தெய்வங்களும் சமூக மரபுகளும்
- Theivangalum Samooga Marabugalum
- by Dr. T. Paramasivan
- முதற்பதிப்பு: ஜனவரி, 1995
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு - © ஆசிரியர்
- Code No: A 828
- ISBN : 81–234–0389–5
- விலை: ரூ. 22.00
- ஒளி அச்சு: சிஸ்டெக், சென்னை-2.
- அச்சிட்டோர்: M/s உதயம் ஆப்செட்ஸ், சென்னை – 2
அணிந்துரை
குருநானக் ஆய்வகம்,
மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
மதுரை–21.
மதுரைத் தியாகராசர் கல்லூரியின் தமிழ்த்துறையில் பேராசிரியராகப் பணிபுரிபவர் டாக்டர் தொ. பரமசிவன் அவர்கள். மிக நுட்பமான ஆய்வாளர் இவர். இலக்கியம், வரலாறு, நாட்டார் வழக்காறுகள், சமயம், தொல்பொருள் ஆய்வு. கோயில் வழக்காறுகள் என குறுக்கும் நெடுக்குமாகச் சென்று தனது விவாதத்தை அற்புதமாக நடத்திச் செல்லும் ஆற்றல் பெற்றவர். யாருக்கும் கிடைக்காத தகவல்கள் இவருக்குக் கிடைக்கும். திருநெல்வேலிச் சீமையின் சிறந்த சிந்தனையாளர்களான மதிப்பிற்குரிய பேராசிரியர் நா.வானமாமலை, சி.சு.மணி, டாக்டர் எஸ். டி. லூர்து ஆகியோர் ஏற்படுத்திய தாக்கங்கள் இவரிடம் உண்டு.
இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள் சமயம் குறித்த சமூகவியல் அணுகுமுறை என்ற வகைமையில் அடங்கும். சமயம் குறித்த ஆய்வுகளில் கடந்த பத்துப்பதினைந்து வருடங்களில் ஒருவித தேக்கம் ஏற்பட்டுள்ளது. சாமி சிதம்பரனார் சித்தர்களின் பாடல்களில் விஞ்ஞான ரீதியான சிந்தனையைக் கண்டார். பகுத்தறிவு இயக்கத்தாரில் பலர் சித்தர் பாடல்களையும் வள்ளலார் பாடல்களையும் எடுத்துப் பயன்படுத்தினர். இது கொஞ்ச நாட்களுக்கு முன்னால். நமது காலத்தில் சித்தர்களை நாயன்மார் வரிசையில் சேர்க்கும் முயற்சிகள் அதிகம். வள்ளலாரைச் சமூகச் சீர்திருத்தவாதியாகப் பார்த்த நிலை போய், சித்தாந்த சைவத்தில் ‘கரைக்க’ முயற்சி செய்கிறார்கள். ராமதேவர் என்ற ‘இந்து’ச் சித்தர் யாகோபுச் சித்தர் என்ற பெயரில் ஒரு சூபியராக (Sufi) மாறினார் என்ற தகவல் முன்பே தெரிந்ததுதான். சித்தர் பாடல்களின் பழைய பதிப்புகளில் ராமதேவரின் பாடல்களும் இடம்பெற்றிருந்தன. இப்போதைய பதிப்புகளில் அவரது பாடல்கள் ‘அரவமில்லாமல்’ அகற்றப்பட்டுவிட்டன. சிவவாக்கியரின் பாடல்களில் சூபியத்தாக்கம் பெற்ற பாடல்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக, மத விஷயங்களில் ஒருவித பழமைவாதம் கடந்த பத்துப் பதினைந்து வருடங்களில் தலைதூக்கி உள்ளது. நாம் இதனை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. இந்த எதிர்கொள்ளல் முன்பை விட அதிக நுட்பம் கொண்டதாகவும் அதிகத் தயாரிப்புக் கொண்டதாகவும் இருக்கவேண்டியுள்ளது. முரட்டு நாத்திகம் போதாது. சமயம் குறித்த சமூகவியல், மானிடவியல், உளவியல் அணுகுமுறைகள், சமயத் தொன்மவியல் ஆய்வுகள், சமயத் தத்துவவியல் என்பதாகப் பரந்து விரிந்த எதிர்கொள்ளலாக அது இருக்கவேண்டும். இதனை நன்கு உணர்ந்தவர் டாக்டர் தொ. பரமசிவன்.
இவரது டாக்டர் பட்ட ஆய்வேடு ‘அழகர்கோயில்’ பற்றியது. தமிழ் இலக்கிய ஆசிரியரான இவர், அழகர்கோயில் பற்றிய சமூகவரலாற்றாய்வாக அதனை உருவாக்கினார். அந்த ஆய்வேடு மதுரைக்காமராசர் பல்கலைக்கழகத்தால் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அவரது ஆய்வின் தொடர்ச்சியாக இந்த நூலும் அமைந்துள்ளது என்று கூறலாம். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளில் சில எங்களது ‘நாவாவின் ஆராய்ச்சி’ காலாண்டிதழில் வெளிவந்தவை என்பதில் எங்களுக்கு சந்தோஷம்.
