திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/அரசர்கள் (இராஜாக்கள்) - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
எலிசா இறைவாக்கினர் சூனேம் பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுக்கிறார். விவிலிய அட்டை ஓவியம், 1923க்கு முந்தியது.

2 அரசர்கள் (The Second Book of Kings)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

1 அப்பொழுது எலிசா, "ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்" என்றார்.
2 அரசனுக்குப் பக்கபலமாயிருந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, "இதோ பாரும்! ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்து விட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?" என்று கேட்டான். அதற்கு அவர், "இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் நீ எதையும் உண்ணமாட்டாய்" என்றார்.

சிரியாவின் படை தப்பியோடுதல்[தொகு]


3 நகர வாயிலின் அருகே நான்கு தொழுநோயாளிகள் இருந்தனர். இவர்கள் ஒருவர் ஒருவரிடம், "சாவை எதிர்நோக்கி நாம் ஏன் இங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும்? நாம் நகருக்குள் செல்வோமாயின், நகரில் பஞ்சம் இருப்பதால், நாம் செத்துப் போவோம்.
4 இங்கேயே தங்கி இருந்தாலும் சாக வேண்டியதுதான். வாருங்கள்! சிரியரிவின் பாசறைக்குச் சென்று தஞ்சம் புகுவோம். அவர்கள் நம்மை வாழவிட்டால், நாம் உயிர் பிழைப்போம். அவர்கள் நம்மைக் கொன்றுபோட்டால் செத்துப்போவோம்" என்று பேசிக் கொண்டனர்.


5 இருள் கவிழ்ந்த வேளையில் அவர்கள் சிரியரின் பாசறையின் எல்லையை நெருங்கியபோது, அங்கே ஒருவரும் இல்லை.
6 ஏனெனில் தேர்கள், குதிரைகள், பெரும் படை ஆகியவற்றின் பேரொலியை சிரியாப் படையினர் கேட்கும்படி 'தலைவர்' செய்திருந்தார். எனவே அவர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, "இதோ! இஸ்ரயேல் அரசன் தனக்குத் துணையாக இத்திய அரசர்களையும் எகிப்திய அரசர்களையும் கூலிக்கு அமர்த்திக் கொண்டு நம்மைத் தாக்க வருகிறான்" என்று சொல்லிக்கொண்டனர்.
7 எனவே அவர்கள் இருள் கவிழ்ந்த வேளையில் ஓட்டம்பிடித்தனர். தங்கள் கூடாரங்களையும், கழுதைகளையும், பாசறையையும் அப்படியே விட்டுவிட்டு உயிருக்காகத் தப்பி ஓடினர்.
8 ஆகவே இந்தத் தொழுநோயாளிகள் பாசறையின் எல்லையை நெருங்கி, ஒரு கூடாரத்தின் உள்ளே நுழைந்து அங்கே உண்டு குடித்தனர். மேலும் அங்கிருந்த வெள்ளி, பொன், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்து வைத்தனர். மீண்டும் திரும்பி வந்து வேறொரு கூடாரத்தில் புகுந்து அங்கிருந்தவற்றை எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்தனர்.


9 பிறகு அவர்கள் ஒருவர் ஒருவரிடம், "இன்று நாம் இப்படிச் செய்வது சரியன்று. இந்நாள் நல்ல செய்தியின் நாள். நாளைக் காலை வரை இதை வெளியிடாது மௌனமாய் இருந்தால், நாம் குற்றவாளிகள் ஆவோம். வாருங்கள்! நாம் போய் அரச மாளிகையில் இதை அறிவிப்போம்" என்று சொல்லிக்கொண்டனர்.
10 அவர்கள் சென்று நகர வாயிற் காவலனை அணுகி, "நாங்கள் சிரியரின் பாசறைக்குள் சென்றோம். அங்கு யாரையும் காணவில்லை. அங்குக் கட்டியிருந்த குதிரைகளும் கழுதைகளும், கூடாரங்களும் அப்படியே இருந்தன" என்று தெரிவித்தனர்.


11 வாயிற் காவலர் இதை உரத்த குரலில் சொல்ல, அது உள்ளே அரச மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டது.


