திருமந்திரம்/மூன்றாம் தந்திரம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

மூன்றாம் தந்திரம்[தொகு]

1.அட்டாங்க யோகம்[தொகு]

549.
உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.

550.
செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசக்தி உத்தர பூருவ
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே.

551.
அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கத்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்
புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.

552.
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.

2.இயமம்[தொகு]

553.
எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையுஞ்
செழுந்த ணியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

554.
கொல்லான்பொய் கூறான் களவிலான் எண்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுந்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத் திடையில்நின் றானே.

3.நியமம்[தொகு]

555.
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை ஆங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பரசக்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

556.
தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமங் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.

557.
தவஞ்செபஞ் சந்தோடம் ஆத்திகந் தானஞ்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதிசொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.

4.ஆதனம்[தொகு]

558.
பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்திக மெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே.

559.
ஓரணை யப்பத மூருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே.

560.
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளி லங்கையை நீட்டி
உருசி யொடுமுடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே.

561.
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே.

562.
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.

563.
பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
சொத்திரம் வீரஞ் சுகாதனம் ஓரேழு
முத்தம மாமுது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே.

5.பிராணாயாமம்[தொகு]

564.
ஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்
உய்யக்கொண்டேறுங் குதிரைமற் றொன்றுண்டு
மெய்யர்க்குப்பற்றுக்கொடுக்குங் கொடாதுபோய்ப்
பொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே.

565.
ஆரிய னல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.

566.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ண வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோருக்கே.

567.
பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே.

568.
ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில்
ஊறுதல் முப்பத் திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின் கண் வஞ்சக மாமே.

569.
வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாந்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியினும் வேட்டு வளியனு மாமே.

570.
எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
தங்கே யதுசெய்ய ஆக்கைக் கழிவில்லை
அங்கே பிடித்தது விட்டள வுஞ்செல்லச்
சங்கே குறிக்கத் தலைவனு மாமே.

571.
ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை யுதைக்குங் குறியது வாமே.

572.
மேல்கீழ் நடுப்பக்க மிக்குறப் பூரித்துப்
பாலாம் இரேசகத் தாலுட் பதிவித்து
மாலாகி யுந்தியுட் கும்பித்து வாங்கவே
ஆலாலம் உண்டான் அருள்பெற லாமே.
573.
வாமத்தில் ஈரெட்டு மாத்திரை பூரித்தே
ஏமுற்ற முப்பத் திரண்டும் இரேசித்துக்
காமுற்ற பிங்கலைக் கண்ணாக இவ்விரண்
டோமத்தால் எட்டெட்டுக் கும்பிக்க உண்மையே.

574.
இட்ட தவ்வீ டிளகா திரேசித்துப்
புட்டிப் படத்தச நாடியும் பூரித்துக்
கொட்டிப் பிராணன் அபானனுங் கும்பித்து
நட்டம் இருக்க நமனில்லை தானே.

575.
புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட வுள்ளே நின்மல மாக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோமங் கறுக்கும்
புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

576.
கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்
ஓடுவர் மீளுவர் பன்னிரண் டங்குலம்
நீடுவர் எண்விரல் கண்டிப்பர் நால்விரல்
கூடிக் கொளிற்கோல அஞ்செழுத் தாமே.

577
பன்னிரண் டானைக்குப் பகலிர வுள்ளது
பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்
பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின்
பன்னிரண் டானைக்குப் பகலிர வில்லையே.

6.பிரத்தியாகாரம்[தொகு]

578.
கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.

579.
நாபிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிகிலர்
தாபிக்கு மந்திரந் தன்னை அறிந்தபின்
கூவிக்கொண் டீசன் குடிபுகுந் தானே.

580
மூலந் திருவிரல் மேலுக்கு முன்னின்ற
பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்து குண்டலி யுள்ளே செழுஞ்சுடர்
ஞாலத்து நாபிக்கு நாலிவிரற் கீழே.

581.
நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்தும்
தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாகுமே.

582.
சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
ஓதுவ துன்னுடல் உன்மத்த மாமே.

583.
மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லுங் கருத்திது தானே.

584.
எருவிடும் வாசற் கிருவிரன் மேலே
கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.

585.
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே.

586.
புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
திறப்பட்ட நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
உறப்பட்டு நின்றது உள்ளமும் அங்கே
புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.

587.
குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடும்
சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.

7.தாரணை[தொகு]

588.
கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணத்தண் டூடே வெளியுறத் தானோக்கிக்
காணக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே.

589.
மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

590.
மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே.

591.
கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்
உடையாமல் ஊழி இருக்கலு மாமே.

592.
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்தலை யாது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிக்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.

593.
வாய்திறவாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திறவாதார் மதியிட்டு முட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே.

594.
வாழலு மாம்பல காலும் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம்படாப் பாயச்சுறின்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தல்
பாழி பெரியதோர் பள்ளி அறையிலே.

595.
நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினுட் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டைப் பொதியலு மாமே.

596.
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

597.
அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தைஐம் பூதஞ்சித் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசத் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே.

8.தியானம்[தொகு]

598.
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.

599.
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே.

600.
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே.

601.
ஒருபொழு துன்னார் உடலோ டுயிரை
ஒருபொழு துன்னார் உயிருட் சிவனை
ஒருபொழு துன்னார் சிவனுறை சிந்தையை
ஒருபொழு துன்னார் சந்திரப் பூவையே.

602.
மனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்
சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே.

603.
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணா ரமுதினைக் கண்டறி வாரில்லை
உண்ணாடி யுள்ளே ஒளிபெற நோக்கில்
கண்ணாடி போலக் கலந்திருந் தானே.

604.
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவ னாமே.

605.
நயனம் இரண்டு நாசிமேல் வைத்திட்டு)
உயர்விழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரறா நாடியே தூங்கவல் லார்க்குப்
பயனிது காயப் பயமில்லை தானே.

606.
மணிகடல் யானை வார்குழல் மேகம்
அணிவண்டு தும்பி வளைபேரி கையாழ்
தணிந்தெழு நாதங்கள் தாமிவை பத்தும்
பணிந்தவர்க் கல்லது பார்க்கஒண் ணாதே.

607.
கடலொடு வேகக் களிறொடும் ஓசை
அடலொடு மவ்வினை அண்டரண் டத்து
சுடர்மன்னு வேணு சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெரி யாதே.

608.
ஈசன் இயல்பும் இமையவர் ஈட்டமும்
பாசம் இரங்கப் பரந்துயி ராய்நிற்கும்
ஓசை யதன்மணம் போல விடுவதோர்
ஓசையும் ஈசன் உணரவல் லார்க்கே.

609.
நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது
நாத முடிவிலே நஞ்சுண்ட கண்டனே.

610.
உதிக்கின்ற ஆறினும் உள்ளங்கி ஐந்துந்
துதிக்கின்ற தேசுடைத் தூங்கிருள் நீங்கி
அதிக்கின்ற ஐவருள் நாதம் ஒடுங்கக்
கதிக்கொன்றை ஈசன் கழல்சேர லாமே.

611.
பள்ளி அறையிற் பகலே இருளில்லை
கொள்ளி அறையிற் கொளுந்தாமற் காக்கலாம்
ஒள்ளி தறியிலோ ரோசனை நீளிது
வெள்ளி அறையில் விடிவில்லை தானே.

612.
கொண்ட விரதங் குறையாமற் றானொன்றித்
தண்டுடன் ஓடித் தலைப்பட்ட யோகிக்கு
மண்டலம் மூன்றினும் ஒக்க வளர்ந்தபின்
பிண்டமும் ஊழி பிறியா திருக்குமே.

613.
அவ்வவர் மண்டல மாம்பரி சொன்றுண்டு
அவ்வவர் மண்டலத் தவ்வவர் தேவராம்
அவ்வவர் மண்டலம் அவ்வவர்க் கேவரில்
அவ்வவர் மண்டல மாயமற் றோர்க்கே.

614.
இளைக்கின்ற நெஞ்சத் திருட்டறை உள்ளே
முளைக்கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப்பெரும் பாசத் துருவிடு மாகில்
இளைப்பின்றி மார்கழி ஏற்றம தாமே.