பொதுவாக, பக்தி இயக்கத்தை சமஸ்கிருதமயமாக்கம் (எம். என். ஸ்ரீநிவாஸ்) என்ற ஒற்றைக் கருத்தாக்கத்தால் விளக்கமுயன்ற காலம் உண்டு. இன்று ஆய்வாளர்கள் அதனை ஏற்பதுகிடையாது. ஆரியம் மிக அடிப்படையாக இந்திய மயமாக்கத்திற்கு உட்பட்டது என்பதே உண்மை. இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களில் அந்தந்த வட்டார ஈரத்தை, வாழ்வை, வளத்தை அள்ளிக்கொண்டு வளர்ந்த பக்தி இயக்கம் சமஸ்கிருத, வைதீக வட்டத்தை வெகுவாகத் தாண்டி வெளியேறியது. பக்தி இயக்கங்கள் இந்த நாட்டின் ‘ஒருமைப்பாட்டை’ அல்ல, பன்முகத்தன்மையைத்தான் காட்டுகின்றன. பக்தி இயக்க காலத்தின் புராணங்களும் வழிபாட்டுமுறைகளும் இந்தியாவின் பல்வேறு வட்டாரங்களின் நாட்டார் கதைகளையும் வழக்காறுகளையும் அடித்தளமாகக் கொண்டவை. வேத, புராணங்கள் இந்த நாட்டில் வேர் கொள்ளவே இல்லை. இந்திரன், மாருதி, அக்னி, அஸ்வினி போன்ற வேத ஆரியரின் சொந்தக் கடவுளருக்கே இந்த நாட்டில் வெகுசனப் புராணங்கள் கிடையாதே! முப்பெரும் கடவுளர் என்ற வரிசையில் ஒட்டிக்கொண்ட வேதமுதல்வன் பிரம்மனுக்கு இந்த நாட்டில் உருப்படியாக ஒரு கதை கிடையாதே! தமது சொந்தக் கடவுளரைத் தொலைத்துவிட்டு விஷ்ணு கதைகளுக்குள்ளும் சிவபுராணங்களுக்குள்ளும் தனக்கு ஓரிடத்தைச் சம்பாதித்துக் கொண்டதுதான் இந்த நாட்டின் பிராமணியம்.
மாக்ஸ்முல்லர் வேதகால ஆரியர்களின் கடவுள் நம்பிக்கைக்கு ‘ஹீனோதீயிசம்’ (Henotheism) என்று ஒரு பெயர் கொடுத்தார். அதாவது, வேதகால ஆரியர்கள் பல கடவுளரை வணங்கினார்கள். ஆயின், எந்தக் கடவுளை, குறிப்பிட்ட ஒரு பாடலில் மையப்படுத்துகிறார்களோ அந்தக் கடவுளை அந்தப் பாடலின்போது மட்டும், ‘முழு முதல்வன்’ என்றும், ‘ஈடு இணையில்லாதவன்’ என்றும் புகழ்பாடித் துதித்து வணங்குவார்கள் இதைத்தான் ‘ஹீனோதீயிசம்’ என்றார் மாக்ஸ்முல்லர். ஆரியப்பண்பாட்டின் ஒரு குணாம்சம் என்று இதனை கொள்வோமெனில் இதன் சாராம்சம் ‘சந்தர்ப்பவாதம்’ என்கிறார் ஹிரியண்ணா என்ற ஆய்வாளர். இந்திய வரலாற்றின் எல்லா காலகட்டங்களுக்கும் இது பொருந்தும்.
கீதையில் வைதீகம் சாங்கியத்தோடு சமரசம் செய்துகொண்டது. பௌத்தத்தின் சில துவக்கங்களை அதீதப்படுத்த சங்கரர் அத்வைதத்தை உருவாக்கினார். சமஸ்கிருதம் போல் வெறும் வடிவமாகப் போய்விட்ட நிர்க்குணபிரம்மத்திற்கு உயிரும் வாழ்வும் சதையும் தேடி பூமிக்கு இறங்கி வரவேண்டிய நிர்ப்பந்தம் பக்தித் தத்துவத்திற்கு ஏற்பட்டது. மலட்டு பிரம்மத்திற்கு என்ற மமதை தவிர வேறு எதையும் விளக்கும் ஆற்றல் இல்லாமல் போயிற்று. எனவே பெண் தெய்வங்களுக்குத் தாராளமாக இடம் தந்தன பக்திப்புராணங்கள். ஆண் - பெண் சேர்க்கை குறித்த தந்தைவழி மாதிரிகளைப் பயன்படுத்தி உலகை விளக்கியது பக்திப்புராணம்.
