பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் கொள்கைகள்

4. தலைவியின் இளமைக்கு ஒவ்வாது ஆடவன் மிக முதிர்ந்திருத்தல். 5. இளமைக் காலம் கழிந்து முதிர்ந்த பருவத்தில் இருவரும் துறவு கொள்ளலே மேற்கொள்ளவேண்டிய நெறி; அதனை விட்டு இருவரும் காமம் நுகர்தல். 6. தேறுதல் அடையப்பெறாது அறிவழிக்கும் கழிகாமம் கொள்ளுதல். 7. கங்குகரையின்றி காமத்தால் தூண்டப்பெற்று விரும்பாத வரையும் வலிதிற்புணர்ந்து இன்பம் நுகர்தல்.

இத்தகைய பொருள் வேறுபாட்டிற்குக் காரணம் ஐந்திணை, கைக்கிளை, பெருந்திணை என்ற மூன்றிற்கும் கொண்ட தவறான பொருளேயாகும் ஐந்திணையாவது ஒத்த அன்பால் உண்டாகும் இன்ப ஒழுக்கங்கள் எனவும், கைக்கிளையாவது ஒருபக்க அன்பால் உண்டாகும் தாழ்ந்த இன்ப ஒழுக்கம் எனவும், பெருந்திணை யாவது ஏற்றத்தாழ்வான இருபக்க அன்பால் உண்டாகும் மற்றொரு வகையான தாழ்ந்த இன்ப ஒழுக்கம் எனவும் உரைப்பர் இளவழகனார். அதன் பின்னர் பெருந்திணையின் தாழ்வுபற்றி அவர் தரும் விளக்கம்; முதலில் மடலேறுவேன் என்று தலைவன் சொல்லிப் பார்ப்பான். அதற்குத் தலைவியைச் சார்ந்தோர் இசையாவிடில் தலைவன் மடலேறவேண்டிய கட்டாயத்துக்கு வர நேரும். அப்போது தலைவியின் அன்பைவிடத் தலைவனின் அன்பு மிக்க உச்ச நிலையை எய்தும். மடலேறும் நிகழ்ச்சி வெறும் பேச்சு முறையில் இல்லாமல் இங்ஙனம் செயல் முறையில் வரும்போது தலைவனின் அன்புக்கும் தலைவியின் அன்புக்கும் ஏற்றத் தாழ்வு காணப்படும். இனித் தலைவன் இளமை நீங்கிய முதியோனாயிருந்து தலைவி. இளையவளாக இருந்தாலும், தலைவி மூத்தோளாயிருந்து தலைவன் இளைஞனாயிருந்தாலும் அல்லது இருவரும் இளமை நீங்கிய முதுமைப் பருவத்தர்களாயிருந்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஏற்றத் தாழ்வான அன்புள்ளவர்களாகவே இருப்பர். தலைவன் தலைவியர் இருவருள் ஒருவர் தெளிவிழந்து போன மிகுகாம நிலையில் உள்ளவராயிருந்தாலும் அவர்தம் அன்பு ஏற்றத் தாழ்வாகவே இருக்கும். இனி, மிக்க காமநிலையில் ஒருவரையொருவர் வற்புறுத்தி நிற்கும்போதும் அவர்கள் அன்பு ஏற்றத் தாழ்வாயிருக்கும் என்பது சொல்லாமலே பெறப்படும்."2

2. அகத்திணையியல்-விளக்கம்.பக் 132-4,