பக்கம்:அகத்திய முனிவர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                           அகத்திய முனிவர்.


யோடு பல மங்கலகலசங்கள் சூழ வைக்கப்பட் டிருந்தன. முன்னிய வேள்வி முறையே முற்றி இனிது முடிவுற்ற போது அவற்றுள் முதன்மையாயிருந்த கும்பத்திலிருந்து ஒர் செம்பொற்சோதி வெளியே திகழ்ந்து தோன்றியது. அங்கிருந்தவர் யாவரும் அதனைக்கண்டு வியந்தனர். அது பொழுது எங்கனும் இன்பம் இசைந்து பரந்தது. மங் கலக்குறிகள் பல பொங்கி மலிந்தன. எல்லா ருள்ளங்களிலும் நல்ல உணர்ச்சிகள் துள்ளி யெழுந்தன.

    'போதன் பண்டுசெய் புனிதநல் வேள்விவாயமைந்த
     சீதமங்கலச் செழும்பசுங் கும்பத்திற் சிறந்த
     மாதவந்திரண் டெழுந்ததென் றேவரும் மகிழச்
     சோதியாய் ஒரு வுருவந்து தோன்றிய தம்மா (1)'
     'தேவருள்ளமும், சித்தர்கள் உள்ளமும், சிறந்த
      மூவருள்ளமும், முனிவர்க ளுள்ளமும், மும்மைப்
      பூவிலுள்ளபல் லுயிர்களும், புந்தியுள் இன்பம்
      மேவிநின்றன; அவ்வுரு மேவிய பொழுதே.' (2)
    அங்ஙனம் மேவிவந்த அவ் இனிய ஒளிப்பிழம்பே பின்பு இம் முனிவடிவாய் அமைந்து மிளிர்ந்து நின்றது. மங் கல கும்பத்திலிருந்து தோன்றிய காரணத்தால் இவர் கும்ப முனி எனப் பெற்றார். அவ்வடிவம் குறுகி யிருந்தமை யால் குறுமுனி எனவும் இவர் கூறநின்றார். ஆயின் இவர் க்கு வெளிப்படை யாகவும் சிறப்பாகவும் வழங்கி வருகிற அகத்தியன் யென்னும் பெயர்க்குக்காரணம் யாதோ? எனின, அதற்குக் காரணம் பலவகையாகக் காணப் படுகின்றது.