உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/006

விக்கிமூலம் இலிருந்து

௬. “காயா பழமா?”

ஆட்டின் பெயர் : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று “காயா பழமா?” என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக்கேள்வியையே பெயராகக் கொண்டது.

ஆடுவார் தொகை : இருவர் முதற் பலர் இதை ஆடுவர். இருவர்க்கு மேற்படின் இன்பஞ் சிறக்கும்.

ஆடிடம் : ஆறுங் குளமும் போலும் நீர்நிலைகள் இதை ஆடுமிடமாம்.

ஆடுமுறை : ஆடுவாரெல்லாரும் நீரில் நின்று கொண்டு, ஒவ்வொருவனாய்க் “காயா, பழமா?” என்று கேட்டு நீருட் சுண்டுவர். சுண்டும் விரல் நீர்மேல்படின் ‘தளார்’ என்னும் ஓசையெழும்; நீருள் முற்றும் முழுகின் ஓசையே கேளாது : பாதி முழுகின் ‘டபக்கு’ என்னும் ஓசை பிறக்கும். இவற்றுள், முன்னவை யிரண்டும் காயாம்; பின்னதொன்றும் பழமாம். காயாயின் “காய்” என்றும்' பழமாயின் “பழம்” என்றும், பிறர் கூறுவர். பலர் காயாயின் மீண்டும் சுண்டுவர். ஒருவனே காயாயின், அவன் பிறரை நீருட் பிடித்தல் வேண்டும். அவர் சிறிது தொலைவு சென்றபின், தம்மைப் பிடிக்கச் சொல்வார். அவன் விரைந்து சென்று, நடந்து செல்பவரை நடந்து சென்றும், நீந்திச் செல்பவரை நீந்திச் சென்றும், முழுகிச் செல்பவரை முழுகிச் சென்றும், பிடிக்க முயல்வான். யாரேனும் தொடப்படின், அவனே பின்பு பிறரைப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து விருப்பமுள்ளவரைப் பிடித்து ஆடப்பெறும்.

ஆட்டுத் தோற்றம் : உள்ளான் என்னும் நீர்ப்பறவை நீருள் மூழ்கிச்சென்று மீன் பிடிப்பதினின்று, இவ் ஆட்டுத் தோன்றியிருக்கலாம்.

ஆட்டின் பயன் : நீருள் மூழ்கிய பொருளை யெடுத்தற்கும் முத்துக் குளித்தற்கும் ஏற்ற பயிற்சியை, இவ்விளையாட்டு அளிக்கும்.