பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அகநானூறு - மணிமிடை பவளம்


'இருவகைக் குறிபிழைப்பாகிய விடத்தும்' என்னும் கற்பியற் சூத்திரத்துக், ‘காணாவகையிற் பொழுது நனியிகப் பினும்’ என்னும் பகுதியின் விசேடவுரையில், ‘தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவு வெளிப்படுதல், நாய் துஞ்சாமை போல்வனவற்றால் தலைவன் குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம் என்று கொண்டு, அதற்கு இப் பாட்டினை உதாரணமாகக் காட்டியும்;

‘களவலராயினும்' என்னும் கற்பியற் சூத்திரத்து, ‘அன்னவை பிறவும் செவிலி மேன’ என்றதனால், வல்லுரைக் கடுஞ்சொல் அன்னை துஞ்சாள் என்பதுங் கொள்க என்றும்;

‘குடையும் வாளும் என்னும் புறத்திணையியற் சூத்திரத்து, “முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் என்னும் பகுதியின் விசேடவுரையில், ‘நொச்சியாவது, காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலும் கொள்க, அது மதிலைக் காத்தலும் உள்ளத்தைக் காத்தலும் என இருவர்க்குமாயிற்று. இக்கருத்தானே ‘நொச்சி வேலித் தித்தன் உறந்தை’ என்றார் சான்றோரும் என்றும், நச்சினார்க்கினியர் கூறுவர்.

‘முட்டு வயிற் கழறல்’ என்ற மெய்ப்பாட்டியற் சூத்திரத்து, ‘முட்டுவயிற் கழறல் என்னும் பகுதிக்கு,'நொச்சி வேலி. களவே' என்னும் பகுதியினை உதாரணமாகக் கொண்டு, இது தலைமகன் கேட்பக் கழறியுரைத்தது' என்றும்;

'சேவற் பெயர்க்கொடை சிறகொடுசிவனும், ஆயிருந்துவி மயிலலங் கடையே' என்னும் மரபியற் சூத்திர உரையில், 'கூகை’ சேவலெனப்பட்டதற்கு, 'வளைக்கட் சேவல் வாளாதுமடியின்' என்பதை உதாரணமாகக் காட்டியும் பேராசிரியர் கூறுவர்.

பாடபேதங்கள்: 8. மருளும், 9. குரையாது. 22 கன்முது.

123. ஒன்றில் கொள்ளாய்!

பாடியவர்: காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் திணை: பாலை. துறை: தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. சிறப்பு: சோழகளின் வன்மையும் வண்மையும்.

(பிரிய மனமின்றித் தன் காதலியைப் பிரிந்துபோய்ப் பொருள் தேடிவரச் சென்றான் ஒருவன். இடைவழியிலே அவன் நினைவு அவளை நோக்கியே பிற்பட்டுச் செல்லத் தொடங்கிற்று. அப்போது அவன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது இது)