திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 13 முதல் 14 வரை

விக்கிமூலம் இலிருந்து
ஆரோனின் மகன்களை நெருப்பு விழுங்குதல் (லேவி 10:12). செதுக்கியவர்: மத்தேயுசு மெரியன் (1593-1650).

லேவியர் (The Book of Leviticus)[தொகு]

அதிகாரங்கள் 13 முதல் 14 வரை


அதிகாரம் 13[தொகு]

தொழுநோய் பற்றிய சட்டங்கள்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது:
2 "ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.
3 அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு பார்த்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறி, நோயிருக்கும் பகுதி அவர் உடலிலுள்ள மற்றத் தோற் பகுதியை விடக் குழிந்திருந்தால், அது தொழுநோய்; அவரைப் பார்த்த குரு அவரைத் தீட்டுடையவர் என முடிவு செய்வார்.
4 அவர் உடலின் மேல் வெள்ளைப்படலம் இருந்தும், அந்த இடம் மற்றப் பகுதிகளிலுள்ள தோலைவிடக் குழிவாயிராமலும், அதன் மீதுள்ள உரோமம் வெண்மை ஆகாமலும் இருந்தால், குரு அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
5 ஏழாம் நாள் அவரைப் பார்க்கும் போது நோய் பரவாமல் குறைந்திருந்தால், மீண்டும் ஏழு நாள் குரு அவரை அடைத்து வைப்பார்.
6 ஏழாம் நாளில் மீண்டும் அவரை அழைத்துப் பார்வையிடுவார். நோய் பரவாமல் குறைந்திருந்தால், அவர் தூய்மையானவர் எனக் குரு தீர்ப்புச் சொல்வார், அது சொறிசிரங்கு; அவர் தம் உடைகளைத் துவைக்க வேண்டும்; அவர் தீட்டற்றவர்.
7 தீட்டற்றவர் என அறிவிக்கப்பட்டவர் தம்மைக் குருவுக்குக் காட்டியபின், மறுபடியும் சொறி சிரங்கு அவர் உடலில் ஏற்பட்டால் அவர் தம்மைக் குருவிடம் காட்ட வேண்டும்.
8 மீண்டும் சொறி சிரங்கு அவர் உடலில் இருப்பதைக் குரு கண்டால் அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அது தொழுநோய்.


9 ஒரு மனிதர் தொழுநோயாளி எனில், அவர் குருவிடம் கொண்டு வரப்படுவார்.
10 தோலில் வெண்ணிறத் தடிப்பு இருந்து, அது உரோமத்தை வெண்மையாக மாற்றி, திறந்த புண்ணாயிற்று எனக்குரு கணிப்பார்.
11 அது அவர் உடலில் நெடுநாளாயிருக்கும் தொழுநோய். குரு அவர் தீட்டுடையவர் என அறிவிப்பார். அவரை அடைத்து வைக்கவேண்டும். அவர் தீட்டுடையவரே.
12 வெண்குட்டம் உடலில் பரவி, நோயாளியின் கால்தொடங்கித் தலைவரைக் குரு காண்கிற எல்லா இடங்களிலும் தோலில் படர்ந்திருந்தால்,
13 அவரைச் சோதித்துப் பார்க்கவேண்டும். அவர் உடலில் முழுவதும் நோய் படர்ந்திருந்தால், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். உடல் முழுவதும் வெண்மையாகிவிட்டதால் தீட்டற்றவர்.
14 ஆனால் திறந்த புண் காணப்படும் நாளில், அவர் தீட்டுள்ளவர்.
15 எனவே, திறந்த புண்ணைக் கண்டால் அவர் தீட்டுள்ளவர் என அறிவிப்பார். திறந்தபுண் தீட்டுடையது; அது தொழுநோய்.
16 திறந்த புண் மாறி வெண்ணிறம் அடைந்தால், அவர் குருவிடம் வருவார்.
17 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். நோய்த்தழும்பு வெண்மையாகி மாறிற்றெனில், அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்; அவர் தீட்டற்றவர்.


