திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/திருத்தூதர் பணிகள்/ (அப்போஸ்தலர் பணி)/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து


"இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து ஸ்தேவானைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்று நோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, "இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்" என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், "ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்" என்று சொல்லி உயிர்விட்டார்." - திருத்தூதர் பணிகள் 7:54-60

திருத்தூதர் பணிகள் (Acts of the Apostles)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

ஸ்தேவானின் அருளுரை[தொகு]


1 தலைமைக் குரு, "இவையெல்லாம் உண்மைதானா?" என்று கேட்டார்.
2 அதற்கு ஸ்தேவான் கூறியது:
"சகோதரரே, தந்தையரே, கேளுங்கள்.
நம் தந்தையாகிய ஆபிரகாம் காரான் நகரில் குடியேறுமுன்பு
மெசப்பொத்தாமியாவில் வாழ்ந்து வந்தபோது மாட்சிமிகு கடவுள் அவருக்கு தோன்றி,


3 'நீ உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தாரிடமிருந்தும் புறப்பட்டு,
நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்'

என்று கூறினார். [1]
4 அதன்பின் அவர் கல்தேயருடைய நாட்டைவிட்டு வெளியேறிக்
காரான் நகரில் வந்து அங்கே குடியிருந்தார்.
அவருடைய தந்தை இறந்தபின்பு,
நீங்கள் இப்போது குடியிருக்கும் இந்நாட்டுக்குக் கூட்டி வந்து
இங்குக் குடிபெயரச் செய்தார். [2]
5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை.
அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும்
இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப்பின் வரும்
அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று
கடவுள் வாக்குறுதி கொடுத்தார். [3]
6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாட்டில் அன்னியராய்க் குடியிருப்பர்.
நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக்
கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்.


7 'அவர்கள் அடிமை வேலை செய்யும் நாட்டுக்குத்


தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன்.
அதற்குப்பின் அவர்கள் அங்கிருந்து வெளியேறி


இவ்விடத்துக்கு வந்து என்னை வழிபடுவார்கள்'[4]


என்றும் அவர் உரைத்துள்ளார்.
8 பின் அவர் விருத்தசேதனத்தை அடையாளமாகக் கொண்ட உடன்படிக்கையை
ஆபிரகாமுக்கு கொடுத்தார்.
அதன்படியே ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றெடுத்து
எட்டாம் நாளில் அவருக்கு விருத்தசேதனம் செய்தார்.
அவ்வாறே ஈசாக்கு யாக்கோபுக்கும்,
யாக்கோபு பன்னிரு குலமுதல்வருக்கும் செய்தனர். [5]


9 "பின் நம் குலமுதல்வர்கள் பொறாமை கொண்டு
யோசேப்பை எகிப்தியருக்கு விற்றுவிட்டனர்.
ஆனால், கடவுள் அவரோடு இருந்தார். [6]
10 அவருக்கு வந்த அனைத்து இன்னல்களினின்றும்
அவர் அவரை விடுவித்தார்;
அத்துடன் எகிப்திய அரசரான பார்வோன் பார்வையில்
யோசேப்புக்கு அருளையும் ஞானத்தையும் வழங்கினார்.
அரசர் அவரை எகிப்து நாட்டுக்கும்
தன் உடைமை அனைத்துக்கும் ஆளுநராக நியமித்தார். [7]
11 பின் எகிப்து, கானான் ஆகிய நாடுகள் அனைத்திலும்
பஞ்சமும் அதனால் மிகுந்த இன்னலும் எற்பட்டன.
நம் மூதாதையருக்கும் உணவு கிடைக்கவில்லை. [8]
12 அப்போது யாக்கோபு எகிப்து நாட்டில் உணவுப் பொருட்கள் கிடைப்பதாகக் கேள்விப்பட்டு,
முதன்முறையாக நம் மூதாதையரை அங்கு அனுப்பி வைத்தார்.
13 இரண்டாம் முறை அவர்களை அனுப்பியபோது,
யோசேப்பு தம் சகோதரர்களுக்குத் தாம் யார் என்று தெரியப்படுத்தினார்.
பார்வோனுக்கும் யோசேப்பின் இனத்தார் யார் என்பது தெளிவாயிற்று. [9]
14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும்
தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார்.
அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர். [10]
15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார்.
அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர். [11]
16 அவர்களுடைய உடல்கள் செக்கேமுக்குக் கொண்டு செல்லப்பட்டன;
அங்கு, ஆபிரகாம் அமோரின் மைந்தர்களிடம் வெள்ளிக் காசுகளை
விலையாகக் கொடுத்து வாங்கிய கல்லறையில் வைக்கப்பட்டன. [12]


