திருக்குறள் செய்திகள்/20

விக்கிமூலம் இலிருந்து

20. பயனில சொல்லாமை

படித்தவர் கூடும் சபையில் பயனற்ற சொற்களைப் பேசாதே; அவர்கள் வெறுப்பார்கள்; புத்தி கெட்டவன் என்று இகழ்ந்தும் பேசுவர்.

நண்பர்களிடத்தே தகாத முறையில் நடந்துகொள்வது தவறு; அதனை அவர்கள் தாங்கிக்கொள்வார்கள்; பல பேர் முன்னால் பயனற்ற சொற்களைப் பேசினால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

வெற்றுப்பேச்சுப் பேசி வீண்பொழுது போக்குபவரை வெற்று வேட்டு என்று கடிந்து கூறுவர்.

பலபேர் கூடி இருக்கும் இடத்தில் கண்டபடி கருத்து இல்லாமல் பேசினால் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்; தீமைகளே விளையும். கழுத்தைப் பிடித்துத் தள்ளுவர்.

அறிவு மிக்கவன் என்று சொல்லிக்கொண்டு செறிவு நீங்கிய சொற்களைப் பேசினால் அவனைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் நீங்கிவிடும். அவன் சராசரி என்று எடை போடுவார்கள்.

பயனற்ற சொற்களைப் பேசுபவனைக் கற்றவன் என்று கூறார்; வெறும் பதர் என்று கூறுவர்; உள்ளீடு அற்றவன் என்று இகழ்வர்.

பண்பு மிக்கவர்கள் நன்மை தரும் சொற்களைப் பேசாவிட்டாலும் பயனற்ற சொற்களைப் பேசினால் அவர்க்கு அஃது இழுக்கு ஆகும்.

ஆழமான கருத்துகளை ஆராயும் அறிவு உடையவர் பயன் ஏதும் விளைவிக்காத வெற்றுப் பேச்சுப் பேசித் தம்மைத் தாழ்த்திக்கொள்ள மாட்டார்கள்.

மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவு உடையவர்கள் பொருளற்ற வெற்றுரைகளை மறந்தும் பேசமாட்டார்கள்.

வாய் திறந்து பேசினால் அதிலிருந்து வெளிவரும் சொற்கள் பயனுடையவையாக இருக்க வேண்டும்; வெற்றுப் பேச்சுப் பேசுவது வீணாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருக்குறள்_செய்திகள்/20&oldid=1106302" இலிருந்து மீள்விக்கப்பட்டது