18 உடலில் கட்டி ஏற்பட்டு, அது குணமாகி,
19 கட்டி இருந்த இடத்தில் வெள்ளைத்தடிப்பு, அல்லது சிவப்பு கலந்த வெண்மை மறு தோன்றினால், அதனைக் குருவுக்குக் காட்டவேண்டும்.
20 குரு அதைச் சோதித்துப்பார்ப்பார். அந்த இடம் மற்றத் தோலைவிடத் தாழ்ந்து, அந்த இடத்தில் உரோமம் வெண்மையாக மாறியிருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது கட்டியால் உண்டான தொழுநோய்.
21 குரு அதைச் சோதித்துப் பார்க்கும் போது, அதில் வெள்ளை உரோமம் இல்லை என்றும், மற்றத் தோலை விடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக மட்டும் உள்ளது என்றும் கண்டால், அவர் அவரை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
22 தோலில் புள்ளி படரக்கண்டால், அது தொழு நோய். அவர் தீட்டு உடையவர் எனக் குரு அறிவிப்பார்.
23 வெள்ளை மறு பரவாமல் அது இருந்த இடத்தில் மட்டும் இருந்தால், அது கட்டியின் தழும்பு; எனவே அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.


24 ஒருவரது உடலில் நெருப்புப்பட்டதனால் தீக்காயம் ஏற்பட்டு, நெருப்புப்பட்ட இடத்தில் சிவப்பு அல்லது வெண்மையான மறு தோன்றினால், அவரைக் குரு சோதித்துப் பார்க்க வேண்டும்.
25 அந்த மறுவில் உரோமம் வெண்மையாக மாற அந்த இடம் தோலைப் பார்க்கிலும் குழியாக இருந்தால், அது நெருப்பினால் ஏற்பட்ட தொழுநோய். அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார். அது தோழுநோய்தான்.
26 அதைச் சோதித்துப் பார்க்கும் குரு, அந்த மறுவில் வெள்ளை உரோமம் இல்லை என்றும் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையாக உள்ளது என்றும் கண்டால், அவரை ஏழு நாள் தனியாக வைப்பார்.
27 ஏழாம் நாளில் அவரைச் சோதித்துப் பார்த்து, தோலில் அது பரவி இருந்தால், அவர் தீட்டுள்ளவர் எனக் குரு அறிவிப்பார்; அது தொழுநோய். 28 மறு தோலில் பரவாமல், அவ்விடத்திலேயே சற்றுக் கருமையாக இருந்தால் அது நெருப்பினால் ஏற்பட்ட தடிப்பு. அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். அது நெருப்பால் ஏற்பட்ட வடு.


29 ஆணுக்கோ, பெண்ணுக்கோ தலையிலோ தாடையிலோ, நோய் ஏற்பட்டால்
30 குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார். அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும்.
31 குரு அதைச் சோதித்துப் பார்த்து அவ்விடத்தில் மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் கருப்பு உரோமம் இல்லை என்றால், குரு ஏழுநாள் அவரைத் தனியாக வைப்பார்.
32 ஏழாம் நாளில் அவரைக் குரு சோதித்துப் பார்ப்பார். அந்தச் சொறி படராமலும், அங்கு மஞ்சள் உரோமம் இல்லாமலும், மற்றத் தோலைவிடக் குழிவு இல்லாமலும் இருந்தால்,
33 அவர் சொறி இருக்கும் இடம் நீங்கலாக, மற்ற இடங்களைச் சிரைத்துக் கொள்வார். மீண்டும் குரு அவரை ஏழுநாள் தனியாக வைப்பார்.
34 ஏழாம் நாளில் குரு சோதித்துப் பார்க்கும்போது, தோலில் சொறி பரவாமல், மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் இருந்தால் அவர் தீட்டற்றவர் என அறிவிப்பார். தம் ஆடைகளைத் துவைத்தபின், அவர் தூய்மையாவார்.
35 தூய்மையானவராக அறிவிக்கப்பட்டபின் உடலில் சொறி படர்ந்தால்,
36 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். தோலில் சொறி பரவி இருந்தால் உரோமம் மஞ்சள் நிறமா எனக் குரு பார்க்கத் தேவை இல்லை. அவர் தீட்டுள்ளவர்.
37 சொறி குறைந்து, அந்த இடத்தில் கருப்பு உரோமம் முளைத்ததெனில் சொறி குணமாயிற்று; அவர் தீட்டற்றவராய் இருக்கிறார். அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார்.


