தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்/057-066

விக்கிமூலம் இலிருந்து

ராஜாஜியின் பாராட்டு

கலைமகளில் ஒரு சமயம் ‘பிச்சைப் பாட்டு’ என்ற தலைப்பில் ஆசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ஸ்ரீ ராஜாஜி அவர்கள் அப்போது மாம்பலத்தில் இருந்தார். அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு அவர் 22—5—37 அன்று ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

'நமஸ்காரம், கலைமகளின் சில இதழ்கள் நான் பார்க்காமலே தவறிவிடுவது உண்டு. என் தொல்லைகளின் மத்தியில் சில இதழ்களே அதிருஷ்டவசத்தால் பார்த்துப் படிக்கவும் நேரிடுகிறது. இவ்வாறு தங்கள் பிச்சைப் பாட்டுக் கட்டுரையைப் படித்து ஆனந்தம் தாங்காமல் இதை எழுதுகிறேன். அதற்குத் தலைப்பு ஊரைச் சுடுமோ என்று வைத்திருக்கலாம். இத்தகைய ஓர் இரத்தினத்தை நான் எழுதியிருந்தால் அவ்வாறுதான் பெயர் வைத்திருப்பேன், என்ன அழகான கதை! என்ன ரஸம்! "

—இராஜகோபாலாச்சாரி