17 ஆபிரகாமுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதி நிறைவேறும் நேரம் நெருங்கியபோது
மக்கள் எகிப்து நாட்டில் மிகுதியாகப் பல்கிப் பெருகியிருந்தனர்.
18 இறுதியில் எகிப்து நாட்டில் யோசேப்பை அறியாத வேறோர் அரசன் தோன்றினான். [13]
19 அவன் நம் இனத்தவரை வஞ்சகத்துடன் கொடுமையாக நடத்தி,
நம் மூதாதையர் தங்கள் குழந்தைகளை வெளியே எறிந்து சாகடிக்கச் செய்தான். [14]
20 அக்காலத்தில்தான் மோசே பிறந்தார்.
கடவுளுக்கு உகந்தவரான அவர் மூன்று மாதம் தந்தை வீட்டில் பேணி வளர்க்கப்பட்டார். [15]
21 பின்பு வெளியே எறியப்பட்ட அவரை
பார்வோனின் மகள் தத்தெடுத்துத்
தன் சொந்த மகனைப் போல் பேணி வளர்த்தார். [16]
22 மோசே எகிப்து நாட்டின் கலைகள் அனைத்தையும் பயின்று
சொல்லிலும் செயலிலும் வல்லவராய்த் திகழ்ந்தார்.


23 அவருக்கு நாற்பது வயதானபோது,
தம் சகோதரர்களாகிய இஸ்ரயேல் மக்களின் நிலைமையைச்
சென்று கவனிக்க வேண்டும் என்ற ஆவல் அவர் உள்ளத்தில் எழுந்தது.
24 அப்போது அவர்களுள் ஒருவருக்கு ஓர் எகிப்தியன் தீங்கு விளைவித்ததைக் கண்டு,
அவருக்குத் துணை நின்று,
ஊறு விளைவித்தவனை வெட்டி வீழ்த்திப் பழி வாங்கினார்.
25 தம் கையால் கடவுள் தம் சகோதரர்களுக்கு விடுதலை கொடுப்பார் என்பதை
அவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று மோசே எண்ணினார்.
ஆனால் அவர்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை.
26 மறுநாள் சிலர் சண்டையிடுவதைக் கண்டு,
"நீங்கள் சகோதரர்கள் அல்லவா?
ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்?" என்று கூறி
அவர்களிடையே அமைதியும் நல்லுறவும் ஏற்படுத்த முயன்றார்.
27 ஆனால் தீங்கிழைத்தவன்,


'எங்களுக்கு உன்னைத் தலைவனாகவும்


நடுவனாகவும் நியமித்தவர் யார்?
28 நேற்று எகிப்தியனைக் கொன்றதுபோல்


என்னையும் கொல்லவா எண்ணுகிறாய்?'


என்று கூறி அவரைப் பிடித்து அப்பால் தள்ளினான்.
29 இதைக் கேட்ட மோசே அங்கிருந்து தப்பி,
மிதியான் நாட்டுக்குச் சென்று அன்னியராக வாழ்ந்து வந்தார்.
அங்கு அவருக்கு மைந்தர் இருவர் பிறந்தனர். [17] [18]
30 நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னர்
ஆண்டவரின் தூதர் சீனாய் மலை அருகே உள்ள பாலைநிலத்தில்
ஒரு முட்புதர் நடுவே தீப்பிழம்பில் தோன்றினார்.
31 மோசே இந்தக் காட்சியைக் கண்டு வியப்புற்றார்.
அதைக் கூர்ந்து கவனிக்கும்படி அவர் நெருங்கிச் சென்றபோது,


32 'உன்னுடைய மூதாதையராகிய
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் கடவுள் நானே'


என்று ஆண்டவரின் குரல் ஒலித்தது.
மோசே நடுநடுங்கி இக்காட்சியைக் கூர்ந்து கவனிக்கத் துணியவில்லை.
33 கடவுள் அவரிடம்,


'உன் கால்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு.


ஏனெனில் நீ நின்றுகொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்.
34 எகிப்தில் என் மக்கள் படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்.
அவர்களது ஏக்கக் குரலைக் கேட்டேன்.
அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்துள்ளேன்.
உன்னை எகிப்துக்கு அனுப்பப்போகிறேன்.


இப்போதே வா'

என்றார். [19]


35 முன்பு,

'உன்னைத் தலைவனாகவும்
நடுவனாகவும் நியமித்தவர் யார்?'


என்று கூறி மக்கள் மோசேயை ஏற்க மறுத்தார்கள்.
ஆனால் அதே மோசேயையே கடவுள் முட்புதரில் தோன்றிய
தம் தூதர் வழியாய்த் தலைவராகவும் மீட்பராகவும் அனுப்பினார்.
36 அவர் அவர்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தார்;
அங்கும் செங்கடலிலும் நாற்பது ஆண்டுகளாகப் பாலைநிலத்திலும்
அருஞ்செயல்களையும் அடையாளச் செயல்களையும் புரிந்தார். [20]
37 "கடவுள் என்னைப்போன்ற இறைவாக்கினர் ஒருவரைச்
சகோதரர்களாகிய உங்கள் நடுவிலிருந்து தோன்றச் செய்வார்" என்று
இஸ்ரயேல் மக்களிடம் கூறியதும் இதே மோசேதான். [21]
38 பாலை நிலத்தில் மக்கள் சபையாகக் கூடியபோது
சீனாய் மலையில் தம்மோடு பேசிய தூதருக்கும்
நம் மூதாதையருக்கும் இடையே நின்றவர் இவரே.
வாழ்வளிக்கும் வார்த்தைகளை நமக்குப் பெற்றுத் தந்தவரும் இவரே. [22]
39 ஆனால் நம் மூதாதையர் அவருக்குக் கீழ்ப்படிய விரும்பாமல் அவரை உதறித் தள்ளினர்;
எகிப்துக்குத் திரும்பிச் செல்ல உளம் கொண்டனர்.
40 அவர்கள் ஆரோனை நோக்கி,


'எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி


வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
எங்களை வழி நடத்தும் தெய்வங்களை


நீர் எங்களுக்கு உருவாக்கிக் கொடும்'


என்று கேட்டார்கள். [23]
41 அக்காலத்தில் அவர்கள் ஒரு கன்றுக்குட்டிச் சிலையைச் செய்து
அதற்குப் பலி செலுத்தினார்கள்.
தாங்களே செய்துகொண்ட சிலைக்குமுன் மகிழ்ந்து கொண்டாடினார்கள். [24]
42 ஆகவே கடவுள் அவர்களிடமிருந்து விலகி,
வான்வெளிக் கோள்களை வணங்குமாறு அவர்களை விட்டுவிட்டார்.
இதைக் குறித்து இறைவாக்கினர் நூலில்,


'இஸ்ரயேல் வீட்டாரே,


பாலைநிலத்தில் இருந்த அந்த நாற்பது ஆண்டுகளில்
பலிகளும் காணிக்கைகளும் எனக்குக் கொடுத்தீர்களோ?
43 நீங்கள் மோளோக்குடைய கூடாரத்தையும்,
உங்கள் தெய்வமாகிய இரேப்பானுடைய விண்மீனையும்
தூக்கிக் கொண்டு சென்றீர்கள்.
நீங்கள் இந்தச் சிலைகளை வணங்குவதற்கென்றே செய்தீர்கள்.
எனவே நான் உங்களைப் பாபிலோனுக்கும் அப்பால்


குடி பெயரச் செய்வேன்'


என்று எழுதப்பட்டுள்ளது. [25]
44 பாலை நிலத்தில் நம் மூதாதையருக்குச் சந்திப்புக் கூடாரம் இருந்தது.
கடவுள் மோசேயோடு பேசியபோது அவருக்குக் காண்பித்த மாதிரியின்படி
அதனை அமைக்கப் பணித்திருந்தார். [26]
45 பின்பு நம் மூதாதையர் தங்கள் முன்பாகக் கடவுள் விரட்டியடித்த
வேற்றினத்தாரின் நாடுகளை
யோசுவாவின் தலைமையில் கைப்பற்றியபோது
அவர்கள் தங்கள் தந்தையரிடமிருந்து பெற்றிருந்த
அந்தக் கூடாரத்தையும் கொண்டு வந்தனர்.
தாவீது காலம் வரை அக்கூடாரம் அங்கேயே இருந்தது. [27]
46 தாவீது கடவுளின் அருளைப் பெற்றிருந்தார்.
எனவே அவர் யாக்கோபின் வீட்டார் வழிபடக்
கடவுளுக்கு ஓர் உறைவிடம் அமைக்க விரும்பி அவரை வேண்டிக் கொண்டார். [28]
47 ஆனால் கடவுளுக்குக் கோவில் கட்டியெழுப்பியவர் சாலமோனே. [29]
48 'உன்னத கடவுளோ மனிதர் கையால் கட்டிய
இல்லங்களில் குடியிருப்பதில்லை' என்று இறைவாக்கினர் கூறியது போல,