38 ஓர் ஆண் அல்லது பெண்ணின் உடலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால்,
39 குரு சோதித்துப் பார்ப்பார். அவர்கள் மேல் தோலில் மங்கின வெண்ணிறத்தில் இருந்தால் அது தோலில் தோன்றுகிற வெள்ளைத்தேமல்; அவர் தூய்மையானவர்.
40 தலைமுடி உதிர்ந்து ஒருவர் மொட்டையானால், அவர் தூய்மையானவர்.
41 முன்புறத் தலைமுடி உதிர்ந்து, அரை மொட்டையானால், அவரும் தூய்மையானவர்.
42 மொட்டைத் தலையில் செந்நிறம் கலந்த வெண்மையான புண் உண்டானால் அது தொழுநோயின் தொடக்கம்.
43 குரு அவரைச் சோதித்துப் பார்ப்பார். அவரது மொட்டைத் தலையிலோ, அரை மொட்டைத் தலையிலோ, உடலின் தோலில் தோன்றும் தொழுநோய் போன்ற செந்நிறம் கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால்,
44 அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது.


45 தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக் கொண்டு, 'தீட்டு, தீட்டு', என குரலெழுப்ப வேண்டும்.
46 நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.


47 ஆட்டு உரோமம், அல்லது பஞ்சு நூலால் செய்யப்பட்ட உடையில்,
48 அல்லது பஞ்சு நூலும் ஆட்டு உரோமமும் சேர்த்து நெய்யும் பாவில் அல்லது ஊடுநூலில், அல்லது தோலாடையில், அல்லது தோலால் செய்யப்பட்ட எதிலும், தொழுநோயின் அடையாளம் தோன்றி,
49 உடையிலோ, தோலாடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோல் அல்லது தோலினால் செய்யப்பட்ட எதிலாவது, நோய் பச்சை அல்லது சிவப்பு நிறமாகக் காணப்பட்டால், அது தொழுநோய். குருவுக்கு அதைக் காட்ட வேண்டும்.
50 குரு அந்த நோயைச் சோதித்துப்பார்த்து, நோய் தீண்டியவற்றை ஏழுநாள் தனியாக வைத்து,
51 ஏழாம் நாளில் அதைக் கவனிக்க வேண்டும். உடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலாடையிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ இருந்தால், அது வளரும் தொழுநோய். அது தீட்டானது.
52 அந்த நோயுள்ள ஆட்டு உரோமத்தாலோ பஞ்சு நூலாலோ ஆன உடையையும் பாவையும், ஊடுநூலையும், தோலாடையையும், தோலால் செய்யப்பட்ட எதையும் சுட்டெரிக்க வேண்டும். ஏனெனில் அது வளரும் தொழுநோய். அது நெருப்பில் சுட்டெரிக்கப்பட வேண்டும்.
53 உடையிலோ, பாவிலோ, நூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ அந்த நோய் பரவவில்லை எனக் குரு கண்டால்
54 குரு நோய் தீண்டியதைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழுநாள் தனியாக வைப்பார்.
55 அது கழுவப்பட்ட பின் அதைச் சோதித்தப்பார்ப்பார். நோய் தீண்டிய பகுதி நோய் பரவாதிருக்கும் நிறம் மாறாதிருந்தால், அது தீட்டானது. அது உட்புறம் இருந்தாலும் வெளிப்புறம் இருந்தாலும் அதை நீ நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
56 கழுவப்பட்டபின், நோய் குறைந்துவிட்டது எனக் குரு கண்டால், அந்தப் பகுதியை உடையிலிருந்து, தோலாடையிலிருந்து அல்லது பாவு அல்லது ஊடுநூலிலிருந்து கிழித்தெறிந்து விடவேண்டும்.
57 ஆடையிலோ, பாவிலோ, ஊடுநூலிலோ, தோலால் செய்யப்பட்ட எதிலோ நோய் மீண்டும் காணப்படுமாயின் அது பரவும். எனவே நோய் தீண்டியதை நெருப்பில் எரிக்க வேண்டும்.
58 ஆடையோ, பாவோ, ஊடுநூலோ, தோலால் செய்யப்பட்ட எதுவோ கழுவியபின் அந்த நோய் நீங்கிப்போகும். இரண்டாம் முறை கழுவியபின் அது தூய்மையானது ஆகும்.
59 ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே."

