திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவான் (அருளப்பர்) நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து


"மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி,"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், "இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்" என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது." - யோவான் 2:1-9

யோவான் நற்செய்தி (John) [1][தொகு]

முன்னுரை

ஆசிரியர்[தொகு]

நான்காம் நற்செய்தியின் ஆசிரியர் செபதேயுவின் மகனாகிய யோவான் என்பது மிகத் தொன்மையான கிறிஸ்தவ மரபு. இதனை எழுதியதாக நற்செய்தியே கூறும் அன்புச்சீடர் (21:24) இவராகத்தான் இருக்க வேண்டும். ஆனால் யோவானே அனைத்தையும் எழுதியிருக்கவேண்டும் என்று கூற முடியாது. யோவான் இயேசுவைப்பற்றி எடுத்துரைத்த செய்திகள் அவரது சமூகத்தில் தனிவடிவம் பெற்று, பின்னர் எழுத்து வடிவம் ஏற்றது. காலப் போக்கில் கிறிஸ்தவச் சமூகத்தின் தேவைகளுக்கேற்பச் சில மாற்றங்கள் பெற்று, முன்னுரை, பிற்சேர்க்கை ஆகியவற்றுடன் இணைக்கப் பெற்று இன்றைய வடிவம் பெற்றிருக்கவேண்டும்.

இயேசுவின் அன்புச் சீடரான யோவான் முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்து பின் இயேசுவின் சீடராகிறார் (1:35-39). இயேசுவோடு மிகுந்த நெருக்கம் கொண்டிருந்த மூன்று திருத்தூதருள் இவரும் ஒருவர் (மாற் 5:37; 9:2; 13:3; 14:33). இறுதி இரவுணவின்போது இயேசுவின் மார்புப் பக்கமாய் சாய்ந்திருந்த இவர் (13:22-26) மற்றத் திருத்தூதரெல்லாம் ஓடிவிட்ட நேரத்திலும் இயேசுவின் சிலுவையடியில் நின்றார். இவரிடமே இயேசு தம் அன்பு அன்னையை ஒப்படைத்தார் (19:25-27).

நூலின் நோக்கம்[தொகு]

"இயேசுவே இறைமகனாகிய மெசியா என்று நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப் பெற்றுள்ளன"(20:31) என்று ஆசிரியரே நூலின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார். கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்திக் கிறிஸ்தவ வாழ்வை வலுப்படுத்துவது நற்செய்தியின் முக்கிய நோக்கமாய் இருந்தது. மேலும் கிறிஸ்துவுக்கு முந்திய பழையன கழிந்து, கிறிஸ்து வழியாகப் புதியன புகுந்துவிட்டன என்று காட்டுவதும், கிறிஸ்துவை நேரடியாகக் கண்டிராத இரண்டாம் தலைமுறையினருக்கு அவரைப் பற்றிய நம்பத்தக்க சான்று அளிப்பதும் (20:29), முதல் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய சில தவறான கொள்கைகளை (திருமுழுக்கு யோவானே மெசியா, தோற்றக் கொள்கை போன்றவை) திருத்துவதும் நூலாசிரியரின் நோக்கங்களாய் இருந்தன. இந்நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் ஏறத்தாழ கி.பி. 90ஆம் ஆண்டில் கிரேக்க மொழியில் இந்நற்செய்தி எழுதப்பட்டது. இது எபேசு நகரில் எழுதப்பட்டது என்பது கிறிஸ்தவ மரபு.

உள்ளடக்கம்[தொகு]

மனிதரான வாக்கே இயேசு எனத் தொடக்கத்திலேயே எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். அவரது இயல்பை ஒளி, வாழ்வு, வழி, உண்மை, உணவு போன்ற உருவகங்களால் விளக்கி, இயேசு யார் என்பதை எல்லாக் கால, இட, சமய, பண்பாட்டு மக்களுக்கும் எளிதில் புரிய வைக்கிறார். அழைத்தல், கோவில், வழிபாடு, திருமுழுக்கு, நற்கருணை ஆகிய கிறிஸ்தவக் கருத்துக்களின் ஆழ்ந்த பொருளை விரித்துரைக்கிறார். அரும் அடையாளங்களாலும் அவற்றைத் தொடரும் உரைகளாலும் இயேசுவை வெளிப்படுத்தி தந்தைக்கும், மகனுக்கும் சீடருக்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றிச் சிறப்பாகப் பேசுகிறார். இயேசு துன்பங்கள் பட்டபோது அவரை நொறுக்கப்பட்ட துன்புறும் ஊழியனாக அல்ல, மாறாக அனைத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வெற்றி வீரராகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இவ்வாறு இயேசுவின் உரைகள், அவருடைய செயல்கள், அவரைப் பற்றிய செய்திகள், அவருடைய ஆளுமை, அவரது பணித்தளம் ஆகிய அனைத்துமே இந்நற்செய்தியில் ஒத்தமை நற்செய்திகளிலிருந்து வேறுபட்டு இருக்கின்றன.

