நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீ S. சத்தியமூர்த்தி

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீ S. சத்தியமூர்த்தி

இவரை அறியாத அரசியல் கட்சிக்காரர்கள் இந்தியாவிலேயே இல்லை எனச் சொல்லலாம். ஆயினும் இவர் நடிப்புக் கலையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பது பலருக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே இவரைப்பற்றி நான் இங்கு சற்று விவரமாய் எழுத விரும்புகிறேன். இவர் காலேஜ் படித்தவுடன் எங்கள் சுகுணவிலாச சபையில் அங்கத்தினராக சேர்ந்தார். அவரே எனக்கு பன் முறை கூறியபடி நான் தான் அவருக்கு முதல் சிநேகிதனாயிருந்தேன். புதிய மெம்பர்கள் யாராவது சேர்ந்தால் உங்களுக்கு நாடகமாடுவதில் விருப்பமிருக்கிறதா? என்று கேட்பது என் வழக்கம். அதன்படியே இவரை நான் கேட்டபோது 'ஆம்' என ஒப்புக் கொண்டார். அதன் பிறகு முதலில் தமிழில் சிறு பாத்திரங்களை கொடுத்துப் பழக்கி வந்தேன். முதலில் மிகவும் கூச்சமுள்ளவராயிருந்தபோதிலும் சீக்கிரம் அக்கூச்சம்போய் உற்சாகத்துடன் கற்றுவந்தார். பிறகு வரவர பெரிய பாத்திரங்களை கொடுக்கலானேன். இவரை ஒரு தைர்யமுள்ள நடிகர் என்றே கூறவேண்டும். இவர் சேர்ந்த சமயம் சம்ஸ்கிருத பிரிவு ஒன்று எங்கள் சபையில் ஆரம்பிக்கப்பட்டது. இவர் சம்ஸ்கிருத்தில் மிகுந்த ஆர்வமுடையவர். எங்கள் சபை போட்ட ஒவ்வொரு சம்ஸ்கிருத நாடகத்திலும் பாகம் எடுத்துக்கொண்டு வந்தார். இவர் முக்கியமாக நடித்த சம்ஸ்கிருத பாத்திரங்கள் மிருச்சகடி என்னும் நாடகத்தில் கதா நாயகனுடைய நண்பனாகிய வேடம் ஒன்று. இரண்டாவதாக வேணி சம்ஹாரத்தில் அஸ்வத்தாமனாக நடித்ததாகும். இவர் இரண்டொரு வருஷம் சம்ஸ்கிருத கண்டக்டராக இருந்தார். நான் சுமார் 25 வருஷம் தமிழ் கண்டக்டராக உழைத்த பிறகு அதனின்றும் விலகியபோது எனக்குப் பிறகு தமிழ் கண்டக்டராக நியமிக்கப்பட்ட பலருள் இவரும் ஒருவர். அச்சமயம் ஒரு முறை என்னிடம் வந்து "நான் மனோகரனாக நடிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்” என்று கூற, "அப்படியே செய்யுங்கள் அதற்கென்ன தடை" என்று சொன்னேன். இதைப்பற்றி கொஞ்சம் விவரிக்க வேண்டியவனாயிருக்கிறேன். அக்காலத்தில் நான் முக்கியமாய் நடித்த கதா நாயகர்களின் பாகத்தை மற்றவர்கள் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லையென்று பலர் எண்ணியது எனக்குத் தெரியும், அந்த எண்ணப்படியே இவரும் மனோகரன் வேடத்தை தான் நடிக்க விரும்பினால் நான் என்ன பதில் சொல்கிறேன் என்று கேட்க இச்சைப்பட்டவராய் கேட்டனர் போலும். பிறகு பல ஒத்திகைகளில்தான் நடித்துவந்தார்: அவைகளை என்னை பார்க்கும்படி கேட்கவில்லை. கேட்காதிருக்கும்போது நாமேன் தலை நுழைத்துக் கொள்ளவேண்டுமென்று நானும் சும்மாயிருந்துவிட்டேன். ஒருநாள் இவர் ஒத்திகையை முடித்துவிட்டு திடீரென்று என்னிடம் வந்து "மிஸ்டர் சம்பந்தம் நான் மனோகரனாக நடிப்பது சரியாயில்லை என்று மற்ற நடிகர்கள் கூறுகிறர்கள். ஆகவே அதனின்றும் தான் விலகிக் கொள்கிறேன். நீங்களே அப்பாத்திரத்தை எடுத்துக்கொண்டு நாடக தினத்தில் நடியுங்கள்" என்று சொல்ல நான் கொஞ்சம் ஆச்சரியப்பட்டவனாய் "யார் உனக்கு அப்படி சொன்னது? நான் உன்னை மனோகரனாக நன்றாய் நடிக்கும்படி செய்கிறேன் பார் நீ பயப்படாதே" என்று தட்டிக் கொடுத்து அன்று முதல் நாலைந்து ஒத்திகைகளில் இவரை நன்றாய்த் தேற்றுவித்தேன், அப்போது இவர் மிகவும் சந்தோஷப்பட்டார், பல நடிகர்கள் ஆச்சரியப்பட்டனர். "ஆயினும் சம்பந்தம் இவ்வளவு நீங்கள் செய்தது பெரிதல்ல. நாடக தினம் மேடையின்மீது பக்கப் படுதாவில் நின்றுக் கொண்டு என்னை உற்சாகப் படுத்திக் கொண்டு வந்தால் தான் நான் நன்றாய் நடிக்க முடியும்" என்று வற்புறுத்தினார். அதற்கும் நான் இசைந்து அப்படியே செய்தேன் நாடக தினத்தில் அப் பாத்திரத்தை சற்றேறக்குறைய நடித்தார் என்றே நான் சொல்ல வேண்டும். அது முதல் இவர் எனக்கு ஆப்த நண்பராக மாறினார். இது நடந்த சில மாதங்களுக்கெல்லாம் காங்கிரஸ் சபை பண்டுக்காக அல்லது ஏதோ ஒரு தர்ம பண்டிற்காக (எனக்கு நன்றாய் ஞாபகமில்லை) தான் மனோகரா நாடகத்தில் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய்தார். அது எனக்குத் தெரியாது. அச்சமயம் நான் சென்னையை விட்டு வெளியூர் போயிருந்தேன். நான் திரும்பி வந்துபோது எப்படியிருந்தது என்று நாடகத்தைப்பற்றி என் நண்பர்களை விசாரித்தபோது அவர்கள் ஆரம்பத்தில் நன்றாய் தானிருந்தது, மனோகரன் சங்கிலியறுக்கும் காட்சியில் (இதுதான் நாடகத்தின் ஒரு முக்கியமான காட்சி) ஏதோ தடைப்பட்டு கத்தியும் கையுமாய் நின்று விட்டார் திரைவிடப்பட்டது" என்று கூறினார்கள். அதற்கப்புறம் சத்தியமூர்த்தி அவர்கள் எந்த தமிழ் நாடகத் திலும் நடித்ததாக எனக்கு ஞாபகமில்லை.

எனது நண்பர் சுகுண விலாச சபையைப்பற்றி ஏளனமான பேச ஒருவருக்கும் இடம் கொடுக்கமாட்டார். அந்த சபை தனக்கு தமிழில் நன்றாக சொற்பொழிவு செய்ய கற்பித்தது என்று பன்முறை கூறியதுண்டு. என்னிடமும் அவ்வாறே கூறியுள்ளார். இவர் நடுவயதிலேயே கால கதியடைந்தது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு மாத்திரமல்ல, எங்கள் சபைக்கும் பெரிய துரதிர்ஷ்டமாகும்.