அதிகாரம் 14[தொகு]

தொழுநோய் கண்டபின் தூய்மை செய்தல்[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்: அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும். குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும். [1]
3 தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால்,
4 தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்ள, குறையற்ற இரு குருவிகளையும், ஒரு கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும், ஈசோப்பையும் வாங்கி வருமாறு பணிப்பார்.
5 மண்பாண்டத்தில் ஊற்றிய ஊற்று நீரில் குருவி ஒன்றின் கழுத்தை அறுப்பார்;
6 உயிருள்ள குருவியையும், கேதுரு மரக்கட்டையையும், கருஞ்சிவப்பு நூலையும் இவை அனைத்தையும் உயிருள்ள குருவியையும் ஊற்று நீரில் கழுத்தறுக்கப்பட்ட குருவியின் குருதியில் தோய்ப்பார்;
7 தொழுநோயால் ஏற்பட்ட தீட்டை அகற்றப்படவிருப்போரின் மீது ஏழுமுறை தெளித்து, அவரது தீட்டை அகற்றுமாறு உயிருள்ள குருவியைத் திறந்த வெளியில் விட்டுவிடுவார்.
8 தீட்டு அகற்றப்படுவோர் தம் உடைகளைத் துவைத்து, தம் தலையை மழித்து நீராடியதும் தூய்மையாவார்; பின்பு, பாளையத்திற்குச் சென்று, ஏழு நாள் தம் கூடாரத்துக்கு வெளியே தங்கியிருப்பார்;
9 ஏழாம் நாளில் தம் தலை, தாடி, புருவம், மற்றும் உரோமம் அனைத்தையும் மழுங்கச் சிரைத்துத் தம் உடலை நன்கு கழுவித் தூய்மையாவார்.


10 எட்டாவது நாள், ஒரு வயது நிரம்பிய பழுதற்ற ஓர் ஆட்டையும் இரு கிடாய்க்குட்டிகளையும், இருபதுபடி அளவில் பத்தில் மூன்று பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப் படையலையும் ஆழாக்கு [2] எண்ணெயையும் கொண்டு வரவேண்டும்.
11 தூய்மைப்படுத்தவிருக்கும் குரு தீட்டு அகற்றப்படவிருக்கும் மனிதரையும், பலிப் பொருள்களையும், சந்திப்புக்கூடார வாயிலுக்குக் கொண்டு வருவார்.
12 பின்னர், குரு ஆழாக்கு எண்ணெயையும் கிடாய்க் குட்டிகளில் ஒன்றையும் குற்றம் நீக்கும் பலியாக ஒப்படைப்பார். ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாக அவற்றைச் செலுத்துவார்.
13 பாவம் போக்கும் பலிக்கும் எரிபலிக்கும் உரியவற்றை வெட்டும் தூய இடத்தில் கிடாய்க் குட்டியையும் வெட்டுவார். இந்தக் குற்றப்பழி நீக்கும் பலி பாவம் போக்கும் பலி போன்று குருவுக்கு உரியது. ஏனெனில், அது மிகவும் தூய்மையானது.
14 குற்றம் நீக்கும் பலியின் குருதியில் குரு சிறிது எடுத்துத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் மீது பூசுவார்.
15 பின்பு, குரு அந்த ஆழாக்கு எண்ணெயில் சிறிது தன் இடக்கையில் ஊற்றி,
16 தன் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழு முறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.
17 தன் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்படவிருப்போரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றின் முன்பு பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.
18 பின்னர், அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்படவிருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறை நீக்கம் செய்வார்.


