தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1
தம்பிக்கு
அண்ணாவின் கடிதங்கள்
[முதற் பகுதி]
C. N. அண்ணாதுரை, M. A.
பாரிநிலையம்
184.பிராட்வே.சென்னை-600001
முதற் பதிப்பு: ஜனவரி, 1963
இரண்டாம் பதிப்பு: மார்ச், 1979
விலை: ரூ.8-50
அச்சிட்டோர்: நாவல் ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை-600014.
பதிப்புரை
பத்திரிகைக் கடைகளில் ‘திராவிடநாடு’ வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருந்து, வந்ததும், அதில் ‘தம்பிக்கு’ வந்திருக்கிறதா எனப் பார்த்து, அதைக் கடைமுன்னாலேயே நின்று ஆர்வத்தோடு படிக்கும் தம்பிமார் பலரைப் பார்த்திருக்கிறேன். அதில்வரும் கருத்தோவியங்களை மனப்பாடம் செய்து, பொன்மொழிகளாகச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கும் தம்பிகளையும் கண்டிருக்கிறேன். ‘திராவிடநாடு’ இதழ்களைப் ‘பைண்டு’ செய்து, அதில் கடிதப் பகுதிகளைக் கோடிட்டு வைத்து, நினைக்கும் போதெல்லாம் படித்துப் படித்து மகிழும் தம்பிகளையும் கண்டிருக்கிறேன். இக் கடிதங்கள் இளைய தம்பிமார்கள் உள்ளங்கள் தோறும் நிறைந்திருப்பதுபோலவே தலைவர்களையும் கவர்ந்திருக்கிறது என்பதை நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலுக்கு வழங்கியுள்ள முன்னுரையில் கண்டு இன்புற்றேன். தம்பிமார்களையும் தலைவர்களையும் ஒருங்கே கவர்ந்துள்ள இக்கடிதங்களை நூல்வடிவில் வெளியிடும் வாய்ப்பு எங்கள் நிலையத்துக்குக் கிடைத்திருப்பதை எண்ணி இன்பம் அடைகின்றேன்.
அறிஞர் அண்ணா அவர்கள் 1955-ஆம் ஆண்டிலிருந்து ‘திராவிடநாடு’ இதழில் இக்கடிதப் பகுதியைத் தொடங்கி எழுதி வருகிறார்கள். இவை வாரந்தோறும் தொடர்ந்து வெளிவரவில்லை. சில வாரங்கள் தொடர்ந்தும், சில சமயங்களில் இடையிடையேயும், ஒருசில சமயங்களில் நீண்ட நாட்களுக்கு வராமலும்கூட இருந்திருக்கின்றன. இதில் நாடு, மொழி, அரசு, சமயம், சாத்திரம், கலை, விஞ்ஞானம், நாட்டு நடப்பு போன்ற பலதுறைச் செய்திகள் பற்றியும், கழகத் தலைவர்கள், கழகத் தோழர்கள், தமது நண்பர்கள், உலகத் தலைவர்கள் பற்றிய தமது கருத்துக்களையும், கழகப்பணி வெற்றிபெற—அதன் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேறக் கழகத்தொண்டர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை—செய்ய வேண்டிய தியாகம்—ஆற்றவேண்டிய தொண்டுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றை அந்த அந்தத் துறைகளுக்கு ஏற்பத் தனித்தனியாகப் பிரித்துத் தனித்தனி நூலாக வெளியிட எண்ணி இருந்தேன். அப்படிச் செய்வதால் நாட்கள் கழிவதை எண்ணி, முதலில் ‘திராவிடநாடு’ இதழ்களில் வெளிவந்த வரிசைப்படி வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறேன். இதுவரை வெளிவந்துள்ள கடிதங்கள், 250 பக்கங்கள் கொண்ட தொகுதியாகப் பத்துத் தொகுதிகள் வெளிவரும் அளவிற்கு உள்ளன. தற்பொழுது முதல் இரண்டு தொகுதிகள் வெளிவருகின்றன. தமிழ்ப் பெருமக்களின் பேராதரவினால் மற்றத் தொகுதிகளையும் விரைவில் வெளிக்கொண்டுவர முனைந்துள்ளேன்.
அறிஞர் அண்ணா அவர்கள் முன்னமே அவர்களுடைய நூல்களை வெளியிட எங்கள் நிலையத்திற்கு வாய்ப்பளித்தார்கள். இக்கடிதங்களையும் நூல்களாக்கி வெளியிட இசைவளித்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் இந்நூலுக்கு முன்னுரை அளித்து எங்ககளைப் பெருமைப் படுத்தியுள்ளார்கள். திரு. டி. எம். பார்த்தசாரதி அவர்கள் இந்நூல் வரிசை உருப்பெறுவதில் எங்களுக்குப் பலவகையிலும் உதவியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாரி நிலையம்,
சென்னை-1.
7—1—1963
க. அ. செல்லப்பன்
முன்னுரை
திரு. நாவலர் இரா. நெடுஞ்செழியன், எம். ஏ.