12 அரசன் இரவிலேயே எழுந்து தன் பணியாளரை நோக்கி, "சிரியர் நமக்கு எதிராகச் செய்துள்ளதைக் கேளுங்கள்: நாம் பட்டினியால் வருந்துவதை அறிந்து, அவர்கள் தங்கள் பாசறையை விட்டு வெளியேறி, 'இஸ்ரயேலர் நகரிலிருந்து வெளியேறுவர்; அப்பொழுது நாம் அவர்களை உயிரோடு பிடித்துக்கொண்டு நகரினுள் நுழையலாம்' என்று எண்ணி வயல்வெளிகளில் ஒளிந்திருக்கின்றனர்" என்றான்.
13 அவனுடைய பணியாளருள் ஒருவன், "இங்கே எஞ்சியுள்ள குதிரைகளுள் ஐந்தினைச் சிலர் ஓட்டிக்கொண்டு செல்லட்டும். இங்கே எஞ்சியுள்ள இஸ்ரயேலர் அனைவருக்கும் நேரிடுவதே அவர்களுக்கும் நேரிடட்டும். ஆம்; ஏற்கெனவே அழிவுக்குள்ளான இஸ்ரயேலர் அனைவரையும்போல் இவர்களும் அழிவுக்கு உள்ளாவர். எனவே அவர்களை அனுப்பிப் பார்ப்போம்" என்றான்.
14 அவ்வாறே இரண்டு குதிரைத் தேர்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் அரசன் சிலரைச் சிரியர் பாசறைக்கு அனுப்பி, "சென்று பாருங்கள்" என்று கட்டளையிட்டான்.
15 அவர்களோ சிரியரைத் தேடி யோர்தான்வரை போனார்கள். இதோ! சிரியர் தப்பிஓடிய வேகத்தில் விட்டெறிந்த ஆடைகளும் படைக்கலன்களும் சிதறிக் கிடந்தன. அத்தூதர்கள் அரசனிடம் திரும்பிவந்து அதைத் தெரிவித்தனர்.


16 உடனே மக்கள் புறப்பட்டுச் சென்று சிரியர் பாசறையைக் கொள்ளையடித்தனர். இவ்வாறு ஆண்டவரின் வாக்கின்படி ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக்காசுக்கும் இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டன.
17 அரசன் தனக்குப் பக்க பலமாயிருந்த அதிகாரியிடம, நகர்வாயிலின் காவல் பொறுப்பை ஒப்படைத்திருந்தான். மக்கள் நகர்வாயிலில் அவனை மிதித்துப் போடவே, அவன் இறந்து போனான். இவ்வாறு கடவுளின் அடியவர் தம்மிடம் வந்த அரசனுக்கு அறிவித்தபடியே நடந்தது.
18 இங்ஙனம், 'நாளை இந்நேரம் சமாரிய நகர வாயிலில் இரண்டு மரக்கால் வாற்கோதுமை, ஒரு வெள்ளிக் காசுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மாவு ஒரு வெள்ளிக் காசுக்கும் விற்கப்படும்' என்று கடவுளின் அடியவர் அரசனிடம் கூறியிருந்த வாக்கு நிறைவேறியது.


19 ஏனெனில், அந்த அதிகாரி கடவுளின் அடியவரை நோக்கி, "இதோ! பாரும் ஆண்டவர் வானின் கதவுகளைத் திறந்துவிட்டாலும் இத்தகைய காரியம் நடக்குமா?" என்று கேட்டிருந்தான். அதற்கு அவர், "இதை நீ உன் கண்களால் காண்பாய். ஆனால் அதில் எதையும் நீ உண்ணமாட்டாய்" என்று கூறியிருந்தார்.
20 அவ்வாறே அவனுக்கு நேரிட்டது. மக்கள் அவனை நகர வாயிலில் மிதித்துப்போட அவனும் இறந்து போனான்.

அதிகாரம் 8[தொகு]

சூனேம் பெண் மீண்டும் வரல்[தொகு]


