பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250 அகத்தினனக் கொள்கைகள்


தமிழகம் இயற்கையாகவே கடல் சூழ்ந்திருத்தலின் தமிழர்கள் தொன்று தொட்டே கடல் வணிகர்களாகத் திகழ்ந்தனர். சிலப்பதிகாரமும் பட்டினப்பாலையும் கடல் வாணிகத்தைக் குறிப் பிடுகின்றன. கண்ணகியின் தந்தை மாநாய்கனைக் கடல் வாணிகன் எனவும், கோவலனது தமப்பன் மாசாத்துவானை நில வணிகன் எனவும் கருதலாம். 'தமிழகம் கடலகமாக இருந்தும், தமிழர்கள் கடலர்களாக இருந்தும் வருணன்மேயபெருமனலுலகம். என்று தொல்காப்பியம் கடற்றிணை (நெய்தற்றிணை) வகுத்திருந் தும், அகத்திணையியலின்கண் முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை எனக் காதலனது கடற்செலவை நூற்பித்திருந்துப் ஏனோ சங்கச் சான்றோர்கள் பாலைத்திணையில் நீர்வழிப் பிரிவுகளைப் பாடிற்றிலர். அப்பிரிவுக்கு ஆற்றாத தலைவியர் தம் இரங்கல்களை நெய்தற்றிணையிலும், கடல்வினை முற்றிய தலைவர் தம் வரவு களை முல்லைத் திணையிலும், அவ்வழிப் புணர்ச்சிகளைக் குறிஞ்சித் திணையிலும் தொடர்ந்து பாடிற்றிலர். இற்றைச் சங்க விலக்கியத்து வரும் பாலைத்திணைச் செய்யுட்களும் பிற திணைச் செய்யுட்களும் எல்லாம் நிலவழிப் பிரிவுகளையும் வரவுகளையும் புணர்வுகளையுமே கூறுவன. அகத்திணை என்பது ஒரு பால் நிலத் திணையாகவே உள்ளது. நிர்த்திணை மேலும் அகத்திணைப் பாடல்கள் பாடவேண்டும், பாடியிருத்தல் வேண்டும். சங்கப் புலவோர் நீரகப்பாடல்களை யாக்கத் தவறிவிட்டனர்; தமிழ் மன்பதையின் கடல் வாழ்க்கைமேல் காதற் கவிதை புனையா தொழிந்தனர்'4

   ஆயினும், அத்தி பூத்தமாதிரி ஒரே ஒரு நீர்வழிப் பாடல் சங்கக் கடலில் காணப்பெறுகின்றது. அகப்பாடல்கள் எழுபத்து நான்கினை யாத்த மருதன் இளநாகனார் என்றப்புலவர் தலைவன்தன் நாவாய்ச் செலவையும் அப்பிரிவுக்குத் தலைவியின் ஆற்றா மையையும் பொருளாகக்கொண்டு ஒரு பாடல் இயற்றியுள்ளார். இவர் பாடிய பாலைப் பாடல்:

 உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் அசைவின்றாகி நீரிடைப் போழ
 இரவும் எல்லையும் அசைவின் றாகி
  விரைசெல்ல் இயற்கை வங்கூழ் ஆட்டக்

 _____________

4. தமிழ்க் காதல் - பக் 184