19 பாவம் போக்கும் பலியைச் செலுத்தி, தீட்டகற்றப்பட இருப்போருக்குத் தீட்டு நீங்கக் கறை நீக்கம் செய்வார். பின்னர் எரிபலிக்குரியதை வெட்டுவார்.
20 எரிபலியையும், உணவுப்படையலையும் பலிபீடத்தில் படைப்பார். இவ்வாறு குரு கறைநீக்கம் செய்ய அந்த மனிதர் தூய்மையாவார்.
21 இவற்றைச் செலுத்த இயலாத ஏழையாயிருந்தால் அவர் குற்றப்பழி நீக்கத்திற்கான ஆரத்திப் பலியாகவும், குறைநீக்கப் பலியாகவும் ஒரு கிடாய்க் குட்டியையும், உணவுப் பலியாக இருபது படி அளவில் மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மாவை எண்ணெயில் பிசைந்து தயாரித்த உணவுப்படையலையும் ஆழாக்கு எண்ணெயையும்
22 தம் நிலைமைக்கேற்ப, இரு புறாக்களையோ, புறாக் குஞ்சுகளையோ கொண்டுவர வேண்டும். ஒன்று பாவம்போக்கும் பலி; மற்றது எரிபலி.
23 அவற்றை அவர் எட்டாம் நாளில் சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் தம் தீட்டை அகற்றிக்கொள்வதற்காகக் கொண்டுவர வேண்டும்.
24 குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியையும், ஆழாக்கு எண்ணெயையும் குரு வாங்கி, ஆண்டவர் திருமுன் ஆரத்திப்பலியாகக் காட்டுவார்.
25 குற்றப்பழி நீக்கும் கிடாய்க்குட்டியை அடித்து அதன் இரத்தத்தில் சிறிது பிடித்துத் தீட்டு அகற்றப்படவிருப்போர் வலக்காது மடலிலும் வலக்கைப் பெருவிரலிலும் வலக்கால் பெருவிரலிலும் பூசுவார்.
26 பின்னர், அவர் தம் இடக்கையில் சிறிது எண்ணெயை ஊற்றி,
27 தம் வலக்கை விரலை அதில் தோய்த்து, ஏழுமுறை அந்த எண்ணெயை ஆண்டவர் திருமுன் தெளிப்பார்.
28 தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயில் சிறிது எடுத்து, தீட்டு அகற்றப்பட இருக்கிறவரின் வலக்காது மடல், வலக்கைப் பெருவிரல், வலக்கால் பெருவிரல் ஆகியவற்றில் முன்னர் பூசிய குற்றப்பழி நீக்கும் பலிக்குருதியின் மீது அவர் பூசுவார்.
29 பின்னர் அவர் தம் கையில் எஞ்சியிருக்கும் எண்ணெயைத் தீட்டு அகற்றப்பட விருப்போரின் தலையில் தடவி அவருக்காக ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.
30 பின்னர்த் தீட்டு அகற்றப்படவிருப்போர் தம் நிலைமைக்குத் தக்கவாறு கொண்டுவந்த புறா எனினும் புறாக் குஞ்செனினும்,
31 அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் உணவுப் படையலோடு படைப்பார். இவ்வாறு குரு தீட்டு அகற்றப்படுவோருக்கு ஆண்டவர் திருமுன் கறைநீக்கம் செய்வார்.
32 தம்மைத் தூய்மையாக்கிக் கொள்ளப் போதுமானவற்றைக் கொண்டுவர இயலாத தொழுநோயாளிக்கு உரிய சட்டம் இதுவே."

தொழுநோய் வீடு[தொகு]


