிடும். கசிவும், வெப்ப நிலை வீழ்ச்சியும் உதகையிலிருப்பதைப் போல் அவ்வளவு அதிகமாக இங்கு இருப்பதில்லை. குளிர் காலத்தில்கூட இங்குக் குளிரின் கடுமை மிகவும் அதிகமில்லை என்றே சொல்லலாம். இங்குள்ள நிலம் மணலும் கல்லும் கலந்ததாக இருக்கிறது. அதனால் இங்குள்ள பாதைகளும், மட்டைப் பந்தாட்ட மைதானங்களும், மழை பெய்த சிறிது நேரத்தில் உலர்ந்து விடுகின்றன. கோடைக்கானலுக்கு மேற்கில் அடுத்தடுத்து அமைந்துள்ள செங்குத்தான மலைத் தொடர்கள், அவைகட்கப்பாலுள்ள அடர்ந்த காடுகளை மறைத்து நிற்கின்றன. இக் காடுகளுக்குள் எளிதாக யாரும் செல்ல முடியாது. இக் காடுகளிலும், கோடைக்கானலுக் கருகிலுள்ள காடுகளிலும் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட கற் கருவிகளும், சமாதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பெருமாள் சிகரத்திற்குத் தென்மேற்குப் பகுதியிலுள்ள காடுகளிலும் (வில்பட்டி செல்லும் பாதையில்) பாலமலையிலும் இவைகள் மிகுதியாகக் கிடைத்துள்ளன. கீழ்ப் பழனி மலையில் மச்சூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி, காமனூர், பாச்சலூர் முதலிய இடங்களிலும் இவைகள் நிறையத் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். இச் சின்னங்களைப் போல் இந்திய நாட்டின் வேறு எப் பகுதியிலும் கிடைக்கவில்லை. இச் சமாதிகள் பெரும்பாலும் 8 அடி நீளமும் 3 அடி அகலமும் உடையனவாய் சொரசொரப்பான கற்களால் பெட்டி போல் செய்யப்பட்டிருக்கின்றன. ஒரு பக்கம் திறந்திருக்கிறது. துருப் பிடித்த அரிவாள் ஒன்றும், செந்நிற, கருநிற மட்பாண்டங்களும் கிடைத்துள்ளன. கோடைக்கானலைச் சுற்றிக் காணத் தகுந்த பல இடங்கள் உள்ளன. நகரைச் சுற்றி அமைந்துள்ள மூன்று நீர் வீழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை ; கண்கவரும் வனப்புடையவை. இவைகளை யடைதற்கு நல்ல வழிகளும் அமைந்துள்ளன. லா மலைத் தொடரில் (Law's ghat) வெள்ளி வீழ்ச்சி (Silver 'cascade) அமைந்துள்ளது. இது பரப்பாறு என்னும் அருவியால் உண்டாகிறது. கிளென் வீழ்ச்சி (Glan falls) யானது வில்பட்டிக்கு வடக்கில் செல்லும் சிறு பாதையருகில் அமைந்துள்ளது. இதுவும் பரப்பாற்றின் ஒரு பிரிவினாலேயே உண்டாக்கப்படுகிறது. கோடைக்கானலின் தென்மேற்கில் பாம்பாற்றினால் மோகினி வீழ்ச்சி (Fairy Falls) உண்டாக்கப்படுகிறது. கோக்கர்ஸ் நடைவெளி (Coaker's walk) யானது, கோடைக் கானலின் எல்லையில், பழனி மலையின் தென்பக்கச் சரிவின் உச்சியில் அமைந்துள்ளது. (லெஃப்டினெண்ட் கோக்கர் என்பவர் ஓர் சிறந்த பொறியியல் வல்லுநர். இவர் கி. பி. 1870 முதல் 1872 வரை மதுரை மாவட்டத்தில் பணியாற்றி வந்தார். கி. பி. 1870-ஆம் ஆண்டு கோடைக்கானலின் படத்தை (Map) வரைந்து வெளி யிட்டவர் இவரே). இந் நடை வெளியிலிருந்து காண் போருக்குச் சமவெளியில் அமைந்துள்ள ஊர்கள் அழகோடு காட்சியளிக்கின்றன. வானம் நிர்மலமாக இருக்கும் நாட்களில் 47 கல் தொலைவில் அமைந்துள்ள மதுரை நகரம் கூடத் தென்படுவதாகக் கூறுகிறார்கள், அத் தென்பக்கப் பீட பூமியிலேயே, கோக்கர் நடை வெளியிலிருந்து 3 கல் சென்றால் தூண் பாறைகளைக் காணலாம். மூன்று உயரமான பருத்த பாறைகள் பெரும் பெரும் தூண்களைப்போல் உயர்ந்து நிற்கின்றன. இவைகளின் உயரம் ஏறக்குறைய 400 அடி இருக்கும். இவற்றின் நடுவிலும் அடியிலும் பல குகைகளும், பிளவுகளும் அமைந்துள்ளன. இப் பாறைகளின் உச்சியிலிருந்து காண்போருக்கு அதிகமலையின் அழகிய காட்சிகளும், கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து உயர்ந்து செல்லும் செங்குத்துச் சரிவுகளும், சம வெளியும் நன்கு தெரியும்.

தூண் பாறைகளிலிருந்து இரண்டு கல் தொலைவில் டாக்டர்ஸ் டிலைட் {Doctor's Delight) என்ற உயர்ந்த மேடு ஒன்று உள்ளது. இது தூண் பாறைகளைவிட மிகுந்த பேரழகோடு விளங்குகின்றது. கோடைக் கானலிலிருந்து 9½ கல் தொலைவில் 'ஹேமில்டன் கோட்டை ' (Fort Hamilton} உள்ளது. மேஜர் டக்ளஸ் ஹேமில்டன் என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. சென்னை மாநிலத் தலைவராக விளங்கிய சர் சார்லஸ் டிரெவெல்யான் என்பவரின் ஆணையின்படி இவர் கி. பி. 1859, 1861; 1862 ஆகிய ஆண்டுகளில் பழனி மலையில் தங்கி, அதன் நிலப்படத்தை வரைந்தார். அப்படம் விளக்கமாகவும், பெரிதாகவும் உள்ளது. பொது நூலகங்களிலும், அலுவலகங்களிலும் இப் படம் தொங்கிக் கொண்டிருக்கின்றது. பழனி மலையைப் பற்றி அவர் எழுதிய இரண்டு குறிப்புகள் குறிப்பிடத்தக்கவை. அவை முறையே கி. பி. 1862-ஆம் ஆண்டிலும் கி. பி. 1864-ஆம் ஆண்டிலும் சென்னையில் அச்சியற்றி வெளியிடப்பட்டன. ஹேமில்டன் கோட்டை என்று குறிப்பிடப்படும் இடத்தில் கோட்டை எதுவுமில்லை. ஒரே ஒரு குடிசைதான் உள்ளது. அவ்விடம் முதலில் ஒரு பெரிய ஏரியாக இருந்தது என்ற சுவையான உண்மையைத் திருவாளர் ஹேமில்டன் முதன் முதலாகக் கண்டு வெளியிட்டார். இவ்வேரியைப் பற்றிய முன் குறிப்புக்களோ, செவி வழிச் செய்திகளோ கூடக் கிடையாது. நீர் மட்டம் இருந்த அடையாளங்கள் இன்றும் காணப்படுகின்றன. அவ்வடையாளங்களை வைத்துக்கொண்டே அவ்விடத்தில் ஓர் ஏரி இருந்திருக்க வேண்டுமென்று அவர் முடிவு கட்டினார். அவ்வேரி ஏறக்குறைய 5 கல் நீளமும், 1 கல் முதல் 2 கல் வரை அகலமும், 30 அடி முதல் 70 அடி வரை ஆழமும் உடையதாக இருந்திருக்க வேண்டும் என்று கணக்கிட்டிருக்கிறார். ஒரு பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டு படிந்திருந்த மலைத் தொடர், இயற்கையாக இவ்வேரி அமைவதற்குக் காரணமாக இருந்தது. இத் தொடர் வடக்கு நோக்கி அமராவதி ஆறுவரை செல்லுகிறது. இவ் வேரியில் விழுந்த ஓர் அருவியைத் தடுத்து நீரை இத் தொடர் தேக்கி வந்தது. ஆனால், திடீரென்று அணைபோல் இருந்த அத் தொடர் பிளவுபட்ட காரணத்தால் ஏரியில் நீர் தேங்குவதில்லை. அணைபோல் தடுத்திருந்த அத் தொடர் 200 கெஜ நீளம் உள்ளது. அதில் ஏற்பட்டிருக்கும் பிளவு 100 கெஜ அகலமும் 90 அடி ஆழமும் உள்ளது. மேஜர் ஹேமில்டன், 'இவ்விடம் ஓர் அழகிய குறிஞ்சி நகரமோ , படையினரின் பாடியோ (Contonement) அமைப்பதற்கு மிகவும் ஏற்றது' எனக் குறிப்பிட்டார். ஆனால் இவ்விடம் சென்றடைதற்கரியது என்று பலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். கோடைக்கானலானது, தற்போது அமைந்திருக்கும் இடத்தில் முதன் முதல் கட்டப்பட்ட போது, 'இயற்கை அழகுமிக்க எவ்வளவோ இடங்கள் பழனி மலை மீது இருக்க இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்தது அறியாமை' என்று பலர் குற்றம் சாட்டினர். அவர்களுக்கும் இதே காரணத்தைத்தான் கூற வேண்டும். பெரிய குளத்திலிருந்து பழனி மலையின் உச்சியை அடையப் புழக்கத்திலிருந்த குதிரைப் பாதைக்கு அண்மையிலேயே, இந் நகரை அமைத்தனர். காரணம் போக்கு வரவு வசதியே.

பழனி மலையை முதன் முதலில் பார்வையிட்ட ஐரோப்பியர் லெஃப்டினண்ட் பி. எஸ். வார்டு என்பவர். இவர் கி. பி. 1821-ஆம் ஆண்டு இம் மலையை அளப்பதற்காக இங்கு வந்தார். பெரிய குளத்திலிருந்து செல்லும் பாதையில் புறப்பட்டு, வெள்ளக்கவி என்னும் சிற்றூர் வழியாக மலையுச்சியை அடைந்து அவ்வாண்டு மே திங்கள் 25-ஆம் நாள் பாம்பாறு வீழ்ச்சிக்குச் சற்று மேலே தங்கியிருந்தார் என அவர் குறிப்பால் அறியப்படுகிறது. அக் குறிப்பில் பழனி மலையை ‘வராககிரி' என்றும் திருவாங்கூர் மலைகளைக் 'கண்ணன் தேவன் மலைகள்' என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

- கி. பி. 1834-ஆம் ஆண்டு, மதுரை மாவட்டத் துணைத் தண்டலராக இருந்த ஜெ. சி. ராட்டன் என்பாரும், தென்மண்டல நடுவராக (Judge of the Provincial court, Southern Division) இருந்த சி, ஆர். காட்டன் என்பாரும் பெரிய குளத்திலிருந்து புறப்பட்டுச் செண்பகனூரை வந்தடைந்தனர். அவர்கள் வரவால் சீர் கேடுற்றிருந்த அக்குதிரைப் பாதை சீர்திருத்தம் பெற்றது. கி. பி. 1836-ஆம் ஆண்டு திருவாளர் வைட் என்பவர் தேவதானப் பட்டியிலிருந்து அடுக்கம் சிகரத்திற்கு அண்மையிலுள்ள கணவாயை நோக்கிச் செல்லும் செங்குத்தான கணவாய் மூலம் மலையுச்சியை அடைந்தார். அவர் இப்போது கோடைக்கானல் அமைந்துள்ள தாழ்நிலத்திற்குச் செல்லவில்லை. அவர் பழனிமலையில் உள்ள தாவரங்களைப் பற்றி வெளியிட்டுள்ள குறிப்புக்கள் குறிப்பிடத் தக்கவை.

கோடைக்கானலில் முதன் முதலாகத் தங்குவதற்கு மாளிகையைக் கட்டியவர்கள், மதுரையில் வாழ்ந்த அமெரிக்கப் பாதிரிமார்களே (American missionaries). நம் நாட்டின் தட்ப வெப்பநிலை அவர்களுக்கு ஒத்துவராமையால் பலர் நோய்வாய்ப்பட்டனர். ஆகையினால் அவர்களுடைய கேந்திரமான 'ஜஃப்னா'விற்கு நோயுற்றவர்களைக் கொண்டு செல்லவும், நோயிலிருந்து மீண்டு குணமடைந்தவர்களை அழைத்துவரவும் கி. பி. 1838ஆம் ஆண்டு ஒரு சிறு கப்பலே விலைக்கு வாங்க முடிவு செய்தனர். மதுரைக்கு அண்மையிலுள்ள சிறு மலையின் மீது ஒரு மாளிகையை அமைத்து நோயுற்றவர்களை அங்குக் கொண்டு செல்ல முடிவு செய்ததால், அத் திட்டம் கைவிடப்பட்டது. சிறு மலையின்மீது கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் அங்குச் சென்றவர்கள் மலைக் காய்ச்சலினால் அடிக்கடி அவதிப்பட்டனர். ஆகையினால் அவ்விடத்தைக் கைவிட்டு விட்டுப் பழனி மலையின் மீது கி. பி. 1845-ஆம் ஆண்டு ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்தனர். கோடைக்கானல் என்னும் இள மரக்காடு - அமைந்திருந்த சரிவின் அடிவாரத்தில் இரண்டு கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. கட்டிட வேலை ஜூன் திங்களில் தொடங்கப் பெற்று அக்டோபரில் முடிவுற்றது.

கி. பி. 1834 முதல் 1847 வரை மதுரை மாவட்டத் தண்டலராகப் பணியாற்றிய திருவாளர் ஜான் பிளேக்பர்ன் என்பவர் பழனி மலையின் மீது நிலவரித் திட்டத்தை அமுலாக்கப் பெரு முயற்சி எடுத்துக் கொண்டார். அடுக்கம் கணவாயின் உச்சியிலிருந்து 5 கல் தொலைவில், தாம் தங்குவதற்கென்று ஒரு மாளிகையை அமைத்தார். ஆனால், முதன் முதலாக அம் மாளிகையில் நெருப்பு மூட்டியபோது, அது பற்றி எரிந்து பாழாகியது. அதனுடைய அடிப்படைச் (அஸ்தி வாரம்) சுவரை இன்றும் காணலாம். கி.பி. 1848-49-இல் மதுரை மாவட்டத் துணைத் தண்டலராக இருந்த திருவாளர் தாமஸ் கிளார் (இவர் 1853-ஆம் ஆண்டு மேத் திங்களில், பழனி மலையைப் பற்றி வெளியிட்ட நூல் குறிப்பிடத் தக்கது) என்பாரும், மாவட்ட நடுவராக இருந்த திருவாளர் சி. ஆர். பேன்ஸ் என்பாரும், தண்டலராக இருந்த திருவாளர் ஆர். டி. பார்க்கர் என்பாரும், கோடைக்கானலின் உச்சியில், சமவெளிகளைப் பார்த்தாற் போன்று கோடைக் காலக் குளிர்மனைகளை எழுப்பினர். இப்போது உள்ள ‘பாம்பாறு மனை' (Pambar House) க்கும், 'ரோசனீத்' (Roseneath) திற்கும் இடைப்பட்ட இடத்திலேயே அவைகள் கட்டப்பட்டன. அலுவலகக் குறிப்புகளில் காணப்படும் மனை அமைப்பு (House plans) களை வைத்துக்கொண்டு பார்த்தால், திருவாளர் பார்க்கர் அமைத்த மனை, இப்பொழுது பாம்பாறு மனை அமைந்திருக்கும் இடத்திலேயே இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. திருவாளர் பேன்ஸ் கட்டிய மனை பாம்பாறு மனைக்கு அடுத்தாற் போல், கிழக்கில் அமைந்துள்ளது. இப்போது அது ரோமன் கத்தோலிக்க சமயத்தாருக்கு உரிமையுடையதாக உள்ளது. திருவாளர் கிளார்க் கட்டிய மனை இப்போதுள்ள 'ரோசனீத் 'தின் ஒரு பகுதியாகும்.

