பக்கம்:அகத்திய முனிவர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பு.

வந்த தெய்வ நிலையினர். பொய்யறவொழுகிய மெய்யறி வாளர். மன்னுயிர்க்கெல்லாம் இன்னருள்செய்து எண்ணரிய நலங்களை யெங்கும் பரப்பிப் புண்ணிய நீரராய் நின்ற புனித வுருவினர். இம்முனிவர் குலதிலகத்தை மனமொழி மெய்களால் நினைந்து போற்றி வணங்கி வாழ்ந்த மாதவர் பலர்; மன்னவர் பலர்; வானவரும் பலர்; தானவரும் பலர்; முன்னிருந்தோர்க்கும் பின்வருவோர்க்கும் தவநிலைக்கு இவர் ஓர் தனி நிலையாயுள்ளார்.

    இந் நிலவுலகில் நிலவிவாழும் உயிர்களெல்லாம் என்றும் நன்றியறிவோடு நின்று போற்றுதற்கு உரியார் யார்? என்று தமக்குள்ளேயே ஒருவரை யொருவர் முனிவர்கள் ஒருமுறை வினவியபோது அவர், அகத்தியரே யாவர் என அறிவுடையாரைனவரும் ஒருமுகமாக உவந்து கூறினார். அங்ஙனம் கூறினாரை எதிர்ந்துநோக்கி என்ன எதுவால் இன்ன மேன்மை அன்னவர்க்கு எய்தியது? இவ்வுண்மைக்கு ஏதேனும் உறுதியான சான்று உள்ளதா? எனச் சிலர் துணிந்து கேட்டார். அதற்கு அவர், வேறொன்றுங் கூறாமல் வானும் கடலும் வையமும் மலையும் சான்றுகளாக வுள்ளன என்று மிக விநயமாக இனிது பதிலளித்தார்.
    நமக்குத் தாயகமாயுள்ள இப்பூவலயத்தை நிலை குலையாது நிறுத்தி, இடர்களைந்து, பலவகை வளங்களையும் நிலை பெறச்செய்து, நலமுறவைத்த இவரது தலைமையை அவரது உரையால் உய்த்துணர்ந்து உள்ளந்தெளிந்து அவரனைவரும் பின்பு உவந்துபோற்றினார். ஆருயிர்கள் இன்புற அருளுரு வாகிவந்த அண்ணல் என இவரை அமரரும் அன்புமீக்கூர் ந்து துதித்தார். இவர் ஓதி உணர்த்தி ஒழுகிக் காட்டிய அருளற நெறிகள் உயிர்களுக்கு என்றும் இனிய உயர் நிலை