144
அகநானூறு - மணிமிடை பவளம்
187. உயர்வு நினைத்தவர்!
பாடியவர்: மாமூலனார். திணை: பாலை. துறை: பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியது உம் ஆம். சிறப்பு: மழவர்கள் கொண்டாடும் பூந்தொடை விழா.
(இல்வாழ்வின் சேப்பம் பொருளின்றி அமையாது எனக் கருதித் தான் அதனை ஈட்டி வாராதிருத்தலுக்கு வெட்கப் பட்டுத் தன் தலைவியைப் பிரிந்து பாலையையுங் கடந்து வேற்று நாட்டிற்குஞ் செல்லத் துணிந்தான் ஒரு தலைவன். அதனை வந்து சொன்ன தோழிக்குத் தலைவி உரைத்ததாகவும், அன்றி அவன் பிரிந்து போய்விட்ட காலத்து வருந்தியிருந்த தலைவிக்குத் தோழி இப்படிச் சொல்லித் தேற்றியதாகவும் கொள்க.)
தோள்புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கிச் சேய்நாட்டு
அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு எகி,
நம் உயர்வு உள்ளினர் காதலர்-கறுத்தோர்
5
தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி,
வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந்தொடை விழவின் தலைநாள் அன்ன,
தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்
புலம்புறும் கொல்லோ-தோழி!-சேண்ஓங்கு
10
அலந்தலை ஞெமையத்து ஆள்இல் ஆங்கண்,
கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து,
எல்விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனைஉறை கோழி அனல்தாழ்பு அன்ன
கவைஒண் தளிர கருங்கால் யாஅத்து
15
வேனில் வெற்பின் கானம் காய,
முனைஎழுந்து ஓடிய கெடுநாட்டு ஆர்இடை,
பனைவெளிறு அருந்து பைங்கண் யானை
ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்து,
கண்படு பாயல் கைஒடுங்கு அசைநிலை
2O
வாள்வாய்ச் சுறவின் பனித்துறை நீத்தி,
நாள்வேட்டு எழுந்த நயன்இல் பரதவர்
வைகுகடல் அம்பியின் தோன்றும்
மைபடு மாமலை விலங்கிய சுரனே?