தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/014
௨. பாரிக் கோடு
I. நாலாளம் பாரி
ஆடுகருவி : ஏறத்தாழ நாற்கசச் சதுரமான ஓர் அரங்கு கீறப்படும்.
ஆடுவார் தொகை : இதை ஆட எண்மர் வேண்டும்.
ஆடிடம் : இது பொட்டலிலும் அகன்ற முற்றத்திலும் ஆடப்பெறும்.
ஆடு முறை : நந்நான்கு பேருள்ள இருகட்சி அமைக்கப்படும். உடன்பாட்டின்படியோ, திருவுளச்சீட்டின்படியோ, பிறவகைத் தேர்தற்படியோ, ஒரு கட்சியார் அரங்கிற்குள் நிற்க, இன்னொரு கட்சியார் பக்கத்திற்கொருவராகக் கோட்டின் மேல் நின்றுகொள்வர். உள்நிற்பார் கோட்டின்மேல் நிற்பாரால் தொடப்படாமல் வெளியேற வேண்டும். அங்ஙனம் ஒருவன் வெளியேறிவிடினும், உள் நிற்பார்க்கு வெற்றியாய் ஆட்டை முடிந்துவிடும். முதலில் வெளியேறுபவன் கோட்டின்மேல் நிற்பாருள் ஒருவனால் தொடப்பட்டுவிடின், மறிப்பார்க்கு (அதாவது கோட்டின் மேல் நிற்பார்க்கு) வெற்றியாய் ஆட்டை முடியும். அதன்பின், மறிப்பார் உள்நிற்பாராகவும் உள்நிற்பார் மறிப்பாராகவும் மாறவேண்டும்.
II. எட்டாளம் பாரி
இது எண் கசச் சதுரங் கீறிப் பதினறுவரால் ஆடப்படும். எண்மர் உள்நிற்க, எண்மர் பக்கத்திற் கிருவராகக் கோட்டின்மேல் நின்று மறிப்பர். நாலாளம் பாரியும் எட்டாளம் பாரியும் ஆடுமுறை யொன்றே.