உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை (40.கல்வி)

விக்கிமூலம் இலிருந்து

முப்பால்: பொருட்பால்: அதிகாரம் 40.கல்வி

[தொகு]
பரிமேலழகரின் அதிகார முன்னுரை:
(அரசியல்: நாற்பதாவது அதிகாரம்- கல்வி):
அஃதாவது, அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவையாவன: அறநூலும், நீதிநூலும், யானை குதிரை தேர் படைக்கலம் என்ற இவற்றின் நூல்களும் முதலாயின. அரசன் அறிவுடையன் ஆயக்கால் தன்னுயிர்க்கேயன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி, இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும், யாவர்க்கும் உறுதி பயத்தற் சிறப்புடைமையின் பொதுப்படக் கூறுகின்றார். மேல் 'தூங்காமை கல்வி' (குறள்:383) எனத் தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.


திருக்குறள்: 391 (கற்க)

[தொகு]
"கற்க கசடறக் கற்பவை கற்றபின் // // கற்க கசடு அற கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக". (01) // // நிற்க அதற்கு தக.
பரிமேலழகர் உரை:
கற்பவை கசடு அறக் கற்க = ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க;
கற்றபின் அதற்குத் தக நிற்க = அங்ஙனம் கற்றால் அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
கற்பவை என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிற பொருள் உணர்த்துவன சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு ஆகா என்பது பெற்றாம்.
கசடறக் கற்றலாவது, விபரீத ஐயங்களை நீக்கி மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல்.
நிற்றலாவது, இல்வாழ்வுழிக் "கருமமும் உள்படாப் போகமும் துவ்வாத் / தருமமும் தக்கார்க்கே செய்" தலினும்,(நாலடியார்:250) துறந்துழித் தவத்தான் மெய்யுணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை.
சிறப்புடை மகற்காயின் 'கற்றல் வேண்டும்' என்பதூஉம், அவனால் 'கற்கப்படு நூல்'களும், அவற்றைக் 'கற்குமாறும்', 'கற்றதனாற் பயனும்' இதனால் கூறப்பட்டன.


திருக்குறள்: 392 (எண்ணென்ப)

[தொகு]
"எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டும்?// எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு". (02) // // கண் என்ப வாழும் உயிர்க்கு.
பரிமேலழகர் உரை:
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் = அறியாதார் எண் என்று சொல்லுவனவும், மற்றை எழுத்து என்று சொல்லுவனவுமாகிய கலைகள் இரண்டினையும்;
வாழும் உயிர்க்குக் கண் என்ப = அறிந்தார் சிறப்புடையுயிர்கட்குக் கண் என்று சொல்லுவர் என்றவாறு.
பரிமேலழகர் உரை விளக்கம்:
'எண்' என்பது கணிதம். அது 'கருவி'யும், 'செய்கை'யும் என இருவகைப்படும்; அவை 'ஏரம்பம்' முதலிய நூல்களுட் காண்க.
எழுத்தெனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று.
இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், 'கண்' எனப்பட்டன.
அவை கருவியாதல்,
"ஆதி முதலொழிய அல்ல தனஎண்ணின்
நீதி வழுவா நிலைமையவான்- மாதே!
அறமார் பொருளின்பம் வீடென் றிவற்றின்
திறமாமோ எண்ணிறந்தாற் செப்பு."
"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப் பானாகும்- மொழித்திறத்தின்
முட்டறுத்த நல்லோன் முதனூல் பொருளுணர்ந்து
கட்டறுத்து வீடு பெறும்."
இவற்றான் அறிக.
'என்ப', என்பவற்றுள் முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப்பெயர்;
பின்னது, உயர்திணைப் பன்மைவினை.
அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன.
சிறப்புடையுயிர் என்றது, மக்களுயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை.
இதனால், கற்கப்படு நூல்கட்குக் கருவியாவனவும், அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.