•ரோசனீத்' என்ற இக் கட்டிடம், மற்றவைகளை விட வரலாற்றுச் சிறப்புப் பெற்றது என்று கூறலாம். திராவிட மொழிகளை ஆராய்ந்து, ஒப்புயர்வற்ற ஒப்பிலக்கணத்தை (Comparative grammar) எழுதிய கால்டுவெல் பாதிரியார் இம் மனையில் தான் வாழ்ந்தார். அவர் எழுதிய ஒப்பிலக்கணம் திராவிட மொழியாராய்ச்சித் துறைக்கு வழி வகுத்ததோடல்லாமல், தமிழ் மொழி ஆரியத்தினின்றும் முற்றிலும் வேறுபட்ட உயர்தனிச் செம்மொழி என்ற உண்மையையும் உலகிற்கு உணர்த்தியது. கால்டுவெல் பாதிரியார் தம் இறுதி நாட்களை இம் மனையிலேயே கழித்து இயற்கை எய்தினார். கேப்டன் டபிள்யூ. எச். ஆர்ஸ்ஸி என்ற ஒரு பொறியியல் வல்லுநர், பேன்ஸ், கிளார்க் ஆகிய இருவரின் மனைகளுக்கிடையே ஒரு கட்டிடத்தை எழுப்பினார். அடுத்தாற்போல் அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த பாதிரிமார் தங்களுக்கென ஒரு மனையை அமைத்தனர். அது இப்பொழுது 'கிளவரக்' என்று அழைக்கப்படுகிறது. பம்பாய்ப் பட்டாளத்தைச் சேர்ந்த மேஜர் ஜே. எம். பார்ட்ரிட்ஜ் என்பவர் கி. பி. 1852ஆம் ஆண்டு இங்கு வந்து கூடாரமடித்து ஏரிக்கருகில் தங்கினார். குளிரின் கொடுமையையும், புயலின் வேகத்தையும் தாள முடியாத அவர் ஒரு சிறு மனையை அமைத்துத் தங்கினார். அவ்விடம் இப்போது 'பம்பாய் ஷோலா' (Bombay Shola) என்று அழைக்கப்படுகிறது. அவருக்கு உரிமையான தோட்டம் ஒன்றும் அங்கு இருந்தது. முதன் முதலாகப் பழனி மலையில் நீலப் பிசின் மரம் என்ற ஆஸ்திரேலிய மர வகையை நட்டுப் பயிரிட்டவர் இவரே. இவர் வீட்டின் முன்னால் இருந்த இரண்டு நீலப் பிசின் மரங்களில் ஒன்று இன்றும் உள்ளது. அப் பகுதியில் மிகவும் பெரிய மரம் அதுதான். கோடைக்கானல் வாசிகளுக்குப் பயன்படும் வகையில் முதன் முதலாக இசைக் கலைஞர்களைக் குடியேற்ற முயன்றவரும் இவரே. இவர் வீட்டிற்கருகில் ஒரு கடையும் இருந்ததாகக் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது.

மேற்கூறிய எழுவருமே கோடைக்கானலின் முன்னோடிகள் (Pioneers) என்று கூறலாம். கி. பி. 1853-இல் இவர்களுக்குரிமையான ஏழுமனைகளே கோடைக்கானலிலிருந்தன. கி. பி. 1861-ஆம் ஆண்டு, மேலும் மூன்று வீடுகள் கட்டப்பட்டன. கி. பி. 1854. ஆம் ஆண்டு உச்சிக்குச் செல்லும் குதிரைப் பாதையைச் செப்பனிட ரூ 4,500 செலவிடப்பட்டது. கோடைக் கானலில் வாழ்ந்த கிருத்தவப் பாதிரிகள் ஒரு கல் நீளமுள்ள பாதையொன்றை நகரில் அமைத்தனர். மேலும் 6 கல் நீளமுள்ள பாதை அங்கு வாழ்வோரால் அமைக்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டு சென்னை மாநில ஆளுநராக இருந்த சர் சார்லஸ் டிரிவெல்யான் என்பவர் தோப்பிலிருந்து புறப்பட்டுக் குதிரைப் பாதையின் வழியாகப் பழனிமலையுச்சியை அடைந்து, கோடைக்கானலைப் பார்வை யிட்டார். (இவர் வருகையிலிருந்தே இந்நகர், அரசியற் குறிப்பேடுகளில் கோடைக்கானல் என்று குறிப்பிடப்படுகிறது) பழனி மலையைப்பற்றி அவர் கொண்ட கருத்துக்களை அழகிய ஒரு குறிப்பு நூலாக எழுதியுள்ளார். திருவாளர் கிளார்க்கிற்கு உரிமையாக இருந்த ரோசனீத், மனையிலேயே இவர் தங்கி யிருந்தார். கி. பி. 1871-ஆம் ஆண்டு திருவாளர் நேப்பியர் பிரபு இங்கு வந்திருந்தார். இப்பொழுது கோடைக் கானலில் 'நேப்பியர் வில்லா' என்ற ஒரு மனை உள்ளது. நேப்பியர் பிரபு அவ்விடத்தில் சிறிது நேரம் நின்று சென்றதால், அம்மனை அப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள்.

கி. பி. 1860-ஆம் ஆண்டு திருவாளர் வெர்ஹென்றிலிவெஞ் மதுரை மாவட்டத் தண்டலராக அமர்த்தப்பட்டார். 1867 வரை அப்பணியில் இருந்து விட்டு, ஓய்வு பெற்றவராகக் கோடைக்கானலில் குடிப்புகுந்தார். கி. பி. 1885-ஆம் ஆண்டு சென்னையில் உயிர் நீத்தார். இறப்பதற்குச் சிலவாரங்கள் முன் வரையில் கோடைக்கானலிலுள்ள 'பாம்பாறு மனை' யிலேயே வாழ்ந்து வந்தார். கோடைக்கானலில் அவர் வாழத் தொடங்கியதும், ஆங்கில அரசியலாரால் பிரபு நிலை (Baronetcy) க்கு உயர்த்தப்பட்டார். அவர் மாவட்டத் தண்டலராக இருந்த போதும், ஓய்வுபெற்று இங்குத் தங்கிய போதும், கோடைக்கானலின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் உழைத்தார். கோக்கர் நடை வெளிக்குச் சற்றுமேல் அவருடைய சமாதி அமைந்துள்ளது. அதில் நாட்டப்பட்டுள்ள சிலுவையில் 'கோடைக்கானலின் முன்னேற்றத்தின் பெரும் பகுதி இவரையே சாரும்' என்று எழுதப்பட்டுள்ளது. முதலிலேயே குறிப்பிட்டது போல், கோடைக்கானல் ஏரி இவரது முழு முயற்சியாலும், கைப்பொருளாலும் அமைக்கப்பட்டது. பெரிய குளத்திலிருந்து வரும் குதிரைப்பாதையை, பீடபூமியின் தெற்கு எல்லையிலுள்ள பாம்படி ஷோலா (Pambadi Shola) வரை அமைத்தார். நகரினுள்ளும் பல பாதைகளை அமைத்தார். ஐரோப்பியப் பழவகைகளையும் பூவகைகளையும் பழனிமலையின் மீது பயிரிடுவதற்குப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டவரும் இவரே.

கி. பி. 1853-ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்தவர்கள் 'சன்னிசைட்' (Sunny Side) என்ற இடத்திற்கருகில் தங்களுக்குரிமையான நிலத்தில் ஒரு கோவில் கட்டத் தொடங்கினர். அது 1856-ஆம் ஆண்டு முடிவுற்றது. ஆங்கிலிகன் மிஷனைச் சார்ந்தோரும் அக்கோவிலிலேயே வழிபாடு நிகழ்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அக்கோவிலைச் சுற்றி ஓர் இடுகாடு அமைக்கப்பட்டது. (இப்போது அது மூடப்பட்டு விட்டது) முதன் முதலாக அவ்விடுகாட்டில் அமைக்கப்பட்ட சமாதி இரு குழந்தைகளினுடையது. அக்குழந்தைகள் கி. பி. 1819-ஆம் ஆண்டு இறந்தன; நகருக்குச் சிறிது தொலைவிலுள்ள நேபோமலை {Mount Nebo) யில் புதைக்கப்பட்டன. அவைகள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, இங்குக் கொண்டு வந்து புதைக்கப்பட்டன. கி. பி. 1896-ஆம் ஆண்டு இக் கோவில் கோடைக்கானல் கழக (club) த்திற்கு அண்மையில் புதிதாகக் கட்டப்பட்ட இடத்திற்கு மாற்றப்பட்டது. பிறகு பழைய கோவில் அழிவுற்றது. கி. பி. 1863-ஆம் ஆண்டு செயிண்ட் சைர், கோடைக்கானலுக்கு வந்தார். கத்தோலிக்கரில் முதன் முதலாக வந்த பாதிரியார் இவரே. இவர் திருவாளர் பேன்ஸின் மனையை விலைக்கு வாங்கினார் ; இப்போது கோடைக்கானலிலிருக்கும் ரோமன் கத்தோலிக்கக் கோவிலுக்குக் கால்கோளிட்டார். ஆங்கிலிகன் திருச்சபைக் கோவிலை அமைப்பதற்காக நேபோ மலையில் கால்டுவெல் பாதிரியாரின் பெயருக்குக் கி. பி. 1883ஆம் ஆண்டு அரசியலாரால் நிலம் வழங்கப்பட்டது. அதே ஆண்டில் கோடைக்கானல் வட்டத் தலைவ (Tahsildar) ரின் அலுவலகம் அமைப்பதற்கு அரசியலாரிடமிருந்து அனுமதியும் கிடைத்தது. செண்பகனூரிலிருந்து செல்லும் மலைவழிப் பாதைக் கருகில் ஐரோப்பியருக்குரிய இடுகாடு ஒன்று அமைந்துள்ளது. கோடைக்கானலுக்குள் நுழைந்ததும் இது நம் கண்களில் படும். இது கி. பி. 1900-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஒவ்வொரு சமயத்தார்க்கும் தனித் தனிப் பிரிவு இதில் உண்டு.

கோடைக்கானல், முன்னாளில் வில்பட்டியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. கி. பி. 1899-ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் இங்கு நகராட்சி மன்றம் (Municipality) நிறுவப்பட்டது. சென்னை மாநிலத்திலேயே மிகவும் சிறிய நகராட்சி மன்றம் இதுதான். மிகக் குறைந்த எண்ணிக்கையுள்ள மக்களே இங்கு வாழ்கின்றனர். முதன் முதலாக இந்நகராட்சி மன்றத்தில் 12 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் யாரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்லர். முன்பெல்லாம், இந்நகரில் வாழ்வோருக்குத் தேவையான குடிநீர், கிணறுகளிலிருந்தும், அருவிகளிலிருந்தும் பெறப்பட்டது. கி. பி. 1902-ஆம் ஆண்டு குடிநீர் வசதிக்கான திட்டம் ஒன்று வகுக்கப்பட்டது. அத்திட்டத்தின்படி பாம்பாற்றில், மோகினி வீழ்ச்சிக்குமேல் 370 கெஜ தூரத்தில் ஓர் அணைகட்டி நீரைத் தேக்கி, குழாய்களின் மூலம் அந் நீரை நகரின் எல்லாப் பகுதிகளுக்கும் வழங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ 43,000 செலவிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டது. பிறகு, இந் நீர்த்தேக்கம் சுண்ணாம்புக் கலவையால் உறுதியாகக் கட்டப்பட வேண்டு மென்று முடிவு செய்யப்பட்டதால் இத்திட்டத்தின் செலவு ரூ 62,250 க்கு உயர்த்தப் பட்டது. நகராட்சி மன்றம் பூராச் செலவையும் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், அரசியலாரின் உதவியை நாடவேண்டிய தாயிற்று.

ஃபிஷர் சீமாட்டியின் இருக்கை :

திருவாளர் ஃபிஷர் என்ற ஒரு வெள்ளையர் மதுரையில் அலுவலில் இருந்தார். செண்பகனூரில் அவருக்குச் சொந்தமான மாளிகை ஒன்றிருந்தது. அதில் தம் மனைவியை விட்டுவிட்டு மதுரைக்குச் சென்று விடுவார். ஓய்வு நாட்களில் செண்பகனூர் திரும்புவார். பழனி மலையின்மீது வரும் குதிரைப் பாதையின் உச்சியில் அமைந்துள்ள வளைவில், அழகிய சிறிய ஒரு கோடைமனை அமைத்தார். தனிமை வருத்தும் போது, ஃபிஷர் சீமாட்டி அவ்வளைவில் அமர்ந்துகொண்டு மதுரை நகர் அமைந்துள்ள திக்கைப் பார்த்த வண்ணம் இருப்பாராம், குறிப்பிட்ட நாட்களில் தம் கணவர் குதிரை ஊர்ந்து மலைவழிப் பாதையில் ஏறிவரும் காட்சியை அங்கிருந்து கண்டு களிப்பதுண்டாம். அதனால் அவ்விடம் இன்றும் ஃபிஷர் சீமாட்டியின் இருக்கை (Lady Fischer's seat) என்று எல்லோராலும் அழைக்கப் படுகிறது. 'வன போசனம்' உண்பதற்கு இது மிகவும் ஏற்ற இடமாக எல்லோராலும் இப்பொழுது கருதப்படுகிறது.

வானாய்வுக்கூடம் :

கோடைக்கானலில் அமைந்துள்ள வானாய்வுக் கூடம் சென்னை மாநிலத்திலேயே மிகவும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். இது கோடைக்கானலுக்கு இரண்டு கல் தொலைவில், பூம்பாறைக்குச் செல்லும் பாதைக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிகரத்தின்மேல் நிறுவப்பட்டுள்ளது. கி. பி. 1899-ஆம் ஆண்டு இந்திய நாட்டின் வான ஆராய்ச்சிக் கூடங்கள் திருத்தியமைக்கப்பட்டபொழுது, சென்னையிலிருந்த வானாய்வுக் கூடம் இங்கு மாற்றப்பட்டது. உதகமண்டலத்திலும், கோதகிரியிலும் வான ஆராய்ச்சிக் கூடங்கள் நிறுவ முயற்சிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்விடங்களைவிடக் கோடைக்கானலே வான ஆராய்ச்சிக்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்யப்பட்டது. இவ்விடத்தின் பொருத்தமான தட்ப வெப்ப நிலையும், மப்பு மந்தாரமற்ற தெளிந்த வானமும் இவ்வாராய்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கோடைக்கானலில் ஒரு வீழ்கொள்ளி (Meteorite) திருவாளர் லோகன் என்பாரின் தோட்டக்காரனால் தோண்டி எடுக்கப்பட்டது. நில ஆராய்ச்சித் துறையினர், இந்தியாவில் காணப்படும் இரண்டாவது இரும்பு வீழ் கொள்ளி இதுவே என்று கூறுகின்றனர். இதன் நிறை 35 ராத்தல். இது இப்போது கல்கத்தா பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ் வீழ்கொள்ளி வான ஆராய்ச்சியாளரின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்ததால், 105 ஆண்டுகளாகச் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த சென்னை வானாய்வுக் கூடம் கோடைக்கானலுக்கு மாற்றப்பட்டது. முதன் முதலில் கிளென் வீழ்ச்சிக்கருகில் தற்காலிகமாக இக்கூடம் நிறுவப்பட்டது. மிகவும் உயர்ந்துள்ள, கோடைக்கானலுக்கு அருகில் அமைந்திருக்கும் தற்போதைய இடத்திற்குப் பிறகு இது மாற்றப்பட்டது.

தற்போதுள்ள வானாய்வுக்கூடம் திருவாளர் ஆர். எஃப், ஸ்டோனி என்ற ஒரு சிறந்த பொறியியல் வல்லுநரால் கட்டி முடிக்கப்பட்டது. சென்னைமாநில ஆளுநராக இருந்த திருவாளர் வென்லாக் என்பவர் தாம் கி. பி. 1895-ஆம் ஆண்டு இக்கட்டிடத்திற்குக் கல் நாட்டினார். குதிரைப் பாதையின் வழியாகவே குதிரையூர்ந்து அவரும் கோடைக்கானலுக்கு வந்தார். இதை நல்ல வாய்ப்பாகக் கொண்ட கோடைக்கானல் மக்கள் இக்குறிஞ்சி நகரை இருப்புப்பாதை மூலமாகவோ, வண்டிப்பாதை மூலமாகவோ இணைக்க வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார். வென்லாக் அவர்கள் இங்கு வந்தபோது, மழைக்கால இரவில் இரட்டை வண்டியில் பயணம் செய்தும், குதிரைப்பாதையில் நடந்தும், புரவியூர்ந்தும் மிகவும் தொல்லைகளுக்குள்ளாகிக் கோடைக் கானலையடைந்தார். கோடைக்கானலுக்கு ஒரு நல்ல பாதை அவசியம் என்பதை அவரும் உணர்ந்திருக்க வேண்டும்.

சர் ஆர்தர் ஹாவ்லாக் என்பவர் 1899-ஆம் ஆண்டு வானாய்வுக்கூடத்தைப் பார்வையிட்டார். சென்னைக் கிருத்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவரும், சென்னை அரசியலாரின் வான ஆராய்ச்சித்துறைத் தலைவராக இருந்தவருமான திருவாளர் மிச்சி ஸ்மித் என்பவர் கோடைக்கானல் வானாய்வுக் கூடத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டு சிறிதுகாலம் பணி செய்தார். அவர் அலுவலிலிருந்து ஓய்வு பெற்றதும், திருவாளர் ஜே. எவர்செட் என்பவர் பொறுப்பேற்றார். எவர்செட் அவர்களின் மனைவியாரும் வான ஆராய்ச்சிக் கலையில் நல்ல புலமை பெற்றவர், அவ்வம்மையார் 'தென்மண்டல விண்மீன்களின் வழி காட்டி' (Guide to the Southern Stars) என்ற ஒரு நூலை எழுதிப் பதிப்பித்தார்.

கி. பி. 1910-ஆம் ஆண்டு திருவாளர் கேனான் மீச்சி என்பாரும் அவர் மனைவியாரும், திருநெல்வேலிக் குடியேற்றத்திலிருந்து தங்கள் இல்லத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வானத்தில் ஒரு பெரிய வால்மீனைக் (Comet) கண்டார்கள். ஆங்கிலக் கழகத் (English Club) தினருகே நின்று அதைப் பற்றி, வான ஆராய்ச்சி வல்லுநரான மிச்சி ஸ்மித்தைக் கேட்டார்கள். அதைக் கண்ட மிச்சி ஸ்மித், அது ஒரு ஹாலி வால்மீன் (Halley's Comet) என்று கூறி விட்டு, 'ஜெருசலம்' என்ற தம் குதிரைமேல் தாவி ஏறி, வான ஆய்வுக்கூடத்திற்கு ஓடி, அதைப்பற்றி ஆராய்ந்தார். அதுபோன்ற வால்மீன் பல நூற்றாண்டு கட்கு ஒருமுறைதான் தென்படுமாம். கி. பி. 1910-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் வாழ்ந்த ஒருவர் தம் நண்பருக்கு எழுதிய கடிதத்தில், 'நான் கோக்கர் நடை வெளியில் அதிகாலை 4-40 மணிக்குச் சென்று கொண்டிருந்தபொழுது ஒரு வால்மீனை வானத்தில் கண்டேன். அதன் பேரழகு என்னை வியப்பில் ஆழ்த்தியது. அது போன்ற வால்மீனை நான் என்றும் கண்டதில்லை. அது அடிவானத்திலிருந்து நடுவானம் வரை நீண்டு பேரொளியோடு விளங்கியது' என்று குறிப்பிட்டார்.