33 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
34 உங்களுக்கு உடைமையாக நான் வழங்கும் கானான் நாட்டிற்கு நீங்கள் வந்த பின்னர், அங்குள்ள ஒரு வீட்டில் தொழுநோயை நான் வரச்செய்தால்,
35 அந்த வீட்டின் உடைமையாளன், என் வீட்டில் நோய்க்கான அறிகுறி தென்படுகிறது எனக் குருவுக்கு அறிவிக்க வேண்டும்.
36 குரு நோயைச் சோதித்துப் பார்க்கச் செல்லுமுன் வீட்டிலுள்ள அனைத்தையும் வெளியேற்றுமாறு கட்டளையிடுவார்; இல்லையேல் வீட்டிலுள்ள அனைத்தும் தீட்டெனக் கருதப்படும். பின்னர் நோயைச் சோதிப்பதற்காகக் குரு வீட்டினுள் நுழைவார்.
37 அவர் நோய் பற்றியிருக்கும் இடத்தைப் பார்வையிடுவார். வீட்டுச் சுவர்களில் பச்சையும் சிவப்புமான கறை இருந்து, அப்பகுதி சுவர்ப்பரப்பை விடக் குழிவாயிருந்தால்,
38 குரு வீட்டைவிட்டு வெளியே வந்து வாயிலை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
39 ஏழாம் நாள் மீண்டும் வந்து சோதித்துப் பார்ப்பார். அங்கு நோய்க்குறி சுவர்களில் பரவக்கண்டால்,
40 அந்த இடத்திலுள்ள கற்களைப் பெயர்த்து நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் போடப் பணிப்பார்.
41 வீட்டின் உட்சுவரைச் செதுக்கி, செதுக்கப்பட்ட பூச்சுமண்ணை நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்டிவிட்டு,
42 பெயர்த்த கற்களுக்குப் பதிலாக வேறு கற்களைக் கொண்டுவந்து வேறுமண்ணை எடுத்துப் பூசச் சொல்வார்.


43 கற்களை மாற்றி, சுவரைக் கொத்திப் பூசிப் புதிதாக்கியபின்னர் அந்நோய் வீட்டில் மீண்டும் தென்பட்டால்,
44 குரு வந்து பார்ப்பார். நோய் வீட்டில் இடம் பெற்றதெனில் அது வளரும் தொழுநோய். அது தீட்டு.
45 எனவே, வீட்டை இடித்து, அதன் மரங்களையும் மண்ணையும் நகருக்கு வெளியே தீட்டான இடத்தில் கொட்ட வேண்டும்.
46 வீடு அடைக்கப்பட்டிருந்த நாள்களில் அதனுள் செல்பவன் மாலைவரை தீட்டுள்ளவன்.
47 வீட்டிலே படுத்திருந்தவனும், அவ்வீட்டில் உணவுண்டவனும், தங்கள் உடைகளை வெளுக்க வேண்டும்.


48 குரு, வீடு பூசப்பட்டபின் மீண்டும் வந்து அங்கு நோய் பரவவில்லை எனக் கண்டால், அந்த வீடு தூயது என அறிவிப்பார். ஏனெனில் நோய் குணமாகிவிட்டது.
49 வீட்டின் கறையை நீக்க, இரு குருவிகள், கேதுருக்கட்டை, சிவப்பு நூல், ஈசோப்பு ஆகியவற்றைக் குரு எடுப்பார்;
50 ஒரு குருவியை மண்பாண்டத்திலுள்ள ஊற்று நீரில் கொல்வார்;
51 கேதுருக் கட்டையையும், சிவப்பு நூலையும், உயிருள்ள குருவியையும் கொல்லப்பட்ட அக்குருவியின் குருதியிலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின் மேல் ஏழு தரம் தெளிப்பார்.
52 குருவியின் குருதி, ஊற்று நீர், உயிருள்ள குருவி, கேதுருக்கட்டை, சிவப்பு நூல், இவற்றால் கறை நீக்கம் செய்வார்.
53 உயிருள்ள குருவியைக் குடியிருப்புக்கு வெளியே மைதானத்தில் விட்டு விடவேண்டும். இவ்வாறு வீட்டிற்கான கறை நீக்கம் செய்ததும் அது தூய்மையாகும்.


54 இது அனைத்துத் தொழுநோய்க்கும், சொறிக்கும்
55 உடைப் பத்துக்கும், வீட்டு நோய்க்கும்
56 வீக்கம், சிரங்கு, வெள்ளைமறு ஆகியவற்றிற்கான சட்டம்.
57 எப்போது தீட்டு, எப்போது தூய்மை என முடிவு செய்வதற்குரிய தொழு நோய்க்கான சட்டமும் அதுவே."


குறிப்புகள்

[1] 14:2 = மத் 8:4; மாற் 1:44; லூக் 5:14; 17:14
[2] 14:10 'லாகு' என்பது எபிரேய பாடம்.

(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 15 முதல் 16 வரை