அமைப்பு[தொகு]

யூதத் திருவிழாக்களை அடிப்படையாகக் கொண்டு இயேசுவின் உரைகளும் அவரைப் பற்றிய பிற செய்திகளும் தொகுக்கப்பட்டிருப்பனவாகத் தெரிகிறது.

யோவான் நற்செய்தி[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரைப் பாடல் 1:1-18 165 - 166
2. முதல் பாஸ்கா விழா 1:19 - 4:54 166 - 173
3. யூதர்களின் திருவிழா 5:1-47 173 - 175
4. இரண்டாம் பாஸ்கா விழா 6:1-71 175 - 178
5. கூடார விழா 7:1 - 10:21 178 - 187
6. கோவில் அர்ப்பண விழா 10:22 - 11:54 187 - 190
7. இறுதிப் பாஸ்கா விழா 11:55 - 20:31 190 - 209
8. பிற்சேர்க்கை 21:1-25 209 - 211

யோவான் நற்செய்தி (John)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரைப் பாடல்[தொகு]

வாக்கு மனிதராதல்[தொகு]


1 தொடக்கத்தில் வாக்கு இருந்தது;
அவ்வாக்கு கடவுளோடு இருந்தது;
அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது. [1] [2]


2 வாக்கு என்னும் அவரே தொடக்கத்தில் கடவுளோடு இருந்தார்.


3 அனைத்தும் அவரால் உண்டாயின;
உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை. [3]


4 அவரிடம் வாழ்வு இருந்தது;
அவ்வாழ்வு மனிதருக்கு ஒளியாய் இருந்தது.


5 அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது;
இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை. [4] [5]


6 கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்;
அவர் பெயர் யோவான். [6]


7 அவர் சான்று பகருமாறு வந்தார்.
அனைவரும் தம் வழியாக நம்புமாறு
அவர் ஒளியைக் குறித்துச் சான்று பகர்ந்தார்.


8 அவர் அந்த ஒளி அல்ல;
மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.


9 அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி
உலகிற்கு வந்துகொண்டிருந்தது.


10 ஒளியான அவர் உலகில் இருந்தார்.
உலகு அவரால்தான் உண்டானது.
ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. [7]


11 அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். [8]
அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.


12 அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும்
அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார். [9]


13 அவர்கள் இரத்தத்தினாலோ உடல் இச்சையினாலோ
ஆண்மகன் விருப்பத்தினாலோ பிறந்தவர்கள் அல்ல;
மாறாகக் கடவுளால் பிறந்தவர்கள்.


14 வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்.
அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.
அருளும் உண்மையும் நிறைந்து விளங்கிய அவர்
தந்தையின் ஒரே மகன் என்னும் நிலையில் இம்மாட்சியைப் பெற்றிருந்தார். [10]


15 யோவான் அவரைக் குறித்து,
"எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்;
ஏனெனில், எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்" என
உரத்த குரலில் சான்று பகர்ந்தார்.


16 இவரது நிறைவிலிருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெற்றுள்ளோம். [11]


17 திருச்சட்டம் மோசே வழியாகக் கொடுக்கப்பட்டது;
அருளும் உண்மையும் இயேசு கிறிஸ்து வழியாய் வெளிப்பட்டன. [12]


18 கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை;
தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும்
கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே
அவரை வெளிப்படுத்தியுள்ளார். [13]

2. முதல் பாஸ்கா விழா[தொகு]

திருமுழுக்கு யோவான் சான்று பகர்தல்[தொகு]

(மத் 3:1-12; மாற் 1:7-8; லூக் 3:15-17)


19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி,
"நீர் யார்?" என்று கேட்டபோது அவர்,
"நான் மெசியா அல்ல" என்று அறிவித்தார்.
20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.
21 அப்போது, "அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?" என்று அவர்கள் கேட்க,
அவர், "நானல்ல" என்றார்.
"நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா?" என்று கேட்டபோதும்,
அவர், "இல்லை" என்று மறுமொழி கூறினார். [14]
22 அவர்கள் அவரிடம், "நீர் யார்?
எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்;
எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்?" என்று கேட்டார்கள்.
23 அதற்கு அவர்,


"'ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப்
பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது'


என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே" என்றார். [15]
24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்
25 அவரிடம், "நீர் மெசியாவோ எலியாவோ
வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால்
ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
26 யோவான் அவர்களிடம்,
"நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன்.
நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;
27 அவர் எனக்குப்பின் வருபவர்;
அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை" என்றார்.
28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன.
அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.


29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான்,
"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி!
ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். [16]
30 எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்;
ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.
31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.
ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்;
தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்" என்றார்.


32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது:
"தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். [17]
33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது.
ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர்
'தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ
அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.
34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்." [18]

முதல் சீடர்களை அழைத்தல்[தொகு]


35 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.
36 இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார்.
37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
38 இயேசு திரும்பிப் பார்த்து, அவர்கள் தம்மைப் பின் தொடர்வதைக் கண்டு,
"என்ன தேடுகிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டார்.
அவர்கள், "ரபி [19], நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?" என்று கேட்டார்கள்.
39 அவர் அவர்களிடம், "வந்து பாருங்கள் "என்றார்.
அவர்களும் சென்று அவர் தங்கியிருந்த இடத்தைப் பார்த்தார்கள்.
அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி.
அன்று அவர்கள் அவரோடு தங்கினார்கள்.
40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர்.
அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.
41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து,
"மெசியாவைக் கண்டோம்" என்றார்.
'மெசியா' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.
42 பின்பு அவர் சீமோனை இயேசுவிடம் அழைத்து வந்தார்.
இயேசு அவரைக் கூர்ந்து பார்த்து,
"நீ யோவானின் மகன் சீமோன். இனி 'கேபா' எனப்படுவாய் என்றார்.
'கேபா' என்றால் 'பாறை' [20] என்பது பொருள்.

பிலிப்பு, நத்தனியேல் ஆகியோரை அழைத்தல்[தொகு]


43 மறு நாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்ல விரும்பினார்.
அப்போது அவர் பிலிப்பைக் கண்டு, "என்னைப் பின்தொடர்ந்து வா" எனக் கூறினார்.
44 பிலிப்பு பெத்சாய்தா என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
அந்திரேயா, பேதுரு ஆகியோரும் இவ்வூரையே சேர்ந்தவர்கள்.
45 பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து,
இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை
நாங்கள் கண்டுகொண்டோம்.
நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்" என்றார். [21]
46 அதற்கு நத்தனியேல்,
"நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?" என்று கேட்டார்.
பிலிப்பு அவரிடம், "வந்து பாரும்" என்று கூறினார்.
47 நத்தனியேல் தம்மிடம் வருவதை இயேசு கண்டு,
"இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்" என்று அவரைக் குறித்துக் கூறினார்.
48 நத்தனியேல், "என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று அவரிடம் கேட்டார்.
இயேசு, "பிலிப்பு உம்மைக் கூப்பிடுவதற்கு முன்பு
நீர் அத்திமரத்தின்கீழ் இருந்த போதே நான் உம்மைக் கண்டேன்" என்று பதிலளித்தார்.
49 நத்தனியேல் அவரைப் பார்த்து,
"ரபி, நீர் இறை மகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்" என்றார்.
50 அதற்கு இயேசு,
"உம்மை அத்திமரத்தின்கீழ் கண்டேன் என்று உம்மிடம் சொன்னதாலா நம்புகிறீர்?
இதைவிடப் பெரியவற்றைக் காண்பீர்" என்றார்.
51 மேலும் "வானம் திறந்திருப்பதையும்
கடவுளின் தூதர்கள் மானிடமகன்மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என
மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று அவரிடம் கூறினார். [22]


குறிப்புகள்

[1] 1:1 = 1 யோவா 1:1,2.
[2] 1:1 - "அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது" என்னும் சொற்றொடரை
"அவ்வாக்கு கடவுள் தன்மை கொண்டிருந்தது" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[3] 1:3 = திபா 33:9; கொலோ 1:15-20; எபி 1:1-3; திப 3:14.
[4] 1:5 = யோவா 8:12; 1 யோவா 2:8.
[5] 1:5 - "இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை" என்பதை
"இருள் அதனைப் புரிந்து கொள்ளவில்லை" என்றும் மொழி பெயர்க்கலாம்.
[6] 1:6 = மத் 3:1; மாற் 1:4; லூக் 3:1-2.
[7] 1:10 = 1 யோவா 2:13.
[8] 1:11 - "அவர் தமக்குரியவர்களிடம் வந்தார்" என்னும் சொற்றொடரை
"அவர் தமக்குரிய இடத்திற்கு வந்தார்" எனவும் மொழி பெயர்க்கலாம்.
[9] 1:12 = 1 யோவா 3:2.
[10] 1:14 = விப 25:8,9; லேவி 26:11,12; 1 அர 8:27.
[11] 1:16 = கொலோ 2:9,10.
[12] 1:17 = விப 34:10,32.
[13] 1:18 = விப 33:20; 1 யோவா 4:12; கொலோ 1:15.
[14] 1:21 = திப 13:25.
[15] 1:23 = எசா 40:3.
[16] 1:29 = எசா 53:7,12.
[17] 1:32 = எசா 11:2; 61:1.
[18] 2:34 = எசா 42:1; லூக் 9:15; 23:35.
[19] 2:38 - "ரபி"என்னும் எபிரேயச் சொல்லுக்குப் "போதகர்" என்பது பொருள்.
[20] 1:42 - "பாறை" என்பதன் கிரேக்கச் சொல் "பேதுரு" ஆகும்.
[21] 1:45 = இச 18:18; திப 26:22.
[22] 1:51 = தொநூ 28:12.

அதிகாரம் 2[தொகு]

கானாவில் திருமணம்[தொகு]


1 மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது.
இயேசுவின் தாயும் அங்கு இருந்தார்.
2 இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர்.
3 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே
இயேசுவின் தாய் அவரை நோக்கி,"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.
4 இயேசு அவரிடம், "அம்மா, [1] அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்?
எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார்.
5 இயேசுவின் தாய் பணியாளரிடம்,
"அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார்.[2]
6 யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன.
அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும்.
7 இயேசு அவர்களிடம்,
"இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்" என்று கூறினார்.
அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.
8 பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்"
என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
9 பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார்.
அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை;
தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது.
ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு,
10 "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்;
யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர்.
நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?" என்று கேட்டார்.
11 இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம்.
இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது.
இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார்.
அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
12 இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும்
அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர். [3]

கோவிலைத் தூய்மைப்படுத்துதல்[தொகு]

(மத் 21:12-13; மாற் 11:15-17; லூக் 19:45-46)


13 யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால்
இயேசு எருசலேமுக்குச் சென்றார்;
14 கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும்
அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்;
15 அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி,
அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்;
ஆடு மாடுகளையும் விரட்டினார்;
நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு
மேசைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
16 அவர் புறா விற்பவர்களிடம்,
"இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்;
என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்" என்று கூறினார்.
17 அப்போது அவருடைய சீடர்கள்,


"உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம்
என்னை எரித்துவிடும்"


என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள். [4]
18 யூதர்கள் அவரைப் பார்த்து,
"இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு
நீர் காட்டும் அடையாளம் என்ன?" என்று கேட்டார்கள்.
19 இயேசு மறுமொழியாக அவர்களிடம்,
"இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்" என்றார். [5]
20 அப்போது யூதர்கள்,
"இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே!
நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பி விடுவீரோ?" என்று கேட்டார்கள்.
21 ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.
22 அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது
அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்து
மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

இயேசு அனைவரையும் அறிபவர்[தொகு]


23 பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில்
அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர்.
24 ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை;
ஏனெனில் அவருக்கு அனைவரைப் பற்றியும் தெரியும்.
25 மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை.
ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.


குறிப்புகள்

[1] 2:4 - "அம்மா" என்னும் சொல் தாய் என்னும் பொருளில் அல்ல,
பெண்களை மதிப்புடன் குறிப்பிடும் பொருளில் இங்குக் கையாளப்படுகிறது.
[2] 2:5 = தொநூ 41:55.
[3] 2:12 = மத் 4:13.
[4] 2:17 = திபா 69:9.
[5] 2:19 = மத் 26:61; 27:40; மாற் 4:58; 15:29.


(தொடர்ச்சி): யோவான் (அருளப்பர்) நற்செய்தி: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை