பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 327



பெரிய வானமும் அதிருமாறு முழக்கமிட்டு, அரவுகளின் தலைகள் துணிபட்டுப் போகுமாறு அவற்றை வருத்தி, சொரியும் பெயலாகி மிகுந்த மழைத்துளியினையும் பெய்யத் தலைப்பட்டதாக, மேகங்கள் வந்து, காராகிய பருவத்தையும் செய்தன. அத்தகைய பருவத்தின் பாதிநாளாகிய இரவிலே,

அசைகின்ற தலைகளையுடைய ஆட்டுக்குட்டிகளின் தொகுதிகளைப் பாதுகாவலினைப் பெறுமாறு, கடைகோலினால் கடைந்த சிறுதீயை மிக்கு எரியுமாறு விறகுகளை மாட்டி வைத்து, திண்மையான தாம்பினைக் கொண்ட உறியினையும், பானையினையும், தோற்படுக்கையினையும் உடையவனாக விளங்குபவன், நுண்ணிய பலவான மழைத்துளிகள் தன்னுடைய ஒருபக்கத்தை நனைக்கவும், தண்டாகிய காலினை ஊன்றித் தனித்து நிற்றலையே மேற்கொண்டவனாகியிருக்கும் இடையன். அவன், வாய்மடித்து எழுப்பும் சீழ்க்கை யொலியானது விரைந்துசென்று ஒலித்தலினால், துள்ளும் ஆட்டுக் குட்டியினைக் கவர்வதற்கு நோட்டம் பார்க்கும் குள்ள நரியானது அச்சங்கொண்டு, முட்களையுடைய குறுந்துாறுகள் கெடுமாறு அவற்றிடையே புகுந்து ஓடிப்போகும். அத்தகைய தண்மையான நறிய காட்டினிடத்தே இருப்பது.

“நறுமலராகிய முல்லையை அணிந்த கற்பினையுடைய, மெல்லியலான இளமையையும் உடைய, நம் தலைவியின் உறைவிடமாகிய நமக்கு இனிதான ஊர். (அவ்விடம் நோக்கி நின் தேரினை விரையச் செலுத்துவாயாக என்றனன்)

என்று, தலைமகன் தேர்ப்பாகற்குச் சொன்னான். என்க.

சொற்பொருள்: 1. அரநலிந்து-அரவினை வருந்தி அழிதுனி - மிக்க துளி, பெருமழை அழிவையும் தருதலினால் அழி துளியாயிற்று. 4. ஆடுதலைத் துரு - ஆடும் தலையையுடைய ஆட்டுக்குட்டி, 5. கடைகோல் - தீக்கடைகோல், 9. வீளை - சீழ்க்கையொலி.10. தெறி மறி - துள்ளும் ஆட்டுக்குட்டி .குறு நரி - குள்ளநரி.11.தூறு - புதர்.12. புறவு காடு.13 முல்லை சான்ற கற்பு - காத்திருத்தலாகிய பண்பமைந்த கற்பும் ஆம்.

உள்ளுறை: குட்டியைக் கவரப் பார்த்திருக்கும் குறுநரியானது, இடையனின் சீழ்க்கையொலிகேட்டதும் அஞ்சி ஒடுவதுபோலத், தலைவியின் மிகுதியான வருத்தமும், தன் தேரோசை கேட்டதுமே நீங்கும் என்றனன்.

பாடபேதங்கள்: 1. வானவின்று. 3. பெருவளஞ்செய்த, 8. தண்கோலூன்றிய. 11. இரியப் பெரும்.