தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு/சித்த வைத்தியர் ஜி.டி. நாயுடு;

விக்கிமூலம் இலிருந்து
13. சித்த வைத்தியர் ஜி.டி. நாயுடு;
ஜெர்மன் பேச்சு ஆய்வுக்கு அழைப்பு

“வசையிலா வண்பயன் குன்றும்; இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்”

“புகழ் இல்லாத உடம்பைச் சுமந்த மண், தன் வளம் மிக்க விளைச்சலில் குறைவுபடும்” என்கிறது தமிழர் தம் மறையான திருக்குறள் வேதம்.

திருவள்ளுவர் பெருமானுடைய திருவாக்குக்கு ஏற்ப, தான் பிறந்த மண்ணில் விந்தையான மனிதராக திரு.ஜி.டி. நாயுடு விளங்கினார். அவருக்குத் தெரியாத தொழில் கிடையாது.

பருத்தி வணிகத்திலே ஆழம் பார்த்து தோல்வி கண்ட ஜி.டி. நாயுடு, பஸ் தொழில்களிலே பறக்கவிட்டார் தனது புகழ்க் கொடியை - உலகளாவ! அந்த அளவுக்கு அவர் இரும்போடு பழகி, இயந்திர மனிதனாக வெற்றி பெற்றார்!

விவசாயப் பண்ணையச் சொந்தமாக நிறுவி, அந்த இயற்கையான தாவரத்திலே தனது விஞ்ஞான அறிவைப் புகுத்தி ஒரு மாபெரும் புரட்சியையே பூக்க வைத்தார் ஜி.டி. நாயுடு அதன் மனம் உலகெங்கும் கமழ்ந்தது.

சாதாரண ஒரு ரேசண்ட் பிளேடைச் செய்து, அதன் ஆற்றலை அமெரிக்காவும், இங்கிலாந்தும் போட்டா போட்டி வணிகம் நடத்தித் தோல்வி கண்டு, பிறகு அவரையே விலைக்கு வாங்க சகலகலா வித்தைகளையும் யூகமாகக் கூறி, தோல்வி கண்டன அந்த நாடுகள் திரு. ஜி.டி. நாயுடு விஞ்ஞானத்தின் முன்பு! தாமஸ் ஆல்வாய் எடிசன் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியால் கைவிடப்பட்ட Vote Recording Machine, அதாவது தேர்தலின் போது வாக்குகளைப் பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். அது தற்போதையை தேர்தல்களில் ஆமை போல அமலாகி வருவதைப் பார்க்கின்றோம். 2004-ஆம் ஆண்டு முதல் அந்த முறை முயலாகவும் செயற்படக் கூடும்.

நாயுடு செய்த சித்த
மருத்துவ ஆராய்ச்சி!

அதற்கடுத்து திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், மூலிகைகளை ஆராய்ந்து மருந்துகளைக் கண்டுபிடிக்கும் சித்த வைத்தியராகவும் மாறினார். எப்போதும் அவர் உழைத்துக் கொண்டே இருப்பதற்காகத் தான் பிறவி எடுத்தாரோ என்னவோ! அந்த மாமேதையான திரு. நாயுடு அவர்கள் எப்படியோ பல்துறை அறிவு பெற்ற ஒரு விந்தையான மனிதராக நடமாடினார்.

இத்தகைய மனிதரைப் போன்றவர்களால் தான். அவர்கள் பிறந்த பூமி,தனது வளம் மிக்க விளைச்சலில் குறைவு படாமல், முப்போகம் விளையும் பொன் மண்ணுகப் பொலிவு பெற்று திகழும் என்று நமது பேரறிவுப் பெருமான் திருவள்ளுவர் பெருமையோடு கூறுகிறாரோ என்று நாம் எண்ணி மெய்சிலிர்க்க வேண்டியிருக்கிறது! அத்தகைய புகழை நாட்டி வந்தவர் நமது ஜி.டி.நாயுடு அவர்கள்.