திருவாளர் எவர் செட் ஒய்வ பெற்றகம். டாக்டர் டி. ராய்ட்ஸ் என்பவர் பொறுப்பேற்றார். 1936-ஆம் ஆண்டு ஜூலை 19-ஆம் நாள் ஏற்பட்ட 'பூரண சூரிய கிரகணத்தை ' (total eclipse of the sun)ப் பற்றி ஆராய்வதற்காக அவரும் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டார்.

கோடைக்கானலிலுள்ள இவ்வானாய்வுக் கூடம், 'இந்திய அரசியலாரின் வானக்கலை ஆய்வுக்கூடம்' (The Government of India Solar Physics Observatory) என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. இக் கூடம் சூரியனைப்பற்றி ஆராய்ந்தும், சுண்ண ஒளி (Calcium light) யையும், நீர்வாயு ஒளி (Hydrogen light) யையும் படம் பிடித்தும், பல உண்மைகளை வெளியிட்டு வானக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டு வருகிறது. மேலும் புவிக்கவர்ச்சி (Terrestrial magnetism) யைப் பற்றியும், அனிலோற்பன்னக் கலை (Meteorology) யைப் பற்றியும், பூகம்பவியல் (Seismology) பற்றியும் இது ஆராய்கிறது. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வில்சன்மலை (Mt. Wilson) மீது அமைந்துள்ள வானாய்வுக் கூடமும் ஃப்ரான்ஸ் நாட்டில் மியூடன் (Meudon) என்ற இடத்தில் அமைந்துள்ள வானாய்வுக்கூடமும் ஆற்றும் அத்தனை ஆராய்ச்சிகளையும் இது இங்கு ஆற்றுகிறது. மிகவும் புதுமையான வான ஆராய்ச்சிக் கருவிகளும், அனிலோற்பன்னக் கலையைப் பற்றி ஆராயும் கருவிகளும் இங்குப் பொருத்தப்பட்டுள்ளன. கி. பி. 1937-ஆம் ஆண்டு டாக்டர் ராய்ட் அலுவலிலிருந்து ஓய்வு பெற்றதும் டாக்டர் ஏ. எல். நாராயணன் இவ்வானாய்வுக் கூடத்தின் பொறுப்பை ஏற்றார்.

முதலிலேயே வான ஆய்வுக்கூடப் பொறுப்பாளரிடம் அனுமதி பெற்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய தொலைநோக்காடி (Telescope)யின் மூலம் வான மண்டலத்தில் திரியும் கோள்களையும் விண்மீன்களையும் காணலாம். வான மண்டலத்தின் தன்மையை அறிந்து இன்படைவதற்காக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையிலும் பொதுமக்கள் இவ்வானாய்வுக் கூடத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய நாட்டுக் கால அளவைப் (Indian Standard Time) பொதுமக்களுக்கு உணர்த்துவதற்காக நாள்தோறும் காலை பத்து மணிக்கு ஒரு கொடி இவ்வானாய்வுக் கூடத்தில் உயர்த்தப்படுகிறது. வான ஆராய்ச்சியின் மூலமாகவும், உலகத்தின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள வானாய்வுக் கூடங்களிலிருந்து வெளியாகும் ரேடியோ காலக் குறிப்புகளின் மூலமாகவும், இங்கு அமைந்துள்ள மணிப்பொறி சரியான கால அளவைக் காட்டி நிற்கிறது. பைன் மரங்களும், நீலப்பிசின் மரங்களும் கோடைக்கானலைச் சுற்றியுள்ள காடுகளில் உயர்ந்து வளர்ந்திருப்பதால் இங்கு ஏற்றப்படும் கொடி, எல்லா இடங்களுக்கும் தென்படுவதில்லை.

கல்விக் கூடங்கள்

புனித இதயக் கல்லூரி :

புனித இதயக் கல்லூரி (Sacred Heart Collage) கி. பி. 1895-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இதில் ஏறக்குறைய 2000 மாணவர்கள் பயின்று வெளியேறியிருக்கின்றனர். இந்திய மாணவர்களல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். இது கோடைக்கானலுக்குச் செல்லும் பாதையில், செண்பகனூரில் அமைந்துள்ளது. இது ரோமன் கத்தோலிக்கருக்கரிய சமயக் கல்லூரியாகும். இப்பள்ளி துவக்கப்பட்ட காலத்தில் பாதிக்குமேல் ஃப்ரெஞ்சு நாட்டு இளைஞர்கள் கல்வி பயின்றனர். உலகப் போர்களினால் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களின் தொகை குறைந்துவிட்டது. இக் கல்லூரி கட்டப்பட்டிருக்கும் இடம் கி. பி. 1878-ஆம் ஆண்டிலிருந்து பலதடவை சிறுசிறு பகுதிகளாக வாங்கப்பட்டது. ஒரு விவசாயப் பள்ளியையும், தொழிற்பள்ளியையும் நிறுவும் நோக்கத்தோடு இவ்விடம் வாங்கப்பட்டது. சின்கோனா மரங்களும் வேறு சில பயிர்களும் இங்கு முதலில் பயிரிடப்பட்டன. ஆனால் அவை நல்ல முறையில் விளையாத காரணத்தால் விவசாய, தொழில் கல்லூரிகள் நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டது. பிறகு இப்பொழுது உள்ள சமயக் கல்லூரி துவக்கப்பட்டது.

கோடைக்கானலில் வாழும் மக்களுக்கு இக் கல்லூரி மிகவும் அறிமுகமான ஒன்று. செண்பகனூரிலுள்ள யூகிலிப்டஸ் காட்டின் வழியாக வரும்போது, கண்கவரும் அழகிய தோட்டத்தின் நடுவே கலையழகுமிக்க இக்கல்லூரிக் கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்பதைக் கண்டு மகிழலாம். கோடைக்கானலுக்கு வரும் உந்து வண்டி, செண்பகனூர் அஞ்சல் நிலையத்திற்கு அருகில் நின்றால், அருகிலுள்ள இக்கல்லூரியின் வாயில் தென்படும். கோக்கர் நடைவெளியில் சென்றோமானால் இக்கல்லூரியின் மணியொலி நம் காதில் மோதும். கழுத்திலிருந்து கால்வரை நீண்ட ஆடை உடுத்துக் கொண்டு, இடுப்பில் செந்நிறப்பட்டை அணிந்து கொண்டு, கையில் புத்தகமோ, மாதிரிப்பெட்டியோ (Specimen-case) தாங்கிய வண்ணம் பாதிரி நடை வெளி (Priest's walk) யிலும், கோடைக்கானலின் இயற்கையழகு சொரியும் எல்லா இடங்களிலும் இம் மாணவர்களின் கூட்டத்தைக் காணலாம். அக் கல்லூரிக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. அவர்கள் கல்விமுறை, வேலைத் திட்டம் ஆகியவை பற்றி யாருக்கும் தெரியாது.

இடைக்கலையோ (Intermediate), அதைவிட உயர்ந்த கல்வியோ கற்ற மாணவர்களே இங்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கு எட்டாண்டுக்கல்வி எல்லாருக்கும் பயிற்றப்படுகின்றது. முதல் இரண்டாண்டு, சமயவாழ்வில் ஆழ்ந்த பற்றுக் கொள்ளும் வகையில் மாணவர்கள் பயிற்றப்படுகிறார்கள். பிறகு மூன்றாண்டுகள் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் அறிவு பெறுகிறார்கள். பல தாய்மொழிகளைப் பேசும் மாணவர்கள் இங்குக் கூடுவதால் பொதுவாக ஆங்கிலமும், இலத்தீனும் பேச்சு மொழியாகவும் கற்பிக்கும் மொழியாகவும் பயன்படுகின்றன. கடைசி மூன்றாண்டுகளும் தத்துவ ஆராய்ச்சியிலே கழிகின்றன, கிரேக்க ரோம நாட்டுப் பெரியார்கள் அருளிச் செய்த பழமையான தத்துவங்களும், இந்திய நாட்டுத் தத்துவங்களும், மேலை நாட்டுத் தத்துவங்களும் தெளிவாகக் கற்பிக்கப்படுகின்றன. கல்லூரியில் வரலாறு படித்தவர்கட்கு இங்கு அறிவியலும் (Science), அறிவியல் படித்தவர்கட்கு வரலாறும் கற்பிக்கப் படுகின்றன. இவ்வாறு எட்டாண்டுக் கல்வி முற்றுப் பெற்றதும், அம்மாணவர்கள் பூனாவிற்கோ, குர்சியாங்கிற்கோ செல்ல வேண்டும். அங்கு, நான்காண்டுச் சமயக் கல்வியும், பாதிரித் தொழிலுக்கேற்ற ஓராண்டுப் பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன, அஞ்சல் நிலையத்திற்கருகில் இக்கல்லூரியினால் நடத்தப்படும் பொருட்காட்சிசாலை ஒன்றுள்ளது. தோண்டி யெடுக்கப்பட்ட புதைபொருள்களும் பழனி மலையிலுள்ள தாவர வகைகளும், விலங்குகளும், பலவகையான பாம்புகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன. மண்ணில் மூழ்கிய புதைபொருள்களைத் தேடியெடுத்து ஆராய்வதில், இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் பேரூக்கும் காட்டினர்; காட்டிவருகின்றனர்.

ஹைகிளெர்க் பள்ளி :

பல ஆண்டுகள் திட்டமிடப்பட்டுக் கோடைக்கானலில் 'ஹைகிளெர்க் பள்ளி' கி. பி. 1901-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இப்பள்ளி துவக்கப்படுவதற்கு முன் 'ஹைகிளெர்க் பள்ளி' (Highclerc boarding School) என்ற ஒரு நிறுவனம் கோடைக்கானலில் இருந்தது. கோடைமாதங்களில் இங்குத் தங்க வரும் அமெரிக்க, ஆங்கிலேய மக்களின் குழந்தைகள் இப்பள்ளிவிடுதியில் தங்கிப் படித்தனர். அப்பொழுது இந்நிறுவனத்தைப் 'பாதிரிமாரின் குழந்தைகள் பயிலும் கோடைக் கானல் பள்ளி' (The Kodaikanal School for Missio naries children) என்றும், 'கோடைப்பள்ளி' என்றும், 'ஹைகிளெர்க், என்றும் அழைத்தனர். முதன் முதலாகப் பதின்மூன்று மாணவர்களே இப்பள்ளியில் சேர்ந்தனர். திருமதி எம். எல். எட்டி என்ற அமெரிக்க மாது, தன் மகனான ஷெர்வுட் எட்டியைக் காண இந்தியா வந்தார். கோடைக்கானல் மக்கள் அவரை இப்பள்ளியின் முதல்வராகப் பணி ஏற்குமாறு வேண்டினார்கள். அந்த அம்மையாரும், பொறுப்பேற்றார். தாய்மையுள்ளம் கொண்ட அவ்வம்மையார் மாணவர்களின் தேவையை யறிந்து அவர்கள் தங்கிப் படிப்புதற்காக, இராப்பள்ளிகளைப் போன்று இரண்டு சிறிய கட்டிடங்களைக் கட்டினார். அவை பெரிய, 'பள்ளி யறை', 'சிறிய பள்ளியறை' என்று அழைக்கப்பட்டன. அப்பள்ளியைச் சுற்றி ரோஜாப்பூத் தோட்டமும், பைன் மரக்காடும் பேரிக்காய்த் தோட்டமும் அமைக்கப்பட்டன.

கி. பி. 1902-ஆம் ஆண்டு இப்பள்ளி 'செண்ட்ரல் ஹவுசுக்கும் (Central House) ராக் காட்டேஜு (Rock cottage)க்கும் மாற்றப்பட்டது. அப்போது திருமதி எட்டி அமெரிக்கா சென்றிருந்தார்கள். மீண்டும் இந்தியா திரும்பியபோது, ரூ 10,000 திரட்டிக்கொண்டு வந்தார். அப்பணத்தைக் கொண்டு சந்தைவெளியில் அமைந்திருந்த ஹைகிளெர்க் பள்ளியை விலைக்கு வாங்கினார். கி.பி.1902 முதல் 1904 வரை இவ்விடம் குமாரி ஓர்ல்பார் என்பவரால் குடிக்கூலிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அவர் கொடைத்தன்மை மிக்கவர்; இந்தியாவில் பல இடங்களில் தங்கும் உணவுவிடுதிகளையும் (Boarding houses), கிருத்தவப் பாதிரிகளுக்கான தங்கல் மனைகளையும் நிறுவியவர். மீண்டும் இப் பள்ளி ஹைகிளெர்க்கிற்கு மாற்றப்பட்டது. உலகப்போர்கள் நடந்த சமயத்தில் பல நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் இங்குப் பணியாற்றினர். பொதுவாக அமெரிக்க ஆங்கில நாட்டுக் கல்விமுறைகள் இங்குக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. ஆனால், சில சமயங்களில் அமெரிக்க மாணவர்கள் மிகுந்திருந்த காரணத்தால் அமெரிக்க நாட்டுக் கல்வித்திட்டமே இப்பள்ளியிலும் மேற்கொள்ளப்பட்டது. ஆண் பெண் ஆகிய இரு பாலரும் இங்குக் கல்வி பயில்கின்றனர். கோடையில் தங்குவதற்காகக் கோடைக்கானல் வரும் பெற்றோர்களின், இளஞ்சிறுவர் சிறுமியர்களுக்கான 'கிண்டர் கார்டன் பள்ளி' ஒன்றும் ஆண்டுதோறும் மூன்று திங்கள்களுக்கு இங்கு நடத்தப்படுகிறது. அமெரிக்கன் மிஷனைச் சார்ந்த கிருத்தவரின் குழந்தைகள் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, அரேபியா, பாரசீகம் சியாம் முதலிய அண்டை நாடுகளிலிருந்தும் இங்கு வந்து கல்வி பயில்கின்றனர். ஓர் இரட்டைமாடிக் கட்டிடமும், வேறுபல கட்டிடங்களும், இப்பள்ளிக்காகக் கட்டப்பட்டன. பார்டன் (Barton), ஏர்லி (Airlie) முதலிய இடங்களும் இப்பள்ளிக்காக வாங்கப்பட்டன. பெண்டர்லாச்( Benderloch) என்ற இடம் பள்ளித்தலைவர் தங்குவதற்காக வாங்கப்பட்டது. வில்லிஸ்டன் (Williston), லிட்டில் வில்லி (Little Willie) என்ற இடங்கள் ஆசிரியர்களின் குடியிருப்புகளுக்காக வாங்கப்பட்டன. 'வின்ஸ்டன்' (Winston) என்ற இடம் பள்ளிக்குரிய இலவச மருத்துவமனையாகப் பயன்படுகிறது. கி. பி. 1932-ஆம் ஆண்டு இது ஓர் உயர் நிலைப்பள்ளியாக மாற்றப்பட்டது. 'இங்கு நடத்தப்படும் இறுதித் தேர்வு மெட்ரிகுலேஷனுக்கு ஒப்பானது. இதில் கல்வி கற்று வெளியேறும் மாணவர்கள் அமெரிக்கா, கானடா நாட்டுக் கல்லூரி வகுப்புக்களில் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர். இங்குப் பயிலும் மாணவர்கள் சீனியர் கேம்பிரிட்ஜ்' தேர்விலும் கலந்துகொண்டு நல்ல வெற்றியடைகின்றனர். ஏரிக்கருகில், இப்பள்ளிக்காக ஒரு பரந்த விளையாடுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் அலெக்ஸ், திருமதி அலெக்ஸ், எஸ். வில்சன், குமாரி ப்ரிவாஸ்ட், திருவாளர் கார்ல், திருமதி கார்ல், டபிள்யூ ஃபெல்ஸ் ஆகியோர், நீண்ட நாள் பள்ளிப்பொறுப்பாளர்களாகப் பணியாற்றினர். பொதுமக்களிடத்தில் பணம் திரட்டி, திருமதி மார்கரட் எட்டியின் நினைவுச் சின்னமாக இப்பள்ளியில் ஒரு கோவிலைக் கட்டியுள்ளனர்.

பிரசெண்டேஷன் கான்வென்ட் :

கோடைக்கானலிலே குறிப்பிடத்தக்க மற்றொரு பள்ளி, 'பிரசெண்டேசன் கான்வெண்ட்' என்ற பெண்கள் உயர் நிலைப்பள்ளியாகும். சென்னைப் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த சேவியர் தாயார் (Rev. Mother Xavier) அவர்களும் வேறு சில கன்னியரும் 1914-ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்திருந்தனர். அவ்வாண்டு 'ஹில்சைட்' (Hill Side) என்ற இடத்தில் தங்கினர். கி. பி. 1915-ஆம் ஆண்டு 'கென்மூர்' (Kenmure) என்ற இடத்தில் தங்கினர். அப்பொழுது அவர்களுடன் சில குழந்தைகளும் தங்கியிருந்தனர். அவ்வாண்டு எல்லோரும் சென்ற பிறகு, சேவியர் தாயாரும், இக்னேசியஸ் தாயாரும், ஃபோர் வீரி என்ற இடத்தில் தங்கி, ஒரு பள்ளி நிறுவுவதற்கு ஏற்ற இடத்தைத் தேடினர். கிளென் வீழ்ச்சிக்கு அருகில் அமைந்திருந்த மலையுச்சியில் (முன்பு வானாய்வுக்கூடம் இருந்த இடம்) பள்ளியை நிறுவுவது என்று முடிவு செய்தனர். அப்பள்ளியை அமைப்பதற்கு வேண்டிய பொருளாதாரத்தைப் பற்றித் திருவாளர் ஈ. ஆர். லோகன் என்பாருடன் ஆலோசனை நடத்தினர்.

கி. பி. 1916-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பிரசெண்டேசன் திருச்சபையைச் சார்ந்த கன்னியர்கள், 'ஹில் சைட்' என்ற இடத்திலேயே 17 மாணவியர்களைக் கொண்டு இப்பள்ளியைத் துவக்கினர். 1916-ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16-ஆம் நாள் இப்போதுள்ள பள்ளிக் கட்டிடத்திற்குக் கல் நாட்டு விழா நடத்தப்பட்டது. மரங்களும் நடப்பட்டன. கட்டிட வேலை முடிந்ததும் கி. பி. 1917-ஆம் ஆண்டு ஃபெப்ருவரித் திங்களில், பள்ளி புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பள்ளியில் ஒரு கோவிலும் அமைக்கப்பட்டது. அக்கோவில் காலையில் தொழுகைக்குரிய இடமாகவும், மாலையில் பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது. முதலில் மிகவும் எளிய முறையிலேயே இப் பள்ளி தொடங்கியது. இங்குப் பணிபுரிந்த கன்னிமார்களுக்குப் போதிய வசதியும் இல்லை. சாமான்கள் கொணர்ந்த பெட்டிகளே நாற்காலிகளாகப் பயன் படுத்தப்பட்டன. மாட்டு வண்டியில் பொருத்தப்பட்ட பீப்பாய்களின் மூலம் நெடுந்தொலைவிலிருந்து நீர் கொண்டுவரப்பட்டது. அப்போது போக்குவரவு வசதிகளும் மிகக் குறைவு. கி. பி. 1916-ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாகத் துவங்கிய இது கி. பி. 1919-ஆம் ஆண்டு உயர் நிலைப்பள்ளியாக மாறியது. கி. பி. 1920- ஆம் ஆண்டு கோடைக்கானலுக்கு வந்த வெலிங்க்டன் சீமாட்டி, இப்பள்ளிக்கான இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றுக்குக் கால்கோள் இட்டார். 1 லட்சம் ரூபாய் பொருட் செலவில் இக்கட்டிடம் கட்டப்பட்டது. 'கிண்டர் கார்டன்' வகுப்பிலிருந்து, சீனியர் கேம்பிரிட்ஜ் வகுப்பு வரை, இக்கட்டிடத்தில் நடைபெற்றன.

இப்பள்ளி நாளடைவில் நல்ல விளம்பரமும் முன்னேற்றமும் பெற்று ஒரு சிறந்த ஐரோப்பியப் பள்ளியாக மாறியுள்ளது. பத்து வயது முடியும்வரை, சிறுவர்களும் இங்கு மாணவர்களாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பெண்கள் பள்ளியிறுதி வகுப்புவரை படிப்பதோடு, டிரினிடி கல்லூரி இசைத் தேர்வுக்கும் பயிற்சி பெறுகின்றனர். சேவியர் தாயார் ஓய்வு பெற்றதும், அகஸ்டின் தாயார் பள்ளித் தலைவராகப் பொறுப்பேற்றார். கி. பி. 1926-முதல் 1944 முடியப் பணியாற்றினார். அவருக்குப் பிறகு ஜோசஃபைன் தாயார், பள்ளித் தலைவராகப் பணியாற்றி வருகிறார். கோடை நாட்களில் இப்பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழா குறிப்பிடத்தக்கது. செயிண்ட் ஜான் சோதரியாலும், குமாரி எல்ஸ்பெர்க் என்பவராலும் இங்கு மாணவிகளுக்குச் சிறந்த கலைப் (Fine Arts) பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆண்டு விழாக் காலங்களில் மாணவிகள் நிகழ்த்தும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பாராட்டுதலுக்குரியவை,

கோஹென் நினைவுப் பள்ளி :

கி. பி. 1912-ஆம் ஆண்டு, கோடைக்கானலில் லாச் எண்டு' (Loch End) என்ற ஓர் இடத்தை, அமெரிக்க லூதரன் சமயத்தைச் சார்ந்தவர்கள், திருவாளர் டேனியல் மக்நாயர் என்ற பொறியியல் வல்லுநரிடமிருந்து விலைக்கு வாங்கினார்கள். கி. பி. 1922-ஆம் ஆண்டு, தங்கள் குழந்தைகள் பயிலுவதற் கென்று ஒரு பள்ளியை நிறுவினார்கள். தங்கள் தந்தையர் நாடான அமெரிக்க நாட்டுக்குக் கல்வி முறையை அப்பள்ளியில் புகுத்தினர். கோடைக்காலத்தில் இங்கு வந்து தங்கியவர்களின் குழந்தைகளுக் சான பருவப்பள்ளி (Season school) யாகவே இது முதலில் துவக்கப்பட்டது. திருவாளர் பாச்மேன் என்ற ஆசிரியர் பள்ளிக்காகச் சிறிய ஒரு கட்டிடத்தைக் கட்டினார். பிறகு மாணவர்களுக்குத் தங்குமிடமும், கோவிலும் அமைத்தார். இவ்விரண்டின் கட்டிடக் கலையழகு கோடைக்கானலில் குறிப்பிடத்தக்கது, திருவாளர் புச்சானன் புதைபொருள் ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர். பழனிமலைகளில் கி. பி. 1942-ஆம் ஆண்டு அவர் தோண்டியெடுத்த புதைபொருள்கள் செண்பகனூரிலுள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளியில் 8 வகுப்புக்கள் இப்பொழுது உள்ளன. திருவாளர் மியூல்லெர் என்பாரும் திருமதி ஹெக்கல் அம்மையாரும் ஆசிரியர்களாக இங்குப் பணியாற்றுகின்றனர்.

ஸ்வீடிஷ் பள்ளி :

இந்தியாவில் வாழும் ஸ்வீடிஷ் குழந்தைகள் பயில்வதற்கென்று கோடைக்கானலில் ஒரு பள்ளி உள்ளது. ஸ்வீடிஷ் குழந்தைகள் முதலில் ஹைகிளெர்க் பள்ளிக்கே அனுப்பப்பட்டனர். ஆனால் இருபதாண்டுக்கு முன் ஸ்வீடிஷ் குழந்தைகள் தனியாகப் பயில்வதற் கென்று இப்பள்ளி துவக்கப்பட்டது. இப்பள்ளியின் பெயர் 'சால்விக்' (Solvik) என்பதாகும். ஹைகிளெர்க் பள்ளி இருக்கும் அதே மலையின்மீது தான் இதுவும் அமைந்துள்ளது. இங்குப் பயிலும் மாணவர்கள் தங்கள் தாய் மொழியிலேயே கல்வி பெறுகின்றனர். ஹைகிளெர்க் பள்ளியில் பயிலும்போது பல நாட்டு மாணவர்களோடு சேர்ந்து பழகும் வாய்ப்பு இருந்தது. இப்பொழுது அது இல்லை. இந்திய நாட்டில் உள்ள ஸ்வீடிஷ் பள்ளி இது ஒன்றுதான். எனவே, இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வாழும் ஸ்வீடிஷ்காரர்கள், தங்களுடைய குழந்தைகளை 'சால்விக்'கிற்கே அனுப்புகின்றனர். கடந்த சில ஆண்டுகட்கு முன்பாக, ஸ்வீடன் நாட்டுப் பாராளு மன்றமும் இதை அங்கீகரித்தது. இப்பள்ளி உருவத்தில் சிறியதாக இருந்தாலும் ஈடற்ற அழகோடு ஏரியைப் பார்த்த வண்ணம் அமைந்துள்ளது.

தமிழ்ப் பள்ளிகள் :

கோடைக்கானலில் வாழும் தமிழ் மாணவர்கள் பயிலுவதற்கென்று பல தமிழ்ப் பள்ளிகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. யூனியன் சர்ச் கோடைக்கானலில் நிறுவப்பட்ட போது பாதிரியாரின் இல்லத்திற்கருகில், அமெரிக்கன் மிஷனைச் சார்ந்தோர் ஒரு துவக்கப் பள்ளியை நிறுவினர். கோடைக்கானலில் மக்கட் பெருக்கம் ஏற்பட்டதும், நகராட்சியினர் வான்ஆய்வுக் கூடப் பாதையிலும், உந்து வண்டி நிலையத்திற்கருகிலும் தமிழ் மாணவர்களுக்கென்று பல துவக்கப் பள்ளிகளை நிறுவினர். கி. பி. 1942-ஆம் ஆண்டு 'தோபிகானா'விற்கு எதிரில் ஒரு நடுநிலைப் பள்ளி துவக்கப்பட்டது. இது இப்பொழுது உயர் நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது. ரோமன் கத்தோலிக்கச் சமயத்தாரால் மூன்று தமிழ்ப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவை மேல் ஏரிப் பாதையிலும், கான்வெண்ட் பாதையிலும் அமைந்துள்ளன.

ஏழை மாணவர் பள்ளி :

கி. பி. 1919-ஆம் ஆண்டு இந்திய ஏழை மாணவர்களுக்காக ஓர் இலவசப் பள்ளி துவக்கப்பட்டது. இப்போது அது 'செயிண்ட் சேவியர் இந்திய ஏழை மாணவர் பள்ளி' என்ற பெயர் கொண்டு விளங்குகிறது. 80 மாணவர்களுக்கு இலவச உணவும் உடையும் இங்கு அளிக்கப்படுகின்றன. ரோமன் கத்தோலிக்க மாணவர்களடங்கிய ஒரு குழு இப் பள்ளியில், அமைக்கப் பட்டுள்ளது. இக் குழு , கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்த ஏழைகளுக்குத் தொண்டு புரியப் பயன்படுத்தப்படுகிறது.

அனாதைப் பள்ளி :

கி. பி. 1906-ஆம் ஆண்டு ஓர் ஆங்கிலப் பாதிரியார், 'ஆண்கள் ஆங்கிலப்பள்ளி' என்ற ஒரு பள்ளியை ஃபெர்ன்ஹில் என்ற இடத்தில் துவக்கினார். ஆனால் அப் பள்ளி சில நாட்களில் மூடப்பட்டு விட்டது. 1908-ஆம் ஆண்டு குமாரி கார் என்பவர் சில ஆங்கிலக் குழந்தைகளுக்காகச் சிறிய பள்ளியொன்றைப் பென் லொமாண்ட்' என்ற இடத்தில் (ஸ்பென்சர் கடைக்குப் பின்னால்) துவக்கினார். அதுவும் கைவிடப்பட்டது. கி. பி. 1915-ஆம் ஆண்டு , இமயமலைச் சாரலிலுள்ள 'காலிம்பாங் விடுதி' (Kalimpong Homes) யைப் போன்று, ஆங்கிலோ இந்திய அனாதைக் குழந்தைகளுக்காகக் கோடைக்கானலிலும் ஒரு விடுதியை அமைத்தற்கான ஒரு திட்டம் உருவாகியது. செண்பகனூர் தொடரில், ப்ளேக்பர்ன் ஷோலா இருந்த இடத்தில் (அடுக்கம் கணவாயின் உச்சியில்) அவ் விடுதியைக் கட்ட முடிவு செய்தனர். இதற்குள்ளாகக் கோடைக்கானலில் வாடகைக் கட்டிடம் ஒன்றில் இவ்விடுதி துவக்கப்பட்டது, ஸ்பென்சர் கடைக்கு அடுத்தாற் போல் உள்ள 'கிளெஞ்சில்' (Glengyle) என்ற இடத்தில் வயது வந்த பெண்களுக்கான ஒரு விடுதியும், ஃபெர்ன்ஹில் மனையில் ஆண்களுக்கும் இளஞ் சிறுமியர்க்குமான விடுதியோடு பள்ளி ஒன்றும் நிறுவப் பட்டன. இக் கட்டிடத்திற்குப் 'ப்ளேக்பர்ன்' என்று பெயரிட்டனர். ஆனால் இவ்வனாதைப் பள்ளி நீலகிரி மலையின் மீதுள்ள கெய்டி பள்ளத்தாக்குக்கு மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது அங்குப் பெரும் அளவில் சிறப்பாக இப் பள்ளி நடத்தப்படுகிறது.

மாண்டிசோரிப் பள்ளி :

திருமதி மாண்டிசோரி அம்மையார் கி. பி. 1942 முதல் 1944 வரை கோடைக்கானலில் தங்கி யிருந்தார். அப்பொழுது சிறு குழந்தைகளுக்கான மாண்டி சோரிப் பள்ளி ஒன்றும், மாண்டிசோரிக் கல்வி முறையைப் பயிற்றுவதற்காக ஆசிரியப் பயிற்சிப் பள்ளி ஒன்றும் அவர் நடத்தினார். பல நாட்டுச் சிறு குழந்தைகளும் அப் பள்ளியில் கல்வி பயின்றனர். 'ரோஸ் பேங்க்'கில் அப் பள்ளியிருந்தது. புகழ் பெற்ற இப் பேராசிரியரின் காலடியிலமர்ந்து சிறந்த கல்வி பெறும் வாய்ப்பை இந்திய நாட்டின் பல பகுதியிலிருந்தும் வந்த குழந்தைகள் இரண்டாண்டுகள் பெற்றனர்.

கழகங்கள்

படகுக் கழகம் :- கோடைக்கானலிலுள்ள கழகங்களில் படகுக் கழகம் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்திலிருந்தே ஏரியில் படகுகள் இருந்தன. சில தோட்ட முதலாளிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்காகக் கீழ் ஏரிப் பாதையில் சில படகு வீடுகளை {Boat houses) அமைத்தனர். ரோமன் கத்தோலிக்கப் பாதிரிமார்கள் 'வெஸ்ட் வர்டு ஹோ'விற்கு அருகில் ஒரு படகு வீட்டைக் கொண்டிருந்தனர். தனிப்பட்டவர்கள், படகுகளை வாங்கிக் கோடைக்கானலுக்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதாகத் தோன்றவில்லை. ஆகையினால் இக் குறையைப் போக்க கி. பி. 1890-ஆம் ஆண்டு பொதுமக்களால் படகுக் கழகம் துவக்கப்பட்டது. முதலில் தனிப்பட்டவரிடமிருந்து சில படகுகளை இக் கழகம் வாங்கியது. கள்ளிக் கோட்டையிலுள்ள 'சால்டர் அண்டு கம்பெனி' (Salter and co.) யிலிருந்து, 'கேட்ஃப்லை' (Gadfly), சேஃபர் (Chafer) என்ற படகுகளும் வாங்கப்பட்டன. படகுக் கழகத்தின் முதல் கௌரவச் செயலாளராக இருந்தவர் கேப்டன் கிளார்க் என்பவர்.

நாய்களைப் படகுகளில் அனுமதிப்பதில்லை. மெருகிடப்பட்ட படகுகளில் சிறுவர்களை ஏற்றுவதில்லை. சிறுவர்களுக்காக 'லிலி' என்ற படகு உள்ளது. கி. பி. 1894-ஆம் ஆண்டுக் காவற் படைக் குறிப்பு (police reports) களில் படகுக் கழகம் தீக்கிரையானதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதனால் ரூ. 1779 பெறுமான பொருள்கள் சேதமுற்றனவாம். பொதுமக்களிடம் நன்கொடையாகப் பொருள் திரட்டிப் படகுக் கழகத்திற்குப் புத்துயிர் கொடுத்ததோடு, போக்குவரவிற்கு இடைஞ்சலாக ஏரிக் கரையோரங்களில் முளைத்திருந்த நாணல்களையும் அகற்றினர். ஒவ்வோர் ஆண்டும் 60 முதல் 80 உறுப்பினர்கள் வரை சேர்ந்துகொண்டே யிருந்தனர். உறுப்பினர் தொகை பெருகியதும், நிறையப் படகுகள் வாங்கப்பட்டன. கி. பி. 1897-ஆம் ஆண்டு , படகுக் கழகத்தின் செயற்குழுவில், புதுக்கோட்டை மன்னரின் இளவலாகிய துரை ராஜாவின் பெயர் காணப்படுகிறது. திருவாளர் மிச்சி ஸ்மித், வான் ஆய்வுக்கூடப் பொறுப்பாளர் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும், 'வின்ஸ்ஃ போர்டு' (Winsford) மாளிகையில் தங்கி வாழ்ந்தார். அப்போது படகுக் கழகத்தின் கௌரவச் செயலாளராகப் பொறுப்பேற்றார். அவர் வின்ஸ்ஃபோர்டு மாளிகையில் அமர்ந்தவண்ணம், தம் முடைய தொலை நோக்காடியின் மூலமாகப் படகுகளைக் கண்காணிப்பார். படகுக் கழகத்தின் விதிகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படுகின்றனவா எனக் கவனிப்பார். முதன் முதலில் தலைமைப் படகோட்டியாகப் பணியாற்றியவன் பெயர் 'மைகேல்' என்பதாகும். படகுகள் தேவைப்படும்போது, பிரயாணிகள் கரையில் நின்று கொண்டு மைகேல்' என்று கத்துவர். அதனால் எல்லாப் படகோட்டிகளும் 'மைகேல்' என்ற பெய ராலேயே அழைக்கப்பட்டனர்.

கோடைக்கானல் ஏரி, காதலர்களின் கூட்டுறவுக்கு மிகவும் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது. தனிமையை விரும்பும் ஐரோப்பியக் காதலர்கள் இணை இணையாகப் படகூர்ந்து பொழுதைக் கழிப்பர், ஐரோப்பியக் காதலர்களைப் பற்றிய நகைச் சுவையான செய்திகள் பல இங்குக் கூறப்படுகின்றன. கோடைக்கானலுக்குப் புதிதாக ஒரு பிராடெஸ்டண்டுப் பாதிரி வந்திருந்தார். அவர் இளைஞர். அழகிய தோற்றமும், எடுப்பான உடற்கட்டும் உடையவர். அவ்வூரில் வாழ்ந்த செல்வக் குடும்பத்தைச் சார்ந்த அழகிய நங்கை ஒருத்தியுடன் சில காலம் நெருங்கிப் பழகி வந்தார். அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற ஆசை அவருள்ளத்தில் ஏற்பட்டது. தம் உள்ளக் கருத்தை அவ்வழகிக்குக் கூற நினைத்த அவர், படகில் உலவிவர அழைத்தார். அப்போது அவரைப் பின்புறமிருந்து ஒரு நண்டு கவ்வியது. வலி பொறுக்க முடியாத அவர் மல்லாந்த வண்ணம் வீழ்ந்தார். அப்பெண் அக் காட்சியைக் கண்டு வயிறு குலுங்கச் சிரித்தாள். அவமானம் தாங்க முடியாத அப் பாதிரியார் எழுந்து விரைவாக வீடு சென்று விட்டார். பிறகு அப் பெண்ணிடம் தம் கருத்தைக் கூற அவர் மனம் ஏனோ துணியவில்லை! பாவம் ! காதலில் அவருக்கு ஏற்பட்ட தோல்வி இரங்கத்தக்கது. ஆனால் கோடைக் கானல் ஏரியில் தொடங்கிய எல்லாக் காதலும் இப்படி முடியவில்லை. பல, 'இன்பியல்' முடிவுகளைப் பெற்று வெற்றிகரமாக முடிந்தன.

கோடைக்கானல் கழகம் :

கோடைக்கானலில் பல நாட்டு மக்களும் குடியேறத் தொடங்கியதும், மாலை நேரத்தில் இன்பமாகப் பொழுதைக் கழிப்பதற்கு ஒரு கழகம் தேவை என்பதை எல்லோரும் உணர்ந்தனர். அதன் விளைவாகவே கோடைக்கானல் கழகம் தோன்றியது. சர்வெர்லி வெஞ்ச் அவர்களும், நடுவர் கிரகாம் அவர்களும் கோடைக்கானலில் வாழ்ந்தபோது, 'பாம்பாறு மனையில்' அடிக்கடி விருந்தும், கூட்டங்களும் நடத்துவார்கள். கோடைக்கானலில் வாழ்ந்த சமய வாதிகளும், பொதுமக்களும் சேர்ந்து ஒரு கழகத்தை நிறுவ வேண்டும் என்று முடிவு செய்தனர். இப்போது இக் கழகக் கட்டிடம் அமைந்துள்ள இடம் மதுரை அமெரிக்க மிஷனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மைதான விளையாட்டுக்களும் (Out door games), குடியும் அங்கு இடம் பெறக் கூடாது என்ற நிபந்தனைகளை விதித்தனர். பொது மக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுக் கழகக் கட்டிடமும், மட்டைப் பந்தாட்ட மைதானமும் அமைக்கப்பட்டன. கழகம் கி. பி. 1887-ஆம் ஆண்டு துவங்கியது. கோடைக்கானலில் மக்கள் தொகை பெருகியதும், ஒவ்வொரு சமயத்தாரும் தங்களுக்கெனத் தனியான அமைப்புகளை நிறுவிக்கொண்டனர். அதனால், இக் கழகம் கவனிப்பாரற்றுச் சிறிது காலம் கிடந்தது. கழக முன்னேற்றத்துக்காகத் தனிப்பட்டாரும், இராணுவ அதிகாரிகளும், பொருளுதவி செய்ய மறுத்துவிட்டனர். இதை யறிந்த மதுரை அமெரிக்க மிஷனைச் சார்ந்தவர்கள் மீண்டும் இக் கழகத்தின்பால் ஊக்கம் காட்டினர். கழகத்தின்மீது சுமத்தியிருந்த கட்டுப்பாடுகளையும் நீக்கினர். பிறகு இக் கழகம் நல்ல முறையில் வளர்ச்சியுற்றது. கட்டிடம் மேலும் பெரியதாகவும், வசதியுடையதாகவும் கட்டப்பட்டது. வேறு பல மட்டைப் பந்தாட்ட மைதானங்களும் தோற்றுவிக்கப்பட்டன. கழகக் கட்டிடத்தில் ஒரு பொது அறையும், ஒரு படிக்கும் அறையும், பில்லியார்டு விளையாடும் ஒரு அறையும் ஆண்களுக்காக அமைந்துள்ளன. சீட்டாட்ட அறை (Playing cards room) ஒன்றும், ஒப்பனை அறை (dressing room) ஒன்றும் பெண்களுக்காக அமைந்துள்ளன. இக் கட்டிடத்தின் நடுவில் அமைந்துள்ள அறை மிகவும் பெரியது. அதில் ஒரு மேடையும் அமைந்துள்ளது. கோடைக்கானலில் நடைபெறும் முக்கியக் கூட்டங்களும், நாடகங்களும் இங்குதான் இடம் பெறுகின்றன.

கோடைக்கானல் பாதிரிமார் கழகம் :

நன்றாகப் பணியாற்றும் கழகங்களில் கோடைக்கானல் பாதிரிமார் கழக (Kodaikanal Missionary Union)மும் ஒன்றாகும். கி. பி. 1890-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் புதுக்கோட்டை அரசரின் தம்பியான துரைராஜா அவர்களை டாக்டர் ஃபேர்பேங்க் அவர்களும், டாக்டர் ரேசி அவர்களும் 'ஆர்கோடியா' (Arcotia) என்ற இடத்தில் ஒரு படிப்பகத்தையும் ஒரு கழகத்தையும் திறந்து வைப்பதற்காக அழைத்தனர். அதன் பிறகு அம் மூவரும் பூப்பந்து, மட்டைப் பந்து விளையாட்டுகளின் பொருட்டும், புத்தகத்தேநீர் விருந்தின் (book-teas) பொருட்டும் அடிக்கடி கூடினர். இக் கழகம் சிறிது வளர்ச்சியுற்றது. 'ராக்காட்டேஜ்' என்ற இடத்தில் இக் கழகம் சிறிது நாள் அமைந்திருந்தது. மக்கள் தொகை கோடைக்கானலில் குறைவாக இருந்தபோது பாதிரிமார், பொதுமக்கள், ஆங்கிலேயர், அமெரிக்கர் ஆகிய எல்லோரும் நெருங்கிய கூட்டுறவோடு இருந்தனர். ஆனால் மக்கள் தொகை பெருகியவுடன் அக் கூட்டுறவு சிதையத் தொடங்கியது. அதனால் அங்கு வாழ்ந்த திருவாளர்கள் விக்காஃப். டியதி, ஹேக்கெர், ஜோன்ஸ், டாக்டர் கேம்பெல் முதலியோர் மறுபடியும் இக் கழகத்தை , 'ஆர்கோடியா லாட்ஜில் துவக்கினர். இக் கழகத்திற்குச் சொந்தமாக ஒரு கட்டிடம் நிறுவ முடிவு செய்தனர். ஹைகிளெர்க் பள்ளிக்கருகிலுள்ள பியர் தோட்டத்தில் 'வின்ஸ்டன்' என்ற கட்டிடத்தை விலைக்கு வாங்கினர். பள்ளியின் அருகில் இக் கழகம் அமைக்கப்பட்டதால் மட்டைப் பந்தாட்டம் ஆட எல்லோருக்கும் வசதி ஏற்பட்டது. பிறகு புதிதாக ஓர் இடத்தையே விலைக்கு வாங்கி, இப் பொழுதுள்ள கழகக் கட்டிடத்திற்குக் கல் நாட்டு விழாவைச் செய்தனர். அக் கட்டிடத்திற்குக் கல் நாட்டியவர், கோடைக்கானலின் நீண்டகால வாசியான பேலிஸ் தாம்சன் என்ற அம்மையார். இக் கட்டிடத்தில் இப்போது அகன்ற ஒரு நடுமுற்றமும், நூல் நிலையமும், ஒரு சமயலறையும், ஆடவர் மகளிர்க்குரிய தனி அறைகளும், ஓய்வு பெறும் அறை ஒன்றும், செயற் குழு நடைபெறும் அறை ஒன்றும் அமைந்துள்ளன, அகன்ற நடுமுற்றம், வாரந்தோறும் புதன்கிழமையன்று தேநீர் விருந்து நடத்துவதற்கும், கூட்டங்கள், மாநாடுகள் நடத்துவதற்கும் பயன்படுகின்றது. இதில் 1200 உறுப்பினர்கள் உள்ளனர். கோடைக்காலங்களில் நானூறு பேர்களுக்குக் குறையாமல் இங்கு வருகின்றனர். இதில் பாதிரிமார்களல்லாத பொது மக்களும் நிறைய உள்ளனர்.

இக் கழகமானது ஆண்டுதோறும், பல குறிப்பிடத்தக்க பணிகளைப் புரிகிறது. சமூகவியல் பற்றிய மாநாடுகளோடு, மருத்துவம், கல்வி, தொழில் ஆகியவை சம்பந்தமான மாநாடுகளையும் இது நடத்தி வைக்கிறது. தென்னிந்தியாவிலுள்ள பிராடஸ்டண்டு கிருத்தவ சங்கங்கள் பலவற்றிற்கும் பாலமாக இருந்து இது இணைத்து வைக்கிறது, தென்னிந்தியாவின் பல பகுதிகளிலுமுள்ள கிருத்தவப் பாதிரிமார்கள் ஆண்டுக்கொருமுறை ஒன்று கூடுவதற்குரிய நல்வாய்ப்பையும் இது ஏற்படுத்துகிறது.

குழிப்பந்தாட்டக் கழகம் :

கி. பி. 1880-ஆம் ஆண்டில் கோடைக்கானலில் ஒரு குழிப்பந்தாட்ட மைதானம் அமைக்க முயன்றனர். ஆனால் அம்முயற்சி பலனளிக்கவில்லை. கி. பி. 1895-ஆம் ஆண்டு, குழிப்பந்தாட்டத்தில் ஆர்வமுடைய பலர் கோடைக்கானல் கழகத்தில் கூடினர். அக்கூட்டத்திற்கு ஜெ. டபிள்யூ. எஃப். டி யூமெர்கியூ என்பவர் தலைமை தாங்கினார். தூண்பாறைப் பாதையில் மைதானம் அமைக்கப்பட்டது. கி. பி. 1926 ஆம் ஆண்டு இக்கழகத்திற்காக ஒரு கட்டிடமும் கட்டப்பட்டது. கட்டிடத்திற் கெதிரில் மைதானமும் சிறப்பாக அமைக்கப்பட்டது. கி. பி. 1930-ஆம் ஆண்டு மேத் திங்கள் 7- ஆம் நாள் வீசிய புயல் இக் கழகத்தின் கூரைகளைப் பிரித்தெறிந்ததோடு கட்டிடத்திற்கும் கேடு விளைத்தது. ஆனால் புயல் வீசியது நன்மைக்கே என்று சொல்ல வேண்டும். பிறகு நன்கொடை நிறைய வசூல் செய்யப்பட்டுப் பெரியதும், அழகானதுமான மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கழகக் கட்டிடத்தை முன்னின்று கட்டி முடித்த ஈ. ஓ. கிங் என்பவர் இக்கழக வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார்.

இந்தியர் கழகம் :

கி. பி. 1901-ஆம் ஆண்டுக் கணக்குப்படி 1900 குடியிருப்புகள் கோடைக்கானலில் இருந்தன. அங்கு வாழ்ந்த இந்தியரில் பெரும்பாலோர் வணிகர்களாகவும், மரவேலை செய்வோர்களாகவும், கொத்தர்களாகவும், தாளாளர் {Clerks)களாகவும், வேலைக்காரர்களாகவும் இருந்தனர். நகராட்சி மன்றம் வளர்ச்சியுற்றதும், அதில் பணிபுரிவதற்காகப் படித்த இந்தியர்கள் மிகுதியாகத் தேவைப்பட்டனர், கோடைக்கானலின் அழகைப் பற்றியும், வருவாய் நல்கும் காஃபித் தோட்டங்களைப் பற்றியும் கேள்வியுற்ற இந்திய நாட்டுச் செல்வர்கள் மிகுதியாக இங்குக் குடியேறித் தங்களுக்கென மாளிகைகளை அமைக்கத் தொடங்கினர். டெல்லிப் பாராளு மன்றத்தின் மேல்சபை உறுப்பின (Member of council of states)ராகப் பணியாற்றியவர் டேவிட் தேவதாஸ் என்பவர். கி. பி. 1903-ஆம் ஆண்டு வானாய்வுக் கூடத்தின் எதிரில் 'ஒதுக்கம்' (Odookum) என்ற கட்டிடத்தைக் கட்டினார். இலங்கை அரசியலாரின் செயற்குழு (Executive council of the Ceylon Government) உறுப்பினராக இருந்த சர். பி. இராமநாதன் கிளென் வீழ்ச்சிக்கு அருகில் தம் மாளிகையைக் கட்டினார். இவ்வாறு இந்திய மக்களின் தொகை கோடைக்கானலில் பெருகியது.

கி. பி. 1915-ஆம் ஆண்டு இந்தியக் குடும்பங்களெல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுக்கென ஒரு தனிக் கழகத்தையும், ஒரு படகுக் கழகத்தையும் ஏற்படுத்தினர். இப்பணியை முன்னின்று நடத்தி வைத்தவர் சென்னையைச் சார்ந்த சர். டி. வி. சேஷகிரி ஐயர் என்பவர். அவருடைய உருவப்படம் இந்தியர் கழகக் கட்டிடத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முதன் முதலில் கழகக் கட்டிடத்தில் ஒரு சிறிய அறைமட்டும் இருந்தது. கழகத்தோடு இணைந்த மட்டைப் பந்தாட்ட மைதானம் ஒன்றும் இருந்தது. சில ஆண்டுகளில் உறுப்பினர் தொகை உயர்ந்தது. கழகத்திற்குச் சொந்தமாக ஒரு நல்ல கட்டிடமும் கட்டப்பட்டது. திருவாளர் பாலசுப்பிரமணிய ஐயர் தற்போது செயலாளராக இருக்கிறார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தியர் கழகத்தின் உறுப்பினராக இருந்துவருகிறார். அவருடைய நண்பர்கள் அவரைக் 'கோடைக்கானலின் முதியோர்' என்று அழைக்கின்றனர். எஸ். சீனிவாச அய்யங்கார், சர். டி. விஜய ராகவாச்சாரியார், சர். ஏ. லட்சுமணசாமி முதலியார், கே. என். ஐயர், ஜனாப் அப்துல் காதர், ஜஸ்டிஸ் சந்திரசேகர ஐயர் ஆகிய பெரியார்கள், இக்கழகத்தின் குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள்.

இந்திய மாதர் பொழுது போக்குக் கழகம் :

இந்திய மாதர் பொழுது போக்குக் கழகம் (The Indian Ladies Recreation Club) என்ற ஒரு நிறுவனம் கடந்த சில ஆண்டுகட்கு முன் கோடைக்கானலில் ஏற்படுத்தப்பட்டது. இக்கழகம் கோடைக் காலத்தில் மட்டும் இயங்குகிறது. கிளென் வீழ்ச்சிக்கும் கான்வெண்டுக்கும் செல்லும் பாதையின் திருப்பத்தில் உள்ள ஒரு வீட்டில் இக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கழகம் சென்னையைச் சார்ந்த சீதாபதி ஐயரின் மனைவியால் துவக்கப்பட்டது.

நார்தெம் :

நார்தெம் (Nordhen) என்ற மற்றொரு கழகமும் கோடைக்கானலில் அமைந்துள்ளது. ஸ்வீடிஷ் குடியேற்றத்தில் வாழும் பாதிரிமாரும், டேனியப் பாதிரிமாரும் சேர்ந்து இக்கழகத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஸ்வீடிஷ் குடியேற்றப் பகுதியின் பெயர் நார்தெம் என்பதாகும். இவ்விடத்தில் இக்கழகம் கூடுவதால், இப்பெயர் பெற்றது. நார்தெம் என்ற சொல்லுக்கு 'வட நாட்டு மக்கள் மனை' என்பது பொருள். ஸ்வீடனும் டென்மார்க்கும் ஐரோப்பாக் கண்டத்தின் வட பகுதியாக அமைந்திருப்பதால், தங்கள் நாடுகளை 'வட நாடு' என்று இவர்கள் அழைக்கின்றனர் போலும். வாரத்தில் ஒரு நாள் இவர்கள் இங்குக் கூடுகின்றனர். அப்போது தேனீர்விருந்து, விளையாட்டு முதலியவை நடைபெறும். சில சமயங்களில் சொற்பொழிவுகளும் நடைபெறுவதுண்டு. கோடைக்கானலிலேயே சிறந்த இசை நிகழ்ச்சிகள் இங்குதான் நடைபெறுகின்றன. சில சமயங்களில் விளையாட்டுப் போட்டிகளும் இங்கு நடத்தப்படுகின்றன. இதில் பங்குகொண்டுள்ள பெரும்பாலோர் கோடைக்கானல் பாதிரிமார்கழகத்தின் உறுப்பினர்கள்.

