பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் * 337



நெஞ்சமே! ‘பொன்னைப் போன்ற, நிறமும் ஒளியும் கொண்ட சுணங்கினோடு, செறியுமாறு பணைத்து விளங்கும் மென்முலைகளையுடைய பரப்பாகிய நம் மார்பினை, விட்டு நீங்காதவர் நம் காதலர்’ என்று கூறியவளாக, நள்ளென்னும் ஒலியினையுடைய இரவுப்பொழுதிலும், அதனையடுத்த பகற் பொழுதிலும், நம்மையே நினைந்து நினைந்து, நெஞ்சினைச் சுடுகின்ற காமமாகிய உள்ளத்திலே கவிந்த பெருந்தீயினை, முயற்சியுடைய மாரிபோல வீழ்கின்ற கண்ணிரினாலே அவிக்க முயன்றவளாக, யாம் காட்டிலே வருந்தங்கொண்டு அவள் நினைவினாலே இவ்வண்ணமாக நலிய, அவள் அவ்விடத்தேயிருந்த துன்பமுற்றவளாகி, என்ன நிலையினள் ஆவாளோ?

தன்னை நட்டாராகிய நாம் இல்லாததனால் ஏற்பட்ட துன்பமும், அதனால் உறவினர்கள் கொண்ட துன்பமும், மனம் பொருந்தி மீட்டும் வந்து சேர்ந்திராத நம் செயலிலே எழும் நினைவின் பெருவருத்தமும் நாளும் கண்டவளாக, அவள் ஓர் ஊரினிடத்தே நம்மைப் பிரிந்து தனித்து வாழ்ந்திருத்தலையும் பொறுத்திருப்பவள் ஆவாளோ!

இனிதாகத் தொடுத்தலையுடைய விளரி என்னும் நரம் பினது இனிமை பொருந்திய சிறிய யாழிசையானது, பூக்கள் மலிந்த கொம்புகளிலே இருந்து மகிழ்வுடன் கூவும் குயிலின் குரலோடுங் கூடிப் பொருந்திய துயிலினை எழுப்பிக் கொண்டிருக்கின்ற, முற்றத்திலே பெண்கள் நீர் தெளிக்கின்ற காலை வேளையிலும், நம்மையே தன் வலிமையாகக் கொண்டவளாகி, அழகிய நடையினையுடைய அன்னப் பேட்டின் மாண்போடு மெல்ல மெல்ல நடந்து வந்து, செயலற்ற நெஞ்சினளாகி, நம்மை அணைத்துக் கொள்வாளே! அத்தகைய, கரிய தழைத்த கூந்தலையுடைய மாமை திறத்தினையுடையவள், இனித் துன்பத்தினாலே வருந்தி வருந்தி, எத்தன்மையினள் ஆவாளோ!

(என்று, பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொன்னான் என்க.

சொற்பொருள்: 1. நட்டார் - நட்புச் செய்தோர்: காதலர் இன்மை - வறுமை இல்லாத தன்மை. கேளிர் - உறவினர். 2. ஒட்டாது-பொருந்தியிராது.பெருக்கம் நினைவினால் எழுந்த துயரின் பெருக்கம். 4. செறிய வீங்கிய புடைபரந்து பணைத்த; ஈர்க்கிடை போகா இளமுலை என்க.5 முலைமுற்றம் - மார்பகம். இயைந்த இயைந்து-பொருந்திப்பொருந்தி7.பொத்திய-கவிந்து மூடிய. உரம் - நெஞ்சு. ஆள்வினை - முயற்சி. 9. கடறு காடு.