பக்கம்:அகத்திய முனிவர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பிறப்பு. 3

ரது உண்மைக்கும் மிக நெருங்கிய உரிமையுள்ளது. ஒருமுறை இவ்வுலகினை இனிது நோக்கி ஒளவையார் கூறிய அருமைப்பாடல் ஒன்று இதனடியில் வருகின்றது. அதன் பொருளை ஆய்ந்துகாண்க.

"நாடா கொன்றோ காடா கொன்றோ 
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே."      (புறம்.

அவல் = பள்ளம். மிசை = மேடு. வழி = இடம்.

ஓ நிலமே! நீ நாடாயிருந்தாலும், அல்லது காடாயிருந்தாலும், பள்ளமாயிருந்தாலும், மேடா யிருந்தாலும், எவ்விடத்து நல்லவர்கள் உளரோ அவ்விடத்து நீ நல்லையா யுள்ளாய்; இல்லையாயின் நீ அங்ஙனம் இல்லையாகின்றாய்; இதில் உனக்குத் தனிமாண்பு யாது உளது? என்று அக் கல்விச்செல்வி நல்ல நயனோடு மிக விநயமாக வினவி இவ்வுலக நிலையை உணர்த்தியிருக்கும் அழகை இதில் ஊன்றி யுணர்க. மேலோரோடு இஞ்ஞாலத்திற்கு உள்ள உரிமை இதனால் இனிதறியலாகும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்று நூல்களெல்லாம் உரைத்துநிற்றற்கு அவரது சால்புடைமையே சான்றாய் நிற்கின்றது. நன்மக்களில்லாமல் புன்மக்கள் மட்டும் மலிந்திருப்பராயின் களையடர்ந்த காடுபோல் இவ்வுலகம் பொலிவிழந்து இழிவுறுவதாகும். 'நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என ஆசிரியர் தொல்காப்பியனார் வரம்பு செய்துணர்த்தி யுள்ள இஞ்ஞாலம், அறிவதறிந்து ஐந்தடங்கி நெறிநின் றொழுகும் சிறந்த மக்களால் விளங்கி யுள்ளமையால் இதற்கு உயிரென அவர் அமைந்து நிற்கின்றார்.