கோடைக்கானல் நட்புறவு இயக்கம் :

கோடைக்கானல் நட்புறவு இயக்கம் (The Kodaikanal Fellow-ship) 1927-ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது பல நாட்டு மக்களின் நட்புறவை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இது உலக நட்புறவு இயக்க (International Fellow-ship) த்தின் கிளையாகப் பணிபுரிகிறது. இவ்வியக்கத்தைத் துவக்கும் கருத்தை முதன்முதலாக வெளியிட்டவர் சென்னையில் வாழ்ந்த டாக்டர் எலியனார் மேக் டோகால் என்பவர். டாக்டர் மேனன், திருவாளர். பி. ஜி. நாராயணன் ஆகிய இருவரும் குமாரி ஸ்பென்ஸ், திருமதி பீச்சி ஆகிய இரு நங்கையரின் துணை கொண்டு 'லிட்டில் ஹேஸ்' என்ற இடத்தில் இவ்வியக்கத்தின் முதல் கூட்டத்தை நடத்தினர். பொதுவாகக் கோடைக்கானலில் வாழ்ந்த ஐரோப்பியர், இந்தியர் ஆகியோரின் நட்புறவை வளர்ப்பதற்காகவே இவ்வியக்கம் துவக்கப்பட்டது. தேநீர் விருந்துகளும், உரையாடல்களும், சொற்பொழிவுகளும் இவ்வியக்கக் கூட்டங்களில் பெரிதும் இடம்பெற்றன. திருமதி ராய்ட்ஸ், திருமதி கிளேடன் ஆகியோரின் இல்லங்களிலும், இந்தியர் கழகத்திலும், பாதிரிமார் கழகத்திலும் இவ்வியக்கக் கூட்டங்கள் அடிக்கடி நடைபெற்றன, அடிக்கடி கலாச்சாரக் கூட்டங்களும் இவ்வியக்கத்தாரால் நடத்தப்பெற்றன. மொகஞ்சதாரோ புதைபொருள் ஆராய்ச்சியைப் பற்றிப் பல அறிஞர்கள் இக் கழகத்தில் தொடர்ந்து சொற்பொழிவுகள் நிகழ்த்தினர்.

இந்தியப் பல்கலைக்கழக மாதர் கழகம் :

'இந்தியப் பல்கலைக்கழக மாதர் கழகம்' என்ற ஓர் அமைப்பும் இங்கு உள்ளது. இக்கிளை, கல்கத்தாவிலுள்ள தலைமைக் கழகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகக் கல்வியில் பங்குகொண்டுள்ள மாதர்கள் ஆண்டுக்கொரு தடவை இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கூடுகின்றனர். இக்கழகம் இந்தியாவில் வாழும் அமெரிக்கப் பட்டதாரிப் பெண்டிரால் முதலில் துவக்கப்பட்டது. முதலில் சமுதாய நலன்பற்றி ஆராயும் கழகமாக இது துவங்கியது. பிறகு இந்தியாவில் வாழும் எல்லா இனப்பட்டதாரிப் பெண்களும் இதில் பங்கு கொண்டனர். இந்திய நாட்டுப் பெண்கள், வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயில்வதற்கு வேண்டிய நல்வாய்ப்புகளையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து நன்முறையில் இக்கழகம் பணிபுரிகிறது.

மேலும் இங்குப் 'பழனிமலைகள் வேட்டைக் கழகம்' என்ற ஓர் அமைப்பும் உள்ளது, இதன் கௌரவச் செயலாளராகப் பழனிமலை காட்டிலாகா அதிகாரி பணிபுரிகிறார். பழனிமலைக் காடுகளில் வேட்டையாட விரும்புபவர்களுக்கு, இது சில சட்டதிட்டங்களை வகுத்து அமுல் நடத்தி வருகிறது. கி. பி. 1937-ஆம் ஆண்டு கோனலூரில் ஆற்று மீன்களை வளர்க்கும் பண்ணை ஒன்றை இது அமைத்தது. ஹேமில்டன் கோட்டையையும் பூம்பாறையையும் இணைக்கும் பாதைக்குச் சற்று மேற்புறத்தில் செம்படவர் வாழ்வதற்கான குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவஞ்சிக்கும், 'வந்தரவு'க்கும் இடையிலுள்ள தலைவாரி ஆற்றிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

இரண்டாம் உலகப் போரின்போது கோடைக்கானலில் இருந்த இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சிறந்த முறையில் பணியாற்றியது. போரில் காயம்பட்டவர்களின் மருத்துவத்திற்கு மிகவும் இன்றியமையாத பல பொருள்களை உற்பத்தி செய்து வழங்கியது.

சமய வாழ்வு :

கோடைக்கானலின் சமய வாழ்வு குறிப்பிடத்தக்கது. பல சமயத்தாரும் இங்கு உறவுகொண்டு அன்போடு வாழ்கின்றனர். இங்குள்ள பசுமையான இளமரக்காடுகளும், தேனினுமிய தீஞ்சுவை அருவிகளும், கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவரும் நீர் வீழ்ச்சிகளும், பசுமையான குன்றுகளும், மெல்லென அசைந்தாடும் தென்றலும், கோடைக்கானலில் ஓர் இன்ப அமைதியைச் சூழவிடுகின்றன. கோடைக்கானல் பல நாட்டு மக்களுக்கும் ஒரு தங்கல்மனை போன்றது. ஸ்காட் மக்களுக்கு அவர்கள் தாய் நாட்டிலுள்ள மலைகளையும், நீர்வீழ்ச்சிகளையும் இவ்வூர் நினைவூட்டுகிறது : ஆங்கிலேயர்களுக்கு இங்கிலாந்திலுள்ள யார்க்ஷைர் வெளியை நினைவூட்டுகிறது. பருவக் காற்றினால் அசைந்தாடும் நீலப் பிசின்மரங்கள் ஆஸ்திரேலியருக்கு அவர்கள் அன்பு நாட்டை நினைவூட்டுகின்றன. வானளாவி நிற்கும் செங்குத்தான மலைச்சரிவுகள், ஸ்வீடன் மக்களுக்கும், டேனியர்களுக்கும், ஸ்காண்டிநேவியா தீபகற்பத்தை நினைவூட்டுகின்றன. இங்குள்ள நீல நிறமான மலைத்தொடர்கள் அமெரிக்கரின் உள்ளத்தில் அவர்கள் தந்தையர் நாட்டைப்பற்றிய இன்ப நினைவுகளை எழுப்புகின்றன. தமிழர்களுக்கோ, இலக்கியத்தில் மிளிரும் குறிஞ்சித் திணை இன்னகை காட்டி எதிரில் நடம்புரிகின்றது.

பிராஸ்பெக்ட் பாயிண்டின் கடைசியில் பெருமாள் மலையைப் பார்த்தாற்போன்று, தமிழரின் குறிஞ்சிக் கடவுளான முருகனின் கோவில் அமைந்துள்ளது. இது திருவாளர் இராமநாதனின் நினைவுச் சின்னமாக அவருடைய ஆஸ்திரேலிய மனைவியால் கட்டப்பட்டது. இக்கோவில் அந்த அம்மையாரின் மேற்பார்வையிலேயே இன்றும் உள்ளது. கோடைக்கானலிலிருந்து இக்கோவிலுக்குச் செல்லும் பாதை குறிஞ்சி ஆண்டவன் பெயராலேயே வழங்குகிறது. 'முஞ்சிக்கல்'லில் மாரியம்மனுக்கும் விநாயகனுக்கும் கோவில்கள் உள்ளன. வேறு பல சிறு தெய்வங்களின் கோவில்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளன. தேநீர் விருந்துகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் மாலை நேரங்களில், காது செவிடுபடும்படி பறையடித்தும், மருள் கொண்டு ஆடிக்கொண்டும், மாரியம்மனை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு 'சாரிங் கிராஸ்' வழியாகத் தமிழ் மக்கள் திரளாகச் செல்லும் காட்சி ஐரோப்பியருக்கு வியப்பூட்டும் புதுமையாகத் தோன்றலாம்.

இங்குக் கிருத்தவ சமயத்தைச் சார்ந்த பல பிரிவினரும் கோவில்கள் எழுப்பியுள்ளனர். கோடைக்கானலைச் சுற்றியுள்ள மலைகளின் மீது பல ரோமன் கத்தோலிக்கக் கோவில்கள் அமைந்துள்ளன. ப்ராடெஸ்டண்ட் கிருத்தவர்களில் நான்கு பிரிவினர் (தங்களைப் பிரிந்த சகோதரர்கள்-Our Devided Brethren என்று அழைத்துக் கொள்கின்றனர்) இங்கு வாழ்கின்றனர். செயின்ட் பீடர் சர்ச்சும், யூனியன் சர்ச்சும், லாச் எண்டு என்ற இடத்தில் அமைந்துள்ள அமெரிக்க மிஸ்ஸெனரி சர்ச்சும், ஸ்வீடிஸ் குடியேற்றத்திலுள்ள ஜூபிலி சர்ச்சும் இவர்கட்கு உரிமையானவை. லீப்சிக் எவேஞ்சலிகல் லூதரன் மிசன், ஹெர்மன்ஸ்பர்க் மிஷன் என்ற இரு ஜெர்மானியக் கிருத்தவ சமயத்தைச் சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.

தூங்கும் இளவரசி :

“இளவரசன் தன் அன்புக் கரங்களால் ஆரத்தழுவித் துயிலெழுப்பும் வரையில், கோடைக்கானல் தூங்கும் இளவரசியாக விளங்கினாள்“ என்று கோடைக்கானலில் வாழ்ந்த 'மெட்ராஸ் டைம்ஸ்' பத்திரிகையின் நிருபர் கி. பி. 1894-ஆம் ஆண்டு எழுதினார். ஆம்! உதகமண்டலத்தைக் குறிஞ்சி நகரங்களின் அரசி' என்று குறிப்பிடும்போது, கோடைக்கானலைக் 'குறிஞ்சி இளவரசி' என்றுதான் குறிப்பிட வேண்டும். இங்கு இளவரசர் என்று குறிப்பிடப்படுபவர் காலஞ் சென்ற புதுக்கோட்டை மன்னரே. கி. பி. 1890-ஆம் ஆண்டு அவரும் அவருடைய இளவலாகிய துரைராஜாவும், அவர்களுடைய பொறுப்பாளரும், ஆசிரியருமான திருவாளர் எஃப். எஃப். கிராஸ்லீயும் கோடைக்கானலில் வசிப்பதற்காக வந்தனர். 'சென்ட்ரல் ஹவுஸ்' என்ற இடத்தில் வாழ்ந்தனர். பிறகு 'வுட்வில்லி' என்ற மாளிகையில் குடியேறினர். கடைசியாக, கொலோனல் ஜே. பென்னிகுவிக் என்பாரிடத்திலிருந்து 'ட்ரெடிஸ்' என்ற தோட்ட மாளிகையை வாங்கினர். இம் மாளிகை சென்னையில் சிறந்த வழக்கறிஞராயிருந்தவரும், கோடைக்கானலில் முதன் முதலில் குடியேறிய இந்தியருமான திருவாளர் முத்துகிருஷ்ணன் என்பவரால் கட்டப்பட்டது. 'நட்ஷெல்' என்ற இடமும் திருவாளர் ஈ. எஃப். பினர் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது.

கி. பி. 1894-ஆம் ஆண்டிலிருந்து, இளவரசர் 'ட்ரெடிஸ்' மாளிகையில் அடிக்கடி விருந்துகள் நடத்தத் தொடங்கினார். உடனே கோடைக்கானல் குமரி விழித்தெழுந்து நகை முகம் காட்டி நடனமாட ஆரம்பித்து விட்டாள். 'ட்ரெடிஸ்' மாளிகையில் இரண்டு மட்டைப் பந்தாட்ட மைதானங்கள் அமைந்திருந்தன. விருந்தின் போது எல்லோரும் அழைக்கப் பட்டனர். இன்னிசை முழக்கோடு விருந்து ஆரம்பமாகும். விளையாடுமிடத்தை மிக அழகோடு ஒப்பனை செய்து, அடிக்கடி போட்டிகளும் நடத்துவர். கி. பி. 1895ஆம் ஆண்டு 'டிரெடிஸ்' மாளிகையில் 'அகில உலக மட்டைப் பந்தாட்டப் போட்டிகள், {International Tennis matches) நடைபெற்றன. அப்போது ஆங்கிலப் பேரரசின் சார்பில் இளவரசரும், இளவல் துரை ராஜாவும், திருவாளர்கள் பீர்ஸ், மெக்கன்சி என்ற ஆங்கிலேயர்களும் கலந்துகொண்டனர். அமெரிக்காவின் சார்பில் டாக்டர் ஸ்குடர், ரெவரண்டு ஸ்குடர், ரெவரண்டு ஜோன்ஸ், ரெவரண்டு பெர்கின்ஸ் ஆகிய நால்வரும் விளையாடினர். ஆங்கிலப் பேரரசு வென்றது. இதே குழுவினர் திருவாளர்கள் மேன், சேண்ட்லர் என்ற இருவரையும் சேர்த்துக்கொண்டு பூப்பந்தாட்டப் போட்டி ஒன்றும் நடத்தினர். அதில் அமெரிக்கா வென்றது. இளவரசர், துரைராஜா ஆகிய இருவரின் ஒத்துழைப்பால் கோடைக்கானலின் சமூக வாழ்க்கை மிகவும் சிறப்படைந்தது என்று கூறலாம். துரை ராஜா தம் இறுதிக் காலம் வரையிலும் கோடைக்கானலிலுள்ள 'நட்ஷெல்' மாளிகையிலேயே வாழ்ந்து வந்தார். கோடைக்கானல் கழகம், பாதிரிமார் கழகம், குழிப்பந்தாட்டக் கழகம் ஆகியவற்றில் இவர் பெரும் பங்கு எடுத்துக்கொண்டு பணியாற்றினார். இளவரசரும் இவரும் அடிக்கடி புலிவேட்டை ஆடுவது உண்டு.

6. குற்றாலம்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை யழைப்பார்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி யொழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனலிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே.


திருக்குற்றாலக் குறவஞ்சி என்னும் தேனடையிலிருந்து சொட்டும் ஒரு துளி தேன் இப் பாடல். குறத்தி கூறும் மலை வளத்தின் சுவையான பகுதி. பாடலைப் படிக்கும் போதே நாவில் தேனருவித்திரை எழும்பி ஓடி வருகிறது. அம் மலையை நேரில் காணும் வாய்ப்பு ஏற்பட்டால் நம் உள்ளம் உவகைக் கடலாக மாறிவிடும் என்பதில் ஐயமுண்டோ ! குற்றால மலையின் பேரழகை நேரில் காணும் வாய்ப்பு நமக்கு இல்லையென்றே வைத்துக்கொள்வோம். அதனால் எவ்வித இழப்பும் இல்லை. இராசப்பக் கவிராயர் அம் மலையின் எழில் நலத்தைத் தம் கவிதை என்னும் கருவியால் படம் பிடித்து ஒவ்வொரு காட்சியாகக் காட்டிச் செல்லுகிறார். அவரைத் தொடர்ந்து செல்லுவோம்.

குற்றால மலையின் உச்சியிலிருந்து பல அருவிகள் இன்னிசை எழுப்பிக்கொண்டு இழிந்து வருகின்றன, வரும்போது முத்துக்களை கழற்சிக்காய்களாக வீசி விளையாடிக்கொண்டு ஓடி வருகின்றன. அருவிக் கரைகளில் பரவியிருக்கும் மணலில் சிறு வீடு கட்டி, கொஞ்சு மொழிக் கோதையர் செஞ்சொற் பேசி விளையாடு கின்றனர். அவ் வீடுகளைத் தம் திரைக் கைகளால் அழித்துக்கொண்டு ஓடுகின்றன அவ் வருவிகள். மலையில் வீழ்ந்த கிழங்கைத் தோண்டியெடுத்தும், தேனெடுத்தும் பொழுதைக் கழிக்கின்றனர் மக்கள். தினையை உரலிலிட்டு, கைவளை குலுங்க யானைக் கொம்பால் குற்றுகின்றனர் பெண்டிர். 'பிறகு தேனையும் தினைமாவையும் பிசைந்து வயிறார உண்டு, மனமார மலை வளம்பாடி ஆடுகின்றனர்.