615.
முக்குண மூடற வாயுவை மூலத்தே
சிக்கென மூடித் திரித்துப் பிடித்திட்டுத்
தக்க வலமிடம் நாழிகை சாதிக்க
வைக்கும் உயிர்நிலை வானவர் கோனே.

616.
நடலித்த நாபிக்கு நால்விரல் மேலே
மடலித்த வாணிக் கிருவிரல் மேலே
கடலித் திருந்து கருதவல் லார்கள்
சடலத் தலைவனைத் தாமறிந் தாரே.

617.
அறிவா யசத்தென்னு மாறா றகன்று
செறிவான மாயை சிதைத்தரு ளாலே
பிறியாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

9.சமாதி[தொகு]

618.
சமாதி யமாதியிற் றான்செல்லக் கேட்கின்
சமாதி யமாதியிற் றானெட்டுஞ் சித்தி
சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றோ
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

619.
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடின்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருள்
சுந்தரச் சோதியுந் தோன்றிருந் தானே.

620.
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே.

621.
விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பார்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தாரே.

622.
மூல நாடிமுக் கட்டல குச்சியுள்
நாலு வாசல் நடுவுள் இருப்பர்காள்
மேலை வாசல் வெளியுறக் கண்டபின்
காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.

623.
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

624.
பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே.

625.
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே.

626.
நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே.

627.
மூலத்து மேலது முச்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினுள் நெற்றிநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே.

628.
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே.

629.
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்
துலைப்பட் டிருந்திடுங் தூங்கவல் லார்க்கே.

630.
சோதித் தனிச்சுட ராய்கின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே.

631.
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்
சமாதிகள் வேண்டாம் இறையுட னேகின்
சமாதிதா னில்லை தானவ னாகிற்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே.

10.அட்டாங்க யோகப்பேறு[தொகு]

இயமம்[தொகு]

632.
போதுகந் தோறும் புரிசடை யானடி
யாதுகந் தாரம ராபதிக் கேசெல்வர்
ஏதுகந் தானிவன் என்றருள் செய்திடு
மாதுகந் தாடிடு மால்விடை யோனே.

நியமம்[தொகு]

633.
பற்றிப் பதத்தன்பு வைத்துப் பரன்புகழ்
கற்றிருந் தாங்கே கருது மவர்கட்கு
முற்றெழுந் தாங்கே முனிவர் எதிர்வரத்
தெற்றுஞ் சிவபதஞ் சேர்தலு மாமே.

ஆதனம்[தொகு]

634.
வருந்தித் தவஞ்செய்து வானவர் கோவாய்த்
திருந்தம ராபதிச் செல்வன் இவனெனத்
தருந்தண் முழவங் குழலும் இயம்ப
இருந்தின்பம் எய்துவர் ஈசன் அருளே.

பிராணாயாமம்[தொகு]

635.
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்து
கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ள
எம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்ல
இன்பக் கலவி இருக்கலு மாமே.

பிரத்தியாகாரம்[தொகு]

636.
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனாம் இவனென்ன
ஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்
காருறு கண்டனை மெய்கண்ட வாறே.

தாரணை[தொகு]

637.
நல்வழி நாடி நமன்வழி மாற்றிடுஞ்
சொல்வழி யாளர் சுருங்காப் பெருங்கொடை
யில்வழி யாளர் இமையவர் எண்டிசைப்
பல்வழி எய்தினும் பார்வழி யாகுமே.

தியானம்[தொகு]

638.
தூங்கவல் லார்க்குந் துணையேழ் புவனமும்
வாங்கவல் லார்க்கும் வலிசெய்து நின்றிட்டுத்
தேங்கவல் லார்க்குந் திளைக்கும் அமுதமுந்
தாங்கவல் லார்க்குந் தானிட மாமே.

சமாதி[தொகு]

639.
காரிய மான உபாதியைத் தான்கடந்
தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற
வாரிய காரண மாய்த் தவத்திடைத்
தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே.

11.அட்டமாசித்தி[தொகு]

பரகாயப் பிரவேசம்[தொகு]

640.
பணிந்தெண் டிசையும் பரமனை நாடித்
துணிந்தெண் டிசையுந் தொழுதெம் பிரானை
அணிந்தெண் டிசையினும் அட்டமா சித்தித்
தணிந்தெண் டிசைசென்று தாபித்த வாறே.

641.
பரிசறி வானவர் பண்பன் அடியெனத்
துரிசற நாடியே தூவெளி கண்டேன்
அரிய தெனக்கில்லை அட்டமா சித்தி
பெரிதருள் செய்து பிறப்பருத் தானே.

642.
குரவன் அருளிற் குறிவழி மூலம்
பரையின் மணமிகு சங்கட்டம் பார்த்துத்
தெரிதரு சாம்பவி கேசரி சேரப்
பெரிய சிவகதி பேறெட்டாஞ் சித்தியே.

643.
காயாதி பூதங் கலைகால மாயையில்
ஆயா தகல வறிவொன்ற னாதியே
ஓயாப் பதியதன் உண்மையைக் கூடினால்
வீயாப் பரகாயம் மேவலு மாமே.

644.
இருபதி னாயிரத் தொண்ணூறு பேதம்
மருவிய கன்ம மாமந்த யோகந்
தருமிவை காய உழைப்பாகுந் தானே
அருமிரு நான்காய் அடங்குமா சித்திக்கே.

645.
மதிதனில் ஈராறாய் மன்னுங் கலையின்
உதய மதுநா லொழியவோ ரெட்டுப்
பதியுமீ ராறாண்டு பற்றறப் பார்க்கில்
திதமான ஈராறு சித்திக ளாமே.

646.
நாடும் பிணியாம் நஞ்சனஞ் சூழ்ந்தக்கால்
நீடுங் கலைகல்வி நீள்மேதை கூர்ஞானம்
பீடொன்றி னால்வாயாச் சித்திபே தத்தின்
நீடுந் துரங்கேட்டல் நீண்முடி வீராறே.

647.
ஏழா னதிற்சண்ட வாயுவின் வேகியாந்
தாழா நடைபல யோசனை சார்ந்திடுஞ்
சூழான ஓரெட்டில் தோன்றா நரைதிரை
தாழான ஒன்பதிற் றான்பர காயமே.

648.
ஈரைந்திற் பூரித்துத் தியான உருத்திரன்
நேரொன்று பன்னொன்றில் ஈராறாம் எண்சித்தி
சீரொன்று மேலேழ் கீழேழ் புவிச்சென்று
ஓரொன்று வியாபியாய் நிற்றலீ ராறே.

649.
தானே அணுவுஞ் சகத்துந்தன் நோன்மையும்,
மானாக் ககனமும் பரகாய்த் தேகமும்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.

650.
தாங்கிய தன்மையுந் தானணுப் பல்லுயிர்
வாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை
யாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்
கோங்கி வர்முத்தி முந்திய வாரே.

651.
முந்திய முந்நூற் றறுபது காலமும்
வந்தது நாழிகை வான்முத லாயிடச்
சிந்தைசெய் மண்முதல் தேந்தறி வார்வலம்
உந்தியுள் நின்று வதித்தெழு மாறே.

652.
சித்தத் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர்சிவ முத்தர்
சுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே;

653.
ஒத்தஇவ வொன்பது வாயுவும் ஒத்தன
ஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்செயன்
ஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட
ஒத்த வுடலும் உயிரும் இருந்ததே.

654.
இருக்குந் தனஞ்செயன் ஒன்பது காலின்
இருக்கும் இருநூற் றிருபத்து நான்காய்
இருக்கு முடலி லிருந்தில் வாகில்
இருக்கும் உடலது வீங்கி வெடித்ததே.

655.
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனு முடமதாம்
வீங்கு வியாதிகள் கண்ணின் மருவியே.

656.
கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.

657.
நாடியின் ஓசை நயனம் இருதயந்
தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத்
தேவருள் ஈசன் திருமால் பிரமனும்
ஓவற நின்றங் குணர்த்திருந் தாரே.

658.
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள
ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம்
ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு
ஒன்பது வாசல் உலைநல வாமே.

659.
ஓங்கிய அங்கிக்கீழ் ஒண்சுழ னைச்செல்ல
வாங்கி இரவி மதிவழி ஓடிடத்
தாங்கி உலகங்கள் ஏழுந் தரித்திட
ஆங்கது சொன்னோம் அறிவுடை யோர்க்கே.

660.
தலைப்பட்ட வாறண்ணல் தையலை நாடி
வலைப்பட்ட பாசத்து வன்பிணை மான்போல்
துலைப்பட்ட நாடியைத் தூவழி செய்தால்
விலைக்குண்ண வைத்தோர் வித்தது வாமே.

661.
ஓடிச்சென் றங்கே ஒருபொருள் கண்டவா
நாடியி னுள்ளாக நாதம் எழுப்புவர்
தேடிச் சென் றங்கே தேனை முகத்துண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டுமே.

662.
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்று பூரண மானதே.

663.
பூரண சத்தி எழுமுன் றறையாக
ஏரணி கன்னிகள் எழுநூற்றஞ் சாயினர்
நாரணன் நான்முக னாதிய ஐவர்க்குங்
காரண னாகிக் கலந்து விரிந்ததே.

664.
விரிந்து குவிந்து விளைத்தஇம் மங்கை கரத்துள் எழுந்து
கரத்தங் கிருக்கிற்
பரந்து குவிந்தது பார்முதற் பூதம்
இரைந்தெழு வாயு விடத்தில் ஒடுங்க.

665.
இடையொடு பிங்கலை என்னும் இரண்டு
மடைபடு வாயுவு மாறியே நிற்குந்
தடையவை யாறெழுந் தணகட ருள்ளே
மிடைவளர் மின்கொடி தன்னில் ஒடுங்கே.

666.
ஒடுங்கி ஒருங்கி உணர்த்தங் கிருக்கின்
மடங்கி மடங்கிடும் வாயு வதனுள்
மடங்கி மடங்கிடு மன்னுயி ருள்ளே
நடங்கொண்ட கூத்தனை நாடுகின் றேனே.

667.
நாடியின் உள்ளே நாதத் தொலியுடன்
தேடி யுடன்சென்றத் திருவினைக் கைக்கொண்டு
பாடியுள் நின்ற பகைவரைக் கட்டிட்டு
மாடில் ஒருகை மணிவிளக் கானதே.

668.
அணிமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானா லென்றெட்டே.

669.
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணன் செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.

670.
சித்திக ளெட்டன்றிச் சேரெட்டி யோகத்தாற்
புத்திக ளானவை எல்லாம் புலப்படுஞ்
சித்திகள் எண்சித்தி தானாந் திரிபுரைச்
சத்தி அருள்தரத் தானுள வாகுமே.

அணிமா[தொகு]

671.
எட்டிவை தன்னோ டேழிற்பரங் கைகூடப்
பட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்
இட்டம துள்ளே இருக்கல் பரகாட்சி
எட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே.

672.
மந்தர மேறு மதிபானு வைமாற்றக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்கா மியலோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே

673.
முடிந்திட்டு வைத்து முயங்கிலோ ராண்டில்
அணிந்த அணிமாகை தானாம் இவனுந்
தணிந்தவப் பஞ்சினுந் தானொய்ய தாகி
மெலிந்தங் கிருந்திடும் வெல்லவொண் ணாதே.

லகிமா[தொகு]

674.
ஆகின்ற வத்தினி நாயகி தன்னுடன்
போகின்ற தத்துவம் எங்கும் புகலதாய்ச்
சாய்கின்ற காலங்கள் தன்வழி நின்றிடின்
மாய்கின்ற வையாண்டின் மாலகு வாகுமே.

675.
மாலகு வாகிய மாயனைக் கண்டபின்
தானொளி யாகித் தழைத்தங் கிருந்தடும்
பாலொளி யாகிப் பரந்தெங்கு நின்றது
மேலொளி யாகிய மெய்ப்பொருள் காணுமே.

மகிமா[தொகு]

676.
மெய்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்
தற்பொரு ளாகிய தத்துவங் கூடிடக்
கைப்பொரு ளாகக் கலந்திடு மோராண்டின்
மைப்பொரு ளாகு மகிமாவ தாகுமே.

677.
ஆகின்ற காலொளி யாவது கண்டபின்
போகின்ற காலங்கள் போவது மில்லையாம்
மேனின்ற காலம் வெளியுற நின்றபின்
தானின்ற காலங்கள் தன்வழி யாகுமே.

678.
தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்
தன்வழி யாகத் தழைத்திடும் வையகந்
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாந்
தன்வழி தன்னரு ளாகிநின் றாளே.

பிராத்தி[தொகு]

679.
நின்றன தத்துவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையா னவையெலாங்
கொண்டவை யோராண்டு கூட இருந்திடில்
விண்டது வேநல்ல பிராத்திய தாகுமே.

கரிமா[தொகு]

680.
ஆகின்ற மின்னொளி யாவது கண்டபின்
பாகின்ற பூவிற் பரப்பவை காணலாம்
மேகின்ற காலம் வெளியுற நின்றது
போகின்ற காலங்கள் போவது மில்லையே.

681.
போவதொன் றில்லை வருவது தானில்லை
சாவதொன் றில்லை தழைப்பது தானில்லை
தாமத மில்லை தமரகத் தின்னொளி
யாவது மில்லை யறிந்துகொள் வார்க்கே.

682.
அறிந்த பராசத்தி யுள்ளே அமரில்
பறிந்தது பூதப் படையறை யெல்லாங்
குறிந்தவை யோராண்டு கூட இருக்கில்
விரிந்தது பரகாய மேவலு மாமே.

பிரகாமியம்[தொகு]

683.
ஆன விளக்கொளி யாவ தறிகிலர்
மூல விளக்கொளி முன்னே யுடையவர்
கான விளக்கொளி கண்டுகொள் வார்கட்கு
மேலை விளக்கொளி வீடெளி தாநின்றே.

ஈசத்துவம்[தொகு]

684.
நின்ற சதாசிவ நாயகி தன்னுடன்
கண்டன பூதப் படையவை எல்லாங்
கொண்டவை யோராண்டு கூடி யிருந்திடிற்
பண்டையவ் விசன தத்துவ மாகுமே.

685.
ஆகின்ற சந்திரன் தண்ணொளி யாயவன்
ஆகின்ற சந்திரன் தடபமு மாயிடும்
ஆகின்ற சந்திரன் தன்கலை கூடிடில்
ஆகின்ற சந்திரன் தானவ னாமே.

686.
தானே படைத்திட வல்லவ னாயிடும்
தானே யளித்திட வல்லவ னாயிடும்
தானே சங்காரத் தலைவனு மாயிடும்
தானே யிவனெனுந் தண்மைய னாமே.

687.
தண்மைய தாகத் தழைத்த கலையினுள்
பண்மைய தாகப் பரந்தஐம் பூதத்தை
வண்மைய தாக மறித்திடில் ஓராண்டின்
மென்மைய தாகிய மெய்ப்பொருள் காணுமே.

வசித்துவம்[தொகு]

688.
மெய்ப்பொரு ளாக விளைந்தது வேதெனின்
நற்பொரு ளாகிய நல்ல வசித்துவங்
கைப்பொரு ளாகக் கலந்த உயிர்க்கெலாந்
தற்பொரு ளாகிய தன்மைய னாகுமே.

689.
தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மெய்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

689.
தன்மைய தாகத் தழைத்த பகலவன்
மெய்மைய தாகிய மெய்ப்பொருள் கண்டிடின்
பொன்மைய தாகப் புலன்களும் போயிட
நன்மைய தாகிய நற்கொடி காணுமே.

690.
நற்கொடி யாகிய நாயகி தன்னுடன்
அக்கொடி யாகம் அறிந்திடின் ஓராண்டு
பொற்கொடி யாகிய புவனங்கள் போய்வருங்
கற்கொடி யாகிய காமுக னாமே.

691.
காமரு தத்துவ மானது வந்தபின்
பூமரு கந்தம் புவனம் தாயிடும்
மாமரு வுன்னிட மெய்திடு மானனாய்
நாமரு வும்மொளி நாயக மானதே.

692.
நாயக மாகிய நல்லொளி கண்டபின்
தாயக மாகத் தழைத்தங் கிருந்திடும் போயக மான புவனங்கள் கண்டபின்
பேயக மாகிய பேரொளி காணுமே.

693.
பேரொளி யாகிய பெரியவவ் வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளயி யாகிய காலொளி காணுமே.

694.
காலொ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ் ற்றொருபத்து மூன்றையும்
காலது பெண்மண்டிக் கொண்டுஇவ் வாறே.

695.
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற் றொடஞ்சுள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்பதி ரண்டே.

696.
இரண்டினின் மேலே சதாசிவ நாயகி
இரண்டது கால்கொண் டெழுவகை சொல்லில்
இரண்டது ஆயிரம் ஐம்பதோ டொன்றாய்த்
திரண்டது காலம் எடுத்தும் அஞ்சே.

697.
அஞ்சுடன் அஞ்சு முகமுள நாயகி
அஞ்சுடன் அஞ்சது வாயுத மாவது
அஞசது வின்றி இரண்டது வாயிரம்
அஞ்சது காலம் எடுத்துளும் ஒன்றே.

698.
ஒன்றது வாகிய தத்துவ நாயகி
ஒன்றது கால்கொண் டூர்வகை சொல்லிடின்
ஒன்றது வென்றிகொள் ஆயிரம் ஆயிரம்
ஒன்றது காலம் எடுத்துளும் முன்னே.

699.
முன்னெழும் அக்கலை நாயகி தன்னுடன்
முன்னுறு வாயு முடிவகை சொல்லிடின்
முன்னுறும் ஐம்பத்தொ டொன்றுடன் அஞ்சுமாய்
முன்னுறு வாயு முடிவகை யாமே.

700.
ஆய்வரும் அத்தனி நாயகி தன்னுடன்
ஆய்வரு வாயு அளப்பது சொல்லிடில்
ஆய்வரும் ஐஞ்நூற்று முப்பதொ டொன்பது
ஆய்வரு வாயு வளப்புள் ளிருந்ததே.

701.
இருநிதி யாகிய எந்தை யிடத்து
இருநிதி வாயு இயங்கு நெறியில்
இருநூற்று முப்பத்து மூன்றுடன் அஞ்சாய்
இருநிதி வாயு இயங்கும் எழுத்தே.

702.
எழுகின்ற சோதியுள் நாயகி தன்பால்
எழுகின்ற வாயு இடமது சொல்லில்
எழுநூற் றிருபத் தொன்பா னதுநாலாய்
எழுத்துடன் அங்கி இருந்ததிவ் வாறே.

703.
ஆறது கால்கொண் டிரதம் விளைத்திடும்
ஏழது கால்கொண் டிரட்டி இறக்கிட
எட்டது கால்கொண் டிடவகை யேற்றபின்
ஒன்பது மாநிலம் ஒத்தது வாயுவே.

704.
சந்திரன் சூரியன் தற்பரன் தாணுவிற்
சந்திரன் தானுந் தலைப்படுந் தன்மையைச்
சந்தியி லேகண்டு தானாஞ் சகமுகத்
துந்திச் சமாதி யுடையொளி யோகியே.

705.
அணங்கற்ற மாதல் அருஞ்சன நீவல்
வணங்குற்ற கல்விமா ஞான மிகுத்தல்
சிணுங்குற்ற வாயர் சித்திதாங் கேட்டல்
நுணுங்கற் றிருத்தல்கால் வேகத்து நுந்தலே.

706.
மரணங் சரைவிடல் வண்பர காயம்
இரணஞ் சேர்பூமி இறந்தோர்க் களித்தல்
அரணன் திருவுரு வாதன்மூ வேழாங்
கரனுறு கேள்வி கணக்கறிந் தோனே.

707.
ஓதம் ஒலிக்கும் உலகை வலம்வந்து
பாதம் நோவ நடந்தும பயனில்லை
காதலில் அண்ணலைக் காண இனியவர்
நாதன் இருந்த நகரறி வோரே.

708.
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.

709.
ஆதார யோகத் ததிதே வொடுஞ்சென்று
மீதான தற்பரை மேவும் பரனொடு
மேதாதி யீரெண் கலைசெல்ல மீதொளி
ஓதா அசிந்தமீ தானந்த யோகமே.

710.
மதியமும் ஞாயிறும் வந்துடன் கூடித்
துதிசெய் பவரவர் தொல்வா னவர்கள்
விதியது செய்கின்ற மெய்யடி யார்க்குப்
பதியது காட்டும் பரமன்நின் றானே.

711.
கட்டவல் லார்கள் கரந்தேங்குந் தானாவர்
மட்டவிழ் தாமரை யுள்ளே மணஞ்செய்து
பொட்டெழக் குத்திப் பொறியெழத் தண்டிட்டு
நட்டிடு வார்க்கு நமனில்லை தானே.

12.கலை நிலை[தொகு]

712.
காதல் வழிசெய்த கண்ணுதல் அண்ணலைக்
காதல் வழிசெய்து கண்ணுற நோக்கிடிற்
காதல் வழிசெய்து கங்கை வழிதருங்
காதல் வழிசெய்து காக்கலு மாமே.

713.
காக்கலு மாருங் கரணங்கள் நான்கையும்
காக்கலு மாருங் கலைபதி னாறையும்
காக்கலு மாருங் கலந்தநல் வாயுவும்
காக்கலு மாருங் கருத்துற நில்லே.

714.
நிலைபெற நின்றது நேர்தரு வாயு
சிலைபெற நின்றது தீபமும் ஒத்துக்
கலைவழி நின்ற கலப்பை அறியின்
மலைவறி வாகும் வழியது வாமே.

715.
புடையொன்றி நின்றிடும் பூதப் பிரானை
மடையொன்றி நின்றிட வாய்த்த வழியில்
சடையொன்றி நின்றச் சஙகர நாதன்
விடையொன்றி லேறியே வீற்றிருந் தானே.

716.
இருக்கின்ற காலங்கள் ஏதும் அறியார்
பெருக்கின்ற காலப் பெருமையை நோக்கி
ஒருக்கின்ற வாயு வெளிபெற நிற்கத்
தருக்கொன்றி நின்றிடுஞ் சாதக னாமே.

717.
சாதக மானஅத் தன்மையை நோக்கியே
மாதவ மான வழிபாடு செய்திடும் போதக மாகப் புகலுறப் பாய்ச்சினால்
வேதாக மாக விளைந்து கிடக்குமே.

718.
கிடந்தது தானே கிளர்பயன் மூன்று
நடந்தது தானேஉள் நாடியை நோக்கிப்
படர்ந்தது தானே பங்கய மாகத்
தொடர்ந்தது தானேஅச் சோதியுள் நின்றே.

719.
தானே எழுந்தஅத் தத்துவ நாயகி
ஊனே வழிசெய்தெம் உள்ளே யிருந்திடும்
வானோர் உலகீன்ற அம்மை மதித்திடத்
தேனே பருகிச் சிவாலய மாகுமே.

720.
திகழும் படியே செறிதரு வாயு
அழியும் படியை அறிகல் ராரும்
அழியும் படியை அறிந்தபின் நந்தி
திகழ்கின்ற வாயுவைச் சேர்தலு மாமே.

721.
சோதனை தன்னில் துரிசறக் காணலாம்
நாதனும் நாயகி தன்னிற் பிரியுநாள்
சாதக மாகுங் குருவழிப் பட்டு
மாதன மாக மதித்துக்கொள் ளீரே.

722.
ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப்
பேராமற் கட்டிப் பெரிதுண்ண வல்லிரேல்
நீரா யிரமும் நிலமாயி ரத்தாண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.

723.
ஓசையில் ஏழும் ஒளியின்கண் ஐந்தும்
நாசியின் மூன்றும் நாவில் இரண்டும்
தேசியுந் தேசனுந் தன்னிற் பிரியுநாள்
மாசறு சோதி வழுத்துவைத் தானே.

13.சரீரசித்தியுபாயம்[தொகு]

724.
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.

725.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

726.
சுழற்றிக் கொடுக்கவே சுத்திக் கழியுங்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்து
உழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்கு
அழற்றித் தவிர்துடல் அஞ்சன மாமே.

727.
அஞ்சனம் போன்றுட லையறு மந்தியில்
வஞ்சக வாத மறுமத்தி யானத்திற்
செஞ்சிறு காலையிற் செய்திடிற் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே.

728.
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றவிழ் முட்டை யிரண்டையுங் கட்டியிட்டு
ஊன்றி யிருக்க உடலழி யாதே.

729.
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபது மாறும் புகுவரே.

730.
சத்தியார் கோயி லிடம்வலஞ் சாதித்தான்
மத்தியா னத்திலே வாக்கியங் கேட்கலாந்
தித்தித்த கூத்துஞ் சிவனும் வெளிப்படுஞ்
சத்தியஞ் சொன்னோஞ் சதாநந்தி ஆணையே.

731.
திறத்திறம் விந்து திகழ மகாரம்
உறப்பெற வேநினைந் தோதுஞ் சகாரம்
மறப்பது மந்திர மன்னிய நாத
மறப்பற யோகிக் கறநெறி யாமே.

732.
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்திய பானனைச்
சிந்தித தெழுப்பச் சிவனவ னாமே.

733.
மாறா மலக்குதந் தன்மே லிருவிரற்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே.

734.
நீல நிறனுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே.

735.
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம பலவுள
கண்டங் கருத்த காபலியு மாமே.

736.
பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அணடத்துள் உற்று அடுத்தடுத் தேகிடின்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச சிக்குநற் காயமு மாமே.

737.
கழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடிக் காண் குறிலாங்கே
நிழலுளுந் தெற்றுளும் நித்தலு மாமே.

738.
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுவுங் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட வுணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே.

739.
ஆகுஞ் சனவேத சக்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப் பல்கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே.

14.காலசக்கரம்[தொகு]

740.
மதிவட்ட மாக வரையைந்து நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனாற்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறு
மதுவிட்டுப் போமாறு மாயலுற் றேனே.

741.
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழுங்
கற்றறி வெட்டுங் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.

742.
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

743
.திருந்து தனமத் தினத்தினத் தோடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டெட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே.

744.
மனைபுகு வீரும் மனத்திடை நாடில்
எனவிரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந்தோ ரட்டுத் தற்குறி யாறு
வினையி யாது விளங்கிய நாலே.

745.
நாலுங் கடந்தது நால்வரும் நலைந்து
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே.

746.
ஆறும் இருபதுக் கையஞசு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபததொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதியங்க ணாள்விதித் தானே.

747.
விதித்த இருபத்தெட்டொடுமுன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

748.
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரண மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே.

749.
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கச்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே.

750.
நண்ணுஞ் சிறுவிர னாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியின் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடில்
உன்னி யணைந்திடும் ஓவியந் தானே.

751.
ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடல் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

752.
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்று மகிழ்ந்துடல் ஒத்திடுங்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிணடம் பிரியப் பிணங்குகின் றாரே.

753.
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குள னாதித்த னாறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
கணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே.

754.
சுழல்கின்ற வாறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமற்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே.

755.
கூத்தன் குறியிற் குணம்பல கண்டவர்
சாத்திரந் தன்னைத் தலைப்பெய்து நிற்பர்கள்
பார்த்திருந் துள்ளே அனுபோக நோக்கிடில்
ஆத்தனு மாகி யலர்திரு மொன்றே.

756.
ஒன்றில் வளர்ச்சி உலப்பில் கேளினி
நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடும்
சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற்
குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே.

757.
கூத்தன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே
ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற்
சாத்திடு நூறு தலைப்பய்ய லாமே.

758.
சாந்திடு நூறு தலைப்பெய்து நின்றவர்
காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள்
சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர்
மூத்துடன் கோடி யுகமது வாமே.

759.
உகங்கோடி கண்டும் ஓசிவற
நின்று அகங்கோடி கண்டு ளயலறக் காண்பர்கள்
சிவங்கோடி விட்டுச் செறிய இருந்தங்கு
உகங்கோடி கண்டங் குயருறு வாறே.

760.
உயருறு வாருல கத்தொடுங் கூடிப்
பயனுறு வார்பலர் தாமறி யாமற்
செயலுறு வார்சிலர் சிந்தையி லாமற்
கயலுறு கண்ணியைக் காணகி லாரே.

761.
காணகி லாதார் கழிந்தோடிப் போவர்கள்
நாணகி லாதார் நயம்பேசி விடுவர்க்ள
காணகி லாதார் கழிந்த பொருளெலாங்
காணகி லாமற் கழிகின்ற வாறே.

762.
கழிகின்ற அப்பொருள் காணகி லாதார்
கழிகின்ற அப்பொருள் காணலு மாகுங்
கழிகின்ற வுள்ளே கருத்துற நோக்கிற்
கழியாத அப்பொருள் காணலு மாமே.

763.
கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ள
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந்
திண்ணென் றிருக்குஞ் சிவகதி யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே.

764.
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்நிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்குத் கூறுலு மாமே.

765.
கூறும் பொருளி தகார வுகாரங்கள்
தேறும் பொருளிது சிந்தையுள் நின்றிடக்
கூறு மகாரங் குழல்வழி யோடிட
ஆறும் அமர்ந்திடும் அணணலு மாமே.

766.
அண்ணல் இருப்பிட மாரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வார்கட்கு
அண்ணல் அழிவின்றி உள்ளே அமர்ந்திடும்
அணணலைக் காணில் அவனவ னாகுமே.

767.
அவனிவ னாகும் பரிசறி வாரில்லை
அவனிவ னாகும் பரிசது கேள்நீ
அவனிவ னோசை ஒளியினுள் ஒன்றிடும்
அவனிவன் வட்டம தாகிநின் றானே.

768.
வட்டங்க ளேழு மலர்ந்திடும் உம்முளே
சிட்டன் இருப்பிடஞ் சேர அறிகிலீர்
ஒட்டி யருந்துள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடங் காணலு மாகுமே.

769.
காணலு மாகும் பிரமன் அரியென்று
காணலு மாகுங் கறைக்கண்டன் ஈசனைக்
காணலு மாகுஞ் சதாசிவ சத்தியுங்
காணலு மாகுங் கலந்துடன் வைத்தே.

15.ஆயுட்பரீட்சை[தொகு]

770.
வைத்தகை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில்
உத்தமம் மிக்கிடில் ஓராறு திங்களாம்
அத்த மிகுத்திட் டிராட்டிய தாயிடில்
நித்தல் உயிர்க்கொரு திங்களில் ஓசையே.

771.
ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்
ஓசை யிறந்தவர் ஈசனை உள்குவர்
ஓசை யிறந்தவர் நெஞ்சினுள் ஈசனும்
ஓசை யுணர்ந்த வுணர்விது வாமே.

772.
ஆமே அழிகின்ற வாயுவை நோக்கிடின்
நாமேல் உறைகின்ற நன்மை யளித்திடும்
பூமேல் உறைகின்ற போதகம் வந்திடும்
தாமே யுலகில் தலைவனு மாமே.

773.
தலைவ னிடம்வலஞ் சாதிப்பார் இல்லை
தலைவ னிடம்வல மாயிடில் தையல்
தலைவ னிடம்வலந் தன்வழி யஞ்சில்
தலைவ னிடம்வலந் தன்வழி நூறே.

774.
ஏறய வாறினில் எண்பது சென்றிடும்
தேறிய ஏழிற் சிறக்கும் வகையெண்ணில்
ஆறாரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்
தேறியே நின்று தெளியில் வகையே.

775.
இவ்வகை எட்டும் இடம்பெற ஓடிடில்
அவ்வகை ஐம்பதே யென்ன அறியலாம்
செவ்வகை ஒன்பதுஞ் சேரவே நின்றிடின்
முவ்வகை யாமது முப்பத்து மூன்றே.

776.
மும்மூன்றும் ஒன்றும் மடிவுற நின்றிடில்
எண்மூன்றும் நாலும் இடவகை யாய்நிற்கும்
ஐம்மூன்றும் ஓடி அகலவே நின்றிடிற்
பன்மூன்றொ டீராறு பார்க்கலு மாமே.

777.
பார்க்கலு மாகும் பகல்முப் பதுமாகில்
ஆக்கலு மாகுமவ் வாறிரண் டுள்ளிட்டுப்
போக்கலு மாகும் புகலற ஒன்றினில்
தேக்கலு மாகுந் திருந்திய பத்தே.

778.
எயிரு நாளும் இயல்புற ஓடிடிற்
பாயுரு நாளும் பகையற நின்றிடும்
தேய்வுற மூன்றுந் திகழ்வே நின்றிடில்
ஆயிரு வாமென் றளக்கலு மாமே.

779.
அளக்கும் வகைநாலும் அவ்வழி
ஓடில் விளக்கும் ஒருநாலு மெய்ப்பட நிற்கும்
துளக்கும் வகையைந்து தூய்நெறி ஓடில்
களக்க மறமுன்றிற் காணலு மாமே.

780.
காணலு மாகுங் கருதிய பத்தோடிற்
காணலு மாகுங் கலந்த இரண்டையும்
காணலு மாகுங் கலப்பற மூவைந்தேற்
காணலு மாகுங் கருத்துற ஒன்றே.

781.
கருதும் இருபதிற் காணஆ றாகும்
கருதிய ஐயைந்தி காண்பது மூன்றாம்
கருதும் இருப துடனாறு காணிற்
கருதும் இரண்டெனக் காட்டலு மாமே.

782.
காட்டலு மாகுங் கலந்திரு பத்தேழில்
காட்டலு மாகுங் கலந்தெழும் ஒன்றினில்
காட்டலு மாகுங் கலந்திரு பத்தெட்டிற்
காட்டலு மாகுங் கலந்தஈ ரைந்தே.

783.
ஈரைந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும்
பாரஞ்சி நின்ற பகைபத்து நாளாகும்
வாரஞ்செய் கின்ற வகையாறஞ் சாமாகில்
ஓரஞ்சொ டொன்றொன் றெனவொன்று நாளே.

784.
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.

785.
மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றரகத் தொனித்தனன் நந்தி
வினையுற வோங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.

786.
ஆரு மறியார் அளக்கின்ற வன்னியை
ஆரு மறியார் அளகின்ற வாயுவை
ஆரு மறியார் அழிகின்ற அப்பொருள்
ஆரு மறியா அறிவறித் தேனே.

787.
அறிவது வாயுவொ டைந்தறி வாயது
அறிவா யதுதான் உலகுயி ரத்தின்
பிறிவுசெய் யாவை பேணியுள் நாடிற்
செறிவது நின்று திகழ மதுவே.

788.
அதுவரு ளும்மரு ளான் துலகம்
பொதுவரு ளும்புக ழாளர்க்கு நாளு
மதுவரு ளும்மலர் மங்கையர் செல்வி
இதுவருள் செய்யும் இறையவ னாமே.

789.
பிறப்பது சூழ்ந்த பெருந்தகை நந்தி
குறிப்பது கூடிய கோலக் குரம்பை
பழப்பதி யாவது பற்றறும் பாசம்
அழப்படி செய்வார்க் ககலு மதியே.

16.வாரசரம்[தொகு]

790.
வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதனிடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடந்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.

791.
வெள்ளி வெண்திங்கள் விளங்கும் புதன்மூன்றுந்
தள்ளி இடத்தே தயங்குமே யாமாகில்
ஒள்ளிய காயத்துக் கூன மிலையென்று
வள்ளல் தமக்கு மகிழ்ந்துரைத் தானே.

792.
செவ்வாய் வியாழஞ் சனிஞாயி றேஎன்னும்
இவ்வா ரறிகின்ற யோகி இறைவனே
ஒவ்வாத வாயு வலத்துப் புரியவிட்
டவ்வா றறி வார்க்கவ் வானந்தமாமே.

793.
மாறி வருமிரு பான்மதி வெய்யவன்
ஏறி இழியும் இடைபிங் கலையிடை
ஊறும் உயிர்நடு வேயுலி ருக்கிரந்
தேறி அறிமின் தெரிந்து தெளித்தே.

794.
உதித்த வலத்திடம் போகின்ற போது
அதிர்த்தஞ்சி யோடுத லாமகன் றாரும்
உதித்தது வேமிக வோடிடு மாகில்
உதித்த விராசி யுணர்த்துகொ ளுற்றே.

795.
நடுவுநில் லாமல் இடம்வலம் ஓடி
அடுகின்ற வாயுவை அந்தணன் கூடி
இடுகின்ற வாறுசென் றின்பணி சேர
முடிகின்ற தீபத்தின் முன்னுண்டென் றானே.

796.
ஆயும் பொருளும் அணிமலர் மேலது
வாயு விதமும் பதினா றுளவலி
போயம் மனத்தைப் பொருகின்ற வாதாரம்
ஆயுவு நாளு முகூர்த்தமு மாமே.

17.வாரசூலம்[தொகு]

797
வாரத்திற் சூலம் வரும்வழி கூறங்கால்
தேரொத்த திங்கள் சனிக்கிழக் கேயாகும்
பாரொத்த சேய்புதன் உத்தரம் பானுநாள்
நேரொத்த வெள்ளி குடக்காக நிற்குமே.

798.
தெக்கண மாகும் வியாழத்துச் சேர்திசை
அக்கிணி சூலமு மாமிடம் பின்னாகில்
துக்கமும் இல்லை வலமுன்னே தோன்றிடின்
மிக்கது மேல்வினை மேன்மேல் விளையுமே.

18.கேசரியோகம்[தொகு]

799.
கட்டக் கழன்று கீழ்நான்று விழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே.

800.
வண்ணான் ஒலிக்குஞ் சதுரப் பலகைமேற்
கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
விண்ணாறு பாய்ச்சிக குளத்தை நிரப்பிட்டு
அண்ணாந்து பார்க்க அழுக்கற்ற வாறே.

801.
இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோர்வும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணரவல் லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலு மாமே.

802.
ஆய்ந்துரை செய்யின் அமுதநின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யு நலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே.

803.
நாவின் நுனியை நடுவே சிவிறிடிற்
சீவனும் அங்கே சிவனும் உறைவிடம்
மூவரும் முப்பத்து மூவருந் தோன்றுவர்
சாவதும் இல்லை சதகோடி யூனே.

804.
ஊனூறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வானூறல் பாயும் வகையறி வாரில்லை
வானூறல் பாயும் வகையறி வாளர்க்குத்
தேனூறல் உண்டு தெளிதலு மாமே.

805.
மேலை யணாவில் விரைந்திடு காலிடிற்
காலனும் இல்லை கதவுந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

806.
நந்தி முதலாக நாமேலே யேறிட்டுச்
சந்தித் திருக்கில் தரணி முழுதாளும்
பந்தித் திருக்கும் பகலோன் வெளியாகச்
சிந்தித் திருப்பவர் தீவினை யாளரே.

807.
தீவினை யாடத் திகைத்தங் கிருந்தவர்
நாவினை நாடின் நமனுக் கிடமில்லை
பாவினை நாடிப் பயனறக் கண்டவர்
தேவினை யாடிய தீங்கும் பாமே.

808.
தீங்கரும் பாகவே செய்தொழி லுள்ளவர்
ஆங்கரும் பாக அடையநா வேறிட்டுக்
கோங்கரும் பாகிய கோணை நிமிர்த்திட
உன்கரும் பாகியே ஊனீர் வருமே.

809.
ஊனீர் வழியாக வுண்ணாவை யேறிட்டுத்
தேனீர் பருகிச் சிவாய நமவென்று
கானீர் வரும்வழி கங்கை தருவிக்கும்
வானீர் வரும்வழி வாய்ந்தறி வீரே.

810.
வாய்ந்தறிந் துள்ளே வழிபாடு செய்தவர்
காய்தறி வாகக் கருணை பொழிந்திடும்
பாய்ந்தறிந் துள்ளே படிக்கத வொன்றிட்டுக்
கூய்ந்தறிந் துள்ளுறை கோயிலு மாமே.

811.
கோயிலின் உள்ளே குடிசெய்து வாழ்பவர்
தாயினும் நல்லார் தரணி முழுதுக்குங்
காயினும் நல்லவர் காய்த்தவர் தம்முளுந்
தீயினுந் தீயரத் தீவினை யாளர்க்கே.

812.
தீவினை யாளர்தஞ் சென்னியி லுள்ளவன்
பூவினை யாளர்தம் பொற்பதி யானவன்
பாவினை யாளர்தம் பாவகத் துள்ளவன்
மாவினை யாளர்தம் மதியினுள் ளானே.

813.
மதியி னெழுங்கதிர் போலப் பதினாறாய்ப்
பதிமனை நூறுநூற்றிருபத்து நாலாய்க்
கதிமனை யுள்ளே கணைகள் பரப்பி
எதிர்மலை யாமல் இருந்தனன் தானே.

814.
இருந்தனள் சத்தியு மக்கலை சூழ
இருந்தனள் கன்னியு மந்நடு வாக
இருந்தனள் மானோர் முகநில வார
இருந்தனள் தானும் அமுதம் பொழிந்தே.

815.
பொழிந்த இருவெள்ளி பொன்மண் ணடையில்
வழித்துள் ளிருந்தது வான்முத லங்குக்
கழிந்தது போகாமற் காக்கவல் லார்க்குக்
கொழுந்தது வாகுங் குணமது தானே.

816.
குணமது வாகிய கோமள வல்லி
மணமது வாக மகிழ்ந்தங் கிருக்கில்
தனமது வாகிய தத்துவ ஞானம்
இனமது வாக இருந்தனன் தானே.

817.
இருந்த பிராணனும் உள்ளே எழுமாம்
பிரிந்தஇத் தண்டுடன் அண்டம் பரிய
விரிந்தஅப் பூவுடன் மேலெழ வைக்கின்
மலர்ந்தது மண்டலம் வாழலு மாமே.

818.
மண்டலத் துள்ளே மனவொட்டி யாணத்தைக்
கண்டகத் தங்கே கருதியே கீழ்க்கட்டிற்
பண்டகத் துள்ளே பகலே ஒளியாகக்
குண்டலக் காதனுங் கூத்தோழிந் தானே.

819.
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவும் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.

820.
பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே.

821.
விளங்கிடும் வாயுவை மேலெழ உன்னி
நலங்கிடுங் கண்டத்து நாபியி னுள்ளே
வணங்கிடு மண்டலம் வாய்த்திடக் கும்பிச்
கணங்கிட நின்றவை சொல்லலு மாமே.

822.
சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மண்ணீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூறிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே.

823.
தூர தரிசனஞ் சொல்லுவன் காணலாங்
காராருங் கண்ணி கடைஞான முட்பெய்தி
ஏராருந் தீபத் தெழிற்சிந்தை வைத்திடிற்
பாரா ருலகம் பகன்முன்ன தாமே.

824.
முன்னெழு நாபிக்கு முந்நூல் விரற்கீழே
பன்னெழு வேதப் பகலொளி யுண்டென்னும்
நன்னெழு நாதத்து நற்றீபம் வைத்திடத்
தன்னெழு கோயில் தலைவனு மாமே.

19.பரியங்கியோகம்[தொகு]

825.
பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழல் மாலையுஞ் சாத்திய
காயக் குழலி கலவி யொடுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

826.
போகத்தை யுன்னவே போகாது வாயுவும்
மோகத்தை வெள்ளியு மீளும் வியாழத்தில்
சூதொத்த மென்முலை யாளுநற் சூதனுந்
தாதிற் குழைந்து தலைகண்ட வாறே.

827.
கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
கண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது வங்கமே.

828.
அங்கப் புணர்ச்சியு மாகின்ற தத்துவம்
அங்கத்தில் விந்து வருகின்ற போகத்துப்
பங்கப் படாமற் பரிகரித்துத் தம்மைத்
தங்கிக் கொடுக்கத் தலைவனு மாமே.

829.
தலைவனு மாயிடுந் தன்வழி ஞானந்
தலைவனு மாயிடுந் தன்வழி போகந்
தலைவனு மாயிடுந் தன்வழி யுள்ளே
தலைவனு மாயிடுந் தன்வழி அஞ்சே.

830.
அஞ்சு சடிகைமேல் ஆறாங் கடிகையில்
துஞ்சுவ தொன்றத் துணைவி துணைவன்பால்
நெஞ்சு நிறைந்தது வாய்கொளா தென்றது
பஞ்ச கடிகை பரியங்கி யோகமே.

831.
பரியங்கி யோகத்துப் பஞ்ச கடிகை
அரியஇவ் வியோகம் அடைந்தவர்க் கல்லது
சரிவளை மன்கைச்சி சந்தனக் கொங்கை
உருவித் தழுவ ஒருவற்கொண் ணாதே.

832.
ஒண்ணாத யோகத்தை உற்றவ ராரென்னில்
விண்ணார்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
பண்ணார் அமுதினைப் பஞ்ச கடிகையில்
எண்ணா மெனஎண்ணி இருந்தான் இருந்ததே

833.
ஏய்ந்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கு மன்னர்க்கு மானந்தம்
வாய்ந்த குழலியோ டைந்து மலர்ந்திடச்
சேர்ந்தன சித்தமுஞ் சோர்வில்லை வெள்ளிக்கே

834.
வெள்ளி யுருகிப் பொன்வழி ஓடாமே
கள்ளத்தட் டானார் கரியிட்டு மூடினார்
கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று
வள்ளிய னாவில் அடக்கிவைத் தாரே.

835.
வைத்த இருவருந் தம்மின் மகிழ்ந்துடன்
சித்தங் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
பத்து வகைக்கும் பதிணென் கணத்துக்கும்
வித்தக னாய்நிற்கும் வெங்கதி ரோனே.

836.
வெங்கதி ருக்குஞ் சனிக்கும் இடைநின்ற
நங்கையைப் புல்லிய நம்பிக்கோ ரானந்தந்
தங்களிற் பொன்னிடை வெள்ளிதா ழாமுனந்
திங்களிற் செவ்வாய் புதைந்திருந் தாதே.

837.
திருந்திப் புதனைத் திருத்தல்செய் வார்க்குக்
கருத்தழ காலே கலந்தங் கிருக்கில்
வருத்தமு மில்லையா மங்கை பங்கற்குந்
துருத்தியுள் வெள்ளியுஞ் சோரா தெழுமே.

838.
எழுகின்ற தீயின்முன் னேகொண்டு சென்றிட்டால்
மெழுகுரு கும்பரி செய்திடும் மெய்யை
உழுகின்ற தில்லை ஒளியை அறிந்தபின்
விழுகின்ற தில்லை வெளியறி வார்க்கே.

839.
வெளியை அறிந்து வெளியி னடுவே
ஒளியை அறியி னுளிமுறி யாமே
தெளிவை அறிந்து செழுநந்தி யாலே
வெளியை அறிந்தனன் மேலறி யேனே.

840.
மேலாந் தலத்தில் விரிந்தவ ராரெனின்
மாலாந் திசைமுகன் மாநந்தி யாயவர்
நாலா நிலத்தி னடுவான வப்பொருள்
மேலா யுரைத்தனர் மின்னிடை யாளுக்கே.

841.
மின்னிடை யாளுமின் னாளனுங் கூட்டத்துப்
பொன்னிடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
தன்னொடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேல்
மண்ணிடை பல்லூழி வாழலு மாங்கே.

842.
வாங்க விறுதலை வாங்கலில் வாங்கிய
வீங்க வலிக்கும் விரகறி வாரில்லை
வீங்க வலிக்கும் விரகறி வாளரும்
ஓங்கிய தன்னை உதம்பண்ணி னாரே.

843.
உதமறித் தங்கே ஒருகழிப் பட்டாற்
கதமறிந் தங்கே கபாலங் கறுக்கும்
இதமறிந் தென்றும் இருப்பாள் ஒருத்தி
பதமறிந் தும்முளே பார்கடிந் தாளே.

844.
பாரில்லை நீரில்லை பங்கயம் ஒன்றுண்டு
தாரில்லை வேரில்லை தாமரை பூத்தது
ஊரில்லை காணும் ஒளியது ஒன்றுண்டு
கீழில்லை மேலில்லை கேள்வியிற் பூவே.

20.அமுரிதாரணை[தொகு]

845.
உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே.

846.
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை
வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்
களிதருங் காயங் கனகம தாமே.

847.
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினர்
மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
தேறில் இதனைக் தெளியுச்சி கப்பிடின்
மாறும் இதற்கு மறுமயி ராகுமே.

848.
கரையரு கேநின்ற கானல் உவரி
வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு
நரைதிரை மாறும் நமனுமங் கில்லையே.

849.
அளக நன்னுத லாயோ ரதிசயங்
களவு காயங் கலந்தஇந் நீரிலே
மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
இளகும் மேனி இருளுங் கபாலமே.

850.
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்
நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்
ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ்
சோதி மருந்திது சொல்லவொண் ணாதே.

21.சந்திரயோகம்[தொகு]

852.
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
ஆகின்ற ஈரெட்டோ டாறிரண் டீரைத்துள்
ஏகின்ற வக்கலை யெல்லா மிடைவழி
ஆகின்ற யோகி அறிந்த அறிவே.

853.
ஆறாத தாங்கலை ஆதித்தன் சந்திரன்
ஆறா நலங்கினார் ஞாலங் கவர்கொளப்
பேறாங் கலைமுற்றும் பெருங்காலி லீரெட்டு
மாறாக் கதிர்கொள்ளு மற்றங்கி கூடவே.

854.
பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொ டாறும் உயர்கலை யான்மதி ஒத்தநல் அங்கிய தெட்டெட் டுயர்கலை
அத்திற் னின்றமை ஆய்ந்துகொள் வீரே.

855.
எட்டெட் டனலின் கலையாகும் ஈராறுட்
சுட்டப் படுங்கதி ரோனுக்குஞ் சூழ்கலை
கட்டப் படுமீரெட் டாகு மதிக்கலை
ஒட்டப் படாஇவை ஒன்றோடொன்றாகவே.

856.
எட்டெட்டும் ஈராறும் ஈரெட்டுந் தீக்கதிர்
சுட்டிட்ட சோமனில் தோன்றுங் கலையெனக்
கட்டப் படுந்தார கைகதிர் நாலுள
கட்டிட்ட தொண்ணூற்றொ டாறுங் கலாதியே

857.
எல்லாக் கலையும் இடைபிங் கலைநடுச்
சொல்லா நடுநாடி யூடே தொடர்மூலஞ்
சொல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லோர் திருவடி நண்ணிநிற் போரே.

858.
அங்கியிற் சின்னக் கதிரிரண் டாட்டத்துத்
தங்கிய தாரகை யாகுஞ் சசிபானு
வங்கியத் தாரகை யாகும் பரையொளி
தங்கு நவசக்ர மாகுந் தரணிக்கே.

859.
தரணி சலங்கனல் கால்தக்க வானம்
அரணிய பானு அருந்திங்கள் அங்கி
முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
பிரணவ மாகும் பெருநெறி தானே.

860.
தாரகை மின்னுஞ் சசிதேயும் பக்கத்துத்
தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
தாரகை பூவிற் சகலத்தி யோனிகள்
தாரகைத் தாரகை தானாஞ் சொரூபமே.

861.
முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
பிற்பதி னைஞ்சிற் பெருத்துச் சிறுத்திடும்
அப்பதி னைஞ்சும் அறியவல் லார்கட்குச்
செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.

862.
அங்கி எழுப்பி யருங்கதிர் ஊட்டத்துத்
தங்குஞ் சசியால் தாமம்ஐந் தைந்தாகிப்
பொங்கிய தாரகை யாம்புலன் போக்கறத்
திங்கள் கதிரங்கி சேர்கின்ற யோகமே.

863.
ஒன்றிய ஈரெண் கலையும் உடலுற
நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருத்துழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்பொழி யாரே.

864.
அங்கி மதிகூட வாகும் கதிரொளி
அங்கி கதிர்கூட வாகும் மதியொளி
அங்கி சிவத்தினிற் கூடவத் தாரகை
தங்கி யதுவே சகலமு மாமே.

865.
ஈராறு பெண்கலை எண்ணிரண் டாண்கலை
பேராமற் புக்குப் பிடித்துக் கொடுவந்து
நேராகத் தோன்றும் நெருப்புற வேபெய்யில்
ஆராத ஆனந்தம் ஆனந்த மானதே.

866.
காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் காலை வலத்திட்டுப்
பேணியில் வாறு பிழையாமற் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத் தாண்டே.

867.
பாலிக்கும் நெஞ்சம் பறையோசை ஒன்பதில்
ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன்
மேலைக்கு முன்னே விளக்கொளி யாய்நிற்குங்
காலைக்குச் சங்கு கதிரவன் தானே.

868.
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டம் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ னீச னிடமது தானே.

869.
உந்திக கமலத் துதித்தெழுஞ் சோதியை
அந்திக்கு மந்திர மாரும் அறிகிலார்
அந்திக்கு மந்திர மாரும் அறிந்தபின்
தந்தைக்கு முன்னே மகன்பிறந் தானே.

870.
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும்
ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள்
ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லிரேல்
வேதியன் அங்கே வெளிப்படுந் தானே.

871.
பாம்பு மதியைத் தினலுறும் பாம்பினைத்
தீங்கு கதிரையுஞ் சோதித் தனலுறும்
பாம்பு மதியுைம் பகைதீர்த் துடன்கொளீஇ
நீங்கள் கொடானே நெடுந்தகை யானே.

872.
அயின்றது வீழ்வன வுந்துயில் இன்றிப்
பயின்ற சசிவீழ் பொழுதில் துயின்று
நயந்தரு பூரணை உள்ள நடத்தி
வியந்தரு பூரணை மேவுஞ் சசியே.

873.
சசியுதிக் கும்அள வுந்தியி லின்றிச்
சசியுதித் தானேல் தனதூண் அருந்திச்
சசிசரிக் கின்றள வுந்துயி லின்றிச்
சசிசரிப் பின்கட்டன் கண்டுயில் கொண்டதே.

874.
ஊழி தரியா திருக்கின்ற யோகிகள்
நாழிகை யாக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல் லார்இச் சசிவண்ண ராமே.

875.
தண்மதி பானுச்சிச் சரிபூமி யேசென்று
மண்மதி காலங்கள் மூன்றும் வழிகண்டு
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்தபின்
தண்மதி வீழ்வள விற்கண மின்றே.

876.
வளர்கின்ற ஆதித்தன் தன்கலை யாறும்
தளர்கின்ற சந்திரன் தன்கலை யாறும்
மலர்ந்தெழு பன்னிரண் டங்குலம் ஓடி
அலர்ந்து விழுந்தமை யாரறி வாரே.

877.
ஆமுயிர்த் தேய்மதி நாளே யெனல்விந்து
போம்வழி எங்கணும் போகாது யோகிக்குக்
காமுற இன்மையிற் கட்டுண்ணு மூலத்தில்
ஓமதி யத்துள்விட் டுரையுணர் வாலே.

878.
வேறுறச் செங்கதிர் மெய்க்கலை யாறொடுஞ்
சூறுற நான்குந் தொடர்ந்துற வேநிற்கும்
ஈறிலி னன்கலை யீரைந்தொ டேமதித்
தாறுட் கலையுள் அகலுவா வாமே.

879.
உணர்விந்து சோணி உறவினன் வீசும்
புணர்விந்து வீசுங் கதிரிற் குறையில்
உணர்வும உடம்பும் இவையொக்க நிற்கில்
உணர்வும் உடம்பும் ஒருக்கால் விடாவே.

880.
விடாத மனபவ னத்தொடு மேவி
நடாவு சிவசங்கின் நாதங் கொளுவின்
கடாவிடா ஜம்புலன் கட்டுண்ணும் வீடு
படாதன இன்பம் பருகார் அமுதமே.

881.
அமுதப் புனல்வரு மாற்றங் கரைமேற்
குமிழக்கத் தற்சுட ரைந்தையுங் கூட்டிச்
சமையத்தண் டோட்டித் தரிக்கவல் லார்க்கு
நமன்இல்லை நற்கலை நாள்இல்லை தானே.

882.
உண்ணீ ரமுத முறுமூ றலைத்திறந்
தெண்ணீர் இணையடித் தாமரைக் கேசெலத்
தெண்ணீர்ச் சமாதி யமர்ந்துதீ ராநலக்
கண்ணாற் றொடேசென்று கால்வழி மாறுமே.

883.
மாறு மதியு மாதித்தனு மாறின்றித்
தாறு படாமல் தண்டோடே தலைப்படில்
ஊறு படாதுடல் வேண்டும் உபாயமும்
பாறு படாஇன்பம் பார்மிசைப் பொங்குமே.