பக்கம்:சிலம்பின் கதை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

189



வாயால் வெளிப்படுத்துகிறாள். இது அவள் தன் ஆற்றலை அறிந்து செயல்படும் திறனாகிறது.

வசதி மிக்க வாழ்க்கையைவிட்டு அசதிமிக்க வழிப் பயணத்தை மேற்கொண்டதை வியக்கின்றான். அவள் நற்குணத்தை அவன் அறிந்து கூறுகிறான்.

“குடிமுதற் சுற்றமும் குற்றிளையோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணையாக
என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங்கோதாய்”

என்று அவள் செயலைக் கூறுகிறான்.

அவள் கற்பின் திறத்தைத் தொடர்ந்து எடுத்துக் கூறுகிறான்.

“நாணின் பாவாய் நீணில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி”

என்று அவள் திறத்தைக் கூறுகிறான்.

இனி மூன்றாவதாக அவளை இளங்கோவடிகள் அறிமுகப்படுத்தும் போது கூறிய செய்தி அவள் “பெருங் குணத்துக் காதலாள்” என்பது அவள் அருங்குணங்களுள் சில எடுத்துக் கூற முடிகிறது.

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

என்பர் வள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/190&oldid=936511" இலிருந்து மீள்விக்கப்பட்டது