பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

அகத்தே நிகழும் இன்பம் ‘அகப்பொருள்’ எனப்படும். அகப்பொருள் நூல்கள் தமிழிற் பல உள்ளன. ஆயினும், ‘அகம்’ என்றே பெயரமைந்த பழைய இலக்கியநூல் இப்போது ஒன்றே உள்ளது. அதுதான் ‘அகநானூறு’ என்பது.

கடைச்சங்க காலத்தின் எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்று. நானூறு அகவற் பாட்டுக்களால் ஆனது; புலவர் பலரால் இயற்றப்பட்டு, மதுரை உப்பூரிகுடிகிழான் மகனார் உருத்திரசன்மரால் தொகுக்கப்பட்டது.

அகநானூறு மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் நூற்றிருபது பாட்டுக்கள் ‘களிற்றியானை நிரை’ எனப்படும். அடுத்த நூற்றெண்பது பாட்டுக்கள் ‘மணிமிடை பவளம்’ எனப்படும். கடைசி நூறு பாட்டுக்கள் ‘நித்திலக் கோவை’ எனப்படும்.

இந் நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. அது, முதல் ௯௦-பாட்டுகட்கு மட்டும் குறிப்புரையாக இருக்கின்றது. அடுத்து ௭௦-பாட்டுகட்கு அகநானூற்றின் முதற் பதிப்பாசிரியரான திரு. வே. இராசகோபாலா சாரியார் உரை எழுதியிருக்கின்றார். ஆதலால் நூல் முழுமைக்கும் ஒரே வகையாகத் தெள்ளிய உரையொன்று எழுதி வெளிவர வேண்டிய இன்றியமையாமை இந்நூலுக்கு நெடுங்காலமாக இருந்து வந்தது.

அக் குறையினை நீக்கும்பொருட்டு, இப்போது தஞ்சை நாவலர் திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்களும், கரந்தைக் கவியரசு ரா. வேங்கடாசலம் பிள்ளையவர்களும் சேர்ந்து இந்நூல் முழுமைக்கும் உரையெழுதி வருகின்றனர். நூலும் விரைந்து அச்சாகி வருகின்றது.

செய்யுட்களைப் பதம் பிரித்து, முதலில் தெளிவாகத் தலைப்புக் கொடுத்துப், பின்பு பொருள் செல்லும் நெறிக்கு ஏற்ப முறைப்படுத்திப் பதவுரை கண்டு, அதன்மேல் முடிபும் விளக்கவுரையும் எழுதி, உள்ளுறை புலப்படுத்தி, மேற்கோள் இடங்களை விளக்கி, உரிய அடிக் குறிப்புக்களுடன் இவ்வுரை தெளிந்து செல்கின்றது.

பல்கலைக் கழகத்தின் ‘வித்துவான்’ தேர்வுக்கு இந்நூலின் ‘களிற்றியானை நிரை’ என்னும் முதற் பகுதி பாடமாக இருத்தலின் இப்போது அதுமட்டும் உரையுடன் ஒரு தனிப் புத்தகமாக வெளியிடப் பெறுகின்றது. இறுதியிற், பாட்டு முதற் குறிப்பும், புலவர்கள் பெயர் வரிசையும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாணவர் பயன்படுத்திக் கொள்வாராக! அகநானூறு முழுப் புத்தகமாக வெளிவரும்போது நூல் வரலாறு, உரை வரலாறு, அரும்பொருட் குறிப்பு முதலிய பிற குறிப்புக்களும் சேர்க்கப்பெறும்.

மு. காசிவிசுவநாதன்.