49 'விண்ணகம் என் அரியணை;


மண்ணகம் என் கால்மணை;
அவ்வாறியிருக்க, எத்தகைய கோயிலை
நீங்கள் எனக்காகக் கட்டவிருக்கிறீர்கள்?
எத்தகைய இடத்தில் நான் ஓய்வெடுப்பேன்?


50 இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின'


என்கிறார் ஆண்டவர். [30]
51 திமிர் பிடித்தவர்களே,
இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும்
ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே,
உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும்
தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். [31]
52 எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர்
துன்புறுத்தாமலிருந்தார்கள்?
நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும்
அவர்கள் கொலை செய்தார்கள்.
இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்.
53 கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும்
அதனைக் கடைப்பிடிக்கவில்லை."

ஸ்தேவான் மீது கல்லெறிதல்[தொகு]


54 இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து
அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள்.
55 அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று,
வானத்தை உற்று நோக்கினார்.
அப்போது கடவுளின் மாட்சியையும்
அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு,
56 "இதோ, வானம் திறந்திருப்பதையும்,
மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்" என்று கூறினார்.
57 ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக் கொண்டு பெருங் கூச்சலிட்டு
ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள்.
58 நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய்
அவர்மேல் கல்லெறிந்தார்கள்.
சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச்
சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.
59 அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர்,
"ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்"
என்று வேண்டிக் கொண்டார்.
60 பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில்,
"ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்"
என்று சொல்லி உயிர்விட்டார்.


குறிப்புகள்

[1] 7:2-3 = தொநூ 12:1.
[2] 7:4 = தொநூ 11:31; 12:4.
[3] 7:5 = தொநூ 12:7; 13:15; 1518; 17:8
[4] 7:6-7 = தொநூ 15:13,14.
[5] 7:8 = தொநூ 17:10-14; 21:2-4; 25:26; 29:31; 35:18.
[6] 7:9 = தொநூ 37:11,28; 39:2,21.
[7] 7:10 = தொநூ 41:39-41.
[8] 7:11 = தொநூ 42:1,2.
[9] 7:13 = தொநூ 45:1,16.
[10] 7:14 = தொநூ 45:9,10,17-18; 46:27.
[11] 7:15 = தொநூ 46:1-7; 49:33.
[12] 7:16 = தொநூ 23:3-6; 33:19; 50:7-13; யோசு 24:32.
[13] 7:17,18 = விப 1:7,8.
[14] 7:19 = விப 1:10,11,22.
[15] 7:20 = விப 2:2.
[16] 7:21 = விப 2:3-10.
[17] 7:23-29 = விப 2:11-15.
[18] 7:29 = விப 18:3,4.
[19] 7:30-34 = விப 3:1-10.
[20] 7:36 = விப 7:3; 14:21-33.
[21] 7:37 = இச 8:15,18.
[22] 7:38 = விப 19:1-20:17; இச 5:1-33.
[23] 7:40 = விப 32:1.
[24] 7:41 = விப 32:2-6.
[25] 7:42,43 = ஆமோ 5:25-27.
[26] 7:44 = விப 25:9,40.
[27] 7:45 = யோசு 3:14-17.
[28] 7:46 = 2 சாமு 7:1-16; 1 குறி 17:1-14.
[29] 7:47 = 1 அர 6:1-38; 2 குறி 3:1-17.
[30] 7:49,50 = எசா 66:1-2.
[31] 7:51 = எசா 63:10.

அதிகாரம் 8[தொகு]

சவுல் திருச்சபையைத் துன்புறுத்துதல்[தொகு]


1 ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.
அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்குள்ளாகியது.
திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும்
யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர்.
2 இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம்செய்து,
அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர்.
3 சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய்,
அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார்.
இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார். [1]

3. யூதேயா, சமாரியாவில் சான்று பகர்தல்[தொகு]

சமாரியாவில் நற்செய்தி பரவுதல்[தொகு]


4 சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர்.
5 பிலிப்பு சமாரியா [2] நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார்.
6 பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும்
அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும்
வந்த திரளான மக்கள் ஒரு மனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர்.
7 ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள்
அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின.
முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர்.
8 இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.
9 அந்நகரில் சீமோன் என்னும் பெயருள்ள ஒருவன் இருந்தான்.
அவன் தன் மாயவித்தைகளால்
சமாரியாவின் மக்கள் எல்லாரையும் மலைப்புக்குள்ளாக்கித்
தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிவந்தான்.
10 சிறியோர்முதல் பெரியோர்வரை அனைவரும்,
'மாபெரும் வல்லமையாம் கடவுளின் வல்லமை இவரிடம் உள்ளது'
என்று கூறி அவனுக்குச் செவிசாய்த்தனர்.
11 அவன் தன் மாய வித்தைகளால் நெடுங்காலமாக
அவர்களை மலைப்புக்குள்ளாக்கியதால்
அவர்கள் அவனுக்குச் செவிசாய்த்தார்கள்.
12 ஆயினும் இறையாட்சியையும்,
இயேசு கிறிஸ்துவின் திருப்பெயரையும் பற்றிய நற்செய்தியைப்
பிலிப்பு அறிவித்தபோது பல ஆண்களும் பெண்களும்
நம்பிக்கைக்கொண்டு திருமுழுக்குப் பெற்றார்கள்.
13 சீமோனும் நம்பிக்கைகொண்டவனாய்த் திருமுழுக்குப் பெற்று,
பிலிப்புடன் கூடவே இருந்தான்;
அவர் செய்த அரும் அடையாளங்களையும்
வல்ல செயல்களையும் கண்டு மலைத்து நின்றான்.
14 சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை
எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு,
பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.
15 அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு
இறைவனிடம் வேண்டினார்கள்.
16 ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும்
தூய ஆவி அருளப்படவில்லை.
ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.
17 பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே
அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள். [3]
18-19 திருத்தூதர் கைகளை வைத்ததும்
அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக் கொண்டதைச் சீமோன் கண்டபோது,
"நான் யார்மீது கைகளை வைப்பேனோ
அவரும் தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளும்படி
எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுங்கள்" என்று கூறி,
அதற்காகப் பணம் கொடுக்க முன்வந்தான்.
20 அப்போது பேதுரு அவனிடம்,
"கடவுளது கொடையைப் பணம் கொடுத்து வாங்க எண்ணியதால்
நீயும் உன் பணத்தோடு நாசமாய்ப் போ.
21 உன் உள்ளம் கடவுளின்முன் நேர்மையற்றதாய் இருப்பதால்,
இதில் உனக்குப் பங்குமில்லை, உரிமையுமில்லை.
22 இப்போதே உனது தீய போக்கைவிட்டு
நீ மனம் மாறி ஆண்டவரிடம் மன்றாடு.
ஒருவேளை உன் உள்ளத்தில் எழுந்த இந்த எண்ணம் மன்னிக்கப்படலாம்.
23 ஏனென்றால் நீ கசப்பு நிறைந்த உள்ளத்தினனாய்
தீவினைக்கு அடிமையாயிருப்பதை நான் காண்கிறேன்" என்று கூறினார்.
24 சீமோன் அதற்கு மறுமொழியாக,
"நீங்கள் கூறிய கேடு எதுவும் எனக்கு நேரிடாதவாறு
எனக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்," என்றான்.
25 பிறகு அவர்கள் ஆண்டவரின் வார்த்தையை எடுத்துக் கூறிச்
சான்று பகர்ந்தவாறே எருசலேமுக்குத் திரும்பினார்கள்;
சமாரியாவின் பல ஊர்களிலும் நற்செய்தியை அறிவித்தார்கள்.

பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும்[தொகு]


26 பின்பு ஆண்டவரின் தூதர் பிலிப்பிடம்,
"நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத்
தெற்கு நோக்கிப் போ" என்றார்.
அது ஒரு பாலைநிலப் பாதை.
27 பிலிப்பு அவ்வாறே புறப்பட்டுப்போனார்.
அப்போது எத்தியோப்பிய அரச அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று,
கடவுளை வணங்கி விட்டுத் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.
அவர் ஓர் அலி; எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.
28 அவர் தமது தேரில் அமர்ந்து
எசாயாவின் இறைவாக்கு நூலைப் படித்துக் கொண்டிருந்தார்.
29 தூய ஆவியார் பிலிப்பிடம்,
"நீ அந்தத் தேரை நெருங்கிச் சென்று அதனோடு கூடவே போ" என்றார்.
30 பிலிப்பு ஓடிச் சென்று,
அவர் எசாயாவின் இறைவாக்கு நூலை வாசிப்பதைக் கேட்டு,
"நீர் வாசிப்பதின் பொருள் உமக்குத் தெரிகின்றதா?" என்று கேட்டார்.
31 அதற்கு அவர், "யாராவது விளக்கிக்காட்டாவிட்டால்
எவ்வாறு என்னால் தெரிந்துகொள்ள முடியும்?"
என்று கூறித் தேரில் ஏறித் தன்னோடு அமருமாறு பிலிப்பை அழைத்தார்.
32 அவர் வாசித்துக்கொண்டிருந்த மறைநூல் பகுதி பின்வருமாறு:


"அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும்,


உரோமம் கத்தரிப்போன் முன்னிலையில் கத்தாத
செம்மறி போலும் அவர்தம் வாயைத் திறவாதிருந்தார்.
33 தாழ்வுற்ற நிலையில் அவருக்கு நீதி வழங்கப்படவில்லை.
அவருடைய தலைமுறையைப் பற்றி எடுத்துரைப்பவன் யார்?


ஏனெனில் அவருடைய உயிர்தான் எடுக்கப்பட்டுவிட்டதே!" [4]


34 அவர் பிலிப்பிடம்,
"இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைக் கூறுகிறார்?
தம்மைக் குறித்தா, அல்லது மற்றொருவரைக் குறித்தா?
தயவுசெய்து கூறுவீரா?" என்று கேட்டார்.
35 அப்போது பிலிப்பு,
இந்த மறைநூல் பகுதியிலிருந்து தொடங்கி,
இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவருக்கு அறிவித்தார்.
36 அவர்கள் போய்க் கொண்டிருந்தபோது,
வழியில் தண்ணீர் இருந்த ஓர் இடத்துக்கு வந்தார்கள்.
அப்போது அவர், "இதோ, தண்ணீர் உள்ளதே,
நான் திருமுழுக்குப்பெற ஏதாவது தடை உண்டா?" என்று கேட்டார்.
37 [5]
38 உடனே அமைச்சர் தேரை நிறுத்தக் கூறினார்.
பிலிப்பு, அமைச்சர் ஆகிய இருவரும் தண்ணீருக்குள் இறங்கினர்.
பிலிப்பு அவருக்குத் திருமுழுக்குக் கொடுத்தார்.
39 அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியேறினவுடனேயே
ஆண்டவரின் ஆவியார் பிலிப்புவை எடுத்துச் சென்றுவிட்டார்.
அமைச்சர் அதன்பின் அவரைக் காணவில்லை;
அவர் மகிழ்ச்சியோடு தம் வழியே சென்றார். [6]
40 பின்பு பிலிப்பு ஆசோத்து என்னும் இடத்தில் காணப்பட்டார்.
செசரியா போய்ச் சேரும்வரை அவர் சென்ற நகரங்களிலெல்லாம்
நற்செய்தியை அறிவித்தார்.


குறிப்புகள்

[1] 8:3 = திப 9:1,2; 22:4; 26:10,11; 1 கொரி 15:9; கலா 1:13; பிலி 3:6; 1 திமொ 1:13.
[2] 8:5 - சமாரியா நகர் புதிய ஏற்பாட்டுக் காலத்தில் செபஸ்து என்று அழைக்கப்பட்டது.
[3] 8:17 = 1 திமொ 4:14.
[4] 8:32,33 = எசா 53:7,8.
[5] 8:37 - 'அதற்குப் பிலிப்பு, "நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடையில்லை" என்றார்.
உடனே அவர், "இயேசு கிறிஸ்து இறைமகன் என்று நம்புகிறேன்" என்றார்'
என்ற இவ்வசனம் முக்கியமல்லாத சில கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படுகிறது.
[6] 8:39 = 1 அர 18:12.


(தொடர்ச்சி):திருத்தூதர் பணிகள்: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை