தான்பிரீன் தொடரும் பயணம்/தாயின் தரிசனம்

விக்கிமூலம் இலிருந்து

8
தாயின் தரிசனம்


லிமெரிக் நகரில் தேசியப் பற்றுள்ள பாதிரியார் ஒருவர் இருந்தார். புரட்சிக்காரர்களிடம் அவருக்குப் பிரியம் அதிகம். பொதுநல ஊழியம் செய்யும் எவருக்கும் அவர் தோழர். அவரைக் காணவே தான்பிரீன் முதலானவர்கள் காரில் பிரயாணம் செய்து வந்தனர். லிமெரிக் வந்ததும் அவர்கள் நேராகப் பாதிரியாருடைய வீட்டுக்குச் சென்றனர்.

பாதிரியார் அவர்களைக் கண்டதும் அளவற்ற ஆனந்தங்கொண்டார். அவருக்குக் கடுகளவு பயமுமில்லை. அவருடைய வீட்டில் வேலைபார்த்து வந்த மோல்லி என்னும் மாது புதிய வாலிப விருந்தினர்களிடம் விசேஷ அன்பும் மரியாதையும் காட்டினாள். அவர்களுக்குப் பசித்தபோது நல்ல உண்டிகளும், பானங்களும் தயாரித்துக் கொடுத்தாள். சில சமயங்களில் சுவையுள்ள பண்டங்களைச் செய்து, அவற்றை உண்டு தீர வேண்டும் என்று மோல்லி கண்டிப்பான உத்தரவும் போடுவதுண்டு. அங்கிருந்த பொழுது தான்பிரீனும் ஹோகனும் இரண்டு நாள் இரவும் பகலும் படுத்த படுக்கைவிட்டு எழுந்திராமல் ஓய்வெடுத்துக் கொண்டனர். மோல்லி அடிக்கடி அங்கு வைக்கப்பட்டிருந்த சிலுவையின் பக்கம் சென்று, அவர்கள் நீடுழி வாழவேண்டும் என்று பிரார்த்தித்து வந்தாள். சிலுவையின் முன்னால் அணையா விளக்கு ஒன்று போட்டாள். ஜப மாலையைக் கையில் பிடித்து, அவர்களைப் பகைவர்களிடமிருந்து இறைவன் காக்க வேண்டுமென்று பிரார்த்தித்தாள். அவள் அவர்களிடமிருந்து வந்து 'இனி கவலையை ஒழியுங்கள் உண்மையான தர்மவான்களைத் தெய்வம் காட்டிக் கொடுக்காது' என்று ஆறுதல் சொல்வது வழக்கம்.

லிமெரிக்கிலிருந்து தான்பிரீனும் ஹோகனு, லாகெல்லிக்குச் சென்றனர். அங்கே வந்திருந்த டிரீஸியையும் ராபின்ஸனையும் சந்தித்தார்கள். அவர்கள் சந்தித்த காட்சி பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் போட்டிப் பந்தய விளையாட்டில் ஆனந்தக்கூத்தாடுவது போல் இருந்தது. நால்வரும், ஒன்று கூடிவிட்டதால் அவர்களுடைய கவலைகள் சிதறிப் போயின. தான்பீரின், பாதிரியார் தங்களுக்குச் செய்த உதவிகளையும், நண்பர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தான். டிரீஸியும், ராபின்ஸனும் டப்ளின் நகரில் தங்களை யாரும் சந்தேகிக்கவில்லை என்பதையும் வேறுபல அதிசயங்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.

லாகெல்லி, ஸோலோஹெட்பக்கிலிருந்து ஆறு அல்லது ஏழுமைல் துரத்திலுள்ளது. அவ்விடத்திற்குத் தான்பிரீன் வந்து சேர்ந்தது வரை ஸோலோஹெட்பக் சம்பவம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. பட்டாளத்தாரும், போலிஸாரும் அந்தப் பக்கங்களில் வெடிமருந்துப் புதையலைத் தேடிக் குழிகள் தோண்டுவதை நிறுத்தியபாடில்லை. தான்பிரீஸ், எங்கெங்கு போவது வழக்கம் என்று அறிந்து, அங்கெல்லாம் சோதனை போடப்பட்டது.

தான்பிரீனும் தோழர் மூவரும் நான்கு சைக்கில்களை வாங்கிக்கொண்டு, டப்ளினுக்குச் செல்லும் நோக்கத்துடன், டோனோஹில்லுக்குச் சென்றனர். வழியில் முன்னால் போலிஸாரைச் சுட்ட இடத்தைத் தாண்டிச்செல்ல வேண்டியிருந்தது. அவ்விடத்தில் அவர்கள் கீழிறங்கிச் சில நிமிஷங்கள் தங்கி விட்டுச் சென்றனர். டோனோஹில்லிருந்து தான்பிரீனுடைய வீடு அரை மையில் தூரத்தி இருந்தது. அவன் மூன்று மாத காலமாய்ப் பாராத தன் அன்னையைப் பார்க்கவேண்டும் என்று ஆவல் கொண்டான். இடையில் அவளுக்கு ஒரு கடிதங் கூட எழுதவில்லை. ஆதலால் அவன் நேராக வீட்டை நோக்கிச் சென்றான். அன்னையின் திருவடிகளைப் பணிந்தான். அந்த மாதரசியின் துயரங்களுக்கு அளவில்லை. தான்பிரீன் போன்ற பிள்ளையைப் பெற்று வீரத்தையும் தேசாபிமானத்தையும புகடடிய ஒரு குற்றத்தினால் அவள்பட்ட கஷ்ங்களை வேறு யாரால் சகிக்கமுடியும்? அவளுடைய சிறு வீடு 24 மணி நேரத்தில் மூன்று முறை சோதனை போடப்பட்டு வந்தது. அதிகாலையில் விடிவதற்கு முன்னால் 'பீலர்கள்' வந்து சோதனை போடுவார்கள்; நள்ளிரவில் பட்டளாத்தார் திடீரென்று புகுந்து சோதனை போடுவார்கள். அந்தத் தாய் அவ்வளவையும் சகித்துக் கொள்வாள். பிற்காலத்தில் 'பிளாக் அண்டு டான்' என்ற பட்டாளத்தார் அயர்லாந்தில் சொல்ல முடியாத கொடுமைகளைச் செய்துவந்த காலத்தில், அவளுடைய வீட்டைத் தீவைத்துப் பொசுக்கி, அவளுடை, கோழிகளையும் குஞ்சுகளையும் கூடக் கத்தியால் குத்திக் கொன்றார்கள். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோபம் கோழிக் குஞ்சுகளின் தலையிலும் பாய்ந்தது!

எத்தனை துன்பங்கள் நேர்ந்தாலும், அந்த வீரத் தாய் தைரியத்தை மட்டும் கைவிடவில்லை. வீரப் பிள்ளையை பெற்றதே பாக்கியம் என்று அவள் கருதி வந்தாள். பீலர்களும் பட்டாளத்தார்களும் அடிக்கடி அவளிடம் சென்று, 'உன் மகன் எங்கே?' என்று கேட்பார்கள். அவள் 'என் மகனுள்ள இடத்தில் நீங்கள் கூசாமல் செல்வீர்களா?' என்று கேட்பது வழக்கம். ஒரு சமயம் பட்டாளத்தார் வந்து தான்பிரீனைத் தேடுப்பொழுது, அவன் வீட்டு மாடியிலே இருக்கிறான், போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்; என்று அவள் விளையாட்டாகச் சொன்னாள். பட்டாளத்தார் அதை உண்மை என்று எண்ணி, உடனே துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டு, திரும்பி ஓடிப் பக்கத்தில் மறைந்து கொண்டார்கள் பின்னால், தான்பிரீன் வீட்டிலில்லை என்று தெரிந்துகொண்டுதான் அவர்கள் வெளியே வந்தார்களாம்.

தான்பிரீன், வீரத் தாயின் வீர மகன். தாயைப் போல்தானே பிள்ளையும் இருப்பான்!