ஜி.டி.நாயுடு அவர்கள் சிறந்த ஒரு சித்த வைத்திய வித்தகராகவும் விளங்கினார். அதற்கு என்ன சான்று என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்கின்றீர்களா?

சித்த வைத்தியம் பேராசிரியர் என்று சித்த வைத்தியக் குழுவினர்க ளால் பாராட்டிப் போற்றி பட்டம் வழங்கப் பெற்ற ஜி.டி. நாயுடு ஜெர்மன் நாட்டுக்கு 1958, 1959-ஆம் ஆண்டுகளில் சென்றார்.

மேற்கு ஜெர்மன் நாட்டில் 'ஸ்டர்க்கார்ட் என்ற ஒரு நகர் உள்ளது. அந்த நகரில் மிகச் சிறந்த மருத்துவர்களும், தொழிலதிபர்களும் வாழ்கின்ற புகழ்பெற்ற நகரமாகும்.

அந்த நகரில் உள்ள மருத்துவர்கள், 1.3.1958 - அன்றும் 19.1.1959 - அன்றும் இரண்டு மாபெரும் மருத்துவ நிபுணர் கூடும் சிறப்புக் கூட்டங்களைக் கூட்டி, திரு.ஜி.டி.நாயுடு அவர்களைச் சித்த வைத்திய முறைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

மருத்துவ மேதைகள் குழுமியிருந்த அந்த ஜெர்மன் நாட்டின் புகழ்பெற்ற ஸ்டார் கார்ட் சொற்பொழிவுகளைச் சுருக்கி கீழே கொடுத்திருக்கிறோம்.

இதோ ஜி.டி.நாயுடு
பேசுகிறார் :

அன்பார்ந்த ஸ்டார் கார்ட் மெடிக்கல் கழகத்து மருத்துவ மேதைகளே!

இந்தியாவில் இப்போது மூன்று பழைய மருத்துவ முறைகள் வழக்கில் இருக்கின்றன.அவை,சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம் என்ற மருத்துவ முறைகளாகும்.

இந்த மூன்று மருத்துவ முறைகளில் மிகவும் பழைமையானவை சித்தவைத்தியம் தான். அதன் வயது 4000 ஆண்டு களுக்கும் மேற்பட்டதாகும். சித்தர் பெருமக்களது சிந்தனை முதிர்ச்சிகளாலே உருவான முறையாகையால் இந்தியத் தென்னாட்டில் பெரும் அளவில் இந்த வைத்திய முறை கையாளப்பட்டு வந்தது.

பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த சித்த வைத்திய முறை வட இந்தியா சென்றது. அதற்குப் பின்னர் அங்கிருந்து சீன நாட்டிற் குள் நுழைந்தது. அராபிய நாடுகளிலும் அந்த வைத்திய முறை பரவியது.

யுனானி முறை அத்தகைய வைத்திய முறை அன்று. அது பெரும்பாலும் வட நாட்டில் மட்டுமே இங்குமங்கும் பரவியது. ஆனால், இந்த யுனானி வைத்திய முறை மற்ற மருத்துவ முறைகளைப் போல, விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப் படவில்லை. ஒரே நோய்க்குப் பல மருந்துகள், பல விதங்களில், ஒவ்வொரு மருத்துவராலும் செய்யப்படுகின்றன.

விஞ்ஞான முறைகளிலே மற்ற மருத்துவ முறைகள் முன்னேறி இருக்கும்போது, சித்த வைத்தியம் கடந்த முன்னுாறு ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் பெறாமல் இருக்கின்றது. எந்த ஒரு மருந்தும் ஒரே குறிப்பிட்ட முறையில் செய்யப் பட்டால், அல்லாது நன்மை கொடுக்காது. ஆராய்ச்சிகள் மேலும் செய்து, தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருந்தால், நீரிழிவு, ஆஸ்துமா,வெட்டை, புற்றுநோய்,காசம்,இருதயநோய் போன்ற நோய்களுக்கு மலிவான விலையில், அருமையான மருந்துகள் சித்த வைத்தியத்தில் கண்டு பிடிக்க முடியும்.

அது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உரிய இடம் தென் இந்தியாவே ஆகும். ஏனென்றால், அங்குள்ள மலைகள், சமவெளிகள், தட்ப வெட்ப சூழ்நிலைகள் முதலியன,மருந்துச் செடிகளையும், மூலிகைகளை வளர்ப்பதற்கும்.ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கும் பொருத்தமான,சிறந்த இடமாக இருக்கின்றது.

சித்த வைத்தியம் மிக பழமையானதாக இருந்தும், அதுமிக எளிமையான மருத்துவமாக இருந்தும்கூட, அதைப் பற்றி உலகம் இன்னும் உணரவில்லை, உணர்த்தப்படவில்லை,காரணம்,சித்த வைத்தியத்தின் முன்னோர்கள் அதைத் தெளிவாகப் பிற்காலச் சந்ததிகள் புரிந்து பின்பற்றுமாறு எழுதி வைக்கப்படவில்லை, மற்றவர்களுக்கும் சித்த வைத்தியத்தைப் பற்றி எடுத்துக் கூற முடியவில்லை என்பதே காரணம் ஆகும்.

சித்த வைத்தியத்திற்குத் தேவையான மருந்துகள் எல்லாமே மூலிகைச் செடி,கொடி,மரங்களில் இருந்தே கிடைக்கின்றன. ஒவ்வொரு செடி கொடி மரங்களின் இலைகளும்,பூவும்,பிஞ்சும், காயும், தண்டும் வேரும்,பட்டையும், கொட்டைகளும், ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுபவையே என்பதை உலகம் உணர வேண்டும்.

வேப்பமரம் சிறந்த
சித்த வைத்திய மரம்!

குறிப்பாக, வேப்பங்குச்சியை எடுத்துக் கொள்வோம். அது பல்லைத் தூய்மையாக்கி,பற்கிருமிகளைப் போக்கப் பயன்படுகின்றது. அது போலவே அதன் இலைகள், பூ, பட்டைகள், கொட்டைகள், எண்ணெய், போன்றவை ஒவ்வொரு நோய்க்குரிய ஒவ்வொரு மருத்துவ மருந்தாகவும் பயன்படுகின்றது.

உணவு உண்ட பின்பு வெற்றிலையை வாய்மணக்கத் தாம்பூலமாகப் போடுகின்றார்கள் எங்கள் நாட்டில். அந்த வெற்றிலை உண்ட உணவை செரிமானம் செய்யும் மருந்தாகவும் பயன்படு கின்றது. ஆடா தோடா என்ற இலை, ஆஸ்த்துமா எனும் நோயைக் குணப்படுத்துகின்றது.

இவ்வாறு சிறந்த பயன் தரும் சித்த வைத்திய முறைகள், தென்னிந்தியாவிற்குள் மட்டும் புகழ்பெற்றுள்ளது.

இந்தியா வரும் ஜெர்மானியர்
தமிழ் நாட்டிற்கும் வர வேண்டும்!

உலக மக்களும், ஜெர்மானிய மக்களும் இந்தியாவிற்கு வரும்போது, வட இந்தியாவைப் பார்த்து விட்டோம் என்று திரும்பி விடாமல், தமிழ் நாட்டிற்கும் நீங்கள் வரவேண்டும். வந்தால்தான் இந்த மருந்துகள் வளரும் மூலிகை மலைகளின் இயற்கைச் சக்தியை உங்களால் உணர முடியம்.

மேற்கு ஜெர்மனியிலே உள்ள ஸ்டார்கார்ட் நகர மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்களது அறிவும், ஆராய்ச்சியும் சித்த மருத்துவ முறைகளுக்குப் பயன்படுமேயானால், அந்த சித்த வைத்திய முறை மருத்துவ உலகில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியே தீரும் என்பது உறுதி.