1 எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, "நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில் ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும்" என்றார். [1]
2 எனவே அப்பெண் எழுந்து கடவுளின் அடியவர் வாக்கின்படி செய்தார். அவரும் அவருடைய குடும்பத்தினரும் புறப்பட்டுப் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று அங்கு ஏழாண்டுகள் தங்கியிருந்தனர்.
3 ஏழாண்டுகள் கடந்தபின் அந்தப் பெண் பெலிஸ்தியர் நாட்டினின்று திரும்பி வந்து தம் வீடும் நிலங்களும் தமக்குக் கிடைக்கும் பொருட்டு அரசனிடம் முறையிடச் சென்றார்.
4 அப்பொழுது அரசனும் கடவுளின் அடியவர்க்குப் பணிவிடை செய்து வந்த கேகசியிடம், "எலிசா புரிந்துள்ள அரும்பெரும் செயல்களையெல்லாம் எனக்குச் சொல்லும்" என்று கேட்டு உரையாடிக் கொண்டிருந்தான்.
5 அவனும் இறந்தவனை எலிசா உயிர்ப்பித்துக் கொடுத்த நிகழ்ச்சியை அரசனுக்கு எடுத்துக்கூறிக் கொண்டிருந்தான். உயிர்ப்பிக்கப்பட்ட அதே சிறுவனின் தாய் அப்பொழுது அரசன்முன் வந்து, தம் வீட்டையும் நிலங்களையும் முன்னிட்டு அரசனிடம் முறையிட்டார். அப்பொழுது கேகசி, "அரசே! என் தலைவரே! இவள்தான் அந்தப் பெண். இவள் மகனாகிய இவனைத்தான் எலிசா உயிர்ப்பித்தார்" என்றான்.
6 அரசன் அந்தப் பெண்ணிடம் அதைப்பற்றி வினவ, அவரும் நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார். அப்பொழுது அரசன் ஓர் அலுவலனை அழைத்து, "அவளுடைய உடைமைகள் எல்லாவற்றையும் அவளுக்குத் திருப்பிக் கொடுத்து விடு. மேலும் அவள் நாட்டை விட்டுச் சென்ற நாள்முதல் இன்றுவரை அவளுடைய நிலங்களிலிருந்து கிடைத்த வருவாயையும் அவளுக்குக் கொடுத்து விடு" என்று கட்டளையிட்டான்.

எலிசாவும் சிரியா மன்னனும்[தொகு]


7 எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். 'கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்' என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
8 அந்த மன்னன் அசாவேலிடம், "கையோடு ஓர் அன்பளிப்பு எடுத்துக் கொண்டு கடவுளின் அடியவரைச் சந்திக்கச் செல். 'நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?' என்று அவர் மூலம் ஆண்டவரிடம் கேட்டறிந்து வா" என்றான்.
9 எனவே அவன் தமஸ்குவில் கிடைக்கக்கூடிய எல்லா விதமான அரும்பொருள்களையும் நாற்பது ஒட்டகச் சுமையளவு கையோடு அன்பளிப்பாக எடுத்துக்கொண்டு சென்றான். அவர் முன் வந்து நின்று அவன் அவரை நோக்கி, "'நான் இந்நோயினின்று நலம் பெறுவேனா?' என்று கேட்குமாறு சிரியாவின் மன்னனும் உம் புதல்வனுமான பெனதாது உம்மிடம் என்னை அனுப்பியுள்ளார்" என்றான்.
10 எலிசா மறுமொழியாக, "நீ போய், 'நீர் நலமடைவது உறுதி' என்று சொல்; ஆனால், 'அவன் செத்துப்போவது திண்ணம்' என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தினார்" என்றார்.
11 பிறகு கடவுளின் அயடிவர் அசாவேலின் முகத்தை அவன் வெட்கமுறும் அளவுக்கு வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்து அழுதார்.
12அசாவேல் அவரை நோக்கி, "என் தலைவரே, நீர் அழுவது ஏன்?" என்று கேட்டான். அதற்கு அவர், "நீ இஸ்ரயேல் மக்களுக்கு செய்யவிருக்கிற தீமைகளை நான் அறிவேன்: அவர்களின் கோட்டைகளைத் தீக்கிரையாக்குவாய்; அவர்களுடைய இளைஞர்களை வாளுக்கு இரையாக்குவாய்; அவர்களுடைய சிறு குழந்தைகளைத் தரையில் மோதிக் கொல்வாய்; அவர்களுடைய கருவுற்ற பெண்களின் வயிற்றைக் குத்திக் கிழிப்பாய்" என்றார்.
13 அசாவேல் அவரை நோக்கி, "நாயினும் இழிந்தவன் அடியேன். இவ்வளவு கேவலமான செயலை நான் செய்வேனா?" என்றான். அதற்கு எலிசா, "நீ சிரியாவின் மன்னனாகப் போகின்றாய் என்று ஆண்டவர் எனக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்" என்றார். [2]
14 அசாவேல் எலிசாவிடமிருந்து விடைபெற்றுத் தன் தலைவனிடம் திரும்பிச் சென்றான். மன்னன் அவனை நோக்கி, "எலிசா உன்னிடம் என்ன சொன்னார்" என்று கேட்டான். அதற்கு அசாவேல், "நீர் நலமடைவது உறுதி என்று அவர் எனக்குச் சொன்னார்" என்றார்.
15 மறுநாள் அசாவேல் ஒரு போர்வையை எடுத்துத் தண்ணீரில் நனைத்து மன்னன் முகத்தை மூட, அவன் இறந்து போனான். அசாவேல் அவனுக்குப் பதிலாக அரசனானான்.

