உள்ளடக்கத்துக்குச் செல்

தராசு/சித்தக்கடல்

விக்கிமூலம் இலிருந்து


சித்தக்கடல்


யோகம்

ஜூலை 1. 1915.

காலை கண் விழிக்கும்பொழுதே “பணம்” என்ற ஞாபகம். எழுந்து Bourgoine வீட்டுக்குப் போதல். போகையில் மனக்கிளர்ச்சி. இடைவழியில் துருக்கன் அவனுக்கு வழிவிட்டதைப் பற்றி மன நோதல். மரண பயம். அதன் மடமை யுணர்ச்சி. கடற்கரையில் தனியே யிருத்தல். அங்கு சாரர். மன வெறுப்பு. உதாஸீனம்.

செ. “மாலை” என்ற வார்த்தை - ஒரு பொய்.

🞸🞸🞸

இந்த மனமாகிய கடலை வென்று விடுவேன். பலநாளாக இதை வெல்ல முயன்று வருகிறேன். இந்த மனத்தை வெல்ல நான் படும்பாடு தேவர்களுக்குத் தெரியும். இதிலே ப்ராண பயம், வியாதி பயம், தெய்வபக்திக்குறைவு, கர்வம், மமதை, சோர்வு முதலிய ஸம்ஸ்காரங்கள் மிகுதிப்பட்டிருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட வேண்டும்.

சலோ! தெய்வமுண்டு. அது அறிவுமயம், அந்த அறிவுக்கடலில் நான் என்பது ஒரு திவலை அதற்கும் எனக்கும் ஒரு குழாய் வைத்திருக்கிறது. அந்தக் குழாயை அஹங்காரம் என்ற மாசு மூடியிருக்கிறது. இந்த அஹங்காரத்தை நீக்கிவிட்டால் தெய்வ சக்தியும் தெய்வ ஞானமும் எனக்கு உண்டாகும்.

🞸🞸🞸

புகையிலைச் சாற்றினால் தலை கிறுக்கிறது. 20 லக்ஷம் தரம் புகையிலையை நிறுத்தி விடுவதாக ப்ரதிக்கினை செய்திருக்கிறேன். இதுவரை கைகூடவில்லை. ஸம்ஸ்காரம் எத்தனை பெரிய விலங்கு பார்த்தாயா? மகனே, ஸம்ஸ்காரங்களை சக்தியினால் வென்று விடு.

🞸🞸🞸

உடல் படுத்துக்கொண்டது. உடலை வைரம் போல உறுதி உடையதாகவும், பக்ஷிகளைப் போல லாகவ முடையதாகவும், சிங்கத்தைப் போல வலியுடையதாகவும் செய்யவேணும். உடல் வசப்படாவிட்டால் இந்த உலகத்தில் வாழ்க்கை பெருந் துன்பந்தான். உடம்பே, எழுந்துட்காரு. உடம்பு எழுந்து விட்டது. முதுகு கூனுகிறது. அந்த வழக்கத்தைத் தொலைத்துவிடவேண்டும்.

🞸🞸🞸

வயிறு வேதனை செய்கிறது, உஷ்ணமிகுதியால். நோயற்றிருப்பதற்கு சக்தியை ஓயாமல் வேண்டிக் கொள். நோயில்லை யென்று மனத்தை உறுதி செய். மனம் போல உடல்.

மகனே, உடல் வெற்றி கொள். அது எப்பொழுதும் நீ சொன்னபடி கேட்க வேண்டும். அது சொன்னபடி நீ கேட்கலாகாது. அது மிருகம். நீ தேவன். அது யந்திரம். நீ யந்திரி

ஜூலை 2.

வியாதி பயம்.சோம்பர். இன்று காலைப் பொழுதையும் இவை வந்து வீணாக்கி விட்டன. செ-வழக்கம் போல் வந்தான். பரமேஸ்வரி! மகாஸக்தீ! உன்னிடத்தில் அமரத் தன்மை கேட்கிறேன். என்னை மனக் கவலையிலிருந்து விடுவிக்க வேண்டும். உன்னை எப்போதும் சிந்தனை செய்துகொண்டும், உனது மஹா அற்புதமான உலகத்தை எப்போதும் கண்டு தீரா மகிழ்ச்சி யடைந்து கொண்டும், தர்மங்களை இடை விடாமல் நடத்திக்கொண்டும் வருந் திறமை, எனக்கு அருள் செய்ய வேண்டும்.

மனமாகிய குரங்கு செய்வதை யெல்லாம் எழுதிக் கொண்டு போனால் காலக் கிரமத்தில் அதை வசப்படுத்திவிடலா மென்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளை யெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. சித்தத்தை வசப்படுத்துமுன் சித்தத்தை அறிய வேண்டும். அதன் சலனங்களை ஓயாமல் கவனித்து எழுதிக்கொண்டு வந்தால், அதன் தன்மை முழுதையும் அறிய ஹேது வுண்டாகுமென்பது என்னுடைய தீர்மானம்.

பராசக்தீ! ஒவ்வொரு கணமும் எனது சித்தம் சலிக்கும் முறைகளை அப்போதப்போது பொய்மை யில்லாமலும், வஞ்சக மில்லாமலும் எழுதுவதற்கு எனக்கு தைரியம் கொடுக்க வேணும்.

நாம் எழுதுவதைப் பிறர் பார்க்க நேரிடு மென்று கருதி நமது துர்ப் பலங்களை எழுத லஜ்ஜை யுண்டாகிறது. பராசக்தீ, என் மனத்தில் அந்த லஜ்ஜையை நீக்கிவிட வேண்டும்.

பாரதியினுடைய மன நடைகளை நான் எழுதப் போகிறேன். நான் வேறு. அவன் வேறு. நான் தூய அறிவு. அவன் ஆணவத்திலே கட்டுண்ட சிறு ஐந்து. அவனை எனக்கு வசப்படுத்தி நேராக்கப் போகிறேன். அவனுடைய குறைகளை எழுத அவன் லஜ்ஜைப்படுகிறான். அந்த லஜ்ஜையை நான் பொருட்டாக்காதபடி அருள் செய்ய வேண்டும்.

எழுது. பராசக்தியின் புகழ்ச்சிகளை எழுது. அடா! பாரதீ, அதைக் காட்டிலும் உயர்ந்த தொழில் இவ்வுலகத்தில் வேறொன்றுமில்லை. பராசக்தி வாழ்க. அவள் இந்த அகில உலகத்துக்கு ஆதாரம். அகிலம் நமக்கு மூன்று வகையாகத் தெரிகிறது.— ஜடம், உயிர், அறிவு — என. இவை தம்முட் கலந்தன. அறிவுலகத்திலே பல படிகள் இருப்பதாக யோகிகள் நிச்சயித்திருக்கிறார்கள்.

இவற்றுள் ஜடத்துக்கு உயிரும், உயிருக்கு அறிவும் காரணமா மென்று யோகிகள் சொல்லுகிறார்கள்.

இவை யனைத்திற்கும் மூலப் பொருளாய், இவை யனைத்தையும் தனது உறுப்புக்களாகக் கொண்டு, இவையனைத்தும் தானாய், இவையனைத்தின் உயிர் நிலையாக ஒரு பொருள் உண்டு. அதனை மஹாசக்தி என்கிறோம். அதை இடைவிடாமல் த்யானம் செய்வதால் உனது குறைகளெல்லாம் நீங்கும். பெரிய பொருளை இடைவிடாது பாவனை செய்யும் அறிவு தான் பெருமை யடைகிறது.

சித்தம் ஒரு கண்ணாடி. ஓயாமல் பராசக்தியை த்யானம் செய்யுமானால் அவளுடைய சாயை இதிலே படும். அதிலே சுகமுண்டு.

🞸🞸🞸

பத்திரிகைகளுக்கு வியாஸங்கள் எழுத வேண்டும். கடிதங்கள் எழுத வேண்டும். சோம்பர் உதவாது. வெற்றிலை போடுவதைக் குறைக்க வேணும். பணமில்லாதது பற்றிக் கவலைப்படலாமா? மூடா, மூடா, மூடா, நாம் சுத்த அறிவல்லவா? உலகவ்யவஹாரங்களை நாம் வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருக்க வேணும், ஆணவக் கட்டிலே அகப்பட்ட சித்தத்தின் விருப்பப்படி இந்த உலகில் ஏதாவது நடக்கிறதா? சாகாத ஜந்து உண்டா? எல்லா ஜந்துக்களும் ஓயாமல் உயிரைக் காக்கின்றன. அதில் பயனுண்டா? உயிரே ஜீவனுடைய வச மில்லாதபோது வேறெதைப்பற்றிக் கவலைப்படுவதிலேயும் என்ன பயன்? பராசக்தியின் கட்டளைப்படி உலகம் நடக்கிறது. உனக்கு வேண்டிய இன்பங்களை அவளிடம் வேண்டிக்கொள். அவள் கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு சுகமாக இரு.

எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகமிருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப்பேய்களெல்லாம் உழைப்பைக் கண்டவுடன் ஓடிப்போய்விடும்.

“உத்யோகினம் புருஷஸிம்ஹ முபைதி லக்ஷ்மீ:”

பராசக்தியை த்யானம் செய்துகொண்டே யிருந்தால் எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும், உடலும் உயிரும் ஒளிபெற்று வாழும். நூறு வயதுக்குக் குறைவில்லை. இது ஸத்யம். நூறு வயது நிச்சயமாக வாழ்வாய். மனிதனுக்கு நூறாண்டு இயற்கையிலேயே ஏற்பட்டது. இயற்கை தவறாமால், மூடக் கவலைகளில்லாம்லிருந்தால் நூறு வயது அவசியம் வாழலாம். மகனே. அச்சத்தைப் போக்கு.