அம் மலைமீது நிறைந்து வாழும் வானரக் கூட்டம் தேமாவின் தீங்கனிகளைப் பறித்தெடுத்துப் பந்தடித்து விளையாடுகின்றது. முகை விரிந்து தேன் துளிர்க்கும் சண்பக மலர்களின் நறுமணம் அருகிலுள்ள வானுலகம் சென்று வீசுகிறது. ஆடும் அரவு ஈனும் மாணிக்கங்கள் எங்கணும் பேரொளி வீசுகின்றன. வட்ட நிலா வானத்தில் எட்டிப் பார்க்கிறது. அதைச் சோற்றுக் கவளமென்று எண்ணிய யானை ஒன்று, ஓடிப்பற்ற முயல்கிறது. தினைவிதைப்பதற்காக வேடுவர்கள் மலைமீதுள்ள காடுகளைத் தீயிட்டு அழிக்கின்றனர், அத் தீயில் பட்டு எரியும் சந்தன மரங்களும், குங்கும மரங்களும் காடெங்கும் தங்கள் நறுமணத்தைப் பரப்புகின்றன. வரையாடுகள் எங்கும் குதித்து விளையாடுகின்றன. குற்றாலமலை மிகவும் உயர்ந்திருப்பதால், காகம் அம் மலையுச்சியையடைய முடிவதில்லை. உயர்த்து பெருமிதத்தோடு நிற்கும் அம் மலையுச்சிகளில் மேகக் கூட்டங்கள் படிகின்றன. வானத்தில் தோன்றும் இடி முழக்கம், முழவின் ஓசைபோல் அதிர்கிறது. அம் முழக்கத்திற்கேற்ப மயிலினங்கள் தோகை விரித்தாடுகின்றன. இயற்கையின் இருப்பிடமாய், எழில் வளத்தின் கொள்கலமாய் விளங்கும் இம் மலையைப் பற்றி, சைவ சமய குரவராகிய திருஞான சம்பந்தர் இனிமை சொட்டச் சொட்டப் பாடியிருக்கிறார். அப்பாட்டுப் பின் வருமாறு:-

"வம்பார் குன்றம் நீடுயர் சாரல் வளர் வேங்கைக்
கொம்பார் சோலைக் கோலவண் டியாழ்செய் குற்றாலம்
செல்வம் மல்கு செண்பகம் வேங்கை சென்றேறிக்
கொல்லை முல்லை மெல்லரும் பீனும் குற்றாலம்
பக்கம் வாழைப் பாய்கனி யோடு பலவின்தேன்
சொக்கின் கோட்டுப் பைங்கனி தூங்கும் குற்றாலம்
மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கனி மாந்தும் குற்றாலம்
மைம்மா நீலக் கன்னியர் சாரல் மணிவாரிக்
கொய்மா ஏனல் உண்கிளி ஓப்பும் குற்றாலம்
போதும் பொன்னும் உந்தியருவி புடை சூழக்
கூதன் மாரி நுண்டுளி தூங்குங் குற்றாலம்
அரவின் வாயின் முள்ளெயி றெய்ப்ப அரும்பீன்று
குரவம் பாவை முருகமர் சோலைக் குற்றாலம்
பெருந்தண் சாரல் வாழ்சிறை வண்டு பெடைபுல்கிக்
குருந்தம் ஏறிச் செவ்வழி பாடுங் குற்றாலம்".

இவ்வாறு இலக்கியப் புகழ் பெற்று விளங்கும் குற்றாலம் மலைபடு பொருள்களுக்கும் பெயர் பெற்றது. கொய்யா, பம்பிளிமாஸ், வாழை, மா, பலா, ஆரஞ்சு, வங்கிஸ்தான், தென்னை, கழுகு, சந்தனம், குங்கிலியம், செண்பகம், ரோஜா, முல்லை, ஜாதிக்காய், கிராம்பு, ஏலம், முதலியன இங்கு நிறைய விளைகின்றன, அருவி நீரும், இளந்தென்றலும் இங்கு வாழ்வோரின் உள்ளத்தை உவகையிலாழ்த்துவதோடு உடலுக்கும் நலம் பயக்கின்றன. இங்கு அழகிய வண்ணக் கற்கள் பல வடிவங்களோடு சிதறிக்கிடந்து வைரத்தைப் போன்று ஒளி வீசுகின்றன. எங்குப் பார்த்தாலும் பசுமரங்கள்! நீல நிறமான மலைமுகடுகள்! மஞ்சு தவழ்ந்து மகிழ்ந்து ஆடும் குன்றுகள் ! அக்குன்றுகளைச் சுற்றியுள்ள காடுகளில் ஆயிரம் ஆயிரம் வண்ண மலர்கள் ! எங்கு பார்ப்பினும் வருவாய் நல்கும் வளமிக்க காஃபித் தோட்டங்கள்!

குற்றாலம் என்ற பெயரால் தமிழகத்தில் இரண்டு ஊர்கள் உள்ளன, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள இக்குற்றாலம், நீர்வீழ்ச்சிக்குப் பெயர் பெற்ற ஊா; இன்பவாழ்விடம். தென்காசியிலிருந்து மேற்கே மூன்றரைக்கல் தொலைவிலுள்ளது. இது மேற்குமலைத் தொடரின் தென் கிளையின் மேல் சுமார் 550 அடி உயரத்தில் அமையப் பெற்றுள்ளது. இது குறும்பலா, திருக்குற்றாலம் முதலிய இருபத்தொரு பெயர்களால் வழங்கும். இவ்வூருக்கு அண்மையில் ஓடும் நெடுஞ் சாலைகளிலிருந்து, பல கிளைப் பாதைகள் வலை பின்னினாற்போல் அமைந்து இவ்வூரை இணைக்கின்றன. ஐரோப்பியரும் இந்திய நாட்டுச் செல்வரும் இந்நகரில் விரும்பி வாழ்கின்றனர். குறிஞ்சியழகும், குளிர் தென்றலும், நீர் வீழ்ச்சிகளும், குறும்பலாவீசர் கோவிலும், இவ்வூருக்குப் பெருஞ் சிறப்பு நல்குகின்றன. ஆண்டுக்கு இங்கு 60 அங்குல மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் திங்கள் வரை 'அரியங்காவுக் கணவாய்' வழியாகத் தென் மேற்குப் பருவக்காற்றினால் துரத்தப்பட்ட மேகக் கூட்டங்கள் திரள் திரளாக இங்கு வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில் இச்சமயத்தில் வேறு எங்கும் மழை கிடையாது. ஆனால் குற்றாலமும் அதைச் சுற்றியுள்ள சரிவுகளும் நிறைந்த மழையைப் பெறுகின்றன. மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் வானத்தில் மிதந்து திரியும் மேகக் கூட்டங்களிடையே புகுந்து வீசும் காற்று குளிர்ச்சி பெற்று, குற்றால நகரின் வெப்ப நிலையைப் பத்து முதல் பதினைந்து டிகிரிவரை குறைத்து விடுகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கோடைக்காலத்தில் மக்கள் இங்கு வந்து திரளாகக் கூடுகின்றனர். ஜூன் முதல் செப்டம்பர்வரை, இங்கு மக்கள் மிகுதியாகத் தங்கும் சிறப்புக் காலமாக இருந்து வருகிறது.

குற்றாலமலையில் தோன்றும் சிற்றாறு {சித்திரா நதி) சம நிலத்தை அடைவதற்கு முன் பல நீர் வீழ்ச்சிகளாக விழுந்து ஒன்று கூடுகின்றது. சித்திரா நதி 200 அடி உயரத்திலுள்ள காட்டிலிருந்து கீழே விழுந்து சமவெளியை அடைகிறது. இது வேத அருவி எனப்படும். இதைக் கீழிருந்து பார்த்தால், அருவி விண்ணிலிருந்து குதித்து வருவது போன்று தோன்றும். இவ் வீழ்ச்சியின் நடு வழியிலுள்ள ஒரு பாறை அருவியைத் தடுக்கிறது. அப்பாறையில் நீர் விழுந்து விழுந்து மிக அழகான ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் அருவி பாய்ந்து பொங்கி எழுவது, கடல் பொங்கி எழுவது போலத் தோன்றும். எனவே, இதற்குப் 'பொங்குமாங் கடல்' என்று மிகப் பொருத்தமாகப் பெயரிட்டிருக்கின்றனர். இப்பொங்குமாங் கடலிலிருந்து கீழே விழும் அருவியில் தான் மக்கள் குளிப்பர். குற்றால அருவி எனப்படும் இதில் குளித்தால், உடலில் ஒரு புத்துணர்ச்சி மலரும்; உடல் நலம் பெறும்.

குற்றாலத்தைவிடக் குளிர்ச்சியான மலைகள் பல உள. ஆயின், குற்றாலத்தைப்போல் மக்கள் நீராடுவதற் கென்று அமைந்த சீரான அழகுடைய அருவி வீழ்மலைப் பதி எதுவும் இல்லை, சிற்றாறு பல பகுதிகளாகப் பிரிந்து வீழ்ந்து அப்பகுதியையும் அருகிலிள்ள இடங்களையும் வளப்படுத்துகிறது. மலைமேல் பொழியும் பெரு மழையே இவ்வாற்றை உருக்கொள்ளுமாறு செய்கிறது. பிரிந்து விழும் இவ்வருவிகளுக்குப் பல பெயர்கள் வழங்குகின்றன. எல்லாவற்றிற்கும் உயரமாக விழும் அருவி தேனருவியாகும். அது மேலிருந்து விழும் இடத்தில் தேன் கூடு அதிகமாக இருப்பதால் இப்பெயர் பெற்றது போலும். இதற்குச் சற்றுக் கீழாக விழும் அருவி சண்பகதேவி அருவி என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது. இவ்வருவி விழும் இடத்தில் சண்பகதேவி என்ற அம்பிகை, கோவில் கொண்டிருக்கிறாள். இவ்விடத்தை முன்னர் சண்பக அடவி என்று முன்னோர் அழைத்தனர். முதலில் இவ்விடத்தில் சண்பக மரங்கள் நிறைய இருந்திருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் கீழே தரையில் விழுவதை வட அருவி என்று அழைக்கின்றனர். இது வடதிசையில் அமைந்து இருப்பதால் இப்பெயர் பெற்றது. இதைப் பெரிய அருவி என்றும் கூறுகின்றனர். இதன் அளவு நோக்கி இப்பெயர் இடப்பட்டிருக்க வேண்டும். மிகவும் அளவில் சிறியதாக விழும் அருவி சிற்றருவி என்று அழைக்கப்படுகிறது. ஐந்தருவி என்ற மற்றொரு அருவியும் இருக்கிறது. இது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்கிறது. இவை ஐந்தும் தனித்தனியே பத்து கஜ தூரத்திலிருந்து விழுகின்றன. பொங்குமாங் கடலி லிருந்து சுமார் 2 கல் தொலைவு குறுகிய செங்குத்தான பாதையின் வழியாகப் போனால் சண்பக அருவி தென்படும். போகும் வழி நெடுக மா, பலா, கமுகு, ஏலம், கிராம்பு முதலிய மரங்கள் செழித்து வளர்ந்திருக்கும். மேலும் 2 கல் சென்றால் தேனருவியை அடையலாம். குற்றால நாதர் கோவிலுக்குத் தென் மேற்கில் 11 கல் தொலைவில் ஐந்தருவி உள்ளது. இங்குக் குளிக்கலாம்.

நீர் வீழ்ச்சி விழும் பாறையில் பல சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குளிக்கும் கட்டத்திலிருந்து சில நூறு அடி தூரத்தில், ஆற்றின் கரையில் குற்றால நாதர் கோவிலமைந்துள்ளது. விழாக் காலங்களில் இன்னிசை முழக்கோடு இவ்விறைவனை, அருகிலுள்ள தீர்த்தவாரி மண்டபத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லுகின்றனர். பிறகு நீர்வீழ்ச்சியில் இறைவனைக் குளிப்பாட்டுகின்றனர். நாள்தோறும் கோவில் குருக்கள் தான் சிவலிங்கங்களுக்குப் பூசை நடத்துகின்றார். புண்ணிய நாட்களில் சித்திரா நதி, புனித கங்கையாகக் கருதப்படுகிறது. இந் நீர்வீழ்ச்சிகளின் சிறப்பால், குற்றாலம் ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது, ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான யாத்திரிகர்கள் குற்றால நாதரைத் தரிசிக்க இங்கு வந்து கூடுகின்றனர், திருக்குற்றால ஸ்தல புராணத்தில் இவ்வூர் 'திரி கூடாசலம்' (மூன்று சிகரங்களைக் கொண்ட மலை.) என்று குறிப்பிடப்படுகிறது. இங்குக் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவன் 'திரிகூடாசலபதி' என்றும், 'திரிகூட நாதர்' என்றும் குறிப்பிடப்படுகிறான். திரிகூடாசலம் என்ற பெயரே 'திருக்குற்றாலம்' என்றும், குத்தாலம்' என்றும் மருவி வழங்குவதாகக் குறிப்பிடுகின்றனர்.

சைவ சமய குரவர்களில் முதல்வரான மணிவாசகப் பெருமான் குற்றால நகரின் சிறப்பை வான்கலந்த மாணிக்கவாசகத்தால் பாடி மகிழ்ந்தார். அவருக்குப் பின் 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர் திருக்குற்றாலப் பதிகம், திருக்குறும்பலாப் பதிகம் என்ற இரு பாமாலைகளால் குற்றால நாதரை ஒப்பனை செய்து பரவி மகிழ்ந்தார். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மேலகரம் மகாகவி திரிகூட ராசப்பன் கவிராயர் 'திருக்குற்றாலக் குறவஞ்சி', 'திருக்குற்றால மாலை', 'திருக்குற்றால ஊடல்' என்ற நூல்களைப் பக்திச் சுவையும் இன்பச் சுவையும் நனி சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். திருகூட நாதர் கோவில் குறுமுனியான அகஸ்தியரால் இங்கு நிறுவப்பட்டது என்று கூறப்படுகிறது.

பரமசிவனுக்கும் பருவதராசன் மகளாகிய பார்வதிக்கும் திருக்கயிலாயத்தில் திருமணம் நிகழ்ந்தது. அண்டத்தின் பல பகுதிகளிலிருந்து இறைவனின் திரு மணக்கோலத்தைக் கண்டு மகிழக் கோடிக்கணக்கானவர் கயிலையில் வந்து கூடினர். கூட்டம் மிகுதியாக இருந்ததால் வட திசை தாழ்ந்து, தென் திசை உயர்ந்தது. இதைச் சரி செய்யப் பெருவிரல் பருமனுள்ள குறுமுனியை இறைவன் தென் திசை நோக்கி அனுப்பினான். தென் திசைக்கு வந்த குறுமுனி பல புண்ணி யத்தலங்களைத் தரிசித்தார். திருக்குற்றாலத்திற்கு வந்து அங்குக் கோயில் கொண்டு எழுந்தருளியிருந்த திருமாலை வணங்கக் கோவிலுக்குச் சென்றார். சிவ வேடம் தாங்கியிருந்த குறுமுனிவர் கோவிலுக்குள் அனுமதிக் கப்படவில்லை. உடனே இலஞ்சியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருந்த முருகப்பிரானிடம் சென்று இதை முறையிட்டார். முருகனின் அருள் மொழியை மேற்கொண்டு, திருமண்ணும் துளசி மாலையும் தாங்கிய வண்ணம் குற்றாலத்திற்கு வந்தார். இவருடைய வைணவக் கோலத்தைக் கண்ட கோவில் நம்பிகள், இவரை உள்ளே அனுமதித்தனர். கோவிலுக்குள் நுழைந்த குறுமுனி திருமாலைத் தம் திருக்கரத்தால் தொட்டார். உடனே அப் படிமம் சிவபெருமானாக மாறியது. இவ்வாறு வைணவத் தலமாக இருந்த குற்றாலம் அகத்தியரால் சிவத் தலமாக மாறியது. இப் புராணக் கதையில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று கூற முடியாது. ஆனால் மாற்றம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் இம் மாற்றம் அரசியல் மாறுபாட்டால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும். இக் கோவிலில் 15-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட பாண்டிய அரசர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இதன் தென்புறத்தில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள சதுரத் தூண், ஒன்று நாட்டப்பட்டுள்ளது. இத் தூண் தென்காசிக் கோவிலுக்கு முன்பு நாட்டப்பட்டுள்ள தூணை உருவத்தில் ஒத்திருக்கிறது.

