நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ. E. கிருஷ்ணய்யர் அவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீ. E. கிருஷ்ணய்யர் அவர்கள்

இவர் திருநெல்வேலியில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். அங்கு ஆரம்பக் கல்விகளையெல்லாம் கற்று பிறகு சென்னைக்கு வந்து பி.ஏ.பி.எல், பட்டத்தைப் பெற்று ஹைகோர்ட் வக்கீலானார், அச்சமயத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்து அதன் கோட்பாடுகளைப் பற்றியவராய் அரசியலாரை எதிர்த்ததற்காக இரண்டு முறை சிறைவாசப் பெருமைப் பெற்றார். அச்சமயத்தில் ஒருமுறை ஒரு குற்றத்திற்காக முக்கிய மாகாண மாஜிஸ்டிரேட்டு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தப்பட்ட போது 'உனக்கு என்ன வேலை' என்று அவர் கேட்டதற்கு "என் மனதின் இச்சைப்படி கலைஞன் வேலை, ஆயினும் கட்டாயப்படி ஹைகோர்ட் வக்கீலாயிருக்கிறேன்” என்று பதில் உரைத்தாராம். அதன் படியே சில வருடங்கள் வக்கீலாக வேலை பார்த்த போதிலும் அவர் மனமானது நாடக நாட்டிய கலை மீதே சென்றது என்று கூறவேண்டும். இளவயதிலேயே இவருக்கு சங்கீதத்தில் பிரியமிருந்ததாம். ஆகவே சென்னையில் சுகுண விலாச சபையில் 1923-இல் அங்கத்தினரானார். அதில் ஒன்றிரண்டு சில்லரை வேடங்களை முதலில் தரித்த பிறகு மாள விகாக்னி மித்ரத்தில் இவருக்கு மாளவிகை என்னும் அயன் ஸ்திரீ பார்ட் கொடுக்கப்பட்டது. அதற்காக கின்சின் நாட்டியம் முதலிய சிறு கலைகளை கற்று அதில் நடித்தார். அதைக் கண்ட பலர் அதை மெச்சிப் பேசினார்கள், அதன் மூலமாக நாட்டியக் கலையை நன்றாய் கற்கவேண்டு மென்று இவருக்கு புத்தி பிறந்து அதை கற்க ஆரம்பித்தார். ஒரு சமயம் இவர் அக்கலையை பயின்ற போது இவரை பார்த்த நாட்டியக்கலை வித்வான்களில் சிறந்தவராகிய நடேசஐயர் அவர்கள் இவரைக் கொஞ்சம் மெச்சி இவருக்கு அக்கலையிலுள்ள ஆர்வத்தையும் அதற்கு தகுந்தபடியான அங்க அமைப்பையும் கண்டு இவரை தன் சிஷ்யர்களுள் ஒருவராக்கிக் கொண்டு பரத நாட்டியக் கலையை களங்கமறக் கற்பித்தார் அதில் தேர்ச்சி அடைந்த பிறகு சுகுண விலாச சபையிலும் செக்ரடேரியட் பார்ட்டியிலும் இன்னும் சென்னை மாகாணத்திலிருந்த சில நாடக சபைகளிலும் நாட்டியமாடி நல்ல பெயர் பெற்றார். இவரது ஒரு முக்கியமான மெச்சத் தக்க குணம் என்ன வென்றால் நாட்டியம் ஆட ஆரம்பிக்குமுன் அதைக் குறித்து அதன் பெருமையை பத்து பதினைந்து நிமிடங்கள் பேசிவிட்டு பிறகு தான் அக் கலையை ஆட ஆரம்பிப்பார். இப்படி பல இடங்களில் பிரசாரம் செய்து குலஸ்திரீகளும் இதைக் கற்கலாம் என்று ஒரு கோட்பாட்டைப் பரவச் செய்தார். உலகெங்கும் புகழ் பெற்ற நாட்டியக் கலை நிபுணராகிய ராம் கோபால் என்பவரை பரத நாட்டியம் கற்கும்படி செய்தார். ஒருமுறை வட இந்தியாவிற்கு போயிருந்த போது ரவீந்திர நாத் தாகூர் என்பவர் இவரது நாட்டியக்கலையை பார்த்து புகழ்ந்ததாக கேள்விப்படுகிறேன்.

இவர் சுகுண விலாச சபையில் என்னுடன் நான் வத்ச ராஜனாக நடித்த போது அவ்வரசனது மூத்த மனைவியாகிய வாசவதத்தை பாகத்தில் மிகவும் நன்றாய் நடித்தது எனக்கு ஞாபக மிருக்கிறது அன்றியும் சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். இவர் ஒரு முறை சென்னையில் கீசகவதம் அல்லது விராடபர்வம் என்னும் பாரதக் கதையை பேசும் படமாக எடுத்தபோது அதில் பேடியாயிருந்த அர்ஜுனன் பாத்திரத்தை மேற்பூண்டு மிகவும் நன்றாய் நடித்து புகழ் பெற்றிருக்கிறார். அந்த படத்தில் முக்கிய ஸ்திரீ வேடம் பூண்டு நடித்த இரண்டு நடிகைகளை விட இவர் உருவமும் நடையுடை பாவனைகளும் அதிக நன்றாயிருந்தன வென்று பலர் கூறக் கேட்டிருக்கிறேன். தற்காலம் இவர் கோரியபடியே சென்னை சங்கீத நாடக சங்கத்தில் காரியதரிசியாக நியமிக்கப்பட்டு அதன் வேலைக்காக உழைத்து வருகிறார். சுவாமி இன்னும் அவரை அந்த வேலையிலேயே தமிழ் நாடக நாட்டியக் கலைகளுக்கு பல வருடங்கள் உழைக்கும் படியாக பரம் பொருள் அருள்வாராக.