பக்கம்:அகநானூறு 2, புலியூர்க் கேசிகன்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 363



மென்மையான தளிராகிய சிறிய தழையுணவினையே அருந்தும், தாய் முலையினைப் பெறாதுபோன ஆட்டுக் குட்டியினைக் கொலைப்படுத்துதலையும் அவள் விரும்பினள். வெறியாடலைச் செய்யும், யாதும் தொடர்பற்ற வேலன் தன் மார்பிலே மாலை கிடந்து அசைந்திட வெறியாடலையும் செய்வான் ஆயின், அது குறித்தும் யான் நாணங் கொள்வேன்.

காட்டிடத்தேயிருந்து தினைப்புனங்களில் மேய்தலை விரும்பி வருகின்ற யானையின் கால்களின் வலிய இயக்கத்தை உற்று அறிந்து, நள்ளிரவிலே, மலையிடத்தேயுள்ள பரண் மீதிலிருந்து காவல் காத்திருக்கும் கானவனானவன், மிகுந்த விசையோடு கவணினைச் சுழற்றி எறிந்த சிறு கல்லானது, இறகு பொருந்திய அம்பினைப் போல வேகமாகச் சென்று, மலைச்சாரலிலேயுள்ள, வேங்கையின் விரிந்த பூங்கொத்துக் களைச் சிதற செய்து, தேனிறால்களை அழித்துப் பலாப் பழத் தினுள்ளே போய்த் தங்கும்.

அத்தகைய மலைநாட்டை உடையவன் வந்து நம்மை உணர்ந்து கொள்ளாவிட்டால், நாம் செய்வதுதான் யாதோ? அதனைச் சொல்வாயாக.

என்று, வெறி அச்சுறீஇத் தலைமகள் தோழிக்குச் சொன்னாள் என்க.

சொற்பொருள்: 2. பொருள் உகுத்து - பொருளைச் சொரிந்து, மென்முறி - மென்மையான துளிர்கள். 5. ஏதில் - தொடர்பு இல்லாத, 6 தூங்கும் ஆடும். 7. செல்லல் - வருத்தம். புலம். படர்ந்து - புலத்தின்கண் மேய்தலை விரும்பி. 8. கால்வல் இயக்கம் - கால்களின் வன்மையான செலவு.13 தேன்-தேனிறால்

விளக்கம்: இற்செறிப்பு உடையவளாதலால் பகற்குறி வாய்த்தல் அரிதாயிற்று, காவல் திறமுடைய கானவர் காத்திருத்தலால் இரவுக் குறியும் நேர்தற்கு வழியில்லை; அன்னையோ முருகு அணங்கியதென வெறியாடவும், வேலனை வேண்டவும்,வேலனுக்கு மறியைப் பலியிடவும் தொடங்கினாள்; இனி அவன் நம்மை மணந்த கொண்டாலன்றி, நம் துன்பங்களுக்கு ஒரு முடிவேயில்லை என்றனள்.

உள்ளுறை: கானவன் யானையின் வருகையை உய்த்தறிந்து எறியும் கவண்கல், யானையைத் தாக்காது போனாலும், வேங்கைப் பூக்களை உதிர்த்தும், தேனிறாலைச் சிதைத்தும், பலாப்பழத்துள் சென்றும் தங்கினாற் போலத், தலைவன் இரவுக்குறி வருதலால் நேர்ந்த ஊரலர் அவனுக்கு எட்டாது.