தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்/039
௨. புகையிலைக் கட்டை யுருட்டல்
இது ஒருவாறு கண்ணாம்பொத்தி போன்றதே. ஆயின் இதற்கு ஒரு வட்டம் போடப்படும்; அதோடு முந்தித் தொடுவது யார் என்று தீர்மானித்தற்கு, எல்லாரையும் வரிசையாய்க் குனியவைத்து, அவர்கள் நிழலில் புகையிலைக் கட்டையை ஒருவர் உருட்டுவர். அது யார் நிழலிற்போய் நிற்கின்றதோ, அவர் ஏனையோரைத் தொடுதல் வேண்டும்.
பிறரெல்லாம் ஓடி ஒளிந்துகொள்ளுதற்கு இரண்டொரு நிமையங் கொடுக்கப்படும். தொடும் பிள்ளை தொடவரும்போது, எல்லாரும் ஓடிப்போய் வட்டத்திற்குள் நின்றுகொள்வர். வட்டத்திற்குட் சென்றபின் தொடுதல் கூடாது. வட்டத்திற்குட் செல்லுமுன் தொடப்பட்ட பிள்ளை அடுத்தமுறை தொடுதல் வேண்டும். ஒருவரும் தொடப்படாவிடின், முன்பு தொடமுயன்ற பிள்ளையே மீண்டும் தொடுதல் வேண்டும்.
ஒருவர் தொடர்ந்து மூவாட்டை ஒருவரையுந் தொடாவிடின், அவர்மீது ஏனையோர் சிறிது சிறிது குதிரையேறுவதுண்டு. அதன்பின்,மீண்டும் புகையிலைக் கட்டை உருட்டப்படும்.