பக்கம்:அகத்திய முனிவர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



                            அகத்திய முனிவர்.


    இவரது தோற்றத்தால் இவ்வுலகில் தோன்றியிருக்கும் நலங்கள் பல. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு, எல்லார்க்கும் பெய்யும் மழை' என்றது ஒளவை மொழி. வானம் வழங்கி இம்மாநிலம் விளங்க வேண்டுமாயின் பெரியாரை இது பெற்றிருத்தல் வேண்டும்; மெய்யறிவாளராய மேலோரை மேவவில்லையாயின் இவ்வையம் வெய்யதாகிநையும் என்க.


    பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்
    மண்புக்கு மாய்வது மன்.                                (குறள்.)
   என்னும் இப் பொய்யாமொழிக்கு நம் முனிவர்பெருமான் ஓர் பொருளாய் நிற்றலைப் பொருந்தியுணர்க. தன்னுயிர்க்கு இரங்கான் பிறவுயிர் ஓம்பும் மன்னுயிர் முதல்வன் என இவ் அண்ணல் மன்னி நின்றதனா லன்றோ இவ்வுலகம் இன்றும் இவ்வகை நிலைமையில் மன்னியுள்ளது.


    உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்
    தமியருண்டலும் இலரே; முனிவிலர்;
    துஞ்சலுமிலர் பிறர் அஞ்சுவ தஞ்சிப்;
    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;
    அன்ன மாட்சி யனைய ராகித்
    தமக்கென முயலா நோன்றாட்
    பிறர்க்கென முயலுந ருண்மை யானே.”      (புறம்.)


    முயலுநர் உண்மையானே இவ்வுலகம் உண்டு எனக் கொண்டு காண்க. அமிர்தம் கிடைத்தாலும் அதனைத் தனித்து