பக்கம்:அகத்திய முனிவர்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறப்பு.

வற்றையெல்லாம் நம்மனோரது பிறப்பு முறையோடு ஒற்றித்து நோக்குதல் பெரும்பிழையே யாகும். ஏனெனில் அந் நோக்கு நம்மைப் புன்மையில் போக்கி விடுகின்றது. அதனாலேதான் நதி மூலத்தையும், முனி மூலத்தையும் முனைந்து காணலாகாதென மூதறிவாளர் புனைந்து கூறியுள்ளார். கண்டால் தம் நிலைமைக்கேற்றவாறு சில நிலைகளை மலைவாகக் காணநேரும்; அதனால் மனங் கோணலாம்; ஆகவே அவரது சிறப்பு நலங்களை மதியாது சிறுமையுறவரும். அங்ஙனம் வந்தவரை நோக்கித்தான் கபிலர் ஒருமுறை சிந்தை நொந்து

    'சிறப்பும் சீலமும் அல்லது
     பிறப்பு நலம் தருமோ? பேதையீரே!'

என்று ஓதி யுணர்த்தினார். கன்னனது பிறப்பு நிலையைக் குறித்துக் கிருபாசாரியார் ஒருமுறை சிறிது இகழ்ந்து கூறிய பொழுது துரியோதனன் பெரிதும் சினந்து 'பெரியாரது பிறப்பின் பெற்றியை யார்காணும் காணவல்லார்? அவர் தம் அருமையறிந்து போற்றாமல் சிறுமைகண்டு தூற்றுதல் அறிவிலிகள் சேயலேயாம்,' என்று விரைத் தெழுந்து அவையிலிருந்தவ ரெல்லாரும் வியந்துகொள்ளும்படி முழங்கி நின்றான். அன்று அவன் முழங்கி மொழிந்ததை அடியில்வரும் பாடலால் இனிது காணலாம்.

    'அரிபிறந்த தன்று தூணில்; அரனும வேயிலாயினான்;
     பரவையுண்ட முனியும், இப்பரத்துவாசன் மைந்தனும்
     ஒருவயின்கண் முன்பிறந்தது; ஒண்சரத்தி னல்லவோ
    அரியவென்றி முருகவேளும், அடிகளும் பிறந்ததே?       (1)

கற்றவர்க்கும், நலனிறைந்த கன்னியர்க்கும், வண்மைகை உற்றவர்க்கும், வீரரென் றுயர்ந்தவர்க்கும், வாழ்வுடைக்