கண்ணகி
187
“செம்பொற் சிலம்பு ஒன்று
கையேந்தி நம் பொருட்டால்
வம்பப் பெருந்தெய்வம் வந்தது இதுவென் கொல்”
என்று அவள் தெய்வத் தன்மையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
சேரன் செங்குட்டுவன் மனைவி அவள்தான் இவளை நன்கு அறிந்தவளாகக் காட்டிக் கொள்கிறாள்.
“அத்திறம் நிற்க நம் அகல் நாடு அடைந்த இப்பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று கூறியவள் சேரமா தேவிதான்; மாதரார் தொழுது ஏத்தும் நிலையை இங்குக் காண முடிகிறது.
எனவே கண்ணகி கற்புடைத் தெய்வம்” என்று அடிகள் கூறியது செயலுக்கு வந்து சேர்கிறது. சேர நாட்டில் அவளுக்குக் கோயில் அமைக்கப்படுகிறது. உலகிற்கு ஓங்கிய திருமாமணியாகிறாள்.
அடுத்தது அவள் கற்பின் திறம்; இதைச் சித்திரிப்பதே காவியத்தின் பொருள் ஆகிறது.
“வடமீனின் திறம் இவள் திறம்” என்று மாதரார் தொழுது ஏத்துகின்றனர். மணமேடையில் கண்ணகியைத் தீ வலம் செய்விக்கிறான் கோவலன். அங்கே “சாலி ஒரு மீன் தகையாள் என்று அவள் தொடர்ந்து குறிப்பிடப்படுகிறாள்.
மீண்டும் அதே செய்தியை வற்புறுத்தக் காண்கிறோம்.
“அங்கண் உலகில் அருந்ததி அன்னாளை
மங்கல நல்லமளி ஏற்றினார்”
என்று கூறுவார் ஆசிரியர்.