மண்ணையும், காற்றையும், கடலையும் எத்தனை யுகங்கள் ஒரே வடிவத்தில் வைத்துக் காப்பாற்றுகிறாய்? பராசக்தீ, எனது கருவி கரணங்களிலே நீ பரிபூர்ணமாக ஸந்நிதி கொண்டு என்னையும் அங்ஙனமே காக்கவேண்டும்.

இன்ப மில்லையா?

பராசக்தீ இந்த உலகத்தின் ஆத்மா நீ.

உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா நாள்தோறும் உன்மீது பாட்டுப்பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களை யெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வரவேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாதக் காலம் இரவும் பகலுமாக நானும் செல்லம்மாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். உறக்கம் நேரே வரவில்லை — இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ, உன்னை நம்பித்தானிருந்தோம். நீ கடைசியாகக் காப்பாற்றினாய். உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம்— தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ, ஓயாமல் கவிதை எழுதிக்கொண்டிருக்கும்படி திருவருள் செய்ய மாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து, தொல்லை யில்லாதபடி என் குடும்பத்தாரும் என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க, நான் எப்போதும் உன் புகழை ஆயிரவிதமான புதிய புதிய பாட்டுக்களில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை எங்குமில்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட்பெருமையும் உடைய பாட்டொன்று என் வாயிலே தோன்றும்படி செய்யவேண்டும்.

தாயே—என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக்கொண் டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால்— உன்னை எப்படிப் பாடுவேன்?

மனைவியைப் பிரிந்து செல்லும்படி சொல்வதில் பயனில்லை. அவளும் உனது சரணையே நம்பி, என்னுடன் எப்போதும் வாழ்ந்துகொண்டு, உனது தொழும்பிலே கிடைக்கும் புகழில் பங்கு பெற்று மேன்மையுற விரும்புகிறாள். இயன்றவரை உண்மையோடுதான் இருக்கிறாள். அவளையும் நீ ஸம்ரக்ஷணை செய்ய வேண்டும்.

அவளுக்கு நோயின்மை, கல்வி, கவலை யின்மை பக்தி, ஞானம் முதலிய சோபனங்களெல்லாம் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

குழந்தையை உனது குழந்தையாகக் கருதி, இவ்வுலகத்தில் நீடித்துப் புகழுடன் வாழும்படி திருவருள் செய்ய வேண்டும். காசியிலிருக்கும் குழந்தையையும் நீதான் காப்பாற்ற வேண்டும்.

எனது குடும்ப பாரமெல்லாம் உன்னைச் சேர்ந்தது. உன்னைப் புகழ்ச்சி புரியும் தொழில் என்னைக் சேர்ந்தது தாயே, ஸம்மதந்தானா ?

மஹா சக்தி — என்னுள்ளத்தில் எப்போதும் வற்றாத கவிதை யூற்று ஏற்படுத்திக்கொடு.

ஓயாமல் வியாதி பயம் கொண்டு உளைகின்ற நெஞ்சமே! தூ! தூ! தூ! கோழை!

புகையிலை வழக்கம் தொலைந்து விட்டது. பராசக்தியின் அருளால். இனிக் ‘கஸரத்’ வழக்கம் ஏற்படவேணும், பராசக்தியின் அருளால். தோள் விம்மி வயிரம் போலாக வேணும். நெஞ்சு விரிந்து, திரண்டு, வலிமையுடையதாகவேணும். இரத்தம் மாசு தீர்ந்து, நோயின்றி, நன்றாக ஓடி, உடலை நன்கு காத்துக் கொண்டிருக்கவேணும்— பராசக்தியின் அருளால்.

செட்டி பணத்துக்கு எத்தனை நாள் பொய் சொல்லுகிறது? பொய் வாயிதா, பொய் வாயிதா பொய் வாயிதா — தினம் இந்தக் கொடுமைதானா? சீச்சீ!

பராசக்தி— உன்னை நான் நம்புவதை முற்றிலும் விட்டு நிச்சயமாக நாஸ்திகனாய் விடுவேன், நீ என்னை அற்பத் தொல்லைகளுக்கு உட்படுத்திக்கொண்டே யிருந்தால்.

மஹாசக்தி — நீ யிருப்பதை எவன் கண்டான்? உனக்கு அறிவுண்டென்பதை எவன் கண்டான்? இந்த உலகம் — சரி, சரி, இப்போது உன்னை வையமாட்டேன். என்னைக் காப்பாற்று.உன்னைப் போற்றுகிறேன்.

பிறருக்கு நான் தீங்கு நினையாதபடி நீ அருள் புரிந்தால் நல்லது. துஷ்டர்களைக்கூட நீ தண்டனை செய்துகொள். எனக்கு அதிலே ஸந்தோஷமில்லை. எனக்குப் பிறர் செய்யும் தீங்குகளைநீ தவிர்க்க வேண்டும். நான் உன்னையே சரணடைந்திருக்கிறேன். சொல்லு! மனமே, சொல்லு, பராசக்தி வெல்க! பராசக்தி வெல்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=தராசு/சித்தக்கடல்&oldid=1775776" இலிருந்து மீள்விக்கப்பட்டது