கோவையில் நான் தொழிலாளர் நலச் சங்கம் என்ற ஒன்றைத் துவக்கி இருக்கிறேன். அதன் சார்பாக, மனித சமுதாயத்திற்குரிய தேவையான பல பிரச்னைகளை ஆராய்கின்றோம்.அவற்றில் ஒன்று தான் இந்த மருத்துவ ஆராய்ச்சி.

எனக்கு உதவியாக இருந்து பல மருந்துகளைக் கண்டு பிடிப்பதில் எனக்குத் துணையாக இருப்பவர் டாக்டர் வி.பி.பி.நாயுடு ஆவார். அவர் உலகம் முழுவதும் சுற்றிப் பல்வேறு மருத்துவ மனைகளில் பணியாற்றியப் பரந்த அனுபவம் உடையவர்.

இப்போது நாங்கள் இருவரும் செய்து வருவதைப் போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளை, எங்களுக்கு முன்பே 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பே யாரேனும் செய்திருப்பார்களானால், இன்று வரை எண்ணற்ற அரிய மருந்துகளைக் கண்டு பிடித்திருக்கக் கூடும்.

நீரிழிவுக்கு
மருந்து!

நானும் எனது நண்பரும் நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க ஆரம்பித்தோம். ஏறக்குறைய 150 மூலிகைகளை அதற்காகப் பரிசோதனை செய்தோம். அவற்றில் சில மூலிகைகள் பக்க விளைவுகளும், ஆபத்தும் இல்லாதவைகள் என்பதை அறிந்தோம்.

ஆபத்தற்ற அந்த மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மருந்து தயாரித்தோம். அந்த மருந்தை நோயாளிக்குக் கொடுப்பதற்கு முன்னர், டாக்டர் வி.பி.பி.நாயுடும்,நானும்,மற்றும் இரு நண்பர்களு மாகச் சேர்ந்து நாங்கள் நால்வரும் அதனை உண்டோம்.

அப்போது எங்களுக்கு எந்தவிதமான ஒரு நோயும் உடலில் இல்லை. இருந்தும் நாங்கள் தயாரித்த மருந்தை உட்கொண்டோம்.

அதனால் எங்களுக்கு ஆபத்துகள் ஏதும் உண்டாகவில்லை அதற்கு மாறாக எங்களது உடல் நிலை சற்று வளமாகவே மாறியது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு அந்த மருந்தை இரண்டு நோயாளிகளுக்குக் கொடுத்தோம். அவர்களுக்கு இருந்த வியாதி குணமானது.

சிறிது நாட்கள் சென்றன. வேறு இரு நோயளிைகளுக்கு அதே மருந்தைக் கொடுத்தோம். என்ன ஆயிற்று தெரியுமா? எந்த வித பலனும் இல்லை. இதைக் கண்ட நாங்கள், மறுபடியும் ஆராய்ச்சியைத் துவக்கினோம். எதனால் அந்த இருநோயாளிகளுக்கு அந்த மருந்தால் பலன் இல்லாமல் போயிற்று என்பதை அறிவதில் ஈடுபட்டோம்.

அந்த மருந்தில் சேர்ந்துள்ள ஒரு முக்கியமான மூலிகைக்கு, மார்ச்சு, ஏப்ரல், மே என்ற மூன்று மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் அந்த மருந்துக்கு வளமான சத்து அமைவதில்லை என்ற உண்மை தெரிந்தது. குறிப்பாக, நவம்பர் மாதத்தில் அந்த மருந்து தனக்குரிய மருந்துச் சக்தியையே இழந்து விடுகின்றது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.

ஆனால், சந்தன மரம்போன்ற சில குறிப்பிட்ட மரங்களுக்கு அருகே அந்த மூலிகைச் செடியை நட்டால், அளவிலும் - குணத்தி லும் மிக அதிகமான பலனை அது வழங்குகிறது என்பதையும் உணர்ந்தோம்.

அந்த மூலிகையை மண்ணிலே இருந்து பிடுங்கிய இருபத்தெட்டரை மணிநேரத்துக்குள் மருந்தைச் செய்து விட வேண்டும். இல்லை என்றால் அந்த மூலிகையிலிருந்த சத்து மறைந்து விடுகின்றது என்பதையும் அறிந்தோம்.

நாங்கள் இவ்வாறு செய்த ஆராய்ச்சிகளால், நீரிழிவு நோய்க்குரிய ஓர் அருமையான மருந்தைக் கண்டு பிடித்தோம். அந்த மருந்திற்கு 'டயடயடிக் தூள்' DIE-DIETIC POWDER என்று பெயரிட்டோம்.

அந்தப் பவுடரைப் பயன்படுத்தினால் 5 வாரத்திலிருந்து 6 மாதத்திற்குள் நீரிழிவு வியாதி முழுமையாகக் குணமாகி விடுகின்றது. உலகம் முழுவதுமுள்ள நீரிழிவு நோயாளர்கள், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், இந்தியா, சுவிட்சர்லாந்து, போன்ற நாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நீரிழிவு நோயாளர்கள் குணமடைந்துள்ளார்கள். அந்த நாடுகளில் எங்கள் மருந்துக்கு நல்ல வரவேற்பும் இருக்கின்றது.

வெட்டை எனும்
நோய்க்கு மருந்து!

நீரிழிவு நோய்க்கு நாங்கள் கண்டு பிடித்த முதல் சித்த மருந்து வெற்றியை ஈட்டியதால், அடுத்து வெட்டை LEUCORRHEA எனப்படும் நோய்க்கும் மருந்து கண்டு பிடிக்கும் மகிழச்சியிலே இறங்கினோம்.

இந்த வெட்டை நோய்க்காக, அதன் தன்மைகளை அறிந்திட, மூவாயிரம் வெட்டை நோயாளர்களைத் தேடிக் கண்டு பிடித்துச் சோதனையில் ஈடுபட்டோம். அந்த வியாதி உலகத்திலுள்ள பெண்களை எவ்வாறு பாதிக்கின்றது என்ற கணக்கு விகிதம் கிடைத்தது. அது இது:

ஜப்பான் 40 சதவிகிதம்
ஜெர்மன் 40 சதவிகிதம்
அமெரிக்கா 45 சதவிகிதம்
இங்கிலாந்து 48 சதவிகிதம்
இந்தியா 55 சதவிகிதம்

ஃபிரான்ஸ் 54 சதவிகிதம்
சீனா 60 சதவிகிதம்
ஜப்பான் 65 சதவிகிதம்
பர்மா 80 சதவிகிதம்

என்று உலக சுகாதார நிறுவனம் வெட்டை வியாதியைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஆனால், இந்த வெட்டை நோயைக் குணப்படுத்திட இங்லிஷ் மருந்து ஏதுமில்லை.

ஆனால், நாங்கள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு மருந்தை வெட்டை நோய்க்காகக் கண்டு பிடித்தோம். அந்த மருந்து நோயை முழுமையாகக் குணப்படுத்தி விட்டது. அதன் பெயர் 'லியோகோ டயட்டிக் உணவு', LEUCO DIETIC FOOD என்பதாகும்.

அந்த மருந்தை ஏழு நாட்கள் சாப்பிட்டால் போதும் நோய் உடனே முழு குணமாகின்றது. ஆனால், எச்சரிக்கையாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றுள்ளது. அதாவது, அந்த மருந்தை உட் கொள்ளும் போது வேறு எந்த நோயும் நோயாளி உடலிலே இருக்கக் கூடாது என்பது தான் அந்த ஒன்று.

நோய் இருக்குமென்றால் மருந்தை உட்கொள்ள வேண்டாம் என்பதே அந்த எச்சரிக்கை, மீறி யாராவது உட்கொண்டால் வரும் தீமைகளை அனுபவிக்க வேண்டியதுதான். வேறு வழியேதுமில்லை. இந்த வெட்டை நோய் சித்த மருந்தை உலகம் முழுவது முள்ள சிறந்த டாக்டர்கள் எல்லாருமே பரிசோதித்துப் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இவ்வாறு ஜி.டி.நாயுடு அவர்கள் மேற்கு ஜெர்மனி கழகத்தில் சொற்பொழிவாற்றினார்.

இந்த அருமையான சித்த வைத்திய மருத்துவமுறை பேச்சுக்கு, அந்த டாக்டர்கள் கழகத்தில் ஜி.டி.நாயுடுவுக்கு நல்ல பெயரும் புகழும், நீண்ட கையொலிகளும் கிடைத்தன.

சித்த வைத்திய
பேராசிரியர்!

மேற்கு நாடுகளுக்குச் சென்ற ஜி.டி.நாயுடு அவர்கள், மேற்கு ஜெர்மன் நாட்டின் ஸ்டார்ட் கார்ட் நகர டாக்டர்கள் - யூனியனில் மிகச் சிறப்பாகப் பேசிய இரண்டு பேச்சுக்களின் கருத்துக்களும் இரண்டு ஆண்டுகளிலே வெளிவந்தன.

திரு.நாயுடு டாக்டர் அல்லர் என்றாலும், அவரது சித்த மருத்துவத்தின் நீண்ட வரலாற்றுப் புகழையும், மூலிகை மருந்துகளின் அருமையான இயற்கைச் சக்திகளின் பெருமையையும் எடுத்துரைத்த அவரது சிந்தனைத் திறத்தைப் பத்திரிக்கைகளில் படித்த எல்லா மருந்துவக் கழகங்களும் அவரைப் பாராட்டின.

ஜி.டி.நாயுடு அவர்களது நீரிழிவு மருத்துவ மருந்தின் அற்புதத்தையும், வெட்டை நோய்க்குக் கண்டு பிடிக்கப்பட்ட மருந்தின் திறமைகளையும் கண்டு, ஐரோப்பிய மெடிகல் அமைப்பும்.அந்தந்த நாடுகளின் கிளைக் கழக அமைப்புகளும் திரு நாயுடுவை அந்த மேடையிலே சந்தித்து, மருந்துகளின் பயன்பாடுகளை மேலும் விவரமாகக் கேட்டு அறிந்துகொண்டது மட்டுமின்றி, அந்த மருந்துகளைத் தங்களது நாடுகளுக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டன.

சித்த வைத்தியப் பேராசிரியரான திரு.ஜி.டி.நாயுடு அவர்கள், நீரிழிவு, வெட்டை போன்ற வியாதிகளுக்குரிய மருந்துகளைக் கண்டுபிடித்ததோடு நில்லாமல், தனது நண்பர்கள் சகாக்களோடு மேலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, மூலம் நோய்க்கும் PILES, ருமாட்டிசம் எனப்படும் மூட்டுவலி,கால்வலி, இருமல் போன்ற நோய்களுக்கும் உரிய மருந்துகளைச் சித்தா முறைப்படி கண்டு பிடித்தார்கள். அந்த மருந்துகளை மற்ற நாடுகளும் பெற்று நன்மை எய்திட வேண்டும் என்று ஐரோப்பிய பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தி விற்பனைக்கும் அனுப்பினார்கள்.

தமிழ்நாடு சித்தவைத்தியக் கழகம் என்றோர் அமைப்பு காவை நகரில் இருந்தது. அந்த அமைப்பில் ஜி.டி.நாயுடுவும் ஓர் ஆறுப்பினராக இருந்தார்.

சித்த வைத்திய முறையில் திரு.ஜி.டி.நாயுடுவுக்கு இருந்திட்ட மருத்துவ புலமையைக் கண்ட கழகப் பொறுப்பாளர்கள், ஜி.டி.நாயுடுவை சித்த வைத்திய மாநாட்டிற்கு அழைத்து, கோவை நகர் மக்கள் சார்பாக,சித்த வைத்தியப் பேராசிரியர் என்ற பட்டத்தை வழங்கிப் போற்றி மகிழ்ந்தார்கள். அதனால், கோவை மண் நாயுடுவைப் பெற்றதால் முப்போகம் விளையும் பொன் பூமியாக புகழில் விளங்கியது.