நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/மதீனாவில் வரவேற்பு

விக்கிமூலம் இலிருந்து

60. மதீனாவில் வரவேற்பு

மதீனா வாழ் மக்கள் அனைவரும், பெருமானார் அவர்களின் வருகையை முன்னமேயே அறிந்து, ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மக்களின் ஆனந்த வெள்ளம் கரை புரண்டு ஓடிற்று. அனைவரும் மகிழ்ச்சியோடு சென்று, பெருமானார் அவர்களை வரவேற்றனர்.

தங்கள் இல்லத்தில் தங்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் பெருமானார் அவர்களை வேண்டிக் கொண்டனர்.

அவர்களுடைய வேண்டுகோளை மறுப்பதால், அவர்கள் மனம் வருந்தக் கூடாது என்று கருதிய பெருமானார் அவர்கள் ஒட்டகத்தின் கழுத்தில் கயிற்றைப் போட்டு, அதைத் தன்னிச்சையாகப் போக விட்டு, “அது எங்கே போய் நிற்குமோ, அதுவே நான் தங்கும் இடமாகும்” என்றார்கள்.

அபூ அய்யூப் என்பவர் வீட்டின் முன்னே போய் நின்றது ஒட்டகம்! அபூ அய்யூப் அளவற்ற மகிழ்ச்சியோடு, பெருமானார் அவர்களின் சாமான்களை எல்லாம் எடுத்துச் சென்று வீட்டிற்குள் வைத்தார்.

பெருமானார் அவர்களை உற்சாகத்தோடும், பணிவோடும் வரவேற்று, உபசரித்துத் தம் வீட்டின் மாடியில் தங்கும்படி கேட்டுக் கொண்டார் அபூ அய்யூப்.

பெருமானார் அவர்கள், பலரும் வந்து தம்மைக் காண்பதற்கு வசதியாக, கீழ்த்தளத்தில் இருப்பதையே விரும்பி, தங்கினார்கள்.

அபூ அய்யூப் குடும்பத்தினர், பெருமானார் அவர்களை மிகவும் கண்ணுங் கருத்துமாகக் கவனித்து, உணவு அளித்து பெருமானார் அவர்கள் உண்ட பின் மீந்ததையே உண்டனர்.

பின்னர், பெருமானார் ஸைதையும், அபூக்கர் அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்வையும் மக்காவுக்கு அனுப்பித் தங்கள் குடும்பத்தினரை அழைத்து வருமாறு செய்தார்கள்.