‘அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள்’ நூல் வடிவம் கொண்டு, அழகும் கவர்ச்சியும் ஒருங்கே ஏற்று, என் கைக்கு வரப்பெற்று மிக்க பேருவகையுற்றேன். அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிடநாடு’ இதழ் மூலம் அருமைத் தம்பிமார்களுக்கு எழுதிவந்த முடங்கல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெற்றால், அந்த நூல் கருத்துக்கருவூலமாகத் திகழப்பெறுமே என்ற வேணவா என் உள்ளத்தில் நீண்ட நாட்களாக எழுந்ததுண்டு. என்னைப்போன்றே பல்லாயிரக்கணக்கான தம்பிமார்களுக்கும் வேணவா கிளர்ந்தெழுந்திருக்கும் என்பது உறுதி. அந்த வேணவாவை இனிது நிறைவேற்றி வைக்கும் அரும்பெருந் தொண்டை, ‘பாரி நிலையத்தார்’ செய்திருப்பது கண்டு பூரிப்படைகிறேன். பாரி நிலையத்தாரை வரவேற்றுப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
அறிஞர் அண்ணா அவர்களின் எழுத்து வன்மையையும், அவரது எழுதுகோல் முனையிலிருந்து உருப்பெற்றெழுந்து நாடெங்கணும் வெற்றியுலாவரும் கதைகள்—கட்டுரைகள்—நாடகங்கள்—திரைப்பட வசனங்கள்—எழுத்தோவியச் சுவரொட்டிகள்—துண்டு அறிக்கைகள் ஆகியவற்றையும், அவற்றில் தமிழ்மணம் மிகச் சிறந்த முறையில் கமழ்வதையும், இனிய ஓசை பயக்கும் சொற்கள் அருவியின் வீழ்ச்சியெனத் தங்கு தடையின்றிப் பாய்ந்து துள்ளிக் குதித்து ஓடுவதையும், கருத்துக்கள் செறிந்து காணப்படுவதையும், உவமை நயங்கள் பெருவாரியாக ஆங்காங்குப் பளிச்சிட்டு மின்னுவதையும், அறிவும் ஆற்றலும்—உண்மையும் உயர்வும்—திண்மையும் திட்பமும்—சொல்லழகும் பொருளாழமும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு துள்ளிக் குதிப்பதையும் தமிழ் கற்றறிந்த நல்லறிவு படைத்தார் அனைவரும் நன்கு உணர்வர். தமிழின்பத்தை எல்லா வகையிலும் சுவைக்க விரும்புவோர், இந்நூலைச் சுவைத்தாலே போதும். எல்லா வகையான இனிய சுவைகளும் இதனுள் பொதிந்து கிடக்கின்றன.
படித்து மகிழ்ந்து பயன் பெறுவதற்குரியவைகள் பலப்பல இருந்தபோதிலும், ஒவ்வொருவரும் கடிதத்தைப் படிப்பதற்கு பேராவல் காட்டுகிறோம். அஞ்சலை அன்றாடம் வழிமேல் விழிவைத்துப் பார்க்க நாம் தவறுவதில்லை. அஞ்சல் வந்தவுடன் மற்றப் பணிகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பரபரப்புணர்ச்சியுடன் அவற்றைப்பிரித்துப் படிக்கிறோம்; பலதரப்பட்ட செய்திகளையும், கருத்துக்களையும் அறிந்து கொள்கிறோம். பொதுவாகக் காதலியிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும், நெருங்கிய உறவினர்களிடமிருந்தும் வரும் முடங்கல்களைப் படிப்பதில் ஒருவன் எவ்வளவு ஆர்வமும், அக்கறையும், அகமகிழ்ச்சியும் காட்டுவானோ, அவ்வளவு ஆர்வமும் அக்கறையும் அகமகிழ்ச்சியும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களைப் படிப்பதிலும் ஒவ்வொருவரும் காட்டுவர். அவ்வளவு கவர்ச்சியும், அறிவுத்தெளிவும், ஆராய்ச்சித்திறனும் அறிஞர் அண்ணா அவர்களின் கடிதங்களில் காணப்பெறும். அறிஞர் அண்ணா அவர்களின் உயர்ந்த உள்ளத்தை எழுத்துக்களின் மூலம் எளிதில் கண்டறிய இந்நூல் பெரிதும் பயன்படும்.
அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிட நாடு’ இதழில் ‘தம்பிக்குக் கடிதம்’ என்று தலைப்பிட்டு எழுதிய கடிதங்களைப் பத்துத் தொகுப்புகளாகக் கொண்டுவர முயற்சி எடுத்து, இப்பொழுது இரண்டு தொகுப்புகளை வெளியிட்டிருக்கின்றனர். இந்தப் பத்துத் தொகுப்புகளும் தமிழகத்தின் அரிய பெரிய கருத்துக் கருவூலங்களாகும். இப்பொழுது வெளிவந்துள்ள இரண்டு தொகுப்புகளைப் போலவே, விரைவில் ஏனைய எட்டுத் தொகுப்புகளும் வெளிவருவனவாக!
அறிஞர் அண்ணா அவர்களின் சொல்லமுதைக் கொண்டு இலக்கிய விருந்துபடைக்க முன்வந்த ‘பாரி நிலைய’த்தாரைப் பாராட்டுகிறேன். தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவரும் இந்த இலக்கிய விருந்தை உண்டு, மகிழ்ந்து, பயன்பெற்று, இனிதுற வாழ்வார்களாக!
4—1—1963 இரா. நெடுஞ்செழியன்
பொருளடக்கம்
கடித எண் பக்க எண்
9 |
16 |
23 |
29 |
40 |
49 |
61 |
70 |
84 |
93 |
102 |
110 |
120 |
128 |
134 |
143 |
151 |
175 |
184 |
198 |
208 |
216 |
226 |
233 |
239 |
249 |