பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளுறை உவமம் - 483

-----------------------------------------------------------------------------

இவ்வுள்ளுறை உவமத்தைத் தொல்காப்பியரும் அகத்திணையில் வைத்து ஒதுவாராயினர் என்பதனையும் நாம் அறிதல் வேண்டும்.35

              உவமைதான் எல்லா அணிகளிலும் எளிமையானது; ஏனைய அணிகட்குத் தாய் போன்றது. இத்தகை உவமையினின்றும் தோன்றிய உள்ளுறை உவமம் பட்டை தீட்டப்பெற்ற வயிரம் போன்றது; கவிஞனின் கூர்த்த மதியினை ஒளிவிட்டுக் காட்டி நிற்கும் பான்மையது. கவிஞர்கள் தாம் கூற வேண்டிய ஒன்றிற்கு விளக்கம் தர வேண்டியும், அப்பொருளினிடத்து உள்ளே அமைந்து கிடக்கும் ஒர் இயல்பையோ பல இயல்புகளையோ எடுத்துக்காட்ட வேண்டியும் உவமையைக் கையாளுகின்றனர். இவ்வாறு சாதாரணக் கவிஞர்களிடம் சிறந்தக் கவிதைக் கருவியாக இலங்கும் உவமை கூறும் இயல்பு தமிழ்க் கவிஞர்களிடம்-சிறப்பாகச் சங்கக் கவிஞர்களிடம்-சிறந்த முறையில் பண்பட்டுக் கிடந்தது. அந்த இயல்பை அவர்கள் சிறந்த முறையில் வார்த்து நயம்படக் கூறும் உள்ளுறை உவமைகளை அமைத்துப் பாடல்களை ஆக்கினர். உள்ளுறை அமைந்த பாடல்கள் சங்கத் தமிழின் இணையற்ற மணிகள். அவை பயில்வார் நாவில் தேன் சுரக்கச் செய்து அவர் கட்குப் புலமை வளத்தையும் நல்கிக் கன்னித் தமிழின் எழிலைப் பாரெங்கும் காட்டும் ஆற்றல் பெற்றுத் திகழ்கின்றன. இத்தகைய சங்கத் தமிழ்ப் பாடல்களைச் சுவையறிந்து படித்துப் பயன் பெறுவது இன்றைய தமிழ் மக்களின் கடமை.
              
              
              
-------------------------------------------------------------------------              

35. அகத்திணை - (49-51) (இளம்)