யூதா அரசன் யோராம்[தொகு]

(2 குறி 21:1-20)


16 இஸ்ரயேல் அரசன் ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில் [3] யூதாவின் அரசன் யோசபாத்தின் மகன் யோராம் யூதா நாட்டின் அரசனானான்.
17 அவன் தன் முப்பத்திரண்டாம் வயதில் அரசனாகி எட்டு ஆண்டுகள் எருசலேமில் ஆட்சி புரிந்தான்.
18 அவன் ஆகாபின் மகளை மணந்தவன்; ஆதலால் ஆகாபின் குடும்பத்தவரைப்போல இஸ்ரயேல் அரசர்களின் வழியில் நடந்தான்; ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான்.
19 ஆயினும் ஆண்டவர் தம் அடியான் தாவீதை முன்னிட்டு யூதாவை அழிக்க விரும்பவில்லை; ஏனெனில் அவர்தம் மைந்தராம் குல விளக்கை எந்நாளும் காப்பதாக அவருக்கு வாக்களித்திருந்தார். [4]


20 யோராமின் காலத்தில் ஏதோமியர் யூதாவின் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, தங்களுக்கென ஓர் அரசனை நியமித்துக் கொண்டனர். [5]
21 ஆனால் யோராம் சாயிருக்குத் தன் தேர்ப்படைகள் அனைத்தோடும் சென்றான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தலைவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அவன் இரவில் எழுந்து ஏதோமியரை வெட்டி வீழ்த்தினான். மக்கள் தம்தம் கூடாரத்திற்குத் தப்பி ஓடினர்.
22 எனவே இந்நாள் வரை ஏதோமியர் அதிகாரத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துகொண்டே இருக்கின்றனர். அதே காலத்தில் லிப்னாவும் கிளர்ச்சி செய்தது.
23 யோராமின் பிற செயல்களும் அவன் செய்தவை யாவும் 'யூதா அரசர்களின் குறிப்பேட்டில்' எழுதப்பட்டுள்ளன அல்லவா?
24 யோராம் தன் மூதாதையரோடு துயில் கொண்டு தாவீதின் நகரில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பதிலாக அவன் மகன் அகசியா அரசனானான்.

யூதா அரசன் அகசியா[தொகு]

(2 குறி 22:1-6)


25 இஸ்ரயேலின் அரசனான ஆகாபின் மகன் யோராம் ஆட்சியேற்ற பன்னிரண்டாம் ஆண்டில், யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா அரசாளத் தொடங்கினான்.


26 தன் இருபத்திரண்டாம் வயதில் அரசனான அகசியா எருசலேமில் இருந்துகொண்டு ஓராண்டு ஆட்சி செலுத்தினான். இஸ்ரயேல் அரசன் ஓம்ரியின் பேத்தியான அத்தலியா என்பவளே அவன் தாய்.
27 அவன் ஆகாபு வீட்டு மருமகனாதலின், ஆகாபு குடும்பத்தவரைப் போல நடந்து, ஆண்டவரின் பார்வையில் தீயதெனப் பட்டதைச் செய்தான்.


28 மேலும் சிரியாவின் மன்னன் அசாவேலுக்கு எதிராய்ப் போரிட ஆகாபின் மகன் யோராமுடன் இராமோத்து கிலயாதுக்குப் போனான். ஆனால் அங்குச் சிரியாப் படையினர் யோராமைத் தாக்கினர்.
29 சிரியாவின் மன்னன் அசாவேலுடன் இராமோத்தில் போரிடுகையில் சிரியரால் ஏற்பட்ட காயங்களை ஆற்றிக்கொள்வதற்காக யோராம் இஸ்ரயேலுக்குத் திரும்பி வந்தான். அப்பொழுது யூதாவின் அரசனான யோராமின் மகன் அகசியா, ஆகாபின் மகனும் காயமுற்றிருந்தவனுமான யோராமை இஸ்ரயேலில் காணச் சென்றான்.

குறிப்புகள்

[1] 8:1 = 2 அர 4:8-37.
[2] 8:13 = 1 அர 19:15.
[3] 8:16 'யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில்' என்பதற்கு 'யோராம் ஆட்சியேற்ற ஐந்தாம் ஆண்டில் யோசபாத்து யூதாவில் அரசராகி இருக்கும்போது' என்பது எபிரேய பாடம்.
[4] 6:19 = 1 அர 11:36.
[5] 8:20 = தொநூ 27:40.


(தொடர்ச்சி): அரசர்கள் - இரண்டாம் நூல்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை