பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 177



குன்றுகள், விளங்கும் வெண்மையான அருவிகளை உடையன; அவற்றின் சாரலிலே, களிறு, தன் இளைய பிடியுடன் கூடி இன்பமாக இருக்கும். அந்தப் பிடி மென்மையான தலையினையுடையதும் ஆகும். புலியாகிய தன்னுடைய பகையை வென்றுவரும் அந்தக் களிற்றின் உடலோ, புண்களுடன் விளங்கும். அந்தச் சீற்றத்தாலும் களைப்பினாலும் மலையிடத்தே அது தன் துதிக்கையை உயர்த்துத் தூக்கிப் பெருமூச்சு விடும்.

நல்ல பூங்கொத்துக்களையுடைய வேங்கையின் நறுமணப் பூக்கள், அந்தக் களிற்றின் பெருமூச்சினால் பொங்கி மேலே எழும் கொல்லன் துருத்தியை மிதித்து ஊத, உலையிலிருந்து சிதறி அனற்பொறிகளைப் போல, அப்பூக்கள் எங்கும் பரந்து சிதறி வீழும், பலவும் ஒருங்கே நெருங்கி, நீல மணியின் நிறத்தைக் கொண்டு விளங்கும் பெரிய புதரிலே, அப்பூக்கள் வீழ்ந்து பரவிக் கிடக்கும். அப்படிக் கிடப்பது, சிறுசிறு மின்மினிப் பூச்சிகள், பரவலாகப் புதரிலே பரவி மொய்த்துக் கொண்டிருப்பன போலத் தோன்றும். அத்தகைய மலைநாட்டை உடையவனே!

பாம்பினது புள்ளிகளையுடைய படம் பொருந்திய தலையானது துண்டுபட்டு விழுமாறு, வலிமிக்க இடிகள் முழங்கும். அச்சம் வருகின்ற அகன்ற மலையிடத்தின் வழியே, இரவின் நடுச்சாம வேளையிலும், நீ கடந்து வருகின்றாய். உள்ளத்திலே ஊக்கம் குறையாதவனாகவும், ஏந்திய வேலை துணையாகவும் கொண்டு நீ வருவாய். அடர்ந்த இருள் பரவிய கற்களை உடைய வழியாகிய சிறு நெறியிலே, நினக்கு ஏற்படக்கூடிய துன்பங்களைச் சற்றும் கருதாதே நீயும் வருகின்றாய். அப்படி வருகின்ற நின்னிடத்திலே, பொறுத்தற்கும் அரியதான துன்ப நினைவினை நீந்திக் கொண்டிருக்கும் நிலையுடையவர், எம்மையல்லாமல் வேறு யாரேனும் உள்ளனரோ?

என்று, இரவுக்குறிக்கண் வந்து நீங்குந் தலைமகற்குத் தோழி சொல்லி வரைவுகடாயினாள் என்க.

சொற்பொருள்: 1. வயங்கு - விளங்கும். 2. கயந்தலை - மென்தலை; அகன்ற தலையுமாம். ஏம் ஆர்ப்ப - இன்பம் நுகர. 3. புண்கூர் - புண்பட்ட 4 கல்லகச் சிலம்பு - மலையிடத்ததாகிய குன்று. 6. குருகு - துருத்தி. பிதிர்வு - பொறிகள். 8 மணிநிறம் - நீலமணியின் நிறம்.10.உத்தி-புள்ளி.பைதலை-படம் பொருந்திய தலைதுமிய துண்டுபட 11. உரவு - வலிமை உரும் இடி உட்கு வரு-அச்சம் வருகின்ற.12.தவிர்வில் உள்ளம்-தளர்வற்ற உள்ளம்.