திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/லேவியர் (லேவிய‌ராகமம்)/அதிகாரங்கள் 15 முதல் 16 வரை

விக்கிமூலம் இலிருந்து
பாவங்களைச் சுமக்கும் போக்கு ஆடு (லேவியர் 16). விவிலிய வரைபடம். ஆண்டு: 1890.

லேவியர் (The Book of Leviticus)[தொகு]

அதிகாரங்கள் 15 முதல் 16 வரை


அதிகாரம் 15[தொகு]

உடலில் ஏற்படும் தூய்மையற்ற ஒழுக்கு[தொகு]


1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 "இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது:
3 ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் - உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் - அது அவனுக்குத் தீட்டு.
4 விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமரும் இருக்கை அனைத்தும் தீட்டே.
5 அவன் படுக்கையைத் தொடுபவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
6 விந்து ஒழுக்கு உடையவன் அமர்ந்தவற்றின் மீது அமர்பவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
7 அவன் உடலைத் தொடுபவனும் தன் உடைகளைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
8 அவன் தீட்டற்ற ஒருவன்மீது உமிழ்ந்தால், இவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
9 அவன் ஏறிப் பயணம் செய்பவை அனைத்தும் தீட்டு.
10 அவன் அடியிலிருக்கும் எதையும் தொடுபவன் ஒவ்வொருவனும் மாலைமட்டும் தீட்டுடையவன். அதைச் சுமப்பவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டுடையவன்.
11 அவன் தன்னைத் தண்ணீரில் கழுவாதிருக்கையில், தன்கையால் எவனைத் தொட்டாலும், அவனும் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
12 அவன் தொடும் மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; மரக்கலம் தண்ணீரில் அலசப்படவேண்டும்.


13 அவனது ஒழுக்கு நின்று தீட்டு அகன்றால், அவன் தன்னைத் தீட்டகற்ற ஏழுநாள் காத்திருக்கவேண்டும்; பின்பு அவன் தன் உடைகளைத் துவைத்து, தன் உடலை ஊற்று நீரில் கழுவியதும், அவனது தீட்டு அகலும்.
14 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களை அல்லது புறாக் குஞ்சுகளை, சந்திப்புக்கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் குருவிடம் கொடுக்க வேண்டும்.
15 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியாகவும், மற்றதை எரிபலியாகவும் செலுத்தி அவனுக்காக, ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.


16 விந்து கழிந்தவனும் தன் உடலைக் கழுவுவாள். மாலை மட்டும் அவன் தீட்டுடையவன்.
17 விந்து பட்டதோலும் உடையும் நீரால் கழுவப்படவேண்டும். மாலைமட்டும் அவை தீட்டாயிருக்கும்.
18 அவனுடன் அவன் மனைவி படுத்திருந்தால், இருவரும் தண்ணீரில் முழுக வேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாயிருப்பர்.


19 மாதவிலக்கில் இரத்தப்பெருக்குடைய பெண் ஏழுநாள் விலக்காய் இருப்பாள். அவளைத் தொடுபவர் மாலைமட்டும் தீட்டாயிருப்பர்.
20 மாத விலக்கின்மீது எதன்மீது படுக்கிறாளோ, எவற்றின்மீது அமர்கிறாளோ அவை அனைத்தும் தீட்டே.
21 அவள் படுக்கையைத் தொடுபவர் அனைவரும் தம் உடைகளைத் துவைத்து நீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவர்கள் தீட்டாய் இருப்பர்.
22 அவள் அமரும் மணையைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் முழுகவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
23 அவள் படுக்கையின்மீதும் அவள் அமர்ந்த மணையின்மீதும் இருந்த எதையாகிலும் தொட்டவனும் மாலைமட்டும் தீட்டாய் இருப்பான். 24 ஒருவன் அவளுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு, அவள் தீட்டு அவன் மீதுபட்டது என்றால், அவன் ஏழுநாள் தீட்டுடையவன்; அவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டே.


25 பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே.
26 அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப் படுக்கைக்கு ஒத்ததே; அவள் அமரும் அனைத்தும் தீட்டுக் காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்.
27 அவற்றைத் தொடுபவன் தன் உடைகளைத் துவைத்து, நீரில் மூழ்கவேண்டும். மாலைமட்டும் அவன் தீட்டாய் இருப்பான்.
28 அவள் தன் இரத்தப்பெருக்கு நின்றபின், ஏழு நாள் கழித்தபின் தீட்டற்றவள் ஆவாள்.
29 எட்டாம் நாள், இரு காட்டுப் புறாக்களையோ புறாக் குஞ்சுகளையோ சந்திப்புக் கூடார வாயிலில் குருவிடம் கொண்டு வருவாள்.
30 குரு அவற்றில் ஒன்றைப் பாவம் போக்கும் பலியும் மற்றதை எரி பலியுமாக்கி, அவளுக்காக ஆண்டவர் திருமுன் பாவக்கழுவாய் நிறைவேற்றுவார்.


31 இஸ்ரயேல் மக்கள், தங்கள் நடுவே இருக்கும் எனது தங்குமிடத்தைத் தீட்டாக்கி, சாகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் தீட்டுகளிலிருந்து அவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
32 விந்து ஒழுக்கினாலும் விந்து அழிவினாலும் தீட்டானவனுக்கும்
33 தன் விலக்கினாலும் நோயுற்றவளுக்கும்-உடல் தூய்மையற்ற ஆணுக்கும் பெண்ணுக்கும்- தீட்டாயிருப்பவளோடு படுத்தவனுக்கும், உரிய சட்டம் இதுவே".

அதிகாரம் 16[தொகு]

பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்[தொகு]


1 ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது;
2 "ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில் இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன். [1]
3 ஒரு காளையைப் பாவம் போக்கும் பலியாகவும் ஓர் ஆட்டுக்கிடாயை எரிபலியாகவும் செலுத்தி ஆரோன் தூயகத்திற்குள் நுழையலாம். [2]
4 அவன் புனித நார்ப்பட்டு மேற்சட்டை அணியவேண்டும். நார்ப்பட்டாலான உள்ளாடை, கச்சை, தலைப்பாகை அணிய வேண்டும். இந்தப் புனித ஆடைகளை நீராடிய பின்னரே அவன் அணியலாம்.


5 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு பாவம்போக்கும் பலிக்காக வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் எரி பலிக்காக ஆட்டுக்கிடாய் ஒன்றையும் கொண்டுவர வேண்டும்.
6 ஆரோன், பாவம் போக்கும் பலிக்குரிய காளையைத் தனக்காகவும் தன் குடும்பத்தினருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
7 வெள்ளாட்டுக் கிடாய்கள் இரண்டையும் சந்திப்புக் கூடார வாயிலில், ஆண்டவர் திருமுன் நிறுத்த வேண்டும்.
8 ஆண்டவருக்கென ஒன்றும் போக்கு ஆடாக விடப்படுவதற்கென ஒன்றுமாக அந்தக் கிடாய்கள்மேல் சீட்டு இடப்படும்.
9 ஆண்டவருக்கெனச் சீட்டு விழுந்த ஆட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகச் செலுத்த வேண்டும்.
10 போக்கு ஆடாக விடப்படுவதற்கெனச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கிடாய், பாவக்கழுவாய்க்கெனப் பாலை நிலத்திற்கு அனுப்பப்படுமாறு, ஆண்டவர் திருமுன் உயிருடன் நிறுத்தி வைக்கப்படும்.


11 ஆரோன் பாவம்போக்கும் பலிக்குரிய காளையைத் தன் குடும்பத்தாருக்காகவும் பலியிட்டுப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
12 ஆரோன் கலசத்தை ஆண்டவர் திருமுன் இருக்கும் பலிபீடத்து நெருப்புத்தணலால் நிரப்பிக்கொண்டு, பொடியாக்கப்பட்ட நறுமணமிக்க சாம்பிராணியும் எடுத்துக் கொண்டு, தொங்குதிரைக்கு உள்ளே வருவான்.
13 அவன் சாகாதிருக்க, உடன்படிக்கைப் பேழையின்மேல் இருக்கும் இரக்கத்தின் இருக்கையைப் புனிதப்புகை மூடுமளவிற்கு ஆண்டவர் திருமுன் நெருப்பில் சாம்பிராணி போடுவான்.
14 மேலும் அவன் கீழே நின்று கொண்டு, காளையின் இரத்தத்தில் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கைமீது தன் விரலால் தெளிப்பான். மீண்டும் சிறிது எடுத்து இரக்கத்தின் இருக்கை முன்னர் ஏழுமுறை தெளிப்பான்.


15 மக்களின் பாவம்போக்கும் பலியான வெள்ளாட்டுக்கிடாயை அவன் அடித்து, அதன் இரத்தத்தைத் தொங்குதிரைக்கு உள்ளே கொண்டு செல்வான், காளையின் இரத்தத்தைக் தெளித்தது போலவே, இதனையும் இரக்கத்தின் இருக்கையின்மேலும், அதன் முன்னிலையிலும் தெளிப்பான். [3]
16 இஸ்ரயேல் மக்களின் தீட்டுகளை முன்னிட்டும் அவர்களின் பாவங்களால் விளைந்த குற்றங்களை முன்னிட்டும் தீட்டுப்பட்ட தூயகத்திற்காகப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்; அவர்களின் தூய்மையற்ற நிலைக்குள் அமைந்துள்ள சந்திப்புக் கூடாரத்துக்காகவும் அவன் அப்படியே செய்வான்.
17 அவன், தனக்காகவும் தன் குடும்பத்திற்காகவும் சபை மக்கள் அனைவருக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றும்படி தூயகத்திற்குள் சென்று, பாவக்கழுவாய் நிறைவேற்றிவிட்டு வெளியே வரும் வரை சந்திப்புக்கூடாரத்தில் எவரும் இருத்தல் கூடாது.
18 அவன் ஆண்டவர் திருமுன் இருக்கிற பலிபீடத்திற்கு அருகில் வந்து அதற்குப் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்திலும் சிறிது எடுத்துப் பலிபீடக் கொம்புகளில் பூசுவான்.
19 தன் விரலினால் அந்த இரத்தத்தை எடுத்து, ஏழு முறை அதன் மேல் தெளித்து, இஸ்ரயேல் மக்களின் தீட்டுகள் நீங்க அர்ப்பணிப்பான்.

போக்கு ஆடு[தொகு]


20 இவ்வாறு அவன் தூயகத்திற்கும், சந்திப்புக் கூடாரத்திற்கும், பலிபீடத்திற்கும் கழுவாய் நிறைவேற்றியபின், உயிரோடிருக்கிற ஆட்டுக்கிடாயைக் கொண்டுவருவான்.
21 ஆரோன் இரு கைகளையும் உயிரோடிருக்கும் அந்தக் கிடாயின் மேல் வைத்து, இஸ்ரயேல் மக்களின் எல்லாக் குற்றங்களையும் தவறுகளையும் பாவங்களையும் அறிக்கையிட்டு அதன் தலைமேல் சுமத்தி, அதைப் பாலை நிலத்துக்குக் கொண்டு செல்ல நியமிக்கப்பட்ட ஆள் மூலம் அங்கு அனுப்பிவிடுவான்.
22 அந்த வெள்ளாட்டுக் கிடாய் அவர்களின் பாவங்களைச் சுமந்துகொண்டு தனிமையான இடத்திற்குச் செல்லும்; அந்த ஆள் அதைப் பாலைநிலத்தில் விட்டுவிடுவான்.
23 ஆரோன் சந்திப்புக் கூடாரத்திற்கு வந்து, தூயகத்தில் உடுத்தியிருந்த நாhப்பட்டு ஆடைகளை அங்கே களைந்து வைத்துவிடுவான். [4]
24 பின்பு, அவன் தூய்மையான இடத்தில் குளித்துத் தன் ஆடைகளை அணிந்துகொண்டு தன் எரி பலியையும் மக்களின் எரிபலிகளையும் செலுத்தி, தனக்காகவும் மக்களுக்காகவும் பாவக்கழுவாய் நிறைவேற்றுவான்.
25 பாவம் போக்கும் பலியின் கொழுப்பை அவன் பலிபீடத்தில் எரித்து விடுவான்.
26 போகவிட்ட போக்கு ஆடாகிய வெள்ளாட்டுக் கிடாயைக் கொண்டு போய் விட்டவன், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்துக்குள் வருவான்.
27 தூயகத்திற்குள் பாவம் போக்குவதற்கென இரத்தம் எடுக்கப்பட்ட காளையும் கிடாயும், பாளையத்திற்கு வெளியே கொண்டுபோகப்படும்; அவற்றின் தோல், இறைச்சி, சாணம் ஆகியவை நெருப்பில் சுட்டெரிக்கப்படும். [5]
28 அவற்றை எரித்தவன் தன்உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்த பின்னரே பாளையத்திற்குள் வருவான்.

பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாளுக்கான நெறிமுறைகள்[தொகு]


29 ஏழாம் மாதம் பத்தாம் நாள் குடிமக்களும் உங்களோடு வாழும் அன்னியரும் வேலை ஒன்றும் செய்யாமல் நோன்பிருக்க வேண்டும். இது உங்களுக்கு என்றுமுள் நியமம் ஆகும்.
30 அந்த நாளில் நீங்கள் தூய்மையாக்கப்படும்படி உங்களுக்கெனப் பாவக்கழுவாய் நிறைவேற்றப்படும்; ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களுக்காகக் கழுவாய் நிறைவேற்றப்பட, நீங்கள் தூய்மையடைவீர்கள்.
31 அது உங்களுக்கு நோன்புநாள். அந்த நாள் நீங்கள் முழு ஓய்வெடுக்கும் "ஓய்வு நாள் ". இது என்றுமுள நியமம் ஆகும்.
32 அருள்பொழிவு செய்யப்பட்டு, தன் தந்தைக்குப் பின்னர் குருவாக நியமனம் பெற்றவனே பாவக்கழுவாய் நிறைவேற்றுவான். அவன் தூய உடைகளான நார்ப்பட்டு ஆடைகளை அணிந்து கொண்டு,
33 தூயகத்திற்காகவும், சந்திப்புக் கூடாரத்திற்காகவும் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான். குருக்களுக்காகவும், சபையின் எல்லா மக்களுக்காகவும் பாவக் கழுவாய் செய்வான்.
34 ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்" என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார். [6]


குறிப்புகள்

[1] 16:2 = எபி 6:19.
[2] 16:3 = எபி 9:7.
[3] 16:15 = எபி 9:12.
[4] 16:23 = எசே 44:19.
[5] 16:27 = எபி 13:11.
[6] 16:29-34 = லேவி 23:26-32; எண் 29:7-11.


(தொடர்ச்சி): லேவியர்: அதிகாரங்கள் 17 முதல் 19 வரை