நீர்வீழ்ச்சிகளின் அடிவாரத்திலும் ஆற்றின் வட கரையில் கோவிலுக்கருகிலும், பிரயாணிகள் தங்குவதற் கென்று பல மண்டபங்கள் அமைந்துள்ளன. மண்டபங்களுக்கு முன்புள்ள திறந்த வெளி, தள வரிசைக் கற்களால் அமைந்தது. ஆற்றின் குறுக்கே நடை பாதையாக ஒரு பாலம் அமைந்துள்ளது. அங்குள்ள இரண்டு பெரிய மண்டபங்களும் 18- ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சொக்கம்பட்டிப் போளிகர்களால் கட்டப்பட்டவை. ஒரு மண்டபம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. மற்றொரு மண்டபம் கொடி மரத்தோடு விளங்குகிறது. இந்த மண்டபத்தில், இதைக் கட்டிய மன்னனின் சிலையும், அவன் சகோதரனின் சிலையும், இராணுவ உடையோடு காட்சியளிக்கின்றன. குற்றால நாதர் கோவிலிலிருந்து சில நூறு கஜங்களுக்கு அப்பால் அமைந்துள்ள மேட்டு நிலத்தின் உச்சியில், இக் கோவிலுக்குச் சொந்தமான வேறொரு சிறு கோவிலும் அமைந்துள்ளது. இது சித்திர சபை என்று அழைக்கப்படுகிறது. அதில் ஆடவல்லான் (நடராசப் பெருமான்) அபிநயக் கோலத்தோடு காட்சியளிக்கிறான். அக் கோவிலின் சுவர்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இக் கோவிலின் எதிரில் ஒரு தெப்பக் குளம் உள்ளது. ஆண்டுதோறும் சனவரித் திங்களின்போது இக் குளத்தில் தெப்பத் திருவிழா (Foating Festival) நடைபெறும். ஆற்றின் இடதுபுறமாகக் கோவிலுக்கருகில் ஒரு பெரிய சத்திரம் அமைந்துள்ளது. இது கி. பி. 1700-இல், இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் உணவும் உறையுளும் வழங்குவதற்காகச் சொக்கம்பட்டிப் போளிகர்களால் கட்டப்பட்டது. இச் சத்திரம் இப்போது மாவட்டக் கழகத்தாரின் பொறுப்பில் உள்ளது. இச் சத்திரத்தை ஒட்டிப் பல அறைகளோடு கூடிய ஒரு கட்டிடம் இப்போது மாவட்டக் கழகத்தாரால் கட்டப்பட்டுள்ளது. அது பிரயாணிகளின் தங்கல் மனையாக இப்போது பயன்படுகிறது. பாதைக்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள மண்டபம் 'வலங்கைப் புலி விலாஸ்' என்று அழைக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத் தண்டலர் குற்றாலத்தில் தங்கும்போது, இது அவருடைய அலுவலகமாகப் பயன்படுகிறது. இம் மண்டபம், புகழ் பெற்ற 'பெரியசாமி வலங்கைப் புலித் தேவ'னால் கட்டப்பட்டதாகும். பல நூற்றாண்டுகளாகத் திருக்குற்றாலம் ஒரு புண்ணியத் தலமாக மட்டும் தமிழ் மக்களால் கருதப்பட்டது. ஆனால் வெள்ளையர்கள் தமிழகத்தில் குடி புகுந்ததும், குற்றாலம் கோடை வாழ்விடமாக மாறி எல்லோரையும் தன்பால் ஈர்க்கத் தொடங்கியது.

குற்றால மலையின் பொருத்தமான தட்ப வெப்ப நிலையை அறிந்த ஐரோப்பியர், வெளி நாட்டுப் பயிர்களை இங்குக் கொணர்ந்து பயிரிடத் தொடங்கினர். கி. பி. 1795 முதல் 1800 வரையில் ஜாதிக்காய், இலவங்கம் முதலியவற்றைப் பயிரிட்டு இங்குச் சோதனை நிகழ்த்தினார்கள். 'மலாக்கா' நாட்டுப் பயிர்கள் எல்லாம் இங்குக் கொணரப்பட்டுப் பயிரிடப்பட்டன. கி. பி. 1800 முதல் 1806 வரை கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வணிகத் துறைத் தலைவராகத் திருவாளர் காசாமேஜர் (Mr. Casamajor) என்பவர் பணியாற்றி வந்தார் (காசிமேசிபுரம் என்ற சிற்றூர் இவர் பெயராலேயே ஏற்பட்டது.) இவருடைய பெருமுயற்சியால் குற்றாலமலைச் சரிவுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பல தோட்டங்கள் நிறுவப்பட்டன, இலவங்கப் பட்டை பயிரிடும் தோட்டமொன்று, கொக்கரக் குளத்தில் அமைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட நடுவர் தங்கியிருந்த பங்களாத் தோட்டத்திற்கு அடுத்தாற்போல் இத் தோட்டம் அமைந்திருந்தது. கி. பி. 1813-ஆம் ஆண்டு குற்றால மலையில் விளைந்த ஜாதிக்காய், இலவங்கம், இலவங்கப்பட்டை ஆகியவை ஐரோப்பிய நாட்டு விற்பனைக்காகச் சென்னைக்கு அனுப்பப்பட்டன. ஆனால், அவை உயர்ந்த தரத்தைச் சார்ந்தவையல்ல என்று ஆங்கில்வணிகர்கள் கூறினர். இப்பயிர்த் தொழில் இங்கு நல்ல வருவாய் அளிக்காததால் கம்பெனி வணிகத் துறையார் இத்தோட்டங்களை நிலவரித் துறை (Reveriue department) யிடம் ஒப்படைத்துவிட்டனர். ஆரம்பத்திலிருந்தே இலவங்கப்பட்டை இங்கு நன்றாக விளையாததால், திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் இருந்த இலவங்கப்பட்டைத் தோட்டங்கள் மட்டும் அரசியலாரின் சோதனைக் களங்களாகப் பயன்படுத்தப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து, குற்றால மலையில் விளைந்த பொருள்கள் மீண்டும் விற்பனைக்காக இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டன. அப்பொழுதும் பெருத்த ஏமாற்றமே ஏற்பட்டது. குற்றாலமலைச் சாதிக் காய்கள் ஐரோப்பியச் சந்தையில் எடுபடவில்லை. அவைகளின் விலையைவிடக் கப்பற்கூலி மிகவும் அதிகமாக இருந்தது. இங்கு விளைந்த காஃபியும் உயர்ந்த ரகத்தைச் சார்ந்ததல்ல. ஜாவாவில் விளைந்த காஃபியோடு இதனால் போட்டியிட முடியவில்லை. காஃபியைப் பயிரிடுவதற்கு ஏற்பட்ட செலவு, மிகவும் அதிகமாக இருந்தது. குற்றாலத்திலிருந்த காஃபித் தோட்டங்களைத் திருவாங்கூரில் வாழ்ந்த ஓர் ஐரோப்பியத் தோட்ட முதலாளி, ஆண்டுக்கு ரூ. 200 வீதம் 1835- ஆம் ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டார். ஆகையினால் பெருஞ்செலவில் அரசியலார் நடத்திவந்த காஃபிப் பயிர்த்தொழிற் சோதனை கைவிடப்பட்டது. திருநெல்வேலித் தண்டலராக இருந்த திருவாளர் ஈ. பி. தாமஸ் தோட்ட வேலையில் மிகவும் ஆர்வமுள்ளவர். கி.பி. 1843-ஆம் ஆண்டு குற்றாலத்தில் மீண்டும் பயிர்த் தொழிலை முழுமுயற்சியோடு தொடங்கினார். சாதிக்காய்ச் செடிகளை இங்கு நட்டதோடு, அவ்விதைகளைத் திருவாங்கூர், சேலம் மாவட்டங்களுக்கும் வழங்கினார். திருவாங்கூர் மலைகளிலும், சேர்வராயன் மலைகளிலும் அவை நடப்பட்டன. தாமஸ் தாம் பயிரிட்ட சாதிக் காய்ச் செடிகளுக்கு நல்ல உரமிட்டார்; களை எடுத்தார்; கிளைகளை வெட்டி விட்டார்; நல்ல முறையில் அவைகளைக் கண்காணித்தார், அவருடைய பேருழைப்பால், கி. பி. 1840 முதல் 1850-ஆம் ஆண்டிற்குள் சாதிக் காய் மரங்கள் நிறைய வளர்ந்தன. அப்பொழுது அத் தோட்டங்கள் 40 முதல் 50 ஏக்கர் வரை பரப்புடையனவாக இருந்தன. அத்தோட்டத்தில் சாதிக்காய் இலவங்கம், காஃபி, சிறிதளவு தேயிலை, சாக்லேட் மரம், மங்குஸ்டீன் முதலியவை நல்லமுறையில் விளைந்தன. கி. பி. 1848-ஆம் ஆண்டு தாமஸ் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அரசியலார் தோட்டங்களை விற்றுவிட எண்ணினர். ஆண்டுதோறும் அத்தோட்டத் தொழிலுக்காக ரூ. 3000 அரசியலரால் செலவிடப்பட்டது. அதுவே தாமஸ் அவர்களின் வெற்றிக்குக் காரணம். ஆனால் இச் செலவு மிகவும் அதிகமானதாக அரசியலாரால் கருதப்பட்டது. இலாபகரமாக இல்லாத இத்தொழிலைக் கைவிட முடிவு செய்தனர். கி. பி. 1853-ஆம் ஆண்டு பான்புலிக்கு மேலே இருந்த ஒரு தோட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதியை ரூ. 9841- க்கு விற்றுவிட்டனர். அதுவும் சில ஆண்டுகளில் திருவாங்கூர் அரசியலாரின் கைக்கு மாறியது.

விற்கப்பட்ட தோட்டங்கள் மொத்தம் 19. அவற்றில் ஒன்பது தோட்டங்கள் காவற் காடுக (Reserved forests) ளாக மாற்றப்பட்டன. மீதியிருந்த 10 தோட்டங்களில் குறிப்பிடத்தக்கது 'அருவிக்கரைத்தோட்டம்.' இது நீர் வீழ்ச்சியின் உச்சிக்கருகில் அமைந்துள்ளது. இது சிவகிரி ஜமீன்தாரினிக்கு உரிமையுடையதாக இருந்தது. மீதி 9 தோட்டங்களும் குற்றாலத்திற்கு மேல் மூன்று கால் தொலைவில், சித்திரா நதி மேலே ஓடிவரும் பகுதியில் அமைந்துள்ளன. இவ்விடம் இரண்டு செங்குத்தான மலைத்தொடர்களுக்கு நடுவில் அமைந்துள்ள குறுகிய பள்ளத்தாக்கில் உள்ளது. இத் தோட்டங்களில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 'பரதேசிப் புதை' என்னும் தோட்டமாகும். இத்தோட்டம், மற்ற எட்டுத் தோட்டங்களையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு பேரடைஸ் எஸ்டேட்' (Paradise Estate) என்ற பெயரோடு இப்போது விளங்குகிறது. இத்தோட்டத்தின் அருகில் ஒரு பெரிய குகை இருக்கிறது. இது இரண்டு பெரிய பாறைகளாலானது. 30 அடி ஆழமுடையது. தாழ்வான ஒரு பாறையின் மீது குடை கவித்தாற் போன்று மற்றொரு பாறை படிந்துள்ளது. அப்பாறையைக் கடந்து கதிரவன் ஒளியும், மழையும் கூட உள்ளே எட்டிப்பார்க்க முடியாது. இக்குகையின் வாயிலில் 15 எழுத்துக்களால் ஆன ஒரு கல்வெட்டுக் காணப்படுகிறது. ஆனால், அதன் பொருள் இது வரையிலும் யாருக்கும் விளங்கவில்லை. அக் குகையில் வாழ்ந்த பரதேசியைப் பற்றியும் ஒன்றும் தெரியவில்லை, முன்னாட்களில் பரதேசித் தோட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள தோட்டங்களிலும் பணிபுரிந்த கூலிகள் தங்குவதற் கேற்ற இடமாக இக்குகை பயன்பட்டு வந்தது.

'பேரடைஸ் எஸ்டேட்' என்று சொல்லக்கூடிய ஒன்பது தோட்டங்களும், அருவிக் கரைத்தோட்டமும், தூத்துக்குடியில் பிரபல வணிகராக விளங்கிய சி. எச். ஆர். கோக் என்ற டச்சுக்காரரால் விலைக்கு வாங்கப்பட்டன. காஃபி பயிரிடுவதற்காக அருகிலுள்ள நிலங்களையும் வாங்கி அவர் பண்படுத்தினார். அவருக்குப் பிறகு அந்நிலம் பலருடைய கைக்கு மாறித் தற்போதைய சொந்தக்காரரை அடைந்திருக்கிறது. இவைகளன்றி வேறுபல தோட்டங்களும் குற்றாலமலையின்மீது உள்ளன. அவைகளில் தெற்கு மலைத் தோட்டம், ஹோப் எஸ்டேட், குளிராத்தி, திரிகூடா சல பர்வதம் என்பவை குறிப்பிடத்தக்கவை. தெற்கு மலைத் தோட்டத்திலும், பரதேசிப் புதையிலும், அருவிக்கரைத் தோட்டத்திலும், காஃபி நல்லமுறையில் பயிராகின்றது. இலவங்கம், இலவங்கப்பட்டை , சாதிக்காய், மங்குஸ்டீன் முதலியனவும் இங்குப் பயிரிடப்படுகின்றன.

குற்றாலம் கோடைவாழ் நகரமாக மாறியதும், திருநெல்வேலித் தண்டலர், பாளையங்கோட்டை இராணுவத் தலைவர் (Commanding officer), வேறுபல உயர்ந்த அலுவலில் பணியாற்றும் ஐரோப்பியர் ஆகியோர் இங்கு மாளிகை அமைத்துத் தங்குவது பெருவழக்கு ஆகிவிட்டது. இங்குள்ள திருவாங்கூர் மாளிகை (Travancore Residency,) திருவாங்கூர் அரசபரம்பரையினருக்குச் சொந்தமானது. திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் தண்டலராக வந்த லூசிங்டன் துரையுவர்களுக்கு இம்மாளிகை அமைந்துள்ள நிலம் உரிமையுடையதாக விளங்கியது. பாளையங்கோட்டையில் வணிகத்துறைத் தலைவராக விளங்கிய திருவாளர் ஜான்சல்லிவன் துரை, அந்நிலத்தை வாங்கி அழகிய இம்மாளிகையை எழுப்பினார். பிறகு திருநெல்வேலியின் துணைத் தண்டலராக விளங்கிய டபிள்யூ. ஓ. சேக்ஸ்பியர் என்பாரின் கைக்கு இது மாறியது. பிறகு திருவாளர் காக், சேக்ஸ்பியரிடமிருந்து இதை வாங்கித் தம் மகளுக்கு அளித்தார். அந்த அம்மையாரிடமிருந்து திருவாங்கூர் அரசர் இதை வாங்கினார். ஜி. ஏ. ஹக்ஸ் என்பாரால் கட்டப்பட்ட மாளிகை, 'கண்ணாடி பங்களா' என்ற பெயர்கொண்டு விளங்குகிறது. கண்ணாடி பதிப்பிக்கப் பெற்ற பலகணிகளையுடையதாக விளங்கியதால், புதுமை நோக்கி மக்கள் இவ்வாறு அழைத்தனர். பல மாறுதல்களுக்குப் பிறகும், இம் மாளிகை இப்பெயர் கொண்டே விளங்குகிறது. திருவாளர் ஹக்ஸ் தம் மகனான இராம்சிங்கிற்கு இம் மாளிகையைக் கொடுத்துவிட்டார். கொடுக்கும்போது "பாளையங்கோட்டையில் வாழும் இராணுவத்தலைவர்கள் எப்போது விரும்புகிறார்களோ, அப்போது இதில் தங்க அனுமதிக்க வேண்டும்" என்று கூறிக் கொடுத்தார்.

இப்பொழுது சில காலமாக ஐரோப்பியர்கள் இங்கு அதிகமாகத் தங்குவதில்லை. ஓரிரு ஐரோப்பியப் பாதிரிகளே இங்குக் குடியிருக்கின்றனர். மற்றவர்களெல்லாம், உதகமண்டலத்திற்கும் கோடைக்கானலுக்கும் சென்றுவிட்டனர். இப்போது தமிழ்நாட்டுச் செல்வர்கள் இங்குத் தங்குவதற்காகச் சிறிதும் பெரிதுமான பலமாளிகைகளை எழுப்பியுள்ளனர். அவைகள் பொதுவாக 'இந்தியன் வில்லாஸ்' என்று அழைக்கப்படுகின்றன. அவைகள் பெரும்பாலும் கோவிலுக்கருகிலும், நீர்வீழ்ச்சிக்கருகிலும் கட்டப்பட்டுள்ளன.

குற்றாலத்தின் இயற்கைக் காட்சிகள், காண்போருக்கு இந்திய நாட்டின் மேற்குக் கரையான மலையாளக் கரையை நினைவூட்டுகின்றன. தென்காசியிலிருந்து குற்றாலம் செல்லும்பாதை, பரந்த பசுமையான நெல் வயல்களிடை (ஆண்டுக்கு 9 திங்கள்கள் பசுமையாகக் காட்சியளிக்கும்)யிலும், தென்னை , மா, பலா, கமுகு முதலியவை செழித்து வளர்ந்துள்ள சோலைகளிடையிலும் புகுந்து செல்லும் காட்சி உள்ளத்திற்குப் பேருவகை பயக்கும். மலையிலிருந்து இழிந்துவரும் அருவிகள் சித்திரா நதியை அடைவதற்கு முன் பல ஏரிகளில் தேக்கிவைக்கப்படுகின்றன. அவைகளிலிருந்து பல வாய்க்கால்கள் வலை பின்னினாற் போன்று ஓடி இச் சோலைகளை வளப்படுத்துகின்றன. தாவர இயல் வல்லுநர்களுக்கும், (Botonist) வேட்டை விரும்பிகளுக்கும் குற்றாலமலை பெரிதும் இன்பம் பயக்கும் இடமாக விளங்கு கிறது. கி. பி. 1835 ஆம் ஆண்டு, டாக்டர் வைட் என்பார் இம்மலையிற் போந்து, 20 சதுரமைல் பரப்பில் 1200 வகையான தாவரங்களைச் சேகரம் செய்தார். ஏறக்குறைய 2000 வகையான தாவரங்கள் இங்கு உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். சாம்பர் என்னும் பெரிய மானினம் இங்கு அதிகமாகக் காணப்படுபடுகின்றது. மலையின் உயரமான பகுதிகளில் வரையாடுகள் நிறையக் காணப்படுகின்றன. புள்ளிமான் அருகிக் காணப்படுகின்றது. புலி சில சமயங்களில் தென்படுகிறது. காட்டுப் பன்றிகளை எந்நேரத்திலும் எவ்விடத்திலும் காணலாம். காட்டுக்கோழிகள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.

  1. சேலத்தில் இவர் பெயரால் இன்றும் ஒரு வீதி உள்ளது.