கிருஷ்ண புராணங்களில் தாய்த்தெய்வமூலம் கொண்ட தாந்திரிகத் தாக்கம் ஏராளமாக உண்டு. அவ்வளவு நுட்பமாக வர்ணிக்கப்படும் கிருஷ்ணனின் உடல் ஆணுடலா என்பதே சந்தேகம். நெருக்கடிகள் ஏற்படும்போது மோகினி வடிவமெடுத்து எதிரிகளைக் கையாளுவது கிருஷ்ணனின் வழக்கம். சிறையில் பிறந்த கிருஷ்ணன் கடத்தப்பட்டபிறகு, அவனுக்கு மாற்றாகப் படுக்க வைக்கப்பட்டிருந்த பெண்குழந்தை காளி என்று புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணனின் மாற்றுவடிவம் (Substitute) காளி என்ற செய்தி இங்குக்கிடைக்கிறது. காமன் வழிபாடு வைணவ மரபில் கிருஷ்ண வழிபாட்டுடன் இணைந்துவிட்டது கவனிக்கத்தக்கது. ‘பாற்கடலில் ஆதிசேடனில் பள்ளிகொண்ட பிரான்’ என்ற படிமம். ‘தாயின் வயிற்றுக்குள் கொடியுடன் மிதக்கும் கரு’, என்ற தாந்திரிகவழி விளக்கம் கொண்டது. வைணவத்தின் படைப்பு விளக்கமான ‘லீலை’ என்ற கருத்தாக்கம், மிக முக்கியமாக ஆண்–பெண் கலவியைக் குறிப்பது. இந்தக் கதைகளுக்கெல்லாம் வைதீக மரபில் மூலாதாரங்கள் கிடையாது. மிக வளமான செழுமையான, பன்மியப்பண்பு கொண்ட நாட்டார் மரபின் கதைகள் இவை.
இந்நூலில் டாக்டர் தொ. பரமசிவன் அவர்கள் பக்தி இயக்கத்திற்கு ஜனநாயகத்தன்மை உண்டு என்ற பழைய கருத்தையும் தாண்டி, அதனை நாட்டார் பண்பாட்டு அடிப்படை நோக்கி நகர்த்தியிருக்கிறார். இது இந்த நூலின் சாதனை. நாட்டார் வழக்காற்றுத் தகவல்களின் தளத்தில் நின்று சமய வரலாற்றை நோக்குவது என்ற அணுகுமுறை இது. கள ஆய்வுகள் முக்கியமான தகவல்களைத் தருகின்றன. அழகர் திருவிழா கள ஆய்வுகள், தாலாட்டுப் பாடல்கள், 1939–ல் நடந்த மதுரைக் கோயில் அரிசன ஆலயப் பிரவேசம் குறித்த அதே காலத்திய சிறு பாட்டுப் புத்தகங்கள், காரைக்கால் பட்டினஞ்சேரி மீனவர்கள் விழா குறித்த கள ஆய்வுத் தகவல்கள் இவையெல்லாம் முதன்மைச் சான்றாதாரங்கள் ஆகின்றன. ஆன்றவிந்த பண்டிதர் உள்ளொளியில் பிறப்பதே மூலஞானம் என்றிருந்த காலம் மலையேறிக் கொண்டிருக்கிறது. சேரிச் சனங்களின் வாய்வழிக்கதைகளும் ஆட்டபாட்டமும் முதன்மைத் தரவுகள் ஆகிக்கொண்டிருக்கின்றன. சுமித் சர்க்காரின் ‘கீழிருந்து வரலாறு எழுதப்படுவது’ ரணஜித் குகா வகையறாக்களின் ‘அடித்தள மக்கள் வரலாறு’ என்ற வரிசையிலான ஆய்வு இது. தமிழில் பேராசிரியர் நா.வானமாமலை, ஆ. சிவசுப்பிரமணியன் ஆகியோர் இவ்வகை ஆய்வில் முன்னோடிகள் ஆவர்.
தமிழ் வைணவம் என்ற ஒரு கருத்தாக்கத்தை டாக்டர் தொ. பரமசிவன் முன்வைக்கிறார். அதன் நாட்டார்மரபுச் சார்பை இதன் மூலம் வலியுறுத்துகிறார். அது ‘தென்கலை’ என்ற பழைய அடையாளத்தைத் தாண்டி வளருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முறையியல் ரீதியாக சமய ஆய்வுகளை உபநிடத உச்சியிலிருந்து துவங்காமல் உள்ளூர்ச் சங்கதிகளிலிருந்து தொடங்குங்கள் என்று இந்நூல் கூறுகிறது. வைதீக வைணவம் தமிழ்நாட்டார் வைணவம் என்ற எதிர்வு குறித்து இனி ஆய்வாளர்கள் பேசத் துவங்கலாம். தமிழ் வைணவம் தமிழ்ச் சைவம் என்ற எதிர்வும் இந்நூலின் கட்டுரைகளில் தென்படுகிறது. தமிழ் வைணவம் தமிழ்ச் சைவம்போல் உடைமைசார்ந்ததாக, அரசியல் ஆளுமை சார்ந்ததாக இருக்கவில்லை என்ற கூற்றும் நூலினுள் உள்ளது. இதனை ஆட்சேபிப்பவர்கள் இருப்பார்கள்.
சரி, எம். என். ஸ்ரீநிவாஸ் போல் ஒருபுறச் சாய்வு நமக்கு உதவாது. வைணவத்திற்கு நாட்டார் அடித்தளம் உண்டு. சந்தேகமில்லை. ஆயின் வைதீகமும் அதற்குள் வேலை செய்தது. தனக்கேற்ப விஷயங்களை ஆட்படுத்திக்கொண்டது. இரண்டு திசைகளிலும் நாம் சேர்த்து யோசிக்க வேண்டும்.
டாக்டர் தொ. பரமசிவன் அவர்களுக்கு எனது அன்பு வாழ்த்துக்கள்.
ந.முத்துமோகன்.
முன்னுரை
இந்நூலில் உள்ள பத்துக் கட்டுரைகளும் கோயில், சமயம் சார்ந்தவை இவற்றுள் “பார்ப்பார் ஒரு வரலாற்றுப் பார்வை”, “1939 மதுரைக் கோயில் அரிசன ஆலயப் பிரவேசம்” ஆகிய இரண்டும் நாவாவின் ஆராய்ச்சி இதழில் வெளிவந்தன ‘பலராம வழிபாடு’ மதுரை காமராசர் பல்கலைக்கழக விபாழி வட்ட ஆய்வரங்கிலும் அழகர் கோயில் அமைப்புப் பற்றிய கட்டுரை அழகப்பா பல்கலைக்கழக கோயிற்கலை ஆய்வரங்கிலும்.“உடைமையம் ஒழுக்கமும்” மதுரைத் தியாகராசர் கல்லூரி புதன் வட்ட ஆய்வரங்கிலும் அடிதொழுதல் பேராசிரியர் நா.வா நினைவு ஆய்வரங்கிலும் வாசித்து அளிக்கப் பெற்றன. ஏனைய நான்கும் இந்நூலுக்கென எழுதப் பெற்றன.
சமய நிறுவனங்களையும் விழாக்களையும் சமூகம் சார்ந்து நின்று ஆராயும் நெறி மிக அண்மை காலத்தில்தான் தமிழ்நாட்டில் கால்கொண்டு வளரத் தொடங்கியள்ளது. இத்துறையில் இன்னும் நாம் நெடுந்தொலைவு செல்ல வேண்டும். நான் கண்டும், கேட்டும். வாசித்தும் உணர்ந்தும் பெற்ற கருத்துக்களே இந்நூலில் பேசப்படுகின்றன இவை முடிந்த முடிவுகள் அல்ல. வெளிப்பலையான விரிந்த விமர்சணத்திற்கு உரியவையே. அறிவு என்பது மறுக்க மறுக்கத்தானே வளர்கிறது
இந்நூற் கட்டுரைகளில் செம்மைக்குத் துணைநின்ற என் ஆசான் மெய்கண்ட செல்வர் திரு. சி.சு மணி அவர்கட்கும், எழுதிட உதவிய என் மாணவப் பிள்ளையார் இரா. தமிழ்க்குமரனுக்கும் நான் நெஞ்சு நிறைந்த நன்றியன். பேராசிரியர் ந,முத்துமோகன் தமிழ்நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அவர் அளித்த மதிப்புரை இந்நூலுக்கு அணியாகிறது. அவருக்கு என் நன்றி.
இக்கட்டுரைகளை நூலாக வெளியிட ‘என்னைப் பணி கொண்ட’ என் சி. பி. எச் நிறுவன (முன்னாள்) மதுரை மேலாளர் திரு ஆர். எஸ். சண்முகம் அவர்களுக்கும் என் சி. பி. எச் நிறுவனத்துக்கும், ஆய்வரங்க வாய்ப்பளித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அழகப்பர் பல்கலைக்கழகம், மதுரைத் தியாகராசர் கல்லூரி நாவா ஆராய்ச்சி வட்டத்தினர் ஆகியோருக்கும் என் நன்றி.
தொ. பரமசிவன்
பொருளடக்கம்
பக்கம்
1. | 1 |
2. | 11 |
3. | 18 |
4. | 30 |
5. | 43 |
6. | 56 |
7. | 71 |
8. | 83 |
9. | 93 |
10. | 109 |