நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/புனிதம் அடைந்தது

விக்கிமூலம் இலிருந்து

181. புனிதம் அடைந்தது!

மக்காவை முஸ்லிம்கள் வெற்றி கொண்ட பின்னர் புனிதத்தலமான கஃபாவும் விக்கிரங்களை அகற்றித் தூய்மைப் படுத்தப்பட்டு விட்டது. ஆனால், முஸ்லிம் அல்லாதவர்கள், ஹஜ் காலங்களில் கஃபாவுக்கு வந்து, தங்களுடைய பழமையான நாகரிகமற்ற சடங்குகளை நிறைவேற்றி வருவது மட்டும் நிற்கவில்லை. மேலும், அவர்கள் நிர்வாணமாக கஃபாவைச் சுற்றி வந்து, பாவகரமான பல செயல்களைச் செய்து கொண்டிருந்தார்கள்.

கஃபாவைத் தூய்மைப் படுத்தியதோடு, ஹஜ் சடங்குகளை ஹலரத் இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தில் இருந்தது போல் நடத்த வேண்டும் என்று பெருமானார் அவர்கள் எண்ணினார்கள். இவ்வருடம் முஸ்லிம்களில் முந்நூறு பேரை, பெருமானார் அவர்கள் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்கு அனுப்பினார்கள்.

அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களை ஹஜ் யாத்திரைக் குழுவுக்குத் தலைவராக நியமித்தார்கள்.

மக்காவில் வந்து கூடுகின்ற மக்களுக்கு இஸ்லாமிய நெறிமுறைகளைப் போதிப்பதற்காக, அலி (ரலி) அவர்களையும் பெருமானார் அவர்கள் அனுப்பியதோடு, இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காகவும் சிலரை அனுப்பி வைத்தார்கள்.